Mooligai Corner – Herbs & Naturotherapy: Thuthi & Kakkarattan
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007
மூலிகை மூலை: நோய்களைத் துரத்தும் துத்தி!
விஜயராஜன்
இதய வடிவ இலைகளையும், மஞ்சள் நிற சிறு பூக்களையும், தோடு வடிவக் காய்களையும் உடைய செடி. இலையில் மென்மையான கணையுண்டு. உடலில் பட்டால் சற்றே அரிக்கும். இது 4 அடி வரை வளரக் கூடியது. பூக்கள், அச்சு முறுக்கு அல்லது தாமரைப் பூ போன்று அமைந்திருக்கும். துத்தியின் இரண்டு காய்ந்த காய்களை ஒன்றோடு ஒன்று இரு தலையையும் அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் மழைக் காலத்தில் தானாகவே இது வளரும். இதன் பூ இரத்தப் போக்கை நிறுத்தவும். காமம் பெருக்கியாகவும் செயல்படக் கூடியது. விதை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் குணம் உடையது. துத்தியில் பலவகைகள் இருந்தாலும் பசும் துத்தி, ஐந்து இதழ் துத்தி மற்ற துத்திகளை விட சிறந்த மருத்துவக் குணம் கொண்டது.
வேறு பெயர்கள்: ஆனைக் கன்று, இயாகதம், ஐ இதழ், பணியார துத்தி.
வகைகள்: ஐந்து இதழ் துத்தி, ஒட்டுத் துத்தி, சிறு துத்தி, பசும் துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி, எலிக்காது துத்தி, முடக்கு துத்தி, நாம துத்தி, ராத்துத்தி, பெரும்துத்தி, வயிற்றுத் துத்தி, ரண துத்தி.
ஆங்கிலத்தில்:Abutilon indicum; G.Don;
மருத்துவக் குணங்கள்
ஐந்து பெரிய துத்தி இலைகளை எந்தக் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும், ஆண், பெண் இருவருக்கும் உள்ள வெள்ளை வெட்டை நீங்கும்.
துத்தி இலையை காரமின்றி பொரியலாகச் செய்து உணவுடன் உண்டு வர 120 நாள்களில் மூல நோய் முற்றிலும் குணமாகும். (புளி, காரம், புகை, புலால் நீக்க வேண்டும்)
துத்தியிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர மூல நோய் கட்டுப்படும்.
துத்தியிலையையும், வேலிப் பருத்தி இலையையும் சம அளவாக எடுத்து அனைத்து சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து வாயில் நன்றாக வைத்துக் கொப்பளித்து துப்பிவிடவேண்டும். இப்படிச் செய்வதால் பல் வலி, கூச்சம் போன்றவை குணமாகும்.
துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வர, இரத்த மூலம், சீழ் மூலம் குணமாகும்.
துத்தியிலையின் பூவை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதேயளவு சர்க்கரை கலந்து அரைத் தேக்கரண்டியளவு எடுத்து 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்து வர காசம், நுரையீரல் கபம், இரைப்பு, இரத்த வாந்தி குணமாகும்.
துத்தியின் விதையை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் எடுத்து, கற்கண்டு பொடி 5 கிராம் சேர்த்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர கருமேகம், வெண்மேகம், உடல் சூடு, மேக அனல் குணமாகும்.
துத்தியின் விதையைப் பசுவின் பால் விட்டு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர, கை, காலில் படர்கின்ற கருமேகம், குட்டம், வெப்பு குணமாகும்.
துத்தியிலையைக் கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது பாலும், சர்க்கரையும் சேர்த்து காப்பி குடிப்பது போலக் குடித்து வர, மேகச் சூடு தணியும்.
துத்தியிலையில் வெங்காயம், சிறு பயிறு சேர்த்து சமைத்து உண்ண மலச்சிக்கல் நீங்கும். மூலச் சூடு தணியும்.
துத்தி வேர் 60 கிராம், திராட்சை 30 கிராம் இவற்றைச் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது நெய் சேர்த்துச் சாப்பிட நீர்ச் சுருக்கு நீங்கும்.
துத்தியிலையை அரைத்து பருக்கள் மீது தடவி வர அல்லது துத்தியிலையில் காடி சேர்த்து அரைத்து பருக்கள் மீது கட்டி வர பருக்கட்டிகள் உடைந்து குணமாகும்.
மூலிகை மூலை: காக்கரட்டான்
விஜயராஜன்
கூட்டு இலைகளையும், நீல நிற மலர்களையும் கொண்ட ஏறு கொடி இனமாகும். இதன் காய்கள் தட்டையாக இருக்கும். வெள்ளைப்பூ பூக்கும் காக்கரட்டான் கொடியே மிகுந்த மருத்துவக் குணம் கொண்டது. இலை, வேர், விதை ஆகியவை மருத்துவக் குணம் கொண்டவை. தமிழகம் எங்கும் வேலிகளில் இயற்கையாகவே வளர்கின்றது.
வேறு பெயர்கள் : மாமூலி, காக்கணம், காக்கட்டான், சங்குப் பூ.
வகைகள் : கறுப்பு காக்கரட்டான், வெள்ளை காக்கரட்டான்.
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சிச் சாறு, தேன் சம அளவாக எடுத்து கலந்து 1 தேக்கரண்டியளவு (5 மில்லி) 2 வேளை குடித்து வர உடல் சூடு தணிந்து, இரவிலும் மற்றும் மழைக்காலத்தில் வருகின்ற அதிகப்படியான வியர்வை நீங்கும்.
காக்கரட்டான் பச்சையாக இருக்கும் வேர் 40 கிராம் ஒன்றிரண்டாக இடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லி வீதம் 2 மணிக்கு ஒரு முறை வீதம் 6 தடவை குடித்து வர காய்ச்சல், தலை வலி குணமாகும்.
காக்கரட்டான் வேரைப் பாலில் அவித்து, பாலோடு அரைத்துச் சுண்டைக்காய் அளவு 2 வேளை 1 டம்ளர் பாலில் கலந்து குடித்து வர மேக வெள்ளை, பிரமேகம், தந்தி மேகம், சிறுநீர்ப் பாதை அழற்சி, நீர் எரிச்சல் குணமாகும்.
வெள்ளை காக்கரட்டான் வேர், கட்டுக் கொடி இலை, கீழா நெல்லிச்ச மூலம், பெரு நெருஞ்சில் இலை, அருகம்புல் வகைக்கு ஒரு கைப்பிடியளவுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் தயிருடன் கலந்து குடிக்க எவ்வளவு நாட்பட்ட வெள்ளை ஒழுக்காக இருந்தாலும் குணமாகும்.
காக்கரட்டான் விதையை நெய்யில் வறுத்து இடித்துப் பொடியாக்கி 1/2 சிட்டிகை அளவு வெந்நீருடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வர இழுப்பு, மூர்ச்சை, நரம்பு இழுப்பு குணமாகும்.
காக்கரட்டான் விதைப் பொடி 50 கிராம், இந்துப்பு 50 கிராம், சுக்குப் பொடி 25 கிராம் கலந்து தினமும் காலையில் மட்டும் 3 கிராம் அளவு சாப்பிட்டு வர மலப்போக்கு அதிகமாகி, யானைக்கால் வீக்கம் படிப்படியாக குறையும். மேலும் காக்கரட்டான் இலையை விளக்கெண்ணையில் வதக்கிக் கட்ட வீக்கம் குறைந்து வரும்.
வெள்ளைக் காக்கரட்டான் வேரை தயிர் விட்டு அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டுவிட்டு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் பசும் மோர் வரை குடிக்க 6 அல்லது 8 முறை பேதியாகும். மோரைக் குடித்தால்தான் பேதியாகும். பகலில் தயிர்ச்சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட ஒரே நாளில் வெள்ளை குணமாகும்.
N.Murthhi said
VERY NICE AND USEFUL.. THUTHI LEA