லண்டன் டைரி: புரட்சியாளர் வாழ்ந்த மெய்டன் தெரு!
இரா. முருகன்
மூக்கு வழியே மூளையிலும் மனதிலும் புகுந்து கிறங்கடிக்கிற வாடையைச் சுற்றிலும் கிளப்பிக்கொண்டு பொன்னிறமாக வறுத்து, கையால் சுற்றும் இயந்திரத்தில் கரகரவென்று அரைத்து, கொதிக்கக் கொதிக்க வென்னீர் சேர்த்து “திக்’கான டீக்காஷனை ஃபில்ட்டரில் இறக்கி, பத்து நிமிஷத்துக்கு முன்னால் கறந்த பசும்பால் காய்ச்சிச் சேர்த்து, வில்லை வளைக்கிறதுபோல வீசி ஆற்றி, நுரைக்க நுரைக்க டம்ளரில் ஊற்றி நீட்டுகிற அற்புதமான காப்பிக் கடைகள் லண்டனில் திறந்தது கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கதி. விக்டோரியா மகாராணி இங்கிலாந்தை ஆண்டபோது நாடு முச்சூடும் மும்முரமாக காப்பி குடித்துக் கொண்டிருந்தது. அல்லது மதுபானம் பருகிக் கொண்டிருந்தது. பல குடிமக்கள் பகல், இரவு என்று நேரத்தைப் பிரித்துக்கொண்டு இரண்டு கட்சியிலும் அரும்பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
கோவண்ட் தோட்டச் சுற்றுவட்டாரத்தில் அப்போது காப்பிக் கடை இல்லாத சந்து பொந்து ஒன்று கூடக் கிடையாது. பரபரப்பான போட்டிக்கு நடுவே காப்பிப் பிரியர்களைக் கடைக்கு வரவழைக்கப் புதுமையான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
“எங்க கடையில் காப்பி குடித்தால், ஒரு சுருட்டு இலவசம்’ என்று விளம்பரம் செய்கிற கடைக்கு நேர் எதிரே, “காப்பி குடித்தபடியே இலவசமாக தினசரிப் பத்திரிகை படியுங்கள்’ போர்ட் வைத்த கடை. “பெரிய சைஸ் டம்ளர் காப்பி ரெண்டு சல்லி, சின்ன சைஸ் டம்ளர் ஒரே ஒரு சல்லி’ என்று மினி மார்க்கெட்டிங்கில் காசை அள்ளிய கடை இப்படிப் பல. பால் பவுடர் என்ற சமாச்சாரத்தைக் கண்டுபிடித்ததும் அந்தச் சமயத்தில்தான். “”என்னத்துக்கு மெனக்கெடணும்? லண்டன் பால்காரங்களைக் கேட்டா சொல்லுவாங்களே, சுண்ணாம்புக் கட்டியைக் கரைச்சுத் தண்ணியை ஊத்திக் கொஞ்சம் பாலைச் சேர்த்தாப் போதுமே” என்று அந்தக்கால நகைச்சுவை பத்திரிகை “பஞ்ச்’ நையாண்டிக் கட்டுரை எழுதியதும் அப்போதுதான்.
கோவண்ட் தோட்டத்திலிருந்து தெற்கு வசமாகத் திரும்பி, ஒரு காலத்தில் காப்பிக் கடைகள் செழித்தோங்கிய மெய்டன் சந்தில் நடக்கிறேன். முட்டுச் சந்தாக முடிந்த இந்த மெய்டன் சந்து இரண்டு பக்கத்திலும் திறந்து, பக்கத்து சவுத்ஹாம்ப்டன் வீதியில் முடிய வழிவகுத்தவர் விக்டோரியா மகாராணி. நாடக ரசிகையான அவர் கோவண்ட் தோட்டப் பக்கத்து நாடகக் கொட்டகைக்கு சாரட் வண்டியில் வந்துவிட்டுத் திரும்பப் போக வசதியாக இப்படி மெய்டன் சந்துக்கு ராஜபாட்டை அந்தஸ்து ஏற்பட்டதோடு அந்தத் தெரு கூடுதல் பரபரப்புக்கு இடமானது.
நான் இப்போது நிற்கும் மெய்டன் சந்து முழுக்க சாப்பாட்டுக் கடைகள். அங்கங்கே வக்கீல் ஆபிஸ்கள். மெக்சிகோ, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ் என்று எல்லாத் தேசத்து உணவுக்கும் இந்தத் தெருவுக்கு வந்தால் போதும். பழைய காலக் காப்பிக் கடை ஏதும் மிச்சமிருக்கிறதா என்று ஒவ்வொரு வாசலிலும் ஆர்வத்தோடு நோக்கினால் ஏமாற்றம்தான். காப்பிக் கடைகள் எல்லாம் நம்மூருக்குக் குடிபெயர்ந்து ஏழெட்டு மாமாங்கமாவது ஆகியிருக்கும்.
எதிர்வசத்து ரூல்ஸ் ஓட்டல் போர்ட் கவனத்தை ஈர்க்கிறது -“லண்டனிலேயே பழைய ஓட்டல்’. 1798-ல் தொடங்கியதாம். அப்போது தயாரித்த மைசூர்பாகு எதுவும் ஷோகேஸில் தட்டுப்படவில்லை என்றாலும் இது உண்மையாக இருக்குமென்று நம்பலாம். சார்லஸ் டிக்கன்ஸ், கிரகாம் கிரீன் போன்ற பெரிய எழுத்தாளர்கள் வந்து இருந்து சாப்பிட்டுவிட்டுப் போன கடை என்று எழுதி வைத்திருக்கிறது. டிக்கன்ஸ் நாவல் எழுதியதோடு நிற்கவில்லை. மேடை போட்டு, தான் எழுதிய கதைகளை அதன் பாத்திரங்களாக மாறி வாசித்துக் காட்டவும் செய்தார். வாசகர்கள் காசு கொடுத்து டிக்கெட் எடுத்துக் குழுமி, அரங்கு நிறைந்து நடந்த இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கான பழைய நோட்டீசுகளை ரூல்ஸ் ஓட்டலில் காட்சியாக வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம், பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட ஏழாம் எட்வர்ட் மன்னன் தன் காதலியான நாடக நடிகை லில்லி லாங்ட்ரீயை பிரதிதினமும் அந்தி சாய்ந்த பின்னர் இந்த ஓட்டலில் வைத்துத்தான் சந்திப்பானாம்.
“”நாலாவது டேபிள் தாடிக்காரப் பெரிசுக்கு மட்டன் சாப்ஸ், ரெண்டாவது டேபிள் இங்கிலாந்து ராஜாவுக்கும் அவருடைய ஜோடிக்கும் சிக்கன் ரோஸ்ட், எட்டாவது டேபிளுக்கு தக்காளி சூப்.” என்று அந்தக்கால ஓட்டல் வெயிட்டர்கள் மேற்படி ராஜரகசியத்தை சகஜமாக எடுத்துக்கொண்டு நடமாடியிருப்பார்கள் என்ற நினைவோடு நடையை எட்டிப் போடுகிறேன்.
மெய்டன் சந்து பத்தாம் எண் வீட்டு வாசலில் ஒரு வினாடி நிற்கிறேன். வால்ட்டேர் இருந்த வீடு என்று வெளியே பலகை அறிவிக்கிறது. பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்ட்டேர் அது வெடிப்பதற்கு முன்னால் அகதியாகத் தஞ்சம் புகுந்தது லண்டனில்தான். அதுவும் இந்த கோவண்ட் கார்ட்டன் பகுதியும், மெய்டன் சந்து சூழ்நிலையும் ரொம்பப் பிடித்துப் போகவே இந்த வீட்டில் ஒரு வருடம் குடக்கூலி கொடுத்து வசித்து லண்டன் வாழ்க்கையை அனுபவித்தபடி சொந்த நாட்டில் புரட்சிக்குத் திட்டம் தீட்டியிருக்கிறார். ஒரு தேசத்தின் தலைவிதியையே மாற்றப்போகிற மனுஷர் நம்மிடையே இருக்கிறார் என்று தெரியாத அந்தக்கால மெய்டன் சந்துவாசிகள் அவரை அடிக்க ஒருதடவை படை பட்டாளமாகக் கிளம்பியிருக்கிறார்கள். பிரஞ்சுக்காரர்கள் தொடங்கி அன்னிய தேசத்துக்காரர்கள் யாரையும் கூடியிருக்கச் சம்மதிக்காத மனநிலையே இதற்குக் காரணம். இந்தச் சகிப்பின்மை இப்போதும் அவ்வப்போது ஷில்பா ஷெட்டி விவகாரம் போல் தலைகாட்டிக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.
மெய்டன் சந்தில் மணக்க மணக்க செண்ட் விற்கிற பென்னலிஹன் கடை கண்ணில் படுகிறது. இதுவும் நூற்றுச் சில்லறை வருடம் முற்பட்டதுதான். உள்ளே வாக்கிங் ஸ்டிக்கை அப்படியும் இப்படியும் வீசியபடி அலமாரிகளில் அடைத்து வைத்திருந்த செண்ட் போத்தல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கனவான் கூடக் கடை திறந்த நாள் முதல் வாடிக்கையாளராக இருப்பவர் என்று தோன்றுகிறது. கடைக்குள்ளே நுழைந்து ஒரு சுற்று சுற்றி வருகிறேன். இரண்டாம் உலக மகாயுத்த காலத்துச் சூழல் கனமாகச் சூழ்ந்து நிற்கிற பிரமை. தஞ்சாவூர் அத்தர்க் கடை, கோபுலு வரைந்த தில்லானா மோகனாம்பாள் ஓவியம், வாசனைப் புகையிலை, சர்ச்சிலின் சுருட்டு வாடை, ராத்திரி முழுக்க நடக்கிற நாதஸ்வரக் கச்சேரி என்று நான் பிறப்பதற்கு முந்திய 1940-கள் மாயமாகக் கிளர்ந்தெழுந்து புலன்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. மெய்டன் சந்தில் காலம் உறைந்து கிடக்கிறது.
மெல்ல நடந்து சவுத்ஹாம்ப்டன் தெருவில் திரும்புகிறேன். எதிரே நிற்கிற பழைய கட்டடம் ஒரு பத்திரிகை அலுவலமாக இருந்தது. ஆமாம், நூறு வருடம் முன்னால்தான். ஆர்தர் கானன்டாயில் உருவாக்கிய பிரபலமான துப்பறியும் நிபுணரான ஷெர்லாக் ஹோம்ஸ் கதாநாயகனாக இடம்பெற்ற கதைகள் வெளியான “தி ஸ்ட்ராண்ட்’ பத்திரிகை இந்தக் கட்டடத்திலிருந்துதான் பிரசுரமானது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதை வாசிக்க ஆர்வமான ரசிகர்கள் இங்கிலாந்திலும், கடல் கடந்து அமெரிக்காவிலும் அதிகம் என்பதால், கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் விற்ற பத்திரிகை அது. ஸ்ட்ராண்ட் பத்திரிகை அடித்து ஓய்ந்த நேரத்தில் அச்சு யந்திரத்தை சும்மா வைத்திருக்க வேண்டாமே, இன்னும் நாலு காசு பார்க்கலாமே என்ற நல்லெண்ணத்தோடு அங்கேயிருந்து ஒரு கிசுகிசு பத்திரிகையும் வெளியாகிக் கொண்டிருந்ததாம். அதை ஆரம்பித்தபோது முதல் நாள் கிசுகிசுவாக, “ஏழாம் எட்வர்ட் மன்னருக்குப் பிரபல நடிகையோடு தொடர்பு’தான் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.
லண்டன் டைரி: பிசாசு பாடும் ராயல் ஓபரா ஹவுஸ்!
இரா.முருகன்
எட்டாம் ஹென்றி மன்னன் கொஞ்சம் அசடு. ஒன்றல்ல, நாலு முறை இந்தப் பேர்வழி கல்யாணம் செய்துகொண்டான் என்பதே போதும் இதை நிரூபிக்க. நாலு மாமியார்! இதிலும் உச்சகட்டக் கொடுமை அந்த நாலாவது மாமியார் அவ்வப்போது கனகுஷியாக ராகம் இழுத்துப் பாட வேறு செய்வார். பாட்டுப் பாடுவதில் ஆசை தீராமல், இறந்துபோன பின்பும் கூட, அதாவது இன்னமும் அவ்வப்போது நடுராத்திரி நேரத்தில் பிசாசாக அலைந்து மேடையேறிப் பாடிக்கொண்டிருக்கிறார். லண்டன் கோவண்ட் கார்டன் அருகே, ராயல் ஓபரா ஹவுஸ் என்ற பரந்து விரிந்த இசை நாடக அரங்கத்தில்தான் அந்தம்மா அவ்வப்போது நடுராத்திரிக் கச்சேரி நிகழ்த்திக் கொண்டிருப்பதாக லண்டன் வாழ் பிசாசு ரசிகர்கள் திடமாக நம்புகிறார்கள்.
கோவண்ட் தோட்டத்திலிருந்து தெற்கு நோக்கிப் போகும்போது கண்ணிற்படுகின்ற கட்டடம் ராயல் ஓபரா ஹவுஸ். நாட்டு மக்களுக்கு இசை நாடகம்(ஓபரா) என்ற நுண்கலையில் தேர்ந்த ரசனை ஏற்படுத்தும் நல்லெண்ணத்தில் அரசு உதவிப் பணம் கொடுக்க, இங்கே இருநூறு வருடத்துக்கு மேலாக அரங்கு நிறைந்த காட்சிகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. அப்படியான நிகழ்ச்சிகள் முடிந்து ராத்திரியில் ரசிகர்கள் ரயிலை, பஸ்ûஸப் பிடித்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததற்கு அப்புறம் ஆளில்லாத அரங்கத்தில் எட்டாம் ஹென்றியின் மாமியார் ஆவி ரூபமாக உலவியபடி பாடுகிறாராம். ஆனால் அதைக் கேட்க அதிர்ஷ்டம் இல்லாத ரசிகர்கள் கச்சேரி முடிவதற்கு முன்பே கிளம்பிவிடுகிறார்கள். “அந்தத் தாட்டியான அம்மா பாடினாத்தான் முடிஞ்சதுன்னு அர்த்தம்’ ( It’s not over until the fat lady sings) என்பது அவர்களுக்குத் தெரியாதோ என்னமோ.
ராயல் ஓபரா ஹவுஸ் வாசலில் நிற்கும்போது நினைவுக்கு வரும் ஆங்கிலச் சொலவடை இது. இரண்டு அணிகள் பொறி பறக்க மோதும் விளையாட்டுகளின் போது, வர்ணனையாளர்கள் தோற்கிற மாதிரித் தோன்றும் தரப்பை உற்சாகப்படுத்த உதிர்க்கும் வாக்கியம். “இன்னும் நம்பிக்கை இருக்கு’ என்று இதற்குப் பொருள். ஓபரா ஹவுஸ் வாசலில் டிக்கட் வாங்க நிற்கும் டூரிஸ்டுகளின் நீண்ட க்யூவை ஆயாசத்தோடு பார்க்கிறேன். இன்றைய நிகழ்ச்சிக்கு டிக்கட் கிடைத்து, அது முடிந்து இங்கேயே தங்கியிருக்க சந்தர்ப்பமும் கிடைத்து, மாமியார்ப் பிசாசு பாடுவதைக் கேட்க வாய்ப்பும் எனக்குக் கிட்டும் என்ற நம்பிக்கை இல்லாததால் தெருவைக் கடக்கிறேன்.
ஓபரா ஹவுஸýக்கு எதிரே ஒரு பழைய அரசாங்கக் கட்டடம் அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறது. தூசியடைந்து கிடக்கும் இது ஒரு காவல் நிலையம். லண்டனில் ஏற்பட்ட முதல் அல்லது இரண்டாவது போலீஸ் ஸ்டேஷன் இந்த இடத்தில்தான் இயங்கிக் கொண்டிருந்ததாகத் தகவல்.
வில்லியம் அட்கின்ஸன் என்ற லண்டன் போலீஸ்காரர் காவல் துறையின் சரித்திரத்தில் மட்டுமில்லை, உலகச் சாதனையாளர்கள் பட்டியலிலும் இடம்பெற வேண்டியவர். 1829-ல் இவரை அரசு காவலராக நியமித்தபோது வழங்கப்பட்ட எண் கான்ஸ்டபிள் நம்பர் ஒன். “”எய்ட் நாட் டூ, இந்த ஆளை லாக்-அப்பிலே தள்ளு, த்ரீ நாட் செவன் ஜீப்புலே ஏறு” என்று சினிமா கிளைமாக்சில் காக்கியுடை இன்ஸ்பெக்டர்கள் அவசர வசனம் பேசுகிறபோது, இப்படி ஒற்றைப்படையில் “கான்ஸ்டபிள் நம்பர் ஒன்’ என்று கூப்பிட்டால் சகிக்காதுதான். அது தெரிந்தோ என்னமோ, இந்த முதல் கான்ஸ்டபிள் நியமனமான கொஞ்ச காலத்தில் பதவி விலகிவிட்டார். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் அது. மிடுக்காகப் புத்தம்புது யூனிபாரம் அணிந்து, கோவண்ட் கார்டனைச் சுற்றி “பாரா உஷார்’ என்று ஜேப்படிக்காரர்களையும் இதரக் குற்றவாளிகளையும் தேடி மனுஷர் ரெண்டு மணி நேரம்தான் நடந்தார். கொஞ்சம் களைப்பு ஏற்படவே, எதிரே தெரிந்த கடையில் படியேறி குடிக்கத் தண்ணீர் கேட்டிருக்கிறார், பாவம். அவர் நுழைந்த இடம் மதுக்கடையானதால் பியர், விஸ்கி, பிராந்தி என்று பாட்டிலில் அடைத்துவரும் தண்ணீர்தான் கிடைத்தது. நிறுத்தி நிதானமாகத் தாகசாந்தி செய்துகொண்டு தள்ளாடியபடி நடந்து கடமையைத் தொடர்கிற நேரத்தில், அதிகாரிகள் கண்ணில் அவர் பட நேர்ந்தது துரதிர்ஷ்டம்தான். “நீ வேலைக்குச் சரிப்பட மாட்டே, வீட்டுக்குப் போய்யா..’ என்று முதல்நாள் வேலை முடிவதற்குள் சீட்டுக் கிழித்து அனுப்பப்பட்ட வில்லியம் அட்கின்ஸன் நினைவில் கண்கள் குளமாக, அடைத்துக் கிடக்கும் பழைய காவல் நிலையத்தைப் பார்க்கிறேன்.
“”இப்படி ஒரு புராதனமான கட்டடத்தைச் சும்மா அடைத்துப் பூட்டி வைத்திருக்காமல், மராமத்து செய்து இங்கே போலீஸ் மியூசியம் அமைக்கலாம். இல்லை இதை இடித்துவிட்டு, காவலர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டலாம். அரசு அலட்சியமாக இருப்பது ஏன்?” தொப்பியும் கம்பளிக் கோட்டும் தரித்த ஒரு நோஞ்சான் மனிதர் பூட்டிய காவல் நிலையப் படியில் நின்றபடி உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரவர் தன்பாட்டுக்குத் தெருவில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே நின்று இப்படி தொண்டைத் தண்ணீரை வற்ற அடித்துக் கொள்ளாமல், பக்கிங்ஹாம் அரண்மனைப் பக்கம் ஹைட் பார்க் போய், அங்கே ஈசான மூலையில் பேச்சாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பூங்கா பெஞ்சில் ஏறிநின்று இவர் சொற்பொழிவாற்றினால் ஒரு பத்து பேராவது கூடிநின்று கேட்பார்களே என்ற யோசனையோடு மருந்துச் சந்தில் (ட்ரூயரி லேன்) நுழைகிறேன்.
பிரிட்டனில் ஒரு பேட்டை பாக்கியில்லாமல் சூப்பர் மார்க்கெட் நடத்தும் செயின்ஸ்பரி நிறுவனம் முதன்முதலாகக் கடை போட்டது இங்கேதான். அந்தக் காலத்தில் இந்த மருந்துச் சந்தில் அங்கங்கே மாடு வளர்த்துப் பால் வியாபாரம் செய்துவந்திருக்கிறார்கள். மாட்டுச் சாணமும், வைக்கோலும் நிறைந்த இங்கே 1829-ல் சுத்தமும் சுகாதாரமுமாகப் பால் விற்கக் கடைதிறந்த பால்காரர்தான் செயின்ஸ்பரி. நகர எல்லைக்கு வெளியே மாடு வளர்த்துக் கறந்து, இங்கே கொண்டுவந்து நேர்த்தியாகப் போத்தலில் அடைத்து விற்பதோடு, புதிதாகச் சுட்ட ரொட்டி, நயம் வெண்ணெய் என்று சாப்பாட்டுச் சமாச்சாரங்களையும் அவர் விற்க ஆரம்பிக்க, அது நூற்றுக்கணக்கான செயின்ஸ்பரி கடைகளும், கோடிக்கணக்கில் பிசினசுமாகப் பெருகி வளர அதிக நாள் பிடிக்கவில்லை.
மருந்துச் சந்தின் அருகே பெட்ஃபோர்ட் தெருவில் இன்னொரு போட்டி சூப்பர் மார்க்கெட் நிறுவனமான டெஸ்கோவின் பரபரப்பான கடைவாசலில் நிற்கிறேன். என் கையில் இருக்கும் லண்டன் சரித்திரப் புத்தகத்தில் இந்த இடத்தைப் பற்றிக் குறித்திருக்கக் காரணம் டெஸ்கோ இல்லை. சூப்பர் மார்க்கெட் வருவதற்கு முன்னால் இங்கே வெற்றிகரமாக மோசஸ் சகோதரர்கள் நடத்தி வந்த தையல்கடையில் துணி தைத்துக் கிடைத்த வருமானத்தைவிட, சூட்டும் கோட்டும் வாடகைக்கு விட்டு அள்ளிய காசு கணிசமானதாம். கோவண்ட் தோட்டத்தைச் சுற்றியுள்ள நாடக, இசை அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும், நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்தப் பகுதி ஓட்டல்களில் ராத்திரிச் சாப்பாட்டுக்குப் போகும் மேட்டுக்குடி மக்கள் உயர்தரமான சாயந்திர உடை தரித்துத்தான் வருவது வழக்கம். கணிசமான பணம் செலவழித்து இப்படி உடுப்பு வாங்க வசதியில்லாத சாமானியர்கள் வருடத்தில் ஒருமுறை, இரண்டு முறை இப்படி ஓபரா போகிறபோது, ஓட்டலில் படியேறி ரசித்துச் சாப்பிடும்போது மேட்டுக்குடியாகத் தங்களைக் காட்டிக் கொள்வதில் மும்முரமாக இருந்தார்கள். வாடகைக்கு உடுப்பு கொடுத்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்த நிறுவனம் மூடப்பட்டதோடு ஒருநாள் கூத்து பார்க்க கனவான் வேடம் போடச் சந்தர்ப்பம் கிடைக்காமல் சாமானிய ரசனை ஓபராவையும், பாலேயையும் விட்டுவிலகி, கால்பந்தாட்டத்தில் புகுந்தது. ஒருவேளை டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் நினைத்தால் இங்கே திரும்ப வாடகை உடுப்பு வசதி வந்து, ராயல் ஓபரா ஹவுஸில் உள்ளூர்க் கூட்டம் திரும்பவர வாய்ப்பு கிடைக்கலாம். டோனி பிளேரைப் பார்க்கும்போது அவசியம் சொல்லவேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டு வெலிங்க்டன் தெருவில் திரும்புகிறேன்.