Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 27th, 2007

Jothi Mariappan – Small Business attitude & Entrepreneurial drive missing

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

சுயதொழில் சிந்தனை போனதெங்கே!

ஜோதி மாரியப்பன்

அண்மையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்திருந்த கிராம நிர்வாக அலுவலர் பணி தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களை வாங்க, ஏராளமானோர் அந்த படிவங்களை விற்பனை செய்த அஞ்சல் அலுவலக வாயிலில் பலமணிநேரம், நீண்ட வரிசையில், கால்கடுக்க காத்திருந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு இறுதியில், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் காலியாக இருந்த 500 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. இதில் 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான 2,500 காலியிடங்களுக்கு தேர்வு அறிவித்த சில நாள்களிலேயே 5 லட்சம் விண்ணப்பப் படிவங்கள் விற்றுத் தீர்ந்து விட்டதாக அனைத்து நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாயின.

அத்துடன் சில நகரங்களில் விண்ணப்பப் படிவங்கள் வாங்க வந்த கூட்டத்தை காவல் துறையினர் தடியடி நடத்தி ஒழுங்குபடுத்தினர் என்ற செய்தியும் வெளியானது. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது. இத்தகைய சூழ்நிலையில் விண்ணப்பப் படிவங்களின் விற்பனை 10 லட்சத்தைகூட தாண்டியிருக்கலாம்!

அரசுப் பணியில் சேர்ந்தால் ஓய்வுபெறும் வரையில் ஓரளவு நிம்மதியுடன் இருக்கலாம் என்ற எண்ணம் (குக்கிராமத்த்தைச் சேர்ந்தவர்கள் முதல் நகரங்களில் வசிப்பவர்கள் வரை) அனைவரது மனத்திலும் ஆழமாக, அழுத்தமாகப் பதிந்துவிட்டது. இத்தகைய எண்ணத் தூண்டுதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஒவ்வொரு தேர்தலின்போதும், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை அளிப்போம்; வேலையில்லாத் திண்டாட்டத்தை அடியோடு ஒழிப்போம்’ என அரசியல்கட்சித் தலைவர்கள் முழக்கமிடுவது வாடிக்கையாகி விட்டது.

அத்துடன் தங்களது கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் தவறாமல் அதைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் தங்களது வாக்குறுதியை “காற்றில் கரைந்த கற்பூரம்போல மறந்து’ (மறைத்தும்) விடுகின்றனர்.

உலகில் விவசாயத்தைப்போல ஒரு மகத்தான, மகத்துவமான சுயதொழில் உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது. ஏராளமான மக்களுக்கு சுயதொழில் வாய்ப்பை அளித்துவரும் மகத்தான தொழில் வேளாண்மையே.

ஆனால் வேளாண்மையை காலம் காலமாய் செய்து வந்த கிராம மக்களே, பல்வேறு காரணங்களால் வெறுத்து ஒதுக்கி விடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.

இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் வருங்காலத்தில் உணவுப் பற்றாக்குறை தலைவிரித்தாடும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை!

வேளாண்மையைப் போன்று பல்வேறு சுயதொழில் வாய்ப்புகள் இருந்தும் அரசு வேலை மீது மட்டும் கண்மூடித்தனமாக இன்றைய இளைய தலைமுறையினர் நாட்டம் கொள்வது ஏன்? சுயமாகத் தொழில் தொடங்க அவர்கள் ஏன் முன்வருவதில்லை? இத்தகைய கேள்வி பலருக்கு எழுவதுண்டு.

இதற்கான விடை, இன்றைய இளைஞர்களிடம் போதுமான தன்னம்பிக்கை இல்லாததுதான். தந்தை சுயதொழில் புரிந்து நன்றாகச் சம்பாதித்திருந்தாலும் தான் மகனை, மகளை அரசுப் பணியில் அமர்த்தவே அதிகமாய் விரும்புகிறார். இதற்கு அடிப்படைக் காரணம் சுயதொழில் பற்றிய உண்மையான கருத்துகள் மக்களிடம் முழுமையாக சென்றடையாததே.

சுயதொழில் பற்றிய நற்சிந்தனைகளை, பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத் திட்டங்களில் சேர்க்காததும் மற்றொரு காரணமாகும். மேலும், சுயதொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் அடங்கிய பாடத்திட்டங்கள் அதிக அளவில் இடம் பெறுவதில்லை.

இன்றைக்குப் பல பட்டதாரிகள் தாங்கள் சான்றிதழை வெறும் காகிதங்களாக மட்டுமே பார்க்கின்ற, மதிக்கின்ற சூழ்நிலையில் உள்ளனர். இன்னும் சிலர் தனியார் நிறுவனங்களில் தாங்கள் பயின்ற கல்விக்கும் பார்க்கின்ற பணிக்கும் குண்டூசியளவு கூட சம்பந்தமில்லாமல் அரைகுறை மனத்தோடு வெறுப்போடு வயிற்றுப்பிழைப்பை மனத்திற்கொண்டு பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் தங்களது மனிப்பான்மையை மாற்றிக்கொண்டு துணிவுடன் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும். இத்தகைய இளைஞர்களுக்கு சுயதொழில் பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்த அரசும், பிற தனியார் சமூகத் தொண்டு நிறுவனங்களும் வழிவகை செய்ய வேண்டும்.

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள படித்த இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட வேண்டும்.

மேலும் சிறு தொழில் புரிவோரை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வப்போது அரசு சலுகைகளை வழங்க வேண்டும்.

சுயதொழிலால் வேலையில்லாத் திண்டாட்டம் அகலும். நாடும் மக்களும் வளம் பெறுவது நிச்சயம்.

Posted in Comfort Zone, Development, Dinamani, entrepreneur, Growth, Guru, India, Industry, Jobs, Op-Ed, Opinion, Security, Small Business | Leave a Comment »

Ninth Schedule, Reservation Bill, 69% – Meet & Chat with Dr. Ramadas in Chennai

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

சென்னையில் நாளை இட ஒதுக்கீட்டு சட்டம் குறித்த கருத்தரங்கம்

சென்னை, ஜன.27: ஒன்பதாவது அட்டவணை குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பும் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தின் நிலையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.28) நடைபெறுகிறது.

வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை இக்கருத்தரங்கை நடத்துகிறது. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம் தலைமையில் சென்னை தியாகராய நகர் வாணி மகாலில் காலை 10 மணிக்கு நடைபெறும் இக்கருத்தரங்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றுகிறார்.

இமாச்சலப் பிரதேசத்தின் ஓய்வு பெற்றத் தலைமை நீதிபதி எம்.என். ராவ், மூத்த வழக்கறிஞர்கள் ஜி. மாசிலாமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, வழக்கறிஞர் எஸ். துரைசாமி, திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான ஆர். சண்முகசுந்தரம் ஆகியோரும் பேசுகின்றனர்.

Posted in Chennai, Dr. Ramadas, Events, Madras, people, PMK, Ramadoss | Leave a Comment »

Indus Valley Civilization – Archaeological Findings: Sindhu Valley Culture inscriptions

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

முழுமையான அறிவியல் ஆய்வுக்குப் பின்பே சிந்துவெளி எழுத்து குறித்து ஆராய வேண்டும்

சென்னை, ஜன. 27: சிந்துவெளி எழுத்துகள் குறித்து அறிவியல் அடிப்படையில் முழுமையான ஆய்வு நடத்த வேண்டும்; அதன் பிறகே அந்த எழுத்துகள் எந்த மொழியுடன் தொடர்புடையது என்பது ஆராயப்பட வேண்டும் என்று தொல்லியல் வல்லுநரும் “தினமணி’ முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் வலியுறுத்தினார்.

தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஓர் அங்கமாக சிந்துவெளி பண்பாட்டு ஆய்வு மையத்தை அவர் வியாழக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:

சிந்துவெளி எழுத்துகள் வலமிருந்து இடமாக அமைந்துள்ளது. அது இடமிருந்து வலமாக உள்ளதாகக் கூறுவது பொருத்தமற்றது.

திராவிட மொழிகளைப் போல் சிந்துவெளி எழுத்து வாசகங்களில் விகுதிகள் மட்டுமே உள்ளன என்பதை கம்ப்யூட்டர் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

தொல்லியல் கூறுகளைக் கருத்தில் கொண்டு, சிந்துவெளி எழுத்துகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும். கொள்கை சார்ந்த நிலையைத் தவிர்க்க வேண்டும்.

1) சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் போல் நகர்ப்புற நாகரிகம் சார்ந்தது. ஆரிய நாகரிகம் போல் கிராமப்புற நாகரிகம் சார்ந்தது அல்ல.

2) சிந்துவெளி இலச்சினைகளில் குதிரைகள் இடம்பெறவில்லை.

3) ஹரப்பா மத வழிபாட்டு முறையில் காணப்படும் பெண்தெய்வ வழிபாடு, அரச மர வழிபாடு, பாம்பு வழிபாடு போன்றவை ரிக் வேத வழிபாட்டில் இல்லாதவை.

இக்காரணங்களால் சிந்துவெளி எழுத்துகள் திராவிட எழுத்துகள் என்றும் குறிப்பிட இயலாது. எனினும் முழுமையான ஆய்வு தேவை.

இந்த ஆய்வு மையம் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் வல்லுநர்கள் பங்கேற்று ஆய்வுரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்படும்.

ஆய்வாளர்களின் ஆய்வேடுகள், நூல்களை தொகுத்து வெளியிட பண்பாட்டு ஆய்வு மையம் நடவடிக்கை எடுக்கும்.

இது போன்ற ஆய்வு மையங்கள் தங்களிடம் உள்ள ஆய்வேடுகள், ஆய்வு நூல்கள் ஆகியவற்றின் பிரதிகளை இந்த ஆய்வு மையத்துக்கு அனுப்பவேண்டும்.

மொழியியல் தொடர்பான ஆய்வுகளையும் இந்த ஆய்வு மையம் மேற்கொள்ளும் என்றார் ஐராவதம் மகாதேவன்.

ஆய்வு மையத்துக்கு நன்கொடை: இந்த ஆய்வு மையத்துக்கு ஐராவதம் மகாதேவன் தனது ஆய்வு நூல்களையும் இலச்சினைகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளார். அதைப் போல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் மறைந்த பேராசிரியர் கிஃப்ட் சிரோமணியின் ஆய்வுக் கட்டுரைகளை அவரது மனைவி ராணி சிரோமணி வழங்கினார்.

சிந்துவெளி பண்பாடு கி.மு.2600-ம் ஆண்டு முதல் கி.மு. 1900 வரை தழைத்தோங்கியது.

தமிழகத்தில் காவிரிப் படுகையில் மயிலாடுதுறை அருகே செம்பியன் கண்டியூர் கிராமத்தில் கிடைத்த கற்கோடரிகளில் சிந்துவெளி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. இது வணிகத் தொடர்பைக் காட்டுகிறது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பத்திரிகையாளர் என். ராம் ஐராவதம் மகாதேவனின் தொல்லியல் நிபுணத்துவதைப் பாராட்டினார். பத்திரிகை ஆய்வாளர் எஸ்.முத்தையா வரவேற்றார். ரோஜா முத்தையா நூலக அறங்காவலர் சுந்தர் நன்றி கூறினார்.

Posted in Archaeology, Civilizations, Culture, Dravidian Languages, Ervatham Mahadevan, Events, Evolution, History, Indus Valley, inscriptions, Iravatham Mahadevan, Research, Roja Muthiah Research Library, Sindhu Valley, Speech | Leave a Comment »

Jegamathy Kalaikkoodam’s Regai – Docu-drama review by Ravikkumar

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

ஆவணம்: அது இருண்ட காலம்!

ரவிக்குமார்

இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துவங்கி அறுபது ஆண்டுகள் ஆகின்றது. மாபெரும் ஜனநாயகக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு ஐம்பத்தேழு ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் நாட்டில் எல்லோரின் சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் இருக்கின்றதா? இரட்டைக் குவளை முறை ஒழிந்துவிட்டதா? உத்தரப்பிரதேசத்திலிருந்து அசாமிற்குச் செல்லும் மக்களைக் கொன்று குவிக்கும் உல்ஃபா தீவிரவாதம் மறைந்துவிட்டதா? ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் சாதியின் பெயராலும், இனத்தின் பெயராலும் அவர்களால் விதைக்கப்பட்ட வேற்றுமைகள் இன்றுவரையிலும் அப்படியேதான் இருக்கின்றன” என்னும் ஆதங்கத்தை சற்று உரக்கவே சொல்கிறது ஜெகமதி கலைக்கூடம் வெளியிட்டிருக்கும் “ரேகை’ என்னும் ஆவணப்படம்.

“”பிரிட்டிஷ் ஆட்சி செய்த நாடுகளில் அதற்கு எதிராகச் செயல்பட்ட இனக்குழுக்களையும், சமூகங்களையும் அடக்குவதற்கு பலவிதமான வழிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் கடைப்பிடித்தது. அதில் முக்கியமான ஒன்றுதான் “குற்றப் பழங்குடிகள் சட்டம்.’ இந்தச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட குழுக்களில் இருக்கும் ஆண்கள் அத்தனை பேரும், அவர்கள் பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் உள்ள பதிவேட்டில் தங்களின் கைவிரல் ரேகையைப் பதித்துவிட்டு, இரவு முழுவதும் தங்கியிருக்கவேண்டும். இந்த அடக்குமுறைச் சட்டத்தை உலகம் முழுவதும் தான் ஆட்சி செய்த நாடுகளில் பிரயோகித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் முடிவடைந்ததும், ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக்கள் எவையெவை என நாடு முழுவதும் சர்வே எடுக்கப்பட்டது. விவசாய நாடான இந்தியாவில், விவசாயம் செய்வதற்குப் பயன்படும் மண்வெட்டி, கதிர் அறுக்கும் அருவா வைத்திருந்த விவசாயிகள் கூட பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் 200 க்கும் அதிகமான சாதிக் குழுக்களை இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் 90-க்கும் அதிகமான சாதிகளைப் பதிவு செய்திருக்கின்றனர். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிடியில் நாம் அனைவருமே குற்றப்பரம்பரைகளாக இருந்தவர்கள் தான். அப்போது ஒற்றுமை என்ற ஒன்று இருந்ததால்தான், ஆசியாவிலேயே இந்தச் சட்டத்தை நம்மவர்களால் முதன்முதலாக எதிர்க்கமுடிந்தது. ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு, அன்றைக்கு ஒற்றுமையாக இருந்த சாதிகளுக்குள் இன்று பகைமையை வளர்த்துக் கொண்டிருப்பது சரியா? என்ற கேள்வி, ரேகை ஆவணப்படத்தைப் பார்ப்பவர்களின் மனதில் எழும்ப வேண்டும். இதுதான் இந்தப் படத்தின் நோக்கம்” என்றனர் தயாரிப்பாளர் தீனதயாள பாண்டியனும், இயக்குனர் தினகரன் ஜெய்யும்.

ரேகை ஆவணப்படமாக இருந்தாலும், அதில் முழுக்க முழுக்க ஆவணங்களுக்கும், குறிப்புகளுக்கும் மட்டுமே இடம் தராமல், தேவையான இடங்களில் போராட்டக் காலத்தை நம் கண்முன்னே நிறுத்தும் வகையில் சிறந்த நடிகர்களைப் பயன்படுத்தி “டாக்கு-டிராமா’ யுக்தியில் படம்பிடித்துள்ளனர். நிறைய காட்சிகளுக்கு தெய்வாவின் ஓவியங்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

“”இந்தக் குற்றப் பழங்குடி சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மக்களிடமும் இருந்தது. சுபாஷ் சந்திர போஸ் பிறந்த சாதியையும் இந்தச் சட்டத்தை எதிர்த்ததற்காக குற்றப் பழங்குடியினர் லிஸ்ட்டில் சேர்த்திருந்தனர். ஆந்திராவில் உச்சாலியா என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தின் வேரையே இந்தச் சட்டம் நிர்மூலமாக்கியிருக்கிறது.” என்றார் இயக்குனர் தினகரன் ஜெய்.

மதுரைக்கு அருகிலிருக்கும் பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பதினேழு பேர்கள்தான், ஆசியா கண்டத்திலேயே இந்தச் சட்டத்தை எதிர்த்து முதன்முதலாகக் களப்பலி ஆனவர்கள். இவர்களில் மாயக்காள் என்னும் பெண்ணும் ஒருவர். மாயக்காளாக “விருமாண்டி’ படத்தில் நடித்த சுகுணா பாத்திரத்தின் தன்மை உணர்ந்து மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சம்பவத்தை நம் கண்முன்னே நேர்த்தியான ஆவணமாக்கியிருக்கிறது-“ரேகை’

Posted in British Rule, Deenathayala Pandiyan, Deenathayala Panidyan, Dheenadhayala Panidyan, Dheenathayala Pandian, Dheenathayala Panidyan, Dhinakaran Jai, Dinakaran Jai, Docu Drama, Documentary, Independence, India, Jegamadhy Kalaikoodam, Jegamathy Kalaikoodam, Jekamadhy Kalaikkoodam, Jekamathy Kalaikoodam, Mayakkaal, Movies, Ravikkumar, Ravikumar, Regai, Rekai, Republic, Short Films, Suguna, Suhuna, Sukuna, Terrorism, Tribes, ULFA, Virumandi | 2 Comments »

Ira Murugan – London Diary: Thames Dames, England Coovum

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

லண்டன் டைரி: நடந்தாய் வாழி தேம்ஸ்!

இரா. முருகன்

சாயந்தரமும் ராத்திரியும் சந்தித்துக் கைகுலுக்கிக் கொள்ளும் நேரம். மெல்லப் படர்ந்து கொண்டிருக்கும் இருட்டில் லண்டன் நகருக்குக் குறுக்கே கோடு கிழித்தபடி நீண்டு விரிந்து கிடக்கும் தேம்ஸ் நதி. கரை நெடுக நியான் விளக்குகளும், மெர்க்குரி வேப்பர் குழல் விளக்குகளும் பிரகாசிக்கும் கட்டிடங்களிலிருந்து கசியும் ஒளி. அது நதியலைகளில் பிரதிபலித்தும் மறைந்தும் போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. நதிக்கரையில் ஒரு மதுக்கடை. பின்வரிசை நாற்காலியில் நான். மற்றும் இத்தாலிய, பிரெஞ்சு நண்பர்கள் இருவர்.

விடுமுறை நாள் இது. காலையிலிருந்து திரைப்பட விழா கொண்டாடி, ராபர்ட்டோ ரோஸலினி, லூயி புனுவல் பெட்ரோ ஆல்மடோவார் என்று திரையுலகச் சிற்பிகளின் படங்களை வரிசையாகப் பார்த்து முடித்து, விவாதித்தபடியே மதுக்கடையில் நுழைந்திருக்கிறோம்.

“”மதுக்கடை வினாடிவினா நடக்கப் போகிறது. நீங்களும் பங்கேற்கிறீர்களா?” என்று விசாரிக்கிறார் கடை உபசரிப்புப் பெண். “”இல்லை; ஆளுக்கொரு கோப்பை ஒயின் போதும்” என்று சிரித்தபடி தலையசைக்கிறார் நண்பர் பாஸ்க்யூல். இத்தாலிய உச்சரிப்பில் அவருடைய ஆங்கிலம் மென்மையான சங்கீதம் போல் ஒலிக்கிறது.

“”லூயி புனுவல் சினிமாவின் விஷுவல் சர்ரியலிசத்தில் சால்வடார் டாலி ஓவிய பாதிப்பு”. பிரெஞ்சு நண்பர் அந்த்வான் விவாதத்தைத் தொடர, நான் கைகாட்டி நிறுத்துகிறேன். “”இன்றைக்கு முழுக்க இலக்கியத்தரமான சினிமாவைச் சுவாசித்து. பகல் சாப்பாட்டோடு மென்று, குடிதண்ணீரோடு கலக்கிக் குடித்தாகிவிட்டது. வேறே ஏதாவது பேசலாமே. உதாரணமாக இந்த மதுக்கடை பற்றி, அந்த தேம்ஸ் நதி பற்றி”.

“”அது தேம்ஸ் இல்லை, டெம்ஸ்”, இத்தாலிய நண்பர் சிரித்தபடி குவளையை உயர்த்துகிறார். சினிமா வரலாற்றோடு, லண்டன் சரித்திரமும் முழுக்கத் தெரிந்தவர்.

“”ஒண்ணாம் ஜார்ஜ் மன்னனின் அம்மா ஜெர்மனியிலிருந்து வந்தவராம். ஜார்ஜ்க்கு தேம்ஸ் என்று சொல்ல நாக்குப் புரளவில்லை. ஜெர்மன் மொழி உச்சரிப்பில் டெம்ஸ் என்று அரசன் சொல்ல, என்னத்துக்கு வம்பு என்று அரசவையில் எல்லோருமே மரியாதையை உத்தேசித்து அதேபடி டெம்ஸ் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்”. ராஜா உச்சரிச்சா அது ராங்காப் போனதில்லை என்பதால் இன்றைக்கும் அதிகாரப்பூர்வமான உச்சரிப்பு டெம்ஸ்தான்.

இளங்கோவடிகள் இங்கிலாந்தில் பிறந்திருந்தால், “நடந்தாய் வாழி தேம்ஸ்’ என்று அந்த நதியைப் பெண்ணாக உருவகித்துப் பாடியிருக்க முடியாது. காரணம், இந்த நாட்டுப் பாரம்பரியப் பிரகாரம் தேம்ஸ் நதி ஆண். நதியம்மா இல்லை. நதியப்பா.

அப்பாவோ, அம்மாவோ, ஆயிரம் வருடத்துக்கு மேலாக தேம்ஸ் நதிக்கரையில் மக்கள் குடியிருக்கிறார்கள். அதில் படகு ஓட்டிப் போகிறார்கள். நூற்றைம்பது வருடம் முன்புவரை தேம்ஸில் குளித்திருக்கிறார்கள். மீன் பிடித்திருக்கிறார்கள். கரையில் பல தொழில் நடத்தி, நதியை அங்கங்கே தேங்கி நிற்கச் செய்திருக்கிறார்கள்.

1666-ம் வருடம் லண்டனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு மூன்று நாள் தொடர்ந்து ஊரே பற்றி எரிந்தது. அப்போது கூட இருக்க இடம் கிடைக்காமல், லண்டன் பாலத்தில் இரு பக்கத்திலும் வரிசையாகக் கூரை எழுப்பிக் கீழ்த்தட்டு மக்கள் வசித்திருக்கிறார்கள். பாலத்தில் வீடு கட்டி தண்ணீருக்கு மேல் இருந்ததாலோ என்னமோ ஊரை எல்லாம் அழித்த அந்த நெருப்பு, பாலத்தில் ஏறாமல் நின்றுவிட்டது. ஆனால் நதிக்கரையிலும், நதிக்கும் குறுக்கே ஆற்றுப் பாலத்தில் சகலரும் இஷ்டத்துக்கு அசுத்தம் செய்ய, அந்தக் கால தேம்ஸ் இந்தக் காலக் கூவம் போல் மணக்க ஆரம்பித்தது. காற்று அதிகமான நேரங்களில் லண்டன் முழுக்க இந்தச் சுகந்த பரிமள வாசம் நிறைந்து பரவ, மக்கள் மூக்கைக் கையால் பொத்திக்கொண்டு நடைபயில வேண்டிப் போனது. அந்தப்படிக்கே சாப்பிடவோ அல்லது அதைவிட முக்கியமாக மதுக்கடையில் பியர் குடிக்கவோ கஷ்டமாக இருந்ததால் அரசாங்க அலுவலகங்களில் புகார் மனுக்கள் குவிந்தன. 1858-ம் வருடம் ஒரு பகல் பொழுதில் தேம்ஸ் நதியில் எழுந்த உச்சபட்ச வாடை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் புகுந்து அடர்த்தியாகக் கவிய, எதிர்க்கட்சி மட்டுமில்லை, ஆளுங்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து உடனடியாக வெளிநடப்பு அல்லது வெளியோட்டம் செய்ய வேண்டி வந்தது. உலக சரித்திரத்திலேயே கழிவுநீர் வாடை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டிவந்தது முதல் தடவையாக அப்போதுதான்.

இத்தாலிய நண்பர் டெம்ஸ் நதியின் பழங்கதையைச் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டிருக்க, எந்த வாடையும் இல்லாது, பளிங்கு போல் தண்ணீரோடு சுத்தபத்தமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தக்கால தேம்ûஸ நினைத்துப் பார்க்கிறேன். இருபது கோடி லிட்டர் சுத்த நீர். காஸ்டோல்ட் பகுதியில் பிறந்து வடகடலில் கலக்கிறவரை மாசுமறுவற்று ஓடுகிற ஆற்றில் ஒரு தேங்கலோ அடைப்போ அசுத்தமோ கிடையாது என்று நண்பர் சொல்லும்போது “எங்க தலைநகரத்துலேயும் இப்படி ஓர் ஆறு இருக்கு’ என்கிறேன். இத்தாலிய நண்பர் இப்போதைக்கு சென்னை வரப்போவதில்லை என்பதில் ஓர் ஆறுதல்.

மதுக்கடையில் “பப் க்விஸ்’ என்ற வினாடிவினா ஆரம்பமாகிறது. மைக்கைப் பிடித்தபடி ஒருத்தர் குடிமக்களுக்கு முன்னால் மேடையில் கேள்வி கேட்கத் தயாராக நிற்கிறார். சுற்றிலும் பார்க்கிறேன். முட்டக் குடித்தபடி இருக்கும் இந்த ஜனக்கூட்டத்திடம் என்ன க்விஸ் நடத்தப் போகிறார்? இரண்டு விரலை விரித்துக் காட்டி இது எத்தனை என்று கேட்டு, உத்தேசமாகச் சரியாக மூணு என்று சொன்னவர்களுக்குப் பரிசாக இன்னொரு கோப்பை பியர் கொடுப்பார்களோ?

“”தேம்ஸ் நதியில் ஒரு காலத்தில் மீன் பிடிக்கும் தொழில் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. பெரிய வலை விரித்துப் பெரிய மீனைப் பிடிப்பது போதாமல், ஆகக் குறுகிய வலை நெய்து சின்னச் சின்ன, வயதுக்கு வராத மீனை எல்லாம் வாரி எடுப்பது தொடர்ந்தது. சட்டம் போட்டு வலை சைஸ் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள். இப்போது தேம்ஸில் மீனே கிடைப்பதில்லை. ஆனால் அன்னப்பறவை அவ்வப்போது தட்டுப்படும். அதை வேட்டையாடத் தடை உத்தரவு அமலில் உள்ளது. அன்னப்பறவை மாமிசம் சாப்பிட இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மட்டுமே அனுமதி உண்டு. எலிசபெத் ராணியின் அம்மா மகாராணி இரண்டு வருஷம் முன்னால் அன்னம் ரோஸ்ட் சாப்பிட்டுவிட்டுத்தான் கடைசி மூச்சை விட்டார்” நண்பர் தேம்ஸ் கதையைத் தொடர்கிறார். அந்த அன்னத்துக்குப் பதிலாக சுடச்சுட சீரகச் சம்பா அன்னம், சாம்பார், கீரை மசியல் சாப்பிட்டிருந்தால் ராணிப்பாட்டி இன்னும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்திருப்பார் என்று தோன்றுகிறது.

“”சுட்டுக் கொல்லப்பட்ட இங்கிலாந்து பிரதமர் யார்?” மதுக்கடை வினாடிவினா நடத்துனர் நிறுத்தி நிதானமாகக் கேட்கிறார். சாயந்திரம் பத்திரிகை படிக்காமல் போனது நினைவு வர, பதறுகிறேன்.

“”1812-ம் வருடம் மே பதினொன்றாம் தேதி நாடாளுமன்ற வராந்தாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்பென்சர் பெர்சிவல்” விக்கலுக்கு நடுவே ஒரு குடிமகன் பியர் கோப்பையை உயர்த்திச் சொல்லிய விடை சரியானதாக அறிவிக்கப்படுவதைக் கேட்டபடி வெளியே வருகிறேன்.

Posted in Books, Buffs, Coovum, England, Era Murugan, Era Murukan, Films, History, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Literature, London Diary, Pub, River, Riverbanks, Riverside, Thames, UK | Leave a Comment »

Mooligai Corner – Vijayarajan in Dinamani Kathir: Pirandai

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

மூலிகை மூலை: வயிற்றுக் கோளாறை நீக்கும் பிரண்டை !

விஜயராஜன்

பிரண்டை நாற்கோண வடிவ தண்டுகளையுடைய ஏறு கொடி இனமாகும். பற்றுக் கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டு இருக்கும். சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். சிவப்பு நிற உருண்டையான சிறிய சதைக் கனி உடையது. கால் அடி முதல் அரை அடி வரை நீளத்தில் கணுக்கள் அமைந்து இருந்தால் அது பெண் இனம் என்றும் அரை அடிக்கு மேல் ஓர் அடி வரை நீளவாட்டில் கணுக்கள் அமைந்து இருந்தால் அது ஆண் இனம் என்றும் அறிந்து கொள்ளலாம். இந்தக் கணுக்களில் இருந்தே சுருள் சுருளான விழுதுகள் வெளிப்பட்டு 15 நாளில் முற்றிய இலையாக மாறிவிடும். இது காட்டுப் பகுதிகளிலும் கரடுமுரடான கற்கள் நிறைந்த இடங்களிலும் காணப்படுகின்றன. இதற்கு அதிகமான தண்ணீரோ, ஈரப்பசையோ தேவையில்லை. காற்றில் கலந்திருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வாழும் ஆற்றல் உடையது. குடல் வாயுவை அகற்றுதல், பசியை அதிகப்படுத்துதல், நுண்புழுக்களைக் கொல்லுதல் ஆகிய மருத்துவக் குணங்களைக் கொண்டது.

வேறுபெயர்கள்: கிரண்டை அரிசணி.

வகைகள்: உருட்டை, சதுர வட்டை, முப்பிரண்டை, மூங்கிற்பிரண்டை, கோப்பிரண்டை.

ஆங்கிலப் பெயர்கள்: Cissus quadrangularis, Linn, Vitaceae.

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

பிரண்டையின் விழுது, கணு, மேல்தோல் இவற்றை நீக்கிவிட்டு உள்சதையில் இருக்கும் நரம்புகளையும் தனியாகப் பிரித்து நீக்கிவிட்டு பிரண்டையின் சதைப் பற்றை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, கொத்தமல்லி, மிளகு, புதினா, கொஞ்சம் புளி, இஞ்சி, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு வகைக்குத் தகுந்தாற்போல் எடுத்துச் சுத்தம் செய்து நல்லெண்ணெயில் வதக்கி அரைத்து துவையலாக்கி உண்டுவர நாவறட்சி, பித்தம், கிறுகிறுப்பு குமட்டல், குன்மம், செரிமானக் கோளாறு, வாய்வுத் தொல்லை குணமாகும். பசியைத் தூண்டும்.

பிரண்டைச் சாற்றில் புளி, உப்பு கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றிட சதைப் பிடிப்பு, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு வீக்கம், எலும்பு முறிவு குணமாகும்.

பிரண்டையை அதிக அளவில் எடுத்து சுத்தம் செய்து நிழலில் காய வைத்து உலர்த்தி தீ வைத்துக் கொளுத்த சாம்பலாகும். இதை எடுத்து அதற்கு 3 பங்கு தண்ணீர் ஊற்றி சுத்தமான பாத்திரத்தில் வைத்து அலச வேண்டும். பின்னர் தும்பு, தூசிகளை நீக்கி விட்டு ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். மறுபடியும் கசடு உள்ள முதல் பாத்திரத்தில் கொஞ்சம் நீரை ஊற்றி மறுபடியும் அலசி நீரை 2வது பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். ஒரு நாள் வடித்த நீரை மூடி அசையாமல் வைத்திருந்தால் நீர் தெளிவாகிப் பன்னீர் போல இருக்கும். இந்த நீரை மறுநாள் எடுத்துப் பார்த்தால் தெளிந்திருக்க வேண்டும். அப்போது சரியாக தெளிந்திருக்கவில்லையென்றால் ஏதாவது ஒரே வகையான விறகையோ அல்லது வரட்டியையோ(பருத்தி செடிமார், கம்புத் தட்டை, பசுமா வரட்டி, கருவேலம் மரத்தின் கட்டைகள்) வைத்து சிறு தீயில் எரிக்க தண்ணீர் வற்றச் செய்து மெழுகு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். தீ அதிகமானால் பொங்குவதோடு முறிந்து விடும். மெழுகுபதம் வந்ததும் கவனமாக அதை எடுத்து பீங்கான் கிண்ணத்தில் ஊற்றி அரை நாள் கழித்துப் பார்த்தால் குழம்பு பளிங்குப் பாறையாக வெண்மையான நிறத்தில் மாறி இருக்கும். இதைப் பிரண்டை உப்பு என்று கூறுவர். இதை ஒரு சம்பா அரிசி எடை எடுத்து பசும்பாலிலோ, ஆட்டுப் பாலிலோ, தாய்ப்பாலிலோ கலக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க நாக்கில் அச்சரம், வாயில் அச்சரம், உதட்டில் வெடிப்பு, புண், வயிற்றில் உள்ள குடல் புண், நுரையீரல் வீக்கம் குணமாகும்.

மிளகு அளவு பிரண்டை உப்பை பசும் வெண்ணெயில் குழைத்து 2 வேளை சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும். இரத்தப் போக்கு, இரத்தம் தடைபடுதல், குத்துக் கடுப்பு குணமாகும்.

குண்டுமணி அளவு பிரண்டை உப்பை எடுத்து 5 சொட்டு நெய்விட்டுக் கலந்து அதைக் கருணைக் கிழங்கு லேகியத்துடன் 2 வேளை உண்டு வர வாய்நாற்றம், மலவாய் அரிப்புடன் கூடிய உள், வெளி மூலங்களினால் சவ்வுகளில் ரத்தக் கசிவு, கம்பு முளைச் சீழ் வடிதல் குணமாகும்.

பிரண்டை உப்பு 2 அரிசி எடை எடுத்து பாலில் கலந்து 3 வேளை குடித்துவர சிறுகுழந்தைகளின் பேதி, வாந்தி, சீதபேதி, நுரைத்த பச்சைப் பேதி நிற்கும்.

பிரண்டை உப்பை 1 குண்டுமணி அளவு நெய் அல்லது வெண்ணெயில் 2 மண்டலம் 2 வேளை சாப்பிட்டு வர சூதகச் சிக்கல், சூதக வலி குணம் ஆகும்.

Posted in Cissus quadrangularis, Dinamani Kathir, Herbs, Linn, Mooligai Corner, Natural Food, Naturotherapy, Organic Food, Pirandai, Pirantai, Prandai, Vijayarajan, Vitaceae | 7 Comments »

Ayurvedha Solutions for Dental Hygiene – Prof. S Swaminathan

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாய் சுத்தம்…வயிறு சுத்தம்… பல் சுத்தம்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் வயது 40. எனக்குக் கடந்த ஐந்து வருடங்களாக பல் இடுக்குகளில் நோய்த் தொற்று ஏற்படுகிறது. இதனால் இரண்டு பற்கள் எடுக்கப்பட்டு விட்டன. இந்நோய் பயோரியா எனப்படும் ஒருவகை ஈறுநோய். பல்லில் எந்தவிதமான சேதங்களும் இல்லை, ஆனால் பல்வலி ஏற்படுகிறது. மாத்திரைகள் சாப்பிட்டால் வயிற்றில் புண் ஏற்படுகிறது. இந்நோய் மாற ஆயுர்வேதம் கூறும் வழிகள் என்ன?

சி. தமிழ்ச்செல்வி, மன்னார்குடி.

பற்கள் சுத்தமாக இருக்க வாய் சுத்தமாக இருக்கவேண்டும். இரைப்பை சுத்தமாகவும் நோயற்றுமிருந்தால் வாய் சுத்தமாக இருக்கும். பற்களின் ஆரோக்கியத்திற்கு பற்களை மட்டும் தேய்த்து அலம்பினால் போதாது. வாயையும் வயிற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். கசப்பு, துவர்ப்பு, காரம் இந்த மூன்று சுவைகளும் வாயில் கிருமிகளை வளர அனுமதிப்பதில்லை. பற்களின் இடுக்குகளில் தேங்கும் பிசுபிசுப்பைத் தடுப்பதால் ஊத்தை அதிகமாவதில்லை; காரை பிடிப்பதில்லை. மேலும் வாய்ப்புண்ணை ஆற்றுவதில் கசப்புக்கும் துவர்ப்புச் சுவைக்கும் ஈடாக எதையும் குறிப்பிடமுடியாது.  சிலர் எப்போதும் எதையும் வாயில் போட்டு கொறித்துக் கொண்டிருப்பார்கள். இதன் சிறு துணுக்குகள் பற்களிடையே தங்கும். எதைச் சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு இதனால் எந்தத் தொந்தரவும் இல்லை. பலருக்கும் இந்தப் பழக்கம் இருப்பதில்லை. உணவு செரிக்கும் நிலையில் வயிற்றில் சுரக்கும் புளிப்பின் வாடை எகிறுகளின் இறுக்கத்தைத் தளர்த்தி விடும். பற்களுக்கும் எகிறுக்கும் நடுவே உள்ள இடைவெளி விரிந்து அதில் வாயிலுள்ள பொருள் தேங்கி அழுகும். எகிறுகளில் அழற்சி உண்டாக்கும். அழற்சியும் இடைவெளியும் அதிகமாகி காரைபடியும். காரையை அகற்றினால் ரத்தக் கசிவும் பற்களின் ஆட்டமும் அதிகமாகும்.  கரும்பை நன்றாகக் கடித்துச் சாப்பிட பற்கள் அழுக்கு நீங்கி பளபளப்புடன் இருக்கும். ஆனால் இன்று பலரும் ஜுஸôக்கிச் சாப்பிடுவதையே விரும்புகின்றனர். இது தவறாகும். முற்றிய தேங்காய்த் துண்டை மெல்ல, சாவகாசமாக மென்று சுவைத்துக் கொண்டே இருக்க, வாய்ப்புண், எகிறு அழற்சி ஆகியவை நீங்கும்.  வாயில் பற்பல நோய்க்கிருமிகள் தங்க இடமுண்டு. உணவுப் பகுதிகள் பற்களின் இடுக்குகளில் சேரும்போது அவற்றை இந்தக் கிருமிகள் உணவாக்கிக் கொள்கின்றன. பற்களின் மேல் கவசமாக விளங்கும் எனாமலை அரித்துவிடும். பற்களைச் சொத்தையாக்கும். கிருமிகள், பல் இடுக்கில் உள்ள உணவை உண்ணும்போது ஏற்படும் அமிலம் எனாமலிலுள்ள சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து ஏற்படும் புதிய கலவையே காரை. சுண்ணாம்புச்சத்து பற்களில் குறைந்துவிட்டால் பற்கள் நொறுங்கி விடுகின்றன. இதுபோல நேராமல் வாயைத் தூய்மையாக்கும் பணியை உமிழ் நீர் செய்கிறது.  இந்த உபாதை நீங்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சிகளும், மருந்துகளும்…  *வாயைச் சுத்தமாக்கி, உமிழ் நீர் சுரக்கும் கோளங்களுக்குச் சுறுசுறுப்பு தரவும் புத்துயிர் அளிப்பதற்கும், பற்களின் இடுக்குகளில் காரை படியாதிருக்கவும் நல்லெண்ணெய்யை காலையில் வாயில் விட்டுக் கொப்பளிக்கவும். நல்லெண்ணெய் வாயில் அழுக்கைத் தங்கவிடாது. காரையைக் கரைக்கும். புளிப்பை மாற்றும். உமிழ் நீரைச் சுத்தப்படுத்தும். எள்ளை மென்று வெகுநேரம் வாயில் வைத்திருந்து பிறகு கொப்பளித்துத் துப்புவதும் நல்லதே.  * வாலுளுவை 50 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 2 கிராம், இந்துப்பு 2 கிராம் இவற்றை நுண்ணிய தூளாக்கிக் கொள்ளவும். தேன் 15 மி.லி., நல்லெண்ணெய் 15 மி.லி. அளவு கலந்து குழப்பிக் கொள்ளவும். இந்தப் பற்பசையைக் கொண்டு விரல்களில் தோய்த்துப் பற்களைத் துலக்கவும். முன் பற்களை நடுவிரல், மோதிர விரல்களாலும், கடை வாய்ப் பற்களைக் கட்டை விரலாலும் தேய்ப்பது நல்லது. ஆள்காட்டி விரல் நல்லதல்ல என்று சில ஆசார நூல்கள் கூறுகின்றன. குறுக்காக விரலை விட்டுத் தேய்ப்பதை விட மேலும் கீழுமாகத் தேய்ப்பதுதான் நல்லது என்பது அறிஞர்களின் அறிவுரை.  * ஆயுர்வேத மருந்தாகிய அரிமேதஸ் தைலம் 5 மிலி(1 ஸ்பூன்) அளவு வாயிலிட்டு இரவில் படுக்கும் முன் நன்கு கொப்பளிக்கவும். வாயில் உமிழ் நீர் நிரம்பியதும் துப்பிவிடவும். பிறகு வெந்நீர் விட்டுக் கொப்பளிக்கவும். வாயில் நாற்றம், சீழ், எகிறு வீக்கம், காரை, பல் கூச்சம், நாக்குப் புண், அண்ணத்தில் புண் இவை ஆறும். தாடைப் பூட்டுகளுக்கு வலிவு ஏற்படும். குரல் தெளிவாக மென்மையுடன் இருக்கும். கன்னங்கள் பூரித்து முகம் உருண்டையாகப் புஷ்டியுடன் இருக்கும். உணவில் ருசி ஏற்படும். உதடு வெடிக்காது, தொண்டை, வாய் உலராது. பற்களின் வேர் கெட்டிப்படும். கடினமான பொருளைக் கூட கடித்து மெல்லலாம். பற்களில் காரை படியாது.(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvetha, Dental, Dentist, Dinamani, Hygiene, Kathir, S Swaminathan | 1 Comment »

What to Eat, How to eat & When to eat – A Primer on Indian Cooking, Foods, Vegetables

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

ஆரோக்கியம்: என்ன சாப்பிடுவது? எப்படிச் சாப்பிடுவது?
ந. ஜீவா

தாரிணி கிருஷ்ணன்

பூசணிக்காய், தயிர் எல்லாம் குளிர்ச்சின்னு சொல்றாங்களே? கீரை சாப்பிடும் போது தயிர் சேர்த்துக்கக் கூடாதுங்கிறாங்களே? வாழைப் பழத்தைச் சாப்பாட்டுக்கு முன்னால சாப்பிடணுமா? சாப்பாட்டுக்குப் பின்னால சாப்பிடணுமா? சாப்பிட்டவுடன் காபி, டீ சாப்பிடலாமா? இல்லை ஜில்லுன்னு ஒரு கூல்டிரிங்க்ûஸ உள்ளே இறக்கலாமா? சமைத்த உணவை ஃபிரிட்ஜ்ல வச்சு சூடு பண்ணிச் சாப்பிடலாமா? இப்படி நிறையக் கேள்விகளோடு சத்துணவியல் நிபுணர், ஆலோசகர் தாரிணி கிருஷ்ணனை அணுகினோம். ஒரு புன்சிரிப்புடன் நமது கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்களிலிருந்து..,

நம்மில் பலபேர் பூசணிக்காய் குளிர்ச்சி, தயிர் குளிர்ச்சின்னு சொல்லிக்கிட்டு மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் சேர்த்துக் கொள்ளுறதில்லை. சிலர் வேறு சில பொருள்களைச் சூடுன்னு சொல்லி ஒதுக்கிடுவாங்க. உண்மையில் சாப்பிடுற பொருளில குளிர்ச்சி, சூடுன்னு எதுவுமில்லை. நூற்றுக்கு ரெண்டுபேருக்கு பூசணிக்காய் சாப்பிட்டபின் சளி பிடிச்சிக்கிட்டதுன்னு வச்சுக்கங்க, அவுங்க பூசணிக்காயாலதான் சளின்னு நம்பிடுவாங்க. உண்மையில் பூசணிக்காய் அவுங்களுக்கு அலர்ஜியாயிருந்து அதனால சளிபிடித்தாலும் எல்லாருக்கும் அது அலர்ஜியாக இருக்கணும்ங்கிற அவசியமில்லை.

கீரை சாப்பிட்டா தயிர் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனால் அவங்க நினைக்கிற மாதிரி பெரிய கெடுதல் வந்துடாது. அதேசமயம் கீரையில் ஆக்ஸலேட், ஃபைட்டேன்னு சத்துக்கள் இருக்கு. தயிரில் சுண்ணாம்புச் சத்து இருக்கு. கீரையும் தயிரும் சாப்பிட்டா சுண்ணாம்புச் சத்து உடலில் சேராது. அதுபோல சாம்பார் சாதம் சாப்பிட்டு பேரீச்சம்பழம் சாப்பிடக்கூடாது. ஏன்னா இரும்புச் சத்தைக் கிரகிக்கிற தன்மை இல்லாமல் போயிடும்.

நிறையப் பேர் வாழைப் பழத்தை மலச்சிக்கலுக்குத் தர்றதுன்னு நினைக்கிறாங்க. பேதியாகிற குழந்தைகளுக்கு நல்லா கனிந்த வாழைப்பழம் ஒன்று கொடுத்தால் பேதியாவது நின்றுவிடும். வாழைப்பழத்தில் கரையக் கூடிய நார்ச்சத்து இருக்கு. அது மலச்சிக்கல் வராமல் தடுக்கும். வாழைப்பழத்தைச் சாப்பாட்டுக்கு முன்னாலேயோ, பின்னாலேயோ எப்ப வேணுமின்னாலும் சாப்பிடலாம். வாழைப்பழம் சாப்பிட்டா சளிப் பிடிக்கும்ங்கிறதுக்கு விஞ்ஞானப்பூர்வமான அடிப்படை கிடையாது. மலச்சிக்கலைப் போக்குறதுக்கு பப்பாளி, கொய்யாப்பழம் ரொம்ப நல்லது. கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி இருக்கு. அதிலுள்ள கொட்டை மலச்சிக்கலைப் போக்கும்.

சிலர் வளர்கிற குழந்தைகளுக்கு எதை வேணாலும் கொடுக்கலாம்; ஒண்ணும் செய்யாதுன்னு சொல்வாங்க. அவங்க சொல்றதில உண்மையிருந்தாலும் அதுக்காக நிறையச் சாக்லேட் வாங்கித் தரக்கூடாது. சரியாகச் சாப்பிடுற பழக்கத்தை அவங்க கத்துக் கொள்கிற வயசு இது. நிறைய சாக்லேட், நிறைய ஐஸ் க்ரீம், சிப்ஸ், பிட்ஸôன்னு உள்ளே திணிச்சிக்கிட்டிருந்தா குழந்தைகள் குண்டாகிவிடுவார்கள். 12 வயசில இருந்து 15 வயசுவரை உள்ள குழந்தைகள் உடல்பருமனால் அதிகம் பாதிக்கப்படுறாங்க. சாக்லேட்ல கொழுப்பு, மாவு, சோடியம் அதிகம். இதை அதிகம் சாப்பிடுறவங்களுக்கு 20 – 25 வயசிலே ரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் வர வாய்ப்பிருக்கு. இந்தக் காலத்துல குழந்தைகளுக்கு உடற்பயிற்சி கிடையாது. வீடுகள்ல ஃபிளாட் சிஸ்டம் வந்துட்டதால குழந்தைகள் விளையாட இடமில்லை. நிறைய ஸ்கூல்களில் விளையாட கிரவுன்டே கிடையாது. நாளைக்கு டெஸ்ட் இருந்தா இன்னைக்கு பி.டி. கிளாûஸ ஸ்கூல்லயே கட் பண்ணிடுறாங்க. டிவி பார்க்குறது, கம்ப்யூட்டர் கேம் விளையாடுறதுதான் குழந்தைங்க விளையாட்டு. அதனாலதான் சிறு குழந்தைகளுக்கும் கூட சர்க்கரை வியாதி வருது.

சாப்பிட்டவுடன் கூல்டிரிங்க்ஸ் சாப்பிடுற பழக்கம் சிலருக்கு உள்ளது. பாட்டிலில் அடைச்சு விற்கும் எந்த ட்ரிங்க்ஸýம் உடலுக்கு நல்லதல்ல. ஜூஸ்ல சர்க்கரை, கெமிக்கல்ஸ் போட்டுக் கொடுப்பாங்க. இதிலே நார்ச்சத்து கிடையாது. பழத்தைப் பிழிஞ்சு ஃபிரஷ்ஷா ஜூஸ் சாப்பிடுறது நல்லது. கூல்டிரிங்க்ஸýக்குப் பதிலா இளநீர் குடிக்கலாம்.

சிலர் டிபன் சாப்பிட்டவுடன் டீ, காபி சாப்பிடுவார்கள். காபியைவிட டீ நல்லது; டீ சாப்பிட்டா ரத்தக் குழாய்கள்ல கொழுப்புப் படியாதுன்னு சொல்வாங்க. ஆனா அது நாம் சாப்பிடுற டீக்கு அல்ல. வெளிநாடுகள்ல டீன்னு சொன்னா அது பால், சர்க்கரை இல்லாத டீ. கொதிக்கும் நீரில் இலை டீயைப் போட்டு சிறிது நேரம் கழித்து வடிகட்டிச் சாப்பிடுவாங்க. டீத்தூளை வேக வைக்கக் கூடாது. அப்படி வேகவைத்தா டீயிலுள்ள டேனன்ஸ்(பஹய்ய்ண்ய்ள்) என்ற உடலுக்கு நல்லது செய்யும் சத்து அழிந்துவிடும். பால், சர்க்கரை சேர்த்து நல்லா கொதிக்கவச்சு சாப்பிடுற டீயால உடம்புக்குக் கெடுதி. சாப்பிட்டவுடன் டீ சாப்பிட்டா அது வயிற்றில் உள்ள அமிலத்தை அதிகப்படுத்தும்.

ஃபிரிட்ஜில் மாவை வைத்துப் பின்னர் எடுத்து இட்லி, தோசை செய்றதாலே பெரிய பாதிப்பில்லை. ஏன்னா அது புளிக்கிற ஐட்டம். மிச்ச உணவுப் பொருள்களை அதில் வச்சு திரும்பத் திரும்ப ஹீட் பண்ணினா ஒண்ணு, அதில உள்ள சத்து அழிஞ்சு போயிடும். இன்னொண்ணு, அதில் கிருமிகள் உருவாயிடும். இப்பல்லாம் கடைகள்ல பாக்கெட்ல அடைச்ச மாவு விக்கிறாங்க. அந்த மாவுல என்ன கலக்கிறாங்கன்னே யாருக்கும் தெரியாது. அதில நிறைய சோடா உப்புப் போடுறாங்க.

சிலர் அசைவ உணவோடு சைவ உணவைச் சேர்த்துச் சாப்பிட்டாக் கெடுதிம்பாங்க. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. மட்டன் சமைக்கும் போது அதோடு உருளைக் கிழங்கு போடுறாங்க. வெங்காயம் இல்லாம அசைவ உணவு சமைக்க முடியுமா? பிரியாணிக்கு கத்திரிக்காயில் செய்யப்பட்ட கூட்டுமாதிரி ஒண்ணு செய்வாங்க. அதனால அசைவ உணவும் சைவ உணவும் ஒத்துப் போகாதுங்கிறது உண்மையல்ல. குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அசைவம் சாப்பிட்ட அன்னைக்கு கண்டிப்பா ஒரு கூட்டோ, பொரியலோ சேர்த்துக் கொள்ளணும். அசைவ உணவைக் கூட நிறைய எண்ணெய்யில்லாம சமைக்கணும்.

தேங்காய் சாப்பிட்டா ரத்தத்தில் கொழுப்புச் சத்துச் சேரும்னு சொல்வாங்க. அது உண்மைதான். ஆனா தேங்காயில் நார்ச்சத்து அதிகம். உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பும் தேங்காயில் உள்ளது. என்றாலும் அதிகம் தேங்காய் சாப்பிட்டால் கெடுதிதான். கேரள மக்கள் அதிகம் தேங்காய் சேர்த்துக் கொண்டாலும் அவுங்களுக்கு அதிகம் பாதிப்பு வராம இருக்கிறதுக்குக் காரணம், அவுங்க தேங்காயோடு மீனையும் அதிகம் சேர்த்துக்கிறதுதான். அதனால பாதகம் வருவது இல்லை. மேலும் உடலுழைப்பும் அவுங்களுக்கு அதிகம்.

உலகம் பூராவும் பெண்களுக்கு இருக்கிற பிரச்சினை ரத்தசோகை. ரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைந்து போறதுதான் ரத்தசோகை ஏற்படக் காரணம். இந்த ரத்த சோகையில் இரண்டாவது ஸ்டேஜ் என்று ஒன்று உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கு வந்துவிட்டால் பிறக்கிற குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். இரும்புச் சத்து அதிகரிப்பதற்கு பெண்கள் பச்சைக் கீரை, காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு, தர்ப்பூசணி சாப்பிடலாம். பீட்ரூட்டில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதாகப் பலர் நம்பிக்கிட்டிருக்காங்க. ஆனா அதில் உண்மையில்லை. பேரீச்சம்பழத்தைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை வியாதி வந்த பின்னால் அவஸ்தைப்படுவதைவிட வராமல் தடுப்பது நல்லது. நிறையக் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளணும். உதாரணமா 4 பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு அதிகம் போனா கால் கிலோ காய் சமைக்கிறாங்க. இது போதாது. குறைந்தது 1 கிலோ காய்கறியாவது சேர்த்துக் கொள்ளணும். அதற்கடுத்து தினம்தோறும் 45 நிமிடங்கள் வாக்கிங் போறது நல்லது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கிட்டா சர்க்கரை வியாதியின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். முதல்ல எல்லாம் சர்க்கரை வியாதியைப் பணக்காரர் வியாதிம்பாங்க. இப்ப ஏழை, பணக்காரன்னு வித்தியாசம் பார்க்காம, வயசானவங்க, குழந்தைங்கன்னு வித்தியாசம் இல்லாம சர்க்கரை வியாதி வருது. இதுக்குக் காரணம் டென்ஷன். டென்ஷன் இல்லாதவர் யாருமில்லை. குழந்தைகளுக்கும் கூட டென்ஷன் இருக்கு. டென்ஷன் இல்லாமத் தவிர்க்க மூச்சுப் பயிற்சி, தியானம், ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த மெல்லிசான இசையைத் தினம்தோறும் பத்துநிமிடம் கண்ணை மூடிக் கொண்டு கேட்பது என்று முயற்சி பண்ணலாம்.

சர்க்கரைவியாதியைப் போலவே வரும் இன்னொரு வியாதி தைராய்டு ப்ராப்ளம். இது வர்றதுக்கு முக்கியக் காரணம் டென்ஷன். அதிலும் தைராய்டு சுரப்பி சரிவரச் சுரக்காம இருந்தா ஹைப்போ தைராய்டு ப்ராப்ளம் வரும். இதுதான் இங்க அதிகம். இவங்க முக்கியமா முட்டைக் கோஸ், காலிஃப்ளவர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மன இறுக்கம் இல்லாம வாழப் பழகிக்கணும்.

சிலர் இயற்கை உணவு சாப்பிடணும் என்பாங்க. இதில கவனிக்க வேண்டியது என்னன்னா, இயற்கை உணவே இப்போது நெறையக் கெமிக்கல்ஸ்னால கெட்டுப் போயிருக்கு. சமைத்த உணவோடு இயற்கை உணவையும் சேர்த்துச் சாப்பிடலாம்.

Posted in Cooking, Eat, Foods, Healthcare, Kadhir, Vegetables | Leave a Comment »