Laloo Prasad Yadav – Railway Budget 2007-08: Information, Analysis, Schemes & Opinion
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007
ரயில்வே பட்ஜெட் 2007: தமிழக ஒதுக்கீடு ரூ.1232 கோடி – சேலம் கோட்டத்துக்கு ரூ.3 கோடி
நமது சிறப்பு நிருபர்
புதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தின் ரயில் திட்டங்கள் மற்றும் திட்டம் சாரா செலவினங்களுக்கு ரூ.1232 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடான
- ரூ.457 கோடியுடன் சேர்த்து, மொத்தம்
- தமிழகத்துக்குக் கிடைத்தது ரூ.633 கோடி.
- இந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடு மட்டும் ரூ.706 கோடி.
- அதாவது, திட்டங்களுக்கு மட்டும் ரூ.249 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
- அத்துடன், திட்டம் சாரா செலவினங்களுக்காக ரூ.526 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மொத்தத்தில் ரூ.1232.77 கோடி தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.
இதில்,
- புதிய பாதைகள் அமைக்க ரூ.40 கோடி,
- அகலப்பாதையாக மாற்றும் பணிக்கு ரூ.595 கோடி,
- இரட்டைப் பாதை அமைக்க ரூ.195 கோடி,
- போக்குவரத்து விளக்கு, பணிமனை மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.45 கோடி,
- சாலைப் பாதுகாப்பு (லெவல் கிராஸிங்) ரூ.38 கோடி,
- ரயில்வேயின் சாலை மேம்பாலம், சாலை கீழ்பாலம் கட்ட ரூ.40 கோடி,
- இருப்புப் பாதை சீரமைக்க ரூ.152 கோடி,
- புதிய மற்றும் நடைமுறையில் உள்ள பாலப் பணிகளுக்கு ரூ.5 கோடி,
- சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்புப் பணிகளுக்கு ரூ.65 கோடி,
- பயணிகள் வசதிக்கு ரூ.24 கோடி,
- மின்மயமாக்குதல் ரூ.5 கோடி,
- சிறப்பு ரயில்வே நிதியின் கீழ் ரூ.27 கோடி ஆகியவை இதில் அடங்கும்.
- புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேலம் கோட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.3 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இக் கோட்டம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்று வேலு தெரிவித்தார்.
அகலப்பாதையாக மாற்றும் பணிகளுக்காக நாடு முழுவதும் ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தென்னக ரயில்வேக்கான ஒதுக்கீடு ரூ.485 கோடி.
தமிழகத்தில் 4 புதிய ரயில் தடங்களுக்கு ஆய்வு நடக்கும்
நமது சிறப்பு நிருபர்
புதுதில்லி, பிப். 27: தமிழகத்தில் நான்கு புதிய ரயில் வழித்தடங்களுக்கான பூர்வாங்க சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மொரப்பூர் -தருமபுரி,
- மதுரை -காரைக்குடி,
- நீடாமங்கலம் -புதுக்கோட்டை,
- திண்டுக்கல் -குமுளி (போடிநாயக்கனூர் வழி) ஆகியவை அந்த நான்கு புதிய வழித்தடங்கள்.
இத் திட்டங்களுக்கான ஆய்வுகள் இந்த ஆண்டிலேயே, விரைவில் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.
மின்மயமாக்கல் திட்டத்தில்,
- ஈரோடு -எர்ணாகுளம் (ரூ.10 லட்சம்),
- தாம்பரம் -செங்கல்பட்டு (ரூ.5.98 கோடி),
- விழுப்புரம் -திருச்சி (ரூ.5 கோடி) ஆகிய மார்க்கங்களுக்கு மொத்தம் ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் -பொள்ளாச்சி -பாலக்காடு மற்றும்
- பொள்ளாச்சி -கோவை மார்க்கத்தில் போத்தனூர் -கோவை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.6 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரம் -காட்பாடி மார்க்கத்தில் வேலூர் -திருவண்ணாமலை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.84 கோடி,
- திருச்சி -மானாமதுரை மார்க்கத்தில் காரைக்குடி -மானாமதுரை அகலப்பாதைக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது.
- திருச்சி -நாகூர் -காரைக்கால் மார்க்கத்தில் திருவாரூர் -நாகூர் அகலப்பாதைக்கு ரூ.30 கோடி,
- மதுரை -திண்டுக்கல் அகலப்பாதைக்கு ரூ.62 கோடி அளிக்கப்படும்.
தமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்கள்
நமது சிறப்பு நிருபர்
புதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்களும், 5 புதிய ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
- மதுரை வழியாக கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்,
- யஷ்வந்த்புரம் -சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ்,
- சென்னை எழும்பூர் -நாகூர் எக்ஸ்பிரஸ்,
- எழும்பூர் -ராமேஸ்வரம் (வாரம் 6 முறை),
- புவனேஸ்வரம் -ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் புதியவை.
இதில், கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தவிர மற்ற ரயில்கள், மீட்டர்கேஜ் பாதை அகலப்பாதையாக்கும் பணி முடிந்ததும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தற்போதைக்கு ஈரோடு வழியாக இயக்கப்படும். கோவை -மதுரை இடையிலான பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டதும் அறிவிக்கப்பட்ட பாதையில் இயங்கும் என ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.
ராமேஸ்வரம் வரையிலான மீட்டர்கேஜ் பாதை, மார்ச் 31-ம் தேதிக்குள் அகலப்பாதையாக மாற்றப்படும். நாகூர் பாதை இந்த ஆண்டு இறுதியில் அகலப்பாதையாக மாற்றப்பட்டுவிடும் என வேலு தெரிவித்தார்.
கோட்டயம் -திருவனந்தபுரம் இடையிலான பாசஞ்சர் ரயில், நாகர்கோவில் வரை நீடிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் நான்கு புதிய திட்டங்கள் ரூ.41 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.
- கரூர் -சேலம் (ரூ.20 கோடி),
- பெங்களூர் -சத்தியமங்கலம் (1 கோடி),
- திண்டிவனம் -செஞ்சி -திருவண்ணாமலை (10 கோடி),
- திண்டிவனம் -நகரி (10 கோடி) ஆகியவை இதில் அடங்கும்.
ரயில்வே மேம்பாலங்களைப் பொருத்தவரை, நாடு முழுவதும் 93 மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 38 மேம்பாலங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக தமிழகத்துக்குக் கிடைத்திருப்பதாக வேலு தெரிவித்தார்.
அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி வசதியில்லாத தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் 4% கட்டணம் குறைப்பு
சென்னை, பிப். 27: வரும் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி செய்யப்படாத (நான்-ஏசி), தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் (அனைத்து காலங்களிலும்) 4 சதவீதம் கட்டண குறைக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு (81 படுக்கை), ஏசி சேர் கார் (102 படுக்கை) ஆகிய பெட்டிகளில் மட்டும் விழாக்காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்களில் 6 சதவீதமும் குறைக்கப்பட உள்ளது.
பாண்டியன், அனந்தபுரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் பண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால், ரயில்களுக்கு ரயில் பண்டிகைக் காலம், சாதாரண காலத்தை நிர்ணயிப்பதில் வேறுபாடு தொடர்கிறது).
கட்டணம் குறைப்பு சலுகை யாருக்கு?: சாதாரண பாசஞ்சர் ரயில்களில் 2-ம் வகுப்பு கட்டணமும், சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களில் (நான்-சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள்) 2-ம் வகுப்பு கட்டணமும் ஒரு நபருக்கு தலா ரூ. 1 மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.
இச் சலுகை ரயில் நிலையங்களில் தினமும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி (முன்பதிவு செய்யாமல்) பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் முக்கிய ரயில்களில் மட்டும் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும்.
இந்த ரயில்களின் பட்டியல் குறித்து பின்னர் வெளியிடப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (முறையே தூங்கும் வசதியுள்ள 2-ம் வகுப்பு பெட்டி, ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, முதல் வகுப்பு) உள்ள தற்போதைய கட்டண விவரம் (ரூபாயில்):
தில்லி: 537, 3609, 2071, 1455. (ஏழைகள் ரதம் ரயிலில் கட்டணம் மாற்றம் இல்லை).
மும்பை: 405, 2660, 1534, 1084.
கோல்கத்தா: 469, 3120, 1794, 1264.
ஐதராபாத்: 301, 1915, 1113, 792.
புனே: 377, 2459, 1421, 1005.
பெங்களூர்: 195, 1176, 684, 493.
சென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் கட்டண விவரம்: கன்னியாகுமரி: 309, 1970, 1444, 910, 814.
நாகர்கோவில்: 304, 1933, 1123, 893, 899.
தூத்துக்குடி: 286, 1805, 1051, 000, 749.
நெல்லை: 286, 000, 1051, 835, 749.
திருவனந்தபுரம்: 342, 2209, 1279, 000, 907.
மதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில்): 235, 1460, 844, 680, 604.
சென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி சேர் கார் கட்டணம் ரூ. 479; இரண்டாம் வகுப்பு சேர் கார் ரூ. 142.
திருச்சி: 166, 1069, 617, 491, 437.
கோவை: 235, 1460, 844, 000, 604.
சேலம்: 166 (2-ம் வகுப்பு அமர்ந்து செல்லும் இருக்கை வசதி ரூ. 101 மட்டும்) 1061, 617, 491, 437. சென்னை-சேலம் செல்லும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி சேர் கார் ரூ. 372, 2-ம் வகுப்பு சேர் கார் ரூ. 111 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதர கட்டணம் ரூ.2 குறைப்பு: சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண 2-ம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கான இதர கட்டணங்கள் (எக்ஸ்ட்ரா) ரூ. 10-ல் இருந்து ரூ. 8 ஆக குறைக்கப்படும்.
புறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி: சென்னையில் புறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி இணைக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
Dinamani Editorial
லாலுவின் சாதனை
ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொழில்துறையினர் மட்டுமன்றி பொதுமக்களில் பலதரப்பினரும் வரவேற்கத்தக்க ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.
சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. உயர்வகுப்பு பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப்படையாகச் சொல்வதானால் லாலுவின் ரயில்வே பட்ஜெட் நாட்டில் தற்போதுள்ள பணவீக்கப் போக்கை மட்டுப்படுத்துகின்ற அளவில் உள்ளது.
லாலு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது இது நான்காவது தடவையாகும். கடந்த மூன்று ரயில்வே பட்ஜெட்டுகளைவிட இந்தப் பட்ஜெட்டில் சில கொள்கைத் திட்டங்கள் தென்படுகின்றன. பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள மாதங்கள், பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள மாதங்கள் என வகை பிரிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் விமான நிறுவனங்கள் இவ்விதம் பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள காலங்களில் கட்டணச் சலுகைகளை அறிவிப்பது உண்டு. ரயில்வே அமைச்சர் அத்தகைய கட்டணச் சலுகை முறையை அமல்படுத்தியுள்ளார். இது இந்திய ரயில்வேயில் இதுவரை இல்லாத புதிய ஏற்பாடாகும்.
உயர்வகுப்புக் கட்டணங்கள் குறைக்கப்படுவதற்குக் காரணம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாகத் தனியார் துறையில் நகரங்களுக்கு இடையே விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிடமிருந்து எழுந்துள்ள போட்டியைச் சமாளிக்க ரயில்வேயின் இக் கட்டணக் குறைப்பு உதவும்.
ரயிலில் நீண்டதூரப் பயணங்களுக்கு டிக்கெட் வாங்குவதென்றால் ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்த நிலைமை இதுவரை இருந்து வந்துள்ளது. பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றிலும் ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் வசதி இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுவிஷயத்தில் நவீனத் தொழில்நுட்ப முறையை ரயில்வே பின்பற்றுவது வரவேற்கத்தக்கது. இவையெல்லாம் நடுத்தர வகுப்பினருக்குப் பயனுள்ளவை.
புதிய ரயில்களில் முன்பதிவு தேவைப்படாத ரயில் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இது சாதாரண மக்களுக்கும் திடீர்ப் பயணம் மேற்கொள்வோருக்கும் பெரிதும் உதவும். காய்கறி, பால் போன்றவற்றை எடுத்துச் செல்வோருக்குக் கூடுதல் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இவை குளிர்சாதன வசதி கொண்டவையாக இருந்தால் மேலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.
அமைச்சர் லாலு பிரசாத் கடும் எதிர்ப்பை வரவழைத்துக் கொள்ளாதவகையில் படிப்படியாகத் தனியார் துறையின் ஒத்துழைப்பைப் பெற்று வருகிறார். இது சரியான அணுகுமுறையே. ரயில்வே இலாகா நடப்பு நிதியாண்டில் ரூ. 20 ஆயிரம் கோடி லாபம் சம்பாதிக்க இருக்கிறது என்றால் அதற்கு இந்த அணுகுமுறையும் ஒரு காரணம். இதே ரயில்வே இலாகா முன்பு ஒருசமயம் மத்திய அரசுக்கு வழக்கமான ஈவுத் தொகையைக்கூட வழங்க முடியாமல் திண்டாடியது உண்டு.
கடந்த காலங்களில் ஒருவர் ரயில்வே அமைச்சர் ஆகிறார் என்றால் அவர் தமது மாநிலம் அதிக நன்மையை அடைகின்ற வகையில் பல புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பது வழக்கம். இந்த விரும்பத்தகாத போக்குக்கு இலக்கு ஆகாத ரயில்வே அமைச்சர் என்று லாலுவைக் குறிப்பிடலாம்.
கடந்தகாலத்தில் பல்வேறு ரயில்வே அமைச்சர்களும் அறிவித்த புதிய ரயில் பாதைத் திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கு இன்னும் 38 ஆண்டுகள் ஆகும் என்று அண்மையில் ஒரு கமிட்டி கூறியுள்ளது. அமைச்சர் லாலு பிரசாத் இதில் கவனம் செலுத்தி இவற்றை நிறைவேற்றி முடிக்க காலக்கெடு நிர்ணயிப்பது அவசியம்.
தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இல்லாத ரயில் பெட்டிகளை வடிவமைத்தல், விபத்து என்றால் சுக்குநூறாக நொறுங்கிவிடாத ரயில் பெட்டிகளைத் தயாரித்தல் ஆகியவற்றில் நாம் இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லை. இத்தகைய ரயில் பெட்டிகளைத் தயாரிக்கச் செலவு அதிகமாகும். எனினும் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி விரைவில் இதுவிஷயத்தில் லாலு கவனம் செலுத்த வேண்டும்.
மன்னார்குடி – நீடாமங்கலம்: இடையே ரயில் விட மத்திய அரசு முடிவு
சென்னை, பிப். 28 : மன்னார்குடி – நீடாமங்கலம் இடையே மீண்டும் ரயில் பாதை அமைத்து ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி. ஆர். பாலுவுக்கு ரயில்வே துறை இணை அமைச்சர் வேலு கடிதம் அனுப்பியுள்ளார்.
“”நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கும் அங்கிருந்து பட்டுக்கோட்டை வரை ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும்.
திருக்குவளை வழியாக…: “”மேலும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க, வேளாங்கண்ணி – திருத்துறைப்பூண்டி இடையே திருக்குவளை, எட்டுக்குடி வழியாக புதிய ரயில் பாதை அமைக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது” என்று அக் கடிதத்தில் வேலு குறிப்பிட்டுள்ளார்.
ரெயில்வே பட்ஜெட்: முதல் வகுப்பு-புறநகர், 2-வது வகுப்பு கட்டணம் குறைந்தது; மாணவர்கள்-பெண்களுக்கு சலுகை
புதுடெல்லி, பிப். 26-
2007-08-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை பாராளு மன்றத்தில் இன்று ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத் யாதவ் தாக்கல் செய்தார்.
பயணிகளை கவரும் வகையிலும், அவர்கள் பாது காப்பை கவனத்தில் கொண் டும் பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளதாக லல்லுபிரசாத் கூறினார். பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் இதை பிரதிபலிப்பதாக இருந்தன.
ரெயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
இந்திய ரெயில்வேக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு கட்டண வருமானம் இதே காலக்கட்டத்தில் 17 சதவீதம் உயர்ந்துள்ளது.
குறிப்பாக சிமெண்ட்-சரக்கு போக்குவரத்து நாடெங்கும் 30 சதவீத அளவுக்கு அதிகரித் துள்ளது. தனியார் கண் டெய்னர்கள் 15 பேருக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது.
கூடுதலான பயணிகள் பயணம் செய்ய வசதியாக ஜெய்ப்பூர்-பிபவா இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட “டபுள் டெக்கர் ரெயில்” விடப்படும். சரக்கு போக்குவரத்து மேம் படுத்தப்படும். 2008-ல் கூடுதலாக 6 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில் ரெயில்வே துறை நவீனப்படுத்தப்படும்.
இது ஏழைகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். ரெயில்வே துறை முழுமையாக சீரமைப்பு செய்யப்படும். பயணிகள் வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சரக்குபெட்டி பயணிகள் பெட்டிகள் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.
முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக 800 பயணிகள் பெட்டிகள் சேர்க்கப்படும். தற்போது முன்பதிவு செய்யப்படாத ரெயில்களில் சாதாரண வகுப்புகளில் பயணம் செய் பவர்களுக்கு கட்டை சீட்களே உள்ளன. அடுத்த நிதி ஆண்டு இந்த மரக்கட்டை இருக்கைகள் மாற்றப்பட்டு சொகுசாக பயணம் செய்வதற்காக மெத்தை இருக்கைகள் (குசன்சீட்) பொருத்தப்படும்.
தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இனிவிடப்படும் புதிய ரெயில் களில் முன்பதிவு செய்யாத 6 பெட்டிகள் இணைக்கப்படும்.ஊனமுற்றோருக்கு எளி தில் உதவும் வகையில் இனி ரெயில் பெட்டி வடிவமைப்பு களில் மாற்றம் கொண்டு வரப்படும்.
தற்போது ரெயில் பெட்டி களில் தூங்கும் வசதி கொண்ட படுக்கை சீட்டுகள் 72 உள்ளன. இனி இது 84 ஆக உயர்த்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆயிரம் தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரங்கள் நிறுவப்படும்.
டிக்கெட்டுக்களை முன் பதிவு செய்ய ரெயில்வே கால் சென்டர்கள் உருவாக்கப்படும். மத்திய அரசு தேர்வு மற்றும் ரெயில்வே அலுவலக தேர்வு எழுத செல்பவர்களுக்கு ரெயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப் படும்.
ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க சேரும் கூட்டத்தை தவிர்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் இனி பெட்ரோல் பங்குகளிலும் பணம் எடுக்கும் ஏடிஎம் மையங்களிலும், தபால் நிலையங்களிலும், ரெயில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும்.
பயணிகள் ரெயிலில் இனி காய்கறி வியாபாரிகளுக்கும், பால்காரர்களுக்கும் தனி பெட்டி இணைக்கப்படும். நாடெங்கும் விரைவில் 200 நவீன மாதிரி ரெயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
படுக்கை வசதியில் கீழ் இருக்கையை வழங்க பெண்களுக்கும், முதியோர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும். மும்பை புறநகர் ரெயில் பயணிகள் மேம்பாட்டுத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சரக்கு போக்கு வரத்துக்கான விசேஷ இருப்புபாதைகள் கட்டும்பணி 2007-08-ல் தொடங்கும். அதற்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படும்.
வரும் மார்ச் மாதத்துக்குள் நாடெங்கும் புதிதாக 225 ரெயில் நிலையங்கள் கட்டப் படும்.
ரெயில் போக்குவரத்து மற்றும் டிக்கெட் போன்ற விசாரணைகளுக்கு நாடு முழுவதும் 139 என்ற ஒரே மாதிரியான டெலிபோன் நம்பர் அறிமுகம் செய்யப்படும். ரெயில்வேத்துறை எக் காரணம் கொண்டு தனியார் மயமாகாது.
குறைந்த தூரங்களுக்கு இடையே அதிவேக ரெயில்கள் இயக்கப்படும். இருப்புப் பாதைகளை மின் மயமாக்குவது அதிகரிக்கப் படும். நாடெங்கும் முக்கிய நகரங்களின் புறநகர் ரெயில் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு பயணத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும்.
ரெயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை. பயணிகள் நலனுக்காக 32 புதிய ரெயில்கள் விடப்படும். ஏழைகள் பயன்பெறுவதற்காக 8 ஏழைகள் ரதம் புதிதாக அறிமுகம் செய்யப்படும்.
அனைத்து உயர் வகுப்பு கட்டணங்களும், ஏ.சி. வகுப்பு கட்டணங்களும் குறைக்கப்படும். எல்லா புறநகர் ரெயில்களின் கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்படும்.
அனைத்து ரெயில்களிலும் 2-ம் வகுப்பு கட்டணத்துக்கான கூடுதல் வரிவிதிப்பில் 20 சதவீதம் குறைக்கப்படும். இதனால் 2-ம் வகுப்பு கட்டணம் குறைகிறது. 23 ரெயில்களின் தூரம் நீட்டிக்கப்படும்.
உயர் வகுப்பு கட்டண குறைப்பு விவரம் வருமாறு:-
நெருக்கடி இல்லாத சாதாரண நாட்களில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 6 சதவீதம் குறைக்கப்படும். ஆனால் பிசியான சீசனில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 3 சதவீதம் குறைக்கப்படும். இது போல ஏ.சி. இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான கட்டணம் பிசியான சீசனில் 2 சதவீதம் குறைக்கப்படும். சாதாரண நாட்களில் இந்த வகுப்புக்கான கட்டண குறைப்பு 4 சதவீதமாக இருக்கும்.
ஏ.சி. சேர் கார் கட்டணம் பிசியான சீசனில் 4 சதவீதமும், சாதாரண நாட்களில் 8 சதவீதமும் குறைக்கப்படும். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளில் கட்டண குறைப்பு அனைத்து சீசன்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பை தடுக்க ரெயில்களில் கேமரா- மெட்டல் டிடெக்டர்
ரெயில்களில் குண்டு வெடிப்பு, நாசவேலைகளை தடுக்க ரெயில் கதவுகளில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்படும்.
கண்காணிப்பு கேமரா, டெலிவிஷன் ஆகியவையும் ரெயில் பெட்டிகளில் அமைக்கப்படும்.
ரெயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 8 ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும்.
ஏழை மக்களும் ஏ.சி. ரெயிலில் பயணம் செய்யும் வகையில் மேலும் 8 ஏழைகள் ரதம் ரெயிலை லல்லுபிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார். அதன் விவரம்:-
1.செகந்திராபாத்- யெஷ்வந்த்பூர் (வாரம் 3 முறை)
2. ஜெய்ப்பூர்-பந்த்ராஅகமதாபாத் வழியாக(வாரம் 3 முறை)
3. கொல்கத்தா- பாட்னா (வாரம் 3 முறை)
4. புவனேஸ்வர்-ராஞ்சி (வாரம் 3 முறை)
5. திருவனந்தபுரம்- லோக்மான்யா திலக் (வாரம் 2 முறை)
6. கொல்கத்தா- கவுகாத்தி (வாரம் 2 முறை)
7. புதுடெல்லி- டேராடூன் (வாரம் 3 முறை)
8. ராய்பூர்- லக்னோ (வாரம் 2 முறை)
ரெயில் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்
மத்தியமந்திரி லல்லுபிர சாத்தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
*முதல்வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் குறைப்பு.
* புறநகர் ரெயில்களுக்கு பயணிகள் கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது.
*சூப்பர் பாஸ்ட் ரெயில் களில் 2-வதுவகுப்புகளில் கூடுதல் கட்டணம் (சர் சார்ஜ்) 20 சதவீதம் குறைக் கப்படுகிறது. இதனால் கட்டணம் குறைகிறது.
* பயணிகள் பெயர்களுக்கு பயணஅட்டை முறை அமு லுக்கு வருகிறது.
*23ரெயில் பாதைகள் நீட்டிக்கப்படுகிறது.
* 800 புதிய வேகன் கள் (பெட்டிகள்) சேர்க்கப் படுகின்றன.
* ரெயில்வே துறையில் தனியார் மயமாக்கல் இல்லை.
* முக்கிய ரெயில் நிலையங் களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
*காஷ்மீர் முதல் கன் னியாகுமரி வரை மின் மயமாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.
*கூடுதல் ரெயில் என் ஜின்கள் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படும்.
* 32 புதிய ரெயில்கள், 8 ஏழைகள் ரதம் இந்த ஆண் டில் விடப்படும்.
* மும்பையில் புறநகர் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
*பாசஞ்சர் ரெயில்களில் வியாபாரிகள், பால் ஆகியவற்றை கொண்டு செல்ல தனி பெட்டிகள் விடப்படும்.
*மத்திய தேர்வாணை குழு தேர்வு(யு.பி.எஸ்.சி.) எழுத செல்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை.
*பெட்ரோல் நிலையங்கள், மற்றும் ஏடிஎம் மையங்களில் ரெயில் டிக்கெட் விற் பனை.
* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72ல் இருந்து 84 ஆக உயருகிறது.
*2007-2008ம் ஆண்டை ரெயில்வே சுத்தமான ஆண்டாக கடைபிடிக்கும்.
*300 ரெயில் நிலையங்கள் மாதிரி ரெயில் நிலையமாக உயர்த்தப்படும்.
* முக்கிய நகரங்களில் 6000 தானியங்கி டிக்கெட் இயந்திரம் வைக்கப்படும்.
* ரெயில் பயணிகள் 139 என்ற எண்ணை டயல் செய்து உள்ளூர் கட்ட ணத்தில் தொலை பேசியில் பேசலாம்.
*உடல் ஊனமுற்றோ ருக்காக 1250 சிறப்பு பெட் டிகள் உருவாக்கப்பட்டு வரு கின்றன.
*முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு ஏ.சி. மற்றும் 2வது வகுப்பு படுக்கை வசதியில் முன்னுரிமை வழங்கப்படு கிறது.
*ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளின் எண் ணிக்கை 4ல் இருந்து 6ஆக உயர்த்தப்படும்.
*பயணிகளுக்கு இருக் கைகள் மெத்தை வசதி செய் யப்படும் மரஇருக்கைகள் இனி கிடையாது.
*கண்டெய்னர் போக்கு வரத்து 5 மடங்காக அதிக ரிக்கும்.
* 3 அடுக்கு கண்டெய்னர் ரெயில்கள் விடப்படும்.
* சிமெண்ட், ஸ்டீல் சரக்கு போக்குவரத்து 30 சதவிதம் அதிகரிக்கப்படும்.
* பயணிகளின் அனைத்து புகார்களும் 3 மாதத்தில் கவ னிக்கப்படும்.
2006-2007ல் ரெயில்வே துறைக்கு 20 ஆயிரம் கோடி லாபம்.
=====================================================================
பாதுகாப்புக்கு 8000 பேர் நியமனம்: ரயில்வே இணை அமைச்சர் வேலு
வேலூர், மார்ச் 19: ரயில்வே துறையில் பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தும் வகையில் 8 ஆயிரம் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார்.
நடப்பாண்டில் நாடு முழுவதும் 334 ரயில் நிலையங்கள் முன்மாதிரி நிலையங்களாக மாற்றப்படும் என்றார் அவர்.
வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அமைச்சர், நிருபர்களிடம் கூறியதாவது:
வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பாதை பணிகளும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை பணிகளும் நடந்து வருகின்றன.
வேலூர்-விழுப்புரம் அகல ரயில் பாதை பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தேறி வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் இப்பணி நிறைவடையும்.
திண்டிவனம்-நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் பாதை ஆய்வுப் பணிகளுக்காக தலா ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 71 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10-வது ஐந்தாண்டு திட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம்-திருச்சி இடையிலான 167 கி.மீட்டர் தூரத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்போது திருச்சி-மதுரை இடையிலான 147 கி.மீட்டர் தூரத்தை மின்மயமாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
2006-07-ம் ஆண்டில் 104 மேம்பாலங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 33 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் நாட்டில் 93 மேம்பாலங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 38 மேம்பாலங்கள் தமிழகத்தில் வருகின்றன என்றார் வேலு.
===================================================================================================================
கலாசார மையமாகிறது வேலூர் கோட்டை!: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில்
சென்னை, மார்ச் 19: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.
சிப்பாய் கலகம் நடந்த வேலூர் கோட்டையை நாட்டின் மிகப் பெரிய கலாசார மையமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காந்தியடிகளின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவில், அறப்போரில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படக் கண்காட்சியை அவர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படங்களை எனது துறையின் மூலம் பல்வேறு மாநில மக்களும் அறியும் வகையில் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150-வது ஆண்டு விழா விரைவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், டெக்கான் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சுற்றுலா சொகுசு ரயில் சேவை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவையை ரயில்வே துறையும், சுற்றுலா துறையும் இணைந்து நடத்தும்.
நடப்பு ஆண்டில் 300 மண்டலங்களில் வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது என்றார் அம்பிகா சோனி.
—————————————————————————————-
ரயில் சேவைகள் போதாது!
ரயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் முக்கியத்துவத்தைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் முழுக்க உணரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க வேண்டும்.
ஒன்று, தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி இருப்பதால் இதுவே போதும் என்கிற திருப்தி அல்லது பஸ் முதலாளிகளாகவும் இருந்த அந்நாளைய அரசியல் பிரமுகர்கள் பலர், ரயில் போக்குவரத்தைத் தங்களுடைய தொழிலுக்குப் போட்டியாளராகக் கருதி, அது வளராமல் இருந்தால்தான் நமக்கு நல்லது என்று நினைத்து அதைப் பற்றி அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம்.
ரயிலைப் பயன்படுத்துவோர் ஏன் குறைவு என்று எந்த மார்க்கத்திலும் யாரும் சர்வே எடுப்பதில்லை. ரயில் நிலையங்களுக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதி, பகல் நேரங்களில் ரயில் பயண சேவை, ரயில் நிலையங்களில் பாதுகாப்பான சூழல் போன்றவை இருந்தால் ரயில்களைப் பயன்படுத்துவதற்குப் பயணிகளுக்குத் தயக்கம் இருக்காது.
இப்போதும்கூட ரயில் போக்குவரத்துக்கும் பஸ் போக்குவரத்துக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. பல ஊர்களில் ரயில் நிலையங்களுக்கும் பஸ் நிலையங்களுக்கும் அடிக்கடி சென்றுவரும் “டவுன்-பஸ்’ இணைப்புகூட கிடையாது. அதேவேளையில் கேரளத்தில் விழிப்புணர்வு உள்ள அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் கேரளத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளன. சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கூட எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்படுவது அவர்களின் விழிப்புணர்வுக்குச் சான்று.
சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவை, வேலூர், திருப்பத்தூர், பெங்களூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு கழிப்பறை வசதியுடன் கூடிய, இருக்கை வசதி மட்டுமே உள்ள ரயில்களைப் பகல் நேரங்களில் அதிக எண்ணிக்கையில் இயக்குவதன் மூலம், சாலைப் போக்குவரத்து நெரிசலையும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் கணிசமாகக் குறைக்க முடியும். விபத்துகளும் பெரிய அளவில் குறைய வாய்ப்புண்டு. அதற்கு இந்த ஊர்களுக்கு இடையில் இரட்டை ரயில் பாதைகளை அமைப்பதும் அவற்றை மின்மயமாக்குவதும் அவசியம். இது எரிபொருள் (டீசல்) செலவைக் கணிசமாக மிச்சப்படுத்தும். சரக்கு போக்குவரத்துக்கும் கை கொடுக்கும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைப்பதால் நமது நாட்டு அன்னியச் செலாவணி விரயமாவது தடுக்கப்படும்.
முன்பதிவு செய்யாத இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளும் கட்டணம் செலுத்தித்தான் பயணம் செய்கிறார்கள். தங்களுடைய பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியாததாலும், அவசரத் தேவையாலும், அறியாமையாலும் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்கிறார்கள் என்பதை ரயில்வே துறை உணர வேண்டும். அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தக் கூடாது.
முன்பதிவு செய்யாத ரயில் பெட்டியில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், மனநிலை சரியில்லாதவர்கள், குடிகாரர்கள், பெண்களைச் சீண்டுவோர், ஏறும்வழி, நடக்கும் வழி ஆகியவற்றில் அதிக சுமைகளை வைக்கும் அடாவடி சிறு வியாபாரிகள், அரிசி கடத்துவோர், சீசன் டிக்கெட் பயணிகள், ரயில்வே பாஸ் வைத்துள்ளவர்கள் (ஊழியர்களும் சேர்ந்துதான்), இளநீர், வேர்க்கடலை, முந்திரி, சப்போட்டா, மாம்பழம், மாங்காய் போன்றவற்றை விற்போர் என்று ஒரு பெரிய இம்சைப் பட்டாளமே ஏறி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது.
கழிப்பறை தண்ணீரின்றி, சுத்தப்படுத்தாமல் நாறினாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியானால்- அது எவ்வளவு தூரம் போகும் ரயிலாக இருந்தாலும் வழியில் அதற்கு கதி மோட்சமே கிடையாது. விபரீதமாக ஏதாவது நடந்து சங்கிலியைப் பிடித்து இழுத்தால் மட்டுமே அந்தப் பெட்டி இருப்பதையே அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் கண்டுகொள்கிறார்கள். இவையெல்லாம் களையப்பட்டால் ரயில் பயணங்கள் சுகமாவதுடன், அரசுக்குப் பணம் கொழிக்கும் கற்பக விருட்சமாக மேலும் வளம் பெறும்.
நாம் இந்தியாவின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால், ரயில் போக்குவரத்து எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அதைச் சார்ந்தே அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியும் காணப்படுகிறது. தண்டவாளம் இல்லாத தாலுகாவே இல்லை என்கிற நிலையைத் தமிழகம் எப்போது அடையப் போகிறது என்பதைப் பொருத்துதான் நமது பொருளாதார வளர்ச்சி அமையும்!
bsubra said
சரக்கு போக்குவரத்து: தெற்கு ரயில்வே சாதனை
சென்னை, மார்ச் 27: சரக்குப் போக்குவரத்தில் தெற்கு ரயில்வே நடப்பு ஆண்டில் (2006-07) சாதனை படைத்துள்ளது.
ரயில்வே வாரியம் நிர்ணயித்துள்ள குறீயீடான 3 கோடி (30 மில்லியன்) டன் அளவையும் கடந்து சரக்குகளைக் கையாண்டு தெற்கு ரயில்வே சாதனை புரிந்துள்ளது.
சரக்கு ரயில்கள் மூலம் சிமென்ட், உணவு தானியங்கள், உரங்கள், பெட்ரோலியப் பொருள்கள், நிலக்கரி ஆகியவற்றை பெருமளவு தெற்கு ரயில்வே கையாண்டு வருகிறது.
bsubra said
ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ரத்து: முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணக் குறைப்பு ஏதும் இல்லை: ரயில்வே புது உத்தரவு
சென்னை, ஏப். 4: பட்ஜெட்டில் அறிவித்தவாறு முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணக் குறைப்பு ஏதும் இல்லை என்று ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் விழாக்காலங்கள் மற்றும் சாதாரணக் காலங்களில் பயணக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
சாதாரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்புகளில் விழாக் காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்களில் 6 சதவீதமும் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
102 இருக்கைகள் வசதி கொண்ட ஏசி சேர் காரில் விழாக் காலத்தில் 4 சதவீதமும், சாதாரண காலத்தில் 8 சதவீதமும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதேபோல ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு பெட்டிகளுக்கும் பயணக் கட்டணத்தில் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது நாடு முழுவதும் இயக்கப்படும் 90 சதவீதம் முக்கிய ரயில்களில் இக் கட்டணக் குறைப்பு அல்லது சலுகை ஏதும் வழங்கப்படாது என்று ரயில்வே துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
எனினும் சில குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் இச் சலுகை வழங்கப்படும் என்று ரயில்வே உத்தரவிட்டுள்ளது. சலுகை வழங்கப்படாத முக்கிய ரயில்களின் பட்டியலையும் ரயில்வேயின் சுற்றறிக்கை தெரிவிக்கிறது.
கட்டணச் சலுகை வழங்கப்படும் ரயில்கள்: இதன்படி தமிழகத்தில் இயக்கப்படும் சுமார் 15 எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் பட்ஜெட்டில் அறிவித்தவாறு விழாக் காலம் மற்றும் சாதாரண காலங்களில் கட்டணச் சலுகை வழங்கப்படும்.
வைகை, பல்லவன், பிருந்தாவன், லால்பாக், சென்னை-பெங்களூர் இடையே மாலையில் இயக்கப்படும் சதாப்தி, சப்தகிரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்தச் சலுகை வழங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.
எனினும், பாண்டியன், மலைக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தமிழ்நாடு, திருக்குறள், இன்டர்சிட்டி, நீலகிரி, கோவை உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணக் குறைப்புச் சலுகை ஏதும் வழங்கப்படாது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
உபரி கட்டணம் குறைப்பு: பாண்டியன், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் உபரி கட்டணம் (சர்-சார்ஜ்) ரூ. 10-ல் இருந்து ரூ. 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செல்ல, முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த உபரி கட்டணத் தொகையை திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி வணிக மேலாளருக்கு (ரீ-ஃபண்ட்) விண்ணப்பிக்கலாம்.
bsubra said
“தமிழக ரயில் பாதைகள் 2 ஆண்டில் அகல ரயில் பாதையாக மாற்றப்படும்’
காரைக்குடி, ஏப். 8: தமிழகத்தில் அனைத்து ரயில் பாதைகளும் வரும் 2 ஆண்டுகளுக்குள் அகல ரயில் பாதையாக மாற்றப்படும் என்று தெற்கு ரயில்வே தலைமை நிர்வாகக் கட்டுமான அதிகாரி வி. சோமசுந்தரம் தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சனிக்கிழமை பங்கேற்ற பின்னர், அவர் கூறியது:
காரைக்குடியில் இருந்து மானாமதுரை வரையிலான அகல ரயில் பாதைப் பணி இவ்வாண்டு டிசம்பருக்குள் நிறைவடையும். திருச்சி- ராமேசுவரம் அகல ரயில் பாதைப் பணியில், புதுக்கோட்டை- காரைக்குடி வரையிலான பாதையில் 80 சதவீதப் பணிகள் முடிந்து ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. மே 16-ம் தேதி காரைக்குடியில் அகல ரயில் சேவை தொடக்க விழா நடைபெறும். இதில், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். தற்போது தாம்பரம் வரை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் டிசம்பர் மாதத்துக்குப் பின், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும்.
திண்டுக்கல்- கோவை அகல ரயில் பாதைப் பணி ரூ. 250 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி- திருச்செந்தூர் அகல ரயில் பாதைப் பணி செப்டம்பர் மாதம் நிறைவடையும்.
bsubra said
கட்டணத் தள்ளுபடி: ரயில்வேக்கு ரூ. 41 கோடி இழப்பு
புதுதில்லி, மே 4: சரக்குகளை உரிய காலத்தில் இறக்கத் தவறியதற்கான கட்டணங்களை தள்ளுபடி செய்த தவறினால், ரயில்வேக்கு ரூ. 41.58 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இத் தகவல் மத்திய பொதுக் கணக்குக் குழு அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இக் குழுவின் 33-வது அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குஜராத் மாநில மின்வாரியத்திற்கு கொண்டு வரப்பட்ட சரக்குகள் உரிய காலத்திற்குள் எடுக்கத் தவறியதால் விதிக்கப்பட்ட கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் எடுத்த இம் முடிவால் ரூ. 41.58 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
bsubra said
ரயில்வே மீது தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கண்டனம்
புது தில்லி, மே 30: காண்ட்ராக்ட் நடைமுறை நிர்வாகத்தில் ரயில்வே குளறுபடி செய்வதாக ரயில்வே மீது இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது போன்ற பிரச்சினைகளில் நெளிவுசுளிவுடன் செயல்பட்டு சமரசம் கண்டிருக்க முடியும். ஆனால் பிரச்சினையை வளரவிட்டு வழக்கில் சிக்கி தேவையில்லாமல் வட்டியாக மட்டும் ரூ. 13.31 கோடி வழங்கவேண்டி வந்துள்ளது என்றும் தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2006 மார்ச் மாதம் வரையிலான தனது அறிக்கையில் தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் கூறியுள்ள விவரம் வருமாறு:
பெரும்பாலான வழக்குகளில் ரயில்வேக்கு எதிராகவே தீர்ப்புகள் அமைந்துள்ளன. இதற்கு காரணம் காண்ட்ராக்ட் நடைமுறையை நிர்வகிப்பதில் அது நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாததே ஆகும்.
2002-03, 2005-06 இடையே காண்ட்ராக்ட் தொடர்பாக 2228 வழக்குகள் ஏற்பட்டன. இதில் பெரும்பாலானவை வடக்கு ரயில்வே தரப்பில் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 782 வழக்குகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் தீர்வு காணப்பட்டது. இவற்றில் 704 வழக்குகளில் ரயில்வேக்கு எதிராகவே தீர்ப்பு அமைந்தது. இந்த வழக்குகள் தொடர்பாக அது ரூ. 49 கோடி வழங்கியது.
1996, ஜனவரியில் அமலுக்கு வந்த சமரசச் சட்டத்தின்படி எந்தவித தகராறு குறித்தும் காண்ட்ராக்டர்கள் ரயில்வே தரப்பிடம் தெரிவிக்கலாம். அந்த பிரச்னை தொடர்பான முடிவை 120 நாள்களுக்குள் ரயில்வே அறிவித்துவிடும்.
அப்படி 120 நாள்களுக்குள் முடிவு அறிவிக்காவிட்டால் அந்த பிரச்னையை நடுவர் மன்றத்துக்கு 180 நாள்களுக்குள் மாற்றும்படி காண்ட்ராக்டர் கோரலாம். ரயில்வே நடுவர் மன்றம் அமைத்தால் அதனிடம் தமது தரப்பு ஆவணங்கள், வாதங்களை காண்ட்ராக்டர் 30 நாள்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும். நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதாக தகவல் கிடைத்த 60 நாள்களுக்குள் ரயில்வே தமது தரப்பு பதிலை தாக்கல் செய்யவேண்டும்.
ஆனால் ரயில்வே போர்டு தெரிவிக்கும் விதிமுறைகளை ரயில்வே முறையாக பின்பற்றுவதில்லை. கடந்த 4 ஆண்டுகளில் தீர்க்கப்பட்ட வழக்குகளில் வட்டியாக மட்டும் ரூ. 13.31 கோடியை ரயில்வே வழங்கியுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
bsubra said
பாதுகாப்பில் கோட்டைவிடும் ரயில்வே நிர்வாகம்
டி . புருஷோத்தமன்
உலகில் ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மிகப்பெரும் அமைப்புகளில் நமது ரயில்வே போக்குவரத்து இரண்டாமிடம் வகித்துவருகிறது.
நமது நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு ஆகியவற்றிலும் ரயில்வேக்கு முக்கிய இடம் உண்டு.
பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக ரயில்வேயில்தான் அதிகபட்சமாக 15 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ரயில்களில் பயணிகளிடம் திருடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் ஓடும் ரயில்களில் கொள்ளையர்களின் அட்டகாசம் வாடிக்கையாகி விட்டது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ரயில் பயணிகளின் புகார்களை சம்பந்தப்பட்ட மாநில போலீஸôர் பதிவுசெய்ய முன்வருவதில்லை.
ரயில்வே போலீஸôரிடம்தான் தெரிவிக்க வேண்டுமென தட்டிக்கழித்து விடுகின்றனர். இதனால் பெரும்பாலான சம்பவங்கள் துப்பு துலக்கப்படுவதில்லை.
ரயில்வே நிர்வாகத்துக்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன. இவற்றை இரவுபகலாக பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு உள்ளது. சரக்குப் போக்குவரத்தில் முதலிடம் பெறுவது ரயில்வேதான்.
கோடிக்கணக்கான மதிப்புள்ள சரக்குகள் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றைப் பாதுகாப்பாக எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பும் ரயில்வே நிர்வாகத்துக்கு இருந்து வருகிறது. இந்த பெரும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டிய கடமை ஆர்.பி.எப். எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்ததாகும்.
ரயில்வே பாதுகாப்புப் படை சட்டம் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆர்.எஸ்.எப். என்ற பெயர் ஆர்.பி.எப். என பெயர் மாற்றமாகியது. 1959 ஆம் ஆண்டு இப்படையின் விதிமுறைகளும் உரிய முறையில் வகுக்கப்பட்டன.
நமது நாட்டின் சில பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா படையெடுத்தது. அதை முறியடிக்க பாதுகாப்புப் படையின் வலிமையை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
ரயில்வே பாதுகாப்புப் படையின் திறமைமிக்க ஜவான்களைத் தேர்ந்தெடுத்து 1962 ஆம் ஆண்டு “விசேஷ அவசரகால படை’ உருவாக்கப்பட்டது.
நமது நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் இயங்கிவந்த ரயில்களையும் பயணிகளையும் ரயில்வேயின் இதர சொத்துகளையும் பாதுகாக்கும் பணியில் இப்படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த “விசேஷ அவசரகால படை’ 1965 ஆம் ஆண்டு பெயர்மாற்றம் செய்யப்பட்டு “ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை’ என அழைக்கப்பட்டது.
ரயில்வேயின் ஏராளமான சொத்துகளை சிறப்பான முறையில் பாதுகாப்பதற்காக ரயில்வே பாதுகாப்புப் படைக்கு 1966 ஆம் ஆண்டு சட்டபூர்வ அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
திருட்டு சம்பவங்களையும் கொள்ளைகளையும் தடுப்பதற்காக 1392 ரயில்களில் நாள்தோறும் ரயில்வே பாதுகாப்புப் படை ஜவான்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இதுதவிர குற்றச்செயல்கள் அதிகம் நிகழும் 700 ரயில்வே நிலையங்களில் 3600 ஜவான்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில்வே பாதுகாப்புப் படையில் போதிய அளவுக்கு ஜவான்கள் நியமிக்கப்படவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு.
தற்போது ரயில்வே பாதுகாப்புப் படையில் சுமார் 70 ஆயிரம் ஜவான்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
எனவே ரயில்வே பாதுகாப்புப் படையை வலுப்படுத்த 25 ஆயிரம் ஜவான்களை பணியில் அமர்த்தப்போவதாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உறுதி கூறியுள்ளார்.
நவீன ரக ஆயுதங்களும் செல் போன்களும் அவர்களுக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய வசதிகள் அளிக்கப்பட்டால்தான் ரயில்வே சொத்துகளைப் பாதுகாப்பது எளிதாக இருக்கும்.
ரயில் விபத்துகள் நேரிடும்போது உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் ஏதுவாகும். பயணிகளின் உடைமைகளையும் பாதுகாப்பான பயணத்தையும் உறுதிசெய்ய இயலும்.
1957 ஆம் ஆண்டின் ரயில்வே பாதுகாப்புப் படை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு இப்படையின் சீரமைப்புக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1985 ஆம் ஆண்டு ஆயுதப் படைக்கு ஈடான அனைத்து அதிகாரங்களும் பெற்ற முழுமையான அமைப்பாக ரயில்வே பாதுகாப்புப் படை மேம்பட்ட நிலையை எட்டியது.
ரயில்களில் நிகழும் சிறு குற்றச்செயல்களைப் பதிவு செய்யவும் அந்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும் தேவையான அதிகாரங்களை ரயில்வே பாதுகாப்புப் படைக்கு அளிக்க வேண்டுமென ரயில்வே தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படையின் செயல்பாடுகளை, ரயில்வே நிர்வாகத்தின் இதர துறைகளுடன் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அப்போதுதான் ரயில்வே நிர்வாகத்தின் அனைத்து பிரிவுகளும் சிறப்பாக செயல்பட வழியேற்படும்.
ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கும் உறுதுணையாக இருக்கும்.
Railway Budget: India to invest billions in rail revamp - Fares slashed, freight untouched as profits rise « Tamil News said
[…] bsubra மேல் பெப்ரவரி 27, 2008 சென்ற வருடம்: Laloo Prasad Yadav – Railway Budget 2007-08: Information, Analysis, Schemes & Opinion « Tamil N… Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely « Tamil […]