Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி 23rd, 2007

Margadarsi’s petition – Jaya condemns raids: Apex court admits plea accusing attack on freedom of press

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம்: ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி, பிப். 24: மார்கதர்சி நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

ஆந்திரத்தில் ஈநாடு பத்திரிகையும், தொலைகாட்சியும் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் அந்த பத்திரிகையை நடத்தி வரும் ராமோஜி ராவ்வுக்கு சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் அலுவலங்களில் போலீஸôர் சோதனை நடத்தினர்.

இதை எதிர்த்து ராமோஜிராவ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மாநில போலீஸôர் மார்கதர்சி நிறுவனத்தில் சோதனை நடத்தியது குறித்து பதிலளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம் முற்றுகிறது: பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையை திரும்பப்பெற்றது ஆந்திர அரசு

ஹைதராபாத், பிப். 24: அரசின் மீது குற்றஞ்சாட்டி ஆதாரம் இல்லாமல் வெளியிடப்படும் செய்திகளுக்காக பத்திரிகைகள் மீதும் தொலைக்காட்சிகள் மீதும் அவதூறு வழக்கு தொடுக்க ஆந்திர அரசு பிறப்பித்திருந்த ஆணை திரும்பப் பெறப்பட்டது.

தெலுங்கு தேசம், பாரதீய ஜனதா, தெலங்கானா ராஷ்டிர சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சித் தலைவர்களின் பலத்த எதிர்ப்பை அடுத்து ஆந்திர சட்டப் பேரவையில் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சர்ச்சைக்குரிய அந்த ஆணை இம் மாதம் 20-ம் தேதி மாநிலத்தின் தலைமைச் செயலர் ஜே. ஹரிநாராயணரால் வெளியிடப்பட்டது. பத்திரிகைகள் மீது செய்தி, மக்கள் தொடர்புத் துறை ஆணையர்கள் வழக்கு தொடுப்பதற்கான அதிகாரத்தை அந்த ஆணை வழங்கியிருந்தது. அத்துடன் இத்தகைய வழக்குகளுக்காகவே சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கியிருந்தது.

இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகித்தபோது மத்திய அரசால் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில் பத்திரிகைகளின் குரலை ஒடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இந்த ஆணை நினைவுபடுத்துகிறது என்று எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ராமோஜி ராவ் தலைமையிலான ஈ நாடு பத்திரிகையும் ஈ டி.வி.யும் ஆந்திர அரசுக்கு எதிராக தினமும் ஏதாவது பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அரசின் ஊழல்களையும், குறைகளையும் அம்பலப்படுத்துகின்றன. இது ஆளும்கட்சிக்கு பெருத்த சங்கடத்தை அரசியல்ரீதியாக ஏற்படுத்தி வருகிறது. இந் நிலையில் ராமோஜி ராவுக்குத் சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் விவகாரங்களை மாநில அரசு கிளற ஆரம்பித்தது. அதன் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதை அடக்குமுறை நடவடிக்கையாகவே எல்லா எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் கருதுகின்றன.

இப்போது இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை சென்றிருக்கிறது. நிலைமை மோசமாகிவருவதால், சர்ச்சைக்குரிய ஆணையைத் திரும்பப் பெற ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. அதை முதல்வரே பேரவையில் அறிவித்தார். ஆனால் அதற்கு முன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் எந்த நடவடிக்கையையும் நடத்தவிடாமல் ரகளை செய்தனர். அரசை குறைகூறினர். இந்த விவகாரத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் ராஜசேகர ரெட்டி பதவி விலக வேண்டும் என்று கோரினர்.

கேள்வி நேரம் நடைபெறவில்லை, அடுத்த நிகழ்ச்சிகளையும் திட்டமிட்டபடி எடுத்துக் கொள்ள முடியவில்லை. இந் நிலையில் முதல்வர் ராஜசேகர ரெட்டியே எழுந்து சர்ச்சைக்குரிய ஆணை, தனக்குத் தெரியாமலேயே வெளியிடப்பட்டது என்றும் அது குறித்து விசாரணை நடத்துவதாகவும் பத்திரிகைகளை தங்களுடைய அரசு மதிப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

அதை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்கவில்லை. இந்த விவகாரம் குறித்து முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகே இந்த அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டினர். அப்படியே முதல்வர் கூறுவது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், தனக்கே தெரியாமல் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டதற்காக, தார்மிக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Posted in abuse, ADMK, AIADMK, Andhra Pradesh, Andhra Pradesh Protection of Depositors of Financial Es, Andra Pradesh, AP, APPDFE, Charminar Bank, Chitfunds, Chits, Congress, Congress(I), Corruption, deposit, depositors, Eenaadu, Eenadu, Enaadu, Enadu, Finance, Freedom, Government, High Court, Jaya, kickbacks, Krushi Bank, Law, Margadarasi, Margadarsi, Margadarsi Financiers, Order, Petition, Petitions, Politics, Power, Press, Prudential Bank, Ramoji Rao, RBI, Reserve Bank of India, SC, Supreme Court, Tamil Nadu, Telugu, TN, Ushodaya, Ushodaya Enterprises Limited, Y.S. Rajasekhar Reddy, YSR | Leave a Comment »

London Diary – Era Murugan: Jacket Potato

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

லண்டன் டைரி: ஜாக்கெட் பொட்டேடோ!

இரா. முருகன்

“”இது யேது கண்றாவியை வில்க்கறதுக்குக் கடய் பரத்தியிருக்கானாம்?” அழுத்தமான பாலக்காட்டு உச்சரிப்பில் தமிழ்க்குரலைக் கேட்டபடி கோவண்ட் கார்டன் ஆப்பிள் மார்க்கெட் பகுதியில் நுழைகிறேன். காஞ்சிபுரம் பட்டுப் புடவை. காலில் கான்வாஷ் ஷூ, ஸ்வெட்டர், தலையில் பனிக்குல்லாய் தரித்த பாலக்காட்டு மாமி மெல்ல நடந்துகொண்டிருக்கிறார். இரண்டு பக்கத்திலும் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போவது ஜீன்ஸ், பிளேசர் அணிந்த மருமகளும் மகனும்.

முன்னால் “ஜாக்கெட் பொட்டேடோ -ஹாட் ஹாட்’ என்று சாக்குக் கட்டியில் பலகை வைத்த கடையில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. நானும் அதில் கலக்கிறேன்.

“”போன வாரம் ஸ்காட்லாந்துலே இப்படித்தான் எய்ட் யார்ட்ஸ்னு போர்ட் போட்ட கடைக்குப் போனது ஓர்மை இருக்கோ. இதென்னவாக்கும் ஆறு கெஜமும் இல்லாதே, ஒன்பது கெஜமும் இல்லாதே நடுவாந்திரமா எட்டு கெஜத்திலே புடவையான்னு பார்த்தால், ஆம்பிளைகள் கட்டிக்கற பாவாடை விக்கற இடமாம்”.

ஸ்காட்லாந்து தேசிய உடையான எட்டு முழநீள கில்ட் விற்கிற கடையில் பாலக்காட்டம்மாள் நிற்கிறதைக் கற்பனை செய்தபடி இரண்டு பவுண்ட் கொடுத்து ஜாக்கெட் பொட்டேடோ வாங்குகிறேன். கையில் சுடச்சுட பிளாஸ்டிக் வட்டிலில், வேகவைத்த உருளைக்கிழங்கும் தயிரும். தோலை உரிக்காமல் வேகவைத்த உருளைக்கிழங்குதான் ஜாக்கெட் பொட்டேடோ என்ற பெயர் ரகசியம் புலனாகிறது…

நடைபாதையில் பரத்திய கடைகளும், கட்டடத்தில் அடுக்கிய கடைகளுமாக கோவண்ட் கார்டன் சனிக்கிழமை பிற்பகல் பரபரப்பில் மூழ்கிக் கிடக்கிறது. ஜூப்ளி மார்க்கெட், ஆப்பிள் மார்க்கெட் என்று பிரிந்த பகுதிகளில் சட்டென்று கண்ணில் படுவது சாப்பாடு விற்கும் கடைகள்தான். மார்க்கெட்டிலும், சுற்றுவட்டாரத் தெருக்களிலுமாகக் கிட்டத்தட்ட ஆயிரம் இடங்களில் வயிற்றுக்குத் தீனி கிடைக்கும் என்று நம்பகமான வட்டாரங்கள் திருப்தியாக ஏப்பம் விட்டபடி தகவல் தெரிவிக்கின்றன.

பியாஸô என்ற விஸ்தாரமான மார்க்கெட் முன் சதுக்கத்தில் ஆற அமர நடக்கிறேன். எல்லா ஐரோப்பிய நாட்டுத் தலைநகரங்களிலும், மாநகரங்களிலும் ரொட்டீன் விஷயமான இந்தமாதிரி நடைபாதை லண்டனுக்கு ரொம்பவே தாமதமாக, 1630-ல் தான் வந்தது. இனிகோ ஜோன்ஸ் என்ற கட்டடக்கலை நிபுணர் கோவண்ட் கார்டனை வடிவமைத்தபோது அதில் முக்கிய அங்கமானது பியாஸô. சாயந்திரம் ஒயிலாக நடைபயில இந்த விதானம், கடைகள், கோவண்ட் மார்க்கெட் பிரதேசம் முழுவதும் அமைந்த நாடகக் கொட்டகைகள், ஏற்கனவே சொல்லப்பட்ட சாப்பாட்டுக் கடைகள்…இப்படியான சமாச்சாரங்களுக்காகவே இந்தப் பகுதி அப்புறம் பிரசித்தமானது. அந்தப் பிரபலம் முன்னூறு வருடம் கழித்தும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மார்க்கெட் வளாகத்தில் ஒரு கடை வாசலில் “விர்ஜின் ஆலிவ் ஆயில்’ விளம்பரம். அறுபது வருடமாக அங்கே கன்னித்தன்மை மாறாத ஆலிவ் எண்ணெய் விற்கிறார்களாம். மேல்விவரம் அறிய உள்ளே நுழைகிறேன். விர்ஜினிட்டி என்ற சொல் கன்னிமை ஆலிவ் எண்ணெயின் பரிசுத்தத்தைக் குறிக்கும் பரிபாஷையாம். “நயம் ஆலிவ் எண்ணெய் விலை சகாயமாகக் கிடைக்குது. வாங்கிட்டுப் போங்க’ என்கிறாள் கடையில் விற்பனைப் பெண். வாங்கி? “”சமைக்கலாம். மாலிஷ் செய்து குளிக்கலாம்.” சரிதான், சீயக்காய்த் தூள் இருக்கா என்று விசாரிக்கிறேன். இல்லையாம்.

“”மந்திரமில்லே, மாயமில்லே..” ஆங்கிலத்தில் உரக்கக் குரல் விட்டுக் கொண்டு கோட்டு சூட்டு அணிந்த ஒரு வித்தைக்காரர் கோவண்ட் கார்டன் நடைபாதையில் கூட்டம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் சின்னதாக ஒரு பழைய பெட்டி. “” சிகரெட் குடிக்கிறவங்க ஆளுக்கு ஒரு சிகரெட்டை விட்டெறியுங்க.” வித்தைக்காரர் கேட்டுக்கொண்டபடி ஏழெட்டு சிகரெட் முன்னால் விழுகிறது. எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அதில் ஒன்றைப் புகைத்து உள்ளங்கையில் வைத்து அழுத்துகிறார். கையை விரிக்கும்போது சிகரெட் மாயமாக மறைந்துவிட்டிருப்பதைப் பார்த்துக் கூட்டம் கை தட்டுகிறது. பெட்டியில் பத்து பென்ஸ், ஐந்து பென்ஸ் என்று சில்லறை விழுகிற சத்தம். “” பாதி வித்தைக்கு நடுவிலே போகாதே…” நழுவுகிற பார்வையாளர்களைப் பார்த்துச் சத்தம் போடுகிறார் வித்தைக்காரர். “”போனா, ரத்தம் கக்கிச் செத்துடுவீங்க, ஆமா!” நான் சேர்த்துக் கொள்கிறேன். அடுத்த தாயத்து விற்பனை தொடங்குவாரோ என்று யோசித்தபடி நடையை எட்டிப் போடுகிறேன்.

டீத்தூள் மட்டும் விற்க என்று ஒரு கடை. சீனாவிலிருந்து வந்த மல்லிகைப்பூ வாசம் அடிக்கும் டீ, தாய்லாந்து கிராம்பு டீ, கொழும்பு டீ என்று அடுக்கிய கடையில் இரண்டு பெரிய அலமாரி முழுக்க அசாம், டார்ஜிலிங், நீலகிரி என்று சகலவிதமான இந்திய டீத்தூளும் கொஞ்சம் அதிக விலைக்குக் கிடைக்கிறதாகத் தெரிகிறது. பக்கத்துக் கடையில் சக்கரம் வைத்த வண்டியில் வித்தியாசமாக ஏதோ கண்ணில்பட ஒரு வினாடி நிற்கிறேன். நாற்காலியில் உட்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிக்கொண்டிருக்கும் வயதான பெண்மணிகள். நாயைக் கையில் பிடித்துக் கூட்டிக்கொண்டு வாக்கிங் ஸ்டிக்கோடு நடக்கிற வயோதிகர்கள், நீளத் தொப்பி தரித்த கனவான்கள், தரையில் புரளும் பாவாடை தரித்த அழகிய கன்னியர். எல்லோரும் நூறு வருடத்துக்கு முற்பட்டவர்கள். முக்கால் அடி உயரத்துக்கு மேல் யாரும் இல்லை. தத்ரூபமான இந்த மரச் சிற்பங்களை வண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருக்கும் கடைக்காரரை விலை விசாரிக்கிறேன். ஒவ்வொன்றும் முப்பது பவுண்டாம். மூவாயிரம் ரூபாய்க்குப் பொம்மை வாங்கி விளையாடுகிற வயசா என்ன? மேலே நடக்கிறேன்.

கோவண்ட் கார்டனுக்கு மேலதிக அழகு சேர்க்கும் லண்டன் போக்குவரத்து மியூசியம் அடைத்துப் பூட்டியிருக்கிறது. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு லண்டன் தெருக்களை அவற்றின் கூட்டம், குதிரை பூட்டிய கோச், டிராம் வண்டிகளோடு தத்ரூபமாகச் சித்திரிக்கும் மியூசியத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆனாலும் மியூசியம் கடை திறந்திருக்கிறது. பழைய சிவப்பு லண்டன் மாநகர பஸ் படம் போட்ட டீ ஷர்ட் விலை விசாரிக்கும்போது -அதுவும் மூவாயிரம் ரூபாய் சொச்சம்தான். கடைக்குள் ஒரு சென்டிமீட்டர் விடாமல் ஆக்கிரமித்துக்கொண்டு சகலமானதும் வாங்குகிறவர்கள் எந்த நாட்டு டூரிஸ்டுகள்?

போக்குவரத்து மியூசிய வாசலில் சீன இசைக் கலைஞர் ஒருத்தர் முன்னால் பெட்டியைத் திறந்துவைத்துவிட்டு, புல்லாங்குழலில் இசை பொழிந்து கொண்டிருக்கிறார். காதல் தோல்வியில் முடிந்த சோகத்தையோ, அல்லது கல்யாணத்தில் தொடர்ந்த மகா சோகத்தையோ உருக்கமாக இசைக்கும் அவருக்கு விழுந்த காசுகள் மொத்தமே ஐம்பது பென்ஸ்தான் என்பது இன்னொரு சோகம்.

ஆனாலும் கோவண்ட் தோட்டத்துக்கு வெளியே, பாதாள ரயில் நிலையத்துக்குப் போகிற வழியில் நிற்கிற சிலைக்கு முன்னால் ஏகப்பட்ட கூட்டம். அலுமினியம் பெயின்ட்டைப் பூசிக்கொண்டு ஆடாமல் அசங்காமல் மணிக்கணக்காகச் சிலையாக நிற்கும் கலைஞருக்கு முன் காசுகள் விழுந்தபடி இருக்கின்றன.

“”உங்க அப்பா திண்ணையிலே பரப்பிரம்மா, அனங்காதே உக்கார்ந்து பேப்பர் வாசிக்கிற மாதிரி இருக்கு, கேட்டியோ..”-பின்னால் குரல். பாலக்காடுதான்.

Posted in Britain, Engaland, Era Murugan, Era Murukan, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, London Diary, Marketplace, markets, Potato, Sellers, Shops, Tour, Travleog, Travleogue, UK | 1 Comment »

Ma Aranganathan – A Short film by Ravi Subramanian: Interview

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

லைட்ஸ்-ஆன்: மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்…

எம்.கே. மனோஜ்

அனுதினமும் அல்லல்களால் அலைக்கழிக்கப்பட்டு ஆறுதல் தேடி அலையும் மனிதர்களுக்கு தாய்மடியாய்த் திகழ்வது கலைகளே. அக்கலைகள் பல வடிவங்களில் வாழ்ந்துகொண்டிப்பதற்குக் காரணம் கலைஞர்களே. அத்தகைய கலைஞர்களில், பெரும்பாலான மக்களால் அதிகம் அறியப்படாதவர்களும் உண்டு. வெகுஜனங்களின் பார்வையையும், விளம்பர வெளிச்சத்தையும் அதிகம் பொருட்படுத்தாத மனிதர்களைப் பொருட்படுத்தும் நோக்கில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.

சதா நேரமும் பொருள் தேடவும், தன்னையும் தன் சுற்றத்தையும் மட்டுமே பிரதானப்படுத்திக்கொள்ள முயலும் மனிதர்கள் மத்தியில், அதிக கவனத்துக்குள்ளாகாத எழுத்தாளர் மா.அரங்கநாதன்!

இந்த ஆச்சரியமான மனிதரை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தன் கைப்பொருளை வைத்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்ரமணியன். நாற்பது நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த ஆவணப்படத்தின் பெயர் “மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்’.

மா. அரங்கநாதன் “வீடுபேறு’, “ஞானக்கூத்து’, “காடன் மலை’ போன்ற சிறுகதை நூல்களையும், “பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலையும், “பஃறுளியாற்று மாந்தர்’ என்ற புதினத்தையும் எழுதியுள்ளார். “முன்றில்‘ இலக்கிய இதழை நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. தற்போது ஒரு மாத இதழில் வெளிவந்த இவரின் “தேட்டை’ என்ற சிறுகதையும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

திரைப்படங்களில் நல்ல படைப்புகள் குறைந்து வரும் சூழலில், ரசிகர்களுக்கு அவ்வப்போது ஆறுதல் அளிப்பவை ஆவணப்படங்களும், குறும்படங்களும்தான் என்பது இப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கிய உலகுக்கு அதிக எண்ணிக்கையில் பெண் கவிஞர்களும், எழுத்தாளர்களும் வர வேண்டியதன் அவசியம், பெண்கள் ஆபாசமாக எழுதுவதைப் பற்றிய தனது கருத்து, ஓர் எழுத்தாளனுக்கு அரசியல் தேவையா? தான் சார்ந்துள்ள இயக்கத்துக்கு ஆதரவாக கண்மூடித்தனமாக எழுதுவது, பக்தி இலக்கியப் பாடல்கள் மீதான அவரது வித்தியாசமான பார்வை.. எனப் பல விஷயங்களைப் பற்றி மா.அரங்கநாதன் இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரவிசுப்ரமணியன் தமிழின் குறிப்பிடத்தக்க ஆவணப்பட இயக்குநர்களில் ஒருவர். கவிதைகளும், கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வரும் இவர், கவிதைகளுக்காக தமிழக அரசு விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர். தற்போது சாகித்ய அகாதெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருக்கிறார். இவருடைய கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இவருடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். கர்நாடக இசையிலும் நல்ல புலமை பெற்றிருக்கும் ரவிசுப்ரமணியத்தைச் சந்தித்தபோது…

எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்க ஏன் மா.அரங்கநாதன்?

அதற்குக் காரணம் அவருடைய படைப்புகளே. அவர் எழுதியது சொற்பம்தான் என்றாலும் அவை ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம். கவிஞர் அல்லாமல் கவிதையியல் தொடர்பாக புதிய சிந்தனைகளை வாசகர்களிடம் புகுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணிபுரிந்த அரங்கநாதன், தன்னுடைய வருமானத்தில் 1986 முதல் 1996 வரை “முன்றில்’ என்ற இலக்கிய இதழை நடத்தி வந்தார். இதுவரை அவருக்கு சொந்த வீடு கூட கிடையாது. அவர் போன்றவர்களை மரியாதை செய்வதற்கான ஒரு முயற்சிதான் என்னுடைய படம். அரங்கநாதனைப் பற்றிய ஆவணப்படம் என்பதால் மற்ற எழுத்தாளர்களைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று பொருள் அல்ல.

அவருடைய படைப்புகளின் தனித்தன்மையாகத் தாங்கள் கருதுவது?

தமிழ் வாழ்வின் அடையாளங்கள்; வாழ்க்கை பற்றிய விசாரணை; ஒரு மாயத்தன்மையோடு கூடிய மெல்லிய தத்துவச் சரடு; படைப்பினை வளர்த்தெடுக்கும் விமர்சனப் போக்கு; சைவ இலக்கிய பரிச்சயம்; மரபின் மீதான காதல்; நவீனத்துவத்தை முணுமுணுக்காமல் ஆதரிக்கும் விதம் போன்றவற்றைக் கூறலாம்.

இதுபோன்ற படங்களால் இலக்கிய ஆர்வத்தையோ மா.அரங்கநாதன் போன்றவர்களையோ மக்களிடையே கொண்டு செல்ல முடியுமா?

நிச்சயமாக முடியும். பணத்தை எதிர்பார்த்தால்தான் தவறு. மக்களின் ரசனைத் திறனில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படும் முயற்சிகள் தோற்பதில்லை என்பதே என் கருத்து. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சதானந்தம், ஒளிப்பதிவாளர் வடக்கரா மோகன்தாஸ், படத்தொகுப்பாளர் லெனின் ஆகியோர் ஒரு சிறு தொகை கூட வாங்காமல் பணியாற்றியிருக்கிறார்கள் எனும்போது எங்கள் முயற்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் ஓர் எழுத்தாளரின் மொத்த படைப்புகளைப் பற்றிய விவரங்களை ஓர் ஆவணப்படத்தில் எளிதாகக் கூற வாய்ப்பு இருக்கிறது. இதனால் இதுபோன்ற படங்களைப் பார்ப்பவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் படைப்புகளைப் படிக்கும் எண்ணம் ஏற்படும்.

மேலும் திரைப்பட இயக்குநரை விட ஆவணப்பட இயக்குநர்களின் வேலை சிரமமானது என்பது என் கருத்து. ஆவணப்பட இயக்குநர் ஆதாரங்களைத் தேடித் தொகுக்கும் துப்பறிவாளராகவும் இருக்க வேண்டும். தேடிய ஆதாரங்களை அப்படியே காட்டவும் முடியாது. எழுத்தாளரைப் பேச வைத்துக்கொண்டே இருக்கவும் முடியாது. அவருடைய எழுத்துலகம் காட்சிப்படுத்தப்படும் விதம் முக்கியம். அந்த வகையில் நான் சரியாகவே செய்திருக்கிறேன் என்ற திருப்தி உள்ளது.

– வெகுஜன வாசகர்கள் பெரும்பாலும் அறியாத மா. அரங்கநாதன் போன்றவர்களை, ஆவணப்படத்தின் மூலம் கெüரவிப்பதும் ஒரு சேவைதான். ரவிசுப்ரமணியத்தின் இந்தச் சேவைக்கு இலக்கிய உலகம் கடமைப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.

Posted in Documentary, Ma Aranganadan, Ma Aranganadhan, Ma Aranganathan, Ma Arankanathan, Maa Aranganathan, Movie, Ravi Subramanian, Short Film | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy : Nannari

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

மூலிகை மூலை: நரை போக்கும் நன்னாரி!

விஜயராஜன்

இதன் இலைகள் அகலமும் தடிப்பும் இல்லாமல் ஒரு சோகை போன்றே நீண்டு இருக்கும். ஆனால் சோகையில் இது சேராத ஒரு நார் போன்றது. எதிர் அடுக்குகளில் அமைந்த குறுகி நீண்ட இலைகளை உடையது. இலைகள் கம்பி போலவும் நீண்டு இருக்கும் கொடி இனமாகும். இதன் வேர்கள் நல்ல நறுமணத்தைக் கொடுக்கும். மருத்துவக் குணம் உடையது. இதன் வேர்கள் நல்ல நாற்றத்தைக் (வாசனையை) கொடுப்பதால் நன்னாரி என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். தாது வெப்பத்தை அகற்றும், வியர்வை, சிறுநீரைப் பெருக்கும் குணம் உள்ளது. நோய்களை அகற்றி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும் குணம் உடையது. தமிழ் நாடெங்கும் எல்லா வகையான மண்ணிலும் பரவலாகத் தானாகவே வளரக் கூடியது.

வேறு பெயர்கள்: அனந்தம், இந்திரி, இந்திரக அந்தம், நறுக்கு மூலம், நறு நீண்டி, பரகோம வல்லி.

ஆங்கிலத்தில்: (Hemidesmus indicus, Anclepiadaceae)

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்:

வெயில் காலங்களில் நன்னாரி வேரை நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திக் காயவைத்தோ மண்பானையில் போட்டு சுத்தமான நீரை அதில் ஊற்றி வைத்திருந்து அந்த நீரைக் குடித்தால், உடல் குளிர்ச்சி அடையும்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து அரைத்து 200 மில்லியளவு காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாகும். தொடர்ந்து குடித்துவர இளநரை, பித்த நரை முடி மாறும். நன்னாரியில் மேலே உள்ள தோல், உள்ளிருக்கும் நரம்பு இவற்றை நீக்கிவிட்டு, வெளுத்த நிலையில் உள்ள சதையை மட்டும் 100 கிராம் எடுத்து, அதேயளவு மஞ்ஜிட்டி (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) எடுத்து இரண்டையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து 750 மில்லி நீரில் கலந்து அத்துடன் நல்லெண்ணெய் 1 1/2 கிலோ சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்ச வேண்டும். நல்லெண்ணெய் பொங்கி வரும். எனவே அடியில் பிடித்துள்ள கல்பத்தையும் திரும்பத் திரும்ப கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறாமல் இருந்தால் அடியில் பிடிக்கும். தீ அதிகமானால் பொங்கும். கவனமாகக் கையில் ஒட்டாமல் தங்கம் போல் திரண்டு வரும் சமயத்தில் இறக்கி வடிகட்டி அத்துடன் வெள்ளை குங்குலியம் 100 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து போட்டு, தேன் மெழுகு 100 கிராம் கூட்டிக் கலக்கி, நன்றாக ஆறிய பின்னர் கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். நகச் சுற்று வந்தவர்களுக்கு இதை ஊற்ற, உடனே குணமாகும். 3 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.

நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.

Posted in Anclepiadaceae, Ayurveda, Ayurvedha, Hemidesmus indicus, Herbs, Mooligai Corner, Nannaari, Nannari, Naturotherapy, Shorbet, Surbath, Surbeth, Water | Leave a Comment »

Balu Mahendra to start new Film Institute in Chennai for aspiring Tamil Cinema entrants

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

பாலுமகேந்திராவின் புதிய திரைப்படக் கல்லூரி: செப்டம்பர் முதல் சென்னையில் தொடக்கம்

சென்னை, பிப். 24: பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா சென்னையில் புதிய திரைப்படக் கல்லூரியைத் தொடங்குகிறார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பாலுமகேந்திரா கூறியதாவது:

சினிமா மீது எனக்கு ஏற்பட்ட வெறி காரணமாக நான் தேடித் தேடிச் சேகரித்த அறிவு, பணியாற்றத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை எனக்குக் கிடைத்த அனுபவம் போன்றவற்றை இளைய தலைமுறையினருக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் திரைப்படக் கல்லூரியைத் துவக்குகிறேன்.

பண லாபம் கருதி இக்கல்லூரியைத் துவக்கவில்லை. தற்போது என்னிடம் போதிய பண வசதி கிடையாது. ஆனாலும் தைரியத்தோடு களமிறங்கியிருக்கிறேன்.

என் நண்பர்களும், உறவினர்களும், சினிமாவை நேசிக்கும் நல்ல உள்ளங்களும், என்னோடு பணியாற்றியவர்களும் எனக்குக் கைகொடுப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இக்கல்லூரி வரும் செப். 7-ம் தேதி முதல் சாலிகிராமத்தில் செயல்படும். இதில் பட்டயப் படிப்பு (டிப்ளமோ கோர்ஸ்) 12 மாதங்கள் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு ஆகிய துறைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

படத்தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவு ஆகிய துறைகளுக்கு அடுத்த ஆண்டில் இருந்து பயிற்சியளிக்கப்படும்.

இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய துறைகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் உள்ள 12 இடங்களில் 4 இடங்கள் வெளிநாட்டுத் தமிழ் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இக்கல்லூரியில் சிறுகதை, கவிதை, புதினம் ஆகியவற்றை உள்ளடக்கிய தற்கால இலக்கியமும் ஒரு பாடத்திட்டமாக இருக்கும்.

அனைத்துத் துறைகளிலும் அத்தியாவசிய தொழில்நுடப்க் கோட்பாடுகள், அதிக எண்ணிக்கையிலான செய்முறைப் பயிற்சிகள் இடம்பெறும். ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை மாணவர்களுக்கு நானே நேரடியாகக் கற்றுக்கொடுக்கிறேன்.

தேசிய நாடகக் கல்லூரியைச் சேர்ந்த மூத்த கலைஞர் கோபாலி நடிப்புத்துறையின் முக்கிய ஆசிரியராக இருப்பார். கே. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், மகேந்திரன், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் சிறப்பு ஆசிரியர்களாக வருகை தந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துவர் என்றார் பாலுமகேந்திரா.

1966 முதல் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில் இருக்கும் பாலுமகேந்திரா 5 தேசிய விருதுகள், 8 மாநில விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றவர்.

இந்திய மற்றும் சர்வதேச அளவில் திரைப்படத்துறையின் முக்கியமான பல அமைப்புகளுக்கு தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

Posted in Admissions, Balu mahendra, Camera, Chennai, Cinema College, College, Courses, Degree, Degrees, dialogues, Diploma, Direction, Director, Editing, Gopali, Graduate, Institute, Madras, Photography, Post graduate, Screenplay, Story writing, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Technicians, Technology, Thamizh Movies, Thamizh padam, TV, University | Leave a Comment »

Cuddalore, Nagapattinam, Sivaganga, Dindugul – PM launches backward fund scheme in Assam

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

மக்கள் அறியச் செய்யுங்கள்

இரு தினங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு மானிய நிதி (பி.ஆர்.ஜி.எப்) திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள “தேசிய தொழில் முன்னேற்ற’த் திட்டத்தை மேம்படுத்தி, மேலும் 95 புதிய மாவட்டங்களையும் கூடுதல் நிதியையும் கொண்டுள்ளது இத்திட்டம்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.20 கோடி வீதம் 250 மாவட்டங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இத்திட்டத்துக்கு ரூ.3750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆண்டுதோறும் ரூ.15 கோடி வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் அதிகம் பயனடையப் போகும் மாநிலம் பிகார். ஏனெனில்

  • பிகாரின் 36 மாவட்டங்கள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்து
  • உத்தரப் பிரதேசத்தில் 34 மாவட்டங்கள்.
  • மத்தியப் பிரதேசம்-24,
  • ஜார்க்கண்ட்-21,
  • ஒரிசா-19,
  • ஆந்திரம்-13 மாவட்டங்கள்.
  • தமிழகத்தில் 6 மாவட்டங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன:
    • கடலூர்,
    • திண்டுக்கல்,
    • நாகப்பட்டினம்,
    • சிவகங்கை,
    • திருவண்ணாமலை,
    • விழுப்புரம்.

தேர்வு செய்யப்பட்டுள்ள பின்தங்கிய மாவட்டங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், மேம்படுத்துதல், பஞ்சாயத்து மற்றும் கிராம அளவில் தொழிற்பயிற்சிகள் கொடுத்து அம்மக்களைத் திறனுடைய தொழிலாளர்களாக மாற்றுதல், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்கம் என பல திட்டங்களுக்கு 100 சதவீத மானியநிதியைப் பெறலாம். இதற்காக செய்யவேண்டியதெல்லாம், கிராம சபை மற்றும் பஞ்சாயத்து அளவில் கொடுக்கப்படும் திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மதிப்பீடு தயாரித்து மத்திய அரசுக்குக் கொடுத்து நிதியைப் பெற்றுச் செயல்படுத்துதல் மட்டுமே.

ஆனால் நடைமுறை தலைகீழாக இருக்கிறது. திட்டம் குறித்த முழுவிவரமும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர், எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

களஆய்வு என்ற பெயரில் தன்னார்வ நிறுவனங்களை நியமித்து, அவை தரும் அறிக்கைகளின் அடிப்படையில் பின்தங்கிய மாவட்டத்தின் தேவைகளை அதிகாரிகளே முடிவு செய்கிறபோது, திட்டத்தின் நோக்கம் பாழ்படுகிறது. வெறும் கணக்குக் காட்ட செய்யப்படும் செயல்பாடாக அமைந்துவிடுகிறது. மாவட்ட மக்களுக்கு முழுப் பயன் கிடைப்பதில்லை.

ஆண்டுக்கு ரூ.15 கோடி மானியம் என்பது அந்த மாவட்டத்துக்கு கிடைத்துள்ள பெரும் வாய்ப்பு. இதை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமும் அறிந்திருக்கவும், தங்களுக்கான திட்டத்தை கிராம சபை மூலம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்கவும் இப்போதாகிலும் வழிகாண வேண்டும். அத்துடன், தங்கள் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் எந்தெந்தப் பகுதிக்கு, எந்தத் திட்டம், எவ்வளவு செலவில் செயல்படுத்தப்பட்டது என்ற தகவலைக் கேட்கும் உரிமை உள்ளதையும் அறிந்திருக்க வேண்டும்.

பயனாளிகளின் அறியாமை எப்படி அப்பகுதி மக்களுக்குப் பாதகமாக அமைகிறது என்பதற்கு அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷ அபியான்) ஓர் எடுத்துக்காட்டு. இது மத்திய அரசின் 75 சதவீத மானியத் திட்டம். பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறைகள் கட்டுதல், கல்வி உபகரணங்கள் வாங்குதல், பண்பாட்டு நிகழ்ச்சிகள், பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம் அனுமதிக்கப்படுகிறது. இதில், உள்ளாட்சி கணக்குத் தணிக்கைத் துறை கண்டுபிடித்துள்ள முறைகேடுகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தாலும்கூட அப்பகுதி மக்கள் நிச்சயம் அரசுக்கு நன்றி கூறுவார்கள்.

Posted in Andhra, Andhra Pradesh, AP, Assam, backward, Backward Region Grant Fund, Bihar, BRGF, Collector, Collectorate, Cudaloore, Dindugul, Dindukal, Dindukkal, District Collector, fund scheme, Government, Jarkand, Jharkand, Jharkhand, Kadaloor, Madhya Pradesh, Manmohan Singh, MP, Nagapattinam, Orissa, Sivaganga, Sivagangai, Thiruvannamalai, UP, Uttar Pradesh, Viluppuram, Vizhuppuram | Leave a Comment »

Sangeet Natak Akademi introduces youth awards

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

தமிழகத்தின் 5 இளம் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது

புதுதில்லி, பிப். 22: தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து இளம் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருதுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த விவரம்:

புதுதில்லியில் உள்ள சங்கீத நாடக அகாதெமி முதன்முறையாக இளம் கலைஞர்களுக்கான விருதுகளை வழங்குகிறது. இவ்விருதுகள் பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவாக “உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார்’ என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.

2006-ம் ஆண்டுக்கான இவ்விருதுகள் 33 இளம் கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன.

  • இசை,
  • நாட்டியம்,
  • நாடகத்துறை ஆகியவற்றுக்கு தலா எட்டு விருதுகளும்,
  • பாரம்பரிய நாட்டுப்புற கலை,
  • பொம்மலாட்டம் போன்ற பல்வேறு துறைகளில் ஏழு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 கலைஞர்களின் விவரம்:

கர்னாடக வாய்ப்பாட்டு: டி.எம்.கிருஷ்ணா

மிருதங்க இசை: என்.மனோஜ் சிவா

கடம் வாசிப்பு: எஸ்.கார்த்திக்

பரத நாட்டியம்: சீஜித் கிருஷ்ணா

படைப்புக் கலை: சங்கீதா ஈஸ்வரன்

Posted in Acting, Actor, Artiste, Arts, Awards, Barathanatyam, Bharatanatyam, Bharathanatyam, Bismillah Khan, Bismillah Khan Yuva Puraskar, Carnatic, Creator, Culture, Dance, Direction, Gadam, Hindustani instrumental, Hindustani vocal, instrumental, Kadam, Kathak, Kathakali, Kuchipudi, Kutiyattam, lighting, Manipuri dance, Mime, Ministry of Tourism and Culture, Mridangam, Mrudangam, music, Odissi, Performer, Playwriting, Puppetry, Sangeet Natak Akademi, santoor, Singer, sitar, Stage, stage craft, Tamil Nadu, Thang-ta, Theater, tribal, Ustad Bismillah Khan, vocal, Youth, youth award, Yuva Puraskar | Leave a Comment »

Rich deposits of gold found by Australian company in Rajasthan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

ராஜஸ்தானில் 3.85 கோடி டன் அளவுக்கு மாபெரும் தங்கப் படிவம் கண்டுபிடிப்பு

ஜெய்பூர், பிப். 22: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில், 3.85 கோடி டன் அளவுக்கு மாபெரும் தங்கப் படிவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கப் படிவ ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள, இன்டோ கோல்டு மைன்ஸ் (ஐஜிஎல்) லிமிடெட் என்ற ஆஸ்திரேலிய தனியார் நிறுவனம் இதைக் கண்டுபிடித்துள்ளது.

அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக் ஹிக்கின்ஸ் ஜெய்பூரில் நிருபர்களிடம் புதன்கிழமை இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

பன்ஸ்வாரா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கம் உலகத் தரம் வாய்ந்தது. அங்கு ரூ.2,000 கோடியில், நவீன தொழில்நுட்பத்துடன் தங்கச் சுரங்கம் அமைக்கப்படும். இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் அங்கு ஆண்டுக்கு 8 டன் வீதம் தங்கம் வெட்டி எடுக்கும் பணி துவக்கப்படும்.

தங்கச் சுரங்கம் அமைக்கும் பணியில், மெட்டல் மைனிங் இந்தியா (எம்எம்ஐ) பிரைவேட் லிமிடெட் என்ற இந்திய நிறுவனத்துடன் இணைந்து எங்கள் நிறுவனம் கூட்டாகச் செயல்படும்.

தங்கச் சுரங்கம் அமைப்பதற்காக மொத்தம் 2,135 சதுர கி.மீ. நிலப் பரப்பு எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும் அனுமதி அளித்துவிட்டது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ராயல்டி தொகையால் ராஜஸ்தான் மாநில அரசுக்கு பயன் கிடைக்கும் என்றார் மைக் ஹிக்கின்ஸ்.

தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக கோலார் தங்கச் சுரங்கம் கடந்த 2003-ல் மூடப்பட்டது. அதற்குப் பிறகு இந்தியாவில் தங்க உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிட்டது.

Posted in Australia, Banswara, Brisbane, Deposits, Gold, Hutty, Indo Gold, Jagpura, Karnataka, Kolar, Metal Mining India, Minerals, mines, Rajasthan, Raw Materials | Leave a Comment »

Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of Forest Rights) Act

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

வனச்சட்டம்-ஒரு வரலாற்றுத் திருப்புமுனை

பெ. சண்முகம்

நமது நாட்டில் முதன்முறையாக, ஆதிவாசிகளுக்கும், வனத்தைச் சார்ந்து வாழும் மற்றவர்களுக்கும், மிக மிகச் சாதகமான வரலாற்றில் முத்திரை பதிக்கத்தக்க சட்டம் 2006 டிசம்பர் 15ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம், மீண்டும் ஓர் விடுதலை பெருமகிழ்ச்சியை பழங்குடி மக்கள் பெற்றுள்ளனர். வரலாற்றில் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்தச் சட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.

பழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும் உடையையும் தவிர தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளிலிருந்தே பெற்றனர். இது 16ம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை. காடுகள் முழுவதும் பழங்குடி சமூகத்திற்குச் சொந்தமாக இருந்தது. தனி நபர்களுக்கு உடமை என்றில்லாவிட்டாலும் சுதந்திரமாகப் பயன்படுத்தி வந்தனர்.

1805ல் பிரிட்டிஷாரின் கண் வனத்தின் மீது பட்டது. 1846ல் “முதல் வனச்சட்டம்’ கொண்டு வரப்பட்டது. பிரிட்டிஷ் அரசு காட்டை வியாபார ரீதியாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.

சென்னை ராஜதானியில் 1856ல் வன இலாகா என்ற துறை அமைக்கப்பட்டது. இத்துறை மூலம் 1865ல் முதல் வன ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து வனப் பகுதிகளும் வனப்பாதுகாப்பு என்ற பெயரில் ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதனால் ஆதிவாசிகள் காடுகளில் சுதந்திரமாக உலவத் தடை கொண்டு வரப்பட்டது. இத் தடை பழங்குடி மக்களின் வாழ்வையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது.

பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள் ஏராளமான காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். இத்தகைய தோட்டங்களில் அடிமைகளாகவும், பின்னர் கூலிக்காரர்களாகவும் ஆதிவாசிகள் ஆக்கப்பட்டனர்.

1882ம் ஆண்டு மதறாஸ் வன ஆணையின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அரசு அறிவித்தது. இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அனுமதி பெற்றே மக்கள் பயன்படுத்த வேண்டும்.

நாடு விடுதலை பெற்ற பிறகு 1952ல் நேருவின் பழங்குடிகள் குறித்த பஞ்சசீலக் கொள்கை இந்திய அரசு பழங்குடிகளின்பால் எத்தகைய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கப் போகிறது என்பதை வெளியிட்டது.

அவை, பழங்குடியினர் தங்களது சொந்தப் புத்திகூர்மையைப் பயன்படுத்தி மேம்பாட்டை அடைவதற்கு அனுமதிக்க வேண்டும். நிலம் மற்றும் வனத்தில் பழங்குடியினருக்குரிய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். பழங்குடியினர் வகுப்பின் சமூக மற்றும் கலாசார அமைப்புகளுக்குப் பாதகமின்றி அவர்களுக்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான குறியீடு அவர்களுடைய வாழ்க்கைத் தரமாகத்தான் இருக்க வேண்டுமேயொழிய செலவிடப்பட்ட தொகையாக இருக்கக் கூடாது.

பழங்குடி மக்களின் பிரச்சினைகளைப் பற்றி ஓரளவு அறிந்தவர்களும் இதர அதிகார வர்க்கத்தினரும் மேற்குறிப்பிட்ட நேருவின் கொள்கைப்படி நடந்து கொள்ளவில்லை என்பதை அறிய முடியும்.

வனத்திலிருந்து மக்களை மேலும் மேலும் அந்நியப்படுத்தும் விதத்திலேயே நமது ஆட்சியாளர்களும் சட்டங்களை இயற்றினர். 1927ம் ஆண்டு பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட வனச்சட்டத்தை வைத்துக் கொண்டே 1972ம் ஆண்டு கானுயிர் பாதுகாப்புச் சட்டம், 1979ம் ஆண்டு வன (திருத்தச்) சட்டம், வனப்பாதுகாப்புச் சட்டம் 1980, வனப்பாதுகாப்பு (திருத்த) சட்டம் 1988, போன்ற சட்டங்கள் மூலம் மக்களை வனத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தன.

வனத்தில் காலங்காலமாக வாழ்ந்து வந்த மக்களை 1988 வனப்பாதுகாப்பு(திருத்த) சட்டம் “”ஆக்கிரமிப்பாளர்கள்” என முத்திரை குத்தியது. இதனால் அரசுக்கும், மக்களுக்குமான முரண்பாடுகளும், மோதல்களும் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.

எனவேதான், இந்த மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து அம்மக்களை அமைதியாக வாழவிட வனச்சட்டத்தை மாற்றியமைப்பது அவசியம் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது. வனத்தின் மீதான அம்மக்களின் பாரம்பரிய உரிமைகள் சட்ட ரீதியான உரிமைகளாக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பழங்குடி மக்களின் தலையில் பேரிடியாக இறங்கியது.

நமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டப்படி, தனி நபரின் பெயரில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிலமும் அரசுக்குச் சொந்தமாகும். இதைப் பயன்படுத்தித்தான் உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி சட்டம் என்னும் ஆயுதத்தின் மூலம் அரசும், அதிகாரிகளும் பழங்குடி மக்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெகு சுலபமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

சட்டம் – விதி என்ற அடிப்படையை மட்டும் கணக்கில்கொண்டு பிரச்சினைகள் அணுகப்பட்டு வந்ததற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பே சாட்சி. அதாவது, “”30-9-2002க்குள் வன நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது”. இந்தத் தீர்ப்பு. இது பழங்குடி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இடதுசாரிக் கட்சிகளின் வற்புறுத்தலால் காடுகளிலிருந்து மக்களை வெளியேற்றும் உத்தரவு 2004 ஜூலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

பழங்குடி மக்களின் (காடுகள் மீதான உரிமைகள் பாதுகாப்பு) மசோதா மத்திய அரசால் 2005 டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தச் சட்டம் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் (காடுகளின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும்) சட்டம் 2006 என அழைக்கப்படும். இந்தச் சட்டத்தில் உள்ள சாதகமான அம்சங்கள் பின்வருமாறு:

2005 டிசம்பர் 13ம் தேதிக்கு முன்பாக காடுகளில் வசிக்கும், ஆக்கிரமித்து விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு இச்சட்டம் பொருந்தும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஏக்கருக்கும் மிகாத அளவு நிலம் வழங்கப்படும். இந்த நிலத்தை பரம்பரையாகப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர விற்க அனுமதி கிடையாது. இந்த நிலம் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் கூட்டாகவே பதிவு செய்யப்படும். பழங்குடிகள் அல்லாத பரம்பரையாக வனத்தைச் சார்ந்து வாழும் மற்றவர்கள் மூன்று தலைமுறைகளாக காடுகளில் தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும்.

அநேகமாக, வேட்டையாடும் உரிமையைத் தவிர பழங்குடி மக்களின் பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் இச்சட்டத்தின் மூலம் மீட்கப்பட்டுள்ளன. வனவிலங்கு சரணாலயங்கள், தேசியப் பூங்காக்களில் வசிக்கும் மக்களைப் பொருத்தவரை அவர்களின் ஒப்புதலுடன் மறுவாழ்வுக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதுவரை அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்.

எனவே, இந்தச் சட்டம் பழங்குடி மக்களின் வாழ்வில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனை என்றே சொல்ல வேண்டும். குடியரசுத் தலைவரால் 2007 ஜனவரி 29ம் தேதி இச்சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பிப்ரவரி 13ம் தேதி இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டியது அரசு மற்றும் அம் மக்களிடையே பணியாற்றும் அமைப்புகளின் உடனடிக் கடமை.

எல்லாவற்றுக்கும் மேலாக, பழங்குடி மக்களின் ஒற்றுமையும், அவர்களின் தொடர்ச்சியான வற்புறுத்தலும் தான் இச்சட்டத்தை அமல்படுத்தச் செய்வதில் முக்கியப் பங்காற்ற வேண்டியிருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

(கட்டுரையாளர்: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் – மாநிலக்குழு பொதுச் செயலர்).

Posted in 2006, Analysis, anti- tribal, Backgrounder, conservationists, Forest, Forest Dwellers, Forest Rights, History, Law, legislation, NGO, NGOs, scheduled tribes, tribal, Wildlife Trust of India | 1 Comment »

Ganga-Cauvery water inter-linking – National River Integration

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

கங்கை-காவிரி இணைப்பு-பலிக்குமா பாரதியின் கனவு?

இராமசாமி

“”இந்திய நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், கங்கை – காவிரி இணைப்பு என்பது இன்னும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது.

செயற்கைக்கோள் படங்களை வைத்து இக் கட்டுரையாளர் மற்றும் அவருடைய ஆராய்ச்சி மாணவர்களும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தொலையுணர்வு மையத்தில் இந்திய விண்வெளி நிறுவனத்தின் நிதி உதவியுடன் நடத்திய ஆய்வுகளின்படி, காவிரி நதி சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஒக்கேனக்கல்லில் இருந்து (1) வடகிழக்காக தர்மபுரி-ஆம்பூர்-வாணியம்பாடி-வாலாஜாபேட்டை-திருவள்ளூர் வழியாக ஓடி, சென்னைக்கு வடக்கே கடலில் கலந்தது தெரியவருகிறது.

அப்போது சென்னைப் பகுதியில் பூமி மேலே எழும்பிய காரணத்தால் இப்பாதையை, காவிரி விட்டு விட்டு தற்போது மேட்டூர் அணையிருக்கும் இடத்திலிருந்து தோப்பூர் ஆறு – வாணியாறு(2) – பொன்னையாற்றின் தற்போதைய பாதை(3) வழியாக, பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடி கடலூர் பகுதியில் கடலில் கலந்திருக்கிறது.

இக்கால கட்டத்தில், அடிக்கடி ஏற்பட்ட கடல் அலைகளின் சீற்றத்தாலும், மேலும் இன்றைய மேட்டூர் அணையிலிருந்து ஈரோடு வழியாக வடக்கு – தெற்காக ஒரு பெரிய பூமி வெடிப்பு (4) உருவான காரணத்தாலும், இந்த இரண்டாவது பாதையையும் விட்டுவிட்டு, தற்போதைய மேட்டூர் அணைப்பகுதியில் இருந்து தெற்காகத் திரும்பி அப்பூமி வெடிப்பின் வழியாக ஓடி, கரூர் – திருச்சி பகுதியை சுமார் 2300 ஆண்டுவாக்கில் அடைந்து இருக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

பின்னர், திருச்சியில் இருந்து கிழக்காக பல கிளை நதிகளாகப் பிரிந்து ஓடிக் கடலில் கலந்து இருக்கிறது. இக்கிளை நதிகள் தெற்கே தற்போது உள்ள புதுக்கோட்டை வெள்ளாறு(5), அம்புலியாறு, அக்னியாறு பகுதிகளில் இருந்து வடக்கே தஞ்சாவூர், கும்பகோணம், பூம்புகார் வரை வியாபித்து ஓடியிருக்கிறது.

தற்போதுள்ள கொள்ளிடம் (6) பாதையின் வயது சுமார் 750 ஆண்டுகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் பகுதியில் ஓடிய காவிரி கொஞ்சம் கொஞ்சமாக தெற்கே புதுக்கோட்டை வரை தடம் மாறி ஓடி, பின் வடக்காகத் திரும்பி கொள்ளிடமாக நிலை பெற்ற பின், காவிரி விட்டுச் சென்ற பழைய பாதைகளைத்தான் பாலாறு, பொன்னை ஆறு புதுக்கோட்டை வெள்ளாறு, அக்னி ஆறு, அம்புலியாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி போன்ற பல நதிகள் பின்னாளில் ஆக்கிரமித்துக் கொண்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வைகை நதி(7) முன்பு குண்டாறு வழியே ஓடி பின் வடப் பக்கமாகத் திசைமாறி ஓடி, தற்போது ராமேசுவரம் அருகே கடலை அடைகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில், நதிகளை இணைப்பதற்காக மிகப் பெரிய இணைப்புக் கால்வாய்களை வெட்டுவதற்குப் பதிலாக, நிலவியல் மாற்றங்கள், நதிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பல புதையுண்ட நதிகளைப் பயன்படுத்தி இந்திய நதிகளை இணைக்கலாம் என்று இவ்வாய்வு கூறுகிறது.

ஏனெனில், இப்புதையுண்ட பாதைகளைத் தேர்ந்தெடுப்பதால் குறைந்த அளவே ஆழப்படுத்தும் பணி தேவைப்படும் என்பதோடு மட்டுமல்லாமல் புதிய கால்வாய்களை உருவாக்குவதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புகளும் இருக்காது.

மேலும் இப்புதையுண்ட பழைய பாதைகள், ஏற்கெனவே நதிகள் ஓடும் பாதைகளாக இருந்ததனால், எளிதாக புதிய நீர்வளத்தை ஏற்றுக்கொள்ளும். வெள்ளமோ அல்லது சுற்றுப்புறச்சூழல் கேடோ ஏற்படுத்தாது. ஆகவே இவ்வாய்வின் மூலம் முதற்கட்டமாக எவ்வாறு தமிழக நதிகளை இணைக்க முடியும் என்ற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அ. ஒக்கேனக்கல் பகுதிகளில் காவிரியில் வரும் வெள்ளத்தை சென்னைக்கு காவிரியின் பழைய புதையுண்ட பாதை(1) வழியாகக் கொண்டு செல்லுதல்.

1. ஒக்கேனக்கல் – வாணியம்பாடி இடையே சுரங்கப்பாதை (8) ஏற்படுத்தி காவிரி நீரைக் கொண்டு செல்லுதல்.

2. வாணியம்பாடி – வாலாஜாபேட்டை இடையே பாலாற்றில் (9) காவிரி நீரை ஓடச் செய்தல்

3. வாலாஜாபேட்டை வரை பாலாற்றில் கொண்டு வந்த காவிரி நீரை வாலாஜாபேட்டைக்கு கிழக்கே ஒரு தடுப்பு அணையைக்கட்டி நீரின் ஒரு பகுதியை வாலாஜாபேட்டை – திருவள்ளூர் – சென்னை வரை, காவிரியின் புதையுண்ட பாதையை (10) சற்று ஆழப்படுத்தி, அதன் வழியாகக் கொண்டு செல்லுதல். மீதி காவிரி நீரை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியின் மேம்பாட்டிற்காக பாலாற்றில் ஓடச் செய்தல்.

ஆ. ஒக்கேனக்கல்லில் இருந்து – சென்னைக்கு காவிரி நீரைக் கொண்டு செல்ல மாற்று வழிப்பாதை

4. மேற்கூறிய (பகுதி அ-வில் கூறப்பட்டவை) இணைப்பு சாத்தியமில்லையெனில் கீழ்க்கண்ட மாற்று வழியைப் பயன்படுத்தலாம். மேட்டூர் நீர்த் தேக்கத்திற்கு கிழக்காக காவிரியின் பழைய பாதையில் தற்போது ஓடும் தொப்பூர் ஆறு மற்றும் வாணியாறுகளை (2) சிறிது ஆழப்படுத்தி, காவிரியின் நீரை மேட்டூர் அணையிலிருந்து சாத்தனூர் நீர்த்தேக்கத்துக்குக் (11) கொண்டு செல்லுதல்.

5. சாத்தனூர் அணையில் இருந்து சுமார் 8 – 10 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கே அமைந்துள்ள முட்டனூர் வரை ஒரு கால்வாய் அமைத்து, காவிரி நீரை செய்யாற்றுக்கு கொண்டு சென்று செய்யாற்றில் (12) ஓடச் செய்தல்.

6. இவ்வாறு செய்யாற்றுக்கு கொண்டு வந்த காவிரி நீரை, பூனாம்பலம் அருகே செய்யாற்றில் ஒரு தடுப்பு அணையைக் கட்டி, அதோடு பூனாம்பலத்தில் இருந்து வடக்கே வாலாஜாபேட்டை (8) வரை ஒரு கால்வாயை சுமார் 10 – 12 கிலோ மீட்டருக்கு (13) அமைத்து, காவிரி நீரை பாலாறுக்கு கொண்டு செல்லுதல். வாலாஜாபேட்டையில் இருந்து இந்நீரை திருவள்ளூர் – சென்னை வரை காவிரியின் பழைய பாதையில் கொண்டு செல்லுதல்.

7. சாத்தனூர் அணையிலிருந்து (11) மீதம் உள்ள காவிரி நீரை பொன்னையாறு (3) வழியாகக் கொண்டு சென்று விழுப்புரம் பகுதியை வளமுறச் செய்தல்.

இ. காவிரியை புதுக்கோட்டை வெள்ளாற்றோடு இணைத்தல்

8. எஞ்சியுள்ள காவிரி வெள்ள நீரின் ஒரு பகுதியை, திருச்சி – முக்கொம்பு அருகே ஒரு சிறிய தடுப்பு அணையை அமைத்து, முக்கொம்பு – வெம்பனூர் இடையே காணப்படும் காவிரியின் புதையுண்ட ஒரு கிளை நதி வழியாகக் கொண்டு சென்று, புதுக்கோட்டை வெள்ளாறு (5) வழியாக ஓடச் செய்து, வறட்சிப் பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தின் நீர் வளத்தை மேம்படுத்துதல்.

ஈ. காவிரியை அம்புலியாறு – அக்னியாறோடு இணைத்தல்

9. மேற்கூறியவாறே, திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே மேலும் ஒரு தடுப்பு அணையை அமைத்தோ அல்லது கல்லணையைப் பயன்படுத்தியோ கல்லணைக்கு தெற்கே காணப்படும் காவிரியின் புதையுண்ட இக்கிளை நதிகளின் வழியாக காவிரி நீரை புதுக்கோட்டை வெள்ளாற்றிற்கு வடக்கே உள்ள காவிரியின் புதையுண்ட கிளை நதிகளில் தற்போது ஓடும் அக்னியாறு மற்றும் அம்புலியாறுக்கு திருப்பி விடுதல்.

உ. தஞ்சை வண்டல் பகுதியில் நீர் வளத்தை மேம்படுத்துதல்

10. மேலும் தஞ்சை பகுதிகளில் காவிரியின் புதையுண்ட பழைய கிளை நதிகளில் தற்போது ஓடும் வெண்ணாறு, வெட்டாறு, அரசலாறு மற்றும் குடமுருட்டி ஆறுகளை ஆழப்படுத்தி காவிரி வெள்ள நீரின் வரத்தை அதிகம் செய்து நீர்வள மேம்பாடு செய்தல்.

ஊ. காவிரியை மணிமுத்தாறு – வைகையோடு இணைத்தல்

11. புதுக்கோட்டைக்கு மேற்கே வேம்பனூர் அருகே புதுக்கோட்டை வெள்ளாற்றில் ஒரு தடுப்பு அணையை அமைத்து, வேம்பனூர் – பொன்னமராவதி – சேந்தலப்பட்டி வழியாக மதுரைக்கு வடமேற்கு வரைக்கும் கால்வாய் அமைத்து (14), காவிரியை வைகையாறோடு இணைத்து, அந்நீரை வறட்சி மாவட்டங்களான சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் காணப்படும் புதையுண்ட கிளை நதிகளின் மூலம் கொண்டு சென்று அம்மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரி/ குளங்களில் சேமித்து நீர் வளத்தை மேம்படச் செய்தல்.

12. தேவகோட்டைக்கு மேற்கே சேந்தலப்பட்டியில் இருந்து மேற்கூறிய வேம்பனூர் – பொன்னமராவதி – சேந்தலப்பட்டி – மதுரை கால்வாயில் இருந்து ஒரு பகுதி காவிரி நீரை மணிமுத்தாறில் (15) ஓட வைத்து தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான ஏரி / குளங்களில் சேமித்து நீர் வளத்தை மேம்படச் செய்தல்.

இந்த ஆய்வு தமிழக நதிகளை இணைத்து அதன் மூலம் காவிரியின் மிகுந்து வரும் வெள்ளத்தைக் கடலில் வீணாக்காமல் நீர் வள மேம்பாடு செய்வதில் ஒரு புதிய கண்ணோட்டத்தை வெளிக் கொணர்ந்துள்ளது.

காவிரியின் வெள்ளத்தோடு கோதாவரி, கிருஷ்ணா அல்லது கங்கை போன்ற எந்த ஒரு நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர் கொண்டு வந்தாலும் அதன் நுழைவு வாயில் ஒக்கேனக்கல்லாகத்தான் இருக்க வேண்டும் என்பது புவியியல் அமைப்பு கூறும் ஒரு மிகப் பெரிய உண்மை.

அப்போதுதான் தமிழ்நாடு முழுவதும் மேற்கூறியவாறு நீர்வள மேம்பாடு செய்ய இயலும். அதைவிடுத்து, இந்நதி இணைப்புத் திட்டத்தில், கடலோரத்தில் கால்வாய் அமைத்து, பெண்ணாறு – காவிரி இணைப்பு செய்தால், வண்டல் மற்றும் கடலோர மக்கள் மட்டுமே பயன் பெற முடியும். தமிழ்நாட்டின் பெரும்பகுதிகள் பயனடையாது.

இவ்வாறு தமிழக நதிகளை இணைப்பது சாத்தியமானதாக இருப்பதால், புவியியல் மற்றும் பொறியியல் வல்லுநர்கள் இணைந்து செயலாற்றி, நதிகள் இணைப்புத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: இயக்குநர் மற்றும் தலைவர், தொலையுணர்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி).

திருப்தி அளிக்காத தீர்ப்பு

ஆர். கருப்பன்

வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என்கிற இளங்கோவடிகளின் கூற்று 1974ம் ஆண்டு முதல் இன்றுவரை பலமுறை பொய்த்துக் கொண்டே வந்திருக்கின்றது.

1974ம் ஆண்டு, காவிரி ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என கர்நாடகம் பொய்ப்பிரசாரம் செய்தது. இதை தமிழ்நாட்டுத் தலைவர்களும் நம்பினார்கள்.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் வற்புறுத்தலால், கர்நாடக அரசின் விடாப்பிடி போக்கினால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டது. அவசியமானால் மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையோடு வாபஸ் பெறவில்லை எனக் கூறி மீண்டும் வழக்கைத் தாக்கல் செய்ய முடியாது என்கிற சட்ட ஆலோசனையால் தமிழகம் தவித்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது தமிழகத்துக்கு 377 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடகம் ஒப்புக்கொண்டது. அதை அன்று ஏற்க மறுத்துவிட்டனர். அதுவும் சரியே. காரணம் தமிழகத்தின் பங்கு 533 டி.எம்.சி.க்கு மேல் எனக் கருதி வந்தோம்.

கர்நாடகம் அதிவேகமாக காவிரி நதி நீரை முழுமையாகப் பயன்படுத்த எண்ணி ரகசியமாக புதிய அணைகளையும், புதிய பாசனத் திட்டங்களையும் தொடங்க ஆரம்பித்தது. மேட்டூருக்கு தண்ணீர் திறந்து விடுவது நின்று போனது. கர்நாடகம் தன் தேவைக்கு மேல் தண்ணீரைத் தேக்கி வைக்க ஆரம்பித்தது. பயிர்களைப் பாதுகாக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என கர்நாடக அரசிடம் தமிழக அரசு கெஞ்சுவதும், கர்நாடகம் மறுப்பதும் பின்னர் ஏதோ பிச்சை போடுவது போல சில டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதும் வாடிக்கையாகப் போனது.

கர்நாடகத்தின் போக்கு நியாயத்திற்கும் தர்மத்திற்கும் மாறாக இருப்பதும் அதனால் தமிழக விவசாயிகள் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாவதையும் பொறுக்க இயலவில்லை. 1924ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் கர்நாடகம் புளுகிவருவதுபோல காலாவதியாகவில்லை என்பது புலனானது.

1924ம் ஆண்டின் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்று வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும் அனைத்துலக நதிநீர்ச் சட்டத்தின்படி, உருவெடுக்கும் நாட்டிற்கு மட்டும் நதி சொந்தமில்லை. அது ஓடிப் பாய்ந்த கடைசி நாடு வரை பங்கு கோரலாம் என்ற விதி நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தக் காரணங்களை முன்னிறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் 1983ம் ஆண்டு முதல் கர்நாடகம் முரண்டு பிடிக்கும் போதெல்லாம் வழக்குத் தொடுத்து வந்தேன். காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததுபோல் மேட்டூருக்கு தண்ணீர் வருவதும், வழக்கு தள்ளுபடியாவதும் வழக்கமானது.

இத்தகைய சூழலில் 1988ம் ஆண்டு ஒரு பொது நல வழக்கைத் தொடுத்தேன். கர்நாடகம் இம்முறை இசைந்து வரவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசை திருப்பி அனுப்பிவிட்டு, விசாரணையின்போது ஆஜராக மறுத்துவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சினை குறித்து நதிநீர்த் தீர்ப்பாயம்தான் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு கர்நாடகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மறுவிசாரணைக்குள் அவசர அவசரமாக கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தை அணுகி இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என வேண்டியது. அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு வழக்கு தில்லிக்கு மாற்றப்பட்டது.

காவிரி வழக்கு புத்துயிர் பெற்றது. தமிழக அரசும் இவ்வழக்கில் ஆர்வம் காட்டியது. இதையடுத்து எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பாயத்தில் முறையிட்டு நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் முடிவெடுத்து, தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

தீர்ப்பாயம் பல்வேறு நிலைகளை ஆய்வுசெய்து 1991-ம் ஆண்டு தனது இடைக்கால உத்தரவை வெளியிட்டது.

கர்நாடக சட்டமன்றம் கூடி, காவிரி தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவை ஏற்கமறுத்து அதை ரத்துசெய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. காவிரி நதிநீர்ப் பாதுகாப்பு என்கிற அவசரச் சட்டத்தையும் பிறப்பித்தது.

தீர்ப்பாயம் இந்திய அரசியலைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது. அதில் அங்கம் வகித்தவர்கள் நீதிபதிகள்.

இந்நிலையில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தது. கர்நாடக அரசியல்வாதிகள் ஒருமித்த குரலில், தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்கிற அறிவிப்பினை வெளியிட ஆரம்பித்தனர்.

உறுதியான நீர்வரத்து 50 சதவீதம் என்கிற அடிப்படையில் பங்கீடு செய்துள்ளதாக தீர்ப்பாயம் கூறியுள்ளது. முழு அளவு நீர் அதாவது 100 விழுக்காடு அளவு வந்தால் உபரியாக வரும் 50 சதவீதம் அளவு நீர் கர்நாடகத்திற்கு அல்லவா போய்ச் சேரும். அது எப்படி நியாயமாகும்?

சரி தீர்ப்பாயப்படி தமிழகத்திற்குத் தேவையான அளவு வெறும் 200 டி.எம்.சி. அளவுதான் என்றாலும் உபரியான 350 டி.எம்.சி. நதிநீர் தமிழகத்தின் பங்கு அல்லவா? 1976 முதல் 2007 வரை கணக்கிட்டு காவிரிப்படுகை விவசாயிகளுக்கு வழங்கிட உத்தரவிட்டிருக்க வேண்டுமல்லவா?

தமிழகத்தின் நீரை கர்நாடகத்திற்கு தீர்ப்பாயம் தாரை வார்ப்பது கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோல் அல்லவா இருக்கிறது.

கர்நாடகம் ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கால் தமிழகத்துக்கு நேரிட்ட சேதத்துக்கு இழப்பீடு ஏதும் கொடுக்காதது ஏன்?

1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி புதிதாக விவசாயத்திற்கு கொணர்ந்த நன்செய் நிலங்களில் சாகுபடி செய்யக் கூடாது என உத்தரவு கோரியிருந்த வேளையில், புதிய நன்செய் சாகுபடியை கர்நாடகம் ஆமோதித்தது. அத்துடன் அத்துமீறி புன்செய் சாகுபடியையும் விரிவுபடுத்தியது.

அதே தருணம் தமிழகத்தில் விரிவுபடுத்திய புதிய சாகுபடி நிலங்களைப் பயிரிட வேண்டாம் என்றல்லவா கூறிவிட்டது. இதன் மூலம் தெளிவாவது என்னவென்றால், காவிரியின் நீர்வரத்து 1000 டி.எம்.சி. அளவுக்கு இருக்கும்; அதை வேண்டுமென்றே குறைவாக மதிப்பிட்டு மிகக் குறைவான பங்கீட்டை தமிழகத்திற்கு கொடுக்க நடந்த மோசடி நாடகத்தின் முடிவுதான் இறுதித் தீர்ப்பு.

தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு நம்முடைய எழுச்சியையும், எதிர்ப்பையும் கர்நாடகத்துக்கு காட்ட வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்க வழிபிறக்கும்.

ஆரம்ப நாள் முதலே கர்நாடகம் செய்வது அடாவடித்தனம்; சட்டரீதியான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை; நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட மாட்டேன்; அதைத் தள்ளுபடி செய்து விட்டோம் எனப் பிரகடனப்படுத்துவது, கர்நாடக வாழ் தமிழர்களுக்கு எதிராக தாக்குதலை கட்டவிழ்த்துவிடுவது. இவற்றையே கர்நாடகம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

எனவே உரிய நிவாரணங்களைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனே வழக்குத் தொடர வேண்டும். தீர்ப்பாயத்திடம் மறு ஆய்வுக்குச் செல்லுவதால் எந்தப் பலனும் நேராது. வெறும் கால இழப்புதான் மிஞ்சும். தவறான தீர்ப்பை மறு ஆய்வு என்கிற பேரால் எந்தத் தீர்ப்பாயம் திருத்தி எழுதும்?

முன்போல் காவிரிப்படுகை விவசாயிகளின் பிரதிநிதிகள், தீர்ப்பாயத்தின் உத்தரவைத் தள்ளுபடி செய்து, அவர்கள் கோரிய நிவாரணம் வேண்டும் எனத் தனியாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்).

——————————————————————————-

சிக்கலில் சிந்து நதிநீர் ஒப்பந்தம்

எம். மணிகண்டன்

சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீர்ப்பங்கீடு குறித்த உடன்பாடு 1960-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டபோது, அத்துடன் இருநாடுகளுக்கு இடையே நிலவிவந்த நீர்ப்பங்கீட்டு பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகவே அனைத்துத் தரப்பினரும் நினைத்தனர். ஆனால் 1980க்குப் பிறகு எழுந்த நவீன காலப் பிரச்னைகள் அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

சிந்து மற்றும் அதன் கிளை நதிகளான

* ஜீலம்,
* சீனாப்,
* பியாஸ்,
* ரவி,
* சட்லெஜ்

ஆகியவற்றில் மேற்கு பக்கம் இருக்கும் சிந்து, ஜீலம், சீனாப் ஆகியவை பாகிஸ்தானுக்கும், மற்ற மூன்று நதிகள் இந்தியாவுக்கும் “உரிமையானவை’ என சிந்து நதிநீர் ஒப்பந்தம் கூறுகிறது.

இந்த நதிகளின் போக்கை மாற்றாமல் அணைகளைக் கட்டிக் கொள்ளலாம் எனவும் இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பிரச்னை இங்குதான் ஆரம்பிக்கிறது. வளர்ச்சிப் பணிகளைக் காரணம் காட்டி பாகிஸ்தான் உரிமை பெற்ற நதிகளின் குறுக்கே இந்தியா அணைகளைக் கட்டுவதும், அதற்குப் பாகிஸ்தான் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

ஜீலம் நதியில் கோடைக்காலத்தில் படகுப் போக்குவரத்தை சீரமைப்பதற்காக கட்டப்பட்ட ஊலர் தடுப்பணை, பக்லிஹார் மற்றும் கிஷன்கங்கா நீர்மின் திட்டங்கள் ஆகியவை இந்தியாவின் “பிரச்னைக்குரிய’ திட்டங்கள். தற்போது ஊரி நீர்மின் திட்டமும் இப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட எந்தத் திட்டத்திலும் பாசனத்துக்காக நதிநீரை இந்தியா பயன்படுத்தவில்லையே? பிறகு ஏன் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்று ராஜதந்திரம் தெரியாதவர்கள் அப்பாவியாகக் கேட்கக் கூடும்.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் எழுச்சியைக் கண்டு பொறாமை கொண்ட பாகிஸ்தான் இது போன்ற தேவையற்ற வேலைகளில் ஈடுபடுகிறது என்றுகூட நம்மில் சிலர் நினைக்கலாம். இவற்றைப் பற்றி பார்ப்பதற்கு முன் பாகிஸ்தான் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்.

சிந்து நதிநீர் ஒப்பந்தப்படி பாகிஸ்தானுக்கு உரிமையான நதியின் வேகத்தை அணையைக் கட்டி இந்தியா தடுக்கக்கூடாது. அதாவது பாகிஸ்தானுக்குள் செல்லும்போது அந்த நதி சீரான வேகத்தில் செல்ல வேண்டும். ஆனால் ஊலர் தடுப்பணை, பக்லிஹார் நீர்மின் திட்டம், ஊரி நீர்மின் திட்டம் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள அணைகள், நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதே பாகிஸ்தானின் குற்றச்சாட்டு.

சாதாரணமான நேரங்களில் இந்த அணைகளைக் கொண்டு பாகிஸ்தானுக்கு பிரச்னை எதையும் ஏற்படுத்தாமல் சமர்த்தாக நடந்து கொள்ளும் இந்தியா, போர்க்காலங்களில் இவற்றையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்று பாகிஸ்தான் பலமாகச் சந்தேகிக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டில் பக்லிஹார் அணை திடீரெனத் திறக்கப்பட்டதால் பாகிஸ்தான் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அந்நாடு சுட்டிக் காட்டுகிறது. இது தவிர, விவசாயத்தை நம்பியிருக்கும் பாகிஸ்தானின் சிந்து, பஞ்சாப் மாகாண மக்கள் இந்த அணைகளால் பாதிக்கப்படுவார்கள் என்ற பிரச்னையையும் பாகிஸ்தான் முன்வைக்கிறது.

இந்தியாவைக் கடந்துதான் பாகிஸ்தானுக்குள் இந்த நதிகள் செல்ல வேண்டும் என்பதுதான் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு மிகவும் சாதகமான அம்சம். உலக அரங்கில், ஒப்பீட்டளவில் செல்வாக்கு மிகுந்த நாடான இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்கும் என்பது பாகிஸ்தானை எரிச்சலடைய வைக்கும் மற்றொரு விஷயம். ஏற்கெனவே, பக்லிஹார் நீர்மின் திட்ட விவகாரத்தில் “கிட்டத்தட்ட’ வெற்றியைப் பெற்றுவிட்ட இந்தியாவுக்கு, தற்போது ஊரி நீர்மின் திட்டத்துக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு ஒன்றும் தலைபோகும் விஷயமல்ல.

பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எழுந்த பிரச்னைகள் எதுவும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. இரு நாடுகளும் அணுஆயுத சக்திகளாக மாறிவிட்ட பிறகு இந்த பிரச்னைகளின் வீரியம் கூடியிருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. இந்நிலையில், புதிய பிரச்னைகள் உருவாவது அல்லது உருவாக்குவது போன்றவை, ஏற்கெனவே பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கு இப்பிரச்னைகள் தீராத தலைவலியாக இருக்கும் என்பதுதான் நிபுணர்கள் கருத்து.

அதனால் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து அதிகரித்து வரும் பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா வளைந்து கொடுப்பதுதான் சரியான ராஜதந்திரமாக இருக்கும். அதுமட்டுமல்ல, மின்திட்டங்கள் அமைப்பதற்காக வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு நல்ல சேதி இல்லை.

Posted in 1974, Byas, Cauvery, Chenab, Dam, Devakottai, Ganga, Hogenakal, Hogenakkal, Interlink, Issue, Jhelum, Karnataka, Karuppan, Kaviri, Kollidam, Pakistan, Pyas, R Karuppan, Rain, Ravi, River, Sathanoor, Sathanur, Season, Seyyar, Sindhu, Sutlej, Tamil Nadu, Thiruchirappalli, TMC, Trcihy, Vaaniyambadi, Wallajapet, Water | Leave a Comment »

Lake Irrigation – Agriculture water sources: Backgrounder, Analysis & History

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

ஏரிகள் காப்போம்

திண்டிவனம் பஸ் நிலையத்தை ஏரியில் அமைப்பது தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் காரசாரமான அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விஷயத்தில் அரசியலை ஒதுக்கிவிட்டு தமிழக ஏரிகளின் இன்றைய நிலைமை, அதன் முந்தைய பயன், ஏரிகளை அரசும் மக்களும் புறக்கணித்ததால் ஏற்பட்டு வரும் இழப்புகள் ஆகியவற்றை ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏரிகள் உள்ளன. ஒவ்வொரு ஏரியும் நிரம்பியவுடன் மதகுகள் திறக்கப்பட்டு அடுத்த ஏரிக்குத் தண்ணீர் செல்லும்படியான அமைப்புகள் கொண்டவை. இந்தத் தொடர்ச்சி குறைந்தபட்சம் 15 ஏரிகள் வரையிலும்கூட இருக்கும்.

ஒவ்வொரு ஏரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெக்டேர் விவசாய நிலத்துக்குத் தண்ணீர் தரவல்லவை. இவற்றைப் பராமரிக்கும் பணி பயனாளிகளான மக்களிடம் அல்லது பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த ஏரிகள் ஆண்டுதோறும் நிரம்புபவை அல்ல. 5 ஆண்டுகளில் சராசரியாக 3 முறை மட்டுமே நிரம்பின. இதையெல்லாம் மனத்தில் வைத்து, அந்த ஏரிக்குரிய விவசாயிகள் பயிர்களை வகைப்படுத்திக் கொண்டார்கள். நீரைப் பகிர்ந்து கொண்டார்கள்.

தமிழகத்தில் 1960-ம் ஆண்டில்

  • ஆறு, வாய்க்கால் பாசனத்தின் மூலம் 881 ஆயிரம் ஹெக்டேர் (36 சதவீதம்)
  • ஏரிப் பாசனத்தில் 936 ஆயிரம் ஹெக்டேர் (38 சதவீதம்)
  • கிணற்றுப் பாசனத்தில் 597 ஆயிரம் ஹெக்டேர் (24 சதவீதம்)
  • மற்ற பாசனங்களில் 46 ஆயிரம் ஹெக்டேர் (2 சதவீதம்) என
  • மொத்தம் 2462 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயம் நடைபெற்றது.

புள்ளியியல்துறை தகவலின்படி ஏறக்குறைய அதே பரப்பளவில்தான் 2003-ம் ஆண்டிலும் விவசாயம் நடைபெற்றுள்ளது. ஆனால்,

  • 38 சதவீதமாக இருந்த ஏரிப் பாசனம் 18 சதவீதமாகவும்
  • ஆறு, வாய்க்கால் பாசனம் 26 சதவீதமாகவும் குறைந்துவிட்டது.
  • 24 சதவீதமாக இருந்த கிணற்றுப் பாசனம் 54 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

அதாவது ஆறு, வாய்க்கால் பாசனத்தில் குறைந்த 10 சதவீதமும் ஏரிப் பாசனத்தில் குறைந்த 20 சதவீதமும் சேர்ந்து 30 சதவீதம் விளைநிலங்கள் கிணற்றுப் பாசனத்துக்கு மாறியுள்ளன.

தமிழக விவசாயத்தில் 30 சதவீதம் கிணற்றுப் பாசனத்துக்கு மாறியுள்ளதால், பம்புசெட் மூலம் நீர் இறைக்கும் இலவச மின்சாரத்தின் அளவு உயர்ந்து மானியத்தின் அளவும் ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.

தமிழக அரசு- இதில் கட்சிப் பாகுபாடே வேண்டாம்- ஏரிகளைப் பாதுகாத்திருந்தால் 20 சதவீதம் விளைநிலங்களைக் கிணற்றுப் பாசனத்துக்கு மாறாமல் தடுத்திருக்க முடியும்.

1980 முதல் 2005 வரை பல்வேறு அமைப்புகள் மூலம் தமிழகத்தில் 2136 ஏரிகள் ரூ.473 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. இதில் உலக வங்கியும் நபார்டும் மட்டுமே ரூ. 150 கோடி வரை செலவிட்டுள்ளன. மாநில அரசு 290 ஏரிகளுக்காக ரூ.62 கோடி செலவிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரமே, அரசு ஏரிகளைக் காப்பதில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு ஒரு சான்று.

ஏரிகள் என்பவை பாசன நீருக்காக மட்டுமல்ல. மண் இழப்பைத் தடுத்தல், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பயன்பாடுகளும் ஏரிகளால் உள்ளன.

இன்று சேலத்தில் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் ஒரு ஏரிதான். அதன் பெயரே- பஞ்சம்தாங்கி ஏரி. எத்தகைய கடுமையான பஞ்சம் வந்தபோதும் வற்றாத ஏரி என்ற பொருளில் அவ்வாறு அழைத்து வந்தனர். ஆனால் அதற்கான நீர்வரத்துப் பாதைகளை அடைத்துவிட்டு, பல காலமாக நிரம்பாமல் வீணாகக் கிடக்கிறது என்று பொதுப்பணித்துறையின் சான்று பெற்று, பஸ் நிலையமாக மாறிவிட்டது.

இப்படியாகத்தான் எல்லா ஏரிகளையும் இழந்தோம், இழந்து வருகிறோம். இன்றைய தேவை “ஏரி காக்கும் அரசு’

மழைக் காலத்தில் சென்னை நகர் மிதந்ததைக் கண்ட பின்னும் ஏரிகள் மீது அக்கறை செலுத்தாமல் இருக்கலாமா?

====================================================

நன்னீர் பற்றாக்குறையால் திணறும் ஆசியா

கே.என். ராமசந்திரன்

திபெத் பீடபூமியில் ஏராளமான பனி குவிந்து கிடக்கிறது. அது உருகிப் பத்து பெரிய ஜீவநதிகளாகப் பாய்கிறது. திபெத்தின் சராசரி வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதன் காரணமாக அதிக அளவில் பனி உருகி அந்த ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். கொஞ்ச காலத்துக்குப் பிறகு எல்லாப் பனியும் உருகித் தீர்ந்து அந்த ஜீவநதிகள் மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஓடும் நதிகளாகிவிடக் கூடும். அதன்பின் மழை பொய்த்தால் வறட்சிதான்.

காடு அழிப்பு, கால்நடைகள் அளவுக்கு மீறி மேய்தல், தவறான நதிநீர் மேலாண்மை, தவறான நீர்ப்பாசன உத்திகள், நீர் மாசு போன்ற காரணங்களால் ஆசியாக் கண்டம் நன்னீர்ப் பற்றாக்குறையால் திணறுகிறது. அளவுக்கு மீறி நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுச் சுற்றுச்சூழல் சிதைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவும் சீனாவும் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளைப் பெருமளவில் சார்ந்திருக்கின்றன. அவற்றில் நீர் வரத்து குறைந்தால் இரு நாடுகளுக்குமிடையில் தண்ணீர்ப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவை நதிகளின் போக்கை மாற்றியமைக்க முனைந்தால் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகள் சண்டைக்கு வரும்.

இப்போதே சீனா சட்லஜ் நதி உற்பத்தியாகும் இடத்துக்கருகில் ஓர் அணையைக் கட்டியிருக்கிறது. அத்துடன் பிரம்மபுத்ரா நதியிலிருந்து வடக்கேயுள்ள மஞ்சள் நதிக்கு நீரை எடுத்துச் செல்லவும் திட்டமிடுகிறது. சீனாவின் நீர்த்தேவை முழுவதையும் திபெத்திலிருந்து நிறைவு செய்து கொள்ள அது முனையும்போது, இந்தியாவுடன் மோதல் ஏற்படுவது உறுதி.

ஆசிய நாடுகள் எல்லாவற்றிலுமே இதேபோன்ற எல்லைப் பிரச்சினைகளும் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளும் எழும். நாடுகளுக்கிடையில் போர்கள் கூட மூளலாம்.

திபெத்தில் சீனா ஏராளமான கனிமச் சுரங்கங்களைத் தோண்டி வருகிறது. அத்துடன் அங்குள்ள பனிமலைகள் மறைந்து தண்ணீர்ப் பஞ்சமும் ஏற்பட்டால் திபெத்தின் சுற்றுச்சூழலே முற்றிலுமாக வீணாகிப் போகும்.

இந்தியாவின் கங்கை – காவிரி இணைப்புக் கனவும் ஈடேறாது. உலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாக இந்தியத் துணைக் கண்டத்தில் சராசரி மழையளவு பன்மடங்கு அதிகமாகும் என்று சொல்லப்படுவது ஓர் ஆறுதலான செய்தி. அதை வீணாகாமல் சேகரித்து வைக்க பெரிய ஏரிகளையும் அணைகளையும் உடனடியாக உருவாக்கியாக வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

உலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாகக் கடல் நீர் மட்டம் உயர்ந்து உள்நாட்டுக்குள் பரவுவது, பெருமழையால் ஏற்படும் வெள்ளங்கள், கோடைகளில் கடும் வறட்சி போன்ற பேரிடர்கள் ஏற்படும் என்று சொல்கிறார்கள். அதன் காரணமாக மக்கள், குறிப்பாக ஏழை எளிய மக்கள் உள்நாட்டில் பத்திரமான இடங்களுக்குக் குடிபெயர்வார்கள். அது பல சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். இப்போதே வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகச் சுமார் இரண்டு கோடி மக்கள் இந்தியாவில் குடியேறியிருக்கிறார்கள். கடல் மட்டம் உயர்ந்தால் வங்கதேசம் முழுவதுமே மூழ்கிப் போகலாம். அதேபோல மாலத்தீவுகளும் மூழ்கி விடும்.

நெய்தல் நிலப்பகுதி வேலைவாய்ப்புகளும், உற்பத்திகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். டெல்டா பகுதிகளிலும், தாழ்வான நிலப்பகுதிகளிலும் நடைபெற்று வந்த விவசாயம் அழியும் ஆபத்தும் உண்டு. அதன் காரணமாக வேலையிழக்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கிப் படையெடுப்பார்கள். அவர்கள் வழக்கம்போல ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்துக் குடியேறுவார்கள். குளிர்காலங்களில் குளிர் குறைவாவது நோய்க்கிருமிகளைப் பரப்பும். கொசு போன்ற பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கும் உதவும். மேலும் கதகதப்பான வானிலையை உண்டாக்கும். நோய்கள் பெருகி அரசின் சுகாதாரப் பராமரிப்புச் சுமையை அதிகமாக்கும். தொழிலாளர்களும் பணியாளர்களும் நோய்வாய்ப்பட்டு சேவைத் துறைகளும் உற்பத்தித் துறைகளும் முடங்கும்.

உலகளாவிய வெப்பநிலை 6 செல்சியல் டிகிரி வரை உயர முடியும் எனப் பயமுறுத்துகிறார்கள். பசுங்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவைதான் உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்குக் காரணம். அந்த வாயுக்களை வளிமண்டலத்தில் பரப்புவதை நிறுத்திவிட்டால் கூட, இன்று வரை வளிமண்டலத்தில் கலக்கப்பட்டிருக்கிற கரிம வாயுக்கள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு வளிமண்டல வெப்பநிலையைத் தொடர்ந்து உயர வைத்துக் கொண்டேயிருக்கும்.

2099-ம் ஆண்டுக்குள் உலகளாவிய வெப்பநிலையில் 1.1 செல்சியஸ் டிகிரி வரை உயர்வு ஏற்படுவதைத் தடுக்கவே முடியாது.

Posted in ADMK, Agriculture, AIADMK, Analysis, Backgrounder, Bus Stand, China, Dhindivanam, Dindivanam, Dinduvanam, DMK, Drought, Environment, Farming, Global Warming, Himalayas, History, Ice, Irrigation, Lake, Lakes, Land, Pollution, Pumpset, River, Salem, Scarciity, SEZ, Snow, Statistics, Sutlej, Thindivanam, Tibet, Water, WB, Well water, world bank | Leave a Comment »

Palaniappa Chettiyar Memorial Prizes – Young Adult Fiction Contest awards

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

பழனியப்பா செட்டியார் நினைவு சிறுவர் இலக்கியச் சிறுகதைப் போட்டி

சென்னை, பிப்.23: புகழ்பெற்ற பதிப்பகமான பழனியப்பா பிரதர்ஸ், அதன் நிறுவனர் செ.மெ.பழனியப்ப செட்டியார் நினைவாக, மாணவப் படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக, செ.மெ.பழனியப்பா செட்டியார் நினைவுச் சிறுவர் இலக்கியச் சிறுகதைப் போட்டியை அறிவித்திருந்தது.

அதில், பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும், அக்கதைகளைத் தொகுத்து கண்ணன் கண்ட சொர்க்கம் எனும் நூல் வெளியீட்டு விழாவும், சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

நிறுவனர் நாளாக நடைபெற்ற இவ்விழாவில் பிரபல எழுத்தாளர்கள் கே.ஆர்.நரசய்யா எழுதிய மதராசப்பட்டினம், ப.முத்துக்குமாரசுவாமி எழுதிய அம்பிகை ஆகிய இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டன.

நல்லி குப்புசாமி செட்டியார் நூல்களை வெளியிட்டார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ம.இராசேந்திரன் பெற்றுக் கொண்டார்.

சிறந்த கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் சை.வே.சிட்டிபாபு மாணவப் படைப்பாளிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.

விழாவில் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ம.இராசேந்திரன் “மதராசப்பட்டினம் என்ற நூல் பல அரிய செய்திகளை உள்ளடக்கிய ஒரு வரலாற்று ஆவணம். சென்னையைப் பற்றிய வரலாற்று ஆவணம், முன்னோர்கள் நினைவு கூறும் ஆன்மிகம், வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் மாணவர் இலக்கியம் என மூன்று வழிகளில் சிந்தித்து, மூன்று நூல்களை பழனியப்பா பிரதர்ஸ் தந்திருப்பது பாராட்டத்தக்கது’ என்றார்.

விழாவில் 2006-ம் ஆண்டு 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 6 மாணவ, மாணவியரை உருவாக்கிய தமிழாசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அம்மாணவர்களை உருவாக்கிய பள்ளிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவ எழுத்தாளர்களை உருவாக்கும் திட்டத்தின் அடுத்தபடியாக, மாணவ எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை ஒன்றைத் தொடங்க இருப்பதாக பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ப.செல்லப்பன் தெரிவித்தார்.

Posted in Children, Competition, Contest, Events, Happenings, Kid, Literary, Memorial, Nalli, Nalli Kuppusami, Nalli Kuppusamy, Narasayya, Palaniappa, Pazhaniappa, Pazhaniappa brothers, Prize, Winner, Writer | 1 Comment »

Samjhauta Express – Indian Consulate: Ambassador’s role

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

இந்தியத் தூதரகத்தின் மனித நேயம்!

இஸ்லாமாபாத், பிப். 23: சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுகள் வெடித்ததால் ஏற்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்திய ஹைகமிஷன் அதிகாரிகளின் தன்னலமற்ற, மனிதாபிமான நோக்கோடு கூடிய சேவையை பாகிஸ்தானியர் பாராட்டுகின்றனர்.

இது தொடர்பாக “”டான்” பத்திரிகையில், ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் ஒருவர் பின்வரும் கடிதம் எழுதியிருக்கிறார்.

“”விபத்தில் தனது பெற்றோரையும் 2 இளம் குழந்தைகளையும் இழந்தார் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்; தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வெளியான இந்திய ரயில் நிலைய தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு அவர் விவரம் கேட்டபோது, எந்த பதிலும் கிடைக்கவில்லை. துக்ககரமான இந்த வேளையில் தகவல்கூட கிடைக்கவில்லையே என்று அவருடன் நாங்களும் வேதனைப்பட்டோம்.

“அப்போது அவருடைய வீட்டுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து அதிகாரிகள் பேசினர். ரயிலில் குண்டு வெடிப்புக்குப் பிறகு தீ பரவியதால் உடல்களை அடையாளம் காண்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால், அவசரப்பட்டு தகவல் தரவில்லை என்று தெரிவித்தனர். அவருடைய உறவினர்கள் 4 பேரும் இறந்துவிட்டனர் என்ற துக்ககரமான செய்தியை வருத்தத்துடன் தெரிவித்தனர். “அத்துடன், உடல்களைப் பெற்றுக்கொள்ள தூதரகம் செய்துள்ள விசா ஏற்பாடு என்ன, தில்லிக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற தகவல்களைக் கூறி, மேற்கொண்டு இன்ன எண்ணைத் தொடர்பு கொண்டால் தில்லி பயணத்துக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். இதன்பிறகே என் பக்கத்து வீட்டுக்காரர் சற்று ஆறுதலும் அமைதியும் அடைந்தார்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அந்த வாசகர்.

பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர், இந்த விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியிலும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியிலும் உதவவும், ஒருங்கிணைக்கவும் தில்லி சென்றுவிட்டார். துணைத் தூதரக அதிகாரி டி.சி.ஏ. ராகவன் தலைமையில் இந்தியத் தூதரக அதிகாரிகள் நேரம், காலம் பாராமல் செயல்படுகின்றனர்.

அன்றைய தினம் பயணம் செய்தவர்களின் முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களைச் சரிபார்த்து ஒவ்வொருவரையும் அழைத்து, வருத்தம் தெரிவிப்பதுடன் தேவைப்படும் உதவிகளை வலியச்சென்று செய்கின்றனர்.

Posted in Accident, Ambassador, Chicken Soup, Dawn, Heartwarming, Helpline, Indian Consulate, Inquiry, Letters to the Editor, Pakistan, passengers, Samjauta, Samjhauta, Samjhauta Express, Victim | Leave a Comment »

Muthamizh – Tamil Isai & the magic of Music: Mathivaanan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

முத்தமிழ் இசையின் முகவரி அறிவோம்!

த.நா. மதிவாணன்

இயற்கையுடன் இணைந்து மனித உள்ளங்களை வசியப்படுத்தி இசைய வைக்கும் ஒப்பற்ற பேராற்றல் கொண்டது இசை.

இசை ஒன்றே இசைப்பவருக்கும் கேட்பவருக்கும் இன்பமூட்டும் எழில்மிகு கலையாகும். ஆயகலைகள் அறுபத்து நான்கினுள் இசைக்கலையும் ஒன்று. உலகில் இசைக்கு நிகரானது இசை ஒன்றேயாகும்.

தாயவளின் நாவின் அசைவில் எழுந்திடும் ஒலியை தாலாட்டு என்றனர். தாலாட்டு என்பதன் பொருள் தால் – ஆட்டு என்பதாகும். தால் என்றால் நாவு. நாவின் அசைவில் பிறக்கும் இசையே தாலாட்டு ஆகும்.

இவ்வுலகில் மனிதப் பண்பாட்டின் பிறப்பிடம் முல்லை நிலமாகும். ஆய்ச்சியர் குரவைப் பகுதியில் ஆயர் மகளிர் பாடிய “முல்லைத் தீம்பாணி’ தான் உலகிலேயே முதலில் தோன்றிய இசைவடிவம் என்பர் நுண்கலை ஆய்வர்கள். ஆக இசையின் பிறப்பிடம் முல்லை நிலமாகும். நுண்கலையாகிய இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், கட்டடம் எனும் ஐந்தினுள் தலையானது இசைக்கலையாகும்.

இசை பிறந்தது எங்கே? காற்றினிலே என்பதுதான் உண்மை. கானகத்தில் வண்டுகள் மூங்கிலைத் துளைபோடக் காற்றுத் துளை பின் உள்ளே புகுந்து வெளிவர, அது தருகிற ஓசையை ரசித்து மகிழ்ந்தபோதுதான் மனிதன் குழலைப் படைக்க அறியலானான்.

இசை, அசையாப் பொருளையும் அசைக்கும் வல்லமை கொண்டது. இதற்கு சாட்சி ராமாயணம். இசைத்தவன் ராவணன். இசை சாம கானம்.

இசையின் சீரிய சிறப்பை அறிந்திருந்த காரணத்தால் அகத்திய மாமுனி “”அகத்தியம்” எனும் முத்தமிழ் இலக்கணம் விளக்கும் ஓர் அரிய நூலைப் படைத்தார்.

இசை மனதுக்கு மட்டுமன்றி உடல் நோய்களைத் தீர்க்கும் வல்லமையும் கொண்டது. வராளி பாடிட வாதம் நீங்கும். காம்போதி பாடிட துன்பம் போகும். நீலாம்பரி, யதுகுலகாம்போதி ஊக்கம் தரும். தேஷ் ராகம் மகிழ்வூட்டும். வைகறைப் பொழுது பாடுவது பூபாளம். நாட்டை, ஆரபி ராகங்கள் கடவுளை வணங்கவும் நற்காரியம் புரியும்போதும் பாடப்படுவது. இறைவனிடம் வேண்டும்போது தன்னியாசி ராகம் சிறந்தது. இறைவனின் புகழ்பாட மோகனம், மன்னனிடமோ, இறைவனிடமோ யாசிக்கும்போது வராளி பாடலாம். மனத்தில் துன்பங்கள் நீங்க இறைவனிடம் கேதாரகௌளை பாடலாம். மனத்தை ஒருமுகப்படுத்த பூர்விகல்யாணி – செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க சகானா… இப்படி ஒவ்வொரு ராகமும் ஒரு குணம் கொண்டது.

நாகசுரம் எனும் உயரிய இசைக்கருவி ஓர் உன்னதமான மங்களகரமான இசைக்கருவி. இதை நானசின்னம், நாகசின்னம், நாதசுரம் என்றும் அழைப்பர்.

நாகசுரத்திற்குரிய சீவாளி எனப்படும் சிறிய பொருளே இனிய இசையை நாயனத்தின் செவி குளிரத் தருகிறது. இந்தச் சீவாளி கொரத்தட்டை எனப்படும் ஒருவகைக் கோரையால் செய்யப்படுகிறது. இந்தச் சீவாளி அடைபடும்போது அதைச் சுத்தப்படுத்த உதவும் குச்சி யானைத் தந்தத்தால் செய்யப்படுகிறது.

ஆலயங்களில் நித்தமும் அதிகாலையில் பூபாளம் இசைத்து இறைவனை எழுப்புவர். மதியம் சுருட்டி எனும் ராகமும், இரவு கானடா, சகானா எனும் ராகங்களும் இசைக்கப் பெறும். உற்சவர் ஊர்வலத்தின்போது வசந்தா எனும் ராகமும் அனைத்து பூசைகளும் முடிந்து பள்ளி அறைக்குச் செல்லும்போது ஆனந்தபைரவி, நீலாம்பரி எனும் ராகங்களும் இசைக்கப்படும்.

இல்லறத்தில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ அடியெடுத்து வைக்கும் மன்றல் விழாவின் போது நாட்டைக்குறிஞ்சி ராகம் மிதந்திட கெட்டிமேளம் முழங்கப்படும்.

சரிகமபதநி என்ற எழு சுரங்களும் தமிழ் மொழியிலே வழங்கப்பட்டு வந்தன. நம்முடைய ஆன்மாவின் மூச்சு இசை. மனிதன் பிறந்தவுடன் இசை வயப்படுகிறான். “”தாயின் அன்பில் பண்பில் வருவதும் பாட்டு – வாழ்வில் களிப்பூட்டுவது பாட்டு – துயரத்தை நீக்கப் பாட்டு – களைப்பைப் போக்கப் பாட்டு – அன்பின் வெளிப்பாடு பாட்டு, மணவறையிலும் பாட்டு, மாண்டபின்னரும் பாட்டு” ஆக மனிதன் பிறப்புதொட்டு இறப்பு வரை பாட்டால் வாழ்கிறான். இசை மனித மொழியில் பிறந்து உணர்வில் கலந்து வருவதாகும்.

இசை சமுதாயச் சிந்தனையையும் தருகிறது. இசை ஒரு தெய்வீகம் என்பர். மனித உலகு இசைபட வாழ்தல் வேண்டும். இசையால் இவ்வுலகு மேம்பட வேண்டும். வாழ்க தமிழ்! வளர்க தமிழிசை!

(கட்டுரையாளர்: நிர்வாகத் தலைவர் – தமிழக மீனவர் இளைஞர் அணி. அறங்காவலர் – திருவையாறு தமிழிசை மன்றம்).

Posted in Agathiyam, Culture, Heritage, Isai, Mathivaanan, music, Muthamil, Muthamizh, Op-Ed, Tamil Isai | 1 Comment »

The Kavingar Devamagal literary awards – Tamil Poet Devadevan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

தேவமகள் இலக்கிய விருதுக்கு தேர்வான கவிஞர்கள் அறிவிப்பு

கோவை, பிப். 22: கவிஞர் தேவமகள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளுக்கு கவிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கவிச்சிறகு விருது: மூத்த கவிஞரைப் பாராட்டும் வகையில் இவ் விருது வழங்கப்படுகிறது. ரூ.10 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்று வழங்கப்படும்.

தூத்துக்குடியைச் சேர்ந்த கவிஞர் தேவதேவன் இவ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • குளித்துக் கரையேறாத கோபியர்கள்,
  • மின்னற்பொழுதே தூரம்,
  • மாற்றப்படாத வீடு உள்பட இவரது 15 கவிதை நூல்கள் வெளி வந்துள்ளன.

மேலும் “தேவதேவன் கதைகள்’ என்ற சிறுகதை தொகுப்பு, “அலிபாபாவும் மோர்ஜியானாவும்’ என்ற நாடகநூல், கவிதை பற்றிய உரையாடல் என்ற கட்டுரைநூல் ஆகியனவும் வெளிவந்துள்ளன.

இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. கல்லூரிகளில் பாடமாகவும் உள்ளன. இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

கவித்தூவி விருது: இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 2 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

திருநெல்வேலி பத்தினிப்பாறையைச் சேர்ந்த கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா (நூல்-வலியோடு முறியும் மின்னல்), சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவிஞர் தென்றல் (நூல்-நீல இறகு) ஆகியோர் கவித்தூவி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மார்ச் 10-ம் தேதி கோவை ஆருத்ரா அரங்கில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

கவிஞர் தேவமகள் அறக்கட்டளை அமைப்பாளர் ஆர்.நித்திலன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Posted in Awards, Devadevan, Devamagal, J Francis Kruba, J Francis Krupa, Kavithoovi Award, Literary, Literature, Prizes, R Nithilan, Tamil, Thendral, Thenral | 1 Comment »