Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி 15th, 2007

Nepal: ICRC seeks to clarify the fate of more than 800 missing persons

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

நேபாளத்தில் மோதல்கள் காரணமாக காணாமல் போனவர்களின் பட்டியல் வெளியீடு

காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

நேபாளத்தில் கடந்த வருடம் முடிவுக்கு வந்த 10 வருட கால மோதல்கள் காரணமாக காணாமல் போன 800 க்கும் அதிகமானோரின் பட்டியலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது.

இவர்களில் பலர் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேபாள பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

ஏனையவர்கள் மாவோயிஸ்ட்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் சிலர் சிறர்கள் என்றும் அது கூறுகிறது.

மேலும் பல நேபாள நாட்டவர் காணாமல் போயுள்ளதாகக் கூறும் செஞ்சிலுவைச் சங்கம், காணாமல் போன தமது உறவினர்களின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லாது இருந்தால் அவர்களது, உறவினர்கள் தம்மைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

Posted in armed conflict, Clan, Communism, Communist, Democracy, Dictatorship, Government, ICRC, Insurgency, King Gyanendra, Lockup deaths, Maoists, missing persons, Monarchy, Nepal, political disappearances, Rebels, Red Cross, RTI, security forces | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Thumbai

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

மூலிகை மூலை: நஞ்சுக்கு எதிரி தும்பை!

விஜயராஜன்

எதிர் அடுக்குகளில் அமைந்த கூரான நீண்ட கரும்பச்சை இலைகளையுடையது. இது இரண்டு அடிக்குமேல் வளராத சிறுசெடி இனமாகும். இதன் வேர்கள் மூன்று அங்குலத்துக்கு மேல் வளராத குத்துச் செடிக்கு எப்படி வேர் இருக்குமோ அதைப் போன்றுதான் இருக்கும். நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளை உடையது. இந்தத் தண்டுப் பகுதியின் அடியில் இருந்து வளர வளரக் குறுகலான பட்டை போன்று செல்லக்கூடியது. இந்தத் தண்டின் நுனியில் வட்ட வடிவில் காய் போன்ற முடிச்சு இருக்கும். அந்த முடிச்சில் பல அரும்புகள் தேன்கூடு போல அடுக்கி வைத்தாற்போல் இருக்கும். அந்த முடிச்சின் அரும்பில் இருந்து பாத வடிவிலான தேன் நிறைந்த வெண்மையான நிறத்தை உடைய சிறு மலர்கள் பூத்திருக்கும். அதே அரும்பில் 4 இலைகள் எதிர்த்து எதிர்த்து விரிந்திருக்கும். இலைகள் அடியும் நுனியும் மெலிந்தது போன்று நடுப்பகுதி சற்று அகலத்துடன் காணப்படும். இலை, பூ மருத்துவக் குணம் உடையது. இலை கோழையை அகற்றவும், உடல் வலிமையைப் பெருக்கவும் கூடியது. வாந்தி உண்டாக்கும் மருத்துவக் குணம் உடையது. பூ முறைநோய் அகற்றும் குணம் கொண்டது. தமிழ்நாடெங்கும் மாரி காலத்தில் ஈரமுள்ள இடங்களில் தானாகவே வளரக்கூடியது.

வேறு பெயர்கள்: பொருகல், பழபாகல், வைகுண்டம், அதோமுகி, கடற்கொடி, சத்திரம்.

வகைகள்: பெருந்தும்பை, கவித்தும்பை, பேய்த்தும்பை, பித்தாருசம், சன்னிநாயகம்.

ஆங்கிலத்தில்: Leucas aspera, Spreng, Lamiaceae
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.

தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும். புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பிலாது சாப்பிட வேண்டும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையென்றால் இறப்பது உறுதி.

தும்பை இலை, கீழா நெல்லி இலை, சம அளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.

தும்பைச்சாறு 1 மில்லியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து குடிக்கக் கொடுத்து, தேள் கொட்டிய கடிவாயில் தும்பையிலையை அரைத்துக் கட்ட விஷம் கீழே இறங்கும். கடுப்பும் நீங்கும்.

தும்பையிலை, குப்பைமேனி இலை, நாய்கடுகு இலை இவற்றைச் சமஅளவில் எடுத்து அரைத்து உடம்பில் பூசி 3 மணிநேரம் கழித்து வெந்நீரில் குளித்துவர நமது உடலில் பூச்சிக் கடியினாலோ, வேறு சில காரணத்தாலோ ஏற்பட்ட தடிப்பு, நமைச்சல், சொறி, சிரங்கு குணமாகும்.

நஞ்சுள்ளவை நம்மைத் தீண்டிவிட்டால் தும்பையிலைச் சாறு 50 மில்லியுடன் சிறியாநங்கை இலைச்சாறு 2 சொட்டு கலந்து குடிக்கக் கொடுக்க சிறிது நேரத்தில் வாந்தியும் பேதியும் உண்டாகி விஷம் முறிந்து குளிர்ந்த உடம்பு சூடாகி ஜன்னி நீங்கும்.

உடம்பில் சூடு ஏறுகிறது என்றால் விஷம் முறிகிறது என்று அர்த்தம். பேதி அதிகமானால் தயிர் அல்லது எலுமிச்சம்பழச் சாறு கொடுக்க பேதி நீங்கும். மேலும் விஷம் தீண்டியவர்களை 24 மணி நேரத்திற்குத் தூங்க விடக் கூடாது. எப்போதும் தலை மட்டும் உயரத்தில் இருக்க வேண்டும். தாழ்வாக இருக்கக் கூடாது.

தும்பையிலை, உத்தாமணியிலை சமஅளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து இருவேளை தொடர்ந்து குடித்துவர ரத்தப்போக்கு, தாமதமாகப்படுகின்ற மாதவிலக்கு சரியாகும்.

தும்பையிலைச் சாறு நாகதாழியிலைச் சாறு வகைக்கு 50 மில்லி அளவு எடுத்து கலந்து குடிக்க கருந்தேள், செந்தேள் ஆகியவற்றின் கொடிய விஷம் இறங்கும். கடித்த இடத்தில் சிவனார் வேம்பு இலையைக் கசக்கி அழுத்தித் தேய்க்க விஷம் தானாக இறங்கும்.

தும்பைப் பூ 50 கிராம் எடுத்து நல்லெண்ணெய் 50 மில்லி எடுத்து அதில் காய்ச்சி வடிகட்டி தலை முழுகத் தலைபாரம், நீரேற்றம் குறையும்.

தும்பை இலை, கீழாநெல்லி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சம அளவாக எடுத்து அரைத்து பாக்கு அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர எப்படிப்பட்ட நாள்பட்ட மஞ்சள் காமாலையானாலும் குணமாகும்.

Posted in Allopathy, Alternate, Antidote, Body, cure, Doctor, Health, Herbs, Homeopathy, Lamiaceae, Leucas aspera, Medicine, Mooligai Corner, Naturotherapy, Poison, Spreng, Thumbai, Thumpai, Unani, Yunaani, Yunani | Leave a Comment »

London Diary – Era Murugan: Kothavalsavadi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

லண்டன் டயரி: லண்டன் கொத்தவால்சாவடி!

இரா.முருகன்

ஒரு மாநகரம். தலைநகரும் கூட. அங்கே போக்குவரத்தும் , ஜன நெருக்கடியும் இரைச்சலும் பரபரப்புமாகச் சதா இருக்கப்பட்ட வீதிகளை ஒட்டி ஒரு பெரிய சந்தை. நகர் முழுவதற்கும் காய்கறியும், பழமும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்க ஏற்படுத்தப்பட்ட அந்த மார்க்கெட் கிட்டத்தட்ட முன்னூறு வருடம் அதே இடத்தில்தான் இருந்தது. இனியும் நெரிசல் தாங்காது என்ற நிலைமை ஏற்பட, அதை ஏகப்பட்ட எதிர்ப்புகளுக்கு இடையே இடம் மாற்றினார்கள்.

லண்டன் டயரியில் சென்னை கொத்தவால் சாவடி நுழைந்த காரணம் புரியாமல் விழிக்க முற்படுவதற்கு முன்பாக ஒரு வார்த்தை. இது கொத்தவால் சாவடி பற்றிய தகவல் இல்லை. கோவண்ட் தோட்டம் என்ற லண்டன் கோவண்ட் கார்டன் சந்தை பற்றியது. ஆதியில் அதாவது எழுநூறு வருடம் முன்னால் கோவண்ட் தோட்டம் கான்வென்ட் தோட்டமாகத்தான் இருந்தது. தேவ ஊழியத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட கிறிஸ்துவப் பாதிரியார்கள் தங்கியிருந்த இடம் “கான்வென்ட்’ என்று அழைக்கப்பட்டது. அந்தத் துறவிகள் பிரார்த்தனைக்கு மிஞ்சிய நேரத்தில் குழந்தைகளைக் கூட்டிவைத்துக் கொண்டு அங்கேயே கல்வி கற்பிக்கத் தொடங்கியபோது, மேற்படி பள்ளிகளின் பெயரில் கான்வென்ட் ஒட்டிக் கொண்டது. லண்டன் கான்வெண்ட் தோட்டத்துக்கு அந்தப் பெயர் ஏற்படக் காரணம், அந்தக் காலப் பாதிரியார்கள் மடாலயத்துக்குத் தேவைகளுக்காக நகருக்கு நடுவே காய்கறித் தோட்டம் போட்டு கத்தரிக்காயும், முள்ளங்கியும், தக்காளி, வெண்டையும் பயிர் செய்ததுதான்.

தேம்ஸ் பாசனம், அற்புதமான மண். போட்டது எல்லாம் பொங்கிப் பூரித்து அமோகமாக விளைய, மடாலயத் தேவைக்கு மிஞ்சிய காய்கறி, பழத்தை எல்லாம் நகர மக்களுக்கு விற்க ஆரம்பித்தார்கள். “தினசரி மூணு வேளையும் வெண்டைக்காய்க் குழம்புதானா? ரெண்டு பக்கமும் வெண்ணெய் தடவி மொறுமொறுவென்று தணலில் வாட்டிய ரொட்டி கிடைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்’ என்று புதிய , பழைய மடாலயவாசிகள் உரக்க முணுமுணுக்க ஆரம்பித்திருக்கலாம். ரொட்டியும் வெண்ணையும் வாங்க, மடாலயத்தில் நிதி நிலைமை சரியில்லாத காரணத்தால் காய்கறிக்கடை நடத்த ஆரம்பித்து, அந்தக் காலத்திலேயே இருபது பவுண்ட் மாத வருமானம், அதாவது இன்றைய கணக்குக்குக் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய்.

லாபம் எல்லாம் சரிதான். ஆனால் காய்கறி பயிரிட, களையெடுக்க, பறித்து எடுத்துப் போய்க் கடையில் குவித்து வைக்க, விற்றுக் காசை எண்ணிக் கல்லாவில் போட்டுக் கணக்குப் பார்க்க இப்படியே பொழுது கழிந்ததால் பிரார்த்தனைக்கு நேரம் சரியாகக் கிடைக்காமல் போனது. இது சரிப்படாது என்று முடிவு செய்து, கோவண்ட் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டு , மடாலயத்துக்குச் சப்ளை செய்து, மிஞ்சியதைப் பொதுமக்களுக்கு விற்று வருமானத்தை ஒப்படைக்கும் காரியம் குத்தகைக்கு விடப்பட்டது. காண்ட்ராக்ட் எடுக்க ஏகப்பட்ட போட்டி. எடுத்தவர்கள் தொப்பையும் தோல்பையும் பெருத்து வளைய வருவதை அன்றைய இங்கிலாந்து அரசன் எட்டாம் ஹென்றி அரண்மனைக்குள் இருந்து பெருமூச்சோடு பார்த்தான். இந்தப் புண்ணியவான்தான் கட்டிய பெண்டாட்டி ஆன்போலின் அரசியை லண்டன் டவர் வளாகத்தில் வைத்து நோகாமல் தலையை வெட்டிவிட்டுச் சற்றும் தாமதியாமல் அடுத்த கல்யாணம் செய்து கொண்டான் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நினைவு.

ஆன்போலின் அரசியின் தலையை வெட்டியதுபோல் ஏகப்பட்ட மடாலயத் துறவிகளை வரிசையாக நிற்க வைத்துத் தீர்த்துக் கட்டுவது கொஞ்சம் சிரமமான காரியம். மக்கள் எதிர்ப்பும் கூடுதலாக இருக்கும். எனவே எட்டாம் ஹென்றி ரொம்ப யோசித்து, ஓர் அவசரச் சட்டம் போட்டான். கோவண்ட் தோட்டம் அடுத்த நாள் காலையில் அரசுடமை ஆனது. அங்கே பயிர் செய்த காய்கறி, பழங்களைச் சில்லறை, மொத்த விற்பனை செய்வதும் கஜானாவுக்குக் காசு சேர்க்கும் விஷயமானது. நாளடைவில் அவ்

விடத்தில், காய்கறிச் சாகுபடியைவிட, நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வண்டிகளிலும் , கால்நடையாகவும் கொண்டு வந்த சரக்கை நிறைத்து வைத்து விற்பனை செய்வது பிரதானமான பணியாக மாறியது.

ஆமை புகுந்த வீடு பற்றிய அனுபவம் இல்லாத இங்கிலாந்து மக்கள், அரசாங்கம் புகுந்த தோட்டம் என்ன ஆகும் என்று நோக்க அடுத்த சிலபல வருடங்களில் சந்தர்ப்பம் கிடைத்தது. பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட கோவண்ட் தோட்டம் அரசாங்கத்து வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. சும்மா இல்லை. பிரதியுபகாரமாக அவர்கள் சிம்மாசனத்துக்கு அடியிலும், மேலேயும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசனுக்கு ஆள், அம்பு , பட்டாளம் , தங்கக்காசு, வெள்ளியில் அண்டா குண்டா என்று சேவை சாதித்து, அனுபோக பாத்தியதையாகக் கிடைத்த சொத்தை அனுபவிக்க வேண்டும். இந்த ஆள் நம்ம கட்சியில் இல்லை, அல்லது எதிர்ப்பு அறிக்கை விடுக்கத் தயாராகிறான் என்று அரசருக்குப் பட்டால் உடனே அந்தப் பிரமுகரின் கழுத்து அளவு எடுக்கப்பட்டு , கத்தி தயாரிக்கப்படும். அன்னாரை லண்டன் டவர் சிறையில் தற்காலிகமாக ஓய்வெடுக்க வைத்துவிட்டு , அவருக்கு வழங்கப்பட்ட தோட்டம் துரவு பிடுங்கப்பட்டு, அரசரின் புது ஜால்ராவுக்கு அன்பளிக்கப்படும். அந்தக் கால அரசியல் நிலைமை அப்படி.

ஆனாலும் ஆயிரத்து எழுநூறாம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து அரசியல் அமைதி ஏற்பட, இந்தக் களேபரம் ஓய்ந்து, கோவண்ட் தோட்டத்தில் நகர் முழுவதற்கும் காய்கறி, பழம் சப்ளை செய்யும் பேரங்காடி எழுந்தது. பெட்போர்ட் வம்ச நாலாம் பிரபுவான பிரான்சிஷ் ரஷ்ஷல் ஏற்படுத்திய இந்த அங்காடி அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குத் தினசரி மும்முரமாக வியாபாரம் நடக்கும் இடமாக மாறியது. வருடம் ஒரு முறை கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் விடுமுறை. மற்றபடி முன்னூற்று அறுபத்து நாலு நாளும் விற்பனை என்று தொடர்ந்து முன்னூறு வருடம் சாதனை படைத்த மார்க்கெட் இது. 1877 – ல் காய்கறி லோடு ஏற்றி வந்த வண்டிகளில் இருந்து சரக்கு இறக்கிக் கடைகளுக்கு எடுத்துப் போக மட்டும் இங்கே கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பாரம் சுமக்கும் தொழிலாளிகள் இருந்தார்கள். பழைய கொத்தவால் சாவடியைவிட இது பத்து மடங்கு அதிகம் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

கோவண்ட் தோட்டக் காய்கறி, பழ அங்காடியை இடம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஒரு முப்பது வருடத்துக்கு முன் பூதாகரமாக உருவெடுத்தது. மார்க்கெட் நெரிசல் மட்டும் இல்லை இதற்குக் காரணம். இந்தப் பகுதியில் ஏகப்பட்ட நாடகக் கொட்டகைகள், பிரசித்தமான உணவு விடுதிகள், தினசரி லட்சக்கணக்கில் வருமானம் நிறைய, சகலவிதமான பொருட்களையும் விற்கும் கடைகள், போக்குவரத்துச் சிக்கல், அசுத்தமடையும் சூழல் என்று ஏகப்பட்ட மற்ற விஷயங்களும்தான்.

1974 – ல் கோவண்ட் தோட்ட அங்காடியை அங்கேயிருந்து மூன்று மைல் தொலைவில் இடம் மாற்றிய போது முன்னூறு வருடப் பரபரப்பு ஓய்ந்த மயான அமைதியில் கிடந்த அந்தப் பெரிய நிலப்பரப்பையும், காலியான கட்டடங்களையும் பார்க்க லண்டன் மக்களுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. நகருக்கு மத்தியில் நடுநாயகமாக இத்தனை அழகும் பாரம்பரியப் பெருமையும் கம்பீரமும் நிறைந்த இடத்தைச் சும்மா கிடக்க விடலாமா என்று எல்லாரும் ஒருமித்து அரசாங்கத்தை நோக்கிக் கோரிக்கை எழுப்பினார்கள். ஆக, எட்டே வருடத்தில் அந்த இடம் திரும்பவும் சுறுசுறுப்பும் பரபரப்பும் ஆனது. புதுப்பிக்கப்பட்ட அந்தக் கோவண்ட் தோட்டத்தில்தான் இப்போது நின்று கொண்டிருக்கிறேன்.

Posted in England, Era Murugan, Era Murukan, Guide, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kothavalsavadi, London Diary, Tour, Traveler, Travelogues, UK | Leave a Comment »

Veterinary Medicine Research – Hearts of Creatures

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

ஆராய்ச்சி: லப்டப்…லவ்டப்!

ஞாயிறு

“இதயங்களோடு “விளையாடும்’ காதலர்கள்’ போல் அல்ல… “இதயங்களோடு உறவாடும்’ பேராசிரியர்கள் சாலமன் விக்டர், ஆர்.ரவீன்! இதயங்களின் காதலர்கள்! இதய ஆராய்ச்சியே இவர்களின் இதயத்துடிப்பு!

மனித இதயம் முதற்கொண்டு மீன், மான், சிறுத்தை, புலி எனச் சகல இதயங்களின் ஆராய்ச்சி! இதற்காக இவர்கள் சேகரித்தது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகளின் இதயங்கள்.

இந்தச் சேகரிப்பை 93-ஆம் ஆண்டு இருவரும் தொடங்கினர். கடந்த ஆண்டு சாலமன் விக்டர் மறைந்துபோக, தற்போது ரவீன் தொடர்கிறார்.

சேகரித்த இதயங்கள் அனைத்தையும் பெரியார் அறிவியல் மையத்திடம் ஒப்படைத்து, அங்கு நிரந்தரக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடு: சாலமன் விக்டர் மனைவியும் எயிட்ஸ் மருத்துவத்தில் இந்தியாவிலேயே முதன்மை மருத்துவருமான சுனிதி சாலமன் விக்டர்.

“”இறந்துபோன விலங்குகள் பற்றிய செய்தி கிடைத்ததும், அந்த இடத்துக்கு ஓடிப் போய் இதயங்களை வெட்டி எடுத்துக்கிட்டு வருவார். சட்டையெல்லாம் ஒரே இரத்தமும் அழுக்குமாக இருக்கும். “உங்களுக்கு இந்த வேலை தேவையா?’என்று கோபமாகக் கேட்பேன். அதற்கு, “நான் செய்கிற வேலையோட அருமை உனக்கு இப்பத் தெரியாது. ஒரு நாளு தெரியும்’ என்று சொல்லிவிட்டு இதய ஆராய்ச்சியில் இறங்கிடுவாரு. உலகத்துல யாருமே செய்யாத காரியத்தைச் செய்துகிட்டு இருந்திருக்காருன்னு இப்போது புரியுது. சேகரித்த இதயங்களை எல்லாம் அமெரிக்காவுல ஒரு பல்கலைக்கழகத்துல விலைக்குக் கேட்டாங்க. கொடுக்கல. இந்தியாவில இருக்கிற மாணவர்கள் படிக்கணும்… குறிப்பா தமிழகத்துல இருக்கிற மாணவர்கள் படிச்சிப் பயன்பெறணும்னு பெரியார் அறிவியல் மையத்திலேயே கண்காட்சியாக வைத்துவிட்டோம். இப்போது ரவீன், அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்கிறார்” என்கிறார் வருத்தத்துடன் சுனிதி சாலமன் விக்டர்.

“”கிறிஸ்துவக் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக இருக்கிறேன். விலங்குகளுடைய இதயங்களைச் சேகரித்தல் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியது சாலமன் விக்டர் சார்தான்.

93-ம் வருடம். ஒரு செத்த பாம்பை எடுத்துக்கொண்டு என்னைப் பார்க்க காலேஜுக்கு வந்தார். பாம்பினுடைய இதயம் எப்படிச் செயல்படுகிறது. இரத்தம் எப்படி சர்குலேட் ஆகிறது என்று பார்க்க வேண்டும் என்றார். அன்றுதான் எங்கள் இருவருக்குமிடையே இந்த ஆராய்ச்சி தொடர்பான நட்பு ஏற்பட்டது.

மனித இதயங்களுக்கும் பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்குகளின் இதயங்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்பதே எங்கள் ஆராய்ச்சி.

மனித இதயங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை எல்லா நாடுகளிலும் செய்கிறார்கள். மற்ற விலங்கினங்களின் இதயம் தொடர்பான ஆராய்ச்சி செய்வோர் மிகக்குறைவு.

இந்த ஆய்வுக்காக பல்வேறு விலங்குகளின் இதயங்களைச் சேகரித்துள்ளோம். வண்டலூர் மிருகக்காட்சி சாலை அதிகாரிகளிடம் அனுமதிப் பெற்று உள்ளோம். ஏதாவது விலங்குகள் இறந்தால் அவர்கள் தகவல் கொடுப்பார்கள். நாங்கள் விரைந்து சென்று போஸ்ட்மார்ட்டம் செய்கிறபோது இதயத்தைப் பெற்றுக்கொள்வோம்.

ஒரு விலங்கு இறந்த 2 மணிநேரம் அல்லது 3 மணிநேரத்திற்குள் இதயத்தை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். நேரம் அதிகமாகிவிட்டால் அழுகிப் போய்விடும். கஷ்டப்பட்டு எடுத்தும் பாழ். இதுபோல பல எடுத்து வீணாகப் போயிருக்கின்றன. இப்போது முதலை, திமிங்கலம், யானை, காண்டாமிருகம், நாய், பூனை, சிறுத்தை, குதிரை, குரங்கு, மீன்கள், மான்கள் என நூறு வகைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதயங்களைச் சேகரித்துள்ளோம்.

இதயங்களை வெட்டி எடுத்ததும் ஒரு கண்ணாடிக் குடுவையில் ஃபார்மெலின்  சொலியூஷன் ஊற்றி மூடி வைத்துவிடுவோம். இப்படி வைத்துவிட்டால் நூறு ஆண்டுகள் ஆனால்கூட இதயம் கெடாமல் இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறையோ, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையோ சொலியூஷன் மாற்றி வைப்பது நல்லது.

எடுத்தவற்றிலேயே மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தது, சாதாரணமாகக் கிடைக்காத திமிங்கலத்தின் இதயம். கடலூர் மூர்த்திக்குப்பம் கடற்கரை பகுதியில் திமிங்கலம் இறந்துகிடப்பதாக டிவியில் செய்தி பார்த்தேன். உடனே அங்கு போனேன். திமிங்கலம் கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்திருந்தால் சிரமம் கொஞ்சம் குறைந்திருக்கும். தண்ணீரிலேயே கிடந்தது. தனியாக வேறு போயிருந்தேன். கரையில் எடுத்துப்போட்டுதான் இதயத்தை வெட்டி எடுக்க முடியும். ஊர் மக்களை அழைத்தேன். ஆரம்பத்தில் அவர்கள் ஒத்துழைக்க மறுத்தார்கள். இது ஆராய்ச்சிக்காக. உங்கள் பிள்ளைகள்கூட வருங்காலத்தில் படிக்கலாம் என்று சொன்னேன். ஒத்துக்கொண்டார்கள். பிறகு பெரிய வடக்கயிறு இரண்டு கொண்டு வந்தார்கள். திமிங்கலத்தை இழுத்துக் கட்டினோம். ஒரு வடத்தை 250 பேரும் இன்னொரு வடத்தை 250 பேருமாய் நின்று மூச்சு முட்ட இழுத்தோம். வடக்கயிறு முடிச்சுதான் அறுந்துபோனது. திமிங்கலம் கரையேறியபாடில்லை. தண்ணீரில் கிடப்பதால்தான் இழுக்கமுடியவில்லை என்றனர். கடற்கரையில் அலைகள் 6 மணிநேரத்துக்கொருமுறை நன்றாக பின்வாங்கிப் போவது கடலின் இயல்பு. இதற்காகக் காத்திருந்தோம். எதிர்பார்த்தபடியே அலைகள் பின்வாங்கின. திமிங்கலத்தை “ஏக் தம்’ பிடித்து கரையில் இழுத்துப் போட்டோம். விறகு வெட்டுவதுபோல கோடரி கொண்டு வெட்டினோம். இதயத்தை எடுத்து டிரம்மில் போட்டுக் கொண்டு வந்தேன். இறந்த மூன்று மணிநேரத்தில் எடுக்காவிட்டால் இதயம் அழுகிவிடும். இது தண்ணீரிலேயே கிடந்ததால் அழுகவில்லை. இதை என் அதிர்ஷ்டம் என்றுகூடச் சொல்லலாம்.

ஆராய்ச்சியில் நாங்கள் கண்ட ஒரு விசித்திரம் இது. பொதுவாக பாலூட்டிகளுக்கு சுத்தமான இரத்தம் அசுத்தமான இரத்தம் என்று உண்டு. மனிதர்களுக்கு நான்கு இதய அறைகள். அசுத்தமான இரத்தம் ஓர் இதயறையில் இருந்து நுரையீரலுக்குச் சென்று சுத்திகரிக்கப்பட்டு வேறோர் அறையில் சுத்தமான இரத்தமாகச் செல்லும். அசுத்த இரத்தமும் சுத்த இரத்தமும் ஒரே அறையில் சந்திக்காது.

ஆனால் மீன்களுக்கு விசித்திரமாய் இரண்டு இரத்தமும் ஒரே அறையில் சந்திக்கிறது. மீன்களுக்கு இதயத்தில் இரண்டு அறைகள். இதில் இரண்டிலும் அசுத்த இரத்தமும் ஓடுகிறது சுத்த இரத்தமும் ஓடுகிறது. மீன்களின் இரத்தத்தைச் செதில்கள்தான் சுத்திகரித்து உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகின்றன.

மீன்களைப் போலத்தான் தவளை, பாம்பு, ஆமை, முதலை போன்றவையும். ஆனால் கொஞ்சம் மாறுதல் உடையவை. முதலைக்கு நான்கு அறைகள். மற்றவைக்கு மூன்று அறைகள்.

இதைப் போல பல விசித்திரங்கள் எங்களுடைய ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கின்றன. தொடர்ந்து செய்தால் இன்னும் பல உண்மைகள் புரியவரும். எல்லா விலங்குகளையும் விட சிறுத்தைகள் வேகமாக ஓடுகின்றன. நீர் வாழ்வன நிலத்தில் வாழ்வன என இருக்கின்றன. குரங்குகள் பெரும்பாலும் மரத்திலேயே இருக்கின்றன. இப்படி அவைகளுடைய இயல்பு அமைவதற்கும் இதயத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் ஆராய்கிறோம்.

மனிதர்களைப் போல எல்லாவகையான பாலூட்டிகளுக்கும் இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காட்டில் வாழ்கிற பாலூட்டிகளைவிட வீட்டில் வாழ்கிற பாலூட்டிகளுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இறந்தவர்களை நினைத்து அழுகிறபோது நாம் மாரடித்து அழுவதுபோலெல்லாம் விலங்குகள் அழுவாது. முகப்பாவனைகள் மூலமே அவை தங்கள் அன்பை, வருத்தத்தை வெளிப்படுத்திக்கொள்ளும்” என்கிறார் ரவீன்.

“”இதயமே இல்லாத உயிரினங்கள் இருக்கிறதா?” என்றால் “”வண்ணத்துப்பூச்சி போன்ற பூச்சினங்களுக்கு இதயங்கள் இல்லை” என்கிறார் ரவீன். “ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே…’ என டூயட் பாடும் காதலர்களே கவனியுங்கள்!

Posted in Animals, Dr Suniti Solomon, heart surgery, Hearts, hearts of creatures, Madras Medical College, Mammals, Medicine, Microbiology, MMC, Museum, Pathology department, Raveen, Solomon Victor, Sunithy Solomon Victor, surgery, Vandaloor, Vandalur, veterinary | Leave a Comment »

Thirumagan – Malavika, SJ Surya

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

பாடலோடு வாழ்ந்து….

“திருமகன்’ – மாளவிகா, எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படங்களிலும், நடித்த படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடும். ரத்னகுமார் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கும் “திருமகன்’ படத்தைப் பற்றிக் கேட்டபோது…

“” நான் இயக்கிய “குஷி’ “வாலி’ படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவா என்னுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். நான் நடித்திருக்கிறேன் என்பதற்காகச் சொல்லவில்லை… தேவா இசையமைத்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட். இதுவரை அவர் இசையமைத்த படங்களில் இந்தப் படத்தின் ரீரெக்கார்டிங்குக்காகத்தான் அதிக நாள்கள் செலவிட்டுள்ளார்.

கிராமிய மணம் கமழும் இந்தக் கதைக்கு வைரமுத்துவின் பாடல் வரிகளும், தேவாவின் இசையும் பெரிய பலம். குறிப்பாக

  • “பொறந்தது’,
  • “இதுக்குத்தானா’,
  • “ஷாக்கடிக்குது’,
  • “திருமகனே’ போன்ற பாடல்களைக் கேட்டு, பார்த்து மட்டும் மகிழாமல் பாடியும், பாடலோடு வாழ்ந்தும் மகிழ்வீர்கள். நான் இதுவரை பணியாற்றிய படங்களில் பாடல்கள், வெஸ்டர்ன் கலந்து அல்ட்ரா மாடர்ன் டைப்பில் இருக்கும்; கிராமியப் பின்னணியிலான “திருமகன்’ பாடல்கள் அல்ட்ரா டைப் ஆசாமிகளையும் அசத்தும்” என்றார் எஸ்.ஜே.சூர்யா.

Posted in Deva, Kushi, Malaviga, Malavika, Rathnakumar, SJ Soorya, SJ Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Thirumagan, Thirumakan, Vaali, Vairamuthu, Vali | Leave a Comment »

How did TN fare in 33rd National Games – Medal Tally & Updates

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

தேசிய விளையாட்டு போட்டி: 62 கிலோ பளுதூக்குதலில் தமிழக வீரருக்கு தங்கம்

குவாஹாட்டி, பிப். 15: குவாஹாட்டியில் நடைபெற்றுவரும் 33-வது தேசிய விளையாட்டுப் போட்டியில், தமிழக பளுதூக்குதல் வீரர் தன்ராஜ் சுடலைமுத்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

பளுதூக்குதல் போட்டி புதன்கிழமை தொடங்கியது.

62 கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 257 கிலோ தூக்கி முதலிடத்தை பிடித்தார் சுடலைமுத்து.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ருஷ்தாம் சாரங் 252 கிலோ தூக்கி வெள்ளியையும், மத்தியப்பிரதேச மாநில வீரர் பிஜூ வெண்கலத்தையும் வென்றனர்.

வாலிபாலில் வெள்ளி: மகளிருக்கான வாலிபால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தமிழக அணியும், கேரள அணியும் மோதின. இதில் தமிழக அணியை 25-20, 25-16, 25-14 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது கேரளம்.

மேற்கு வங்கம் வெண்கலப் பதக்கத்தை பெற்றது.

ஆடவர் அணி தோல்வி: ஆடவர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், கேரள அணி 25-22, 25-20, 25-20 என்ற செட் கணக்கில் தமிழகத்தை தோற்கடித்தது.

மணிப்பூர் முன்னிலை: பதக்கப்பட்டியலில் 43 தங்கம், 16 வெள்ளி உள்பட 77 பதக்கங்களுடன் முன்னிலை வகிக்கிறது மணிப்பூர்.

சர்வீசஸ் அணி 19 தங்கம், 22 வெள்ளி, 22 வெண்கலம் உள்ளிட்ட 63 பதக்கங்களுடன் 2-ம் இடத்தில் உள்ளது.

தமிழகம் 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் உள்ளிட்ட 12-ம் இடத்தில் உள்ளது. கேரளம் 9 தங்கம் உள்பட 28 பதக்கங்களுடன் 10-ம் இடத்தில் உள்ளது.

State Gold Silver Bronze Total

  1. Manipur 43 17 21 81
  2. Services 34 26 26 86
  3. Assam 19 28 28 75
  4. Delhi 16 19 19 54
  5. Maharashtra 16 18 19 53
  6. Uttar Pradesh 15 16 29 60
  7. Haryana 15 15 16 46
  8. Karnataka 15 14 19 48
  9. Punjab 13 26 23 62
  10. Kerala 13 9 15 37
  11. Andhra Pradesh 11 10 10 31
  12. Tamil Nadu 6 8 10 24
  13. Madhya Pradesh 4 14 27 45
  14. West Bengal 4 6 7 17
  15. Uttarakhand 4 2 3 9
  16. Jammu & Kashmir 3 2 7 12
  17. Himachal Pradesh 3 1 1 5
  18. Orissa 3 1 1 5
  19. Gujarat 2 4 8 14
  20. Chandigarh 2 2 6 10
  21. Jharkhand 2 2 0 4
  22. Chhattisgarh 2 1 0 3
  23. Sikkim 1 1 2 4
  24. Nagaland 1 0 5 6
  25. Andaman & Nicobar 0 1 1 2
  26. Mizoram 0 0 3 3
  27. Rajasthan 0 0 2 2
  28. Arunachal Pradesh 0 0 2 2
  29. Goa 0 0 2 2

Overall 247 243 312 802

தேசிய விளையாட்டு: அருண்ஜீத் 3 தங்கம் வென்று சாதனை!

குவாஹாட்டி, பிப். 16: அசாமில் நடைபெற்றுவரும் 33-வது தேசிய விளையாட்டுப் போட்டியில், கடைசி நாளான வியாழக்கிழமை 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார் கேரளத்தை சேர்ந்த தட கள வீரர் எஸ். அருண்ஜீத்.

பதக்கங்களை பெறுவதில் கேரளத்துக்கும் சர்வீசஸ் (ராணுவ படைப்பிரிவு) அணிக்கும் இடையில் பலத்த போட்டி இருந்தாலும் கேரளம் முந்தியது.

100 மீட்டர் ஓட்டப் பந்தயம், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் அருண்ஜீத் தங்கப் பதக்கங்களை வென்றார். இவர், கேரளத்தின் பதக்க வேட்டைக்கு பெரிதும் உதவினார்.

கேரளம் மொத்தம் 11 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை தட களப் பிரிவில் கைப்பற்றியது. சர்வீசஸ் அணி 6 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் பெற்றது.

பிரீஜா ஸ்ரீதரன் சாதனை: பிரீஜா ஸ்ரீதரனும் 3 தங்கப் பதக்கங்களை வென்று கேரளத்தின் பதக்கப் பட்டியலை வலுப்பெற வைத்தார்.

1,500 மீட்டர், 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஆகிய இடைநிலைத் தொலைவு ஓட்டப் பந்தயங்களில் பிரீஜா ஸ்ரீதரன் முதலிடத்தை வென்றார். இப் பிரிவுகளில் அவர் ஓடியபோது, எந்த போட்டியாளரும் அவர் அருகில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினார்.

சர்வீசஸ் பதக்கம் பறிப்பு: சர்வீசஸ் அணிக்கு 20 கிலோ மீட்டர் நடைப் போட்டியில் வழங்கிய தங்கப் பதக்கத்தை போட்டி அமைப்புக் குழு திரும்பப் பெற்றது.

20 கிலோ மீட்டர் நடைப் போட்டியில் சர்வீசஸ் வீரர் சோமேந்திர சிங் முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். இரண்டாவது இடத்தில் வந்த அசாம் வீரர் அவரது நடை குறித்து ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து, போட்டியின்போது எடுக்கப்பட்ட விடியோ காட்சிகள் போட்டுப் பார்க்கப்பட்டன. அதில் சோமேந்திர சிங் ஒரு தப்படி குறைவாக நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் கொடுத்த தங்கப் பதக்கத்தை திரும்பப் பெற்றனர்.

பிறகு அசாம் வீரருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தில் சர்வீசஸ் அணியின் பி. ஜெலனும் 3-வது இடத்தில் அசாமின் குர்மீத் சிங்கும் வந்தனர்.

Posted in 33, Arun Jeet, Asom, Assam, athletics, Dhanraj Sudalaimuthu, guwahati, Kerala, Manipur, Medal Tally, National Games, Services, Sports, Tamil Nadu, TN, Track and field, Volleyball, Weightlifting, XXXIII | Leave a Comment »

Did Simbu went to Hyderabad to meet Nayanthara for Valentines Day?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

தேடி வந்த சிம்பு: தவிர்த்த நயன்தாரா

சென்னை, பிப். 15: ஹைதராபாத்திற்கு தன்னை பார்க்க வந்த சிம்புவை பார்க்காமல் இருக்க படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டு கேரளா சென்றார் நயன்தாரா.

நடிகர் சிலம்பரசனுக்கும் நயன்தாராவுக்கும் வல்லவன் படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காதல் படம் வெளியாகி நூறு நாளை தொடுவதற்குள் முறிந்து விட்டது. தற்போது தமிழ் படங்களில் நடிக்காமல் தெலுங்கில் கவனம் செலுத்தும் நயன்தாரா ‘துளசி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிம்புவுடன் நெருக்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வந்தது. இது நயன்தாராவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என வதந்தி பரவியது. ஆனால் வதந்தி வந்த போது அவர் படப்பிடிப்பில் இருந்தார்.

இந்நிலையில் காதலர் தினத்திற்கு முதல்நாள் சிம்பு நயன்தாராவை தேடி ஹைதராபாத் சென்றார். சிம்பு வந்திருக்கும் செய்தி அறிந்து பார்க்க மறுக்க, நயன்தாரா தங்கியிருக்கும் ஓட்டலுக்கே சென்று காத்திருந்தார் சிம்பு. ஆனால் நயன்தாராவோ படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு கேரளா பறந்து விட்டார்.

சிம்புவை தவிர்ப்பதற்கே நயன்தாரா கேரளா சென்று விட்டதாக தெலுங்கு திரையுலகத்தில் பேசப்படுகிறது. ஆனால் நயன்தாரா இது பற்றி கூறும் போது ”தமிழ் ரசிகர்களிடம் எனக்கு இருக்கும் மதிப்பை கெடுக்க ஒரு சிலர் சதி செய்கிறார்கள். என்னோட குடும்பத்தாருடன் சந்தோஷமாக இருக்கவே கேரளா வந்துள்ளேன். என்னைப் பற்றி வரும் வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.” என்றார்.

சிம்புவோ ”நயன்தாராவை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அமெரிக்காவிலிருந்து வந்த உடன் போயிருப்பேன். இப்போது ஹைதராபாத் சென்று பார்க்க வேன்டிய அவசியம் எனக்கு இல்லை” என்றார்.

Posted in Heroine, Intimate, Kisu Kisu, Kollywood, Love, Manmadhan, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Pictures, Rejection, Rumour, Silambarasan, Simbhu, Simbu, Suicide Attempt, Tamil Actors, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Tamil Stars, Telugu, Tollywood, Tualsi, Valentines Day, Vallavan, Vambu | 2 Comments »

World Cup Cricket 2007 – England, New Zealand & Pakistan teams

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளும் தேர்வு : பாக். அணியில் அக்தர், ஆசிப், உமர்

கராச்சி, பிப். 15: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சோயிப் அக்தர், முகமது ஆஷிப், உமர் குல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடிவந்த டேனிஷ் கனேரியாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசியதால் வாய்ப்பை பெற்றார்.

வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, சபீர் அகமது, ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

முழங்கால் வலி, தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த சோயிப் அக்தர், முகமது ஆஷிப் ஆகியோர் முழுமையாக குணமாகாத நிலையிலும் 15 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இம்மாத இறுதியில் உடற்தகுதிச் சோதனை நடைபெற உள்ளது. அதில் தேறாவிட்டால் அவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்படும் என்று பாகிஸ்தான் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவர் முகமது அல்தார் தெரிவித்தார்.

தனது, முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கிறது பாகிஸ்தான்.

வீரர்கள் விவரம்:

  1. இன்சமாம் உல் ஹக் (கேப்டன்),
  2. யூனிஸ் கான் (துணைக் கேப்டன்),
  3. முகமது ஹபீஸ்,
  4. இம்ரான் நசீர்,
  5. முகமது யூசுப்,
  6. சோயிப் மாலிக்,
  7. அப்துல் ரசாக்,
  8. ஷாஹித் அஃப்ரிதி,
  9. கம்ரான் அக்மல்,
  10. சோயிப் அக்தர்,
  11. முகமது ஆஷிப்,
  12. உமர் குல்,
  13. டேனிஷ் கனேரியா,
  14. ரானா நவேத் உல் ஹசன்,
  15. ராவ் இஃப்திகார் அஞ்சும்.

நியூஸிலாந்து அணி: நியூஸிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டேரல் டஃபி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே சமயம் ஆல்ரவுண்டர் கிறிஸ் மார்ட்டின், ஆண்ட்ரூ ஆடம்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

உலகக் கோப்பை போட்டியில் “சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது நியூஸிலாந்து. இங்கிலாந்து, கனடா, கென்யா ஆகிய அணிகள் இப் பிரிவில் உள்ளன.

வீரர்கள் விவரம்:

  1. ஸ்டீபன் பிளெம்மிங் (கேப்டன்),
  2. வின்சென்ட்,
  3. பீட்டர் புளுட்டன்,
  4. ரோஸ் டெய்லர்,
  5. ஸ்காட் ஸ்டைரிஸ்,
  6. ஜேக்கப் ஓரம்,
  7. மெக்மிலன்,
  8. பிரண்டன் மெக்மிலன்,
  9. டேனியல் வெட்டோரி,
  10. ஜேம்ஸ் பிராங்க்ளின்,
  11. ஜித்தன் படேல்,
  12. ஷேன் பாண்ட்,
  13. மார்க் கில்லெஸ்பி,
  14. மைக்கேல் மாஷன்,
  15. டேரல் டஃபி.

இங்கிலாந்து அணி: உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ரவி போப்ரா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் மால் லோய்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்றில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்து, கனடா, கென்யா ஆகிய அணிகளுடன் விளையாட உள்ளது.

வீரர்கள் விவரம்:

  1. மைக்கேல் வாகன் (கேப்டன்),
  2. ஜேம்ஸ் ஆன்டர்சன்,
  3. இயான் பெல்,
  4. ரவி போப்ரா,
  5. பால் காலிங்வுட்,
  6. ஜேமி டேரம்பில்,
  7. ஆண்ட்ரூ பிளிண்டாஃப்,
  8. எட் ஜோய்ஸ்,
  9. ஜான் லீவிஸ்,
  10. சஜீத் முகமது,
  11. பால் நிக்சன்,
  12. மான்டி பனேசர்,
  13. கெவின் பீட்டர்சன்,
  14. லியாம் பிளங்கெட்,
  15. ஆன்ட்ரூ ஸ்டிராஸ்.

Posted in 2007, Batsmen, Bowlers, Cricket, England, New Zealand, Pakistan, Players, teams, WC, WC2007, West Indies, wicketkeeper, WK, World Cup | Leave a Comment »

Economic impact of Industrialization of Agricultural Farmlands

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

தொடரும் நிலப் பறிப்பால் துன்புறும் மக்கள்

மா.பா. குருசாமி

தொழில் வளர்ச்சி என்ற பெயரால் நாட்டின் பல்வேறு இடங்களில் வேளாண் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமன்றி வேளாண்மையைச் சார்ந்து வாழும் மக்களும் பெருத்த இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பாதிக்கப்படும் மக்கள் வலுவற்றவர்களாக இருந்து வருவதால் அவர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதில்லை; ஆனால் தற்போது நிலைமை சற்று மாறிவருகிறது. நிலத்தை இழந்த விவசாயிகள் வீதிக்கு வந்து பெரும் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

விவசாயிகளை திடீரென நிலமற்ற நாடோடிகளாக விரட்டியடிப்பது பெரிய சிக்கலின் தொடக்க வெளிப்பாடாகும். இதைத் தடுக்காவிட்டால் கிராம மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

கிராம மக்களின் வாழ்க்கை ஆதாரத்தையே இழக்கச் செய்யும் ஒரு “வளர்ச்சி’ முறையை ஆதரிக்கின்றவர்கள் இந்தச் சிக்கலை மேலோட்டமாகப் பார்க்கின்றனர். நிலத்தை மதிப்புள்ள ஒரு சொத்தாக மட்டும் கருதி, அதற்கு இழப்பீடு கொடுத்து விட்டால் போதுமென்று கருதுகின்றனர்.

இந்தியா தொழில்மயமான நாடாக மாற, சில தியாகங்கள் செய்ய வேண்டுமென்றும் அப்படிப்பட்ட தியாகங்களில் ஒன்றுதான் சில கடைநிலை விவசாயிகள் நிலத்தை இழப்பதும் என்று வாதிடுகின்றனர்.

சின்னஞ்சிறு விவசாயிகளுக்கு நிலம் வெறும் சொத்து மட்டுமல்ல; அது அவர்களுக்கு அமுதசுரபி. ஆண்டாண்டு காலமாக அந்த பூமித்தாயை நம்பித்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு குடும்பத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம், இரண்டு காளை மாடுகள், நான்கைந்து பசு – எருமை மாடுகள் இருந்தால் உழைப்பை நம்பி, வளமாகவும் நலமாகவும் வாழ்ந்த காலம் இருந்தது. கிராம வாழ்வின் ஆதாரமாக வேளாண்மையும், வேளாண்சார் தொழில்களும் இருந்தவரை வாழ்க்கை ஒரு சீராக இருந்தது.

இந்நிலையில், நகரங்களின் விரிவாக்கமும், தொழிற்சாலைகளின் பெருக்கமும் நகரங்களை ஒட்டிய வேளாண் நிலங்களை விழுங்கத் தொடங்கின.

வீட்டடி நிலத்திற்காக இருபோகம், முப்போகம் விளைந்த நிலங்கள் வாங்கப்பட்டன. நிலத்தை வாங்கி விற்பவர்கள் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலத்தை வாங்கி, வளைத்துப் போட்டு, வீட்டுமனைகளாக்கி, அவற்றை விற்று, கோடி கோடியாகப் பணம் குவிப்பதும், அடுத்தடுத்து இருக்கும் நிலங்களை, அக்கம் பக்கம் தெரியாமல் வாங்கிச் சேர்ப்பதும் தொடர்ந்து நடக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பெருஞ் செல்வந்தர்கள் தங்களது கருப்புப் பணத்தை வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக நிலத்தில் முதலீடு செய்கின்றனர். நிலத்தின் மதிப்பு நாளுக்குநாள் கூடுவது இதனை ஊக்குவிக்கிறது. தங்கத்துக்கு அடுத்தபடியாக நிலமுதலீடுதான் கருப்புப் பணத்தைக் கவர்ந்து ஈர்த்தது.

குடியிருப்புக்கு அடுத்து வாணிப, தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் வேளாண் நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்கின்றன. நிலத்தை வாங்க, விற்க உரிமை இருப்பதால் இதில் யாரும் தலையிட முயல்வதுமில்லை; முடிவதுமில்லை.

மேலும் நமது நாட்டில் நிலத்தை இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமென்ற கொள்கை இதுவரை உருவாகவில்லை. ஆதலால் நிலத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துகின்றனர்.

கணிசமான கிராம மக்கள் சொந்த நிலத்தை, வாழ்வை இழந்து வெளியேறுவதை “வளர்ச்சிப் போக்கு’ என்று அரசியல்வாதிகள் வாதிடுகின்றனர்.

நமது நாட்டில் சராசரி நில உடைமையளவு 1.41 ஹெக்டேர். இது ஒரு வேளாண் குடும்பத்துக்கு வாழ்வளிக்காது. இப்பொழுது 74 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர்.

வேளாண்மையை நம்பி இருக்கின்றவர்களில் 20 சதவீத மக்களை வேறு துறைகளுக்கு மாற்ற வேண்டுமென்று வற்புறுத்துகின்றனர். எப்படி, எந்தத் துறைக்கு மாற்றுவதென்று யாரும் திட்டவட்டமாகக் கூறவில்லை; கூற முடிவதில்லை.

இந்நிலையில் பொருளாதாரச் சிறப்பு மண்டலங்களை அமைத்து கிராமங்களைத் தொழில் மயமாக்க அரசு முயன்று வருகிறது. பொருளாதாரச் சிறப்பு மண்டலங்களை அமைக்கும் பொறுப்பு நமது உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில்தான் மேற்கு வங்கத்தில் சிங்குரில் டாடா கார் தொழிற்சாலைக்கும், மிதுனபுரி மாவட்டம் நந்தி கிராமத்தில் இந்தோனேசியா நிறுவனத்துக்கும் நிலத்தைக் கையகப்படுத்துவதில் மேற்குவங்க அரசு முனைப்புக்காட்டி வருகிறது.

இப்பொழுது அனுமதி பெற்றிருக்கிற 237 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குத் தரப் போகிற நிலம் 37,400 ஹெக்டேர். இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டங்கள் 340. மேலும் 300 திட்டங்கள் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றன. இவற்றில் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்யப்பட உள்ளது என்றும் எராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென்றும் உறுதி கூறுகின்றனர்.

நிலத்தை இழக்கின்றவர்களுக்கெல்லாம் இந்த நிறுவனங்களில் வேலை கிடைக்கப் போவதில்லை. இவர்களில் சிலருக்கு தொடக்க காலத்தில் உடல் உழைப்புச் செய்யும் பணிகள் கிடைக்கலாம். ஆனால் இவற்றில் தொடர்ந்து வேலை செய்யக்கூடியவர்கள் திறன்மிக்க பயிற்சி பெற்ற தொழிலாளர்களாகத்தான் இருப்பார்கள்.

நமது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 63 சதவீதம் நிலத்தில்தான் வேளாண்மை செய்கிறோம். இன்னும் 37 சதவீத நிலம் மேய்ச்சல் நிலமாக, தரிசு நிலமாக, வேளாண்மை செய்யத் தகுதியற்ற நிலமாக இருக்கிறது. தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சாகுபடி செய்யும் நிலத்தின் அளவைக் கூட்டி, உணவு உற்பத்தியைப் பெருக்க முயல்கிறோம்.

இந்நிலையில் ஏராளமாக இருக்கும் சாகுபடி செய்ய முடியாத இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவலாம். ஆனால் பெரிய தொழில் நிறுவனங்கள் அகக் கட்டுமானங்கள் உள்ள நகரங்களை அடுத்த கிராமப்புறங்களை விரும்புமே தவிர, தூரத்திலுள்ள இடங்களை நாடாது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் மத்திய, மாநில அரசுக்கு, “”பொது நோக்கிற்காகவும், நிறுவனங்களுக்காகவும், இழப்பீடு அளித்து கையகப்படுத்தும் முழு உரிமையை அளிக்கிறது”. இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் இப்பொழுது மாநில அரசுகள் நிலத்தின் விலையை நிர்ணயித்து வேளாண் நிலத்தைக் கைப்பற்றுகின்றன.

இந்தச் சட்டம் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய நிறுவனங்களுக்கு மொத்தமாக நிலத்தைத் தாரை வார்க்க உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இப்பொழுதும் நமது விவசாயிகளை மொட்டையடிக்க இந்தச் சட்டம் பயன்படுவது வேடிக்கை.

இப்படிக் கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை (விலையை) மாவட்ட ஆட்சியாளர் நிர்ணயம் செய்கிறார். அது நடைமுறை பத்திரப்பதிவு விலையாக இருக்கும். அந்த நிலம் தொழில் நிறுவனத்திற்குக் கை மாறியபின் எத்தனை மடங்கு உயரும் என்பதைக் கூற முடியாது.

இழப்பீடாக பல ஆயிரம் ரூபாய் பெறுகிற விவசாயியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? அவன் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கிப்போட்ட செடியாக இருப்பான். உடனே வேறு இடத்தில் நடப்பட்டால் செடி தழைக்கும். இல்லையேல் காய்ந்து கருகிப் போகும். கையிலுள்ள பணம் செலவானபின் விவசாயி வெறும்கையுடன் வேலை தேடி அலைய வேண்டும். லஞ்ச ஊழல் நிர்வாகத்தில் நிர்ணயிக்கப் பெற்ற இழப்பீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்குமென்ற உறுதிப்பாடும் இல்லை.

2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 6,38,365 கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் 5,93,643 கிராமங்களில்தான் மக்கள் வாழ்கின்றனர். மேலும் இரண்டு லட்சம் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களில் குடியேறுவதாக வைத்துக் கொள்வோம். நகரங்கள் எல்லாம் நரகங்களாகும் நிலை தானே ஏற்படும்.

நிலத்தை – வேளாண்மையை – நம்பியிருக்கின்ற மக்களுக்கு வாழ மாற்று ஏற்பாடு செய்யாமல் நிலத்தை இழந்து வெளியேறச் செய்வது குளவிக்கூட்டில் கல்லெறிந்து கூட்டைக் கலைப்பதைப் போன்ற விளைவை ஏற்படுத்தும்.

சரியான பொருளாதார வளர்ச்சியை முறையாக மேற்கொண்டு எல்லா மக்களையும் வாழ வைப்பதுதான் நல்ல, ஏற்றுக்கொள்ளத்தக்க வளர்ச்சியாக இருக்கும்.

Posted in Agriculture, Analysis, Asset, City, Commerce, Dinamani, Economy, encroachment, Farmers, Farmlands, Finance, Globalization, Growth, Industrialization, Industry, Land, Op-Ed, Opinion, peasants, Property, Rural, Urbanization, Village | 1 Comment »

Small business needs to be protected – Tamil Nadu Traders Association

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

சில்லறை வணிகத்தை காப்பாற்ற தமிழக அளவில் போராட்டம்: வணிகர் பேரவை மாநாட்டில் தீர்மானம்

கன்னியாகுமரி, பிப். 15: சில்லறை வணிகத்தைக் காப்பாற்ற அனைத்துத் தரப்பு மக்களையும் இணைத்து, தமிழக அளவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்போவதாக கன்னியாகுமரியில் புதன்கிழமை நடைபெற்ற வணிகர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கன்னியாகுமரியில் இந்த மாநாடு நடைபெற்றது.

மாவட்ட வணிகர்கள் பேரவைத் தலைவர் கே.ஏ. குமாரவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி. சுகந்தராஜன், மாநிலத் துணைத் தலைவர் எம்.ஆர். சுப்பிரமணியம் இதில் பங்கேற்றனர்.

பின்னர் நடைபெற்ற நெல்லை மண்டல சிறப்பு மாநாட்டுக்கு மாநில வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் தலைமை வகித்தார்.

மாநிலப் பொதுச் செயலர் க. மோகன், மாநிலப் பொருளாளர் த. அரிகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட வணிகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பா. தம்பித்தங்கம் உள்ளிட்டோர் பேசினர்.

வெள்ளையன் பேசுகையில், வணிகர்கள் அரசியல் வேறுபாடுகளைக் கைவிட்டு ஒற்றுமையுடன் போராட வேண்டும். தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வணிகர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. நமது தொழிலைக் காப்பாற்ற நாம் எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

  • சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதைக் கைவிட வேண்டும்.
  • வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு ஏகபோக சக்திகள் சில்லறை வணிகத்தில் நுழைவதைத் தடை செய்ய வேண்டும்.
  • தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரியை அரசு அமல்படுத்திய பிறகு விலைவாசி உயர்ந்துள்ளது. எனவே, இதன்மூலம் ஏற்பட்டுள்ள தேவையற்ற விளைவுகளைப் புரிந்துகொண்டு மதிப்பு கூட்டு வரியைத் திரும்பப் பெற வேண்டும்.
  • கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்காக வரிகள் இல்லாத சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அரசு அமைக்கிறது.

இதனால், விளை நிலங்கள் விற்பனை நிலங்களாக மாறி வருகின்றன. எனவே, இதை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

  • ஆன்லைன் வர்த்தக சூதாட்டம் இயல்பான வணிகத்தை சீர்குலைத்து வருகிறது. இதனால், பல்வேறு பொருள்கள் நிமிஷத்திற்கு நிமிஷம் விலை மாறுதல் அடைகிறது.

இதைப் பயன்படுத்தி சில நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த அரசு முன்வர வேண்டும்.

  • தற்போது சேவை வரி மூலமாக மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானமாக வசூலித்து வருகிறது. இதனால், வணிகர்கள், சுய தொழில் புரிவோர், பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரியையும் அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Posted in Biz, Budget, Business, Commerce, Economy, Exchanges, Exports, Farmlands, FDI, Finance, Globalization, Government, Impact, investments, markets, Online Trading, service tax, SEZ, Small Business, Speculation, Tamil Nadu, Tax, TN, Traders | Leave a Comment »

Is LTTE planning for a second suicide attack in India? – Dinamani

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

இந்தியாவில் மற்றொரு தற்கொலை தாக்குதல் நடத்த புலிகள் திட்டமா?

சென்னை, பிப். 15:கோடியக்கரை கடல் பகுதியில் 5 பேருடன் பிடிபட்ட இலங்கைப் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் விடுதலைப் புலிகள் மற்றொரு தாக்குதல் திட்டத்தை இந்தியாவில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளனரா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அந்தப் படகில் இருந்த தற்கொலைப் படை பெல்ட் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய ஐஜி ராஜேந்தர் சிங் தெரிவித்தார்.

இந்த பெல்ட் எடை மற்றும் அது தயாரிக்கப்பட்ட விதம், ஒருவரை மட்டுமே அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது போலத் தெரியவில்லை. மிகப் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தும் நோக்கில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடல் எல்லையில் இதுவரை பிடிபட்ட ஆயுதக் கடத்தலில் இது மிகப் பெரிய கடத்தலாகும். பிடிபட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் பிடிபட்டவர்கள் பற்றிய முழுவிவரமும் தெரிய வரும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

பிடிபட்ட படகிற்கு எவ்வித பதிவுச் சான்றிதழ் விவரமும் இல்லை. இந்தப் படகு தமிழகத்தில் பதிவு செய்யப்படவில்லை. பொதுவாக படகுகள் அனைத்தும் மண்டபம் அல்லது தூத்துக்குடி பகுதியில்தான் பதிவு செய்யப்படும்.

படகில் உள்ள பதிவு எண், தமிழக பதிவு எண்ணுடன் ஒத்துப் போவதாக அமையவில்லை என்றும் ராஜேந்தர் சிங் தெரிவித்தார்.


 பிடிப்பட்ட படகுடன் இந்திய கடற்படையினர்
பிடிப்பட்ட படகுடன் இந்திய கடற்படையினர்

தமிழகத்தின் கோடியக்கரை கடற்பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட படகு விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது – தமிழக காவல்துறைத்தலைவர்

கடந்த செவ்வாய்க்கிழமை தமிழகத்தை ஒட்டிய கோடியக்கரை கடற்பிரதேசத்தில் இந்திய கடலோர காவல் படையால் கைப்பற்றப்பட்ட ஆயுதம் தாங்கிய படகு இலங்கையைச் சேர்ந்தது என்றும், அது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவின் படகு என்றும், தமிழக காவல்துறைத்தலைவர் டி.முகர்ஜி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தப் படகிலிருந்த ஐந்துபேரில் அருமைநாயகம் புருஷோத்தமன், சகாயம், ஆறுமுகம், சிவபத்மனாபன் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இராமச்சந்திரன் என்பவர் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார்.

இவர்களில் அருமைநாயகம் புருஷோத்தமன் என்பவர் கடற்புலி பிரிவைச்சேர்ந்தவர் என்றும், சிவ பத்மனாபன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றுபவர் என்றும் தெரிய வந்திருப்பதாகவும் தெரிவித்த முகர்ஜி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஏற்கனவே இலங்கைக்கு ஆயுதங்களை கடத்தியதான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் என்றும் கூறினார்.

இந்தப் படகு இரணை தீவிலிருந்து யாழ்ப்பாணத்தின் வடக்கு பகுதியை நோக்கி செல்கின்ற வழியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரை தவிர்த்து வரும்போது இந்தியக் கடலோர காவல் படையினரிடம் பிடிபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தப் படகோ, படகில் இருந்த நபர்களோ, பொருட்களோ, ஆயுதங்களோ தமிழ்நாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வரவில்லை என்று தமது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் முகர்ஜி கூறினார்.


தேவை எச்சரிக்கைதமிழகக் கடலோரப் பகுதிகளில் 2 நாள்களில் அடுத்தடுத்து படகுகளில் ஆயுதங்களும் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது, பாதுகாப்புக்கு கடும் சவால் ஏற்படுத்துவதாக உள்ளது.ஒரு படகு கோடியக்கரைப் பகுதியில் சிக்கியுள்ளது. அது மீன்பிடி படகுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் படையினர் சந்தேகத்தின்பேரில் அப் படகை மறித்து சோதனையிட்டதில் அதில் மனித வெடிகுண்டுக்குப் பயன்படுத்தும் ஜாக்கெட்டுகள், ஏகே 56 ரக துப்பாக்கிகள், குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. படகில் இருந்த இலங்கைத் தமிழர்கள் மூவரும், தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரித்தபோது அப்பொருள்களைக் கடலூரில் ஒப்படைக்க வந்ததாகக் கூறியுள்ளனர்.இதேபோல் தனுஷ்கோடி பகுதியில் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் அலுமினியக் கட்டிகள், வெடிமருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், இரும்புக் கம்பிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துச் செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சில வாரங்களுக்கு முன்தான் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த இரும்பு குண்டுகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன. அவை மும்பையிலிருந்து தமிழகம் வழியே இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தன. இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் இனப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து சண்டை நடந்து வரும் சூழ்நிலையில் போராளிகளுக்காக இவை கடத்தப்படுகின்றன. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திப் பகுதியில்தான் கடத்தல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்குப் பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது மக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும்போதும், இலங்கை அமைச்சர்கள் இந்தியா வரும்போதும், இந்திய அதிகாரிகள் இலங்கை செல்லும்போதும் இது தொடர்பான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆனால் அது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை.

இது ஒருபுறம் இருக்க, சண்டைக்குப் பயந்து நாள்தோறும் இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். அவர்களுக்குச் சரியான உணவு, தங்குமிட வசதி செய்துதர வேண்டியுள்ளது. இச் சூழ்நிலையில் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகள் தமிழகத்துக்கு மேலும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் அமைதி நிலவ சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்காக வன்முறைக்கு வித்திடும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் எவரும் துணை நிற்க முடியாது. இந்த நிலையில் தமிழகக் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். கைப்பற்றப்பட்ட ஒரு பொருள் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதற்கான சாதனம் என்பதால் அது குறித்தும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

ஒரு படகில் இருந்த வெடிபொருள்கள் கடலூருக்குக் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் கள்ளத்தனமாக ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். கடந்த காலச் சம்பவங்களை மனத்தில்கொண்டு, இப்போதைய சூழ்நிலையை போராளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாதவாறு மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.


இதுவரை பறிமுதலான வெடிபொருள் எவை? “வெடிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்’

சென்னை, பிப். 16: தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் வெடிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர் என்றார் டிஜிபி டி.முகர்ஜி.2006-ல் இருந்து மாநில போலீஸ் மற்றும் கியூ பிரிவு போலீஸôரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்களின் பட்டியல் விவரம்:2006 நவம்பர் 29-ல் மானாமதுரை அருகே விபத்துக்குள்ளான காரில் இருந்து 30 மூட்டைகளில் வெடிமருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கைது செய்யப்பட்ட 4 பேரில் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஹைதராபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது.அதைத்தொடர்ந்து பெரியமேட்டில் (சென்னை) 5 ஆயிரம் கிலோ இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 7,500 கிலோ இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பை, சென்னை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழர்கள் 5 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து இரும்பு குண்டு கடத்தியது தெரியவந்தது.2007 பிப்ரவரி 12-ல் தனுஷ்கோடிக்கும் இலங்கைக்கும் இடையில் சென்ற நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இருந்து 92 சாக்கு மூட்டைகளில் 2,800 கிலோ அலுமினிய உலோக கட்டிகள், உலோக வளையங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முருகேசன், கணேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

2007 பிப்ரவரி 14-ம் தேதி அதே பகுதியில் 126 சாக்கு மூட்டைகளில் மொத்தம் 3,200 கிலோ அலுமினிய உலோகக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயகரன், சுகுமார், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 3 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

“”மும்பை, ஹைதராபாத், குஜராத்தில் இருந்து வெடிபொருள்கள் தமிழகத்தின் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் இது போன்ற வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார் டிஜிபி டி.முகர்ஜி.


தமிழ்நாட்டில் இருந்து ஆயுதங்கள் கடத்தும் விடுதலைப்புலி தளபதி: கைதானவர்கள் பரபரப்பு தகவல்சென்னை, பிப். 16-கோடியக்கரை கடல் பகுதியில் கடந்த செவ் வாய்க்கிழமை இரவு விடுதலைப்புலிகளின் படகை இந்தியக் கட லோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர்.அதில் இருந்த2 விடு தலைப்புலிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3,700 கிலோ வெடிப் பொருட்கள் மற்றும் மனித வெடி குண்டு பயன்படுத்தும் வெடிகுண்டு பெல்ட் கைப்பற்றப்பட்டன.

முதல் கட்ட விசாரணையில் இரனைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற இந்த படகு சிங்கள கடற்படையிடம் சிக்காமல் இருப் பதற்காக இந்திய கடல் பகுதிக்குள் சுற்றி வந்த போது இந்தியக் கடலோரக் காவல் படையிடம் சிக்கியது தெரிய வந்தது. அந்த படகில் இருந்த 2 விடுதலைப்புலிகளில் அருமைநாயகம் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர். சிவபத்ம நாபன் புலிகள் அமைப்பு டிரைவர் ஆவார். இவர்கள் இருவரிடம் இருந்தும் 2 சயனைடு குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த 2 சயனைடு குப்பிகளில் கொடிய விஷம் நிரப்பப்பட்டிருந்தது. பொது வாக சிங்கள ராணுவத்திடம் சிக்கனால் சயனைடு குப்பிகளை தின்று விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொள்வார்கள். இந்திய கடற்படையிடம் சிக்கிய போது 2 விடுதலைப்புலிகளும் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை.

சென்னை கொண்டு வரப்பட்ட அவர்களிடம் புதன்கிழமை இரவு முழுக்க மத்திய-மாநில உளவுத் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினார்கள். “வெடிகுண்டு பெல்டு” யாரை கொல்ல தயாரிக்கப்பட்டது என்று கேட்டனர். அதற்கு கைதான விடுதலைப்புலிகளால் சரியான தகவலை சொல்லத் தெரியவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப்புலிகளுக்காக கடத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதம் தொடர்பாக அவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் விடு தலைப்புலிகளின் ஆயுதக் கடத்தல் மையங்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக குந்துகல், பாம்பன், மண்டபம், வேதலை ஆகிய கடலோரப் பகுதிகள் வழியாக விடுதலைப்புலிகளுக்கு வெடி பொருட்கள், மருந்து வகைகள் மற்றும் தேவையான பொருட்கள் செல்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து தினமும் டன் கணக்கில் விடு தலைப்புலிகளுக்கு பல்வேறு வகை பொருட்கள் செல்கிறது. இந்த பொருள்களை வாங்கி, கடலோரப் பகுதிகளுக்கு கொண்டு வந்து படகுகளில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான சிறு குழுக் கள் உள்ளன. இவர்களை ஏஜெண்டு போல இருக்கும் சிலர் இயக்குகின்றனர்.

இந்த ஏஜெண்டுகளுக்கு தலைவன் போல ஒருவர் இருப்பது கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிந்தது. அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவர் ஆவார். அவர் பெயர் கண்ணன் என்று தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோர பகுதி யில் இவர் வசித்து வருவதாக தெரிகிறது.

கண்ணனின் முக்கிய வேலையே விடுதலைப்புலி களுக்கு தேவைப்படும் வெடி பொருட்கள், மருந்துகள், உணவுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து வாங்கி அனுப்புவதுதான்.

விடுதலைப்புலிகளின் தலைமையிடம் இருந்து வரும் தகவல்களுக்கு ஏற்ப செயல்படும் கண்ணன் தமிழ்நாட்டில் ஏராளமான சிறு குழுக்களை ஏற்படுத்தி உள்ளார். ஒவ்வொரு குழுவிலும் 2 அல்லது 3 பேர் இருப்பார்கள். இந்த குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான வேலையை கண்ணன் கொடுப்பார்.

எந்த குழு என்ன மாதிரி வேலை செய்கிறது என்பது யாருக்குமே தெரியாது. குறிப் பாக ஒரு குழு வேலை மற்ற குழுவுக்கே தெரியாது. இதன் மூலம் ரகசியங்கள்ë கசியாமல் வெடிபொருள் கடத்தலை கண்ணன் திறமையாக செய்து வந்துள்ளார்.

வெடிபொருள், உணவுக் கடத்தலுக்கு கண்ணன் விடுதலைப்புலிகளையோ, புலிகளின் படகையோ பயன் படுத்துவதில்லை. தமிழக மீனவர்களையே பயன்படுத்தி உள்ளார். தமிழக மீன்பிடி படகுகளை விலைக்கு வாங்கி அவர் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களிலும் கண்ணன் ஆட்களை வைத்து இருப்பதாக தெரிகிறது. வெடி பொருட்களை சேகரிக்க மராட்டியம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அவர் ஏஜெண்டுகளை வைத்துள்ளார். சில சமயம் இந்த வெடி பொருள்களை கண்ணனே நேரிடையாக யாழ்ப்பாணத் துக்கு கொண்டு சென்று கொடுத்து விட்டு வருவார்.

கைதான விடுதலைப்புலிகள் மூலம் கண்ணன் பற்றிய அனைத்து தகவல்களும் கிடைத்து விட்டன. புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கண்ணன் தமிழ்நாட்டில் 10 ஆண்டுக்கும் மேலாக ரகசியமாக தங்கி இருந்து ஆயுதம் கடத்தி வந்திருப்பது உளவுத்துறையினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அவரை பிடிக்க தமிழகம் முழுக்க கிïபிராஞ்ச் போலீசார் நேற்றிரவே அதிரடி வேட்டையை தொடங்கி உள்ளனர்.

அகதிகள் முகாம்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. புலிகளின் படகு பிடிபட்டதுமே கண்ணன் தலைமறைவாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் தளபதி கண்ணன் எந்த ஊரில் தங்கி இருந்தார் என்ற தகவலை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். கண்ணனை போலவே அவருக்கு உதவியாக இருந்த ஏஜெண்டுகளும் தப்பி ஓடி விட்டனர். அண்டை மாநிலங்களுக்கு இவர்கள் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைதான விடுதலைப்புலிகளிடம் சென்னை போலீசார் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை. 2 விடு தலைப்புலிகளையும் 2 வாரம் காவலில் எடுத்து முழுமையான விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக போலீசார் இன்று ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் மனு செய்தனர்.

கிïபிராஞ்ச் போலீசார் 2 விடுதலைப்புலிகளையும் கடலோர மாவட்டங்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர். இந்த விசாரணை மூலம் விடுதலைப்புலிகளுக்கு தமிழ கத்தில் இருந்து யார்- யாரெல்லாம் பொருட்கள் சேகரித்து கொடுத்து உதவினார்கள் என்பது தெரிய வரும்.


வெடிகுண்டு `பெல்ட்’டுடன் வந்தவர்கள் தற்கொலை படை தீவிரவாதிகளா? சென்னை, பிப். 15-கோடியக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வெடி பொருட்களுடன் பைபர் படகு ஒன்று பிடிபட்டது.இந்தியக் கடலோரக் காவல்படையினர் அந்த படகை மடக்கிப் பிடித்தனர். படகில் இருந்த 3 இலங்கை தமிழர்கள், 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

படகை சோதனையிட்டபோது ஏ.கே.56 ரக துப்பாக்கி, 124 தோட்டாக்கள், 5 கையெறி குண்டுகள், 7 கிலோ வெடி பொருட்களுடன் கூடிய தற்கொலை படை இடுப்பு பெல்டு, 5 டெட்டனேட்டர்கள், 7 கிலோ ரசாயன பவுடர், மற்றும் 8 டிரம்கள் நிறைய திரவ ரசாயனப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதோடு ஒரு சாடிலைட் போன் மற்றும் தேவையான அளவு உணவு பொருட்கள் இருந்தன. அரிசி, பருப்பு மூட்டைகள், தேங்காய் களும் சில நாள் சமையலுக்கு போதுமான அளவுக்கு இருந்தன.

சாதாரண மீன்பிடி படகு போல 22 அடி நீளத்தில் இருந்த அந்த பைபர் படகுக்குள் மின்னல் வேகத்தில் செல்ல உதவும் நவீன என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. சமீபத்தில்தான் அந்த படகு கட்டப்பட்டது போல இருந்தது.

பொதுவாக தமிழ் நாட் டில் கட்டப்படும் மீன் பிடி படகுகள் தூத்துக்குடி அல்லது மண்டபம் பகுதியில் பதிவு செய்யப்படும். ஆனால் பிடிபட்ட படகு எங்கும் பதிவு செய்யப்படவில்லை. ஸ்ரீராமஜெயம் என்ற பெயரில் தமிழக மீன்பிடி படகு போல ஊடுருவி இருந்த அந்த படகுக்குள் உலகின் எந்த பகுதிக்கும் செல்ல வழி காட்டும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட்டு இருந்தது.

இவை அனைத்தையும் பார்த்த கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு சந்தே கம் ஏற்பட்டது. வெறும் ஆயுதக் கடத்தலுக்காக இந்த நவீன படகு தமிழக கடலோரத்துக்கு வரவில்லை என்பதை உணர்ந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அந்த படகும், அதில் இருந்த 5 பேரும் சென்னை கொண்டு வரப்பட்டனர்.

பிடிபட்ட 5 பேரும் சகாயம் (44), ஆறுமுகம் (53), அருமைநாயகம் (28), ராமச்சந்திரன் (42), சிவபத்ம நாபன் (31), என்று தெரிய வந்தது. அவர்களிடம் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள், கடற்படையினர், மற்றும் கடலோர காவல்படையினர் கூட்டாக விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், 5 பேரும் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தது தெரிய வந்தது.

கோடியக்கரைக்கு 22 கடல் மைல் தொலைவில் பாக்.ஜலசந்தி பகுதியில் அவர்கள் யாரோ ஒருவரது சிக்ன லுக்காக காத்து இருந்தபோது பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட 5 பேரும் ஒரே மாதிரி பேசுகிறார்கள். அவர்கள் கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டுக்குள் வர திட்டமிட்டிருந்தது தெரிகிறது.

இந்தியாவுக்குள் மற்றொரு பயங்கர தற்கொலை தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற இவர்கள் வந்து இருக்கலாம் என்று உளவுத் துறையினர் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து உளவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிடிபட்டுள்ள வெடிகுண்டு பெல்ட் தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுவதுதான். முக்கியப்பிரமுகர்களை குறி வைத்து இந்த பெல்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முக்கிய பிரமுகர் யார் என்று எங்களுக்கு இதுவரை தெரியவில்லை” என்றார்.

அந்த உளவுத் துறை அதிகாரி மேலும் கூறுகையில், “தற்கொலை பெல்ட்டை வடிவமைத்து அனுப்பியது விடு தலைப்புலிகள் தான் என்பதில் சந்தேகமே கிடையாது என்றாலும் கோடியக்கரை பகுதிக்கு இதை வரவழைத்த பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை” என்றார். தனிப்பட்ட நபரை மட்டுமின்றி பலரை தீர்த்து கட்டும் வகையில் வெடிகுண்டு பெல்ட் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விடுதலைப்புலிகள் தமிழ் நாட்டுக்குள் ஊடுருவி பத்ம நாபா, ராஜீவ் காந்தி ஆகி யோரை கொன்ற போது இதே கோடியக்கரை வழியாகத்தான் வந்து சென்றனர். அதே பகுதியில் தற்கொலை படை வெடிகுண்டு பெல்ட் பிடிபட்டுள்ளதால் உளவுத்துறையினர் மிகவும் உஷாராகி உள்ளனர். விடுதலைப்புலிகள் அடுத்து ஏதோ ஒரு பெரிய தற்கொலை தாக்குதலுக்கு முயற்சிப்பதாக நினைக்கிறார்கள்.

ராஜீவை கொல்ல விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினர் 2 கிலோ வெடி பொருள் பெல்ட்டைத் தான் பயன்படுத்தினார்கள். தற்போது பிடிபட்டுள்ள வெடி குண்டு பெல்ட்டில் 7 கிலோ வெடிபொருள் உள்ளது. எனவே சிவராத்திரி விழாவை சீர்குலைக்க அல்லது தேர்தலில் வன்முறையை ஏற்படுத்த அது கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வெடிகுண்டு பெல்டு இருந்த படகை பிடிக்கும் முன்பு நிறைய வயர்லஸ் சிக்னல்களை கடலோரக் காவல் படையினர் இடைமறித்து கேட்டுள்ளனர். அந்த வயர்லஸ் பேச்சு என்ன என்பது அதிகாரிகளுக்கு புரிய வில்லை. வயர்லஸ் பேசியவர்கள் ஈழத்தில் இருந்து ஏதோ தகவல் கொடுத்து இருக் கலாம் என்ற சந்தேகம் எழுந் துள்ளது.

7 கிலோ வெடிகுண்டு பெல்டு 5 பிரிவுகளாக பிரித்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தது. இது நூற்றுக்கணக்காணவர்களை கொன்று குவித்து விடும் சக்தி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ ஒரு பெரிய சதி திட்டத்துக்கு இந்த பெல்டு தயாரிக்கப்பட்டுள்ளதை உளவுத்துறையினர் ஒத்துக்கொண்டனர்.

விடுதலைப்புலிகளின்தற் கொலை படைதாக்குதலுக்கு பயன்படும் பெல்டு பிடிபட்டுள்ளதால் பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பிடிபட்ட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் “தமிழக கடலோரத்தில் வெடிபொருள் மற்று வெடிகுண்டு பெல்ட்டை கொடுத்து விட்டு இலங்கைக்கு திரும்பி வந்து விட தங்களுக்கு உத்தரவிடப்பட்டது” என்று கூறி உள்ளதாக தெரிகிறது.

அவர்களிடம் இருந்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெடிகுண்டு பெல்ட்டு பிடிபட்டுள்ளதால் கடலோர பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

கோடியக்கரை கடல் பகுதியில் விமானப்படை ரோந்து கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் சப்ளை: வெடிபொருள் கடத்தல் கும்பல் தலைவன் அடையாளம் தெரிந்ததுராமநாதபுரம், பிப். 15-ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடந்த 3 நாட்களில் 3 படகுகளில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டன.

ஏ.கே.56 துப்பாக்கி, கண்ணி வெடிகுண்டுகள், மனித வெடிகுண்டு அணியும் ஜாக்கெட், அலுமினிய தகடுகள், பயங்கர அழிவை ஏற்ப டுத்தும் வெடி குண்டு கள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் போன்றவை பிடிபட்டன.

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு இவற்றை கடத்தி சென்றதாக இது வரை 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களிடம் இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தியபின் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.

பின்னர் அவர்களிடம் தமிழக போலீசாரும், உளவு பிரிவு, கிï பிரிவு அதிகாரி களும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

ஆயுதக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மீன்பிடி படகு போன்ற தோற்றம் கொண்ட அதிநவீன விரைவு படகு என்பதும் அதில் பொருத்தப்பட்டிருந்த என்ஜின்கள் உயர்சக்தி கொண்டவை என்றும் கண்டு பிடிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் வாங் கப்பட்ட இந்த படகு பின்னர் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு கடத்தலுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள் ளது. தூரத்திலிருந்து பார்க்கும் போது மீன்பிடி படகு போல வும் அதேநேரம் ரோந்து கப்பல்களை ஏமாற்றி காற்றை கிழித்து செல்லும் வேகத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. கடற்படை அதிகாரிகள் இதை கண்டுபிடித்து கரை யோர போலீசாருக்கு தெரிவித்த னர்.

இதையடுத்து போலீசார் தூத்துக்குடியிலிருந்து படகை வாங்கியவர் யார்? என்று விசாரித்தனர். இதில் தனுஷ் கோடியைச் சேர்ந்த கோமாளி என்பவரின் மகன் முத்தீஸ்வரன் (வயது 25) என்பது தெரிய வந்தது. படகை வாங்கிய இவர் அதை சீரமைத்து இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்தி செல்ல பயன்படுத்தியுள்ளார்.

போலீசாரின் விசார ணையில் தெரிய வந்த இந்த விவரங்கள் உயர் அதிகாரி களுக்கு சொல்லப்பட்டன.

இதையடுத்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு திருஞானம் உத்தரவுப்படி படகை வாங்கியவர், அதை சீரமைத்தவர், கடத்தலுக்கு துணை போனவர்கள் ஆகியோரை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட் டன. அவர்கள் உள்ளூர் போலீசார் மற்றும் உளவுப் பிரிவு, கிï பிரிவு போலீசாரு டன் இணைந்து முத்தீஸ்வரன் பற்றிய தகவலை சேகரித்த னர்.

இதில் முத்தீஸ்வரனும் அவரது கும்பலும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமானது. தமிழ் நாட்டின் சில பகுதிகளிலிருந்து ஆயுதங்களையும், வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட் களையும் ரகசியமாக சேகரித்து ராமேசுவரம் பகுதிகளுக்கு ஒரு கும்பல் கொண்டு வந்து சேர்க்கும்.

பின்னர் முத்தீஸ்வரன் தலைமையிலான கும்பல் படகு மூலம் இதனை இலங்கைக்கு கொண்டு சென்று சேர்க்கும். இவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் முத்தீஸ்வரன் மூளையாக செயல்பட்டுள்ளார்.

ஆயுதக்கடத்தலின் ஆணி வேரை மோப்பம் பிடித்த போலீசார் இதற்கு தலையாக செயல்பட்ட முத்தீஸ்வரனை பிடிக்க வலை விரித்தனர். இதை உணர்ந்து கொண்ட முத்தீஸ்வரன் தலைமறைவாகி விட்டார். பல இடங்களிலும் தேடி பார்த்த போலீசார் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே முத்தீஸ்வரன் இலங்கைக்கு ஓட்டம் பிடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

எனவே முத்தீஸ்வரனின் கூட்டாளிகளை வளைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்னும் 2, 3 நாட்களில் அவர்கள் போலீஸ் வலையில் சிக்குவார்கள் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டதாகவும் வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே இலங்கைக்கு தொடர்ந்து ஆயுதக் கடத்தல் நடந்து வருவதால் அந்த ஆயுதங்கள் எங்கிருந்துப யாரால்ப சேகரித்து அனுப்பப் படுகிறது என்பது பற்றியும் இன்னொரு தனிப்படை போலீசார் ரகசியமாக விசா ரணை நடத்தி வருகிறார் கள்.

மேலும் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் ராமேசுவரம் கடற்கரையை ஒட்டியுள்ள முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, மண்டபம் மற்றும் இயற்கை அரண்களான கடற்கரை காட்டுப்பகுதிக்குள் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக மும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே ராமேசுவரம் பகுதியில் எங்காவது ஆயுதக்குவியல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதாப என்பதை கண்டுபிடிக்க உளவுப் பிரிவு போலீசார் ரகசிய மாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆயுதக்குவியல் கண்டு பிடிக்கப்பட்டாலோ அல்லது முத்தீஸ்வரன் கும்பலை சேர்ந்தவர்கள் யாராவது பிடிபட்டாலோ இதுபற்றிய முழு விவரம் தெரிய வரும். இதற்காக அனைத்து பிரிவு போலீசாரும் அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.


கடலோரக் காவல் படைக்கு “உளவு’ சொன்ன விடுதலைப் புலிகள்?

சென்னை, பிப். 17: இந்தியக் கடலோரக் காவல் படைக்கு, விடுதலைப் புலிகள் “உளவு’ கூறியது அம்பலமாகியுள்ளது.அது, இலங்கை ராணுவத்தினர் ரேடாரில் தங்களது படகை நெருங்கி விட்டதை அறிந்த விடுதலைப் புலிகள், அவர்களிடம் சிக்கி விடாமல் இருக்கவே இந்தியக் கடலோரக் காவல் படைக்கு “உளவு’ கூறியதாகக் கூறப்படுகிறது.இதன் அடிப்படையிலேயே இந்தியக் கடலோரக் காவல் படையினர் “ரமாதேவி’ என்ற படகின் மூலம், இந்தியப் பெருங்கடலின் பாக் நீரிணை பகுதியில் நின்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகைப் பறிமுதல் செய்துள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சமயத்தில், விடுதலைப் புலிகள் படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று மாநில உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வெடிபொருள்கள் கடத்துவதற்கு, தமிழகத்தை ஒரு வழித்தடமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்கள் உதவியாக உள்ளனர்’ என்று உளவுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவினர் மிகவும் அதிநவீன படகுகளை வைத்துள்ளனர். அவர்களின் படகு 100 கடல் மைல் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. ஆனால், இந்தியக் கடலோரக் காவல் படையிடம் உள்ள படகின் வேகம் 60 கடல் மைல் கொண்டது. மேலும் தங்களை யாராவது நெருங்கும் பட்சத்தில் எதிரியை அழித்து விட நினைப்பார்கள். அல்லது தாங்களே உயிரை மாய்த்துக் கொள்வர்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஒரு படகை இழப்பது என்பது மிகுந்த பொருட் செலவை ஏற்படுத்தும். அந்தக் காரணத்தினால் தான் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு உளவு சொன்னதாகத் தெரிகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள நக்சலைட், மாவோயிஸ்டுகள் தீவிரவாதத்தை விட்டு மெல்ல விலகி ஜனநாயகப் பாதையில் கவனம் செலுத்த முன்வந்துள்ளனர். எனவே, அவர்களிடம் உள்ள ஆயுதங்கள், விடுதலைப் புலிகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றனவா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

காவலில் வைத்து விசாரிக்க முடிவு: விடுதலைப் புலிகள் கைது வழக்கு, கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்களைக் காவலில் வைத்து விசாரிக்க “கியூ’ பிரிவு போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.


Dinamani Editorial – Feb 23 2007தன்னைத்தான் காக்க

ஆயுதம் தயாரிக்க உதவும் பொருள்களை இலங்கைக்குக் கடத்தியதாக ஒரு சிலரை தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.

இவை விடுதலைப் புலிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டவை என்பதும் உறுதியாகியுள்ளது. சிலதினங்களுக்கு முன்பு தமிழகக் கடலோரப் பகுதியில் பயங்கர வெடிபொருள்களுடன் கடற்புலிகளின் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகளின் உதவியும் புலிகளுக்கு இருக்கிறது என்பதை ராக்கெட் லாஞ்சர்கள் விவகாரம் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்கான ஆயுதம் கடத்தும் பூமியாகத் தமிழகத்தை மாற்றிவிட்டனர் என்று எதிர்க்கட்சிகளும் சில பத்திரிகைகளும் குறை கூறியுள்ளன.

இந்நிலையில், பிப்ரவரி 18-ம் தேதி கடற்படை நிகழ்ச்சியொன்றில் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, “தெரியவந்திருப்பது பனிப்பாறையின் முனை மட்டுமே. தெரியவராத இதுபோன்ற ஆயுதக் கடத்தல்கள் அதிகமானவை’ என்று கூறியுள்ளார். இது தமிழகத்தின் மீதான மறைமுகக் குற்றச்சாட்டு என்றே கருதப்படுகிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பல பகுதிகள் தற்போது இலங்கை ராணுவத்தின் கைக்கு வந்துள்ளன. புலிகள் தங்கள் பலத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர முயற்சி செய்கின்றனர். அதற்கான போர் ஆயத்தம்தான் இந்த ஆயுதக் கடத்தல்கள்.

புவியியல் ரீதியாக, விடுதலைப் புலிகளால் ஆயுதம் கடத்தக்கூடிய வழி- தரைவழி என்றால் தமிழகம்; கடல்வழி என்றால் தமிழகக் கடற்கரை. இதைத் தவிர வேறு வழியே இல்லை.

இந்தக் கடத்தலில் ஈடுபடுவோரைக் காட்டிலும், இவர்களை பின் நின்று இயக்கும் முக்கிய நபர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். புலிகளின் ஊடுருவல் உள்ளதா என்பதைக் கண்டறிய கடலோரக் கிராமங்களில் சோதனை நடத்துவதாகத் தமிழகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் இல்லை.

இலங்கைத் தமிழர்கள் மீது தமிழர்கள் என்ற முறையில் தமிழ்நாடு காட்டும் கருணை வேறு; விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு என்பதைப் புரிந்துகொண்டு அவற்றின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் கடமை வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

எந்தப் பிரச்சினைக்கும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தீர்வாக அமைய முடியாது. பேச்சுவார்த்தை மூலம் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் எந்த நடவடிக்கையும் அப்பாவி மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.

அதேநேரத்தில், “தமிழக மண்ணில் உங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி தமிழகத்தைக் குற்றவாளி ஆக்காதீர்கள்’ என்று இங்குள்ள அரசும், தமிழக மக்களும் புலிகளைக் கேட்டுக்கொண்டால் அது யாரும் மறுக்க முடியாத நியாயமாக இருக்கும்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டமே இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், இன்று ஆயுதக் கடத்தல் உதவிகளைச் செய்து கொண்டிருப்போர், நாளை வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவுகின்ற ஆயுத வியாபாரிகளாக மாறும் ஆபத்து உள்ளது.

மேலும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையினால் தமிழகம் தேவையில்லாமல் ஒரு பழியை ஏற்க நேரிட்டது. மீண்டும் அதே சூழல் உருவாகக் கூடாது என்பதே தமிழகத் தமிழர்களின் விருப்பமாக இருக்க முடியும்.


அரசியல்வாதிகளுக்கு கருணாநிதி எச்சரிக்கை: புலிகளுடன் தொடர்பிருந்தால் கடுமையான நடவடிக்கை
சென்னை, பிப். 24: விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களுக்குத் தேவையான அலுமினியத்தை வழங்கும் தொழிற்சாலை ஒன்றை மதுரையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் காரணமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சிங்கள ராணுவத்தால் கொடுமைப் படுத்தப்படுகிற அல்லது கொல்லப்படுகிற அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் குறிப்பாக திராவிடர் கழகம் போன்றவை கேட்டுக் கொள்கின்றன.

இவ்வாறு கேட்டுக்கொள்வதற்கும் விடுதலைப் புலியினருக்கு ஆயுத விநியோக இடமாக தமிழகத்தைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை இன்றைய தமிழக அரசு உணராமல் இல்லை. ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், கண்காணிக்கப்படுகிறார்கள்.

அத்தகைய ஆயுதங்களை தாங்கி வரும் படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டும் உள்ளன. தமிழகத்து அரசியல்வாதிகளுடைய ரகசிய கூட்டு இருக்குமேயானால் அவைகளும் கண்டுபிடிக்கப்பட்டு தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு மக்களும் தமிழக அரசும் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு விடுக்கின்ற வேண்டுகோள்களையும் எடுக்கும் நடவடிக்கைகளையும் இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள இதுபோன்ற காரியங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி என்று எவரும் தவறாகக் கருதிக் கொண்டு செயல்படக் கூடாது.

நாட்டு நலனையும் பாதுகாப்பையும் அதற்காக மத்திய அரசு எடுக்கின்ற தேவையான நடவடிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் தலையிடும் என்று யாரும் கனவு காண வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.


தமிழகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்தவில்லை – த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்களையும், ஆயுதம் தயாரிக்கும் பொருட்களையும் விடுதலைப் புலிகள் கடத்தவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்னையில் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்காக தமிழகத்தில் இருந்து ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடிய மூலப் பொருட்களை கடத்தும் முயற்சிகள் சிலவற்றை தாம் முறியடித்துள்ளதாக, இந்திய கடற்படையும், கடலோறக் காவற் படையும் கூறிவருகின்றன. இலங்கைக்கு கடத்தப்பட விருந்த மூலப் பொருட்கள் பல கைப்பற்றப்பட்டன.

ஆனால் இந்த சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதை விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு ப தமிழ்ச்செல்வன் தன்னிடம் நேரடியாகத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், பல ஆண்டுகளாக கடத்தல் நடைபெற்றுவருவதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இப்பொருட்கள் தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்தார்.


Posted in Arms, Attack, Belts, Cyanide, Defense, Dinamani, Double Jeopardy, Eelam, Eezham, fishermen, Karuna, Karuna Faction, Karuna Group, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kodiakarai, kodiyakkarai, Law, Left, Liberation Tamil Tigers of Eelam, LTTE, Maoist, Naval LTTE, Navy, Navy Tigers, Naxal, Naxalbari, Order, Police, Pushpavanam, Radar, Rajeev Gandhi, Rajiv Gandhi, Rajiv Gandi, Ramadevi, Sea tigers, Spy, Sri lanka, Sri Lankan Navy, Srilanka, Suicide, Trafficking, Vedaranyam, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal, Weapons, WMD | Leave a Comment »

India bans wheat exports amid domestic shortage fears

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

சோளம் இறக்குமதி செய்ய அனுமதி – கோதுமை ஏற்றுமதிக்குத் தடை: பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

புதுதில்லி, பிப். 15: நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, நடப்பு ஆண்டின் இறுதிவரை கோதுமை ஏற்றுமதிக்கு முழுமையாகத் தடை விதித்துள்ளது மத்திய அரசு.

அதேசமயம் தங்கு தடையற்ற சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு இவ்வாறு முடிவெடுத்துள்ளது.

வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்ககம், அனைத்து ரக கோதுமைக்கும் 2007 இறுதி வரை ஏற்றுமதித் தடை விதித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

நடப்புப் பருவத்தில் 7.25 கோடி டன் கோதுமை அறுவடையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். கடந்த ஆண்டு 6.95 கோடி டன் கோதுமை அறுவடையானது.

2005-06 நிதியாண்டில் மிகவும் குறைந்த அளவே கோதுமை ஏற்றுமதியானது. இருப்பினும், இந்திய உணவுக் கழகம் போதுமான கோதுமை இருப்பை வைக்க வசதியாக நடப்பு ஆண்டில் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்திய உணவுக் கழகம் 92 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்தது. இது, அதற்கு முந்தைய ஆண்டு செய்த கொள்முதலை (1.48 கோடி டன்) விட குறைவு. இதனால் கடந்த ஆண்டு அரசுக்கு கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குறைவான உற்பத்தியினாலும், கோழிப் பண்ணை தொழில்துறையில் தேவை அதிகரித்துள்ளதாலும் சோளத்தின் விலை உயர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த, சோளத்தை தங்கு தடையின்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Posted in Agriculture, Ban, Business, Chicken Farms, Commodities, Corn, Customs, Demand, Economy, essential goods, Exchange, Exports, FAO, FCI, Finance, Food Corporation of India, foreign trade, Government, Imports, Inflation, maize, markets, Meat Processing, Output, Prices, Production, revenue, Shortage, Supply, Trading, Wheat | Leave a Comment »