London Diary – Era Murugan: Fire, Curfew, Floods
Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007
லண்டன் டைரி: வெள்ளத்திலும் “ஃபயர்’!
இரா. முருகன்
“”ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி அடுப்பை அணைச்சுட்டுப் படுத்துக்கணும்.” இது வீட்டுத் திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்து, வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியபடி அந்தக்கால மாமியார் தன்னுடைய மருமகளுக்கு அவ்வப்போது தவணைமுறையில் நல்கிய உபதேசம் இல்லை. ஓர் அரசாங்கமே சட்டம் போட்டு அறிவித்த விஷயம். இங்கிலாந்தை ஆக்கிரமித்து ஆண்ட வில்லியம் மன்னன் நாட்டு மக்களுக்கு விடுத்த அரச கட்டளை -“கவர் ஃபயர்’. அதாவது ராத்திரியில் முதலில் வீட்டு அடுப்பில் நெருப்பை அணைத்துவிட்டு இதர விஷயங்களில் கவனம் செலுத்தவும்.
ஊர் முழுக்கக் கடைப்பிடிக்கவேண்டி ஆயிரம் வருடத்துக்கு முந்திப் போடப்பட்டது அந்த “கவர் ஃபயர்’ சட்டம். கவர் ஃபயர் நாளடைவில் திரிந்து கர்ஃப்யூ என்ற ஊரடங்கு உத்தரவு ரூபத்தில் இன்னும்கூட எல்லா அரசாங்கங்களாலும் அவ்வப்போது அமுலாக்கப்படுகிறது என்பது உண்மை. மேற்படி சட்டப்படி அடுப்பை அணைக்க ஒரு குடிமகன் மறந்துபோனதால் லண்டன் மாநகரமே முன்னூறு வருடம் முன்னால் மாபெரும் தீவிபத்தில் அழிந்து போனது என்பதும் உண்மைதான்.
லண்டன் பாலத்திலிருந்து திரும்பி நகருக்குள் நடந்து, இதையெல்லாம் யோசித்தபடி நான் நிற்கிற இடம் புட்டுச் சந்து. அதாவது புட்டிங் லேன். டூரிஸ்டுகளை ஏற்றி வருகிற சிவப்பு பஸ் ஒன்று அரை நிமிடம் சந்து முனையில் தயங்கி நிற்க, பஸ் மேல்தளத்தில் வழிகாட்டிப் பெண் 1666 என்று சொல்கிற சத்தம் காற்றில் மிதந்து வருகிறது. ஆயிரத்து அறுநூற்று அறுபத்தாறு. லண்டன் நகரமே பற்றி எரிந்த வருடம் அது. அந்த நெருப்பு தொடங்கிய இடம் இந்தப் புட்டுச் சந்துதான்.
லண்டனுக்குச் சோதனையான காலம் இதற்கு ஒரு வருடம் முன்பே தொடங்கிவிட்டது. 1665-ம் வருடம் தொடர்ந்து ராப்பகலாகப் பெருமழை பெய்தது. நசநசவென்று நனைந்து ஊறி அசுத்தமாகக் கிடந்த ஊரில் எலித் தொல்லை பெருகியது. அது கொள்ளை நோயில் கொண்டுபோய் விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரைக் காவு கொண்டு அந்த நோய் போய்ச் சேர்ந்த அடுத்த வருடமே ஊரை அழிக்கிற மாதிரி ஒரு மாபெரும் தீவிபத்து. இரண்டுமே ஜனத்தொகைப் பெருக்கத்தின் விளைவு.
தேம்ஸ் நதிக்கரையை ஒட்டி ஆரம்பித்து, ரோமானியப் பேரரசு காலத்து நகர எல்லைச் சுவர் வரை நீண்ட லண்டன் நகரத் தெருக்களில் கீழ்த்தட்டு, நடுத்தர மக்கள் நெருக்கியடித்து இருந்து, தொழில் செய்து, வியாபாரம் நடத்திக் குடியும் குடித்தனமுமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிரபுக்கள் இந்த ஜன நெரிசலிலிருந்து விலகி, இன்னும் தூரத்தில் வெஸ்ட்மின்ஸ்டரிலோ அல்லது தேம்ஸ் நதிக்கு அக்கரையில் புறநகர்ப் பகுதிகளிலோ சுகபோகமாக வசித்துக் கொண்டிருந்தார்கள். இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்லஸýக்கும் லண்டன் நகருக்கும் சுமூகமான உறவு இல்லாத நேரம் அது. மன்னராட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்த குடியரசுத் தலைவர்களின் நிர்வாகத்தில் லண்டன் மாநகராட்சி இருந்தது.
பெருகிவரும் ஜனத்தொகையை இருக்கப்பட்ட இடத்திலேயே குடியிருத்த வேண்டிய நிர்ப்பந்தம். வீடுகள் தரைமட்டத்தில் சிறுத்தும், மேலே அகன்று விரிந்தும் கூடுதல் இடவசதிக்காக மாற்றியமைக்கப்பட, தெருவின் இரண்டு பக்கத்திலும் ஒன்றை ஒன்று தொடுகிற மாடிகள் காற்றையும் வெளிச்சத்தையும் தடைசெய்தன. அசம்பாவிதமாக ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் இந்தத் தெருக்களில் உயிர்ச்சேதமும் பொருள் சேதமும் அதிகமாக இருக்கும் என்பதால் நகரம் முழுக்க அந்தந்தப் பேட்டை தேவாலயங்கள் தீயணைப்புக் கேந்திரமாகச் செயல்படத் திட்டம் அமுலாகியது.
கிட்டத்தட்ட இருநூறு தேவாலயங்களில் நெருப்பை அணைக்கத் தயாராகத் தண்ணீர் வாளி, எரிகிற கூரையைப் பிடுங்கி எரிய துரட்டி மாதிரியான உபகரணங்கள், ஏணிகள் என்று சேமித்து வைத்தார்கள். எங்கேயாவது தீப்பிடித்தால், அர்த்தராத்திரி என்றாலும் தேவாலய மணி முழக்கப்படும். கேட்டு ஓடிவந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அந்தந்தப் பேட்டை மக்களின் கடமை.
இப்படி விலாவாரியாக முன்னேற்பாடு எல்லாம் இருந்தாலும், புட்டுச் சந்தில் ரொட்டிக்கடை வைத்திருந்த தாமஸ் பரினர் மூலம் விதி விளையாடியது. 1666-ம் வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதி சனிக்கிழமை ராத்திரி அவர் ரொட்டி சுடும் அடுப்பை அணைக்க மறந்து தூங்கப் போய்விட்டார். நடுராத்திரியில் அடுப்பிலிருந்து நெருப்பு வீடு முழுக்கப் பற்றிப் பிடித்து, அடுத்த வீடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.
பொதுமக்கள், லண்டன் மேயரை அவர் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பி விஷயத்தைச் சொன்னார்கள். “”அட போங்கப்பா, நாலு பேர் வரிசையா நின்னு ஒன் பாத்ரூம் போனா தீ அணைஞ்சு போயிடும். உப்புப் பெறாத இந்த விஷயத்துக்காக ராத்திரி என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க” என்று கொட்டாவி விட்டபடி அவர் இழுத்துப் போர்த்திக் கொண்டு மறுபடி தூங்க ஆரம்பித்தார். மாண்புமிகு மேயர் காலையில் சாவகாசமாக விபத்து நடந்த ஸ்தலமான புட்டுச் சந்துக்கு வந்தபோது, நெருப்பு அடுத்த தெரு, மூன்றாம், நான்காம் தெரு என்று கிடுகிடுவென்று பரவிக்கொண்டிருந்தது.
“”தெருவை அடைச்சு நிக்கற கட்டிடத்தை எல்லாம் இடிச்சுட்டா, நெருப்பு பரவாது” யாராரோ ஆலோசனை சொன்னார்கள். “”இடிக்கறதா? அப்புறம் கார்ப்பரேஷன் தான் திரும்பக் கட்டித் தரணும்னு கேட்பீங்க. யார் செலவு பண்றது? அதெல்லாம் வேலைக்காகாது”
மேயர் மறுத்துக்கொண்டிருந்தபோது, மற்ற எல்லோரும் எரிகிற வீடுகளுக்குள் இருந்து கூடிய மட்டும் முக்கியமான பொருட்களை எடுத்துச் சுமந்துகொண்டு தீயிலிருந்து தப்பித்து ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள். அதில் கொஞ்சம் பேராவது பக்கத்து தேம்ஸ் நதியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து எரிகிற வீடுகளில் கொட்டியிருந்தால் தீ அணைந்திருக்கும். தேம்ஸ் நதியிலிருந்து குழாய் மூலமாகத் தண்ணீர், நகரம் முழுவதும் விநியோகிக்கப்படுவது அப்போதே இருந்தது. அந்தத் தண்ணீர்க் குழாயை அங்கங்கே திறந்து தண்ணீரை விசிறியடித்திருக்கலாம். அதற்கும் ஆள் இல்லை.
நெருப்பு கிடுகிடுவென்று பரவி, தேம்ஸ் நதிக்கரையில் நகருக்குத் தண்ணீர் விநியோகம் செய்ய ஆற்று நீரை இறைத்துத் தொட்டிகளில் தேக்கி வைக்கும் யந்திரங்களை எரித்து நாசமாக்கியது. ஆக, ஆறு முழுக்க வெள்ளம் போனாலும், ஊரென்னவோ பற்றி எரிந்தபடிதான் இருந்தது.
அந்தக்காலத்திலேயே தீயணைக்கும் இயந்திரம் வழக்கத்தில் வந்திருந்தது. ஆனால் ஒரே ஒரு சிக்கல். நடுவிலே பெரிய பீப்பாயில் தண்ணீரும், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நாலைந்து குழாயுமாக இருந்த இந்த இயந்திரங்களை ஓட்டிப் போகமுடியாது. நாலைந்து பேர் பின்னால் இருந்து தள்ள, இன்னும் சிலர் முன்னால் இருந்து இழுத்துக்கொண்டு போய்த்தான் தீப்பிடித்த இடத்தில் நிறுத்தவேண்டும். இழுத்துப் போனார்கள். அப்புறம்தான் இயந்திரங்களில் தண்ணீர் இல்லாதது தெரியவந்தது. தேம்ஸ் நதிக்கரைக்குத் தண்ணீர் நிரப்ப அவற்றைத் திரும்பவும் உருட்டிப் போனார்கள். நதிக்கரை மணலில் நிற்கவைத்துத் தண்ணீர் நிரப்பும்போது அந்த யந்திர வண்டிகள் குடைசாய்ந்து ஆற்றுக்குள் விழுந்துவிட்டன. நெருப்பு எந்தத் தடையும் இல்லாமல் இன்னும் தீவிரமாக எரிந்து கொண்டிருந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்