Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி 26th, 2007

London Diary – Ira Murugan: Maiden Lane Visitor

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

லண்டன் டைரி: புரட்சியாளர் வாழ்ந்த மெய்டன் தெரு!

இரா. முருகன்

மூக்கு வழியே மூளையிலும் மனதிலும் புகுந்து கிறங்கடிக்கிற வாடையைச் சுற்றிலும் கிளப்பிக்கொண்டு பொன்னிறமாக வறுத்து, கையால் சுற்றும் இயந்திரத்தில் கரகரவென்று அரைத்து, கொதிக்கக் கொதிக்க வென்னீர் சேர்த்து “திக்’கான டீக்காஷனை ஃபில்ட்டரில் இறக்கி, பத்து நிமிஷத்துக்கு முன்னால் கறந்த பசும்பால் காய்ச்சிச் சேர்த்து, வில்லை வளைக்கிறதுபோல வீசி ஆற்றி, நுரைக்க நுரைக்க டம்ளரில் ஊற்றி நீட்டுகிற அற்புதமான காப்பிக் கடைகள் லண்டனில் திறந்தது கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கதி. விக்டோரியா மகாராணி இங்கிலாந்தை ஆண்டபோது நாடு முச்சூடும் மும்முரமாக காப்பி குடித்துக் கொண்டிருந்தது. அல்லது மதுபானம் பருகிக் கொண்டிருந்தது. பல குடிமக்கள் பகல், இரவு என்று நேரத்தைப் பிரித்துக்கொண்டு இரண்டு கட்சியிலும் அரும்பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

கோவண்ட் தோட்டச் சுற்றுவட்டாரத்தில் அப்போது காப்பிக் கடை இல்லாத சந்து பொந்து ஒன்று கூடக் கிடையாது. பரபரப்பான போட்டிக்கு நடுவே காப்பிப் பிரியர்களைக் கடைக்கு வரவழைக்கப் புதுமையான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

“எங்க கடையில் காப்பி குடித்தால், ஒரு சுருட்டு இலவசம்’ என்று விளம்பரம் செய்கிற கடைக்கு நேர் எதிரே, “காப்பி குடித்தபடியே இலவசமாக தினசரிப் பத்திரிகை படியுங்கள்’ போர்ட் வைத்த கடை. “பெரிய சைஸ் டம்ளர் காப்பி ரெண்டு சல்லி, சின்ன சைஸ் டம்ளர் ஒரே ஒரு சல்லி’ என்று மினி மார்க்கெட்டிங்கில் காசை அள்ளிய கடை இப்படிப் பல. பால் பவுடர் என்ற சமாச்சாரத்தைக் கண்டுபிடித்ததும் அந்தச் சமயத்தில்தான். “”என்னத்துக்கு மெனக்கெடணும்? லண்டன் பால்காரங்களைக் கேட்டா சொல்லுவாங்களே, சுண்ணாம்புக் கட்டியைக் கரைச்சுத் தண்ணியை ஊத்திக் கொஞ்சம் பாலைச் சேர்த்தாப் போதுமே” என்று அந்தக்கால நகைச்சுவை பத்திரிகை “பஞ்ச்’ நையாண்டிக் கட்டுரை எழுதியதும் அப்போதுதான்.

கோவண்ட் தோட்டத்திலிருந்து தெற்கு வசமாகத் திரும்பி, ஒரு காலத்தில் காப்பிக் கடைகள் செழித்தோங்கிய மெய்டன் சந்தில் நடக்கிறேன். முட்டுச் சந்தாக முடிந்த இந்த மெய்டன் சந்து இரண்டு பக்கத்திலும் திறந்து, பக்கத்து சவுத்ஹாம்ப்டன் வீதியில் முடிய வழிவகுத்தவர் விக்டோரியா மகாராணி. நாடக ரசிகையான அவர் கோவண்ட் தோட்டப் பக்கத்து நாடகக் கொட்டகைக்கு சாரட் வண்டியில் வந்துவிட்டுத் திரும்பப் போக வசதியாக இப்படி மெய்டன் சந்துக்கு ராஜபாட்டை அந்தஸ்து ஏற்பட்டதோடு அந்தத் தெரு கூடுதல் பரபரப்புக்கு இடமானது.

நான் இப்போது நிற்கும் மெய்டன் சந்து முழுக்க சாப்பாட்டுக் கடைகள். அங்கங்கே வக்கீல் ஆபிஸ்கள். மெக்சிகோ, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ் என்று எல்லாத் தேசத்து உணவுக்கும் இந்தத் தெருவுக்கு வந்தால் போதும். பழைய காலக் காப்பிக் கடை ஏதும் மிச்சமிருக்கிறதா என்று ஒவ்வொரு வாசலிலும் ஆர்வத்தோடு நோக்கினால் ஏமாற்றம்தான். காப்பிக் கடைகள் எல்லாம் நம்மூருக்குக் குடிபெயர்ந்து ஏழெட்டு மாமாங்கமாவது ஆகியிருக்கும்.

எதிர்வசத்து ரூல்ஸ் ஓட்டல் போர்ட் கவனத்தை ஈர்க்கிறது -“லண்டனிலேயே பழைய ஓட்டல்’. 1798-ல் தொடங்கியதாம். அப்போது தயாரித்த மைசூர்பாகு எதுவும் ஷோகேஸில் தட்டுப்படவில்லை என்றாலும் இது உண்மையாக இருக்குமென்று நம்பலாம். சார்லஸ் டிக்கன்ஸ், கிரகாம் கிரீன் போன்ற பெரிய எழுத்தாளர்கள் வந்து இருந்து சாப்பிட்டுவிட்டுப் போன கடை என்று எழுதி வைத்திருக்கிறது. டிக்கன்ஸ் நாவல் எழுதியதோடு நிற்கவில்லை. மேடை போட்டு, தான் எழுதிய கதைகளை அதன் பாத்திரங்களாக மாறி வாசித்துக் காட்டவும் செய்தார். வாசகர்கள் காசு கொடுத்து டிக்கெட் எடுத்துக் குழுமி, அரங்கு நிறைந்து நடந்த இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கான பழைய நோட்டீசுகளை ரூல்ஸ் ஓட்டலில் காட்சியாக வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம், பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட ஏழாம் எட்வர்ட் மன்னன் தன் காதலியான நாடக நடிகை லில்லி லாங்ட்ரீயை பிரதிதினமும் அந்தி சாய்ந்த பின்னர் இந்த ஓட்டலில் வைத்துத்தான் சந்திப்பானாம்.

“”நாலாவது டேபிள் தாடிக்காரப் பெரிசுக்கு மட்டன் சாப்ஸ், ரெண்டாவது டேபிள் இங்கிலாந்து ராஜாவுக்கும் அவருடைய ஜோடிக்கும் சிக்கன் ரோஸ்ட், எட்டாவது டேபிளுக்கு தக்காளி சூப்.” என்று அந்தக்கால ஓட்டல் வெயிட்டர்கள் மேற்படி ராஜரகசியத்தை சகஜமாக எடுத்துக்கொண்டு நடமாடியிருப்பார்கள் என்ற நினைவோடு நடையை எட்டிப் போடுகிறேன்.

மெய்டன் சந்து பத்தாம் எண் வீட்டு வாசலில் ஒரு வினாடி நிற்கிறேன். வால்ட்டேர் இருந்த வீடு என்று வெளியே பலகை அறிவிக்கிறது. பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்ட்டேர் அது வெடிப்பதற்கு முன்னால் அகதியாகத் தஞ்சம் புகுந்தது லண்டனில்தான். அதுவும் இந்த கோவண்ட் கார்ட்டன் பகுதியும், மெய்டன் சந்து சூழ்நிலையும் ரொம்பப் பிடித்துப் போகவே இந்த வீட்டில் ஒரு வருடம் குடக்கூலி கொடுத்து வசித்து லண்டன் வாழ்க்கையை அனுபவித்தபடி சொந்த நாட்டில் புரட்சிக்குத் திட்டம் தீட்டியிருக்கிறார். ஒரு தேசத்தின் தலைவிதியையே மாற்றப்போகிற மனுஷர் நம்மிடையே இருக்கிறார் என்று தெரியாத அந்தக்கால மெய்டன் சந்துவாசிகள் அவரை அடிக்க ஒருதடவை படை பட்டாளமாகக் கிளம்பியிருக்கிறார்கள். பிரஞ்சுக்காரர்கள் தொடங்கி அன்னிய தேசத்துக்காரர்கள் யாரையும் கூடியிருக்கச் சம்மதிக்காத மனநிலையே இதற்குக் காரணம். இந்தச் சகிப்பின்மை இப்போதும் அவ்வப்போது ஷில்பா ஷெட்டி விவகாரம் போல் தலைகாட்டிக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

மெய்டன் சந்தில் மணக்க மணக்க செண்ட் விற்கிற பென்னலிஹன் கடை கண்ணில் படுகிறது. இதுவும் நூற்றுச் சில்லறை வருடம் முற்பட்டதுதான். உள்ளே வாக்கிங் ஸ்டிக்கை அப்படியும் இப்படியும் வீசியபடி அலமாரிகளில் அடைத்து வைத்திருந்த செண்ட் போத்தல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கனவான் கூடக் கடை திறந்த நாள் முதல் வாடிக்கையாளராக இருப்பவர் என்று தோன்றுகிறது. கடைக்குள்ளே நுழைந்து ஒரு சுற்று சுற்றி வருகிறேன். இரண்டாம் உலக மகாயுத்த காலத்துச் சூழல் கனமாகச் சூழ்ந்து நிற்கிற பிரமை. தஞ்சாவூர் அத்தர்க் கடை, கோபுலு வரைந்த தில்லானா மோகனாம்பாள் ஓவியம், வாசனைப் புகையிலை, சர்ச்சிலின் சுருட்டு வாடை, ராத்திரி முழுக்க நடக்கிற நாதஸ்வரக் கச்சேரி என்று நான் பிறப்பதற்கு முந்திய 1940-கள் மாயமாகக் கிளர்ந்தெழுந்து புலன்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. மெய்டன் சந்தில் காலம் உறைந்து கிடக்கிறது.

மெல்ல நடந்து சவுத்ஹாம்ப்டன் தெருவில் திரும்புகிறேன். எதிரே நிற்கிற பழைய கட்டடம் ஒரு பத்திரிகை அலுவலமாக இருந்தது. ஆமாம், நூறு வருடம் முன்னால்தான். ஆர்தர் கானன்டாயில் உருவாக்கிய பிரபலமான துப்பறியும் நிபுணரான ஷெர்லாக் ஹோம்ஸ் கதாநாயகனாக இடம்பெற்ற கதைகள் வெளியான “தி ஸ்ட்ராண்ட்’ பத்திரிகை இந்தக் கட்டடத்திலிருந்துதான் பிரசுரமானது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதை வாசிக்க ஆர்வமான ரசிகர்கள் இங்கிலாந்திலும், கடல் கடந்து அமெரிக்காவிலும் அதிகம் என்பதால், கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் விற்ற பத்திரிகை அது. ஸ்ட்ராண்ட் பத்திரிகை அடித்து ஓய்ந்த நேரத்தில் அச்சு யந்திரத்தை சும்மா வைத்திருக்க வேண்டாமே, இன்னும் நாலு காசு பார்க்கலாமே என்ற நல்லெண்ணத்தோடு அங்கேயிருந்து ஒரு கிசுகிசு பத்திரிகையும் வெளியாகிக் கொண்டிருந்ததாம். அதை ஆரம்பித்தபோது முதல் நாள் கிசுகிசுவாக, “ஏழாம் எட்வர்ட் மன்னருக்குப் பிரபல நடிகையோடு தொடர்பு’தான் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.

லண்டன் டைரி: பிசாசு பாடும் ராயல் ஓபரா ஹவுஸ்!

இரா.முருகன்

எட்டாம் ஹென்றி மன்னன் கொஞ்சம் அசடு. ஒன்றல்ல, நாலு முறை இந்தப் பேர்வழி கல்யாணம் செய்துகொண்டான் என்பதே போதும் இதை நிரூபிக்க. நாலு மாமியார்! இதிலும் உச்சகட்டக் கொடுமை அந்த நாலாவது மாமியார் அவ்வப்போது கனகுஷியாக ராகம் இழுத்துப் பாட வேறு செய்வார். பாட்டுப் பாடுவதில் ஆசை தீராமல், இறந்துபோன பின்பும் கூட, அதாவது இன்னமும் அவ்வப்போது நடுராத்திரி நேரத்தில் பிசாசாக அலைந்து மேடையேறிப் பாடிக்கொண்டிருக்கிறார். லண்டன் கோவண்ட் கார்டன் அருகே, ராயல் ஓபரா ஹவுஸ் என்ற பரந்து விரிந்த இசை நாடக அரங்கத்தில்தான் அந்தம்மா அவ்வப்போது நடுராத்திரிக் கச்சேரி நிகழ்த்திக் கொண்டிருப்பதாக லண்டன் வாழ் பிசாசு ரசிகர்கள் திடமாக நம்புகிறார்கள்.

கோவண்ட் தோட்டத்திலிருந்து தெற்கு நோக்கிப் போகும்போது கண்ணிற்படுகின்ற கட்டடம் ராயல் ஓபரா ஹவுஸ். நாட்டு மக்களுக்கு இசை நாடகம்(ஓபரா) என்ற நுண்கலையில் தேர்ந்த ரசனை ஏற்படுத்தும் நல்லெண்ணத்தில் அரசு உதவிப் பணம் கொடுக்க, இங்கே இருநூறு வருடத்துக்கு மேலாக அரங்கு நிறைந்த காட்சிகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. அப்படியான நிகழ்ச்சிகள் முடிந்து ராத்திரியில் ரசிகர்கள் ரயிலை, பஸ்ûஸப் பிடித்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததற்கு அப்புறம் ஆளில்லாத அரங்கத்தில் எட்டாம் ஹென்றியின் மாமியார் ஆவி ரூபமாக உலவியபடி பாடுகிறாராம். ஆனால் அதைக் கேட்க அதிர்ஷ்டம் இல்லாத ரசிகர்கள் கச்சேரி முடிவதற்கு முன்பே கிளம்பிவிடுகிறார்கள். “அந்தத் தாட்டியான அம்மா பாடினாத்தான் முடிஞ்சதுன்னு அர்த்தம்’ (  It’s not over until the fat lady sings) என்பது அவர்களுக்குத் தெரியாதோ என்னமோ.

ராயல் ஓபரா ஹவுஸ் வாசலில் நிற்கும்போது நினைவுக்கு வரும் ஆங்கிலச் சொலவடை இது. இரண்டு அணிகள் பொறி பறக்க மோதும் விளையாட்டுகளின் போது, வர்ணனையாளர்கள் தோற்கிற மாதிரித் தோன்றும் தரப்பை உற்சாகப்படுத்த உதிர்க்கும் வாக்கியம். “இன்னும் நம்பிக்கை இருக்கு’ என்று இதற்குப் பொருள். ஓபரா ஹவுஸ் வாசலில் டிக்கட் வாங்க நிற்கும் டூரிஸ்டுகளின் நீண்ட க்யூவை ஆயாசத்தோடு பார்க்கிறேன். இன்றைய நிகழ்ச்சிக்கு டிக்கட் கிடைத்து, அது முடிந்து இங்கேயே தங்கியிருக்க சந்தர்ப்பமும் கிடைத்து, மாமியார்ப் பிசாசு பாடுவதைக் கேட்க வாய்ப்பும் எனக்குக் கிட்டும் என்ற நம்பிக்கை இல்லாததால் தெருவைக் கடக்கிறேன்.

ஓபரா ஹவுஸýக்கு எதிரே ஒரு பழைய அரசாங்கக் கட்டடம் அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறது. தூசியடைந்து கிடக்கும் இது ஒரு காவல் நிலையம். லண்டனில் ஏற்பட்ட முதல் அல்லது இரண்டாவது போலீஸ் ஸ்டேஷன் இந்த இடத்தில்தான் இயங்கிக் கொண்டிருந்ததாகத் தகவல்.

வில்லியம் அட்கின்ஸன் என்ற லண்டன் போலீஸ்காரர் காவல் துறையின் சரித்திரத்தில் மட்டுமில்லை, உலகச் சாதனையாளர்கள் பட்டியலிலும் இடம்பெற வேண்டியவர். 1829-ல் இவரை அரசு காவலராக நியமித்தபோது வழங்கப்பட்ட எண் கான்ஸ்டபிள் நம்பர் ஒன். “”எய்ட் நாட் டூ, இந்த ஆளை லாக்-அப்பிலே தள்ளு, த்ரீ நாட் செவன் ஜீப்புலே ஏறு” என்று சினிமா கிளைமாக்சில் காக்கியுடை இன்ஸ்பெக்டர்கள் அவசர வசனம் பேசுகிறபோது, இப்படி ஒற்றைப்படையில் “கான்ஸ்டபிள் நம்பர் ஒன்’ என்று கூப்பிட்டால் சகிக்காதுதான். அது தெரிந்தோ என்னமோ, இந்த முதல் கான்ஸ்டபிள் நியமனமான கொஞ்ச காலத்தில் பதவி விலகிவிட்டார். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் அது. மிடுக்காகப் புத்தம்புது யூனிபாரம் அணிந்து, கோவண்ட் கார்டனைச் சுற்றி “பாரா உஷார்’ என்று ஜேப்படிக்காரர்களையும் இதரக் குற்றவாளிகளையும் தேடி மனுஷர் ரெண்டு மணி நேரம்தான் நடந்தார். கொஞ்சம் களைப்பு ஏற்படவே, எதிரே தெரிந்த கடையில் படியேறி குடிக்கத் தண்ணீர் கேட்டிருக்கிறார், பாவம். அவர் நுழைந்த இடம் மதுக்கடையானதால் பியர், விஸ்கி, பிராந்தி என்று பாட்டிலில் அடைத்துவரும் தண்ணீர்தான் கிடைத்தது. நிறுத்தி நிதானமாகத் தாகசாந்தி செய்துகொண்டு தள்ளாடியபடி நடந்து கடமையைத் தொடர்கிற நேரத்தில், அதிகாரிகள் கண்ணில் அவர் பட நேர்ந்தது துரதிர்ஷ்டம்தான். “நீ வேலைக்குச் சரிப்பட மாட்டே, வீட்டுக்குப் போய்யா..’ என்று முதல்நாள் வேலை முடிவதற்குள் சீட்டுக் கிழித்து அனுப்பப்பட்ட வில்லியம் அட்கின்ஸன் நினைவில் கண்கள் குளமாக, அடைத்துக் கிடக்கும் பழைய காவல் நிலையத்தைப் பார்க்கிறேன்.

“”இப்படி ஒரு புராதனமான கட்டடத்தைச் சும்மா அடைத்துப் பூட்டி வைத்திருக்காமல், மராமத்து செய்து இங்கே போலீஸ் மியூசியம் அமைக்கலாம். இல்லை இதை இடித்துவிட்டு, காவலர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டலாம். அரசு அலட்சியமாக இருப்பது ஏன்?” தொப்பியும் கம்பளிக் கோட்டும் தரித்த ஒரு நோஞ்சான் மனிதர் பூட்டிய காவல் நிலையப் படியில் நின்றபடி உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரவர் தன்பாட்டுக்குத் தெருவில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே நின்று இப்படி தொண்டைத் தண்ணீரை வற்ற அடித்துக் கொள்ளாமல், பக்கிங்ஹாம் அரண்மனைப் பக்கம் ஹைட் பார்க் போய், அங்கே ஈசான மூலையில் பேச்சாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பூங்கா பெஞ்சில் ஏறிநின்று இவர் சொற்பொழிவாற்றினால் ஒரு பத்து பேராவது கூடிநின்று கேட்பார்களே என்ற யோசனையோடு மருந்துச் சந்தில் (ட்ரூயரி லேன்) நுழைகிறேன்.

பிரிட்டனில் ஒரு பேட்டை பாக்கியில்லாமல் சூப்பர் மார்க்கெட் நடத்தும் செயின்ஸ்பரி நிறுவனம் முதன்முதலாகக் கடை போட்டது இங்கேதான். அந்தக் காலத்தில் இந்த மருந்துச் சந்தில் அங்கங்கே மாடு வளர்த்துப் பால் வியாபாரம் செய்துவந்திருக்கிறார்கள். மாட்டுச் சாணமும், வைக்கோலும் நிறைந்த இங்கே 1829-ல் சுத்தமும் சுகாதாரமுமாகப் பால் விற்கக் கடைதிறந்த பால்காரர்தான் செயின்ஸ்பரி. நகர எல்லைக்கு வெளியே மாடு வளர்த்துக் கறந்து, இங்கே கொண்டுவந்து நேர்த்தியாகப் போத்தலில் அடைத்து விற்பதோடு, புதிதாகச் சுட்ட ரொட்டி, நயம் வெண்ணெய் என்று சாப்பாட்டுச் சமாச்சாரங்களையும் அவர் விற்க ஆரம்பிக்க, அது நூற்றுக்கணக்கான செயின்ஸ்பரி கடைகளும், கோடிக்கணக்கில் பிசினசுமாகப் பெருகி வளர அதிக நாள் பிடிக்கவில்லை.

மருந்துச் சந்தின் அருகே பெட்ஃபோர்ட் தெருவில் இன்னொரு போட்டி சூப்பர் மார்க்கெட் நிறுவனமான டெஸ்கோவின் பரபரப்பான கடைவாசலில் நிற்கிறேன். என் கையில் இருக்கும் லண்டன் சரித்திரப் புத்தகத்தில் இந்த இடத்தைப் பற்றிக் குறித்திருக்கக் காரணம் டெஸ்கோ இல்லை. சூப்பர் மார்க்கெட் வருவதற்கு முன்னால் இங்கே வெற்றிகரமாக மோசஸ் சகோதரர்கள் நடத்தி வந்த தையல்கடையில் துணி தைத்துக் கிடைத்த வருமானத்தைவிட, சூட்டும் கோட்டும் வாடகைக்கு விட்டு அள்ளிய காசு கணிசமானதாம். கோவண்ட் தோட்டத்தைச் சுற்றியுள்ள நாடக, இசை அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும், நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்தப் பகுதி ஓட்டல்களில் ராத்திரிச் சாப்பாட்டுக்குப் போகும் மேட்டுக்குடி மக்கள் உயர்தரமான சாயந்திர உடை தரித்துத்தான் வருவது வழக்கம். கணிசமான பணம் செலவழித்து இப்படி உடுப்பு வாங்க வசதியில்லாத சாமானியர்கள் வருடத்தில் ஒருமுறை, இரண்டு முறை இப்படி ஓபரா போகிறபோது, ஓட்டலில் படியேறி ரசித்துச் சாப்பிடும்போது மேட்டுக்குடியாகத் தங்களைக் காட்டிக் கொள்வதில் மும்முரமாக இருந்தார்கள். வாடகைக்கு உடுப்பு கொடுத்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்த நிறுவனம் மூடப்பட்டதோடு ஒருநாள் கூத்து பார்க்க கனவான் வேடம் போடச் சந்தர்ப்பம் கிடைக்காமல் சாமானிய ரசனை ஓபராவையும், பாலேயையும் விட்டுவிலகி, கால்பந்தாட்டத்தில் புகுந்தது. ஒருவேளை டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் நினைத்தால் இங்கே திரும்ப வாடகை உடுப்பு வசதி வந்து, ராயல் ஓபரா ஹவுஸில் உள்ளூர்க் கூட்டம் திரும்பவர வாய்ப்பு கிடைக்கலாம். டோனி பிளேரைப் பார்க்கும்போது அவசியம் சொல்லவேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டு வெலிங்க்டன் தெருவில் திரும்புகிறேன்.

Posted in Britain, Dickens, England, Era Murugan, Era Murukan, Hotel, Ira Murugan, Ira Murukan, Literature, London, London Diary, Opera, Queen, Rayarkaapiklub, Rayarkapiklub, RKK, Royal, Tourist, Travel, Travelog, Travelogue, UK | Leave a Comment »

Ralph Nader – Profile & Biosketch: Raman Raja

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

நெட்டில் சுட்டதடா…கலக்கப் புறப்பட்ட கன்ஸ்யூமர் புயல்!

ராமன் ராஜா

உள்ளூர் செய்திகளில் டிராஃபிக் ராமசாமி என்று ஒரு பெயர் அடிக்கடி அடிபடுகிறதே, யார் இவர் என்று கவனித்தேன்; மிகப் பெரிய தலைகளுடன் மோதுவதையே முழு நேரத் தொழிலாக மேற்கொண்டு விட்ட ஒரு கெட்டித் தலை என்று தெரிகிறது. பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டித் தட்டி, பல பேருடைய தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் டிராஃபிக் ராமசாமிகள் உலகெங்கும் இருக்கிறார்கள். இதன் அமெரிக்கப் பதிப்புதான் ரால்ப் நாடர். (அமெரிக்காவில் ரால்ப் நோடர் என்றும் அழைப்பர்) கன்ஸ்யூமர் இயக்கத்தின் பிதாமகர். நாடருக்கு மெகா கம்பெனிகள் என்றாலே மகா அலர்ஜி. வால் மார்ட், மைக்ரோ சாஃப்டில் ஆரம்பித்து ஊரில் உள்ள அத்தனை பெரிய நிறுவனங்களுடனும் ஓயாத சண்டை!

1934-ல் பிறந்தவர் நாடர். லெபனானிலிருந்து அமெரிக்காவில் சென்று குடியேறிய குடும்பம். படித்தது வக்கீலுக்கு; ஆனால் உருப்படியாக ப்ராக்டீஸ் செய்வதை விட்டுவிட்டு, ஊர்ப் பிரச்சினைகளுக்காகப் பொது நல வழக்குத் தொடர்ந்து போராடுவதே முழு நேரத் தொழிலாக மேற்கொண்டு விட்டார். தன்னுடைய தாக்குதலுக்கு நாடர் முதலில் நாடியது கார் தயாரிக்கும் கம்பெனிகளை. அந்தக் காலத்து கார்களில் இருந்த சஸ்பென்ஷன் எனப்படும் முக்கியமான தொட்டில் அமைப்பு, எட்டணா கூடப் பெறாது. ஒரு மூலையில் வேகமாகத் திரும்பினால் கார் சட்டென்று பாலன்ஸ் இழந்து பல்டி அடித்து விடும். அதுதவிர ஒவ்வொரு காரிலும், ஒவ்வொரு மாடலிலும் வெவ்வேறு விதமான அமைப்புகளில் கியர் இருந்தது. சிலவற்றில் நியூட்ரல் கியர் முதலில் இருக்கும்; வேறு சில கார்களில் நடு மத்தியில் இருக்கும். பழக்கமில்லாத புதிய காரை ஓட்டுபவர்கள் திணறிப் போவார்கள். சிக்னலில் நின்றுவிட்டுக் கிளம்ப முற்படும்போது பழைய ஞாபகத்தில் முதல் கியரைப் போட்டால், ரிவர்ஸில் சீறிப் புறப்பட்டுப் பின்னால் வரும் வண்டியில் டமாலென்று இடிக்கும். கார் தயாரிப்பு கம்பெனிகள் லாபம் ஒன்றே குறியாக, மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையே இல்லாமல் இருக்கிறார்கள் என்று பொருமினார் நாடர். எல்லாத் தயாரிப்பாளர்களின் கார்களிலும் ஒரே மாதிரியான கியர் இருக்க வேண்டுமென்று வாதாடினார். கார் கம்பெனிகள் “பெப்பே’ என்றன.

அமெரிக்க நெடுஞ்சாலைகளில் சாதாரணமாகவே கார்கள் நூற்று நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அந்த வேகத்தில் ஒரு விபத்து என்றால் ஸ்டியரிங் வீலில் மோதி ஓட்டுபவரின் நெஞ்சு எலும்பு உடைந்துவிடும். இதயம் நேரடியாக அடி வாங்குவதால், ஆஸ்பத்திரி போகும் வரை ஆத்மா தாங்காது! இதைத் தடுக்க இப்போது எல்லாக் காரிலும் சீட் பெல்ட், ஸ்டியரிங்கின் நடுவே காற்று அடைத்த குஷன் பை என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் வந்துவிட்டன. சீட் பெல்ட் அணிவதால் மட்டுமே அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் பதினோராயிரம் பேர் உயிர் தப்பிப் பிழைக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் தேவை என்று நாடர் முதலில் போராடியபோது, “”இந்த மாதிரி அநாவசிய எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளுக்காக எங்கள் கார் தயாரிப்புச் செலவை ஏற்றிவிட முடியாது” என்று கார் கம்பெனிகளிடமிருந்து பயங்கர எதிர்ப்பு! நாடர் நேராக மக்களிடம் போய்விட்டார். அதிலும் குறிப்பாக அவருடைய அதிரடித் தாக்குதலுக்கு ஆளானது, புகழ் பெற்ற செவர்லே கார். கம்பெனிக்கு உள்ளிருந்தே ஒத்துழைத்த சிலரின் உதவியுடன் நிறைய டெக்னிக்கல் தகவல் திரட்டினார். அவற்றை வைத்து “எந்த வேகத்திலும் தொந்தரவு’ என்று ஒரு புத்தகம் எழுதினார். அதைப் படித்ததும் அதிர்ந்து போனார்கள் மக்கள். அரசாங்கம் என்ன செய்கிறது என்று அதட்ட ஆரம்பித்தார்கள். பொதுக் கருத்து பொங்கி எழுந்தவுடன் சர்க்கார் அவசர அவசரமாகச் சட்டம் போட்டு கார்களின் பாதுகாப்பை முறைப்படுத்தியது. கியர்கள், சஸ்பென்ஷன் என்று கார்களின் எல்லாப் பாகங்களும் திரும்ப வடிவமைக்கப்பட்டன. தனி மனிதரான நாடர் ஒருவரின் முயற்சியால்தான் இன்று அமெரிக்க சாலைகள் இவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றன.

ரால்ப் நாடர் டஜன் கணக்கான புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார். “உங்கள் டாக்டருடன் போராடுவது எப்படி?’ “விமானத்தில் போகிறீர்களா? ஜாக்கிரதை!’, “உங்கள் குழந்தைகளை மெகா கம்பெனிகள் மூளைச் சலவை செய்கிறார்கள்!’, “ஏமாந்து போகாமல் ஷாப்பிங் செய்வது எப்படி?’, “உங்கள் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியை ஓட ஓட விரட்டுங்கள்’ என்பவை அவருடைய பிரபலமான புத்தகங்களில் சில. இன்னும் அரசியல், தேர்தல் பற்றித் தெளிவாக நிறைய அலசியிருக்கிறார். அவருடைய வெப் சைட்டில் போய்ப் பார்த்தால், மனிதர் அமெரிக்காவில் முக்கால்வாசிப் பேரிடம் சண்டை போட்டு முடித்துவிட்டார் என்று தோன்றுகிறது.

ஓயாமல் தொல்லை கொடுக்கிறாரே என்று ஜெனரல் மோட்டார் போன்ற கார் தயாரிப்பு கம்பெனிகளுக்கெல்லாம் ஏகக் கடுப்பு. அதற்குள் நாடறிந்த மனிதராகிவிட்டிருந்த நாடரின் நல்ல பெயரை நாசம் செய்வது எப்படி என்று மில்லியன் டாலர் செலவில் தீவிரமாக யோசித்தார்கள். அவர் போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்து கண்காணிக்க ரகசிய ஏஜெண்டுகள் ராப்பகலாகச் சுற்றி அலைந்தார்கள். ஏதாவது தப்புப் பண்ண மாட்டாரா, கப்பென்று பிடித்துக் கொள்ளலாமே என்று நப்பாசை அவர்களுக்கு. ஒன்றும் சிக்காமல் போகவே ஈனச் சதிகளில் இறங்கினார்கள். விலை மாதர்களை ஏற்பாடு பண்ணி விசுவாமித்திரரின் தவத்தைக் கலைத்த மேனகை போல் அனுப்பி, ஆசாமி செக்ஸ் விவகாரங்களிலாவது சிக்குவாரா என்று பார்த்துவிட்டார்கள். (நாடர் கட்டைப் பிரம்மச்சாரி). வலிய வந்த பெண்ணைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டுத் திருப்பி அனுப்பிவிட்டார் நாடர். பிறகு தனக்கு எதிராக நடக்கும் சதி வேலைகளைப் புரிந்துகொண்ட அவர், நேராகக் கோர்ட்டுக்குப் போய், தன்னுடைய பிரைவஸியைக் கெடுத்து நிழல் போலத் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள் என்று கேஸ் போட்டு நஷ்ட ஈடும் வாங்கிவிட்டார். ஜெனரல் மோட்டார், பப்ளிக்காக நாடரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு ரிவர்ஸ் கியரைப் போட்டுக் கொண்டு ஓட நேர்ந்தது. நஷ்ட ஈடாக வந்த பணத்தில் இளைஞர்களைத் திரட்டி ஒரு பறக்கும் படை அமைத்தார். எங்கெல்லாம் நுகர்வோர் உரிமைகள் பறி போகிறதோ, அங்கெல்லாம் இவர்கள் புகுந்து புறப்பட்டு விலாவரியாகத் தகவல் சேகரித்துக் கொண்டு வருவார்கள். உடனே கோர்ட்தான், கேஸ்தான், புத்தகம்தான், போராட்டம்தான்! நாடர் ஆரம்பித்த நுகர்வோர் இயக்கத்தைப் பற்றியே எவ்வளவோ எழுதலாம். அதுபற்றி மற்றொரு சமயம்.

இப்போது அமெரிக்க ஜனநாயகத்தில் சர்வ சாதாரணமாகப் போய்விட்ட பல உரிமைகள், நாடர் ஆரம்பித்து வைத்தவைதான். சுற்றுச் சூழல் பாதுகாப்பு எஜென்ஸி என்ற அரசாங்க அமைப்பு தோன்றக் காரணமே நாடரின் போராட்டங்கள்தான். இப்போது நம்ம ஊரில் கூடப் பிரபலமாக இருக்கும் தகவல் அறியும் உரிமையை அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தி, அதற்கென்று சட்டம் போட வைத்தவர் -நாடர். அமெரிக்கர்களும் ரொம்பக் காலம் வரை நம்மைப் போல முனிசிபாலிட்டி குழாயில் கால்ரா தண்ணீரைத்தான் குடித்துக் கொண்டிருந்தார்கள். நாடரின் முயற்சியால் 1974-ல் பாதுகாப்பான குடிநீர் சட்டம் வந்தது. குடிக்கிற தண்ணீரில் எத்தனை அளவுக்கு மேல் உப்பு, உலோகங்கள், பாக்டீரியா இருந்தால் ஆபத்து என்று விஞ்ஞானிகளை வைத்துக் கொண்டு விளக்கி, குழம்பின குட்டையைத் தெளியவைத்தவர்- நாடர். அதேபோல் அப்போது கசாப்புக் கடைகளிலெல்லாம் ஒரே ஊழல் மயம். சீக்கு மாடு, சொறி ஆடு எல்லாவற்றையும் வெட்டிக் கலந்து விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு முறை உள்ளே எட்டிப் பார்த்தவர்கள் சைவத்துக்கு மாறிவிடுவார்கள். மாநில சுகாதார இன்ஸ்பெக்டர் வந்து மாமிசக் கூடங்களைச் சோதனை போட்டு சர்டிபிகேட் தர வேண்டும் என்று சட்டம் இயற்ற வைத்தது- நாடர்.

அரசியலிலும் இறங்கி, எலெக்ஷனிலும் நின்று தன்னந்தனியாக விஜயகாந்த் மாதிரி கலக்கினார் நாடர். ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் சுயேச்சையாகப் போட்டியிடத் தவற மாட்டார். 2000-வது வருடத் தேர்தலில் எதிரே ஜார்ஜ் புஷ், அல் கோர் என்று இரண்டு மாபெரும் அரசியல் மலைகள். நாடர் தயங்கவில்லை. “”விற்பனைக்கு அல்ல” (ய்ர்ற் ச்ர்ழ் ள்ஹப்ங்) என்று பொருள் பொதிந்த போர்டு போட்டுக் கொண்டு அரசியல் கடையைத் திறந்தார். ஊர் ஊராகப் பிரசாரம் செய்தார். குடியரசுக் கட்சிக்காரர்கள், ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இரண்டு பேருமே நாடருக்கு ஓட்டுப் போட்டார்கள். “”இவனும் திருடன், அவனும் திருடன்தானே; ஆகவே நான் ஓட்டெல்லாம் போடும் வழக்கமே இல்லை” என்று வீட்டில் சப்பையாகக் குந்திக் கொண்டு பேப்பர் படித்து விமரிசன மழை பொழிந்து கொண்டிருந்த அறிவு ஜீவிக் கும்பலைக் கூட வெளியே இழுத்துத் தனக்கு ஓட்டுப் போட வைத்தவர் நாடர். இதுவே பெரிய சாதனைதான். மொத்தம் விழுந்த ஓட்டுக்களில் சுமார் மூன்று சதவிகிதம் வாங்கிவிட்டார். அவர் மட்டும் ஓட்டைப் பிளக்கவில்லையென்றால் நிச்சயம் புஷ் வெற்றியடைந்திருக்க முடியாது. பல இடங்களில் புஷ் ஜெயித்த ஓட்டு வித்தியாசத்தை விட நாடருக்கு அதிகம் விழுந்திருந்தது.

டைம் பத்திரிகை செல்வாக்கு மிகுந்த நூறு அமெரிக்கர்களைப் பட்டியலிட்டு அதில் நாடருக்கு ஒரு நாற்காலி கொடுத்திருந்தது. அவரை மையமாக வைத்து நிறைய கார்டூன்கள், டி.வி. காமெடி ஷோக்கள் எல்லாம் உண்டு. ஒரு முறை நாடருக்கு எதிர்க் கட்சி வேட்பாளர் ஜான் கெர்ரியுடன் டி.வி.யில் நேருக்கு நேராக விவாதம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்களாம். நிகழ்ச்சி முடிந்தவுடன், சந்திப்பு எப்படி இருந்தது என்று கெர்ரியிடம் கேட்டார்களாம். “”சே…! தப்பிச்சுட்டான். கடைசி நேரத்தில் என்னுடைய துப்பாக்கி வெடிக்காமல் மக்கர் செய்துவிட்டது!” என்று புகைந்தாராம் கெர்ரி.

Posted in activism, America, Analysis, Attorney, Biography, Biosketch, Bush, Capitalism, Consumer Activism, Elections, General Motors, GM, Green Party, John Kerry, Law, Lawsuits, Lawyer, Lebanon, Massachusetts, Order, people, Persons, profile, Ralph Nader | Leave a Comment »

Mooligai Corner – Herbs & Naturotherapy: Thuthi & Kakkarattan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

மூலிகை மூலை: நோய்களைத் துரத்தும் துத்தி!

விஜயராஜன்

இதய வடிவ இலைகளையும், மஞ்சள் நிற சிறு பூக்களையும், தோடு வடிவக் காய்களையும் உடைய செடி. இலையில் மென்மையான கணையுண்டு. உடலில் பட்டால் சற்றே அரிக்கும். இது 4 அடி வரை வளரக் கூடியது. பூக்கள், அச்சு முறுக்கு அல்லது தாமரைப் பூ போன்று அமைந்திருக்கும். துத்தியின் இரண்டு காய்ந்த காய்களை ஒன்றோடு ஒன்று இரு தலையையும் அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் மழைக் காலத்தில் தானாகவே இது வளரும். இதன் பூ இரத்தப் போக்கை நிறுத்தவும். காமம் பெருக்கியாகவும் செயல்படக் கூடியது. விதை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் குணம் உடையது. துத்தியில் பலவகைகள் இருந்தாலும் பசும் துத்தி, ஐந்து இதழ் துத்தி மற்ற துத்திகளை விட சிறந்த மருத்துவக் குணம் கொண்டது.

வேறு பெயர்கள்: ஆனைக் கன்று, இயாகதம், ஐ இதழ், பணியார துத்தி.

வகைகள்: ஐந்து இதழ் துத்தி, ஒட்டுத் துத்தி, சிறு துத்தி, பசும் துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி, எலிக்காது துத்தி, முடக்கு துத்தி, நாம துத்தி, ராத்துத்தி, பெரும்துத்தி, வயிற்றுத் துத்தி, ரண துத்தி.

ஆங்கிலத்தில்:Abutilon indicum; G.Don;

மருத்துவக் குணங்கள்

ஐந்து பெரிய துத்தி இலைகளை எந்தக் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும், ஆண், பெண் இருவருக்கும் உள்ள வெள்ளை வெட்டை நீங்கும்.

துத்தி இலையை காரமின்றி பொரியலாகச் செய்து உணவுடன் உண்டு வர 120 நாள்களில் மூல நோய் முற்றிலும் குணமாகும். (புளி, காரம், புகை, புலால் நீக்க வேண்டும்)

துத்தியிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர மூல நோய் கட்டுப்படும்.

துத்தியிலையையும், வேலிப் பருத்தி இலையையும் சம அளவாக எடுத்து அனைத்து சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து வாயில் நன்றாக வைத்துக் கொப்பளித்து துப்பிவிடவேண்டும். இப்படிச் செய்வதால் பல் வலி, கூச்சம் போன்றவை குணமாகும்.

துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வர, இரத்த மூலம், சீழ் மூலம் குணமாகும்.

துத்தியிலையின் பூவை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதேயளவு சர்க்கரை கலந்து அரைத் தேக்கரண்டியளவு எடுத்து 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்து வர காசம், நுரையீரல் கபம், இரைப்பு, இரத்த வாந்தி குணமாகும்.

துத்தியின் விதையை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் எடுத்து, கற்கண்டு பொடி 5 கிராம் சேர்த்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர கருமேகம், வெண்மேகம், உடல் சூடு, மேக அனல் குணமாகும்.

துத்தியின் விதையைப் பசுவின் பால் விட்டு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர, கை, காலில் படர்கின்ற கருமேகம், குட்டம், வெப்பு குணமாகும்.

துத்தியிலையைக் கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது பாலும், சர்க்கரையும் சேர்த்து காப்பி குடிப்பது போலக் குடித்து வர, மேகச் சூடு தணியும்.

துத்தியிலையில் வெங்காயம், சிறு பயிறு சேர்த்து சமைத்து உண்ண மலச்சிக்கல் நீங்கும். மூலச் சூடு தணியும்.

துத்தி வேர் 60 கிராம், திராட்சை 30 கிராம் இவற்றைச் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது நெய் சேர்த்துச் சாப்பிட நீர்ச் சுருக்கு நீங்கும்.

துத்தியிலையை அரைத்து பருக்கள் மீது தடவி வர அல்லது துத்தியிலையில் காடி சேர்த்து அரைத்து பருக்கள் மீது கட்டி வர பருக்கட்டிகள் உடைந்து குணமாகும்.

மூலிகை மூலை: காக்கரட்டான்

விஜயராஜன்

கூட்டு இலைகளையும், நீல நிற மலர்களையும் கொண்ட ஏறு கொடி இனமாகும். இதன் காய்கள் தட்டையாக இருக்கும். வெள்ளைப்பூ பூக்கும் காக்கரட்டான் கொடியே மிகுந்த மருத்துவக் குணம் கொண்டது. இலை, வேர், விதை ஆகியவை மருத்துவக் குணம் கொண்டவை. தமிழகம் எங்கும் வேலிகளில் இயற்கையாகவே வளர்கின்றது.

வேறு பெயர்கள் : மாமூலி, காக்கணம், காக்கட்டான், சங்குப் பூ.

வகைகள் : கறுப்பு காக்கரட்டான், வெள்ளை காக்கரட்டான்.

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சிச் சாறு, தேன் சம அளவாக எடுத்து கலந்து 1 தேக்கரண்டியளவு (5 மில்லி) 2 வேளை குடித்து வர உடல் சூடு தணிந்து, இரவிலும் மற்றும் மழைக்காலத்தில் வருகின்ற அதிகப்படியான வியர்வை நீங்கும்.

காக்கரட்டான் பச்சையாக இருக்கும் வேர் 40 கிராம் ஒன்றிரண்டாக இடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லி வீதம் 2 மணிக்கு ஒரு முறை வீதம் 6 தடவை குடித்து வர காய்ச்சல், தலை வலி குணமாகும்.

காக்கரட்டான் வேரைப் பாலில் அவித்து, பாலோடு அரைத்துச் சுண்டைக்காய் அளவு 2 வேளை 1 டம்ளர் பாலில் கலந்து குடித்து வர மேக வெள்ளை, பிரமேகம், தந்தி மேகம், சிறுநீர்ப் பாதை அழற்சி, நீர் எரிச்சல் குணமாகும்.

வெள்ளை காக்கரட்டான் வேர், கட்டுக் கொடி இலை, கீழா நெல்லிச்ச மூலம், பெரு நெருஞ்சில் இலை, அருகம்புல் வகைக்கு ஒரு கைப்பிடியளவுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் தயிருடன் கலந்து குடிக்க எவ்வளவு நாட்பட்ட வெள்ளை ஒழுக்காக இருந்தாலும் குணமாகும்.

காக்கரட்டான் விதையை நெய்யில் வறுத்து இடித்துப் பொடியாக்கி 1/2 சிட்டிகை அளவு வெந்நீருடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வர இழுப்பு, மூர்ச்சை, நரம்பு இழுப்பு குணமாகும்.

காக்கரட்டான் விதைப் பொடி 50 கிராம், இந்துப்பு 50 கிராம், சுக்குப் பொடி 25 கிராம் கலந்து தினமும் காலையில் மட்டும் 3 கிராம் அளவு சாப்பிட்டு வர மலப்போக்கு அதிகமாகி, யானைக்கால் வீக்கம் படிப்படியாக குறையும். மேலும் காக்கரட்டான் இலையை விளக்கெண்ணையில் வதக்கிக் கட்ட வீக்கம் குறைந்து வரும்.

வெள்ளைக் காக்கரட்டான் வேரை தயிர் விட்டு அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டுவிட்டு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் பசும் மோர் வரை குடிக்க 6 அல்லது 8 முறை பேதியாகும். மோரைக் குடித்தால்தான் பேதியாகும். பகலில் தயிர்ச்சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட ஒரே நாளில் வெள்ளை குணமாகும்.

Posted in Abutilon indicum, Alternate, Ayurveda, cure, Dhuthi, Dhuti, G.Don, Herbs, Kakaratan, Kakarattan, Kakkaratan, Kakkarattaan, Kakkarattan, Maamooli, Maamuli, Mamooli, Mamuli, Medicine, Mooligai Corner, Naturotherapy, Sangu poo, Sanguppoo, Sanku poo, Sankuppoo, Thuthi, Thuti, Yunani | 1 Comment »

Interview with D Rambabu – Publisher & Editor of English to Telugu to Tamil Dictionary

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

முகங்கள்: தமிழுக்கு ஒரு புது வரவு!

ந. ஜீவா

சிலர் ஒன்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நினைத்துச் செய்வார்கள். ஆனால் அது பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்துவிடும். ஆனால் சிலர் செய்யும் செயல்களோ அவர்களே எதிர்பாராத வகையில் சிறப்பாக அமைந்துவிடும். தமிழ் வழிக் கல்வி என்றாலே ஏளனமாகப் பார்க்கும் இக்காலத்தில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் நர்சு பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் ஏன் நோயாளிகளுக்கும் பயன்படும் விதமாக மருத்துவத்துறையில் வழக்கத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சொற்களுக்கு ஓர் அகராதியைத் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார், டி.ராம்பாபு. இது ஆங்கிலம் – தெலுங்கு – தமிழ் அகராதியாகும்.

சென்னை விஜயா குரூப் ஆஃப் ஹாஸ்பிட்டலின் நிதி, கணக்குப் பிரிவின் பொது

மேலாளராகப் பணிபுரியும் ராம்பாபு,

தமிழுக்கோ, தெலுங்குக்கோ பெரிய தொண்டு செய்வதாக நினைத்தெல்லாம் இதைச் செய்யவில்லை.

அவரைச் சந்தித்துப் பேசிய போது…

தமிழிலும் தெலுங்கிலும் இப்படியொரு மருத்துவ அகராதியைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

நான் விஜயா குரூப் ஆப் ஹாஸ்பிட்டலில் 1984 ல் வேலைக்குச் சேர்ந்தேன். நிறைய பேஷன்ட்ஸ் ஆந்திராவிலிருந்து இங்கு வந்து அட்மிட் ஆவார்கள். எனது பூர்வீகம் ஆந்திரா என்பதால் டாக்டர்கள் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்த மருத்துவக் குறிப்புகள் என்னவென்று தெரியாமல் அவர்கள் என்னிடம் வந்து கேட்பார்கள். எனக்குத் தெரிந்த அளவுக்கு த் தெலுங்கில் அவர்களுக்குச் சொல்வேன். ஆனால் பல வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. அதற்காக எத்தனையோ டிக்ஷனரிகளைப் புரட்டியிருக்கிறேன். இருந்தும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது.

ஆங்கிலத்தில் உள்ள மருத்துவத் துறை சொற்களுக்குத் தமிழிலோ, தெலுங்கிலோ பொருள் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று உணர்ந்தேன். எனவே நான் கண்டறிந்த சொற்களுக்கான பொருளைத் தொகுத்து ஓர் அகராதியாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியது.

நீங்கள் தயாரித்துள்ள இந்த அகராதி யாருக்குப் பயன்படும்?

சாதாரண மனிதனுக்கே இந்த அகராதி பயன்படும். டாக்டர் தனது மெடிக்கல் ரிப்போர்ட்டில் ஏ/பஎன்று போட்டிருப்பார். இதற்கு என்ன அர்த்தம் என்று பேஷன்ட்டுக்குத் தெரியாது. இந்த அகராதியைப் பார்த்தால் ஏ/ப என்றால் ஹைப்பர் டென்சன் என்றும் தமிழில் மிகை ரத்த அழுத்தம் என்றும் தெரிந்து கொள்ளலாம். க்ஷ.ண்.க். என்று மருந்துச் சீட்டில் குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு அர்த்தம் ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று இந்த அகராதியின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு, நர்சிங் பயிலும் மாணவர்களுக்கு இந்த அகராதி பயன்படும். ஆங்கிலத்தில் புரியாத சொற்களுக்கு தமிழில், தெலுங்கில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக நர்ஸ்களுக்கு அதிகம் பயன்படும். டாக்டர் என்ன எழுதியுள்ளார், மெடிக்கல் ரிப்போர்ட் என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து வேலை செய்ய வேண்டியவர்கள் அவர்கள். அவர்களுக்கு இது அதிகம் பயன்படும்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகள் எதற்கு?

தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்குச் சென்று மருத்துவம், நர்சிங் பயிலும் மாணவர்கள் இருக்கின்றனர். அதுபோல ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வந்து பயிலும் மாணவர்களும் உள்ளனர். எனவே இருமொழிக்காரர்களுக்கும் பயன்படும்விதமாக இந்த மருத்துவ அகராதியைத் தயாரித்தேன். மேலும் எனக்குத் தாய்மொழி தெலுங்கு என்பதால் இந்தப் பணி சிரமமாகத் தெரியவில்லை.

மருத்துவ அகராதியைத் தயாரிப்பது என்பது வேறு; புத்தகப் பதிப்புத் துறை என்பது வேறு. அப்படியிருக்க நீங்களே இதை ஏன் வெளியீட்டீர்கள்?

அடிப்படையில் நான் டாக்டர் இல்லை. நான் அக்கவுன்ட்ஸ் படித்தவன். மருத்துவமனையில் நீண்டநாள் பணி புரிந்தாலும் நிறைய மருத்துவர்களுடன் பழக்கம் வைத்திருப்பதாலும் இந்த டிக்ஷனரியைத் தொகுக்க முடிந்தது. மேலும் நீங்கள் நினைப்பது மாதிரி புத்தகப் பதிப்புத் துறை எனக்குப் புதியதல்ல. நான் ஏற்கனவே “அனைத்து தேவதை காயத்ரி மந்திரங்கள்’ என்ற சிறு புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன். அது இப்போது மூன்று பதிப்புகள் வந்துவிட்டது. எனவே எனக்குப் புத்தகத் தயாரிப்பு புதியதல்ல.

ஒரு டாக்டர் அல்லாத நீங்கள் இப்படி ஓர் அகராதியைத் தொகுத்ததற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

இது நூலாக வெளிவரும் முன்பு ஆந்திராவில் உள்ள ஒரு டாக்டரிடம் கையெழுத்துப் பிரதியைக் காட்டினேன். “நீ ஒரு டாக்டரா?’ என்று கேட்டார். “இல்லை’ என்றதும் கையெழுத்துப் பிரதியைப் புரட்டிக் கூடப் பார்க்கவில்லை. ‘சர்ய்-ம்ங்க்ண்ஸ்ரீஹப் – ஆ இருந்துக்கிட்டு எப்படி எழுதுற? நீ மெடிக்கல் ஆள் இல்ல. அதனால பார்க்க மாட்டேன்’ என்று சொன்னார். மூன்று வருடங்களுக்கும் மேலாக இரவு இரண்டு மணி வரை கண்விழித்து செய்த முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பு. ரொம்பவும் மனம் வருத்தப்பட்டேன். ஆனால் சென்னை ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் காலேஜின் டாக்டர் தணிகாசலம் என்னை மிகவும் பாராட்டினார். இதைப் புத்தகமாக வெளியிடணும்

என்று என்கரேஜ் பண்ணினார். “இது மருத்துவத்துறை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலை, நீங்க

பண்ணியிருக்கீங்க’ன்னு புகழ்ந்தார். அது எனக்கு மிகுந்த

தெம்பைக் கொடுத்தது. அப்புறம் எனக்குப் பழக்கமான நிறைய டாக்டர்கள் அகராதியைத் தொகுக்கும் போது ஏற்பட்ட நிறையச் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர். அவர்கள் கொடுத்த ஊக்கத்தினால்தான் இது எனக்குச் சாத்தியமானது.

ஆங்கிலத்தில் உள்ள மருத்துவத் துறை சொற்களுக்கு தமிழில் பொருள் கண்டுபிடிப்பது சிரமமான காரியமாயிற்றே?

இந்த மருத்துவ அகராதியில் உள்ள எல்லாச் சொற்களையும் தொகுத்தது, அதற்கு விளக்கமளித்தது என் வேலையாக இருந்தது. அதை மொழிபெயர்த்தவர் வி.வி.ரத்னஸ்ரீ. என்றாலும் மொழிபெயர்க்கும் போது உடனிருந்து அதிலும் பங்கு பெற்றவன் என்கிற முறையில் அதன் சிரமங்களை அறிவேன். மேலும் இந்த அகராதி தயாரிப்பதற்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என்று மொழிகள் மட்டும் தெரிந்தால் மட்டும் போதாது. மருத்துவத்துறை தொடர்பான அறிவும் அவசியம். இல்லையென்றால் சரியாக மொழிபெயர்க்க முடியாது.

தெலுங்கைவிட தமிழில் மொழிபெயர்க்கச் சிரமப்பட்டோம். காரணம், தெலுங்கில் நிறைய எழுத்துகள் உள்ளன. உதாரணமாக தெலுங்கில் நான்கு “க’ உள்ளது. தமிழிலோ ஒன்றே ஒன்றுதான். அதுபோல ந, ண, ழ, ள, ல போன்றவற்றில் எந்த “ந’ போடுவது, எந்த “ல’ போடுவது என்பது பிரச்சினையாக இருந்தது. இது எங்களுடைய முதல் முயற்சி என்பதால் எங்களுக்கே தெரியாமல் பிழைகள் இருக்கக்கூடும். சுட்டிக்காட்டினால் அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்திக் கொள்வோம்.

இப்போது தமிழ்வழிக் கல்வி கற்பதில் ஆர்வம் குறைவாக உள்ளது. அப்படியிருக்க இந்த அகராதி மாணவர்களுக்கு எப்படி உதவும்?

நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மையிருக்கிறது. என்றாலும் ஆங்கில வழி பயிலும் மாணவர்கள் என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழில் அதைத் தெரிந்து கொண்டால் சிறப்பாகப் படிக்க முடியும். மேலும் ஆங்கிலத்தில் உள்ள ஒரு மருத்துவம் தொடர்பான சொல்லுக்குத் தமிழில் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ள இந்த அகராதி உதவும்.

சினிமாவை ரசிக்கப் புரிந்து கொள்ள மொழியே தேவையில்லை என்றாலும் எத்தனை டப்பிங் திரைப்படங்கள் வருகின்றன? டி.வி.யிலும் கூட டப்பிங் படங்களை ஒளிபரப்புகிறார்களே! எனவே தாய்மொழிக்கெனத் தனிச் சிறப்பு இருக்கவே செய்கிறது.

உங்களுடைய அகராதியில் மருத்துவத் துறை தொடர்பான சொற்களுக்கான பொருள்கள் தவிர வேறென்ன சிறப்பு அம்சம் உள்ளது?

இந்த அகராதியில் நிறைய மருத்துவம் தொடர்பான பொதுவிஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அகராதி மொத்தம் 6 பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதியில் மனித உடல், உடல்நலன் தொடர்பான பொதுவான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு நோய்க்கும் என்னென்ன உணவு சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் சுருக்கக் குறியீடுகளுக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நான்காம் பகுதியில் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் எல்லாவற்றையும் பற்றிய விளக்கம் உள்ளது. ஐந்தாம் பகுதி அகராதி. ஆறாம் பகுதியில் மனித உடலின் பல்வேறு பாகங்களின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புத்தகத்திற்கு வரவேற்பு?

சாதாரண மனிதனுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் என்ற நோக்கத்தில் தான் இந்த அகராதியைத் தொகுத்து வெளியிட்டேன். ஆனால் அது தமிழுக்குச் செய்த சேவையாகக் கருதப்படுவது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.

Posted in Accountant, Andhra Pradesh, AP, Books, D Rambabu, Dictionary, Dinamani, Doctor, Editor, Education, English, Enrichment, Explanation, Help, Interview, Kathir, Language, Learn, Medicine, service, Students, T Rambabu, Tamil, Teach, Technical, Telugu, Terminology, Translation, Vijaya Hospital | Leave a Comment »

B Kanagaraj: Border dispute between Karnataka & Maharashtra – Belgaum: Analysis, History, Backgrounder

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

சிக்கலாகும் எல்லைப் பிரச்சினை

பி. கனகராஜ்

கர்நாடகம், மகாராஷ்டிரம் இடையே பெல்காம் எல்லைப் பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது.

பெல்காம் மட்டுமல்ல; நமது நாட்டின் பல மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகள் தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.

வரலாற்றிலேயே முதன்முறையாக கர்நாடக சட்டமன்றத்தின் கூட்டம் தலைநகரான பெங்களூரை விட்டு பெல்காமில் கூட்டப்பட்டது. கர்நாடக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பெல்காமை கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆண்டுதோறும் சட்டமன்றக் கூட்டத்தை இங்கு கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்குப் போட்டியாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் அமைப்பான “மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி’ ஒரு எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தியது. மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இவ்வாறு பெல்காம் எல்லைப் பிரச்சினை இரண்டு மாநிலங்களிடையே அரசியல் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது.

கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் கோவா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முக்கோணமாக பெல்காம் மாவட்டம் உள்ளது. “மூங்கில் கிராமம்’ என்ற பொருள்படும் சமஸ்கிருதப் பெயரைப் பெற்றிருக்கும் பெல்காம் 1956ஆம் ஆண்டு வரை மராட்டியர்கள் அதிகம் வாழ்ந்த பம்பாய் மாநிலத்தில்தான் இருந்தது.

பஸல் அலி கமிஷன் பரிந்துரையால் ஏழாவது அரசியல்சாசன திருத்தச் சட்டம் மொழிவாரி மாநில சீரமைப்பை அமல்படுத்தியதால் பெல்காம் மாவட்டம் அண்டை மாநிலமான மைசூருக்கு வழங்கப்பட்டது.

அன்று முதல் இன்றுவரை “மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ பெல்காம் மீட்பு போராட்டத்தை மராட்டியர்களுக்காக நடத்தி வருகிறது. மராட்டியர்களின் “சம்யுக்த மஹாராஷ்டிரம்’ என்ற நீண்டகால கனவின் முக்கிய துருவமாக பெல்காம் உள்ளது.

“மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான இடங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இம்மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகளிலும் இவ்வமைப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. பெல்காம் மாநகராட்சி மன்றம் சென்ற ஆண்டு மகாராஷ்டிரத்துடன் இணைய தீர்மானம் இயற்றியது. எரிச்சலுற்ற கர்நாடக மாநில அரசு மாநகராட்சி மன்றத்தையே கலைத்து விட்டது.

இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே இப் பிரச்சினை வெடிப்பதற்கு மொழி, பொருளாதார, மற்றும் கலாசார காரணங்கள் உள்ளன. மராட்டியர்கள் தற்போது தங்களது கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்துவதற்கு கர்நாடக மாநில அரசின் மொழிக் கொள்கை முக்கியக் காரணமாகும்.

கர்நாடகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கன்னட மொழியில் கட்டாயமாக பாடம் போதிக்கப்பட வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பெல்காமில் பெரும்பான்மையாக உள்ள மராட்டியர்கள் கன்னட மொழித் திணிப்பை எதிர்க்கின்றனர்.

நமது அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மொழியினருக்கு அவர்களது தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று மாநிலங்களை அறிவுறுத்துகிறது. கர்நாடக அரசின் மொழிக்கொள்கை அரசியலமைப்புச் சட்டத்தின் இப்பிரிவை மீறுவதாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் எதிர்க்கின்றனர். மராட்டிய மொழியைப் பாதுகாக்க போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

பொருளாதாரக் காரணமும் இப்பிரச்சினையைப் பெரிதாக்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பெல்காம் மாவட்டம் இதமான தட்பவெப்ப நிலையில் அமைந்துள்ளது. விவசாய வளத்தைப் பெற்றுள்ள இம்மாவட்டம் கரும்பு உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவேதான் விவசாய ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பெல்காமை மகாராஷ்டிரத்துடன் இணைக்க மராட்டியர்கள் விரும்புகின்றனர்.

இரண்டு மாநிலங்களும் பெல்காமின் மேல் விருப்பம் காட்டுவதற்கு பெல்காமின் கல்வி வளர்ச்சியும் ராணுவ முக்கியத்துவமும் காரணமாக உள்ளன. பெங்களூருக்கு அடுத்தபடியாக கல்வி வளர்ச்சி பெற்ற நகரம் பெல்காமாகும். மேலும் இந்திய ராணுவத்தின் பல பயிற்சி மையங்கள் இங்கு உள்ளன. இதனை “தரைப்படையின் தொட்டில்’ என்றே பலர் வர்ணிக்கின்றனர்.

ஆகவே மகாராஷ்டிரம் இம்மாவட்டத்தைப் பெறுவதற்கு ஆரம்பம் முதலே தீவிரம் காட்டி வருகிறது. 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநில சீரமைப்புச் சட்டம் அமலானபோது உருவான குழுவின் முன் தனது கோரிக்கையை வைத்தது. மேலும் 1966ம் ஆண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாஜன் தலைமையில் நடுவர் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. ஆனால் மகாஜன் குழு தனது பரிந்துரையில் பெல்காம் மாவட்டம் கர்நாடகத்தில்தான் இருக்க வேண்டும் என கூறிவிட்டது.

இம்மாவட்டத்தில் மகாராஷ்டிரம் கோரும் 864 கிராமங்களில் 264 கிராமங்களை அதற்கு வழங்க இக்குழு பரிந்துரை செய்தது. மேலும் மகாராஷ்டிரத்தில் இருந்து கர்நாடகம் கோரும் 516 கிராமங்களில் 247 கிராமங்களை அதற்கு வழங்கவும் இக்கமிஷன் அறிவுறுத்தியது. இக்கமிஷனின் பரிந்துரைகளை கர்நாடகம் ஏற்றுக்கொண்டாலும் மகாராஷ்டிரம் நிராகரித்து விட்டது.

இல கார்புசர் என்ற கட்டட வல்லுநரால் நிர்மாணிக்கப்பட்ட, சண்டி என்ற கிராம காவல் தெய்வத்தின் பெயரால் வழங்கப்படும் சண்டீகர் ஒரு நீண்ட கால எல்லைப் பிரச்சினை ஆகும். 1966ம் ஆண்டு முதல் ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இடையே, சண்டீகர் யாருக்குச் சொந்தம் என்பதில் தீராத பிரச்சினை இருந்து வருகிறது. சீக்கிய தீவிரவாதிகள் காலிஸ்தான் என்ற தனி நாடு கோரியபோது சண்டீகர் நகரம் அரசியல் சச்சரவின் மையமாக இருந்தது. தற்போது தீவிரவாதம் தணிந்து போனாலும் பஞ்சாபியர்களின் நீண்ட கால ஏக்கமாகவே உள்ளது சண்டீகர் நகரம்.

கர்நாடகத்தில் உள்ள மங்களூரை கேரளம் கோரி வருகிறது. கேரளத்தில் உள்ள காசர்கோடு பகுதியை கர்நாடகம் கோருகிறது.

அண்மையில்கூட அசாம் மற்றும் அதனுடைய அண்டை மாநிலங்களில் இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க ஒரு கமிஷனை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பரஸ்பர பேச்சுவார்த்தைதான் சரியான வழிமுறைகளாகும். விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இப்பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும். விடவும் மாட்டேன், கொடுக்கவும் மாட்டேன் என்ற குறுகிய மனப்பான்மையுடன் மாநிலங்கள் செயல்படக் கூடாது. பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

“கூட்டுறவு கூட்டாட்சி’ என்ற உயரிய கொள்கையை நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது. தேசிய வலிமைக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் அமைதிக்கும் இக் கொள்கை அவசியமானதாகும்.

(கட்டுரையாளர்: விரிவுரையாளர், அரசியல் அறிவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோவை).

Posted in Analysis, Backgrounder, Belgaum, Bombay, Border, British, Chandigarh, Civic body, Climate, Commerce, Conflict, Coop, Cooperative, Defense, Dispute, Economy, Education, Facts, Goa, Growth, Haryana, History, India, Industry, Issues, Kannada, Karnataka, Kasargode, Kerala, Khalisthan, Language, Mahajan, maharashtra, Mangalore, Marathi, Military, Mumbai, Municipality, Op-Ed, Province, Punjab, Race, Region, Research, Rural, Society, State, Unity, Village | Leave a Comment »

Indian campaign ends in Olympic qualifiers

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

கொரியாவிடம் இந்தியா மீண்டும் தோல்வி

சென்னை, பிப். 26: ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறுவதற்கான தகுதி கால்பந்துப் போட்டியில் இந்திய மகளர் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது கொரிய அணி.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இப் போட்டி நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து இரு அணிகளும் கோல் அடிக்க கடும் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் கொரிய மகளிர் முந்தினர். 25-வது நிமிஷத்தில் லீ கீ அபாரமாக கோல் அடித்து கொரியாவை முன்னிலைப்படுத்தினார்.

அதன் பின் இந்திய மகளிர் அணி கோல் அடிக்க கடும் முயற்சி மேற்கொண்டனர், அந்த முயற்சியை கொரிய மகளிர் தகர்த்தெறிந்தனர்.

38-வது நிமிஷத்தில் பார்க் ஹீ யங்கும், 39-வது நிமிஷத்தில் மூன் சுலே ஆகியோரும் அடுத்தடுத்து கோல் அடித்து, கொரியாவை வலுப்படுத்தினர்.

பிற்பாதியில் இந்திய அணியினர் நிறைய தவறுகள் செய்தனர். இதனால் கிடைத்த வாய்ப்புகள் பறிபோயின.

முடிவில் 3-0 என்ற கணக்கில் இந்தியவை வென்றது கொரியா.

தென் கொரியாவின் மாசானில் கடந்த மாதம் 17-ம் தேதி நடந்த போட்டியில் இந்தியாவை 5-0 என கொரியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Posted in 2008, Asia, Beijing, Busan, Chennai, Football, Games, Jawaraharlal Nehru Stadium, League, Madras, Masan, match, Medal, Nehru Stadium, Olympics, Qualification Rounds, qualifiers, Republic of Korea, Soccer, South Korea, Sports, Stadium, teams, Victory, Win, Women | Leave a Comment »

Shilpa Shetty uses underworld criminals to collect her payment arrears – Praful Saris

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

தொழிலதிபருக்கு மிரட்டல்: ஷில்பாவை விசாரிக்க போலீஸ் யோசனை

Pankaj Aggarwal, the owner of Prafful Sarees who signed Shilpa in 1998 for a contract worth Rs 4 lakh a year, submitted tapes to police in Surat in which he was threatened by criminals allegedly hired by her parents to recover arrears, the actress said “the tapes were doctored”.

ஆமதாபாத், பிப். 26: தொழிலதிபர் ஒருவருக்கு மிரட்டல் வந்தது தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை விசாரிப்பது குறித்து சூரத் போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

சூரத் துணிக்கடை தொழிலதிபர் பங்கஜ் அகர்வால். இவருக்கு 2003-ல் தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் விசாரித்த போது ஃபசல் உல் ரெஹ்மான் என்பவர் மிரட்டியது தெரியவந்தது. இதன்பின்னர் அவரைக் கைது செய்து தில்லி போலீசார் விசாரித்தனர்.

அப்போது, “”ஷில்பா ஷெட்டி என்னிடம் உதவி கோரினார். அதனால்தான் பங்கஜ் அகர்வாலை மிரட்டினேன்” என்று போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார்.

இப்போது இந்த வழக்கு தொடர்பாக ரெஹ்மானை விசாரிக்க சூரத் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஷில்பா ஷெட்டியும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக சூரத் போலீஸ் துணை கமிஷனர் சுபாஷ் திரிவேதி கூறியது:

தில்லி உயர்நீதிமன்றக் காவலில் உள்ள ரெஹ்மானை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளோம். ரெஹ்மானிடம் விசாரித்த பிறகு, ஷில்பாவிடமான விசாரணை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

இதற்கிடையில் இந்த மிரட்டல் வழக்கு தொடர்பாக ஷில்பாவின் தாயார் சுனந்தா, 2003-ல் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இப்போதும் இவர் ஜாமீனில்தான் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக ஷில்பாவின் தந்தையார் மீதும் அப்போது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, Ad, Advertisement, Big Brother, Controversy, Extortion, Goonda, Gunda, Law, Model, Money, Munnabhai, Order, Pankaj Aggarval, Pankaj Aggarwal, Police, Power, Prafful Sarees, Praful, Sarees, Saris, Shilpa Shetty, Surat, Vasool Raja | Leave a Comment »