Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஏப்ரல் 24th, 2007

Indian Army tests enhanced version of Indian-Russian supersonic cruise BrahMos Missile

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 24, 2007

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டாகச் சேர்ந்து வடிவமைத்துள்ள தரையில் இருந்து சென்று இலக்குகளைத் தாக்கவல்ல பிரம்மோஸ் அதிநவீன (சூப்பர்சானிக்) ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.

ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து முற்பகல் 11.21 மணியளவில் இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏவுகணை செலுத்தப்பட்டதும் வானில் வெண்புகையை கிளப்பியவாறு சீறிப்பாய்ந்ததாகவும், இந்த சோதனை வெற்றியடைந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.

இந்த சோதனை குறித்த மதிப்பீடு பின்னர் தெரிய வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் லாஞ்சர் மூலமாக ஏவுகணையை செலுத்திய பின், தரையில் உள்ள கருவிகள் மற்றும் ராடார் மூலமாக அதன் செயல்பாட்டை சோதித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய சோதனைக்கு முன்பாக இதுவரை 13 முறை பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றியடைந்திருப்பதாகவும், கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி முதல் முறையாக இந்த ஏவுகணை சோதிக்கப்பட்டதாகவும், கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி சோதனை நடத்தப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

Posted in Army, BrahMos, defence, Defense, Military, Missile, Russia | Leave a Comment »

India commercial rocket takes off

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 24, 2007

விண்வெளியில் புதிய வாய்ப்பு

பிற நாடுகளுக்கென செயற்கைக் கோள்களைத் தயாரித்து அளிப்பதும் மற்றும் பிற நாடுகள் உருவாக்கும் செயற்கைக் கோள்களை உயரே செலுத்தித் தருவதும் உலகில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துத் தருகின்ற தொழிலாகும். உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளே இத் திறனைப் பெற்றுள்ளன. இந்தியா இப்போது இத்தாலி நாட்டின் செயற்கைக் கோளைக் கட்டண அடிப்படையில் அதாவது வர்த்தக அடிப்படையில் உயரே செலுத்தியுள்ளதன் மூலம் இப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இது இந்திய விண்வெளி அமைப்புக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டானது 352 கிலோ எடை கொண்ட இத்தாலிய செயற்கைக் கோளையும் அத்துடன் 185 கிலோ எடை கொண்ட இந்தியாவின் தொழில்நுட்ப செயற்கைக் கோளையும் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது. பிற நாடுகளின் செயற்கைக் கோள்கள் இந்திய மண்ணிலிருந்து இந்திய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படுவது இது முதல் தடவை அல்ல. கடந்தகாலத்தில் பல நாடுகளின் செயற்கைக் கோள்கள் இவ்விதம் இந்திய ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை பெயரளவுக்குக் கட்டணம் வாங்கிக் கொண்டு செலுத்தப்பட்டவை. இப்போதுதான் முதல் தடவையாக முழு அளவிலான கட்டண அடிப்படையில் வெளிநாட்டின் (இத்தாலியின்) செயற்கைக் கோள் இந்திய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டுள்ளது. இது இந்திய ராக்கெட் நம்பகமானது என்று உலக நாடுகள் இடையே ஏற்பட்டு வருகிற கருத்தை எடுத்துக்காட்டுவதாகச் சொல்லலாம்.

இந்தியா 1980-களில் விண்வெளி யுகத்தில் அடியெடுத்து வைத்து ராக்கெட்டுகளையும் செயற்கைக் கோள்களையும் உருவாக்க முற்பட்டபோது வறுமையை முற்றிலும் ஒழிக்க முடியாத இந்தியா இதில் எல்லாம் எதற்கு ஈடுபட வேண்டும் என்று கேட்டவர்கள் உண்டு. இதற்கு ஆகும் செலவு வீண் என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் கடந்த பல ஆண்டுகளில் இந்தியா விண்வெளித் துறையில் மெச்சத்தக்க அளவுக்கு முன்னேறி வானிலை, தகவல் தொடர்பு, நிலவள ஆய்வு என பல வகையான செயற்கைக் கோள்களை உருவாக்கி அவற்றை சொந்த ராக்கெட்டுகள் மூலம் செலுத்தும் திறனைப் பெற்றுள்ளது.

சில நூறு கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்கள் முதல் 3 டன், 4 டன் என அதிக எடை கொண்ட பெரிய செயற்கைக் கோள்கள் வரை உலகில் ஆண்டுதோறும் ஏராளமான செயற்கைக் கோள்கள் உயரே செலுத்தப்படுகின்றன. செயற்கைக் கோளின் எடைக்கு ஏற்ப ராக்கெட்டின் திறன் அந்த அளவுக்கு அதிக அளவில் இருக்க வேண்டும். உலகில் இப்போது எடைமிக்க செயற்கைக் கோள்களைச் செலுத்தித் தருவதில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ரஷியா போன்றவை முதலிடம் வகிப்பதாகச் சொல்லலாம். ரஷிய – அமெரிக்க கூட்டு நிறுவனமும் இப்போது இதில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் எடைமிக்க செயற்கைக் கோள்கள் இப்போதும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் – பை ராக்கெட் மூலமே உயரே செலுத்தப்படுகின்றன. இவ்விதமான ஒரு செயற்கைக் கோளைச் செலுத்தித் தருவதற்கு வாங்கப்படும் கட்டணம் ரூ. 750 கோடி அளவுக்கு உள்ளது. அதேநேரத்தில் பல நாடுகள் சிறிய செயற்கைக் கோள்களைத் தயாரித்து அவற்றைச் செலுத்தித் தர பிற நாடுகளை அணுகுகின்றன. மற்ற பெரிய நாடுகளுடன் ஒப்பிட்டால் இவ்வித சிறிய செயற்கைக் கோள்களை இந்திய ராக்கெட் மூலம் செலுத்துவதானால் ஆகின்ற செலவு குறைவுதான். ஆகவே பல நாடுகளும் இனி இந்தியாபக்கம் திரும்பலாம். வருகிற ஆண்டுகளில் இந்திய விண்வெளி அமைப்பானது இந்தவகையில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் ஐஆர்எஸ் நிலவள ஆய்வு செயற்கைக் கோள்கள் வானிலிருந்து எடுக்கிற படங்களை இந்திய விண்வெளி அமைப்பு கடந்த சில ஆண்டுகளாகவே உலக மார்க்கெட்டில் விற்பனை செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

Posted in commercial, India, Moon, Polar Satellite Launch Vehicle, PSLV, rocket, satellite, space | Leave a Comment »

Tamil as a classical language

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 24, 2007

உயர்தனிச் செம்மொழியின் இனிய வருங்காலம்

மலையமான்

உலகில் ஒரு சில மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லை. அவை பேச்சு நிலையில் மட்டுமே உள்ளன. பல மொழிகள் இலக்கிய வளத்துடன் திகழ்கின்றன. இவற்றுள் ஆறு மொழிகள் மட்டுமே உயர்தனிச் செம்மொழி என்று போற்றப்படுகின்றன. இதில் தமிழும் ஒன்று.

காலத்தொன்மை, இலக்கிய வளமை என்ற இரண்டும் செம்மொழியின் அடித்தளப் பண்புகள் ஆகும். இவற்றைத் தவிர, உயர்ந்த கருத்துடமை, மரபுடைமை, உலகப் பொதுமைத்தன்மை உடைமை, எளிமை உடைமை, தெளிவுடைமை, நிலைபேறான பண்புடைமை, ஆழ்ந்த பொருளுடைமை முதலிய இயல்புகளைக் கொண்ட இலக்கியங்களை அம்மொழி பெற்றிருக்கும்.

செம்மொழியின் இலக்கணம் என்பதற்குரிய தன்மைகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை. எனவே வல்லவர்கள் பல்வேறு தகுதிகளைக் கூறுகிறார்கள்.

செவ்வியல் மொழி என்றும் சொல்லப்படுகின்ற – உயர்தனிச் செம்மொழியான – தமிழின் இனிய வருங்காலம் பற்றி எண்ணித் திட்டமிடுவது சரியான முறையாகும். உலக அளவிலும் இந்திய நாட்டின் அளவிலும் தமிழ்நாட்டின் அளவிலும் இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல செயல்திட்டங்கள் உள்ளன.

பிரிட்டானியா, அமெரிக்கானா, காலியர் முதலிய கலைக் களஞ்சியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை கிரேக்கம், லத்தீன் என்ற இரண்டு மொழிகளை மட்டுமே உயர் தனிச் செம்மொழிகளாகக் கருதுகின்றன. இனி இத்தகைய உலகப் புகழ் கலைக் களஞ்சியங்களில் “தமிழ் – உயர் தனிச் செம்மொழி’ என்ற தலைப்பில் கட்டுரை இடம்பெறுமாறு செய்ய வேண்டும். தமிழ் ஆட்சிமொழியாக உள்ள இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தமிழர்கள் வாழும் மலேசியா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளிலும் தமிழை உயர் தனிச் செம்மொழியாக அறிவிக்கும்படி தூண்டப்பட வேண்டும். இதன் விளைவாக பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு மன்றம் (யுனெஸ்கோ) தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளும். அதன் வளர்ச்சிக்கு நிதி உதவி நல்கும்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள தகுதியான பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை புதிதாகத் திறக்கப்படுவதற்கு ஆவன செய்ய வேண்டும். தமிழைக் கற்க விரும்பும் அயல்நாட்டு மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

இந்திய அரசு சமஸ்கிருதத்தைச் செம்மொழியாக ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ளது. அது தமிழைச் சமஸ்கிருதத்திற்கு இணையாகக் கருத வேண்டும். 2004-ல், இந்திய அரசு சமஸ்கிருதத்திற்கு நேரடியாக நாற்பது கோடி ரூபாயும், அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் நூறு கோடி ரூபாயும் ஒதுக்கி, அம் மொழியின் வளர்ச்சிக்கு உதவியது. இந்நிலை தமிழுக்கும் அமைய வேண்டும்.

தற்போது மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ், செம்மொழித் தமிழ் உள்ளது. இது கல்வித் துறையின் கீழிருக்கும் நிலைமை உருவாக வேண்டும். அப்போதுதான், பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு, இந்தியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைவதற்கு உதவ முடியும்.

சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்கள் என்று அறிஞர்களால் போற்றப்படுகின்றன. இந்த இலக்கியங்கள் நம் நாட்டின் முக்கிய மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும். (இவை ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய உலக மொழிகளிலும் முழுமையாக மொழி பெயர்க்கப்பட வேண்டும்).

புனேயிலுள்ள முதுநிலைக் கல்வி ஆராய்ச்சிக் கல்லூரி, 60 தொகுதிகளைக் கொண்ட சமஸ்கிருத – ஆங்கில அகரமுதலி ஒன்றைத் தயாரிக்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளது. இதேமுறையில் தமிழ்ப் பேரகராதி, பல துறைத் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் போன்ற பார்வை நூல்கள் உருவாவதற்கும் இந்திய அரசு ஆதரவு புரிய வேண்டும்.

இந்தியப் பண்பாட்டுக்குத் தமிழ்ப் பண்பாடே அடித்தளம் என்பது அயல்நாட்டு அறிஞர்களின் கருத்து. இதுபற்றிய முறையான – முழுமையான – ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

காஞ்சிபுரம் தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரம் எனலாம். காஞ்சிபுரத்திலும், பழைமை சான்ற மாமல்லபுரத்திலும், சங்ககாலத்திற்குரிய செங்கத்திலும், இத்தகைய பழைமை மிக்க ஊர்களிலும், அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அரிய கட்டடக் கலை – சிற்பக் கலை ஆகியவை பற்றியும் ஆராய்ச்சி நடைபெற வேண்டும்.

தமிழகத்தின் மையப் பகுதியில் மாபெரும் நூலகம் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இதுவரை வெளிவந்த அத்தனை நூல்களும் திரட்டப்பட்டு, குறுந்தகடு வடிவில், அங்கு அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

கீழ்த்திசைச் சுவடி நூலகம், சரசுவதி மகால் நூலகம் முதலியவற்றிலுள்ள, அச்சு வடிவம் பெறாத தமிழ் நூல்களை அச்சிடல் வேண்டும். தமிழ்க் கலை, பண்பாடு ஆகியவற்றை உணர்த்தும் வகையில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். (சிங்கப்பூரில் இத்தகைய அருங்காட்சியகம் இருக்கிறது).

தமிழுடன் தொடர்புடைய சித்த மருத்துவமும் தமிழிசையும் தழைத்தோங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மேற்சொன்னவற்றை நிறைவேற்றப் பெருமளவு நிதி தேவைப்படும். ஆனால் முறைப்படி திட்டமிட்டு, சரியான வழியில் படிப்படியாக, இவற்றைச் செய்து முடிக்க முடியும். இதனால் செவ்வியல் தமிழ் வருங்காலத்தில் இனிதோங்கும். அதன் வாழ்வும் சிறக்கும்!

Posted in Antiquity, Culture, Dravidian, Europe, Heritage, History, Language, Op-Ed, Opinion, Sanskrit, Tamil | 2 Comments »

Pakistan, Bangladesh Involved in North East Terrorism: Stratfor

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 24, 2007

உல்பா, விடுதலைப்புலி, இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு – வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்ட பாக்., வங்கதேச உளவு அமைப்புகள் சதி: அமெரிக்க உளவு செய்தி சேவை அமைப்பு தகவல்

நியூயார்க், ஏப். 24: இந்தியாவின் வடகிழக்கு பிராந்திய மாநிலங்களில் கலவரத்தை தூண்ட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேசத்தின் உளவு அமைப்புகள் சதித் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவில் உள்ள உளவு செய்தி சேவை அமைப்பான “ஸ்ட்ராட்பார்’ எச்சரித்துள்ளது.

“இந்தியா: இஸ்லாம் மயமாகிவரும் வடகிழக்கு’ என்ற தலைப்பில் அது வெளியிட்டுள்ள செய்தியில் மேற்கண்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியம் தற்போது இஸ்லாமிய மயமாகி வருகிறது. இதற்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு ஒருபக்கம் உதவி வருகிறது. மறுபக்கம் வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையும் சாதகமாகிவிட்டது. வங்கதேச அரசியல் குழப்ப நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள சீனாவும் பாகிஸ்தானும் உலக அளவில் இந்தியா மாபெரும் சக்தியாக உருவெடுத்து விடக் கூடாது என்ற நோக்கில் பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவித்து தாம் சொல்லும்படி ஆட்டிப் படைக்கின்றன.

தற்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும் வங்கதேச உளவு அமைப்பும் மிகவும் நெருக்கமாகிவிட்டன. இந்த இரு அமைப்புகளும் வங்கதேசத்தில் ரகசியமாக செயல்பட்டு வடகிழக்கு பிராந்தியத்தில் செயல்படும் உல்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், தனி ஈழம் கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகள், அல்-காய்தாவுடன் தொடர்புடைய அமைப்புகள் ஆகியவை தமக்குள் ஒத்துழைப்புடன் செயல்பட ஆதரவு அளித்து வருகின்றன.

வங்கதேச தீவிரவாத அமைப்புகள், ஜிகாதி அமைப்புகளுடன் உல்பா மிக நெருக்கமாகி உள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அசாமுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பயணம் செய்ய இருந்த நேரத்தில் ஏப்ரல் 9ம் தேதி அந்த மாநிலத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இந்தவித தாக்குதல் புலிகள் பயன்படுத்தி வருவதாகும். தற்போது இஸ்லாமிய தீவிரவாதிகளும் அடிக்கடி இந்த வகை தாக்குதலை பின்பற்றி வருகின்றனர்.

இந்த பாணி தாக்குலில் உல்பா இறங்கியுள்ளதற்கு உல்பா அமைப்பில் முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினராகச் சேர்ந்து வருவதே காரணம். மேலும் உல்பா அமைப்புக்கு இந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் அதிக ஆதரவு காட்டுகின்றன.

அசாமில் ஏப்ரல் 9-ம் தேதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியவர் ஐனுல் அலி என்ற பெயருடைய முஸ்லிம் என்று இந்திய பாதுகாப்புப்படை வட்டாரங்களே தெரிவித்துள்ளன. சில காலத்துக்கு முன் உல்பா அமைப்பில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றதில்லை. தற்போது வங்கதேசத்திலிருந்து ஊடுருவும் அகதிகள் உல்பா அமைப்பில் சேர்ந்து தற்கொலைப் படையினராக செயல்பட தயாராக உள்ளனர். இதற்கெல்லாம் பாகிஸ்தான் உளவு அமைப்பின் தூண்டுதலே காரணம்.

வங்கதேசத்தில் காணப்படும் அரசியல் குழப்ப நிலை அங்குள்ள முஸ்லிம்களுக்கு அதிக அதிகாரம், செல்வாக்கை அளித்து வருகிறது. மேலும் வங்கதேச ராணுவத்தின் கையும் ஓங்கி வருகிறது. தற்போது அங்கு காணப்படும் அரசியல் வெற்றிட நிலையை நிரப்பிக்கொள்ள இஸ்லாமிய கட்சிகள் மிகுந்த வெறியுடன் உள்ளன.

அப்படியொரு நிலை உருவாகும்போது பயங்கரவாத பிரச்சினையிலிருந்து இந்தியா மீள எடுக்கும் நடவடிக்கைகள் உரிய பலன் தருவது கடினமே. இவ்வாறு ஸ்ட்ராட்பார் அமைப்பு தெரிவித்துள்ளது.

Posted in Bangladesh, ISI, jihadi, LTTE, North East, Northeast, Pakistan, Stratfor, Terrorism, terrorist, ULFA, Viduthalai Puli, Viduthalai Puligal, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »

Presidental Elections in France – SEGOLENE ROYAL vs. NICOLAS SARKOZY

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 24, 2007

பிரான்ஸ் நாட்டுத் தேர்தலின் அடுத்த கட்ட போட்டிக்குத் தயாராகும் இரு வேட்பாளர்கள்

அடுத்த கட்டத் தேர்தலுக்குத் தயாராகும் வேட்பாளர்கள்
அடுத்த கட்டத் தேர்தலுக்குத் தயாராகும் வேட்பாளர்கள்

பிரான்ஸில் மே மாதம் ஆறாம் திகதி நடக்கவுள்ள இறுதி முடிவுக்கான, இரண்டாவது கட்ட அதிபர் தேர்தல் வாக்களிப்புகளுக்கு முன்னதாக, முதற்சுற்றில் வெற்றி பெற்றவர்களான வலதுசாரி நிக்கொலஸ் சர்கோஷி மற்றும் சோசலிஸ எதிர்க்கட்சியைச் சேர்ந்த செகொலென் றோயல் ஆகியோர் தமது இரு வாரகால பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.

சர்கோஷி அவர்கள் டிஜொனிலும் றோயல் அவர்கள் தென்கிழக்கே வலன்ஸிலும் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.

முதற்சுற்றில் சர்கோஷி அவர்கள் 30 வீத வாக்குகளையும், றோயல் அவர்கள் 26 வீத வாக்குகளையும் பெற்று, போட்டியிட்ட 12 வேட்பாளர்களில் முதல் இரு இடங்களைப் பெற்றனர்.

ஆகவே அடுத்த வாக்கெடுப்பில் இவர்கள் இருவர் மாத்திரம் போட்டியிடுவார்கள்.

அதிரடி மாற்றத்துக்கான வேட்பாளராகப் பார்க்கப்படுகின்ற சர்கோஷிக்கும், தாராளவாத இடதுசாரியாகப் பார்க்கப்படுகின்ற றோயல் அவர்களுக்கும் இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது மே மாதம் 6 ஆம் திகதிதான் தெளிவாகும்.

Posted in Bayrou, centrist, Chirac, Communism, Communist, Elections, France, Francois Bayrou, French, Green, Jacques Chirac, Jean-Marie Le Pen, Jospin, Left, LePen, Lionel Jospin, National Front, NICOLAS SARKOZY, Party, Popular Movement Union, President, Right, Royal, Sarkozy, SEGOLENE, SEGOLENE ROYAL, Socialist, UDF, UMP, Union for French Democracy, Vote, voters | Leave a Comment »