Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 19th, 2007

LPG connection – Kerosene, Cooking gas Cylinder distribution policy: Analysis & Study

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

எரிவதை எடுத்தால் பொங்குவது நிற்கும்

சமையல் எரிவாயு, பொதுவிநியோக மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு அளித்துவரும் மானியத்தை ஏழைகளுக்கு மட்டும் தருவது பற்றி மத்திய அரசு யோசித்து வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மண்ணெண்ணெய்க்கு லிட்டருக்கு ரூ.15 வீதம் 118 லட்சம் கிலோ லிட்டருக்கு ரூ. 17,700 கோடி மானியம் அளிக்கப்படுகிறது. அதேபோன்று, வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.150 வீதம் 74.42 கோடி சிலிண்டர்களுக்கு ரூ.11,163 கோடி மானியம் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் ரூ.27,863 கோடி. இதைப் பெரும் சுமையாக மத்திய அரசு கருதுவதில் வியப்பில்லை.

ஆனால், இவற்றின் விநியோகத்தில் நிலவும் முறைகேடுகளைத் தடுத்தாலே மானியச் செலவு பாதியாகக் குறைந்துவிடும் என்பதுதான் உண்மை நிலை. வீட்டுச் சமையலுக்காக விலை குறைத்து விற்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் முறைகேடாக, வணிகப் பயன்பாட்டுக்கு திசை திருப்பப்படுகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டரிலிருந்து வணிக சிலிண்டருக்கு எரிவாயுவை மாற்றிக்கொடுக்கும் “”சமூகவிரோத குடிசைத் தொழில்” பரவலாக நடக்கிறது. பொது விநியோக மண்ணெண்ணெயும் தொழிற்கூடங்களுக்கு கூடுதல் விலையில் விற்கப்படுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஒரு நுகர்வோருக்கு குறைந்தபட்சம் 21 நாள் இடைவெளிக்குப் பிறகுதான் தர வேண்டும் என்பது எண்ணெய் நிறுவனத்தின் நிபந்தனை. ஆனால் நுகர்வோருக்கே தெரியாமல் அவரது கணக்கில் ஒவ்வொரு 21 நாளுக்கும் ஒரு சிலிண்டரை வைத்து கள்ளச் சந்தைக்கு அனுப்பப்படும் முறைகேடுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த முறைகேடுகளைத் தடுக்க முடியாத மத்திய அரசு, தங்கள் நிதியை வீணடிக்காமல், மானியத்தை ஏழைகளுக்கு மட்டும் கொடுத்து, நிதிச் சுமையை குறைத்துக் கொள்ள முயல்கிறது.

ஏழைகள் என்பதை வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் என்று வைத்துக் கொண்டால், அனைத்துக் குடும்பங்களுமே சமையல் எரிவாயு மானியத்தை இழக்க நேரிடும். மண்ணெண்ணெய் பயன்படுத்துவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் மானியத்தை இழப்பர்.

மத்திய அரசு இத்தகைய முடிவு எடுக்கும்பட்சத்தில் பாதிக்கப்படுவோர் நடுத்தர வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த குடும்பங்கள்தான். 21 நாளைக்கு ஒரு சிலிண்டர் என்பதை 30 நாளைக்கு ஒருமுறை என்று மாற்றலாம். அல்லது, நியாயவிலைக் கடைகளில் குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கைக்கு ஏற்ப சர்க்கரை அளவைத் தீர்மானிப்பது போன்று, சமையல் எரிவாயு பயன்பாட்டிலும் அங்கத்தினர் எண்ணிக்கைக்கு ஏற்ப சிலிண்டர்கள் எண்ணிக்கையை முறைப்படுத்தலாம்.

முறைகேடுகளில் ஈடுபடும் காஸ் ஏஜென்ஸி, மண்ணெண்ணெய் நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்யும் தீவிர நடவடிக்கை நடைமுறையில் இருந்தால், வணிக வளாகங்களுக்கு சமையல் எரிவாயு செல்வது நின்றுவிடும்.

ஒரு காஸ் ஏஜென்ஸிக்கு 200 குடும்பங்களுக்கு மேல் அனுமதிப்பதை தவிர்த்து, மீதமுள்ள நுகர்வோருக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகத்தை நடத்தலாம். இவற்றால் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

மக்களுக்காக தரப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தி, கொள்ளை லாபம் சம்பாதிக்கிற சிலரைத் தண்டிக்கவும், தடுத்து நிறுத்தவும் வழி காணாமல், மானியத்தை நிறுத்துவது நியாயமல்ல.

வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திலும் பொதுவிநியோக மண்ணெண்ணெய் பயன்பாட்டிலும் முறைகேடுகளைச் செய்வோர், நிச்சயமாக, மக்கள் அல்ல. ஆனால் மானியத்தை ரத்து செய்தால் பாதிக்கப்படுவது மக்கள் மட்டுமே.

Posted in 2007, Analysis, Budget, Cooking Gas, cylinders, Diesel, Distribution, Economy, Electricity, Finance, Gas, Gas Agency, India, Kerosene, LPG, Murali Deora, Petrol, Petroleum, Petroleum Minister, Policy, Politics, Power, Ration, Study, Subsidy | Leave a Comment »

Dubai questions Nusli Wadia for carrying revolver gun

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

தொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் சூட்கேஸில் கைத்துப்பாக்கி, குண்டுகள்: விமான நிலையத்தில் பறிமுதல்

மும்பை, ஜன. 20: மும்பையிலிருந்து ஏர்~இந்தியா விமானத்தில் துபைக்குச் சென்ற பிரபல தொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் சூட்கேஸில் கைத்துப்பாக்கியும் 30 குண்டுகளும் இருந்தது துபை விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்புச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடந்த வாரம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதை அடுத்து விமான நிலையங்களில் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அனைத்துப் பாதுகாப்புச் சோதனைகளையும் கடந்து கைத்துப்பாக்கியையும் குண்டுகளையும் ஒருவர் தன்னுடன் எடுத்துச் செல்ல அனுமதித்தது எப்படி என்பது குறித்து ஏர்~இந்தியா நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பணியில் கவனக் குறைவாக இருந்ததாக இரு ஊழியர்களை ஏர்~இந்தியா நிறுவனம் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 13-ம் தேதி, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் அவர் சென்றுள்ளார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளும் கவனக் குறைவாக இருந்துள்ளனர்.

ஆனால், துபையில் அவர் இறங்கியபோது விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்புச் சோதனையில் அவரது சூட்கேஸில் கைத்துப்பாக்கியும் குண்டுகளும் இருப்பது தெரியவந்தது. துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமத்தை அதிகாரிகளிடம் வாடியா காட்டியதை அடுத்து, அவரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதற்கான ரசீதை அதிகாரிகள் அளித்தனர்.

பாம்பே டையிங் நிறுவன அதிபரான நுஸ்லி வாடியா, “கோஏர்’ என்னும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.

இச் சம்பவம் குறித்து விசாரித்தபோது, “”வாடியாவின் வீட்டுப் பணியாள், அந்தத் துப்பாக்கியையும் குண்டுகளையும் தெரியாமல் வாடியாவின் சூட்கேஸில் வைத்து, விமான நிலையத்தில் கொண்டுவந்து அவரிடம் கொடுத்துவிட்டார்” என்று அவரது நிறுவனத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் விளக்கம் அளித்தார்.

Posted in Air India, Airport, Ambani, arms licence, baggage, Bombay, Bombay Dyeing, breach, cartridges, civil aviation, Dubai, firearm, GoAir, gun, Guru, mani Rathnam, Ministry, Mumbai, Nusli Wadia, Reliance, revolver, Security, X-ray | Leave a Comment »

Love Story: Salem-1 MLA Ravichandran’s daughter elopes

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

காதலனுடன் சென்ற எம்.எல்.ஏ. மகள் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை, ஜன.20: காதலனுடன் சென்ற எம்.எல்.ஏ. மகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸôரால் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

18 வயது நிரம்பாத அப்பெண்ணை அவரது பெற்றோருடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.

சேலம்-1 தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ரவிச்சந்திரனின் மகள் ஆர். கலைவாணி, சேலத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. படித்துவருகிறார்.

கடந்த 25-11-2006 அன்று அவர் காணாமல் போய்விட்டார். அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார் ரவிச்சந்திரன்.

இதையடுத்து கலைவாணியைத் தேடி கண்டுபிடிக்குமாறு சேலம் போலீஸôருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கலைவாணியும் அவரது காதலன் சிவகுமாரும் ஹைதராபாதில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களை அங்கிருந்து அழைத்து வந்த போலீஸôர், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெண்ணைக் கடத்தியதாக சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸôர் அவரை சிறையில் அடைத்தனர்.

கலைவாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரது பெற்றோரும் நீதிமன்றத்துக்கு வந்தனர். எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் சார்பாக வழக்கறிஞர் பி.எச். மனோஜ்பாண்டியன் ஆஜரானார். கலைவாணிக்கு 18 வயது ஆகவில்லை. எனவே அவரது பெற்றோருடன் அவரை அனுப்ப வேண்டும் என்றார் வழக்கறிஞர்.

கலைவாணியைக் கடத்திச் சென்றதாக சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அரசு வழக்கறிஞர் பாபு முத்து மீரான் கூறினார்.

நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே. மோகன்ராம் ஆகியோர் கலைவாணியிடம் விசாரணை நடத்தினர். சிவகுமார் என்னைக் கடத்தவில்லை என்றும், என் விருப்பத்தின்பேரில்தான் அவருடன் சென்றேன் என்றும் கலைவாணி கூறினார். பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார். அவரது கருத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், அவர் பெற்றோருடன் செல்ல அனுமதி அளித்தனர். வழக்கை இத்துடன் முடிப்பதாகக் கூறினர்.

Posted in 18, ADMK, AIADMK, Arrest, Constituency, Love, Major, MLA, Movie, Police, R Kalaivani, Ravichandran, Salem-1 | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கருப்பை கவலை தீருமா?

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் வயது 34. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. 7 வயதில் ஒரு பையனும் 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. (சுகப்பிரசவம்.) கடந்த 3 மாதங்களுக்கு முன் கர்ப்பப்பை நழுவியது போன்ற உணர்வு தெரிந்தது. டாக்டர் மாத்திரை, டானிக் எழுதிக் கொடுத்தார். அவற்றைச் சாப்பிட்ட பிறகும் சரியாகவில்லை. லேசாக வெள்ளைபடுகிறது. தரையில் உட்காரும்போதும், குழந்தைகளைத் தூக்கும்போதும், உட்கார்ந்து மலம் கழிக்கும்போதும் கருப்பை வெளியில் வந்து விடுமோ என்று பயமாக உள்ளது. ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வு என்ன?

-பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

கருப்பை தன் நிலையிலிருந்து நழுவாதிருக்க BROAD LIGAMENTS, UTERO SACRAL LIGAMENTS, CARDINAL LIGAMENTS, ROUND LIGAMENTS போன்ற தசைநார்கள் உதவுகின்றன. குழந்தை வெளியே வருவதற்கான காலதாமதம், குழந்தை பிறந்தபிறகு அதிக ஓய்வு எடுக்க முடியாத சூழ்நிலையில் வேலைகளைச் செய்தல், பிரசவித்த பிறகு கருப்பையை வலுப்படுத்தும் உணவுகளைச் சாப்பிடாதிருத்தல், அடிக்கடி அபார்ஷன் செய்துகொள்ளுதல், நின்ற நிலையிலிருந்து திடீரெனக் குனிந்து பளுவான பொருள்களைத் தூக்குதல், மாதவிடாய்க் காலங்களில் ஓய்வின்றி உழைத்தல், குளிர்ந்த நீரில் நீராடுதல், சத்தில்லாத உலர்ந்துபோன கறிகாய்களைச் சாப்பிடுதல், உணவை மறுபடியும் சுடவைத்துச் சாப்பிடுதல் போன்ற சில காரணங்களால் வயிற்றின் கீழ்ப் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அபான வாயு சீற்றமடைந்து தன் குணங்களாகிய வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி, அசைவு போன்றவற்றால் மேற்குறிப்பிட்ட தசைநார்களினுள்ளே ஊடுருவி அவற்றின் இறுக்கத்தைத் தளர்த்தி விடுகிறது. இதனால் கருப்பை தன் நிலையிலிருந்து நழுவி அடிவயிறு எப்போதும் நிரம்பியிருப்பது போன்ற உணர்வு, அடிவயிற்றில் கீழ்நோக்கி இருப்பது போன்று தோன்றுதல், இடுப்பு வலி, மாதவிடாய் அதிக அளவில் வெளிப்படுதல், வெள்ளைபடுதல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு, முழுமையாக வெளியேற்ற முடியாமை போன்றவை காணும்.

* கருப்பையை வலுப்படுத்த உணவில் பீட்ரூட், கறுப்பு எள்ளு, கறுப்பு மற்றும் மஞ்சள் வகை சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், அத்திப்பழம், திராட்சை, கொய்யாப்பழம், தேன், பீன்ஸ், பால், பட்டாணி, வெந்த உருளைக்கிழங்கு, பூசணிக்காய், சிவப்பு முள்ளங்கி, குங்குமப்பூ, சூரியகாந்தி விதை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சுரைக்காய் போன்றவை சாப்பிட நல்லது.

* ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து பழங்களை மட்டுமே உணவாகச் சாப்பிடுதல் மூலமாகவும் கருப்பையைத் தாங்கும் தசைநார்களை வலுப்படுத்தலாம். மூன்று உணவு வேளைகளாகிய காலை, மதியம் மற்றும் இரவு நேரத்தில் ஆரஞ்சுப் பழம், ஆப்பிள், பைனாப்பிள் மற்றும் திராட்சை ஆகியவற்றை 6 மணி நேர இடைவேளையில் சாப்பிட உகந்தது. ஐந்து நாட்களுக்குப் பிறகு உணவில் தானியங்கள், பாதாம் பிஸ்தா போன்ற பருப்பு வகைகள், விதைகள், கறிகாய், பழங்கள் போன்றவற்றை சமச் சீரான அளவில் சேர்க்க வேண்டும்.

* கேரட்டை தோலுடன் வேகவைத்து மசித்து சுத்தமான மெல்லிய துணியில் வைத்து 12 மணி நேரத்துக்கு ஒருமுறை, உதிரப் போக்கு வரும் பாதையினுள்ளே செருகிவைப்பதால் கருப்பை நழுவல் உபாதை நீங்க நல்ல வாய்ப்பிருக்கிறது.

* எப்சம் உப்பை சூடான தண்ணீரில் கரைத்து வாரம் இருமுறை இடுப்பு மூழ்குமளவு 15 நிமிடம் உட்காருதல் நல்லது.

* பூசணிக்காயை அல்வா செய்வது போன்று சுரைக்காயை அல்வாவாகத் தயார் செய்து காலை, இரவு உணவுக்கு முன்பாக தினமும் சாப்பிடலாம். இதன் சாறை ஸிரப் போன்று தயார் செய்தும் சாப்பிடலாம். கருப்பையின் பலவீனம், நழுவுதல் போன்ற நோய்கள் விலகும்.

* வாயுவின் சீற்றத்தால் பலவீனமடைந்துள்ள கருப்பையின் தசைநார்களைச் சீர்ப்படுத்த ஆமணக்கெண்ணெய் என்னும் விளக்கெண்ணெய் சிறந்தது. சிறிது எண்ணெய்யைச் சூடாக்கி, தொப்புள், அடிவயிற்றுப் பகுதிகளில் உருட்டித் தேய்த்து அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை ஊறவைத்து வெந்நீரில் குளிப்பது அபானவாயுவின் சீற்றத்தைத் தணிக்கும்.

* ஆயுர்வேத மருந்துகளில் தான்வந்திரம் கஷாயம் 15 மிலி, 60 மிலி வெதுவெதுப்பான பசும்பால், 1 தான்வந்திரம் குளிகையுடன் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

பலசர்ப்பிஸ் எனும் நெய்யை லேசாக உருக்கி காலை, இரவு 5 மிலி, உணவுக்கு 1 மணி நேரம் முன்பாகச் சாப்பிட நல்லது.

சதாவரீகுலம் எனும் லேகியம் 5 கிராம் மதிய உணவுக்கு 1 மணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிட நல்லது.

Posted in Alternate, Ayurvedha, Ayurvedha Corner, Doctor, Herbs, Natural Medicines, Prof. S Swaminathan | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Veli Paruthi

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

மூலிகை மூலை: வேலிப்பருத்தி

விஜயராஜன்

மாற்றடுக்கில் இதய வடிவில் அமைந்த இலைகளையும், பசுமை நிறத்தில் பூங்கொத்துகளையும், மென்மையான முள்களைக் கொண்ட காய்களையும், காம்பைக் கீறினால் பிசுபிசுப்பான பால் சொட்டுகிற ஏறுகொடி இனம் வேலிப்பருத்தி. முட்டை வடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சிழைகள் காணப்படும். பொதுவாக வேலிகளில் தொற்றிப்படர்ந்து வளரும். இலை, வேர் மருத்துவக் குணமுடையவை. வாந்தியை உண்டாக்கியும், கோழையை அகற்றியும், முறைநோயைப் போக்கவும் பயன்படுகிறது. தமிழகமெங்கும் வேலிகளில் தானாகவே படர்ந்து வளர்கின்றது.

வேறு பெயர்கள் : உத்தாமணி, அச்சாணி மூலி, அனந்தம், அனந்தரம், கீரிடம், கியச்சனி, குடகாம்.

ஆங்கிலப் பெயர்: Damemia extensa, R.Bri Asclepiedaceae

மருத்துவக் குணங்கள்:

வேலிப்பருத்தி இலையைச் சாறு எடுத்து காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்குத் தடவி வர குணமாகும்.

வேலிப்பருத்தியிலை ஒரு கைப்பிடியளவு எடுத்து சிறிது மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டு வர முடக்குவாதம், மூட்டுவலி, மூட்டுப் பிடிப்பு, உடம்பு வலி குணமாகும். பேதியானால் ஆரோரூட் மாவை அல்லது நொய்க் கஞ்சி வைத்துக் குடிக்க பேதி நிற்கும்.

வேலிப்பருத்தி இலையை வதக்கித் துணியில் தட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல்வாதம், முடக்குவாதம், வாதக்குடைச்சல், இடுப்புவலி குணமாகும்.

வேலிப்பருத்தி இலையை கைப்பிடியளவு எடுத்து அதேயளவு வாதாகி இலையை உருவிப் போட்டு ஒரு சட்டியில் போட்டு புரட்டிப் புரட்டி வதக்க வேண்டும். வதங்கிய பின்னர் ஒரு துணியில் போட்டு சூடு தாங்குகின்ற அளவில் முடக்குவாதம், மூட்டுவலி, குடைச்சல் வலி, இடுப்பு வலி உள்ள இடங்களில் கொடுக்க குணமாகும்.

வேலிப்பருத்தி இலையைச் சாறு எடுத்து 200 மில்லியளவு ஒரு தேக்கரண்டி சுக்கு, பெருங்காயத்தைப் பொடியாக்கி காய்ச்சிப் பற்றிட வாதவலி வீக்கம் குணமாகும். யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் 60 நாளில் குணமாகும்.

வேலிப்பருத்தி இலையை அரைத்துச் சாறு எடுத்து 1/2 சங்களவு எடுத்து 2 மிளகை பொடி செய்து சேர்த்து சிறிது தேன் கலந்து கொடுக்க 3 வயது வரை குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற செரியாமை, சுள்ளு மாந்தம், தொண்டை சுள்ளு, இழுப்பு குணமாகும்.

வேலிப்பருத்தியிலை, பொடு தலை, நுணா, நொச்சி ஆகியவற்றை கைப்பிடியளவு எடுத்து வதக்கிச் சாறு பிழிந்து 10 மில்லியளவு குடிக்க சளியோடு கூடிய மாந்தம் வெளியேறும்.

வேலிப்பருத்தியிலையின் காம்பைக் கீறி வரும் பாலை கீல் வாத மூட்டுகளுக்குத் தடவி வர குணமாகும்.

வேலிப்பருத்தி வேரை உலர்த்திப் பொடி செய்து 4 சிட்டிகையளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க வாயுத் தொல்லை நீங்கி, பேதியாகி உடலிலுள்ள பூச்சிகள், கிருமிகள் வெளியேறும்.

வேலிப்பருத்தி வேரை 5 கிராம் எடுத்து பால் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து வடிகட்டி காலையில் மட்டும் 3 நாள்கள் குடித்து வர நஞ்சுக்கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயுத் தொல்லைகள் குணமாகும்.

வேலிப்பருத்தி, பாவட்டை, காவட்டம்புல், சங்கு, முருங்கை, நுணா, பொடுதலை இவற்றின் ஈர்க்கு வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்துச் சிதைத்து ஒரு லிட்டர் வகைக்கு 20 கிராம் எடுத்துப் பொடியாக்கி ஒரு துணியில் வைத்து முடிந்து குடிநீரில் போட்டு 150 மில்லியாக வற்றக் காய்ச்சி, துணியில் உள்ள மருந்தை அதே குடிநீரில் அரைத்து சுண்டைக்காயளவு 3 வேளை சாப்பிட ஆமகணம் நீங்கும்.

வேலிப்பருத்திக் கொழுந்து, வசம்பு, உள்ளி, விளா ஓடு, ஓமம், ஆமையோடு வகைக்கு 20 கிராம் எடுத்துச் சிதைத்து நெல்லிக்காயளவு எடுத்து சிறிது வெண்ணெய் சேர்த்துக் காய்ச்சிச் சாப்பிட ஆமகணம் நீங்கும்.

வேலிப்பருத்தி, சங்கு, தூதுவளை, பொன்னாங்கண்ணி இவற்றின் வேர் வகைக்கு ஒரு பிடி ஒன்றரை லிட்டர் நீரில் போட்டு பொடுதலை, வசம்பு, ஓமம், திப்பிலி, பூண்டு, மிளகு, ஆமையோடு வகைக்கு 10 கிராம் எடுத்துப் பொடியாக்கி ஒரு துணியில் முடிந்து போட்டுக் காய்ச்சி மேற்படி மருந்தை அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட காய்ச்சல் ஆமகணம் நீங்கும்.

வேலிப்பருத்திச்சாறு, எருமை வெண்ணெய் வகைக்கு 200 கிராம், கருஞ்சீரகம் 10 கிராம் பொடி செய்து கலந்து காய்ச்சி வடிகட்டி ஒரு தேக்கரண்டி

3 வேளை கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல், வாந்தி நீங்கும்.

வேலிப்பருத்தி, தூதுவளை, குப்பைமேனி வகைக்கு சமஅளவாக ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து குடித்து வர மாந்தக் கழிச்சல் நீங்கும்.

வேலிப்பருத்தி, காவட்டம்புல், கொன்றை, சிறிய முட்டிவேர், ஓமம், மிளகு வகைக்கு 20 கிராம் எடுத்து 2 லிட்டர் நீரில் சிதைத்துப் போட்டு 200 மில்லியளவு வற்றக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியாக 6 வேளை கொடுக்க வாதக் காய்ச்சல் குணமாகும்.

வேலிப்பருத்திச் சமூலத்தை கைப்பிடியளவு எடுத்து பாலில் அரைத்து ஒரு டம்ளர் பாலுடன் 2 வேளை குடித்துவர கிரந்தி, கைகால் பிடிப்பு, வாயு நீங்கும்.

Posted in Aromotherapy, Damemia extensa, Doctor, Herbs, India, Medicines, Mooligai Corner, Natural Cures, Nature, Naturotherapy, organic, R.Bri Asclepiedaceae, Veli Paruthi | Leave a Comment »

London Diary – London Eye: Eraa Murugan

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

லண்டன் டைரி: “லண்டன் ஐ!’

இரா. முருகன்

தேம்ஸ் நதிக்கரை எம்பாங்க்மெண்ட் படித்துறையில் படகு காத்திருக்கிறது. உள்ளே நுழைந்தபோது, கீழ்த்தட்டில் ஒரு கூட்டம் முந்திய நாள் வெஸ்ட்ஹாம் மைதானத்தில் நடந்த கால்பந்து விளையாட்டைப் பற்றி உரக்க விவாதிக்கும் இரைச்சல். மத்திய வயசு ஆண்கள். எல்லோர் கையிலும் பியர் குவளை. எனக்கு முன்னால் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு கையில் ஜபமாலையோடு நடந்து கொண்டிருந்த கன்னியாஸ்திரிகள் ஒரு வினாடி தயங்கி, கப்பலின் மேல்தட்டுக்குப் படியேறுகிறார்கள். நானும்தான். பெரிய பறவைபோல் இரண்டு தடவை ஒலியெழுப்பிவிட்டுப் படகு நதியில் மெல்ல நகர்கிறது.

கரையில் பிக்பென் கடியாரக் கோபுரத்தைக் கழுத்து வலிக்கப் பார்க்கும் சகபயணிகளைக் கவனிக்கிறேன். ஜெர்மானிய டூரிஸ்ட்டுகள். அவர்கள் மொழியில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வழிகாட்டி. ரொம்பக் கடுமையாகக் காதில் விழுகிற மொழி அது. “”உன்னைக் காதலிக்கிறேன்” என்று காதலியிடம் அன்போடு சொல்வது கூட ஜெர்மன் பாஷையில்,

“”நமூனாவை மூணு காப்பி எடுத்து ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, தாசில்தாரிடம் அட்டஸ்டேஷன் வாங்கி ஒரு வாரத்துக்குள் அனுப்பிவைக்காவிட்டால், அபராதம் செலுத்தவேண்டிவரும்”

என்று அரசாங்க அறிவிப்பைக் கேட்கிறமாதிரி இருக்கும். முன்வரிசை ஜெர்மன் யுவதி காதலன் காதில் ஏதோ சொல்ல அவன் ஆற்றில் குதிப்பதுபோல் போக்குக்காட்டுகிறான். ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கிவரச் சொல்லியிருப்பாள்.

கன்னியாஸ்திரீகளின் கைகள் ஜபமாலையை நிதானமாக உருட்டிக் கொண்டிருக்க, நதிக்கரையில் வலதுபுறம் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடம் கடந்துபோகிறது. பக்கத்தில்தான் அந்தக்கால லண்டன் கார்ப்பரேஷன் என்ற கவுண்டி ஹால் இருந்ததாம். கவுன்சிலர்களின் சத்தம் தாங்காமலோ என்னமோ, அதை இடித்துவிட்டு அங்கே அடுக்குமாடிக் குடியிருப்பையும், கீழ்த்தளத்தில் மீன் காட்சி சாலையையும் கட்டிவிட்டார்கள். மீன்கள் சத்தம் எழுப்பாமல் வாயைத் திறந்துகொண்டிருக்க, கவுன்சிலர்கள் வேறு இடத்தில் சண்டையைத் தொடர்கிறார்கள்.

அடுத்து வருவது லண்டன் ஐ. இது “மெட்ராஸ் ஐ’ போல கண் சிவந்து ரெண்டு நாள் காஷுவல் லீவு போட்டுவிட்டு கறுப்புக் கண்ணாடியோடு வீட்டில் உட்கார்ந்து கேபிள் டிவி பார்க்கிற சமாச்சாரமில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆண்டு 2000 பிறந்து, இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடங்கியதைக் கொண்டாட எழுப்பப்பட்டது “லண்டன் ஐ’. பொருட்காட்சி ஜயண்ட் வீலுக்குச் சத்துணவு கொடுத்து இன்னும் முப்பது மடங்கு பெரிதாக்கப்பட்டதுபோல சுழலும் இந்த “லண்டன் கண்’ சக்கரத்தில் ஏறி நின்றால் முழு லண்டனையும் சுற்றுப்புறத்தையும் தெளிவாகப் பார்க்கலாம். எனக்கென்னமோ, இந்தச் சக்கரம் லண்டனின் பாரம்பரியம் மிக்க சரித்திரத்தோடு ஒட்டாமல் தனியாக நிற்பதுபோல் தோன்றுகிறது. யார் கண்டது? இன்னும் இருநூறு வருடத்தில், இதுவும் புராதனப் பெருமையோடு சுழலலாம்.

“”கிளியோபாத்ரா மூக்கு”. ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்த ஒரு கன்னியாஸ்திரி சொல்கிறார். உலகப் பேரழகி கிளியோபாத்ராவும் அவளுடைய மூக்கும் திடீரென்று இவருக்கு நினைவுவரக் காரணம் என்னவாக இருக்கும்? என்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறேன். அவர் கரையில் நீட்டி நிமிர்ந்து நிற்கும் ஒரு கருங்கல் தூணை மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார். மூவாயிரத்து ஐந்நூறு வருடம் முன்னால் எகிப்தில் உருவாக்கிய இந்த நீளமூக்குத் தூணை, வெறும் இருநூறு வருடம் முன்னால் எகிப்திய மக்கள் இங்கிலாந்துக்கு அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்கள். ஈராக் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று அந்தக் காலத்திலேயே பிரிட்டனிடம் சூசகமாகச் சொல்லியிருப்பார்களோ என்னமோ.

சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் கன்னியாஸ்திரிகள் நெஞ்சில் சிலுவை வரைந்துகொள்கிறார்கள். நதிக்கரையை ஒட்டி கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது செயின்ட் பால் தேவாலயம். 1666-ம் ஆண்டு லண்டன் மாநகரத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் பழைய ஆலயம் சேதமடைய, இரண்டாம் சார்லஸ் மன்னன் கட்டுவித்தது. பக்கத்திலேயே ஆங்கில நாடக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்புகளை அரங்கேற்றிய க்ளோப் தியேட்டர். அதுவும் பழைய வனப்பு சேதமடையாமல் புத்தம் புதியதாக எழுந்து நிற்கிறது. வெகு அருகில் டேட் ஓவிய, சிற்பக் கூடம். நவீனப் படைப்புகளுக்கான அரங்கம் இது. புதுமையில் எனக்கு விருப்பம் உண்டுதான். ஆனாலும் இந்த டேட் காலரியில் ரொம்பவே புதுமையாக சில மாதங்கள் முன்னால் இடம் பெற்ற படைப்பு -அழுக்கான அசல் கழிப்பறைப் பீங்கான் , உபயோகித்த சுவட்டோடு சிறுநீர் கழிக்கும் கோப்பை, தகர டப்பாவில் மனிதக் கழிவு, கூடவே, வாடை எல்லாம் போக, எதிரே ஒரு பெரிய மின்விசிறியின் ஓவியம்.

உலகின் பழைய மதுக்கடையைக் கடந்து படகு முன்னே போய்க்கொண்டிருக்கிறது. நங்கூர மது அரங்கம் என்ற இந்த ஆங்கர் டேவர்னில் நங்கூரமிட்டு சுதி ஏற்றிக்கொண்டுதான் ஷேக்ஸ்பியர் சாகாவரம் பெற்ற நாடகங்களை எழுதியிருக்கிறார். இங்கே கோப்பையும் கையுமாகக் குடியிருந்துதான் இலக்கிய மேதை சாம்யுவெல் ஜான்சன் ஆங்கிலப் பேரகராதியைத் தொகுத்திருக்கிறார். கொஞ்சம் படகை நிறுத்தினால் நானும் இறங்கிப்போய் ஒரு காப்பியம் எழுத முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது. தமிழ் இலக்கியத்துக்கு அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் படகு நிற்காமல் விரைகிறது.

டவர் பாலம் பக்கம் பெரிய கப்பல் ஒன்று ஓய்வெடுத்துக்கொண்டு நிற்கிறது. எச்.எம்.எஸ். பெல்ஃபாஸ்ட் என்ற போர்க் கப்பல் அது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் இங்கிலாந்து கடற்படையில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, ஜெர்மனியை முறியடித்த 1944 ஜூன் மாத இறுதிக்கட்டப் போரில் இந்தக் கப்பலுக்கும் பெரும் பங்கு உண்டு. தற்போது ரிடையராகி தேம்ஸ் நதியில் நங்கூரம் பாய்ச்சி நின்றாலும், இங்கிலாந்து அரசுக்கு இந்தக் கப்பலால் அதிக வருமானமே தவிர ஒரு காசு பென்ஷன் செலவு கிடையாது. கிட்டத்தட்ட ஆயிரம் போர் வீரர்கள் தங்கிப் போரிட்ட கப்பல் தற்போது யுத்தகால அருங்காட்சி சாலையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. “இரண்டாம் உலக யுத்தம் முடிந்தது -இங்கிலாந்து வெற்றி’ என்று இன்றைக்குக் காலையில்தான் பத்திரிகையில் படித்த பரபரப்போடு ஒரு பெரிய கூட்டம் கப்பலுக்குள் விரைந்து ஏறிப் போய்க்கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. “”நெசம்தான்” என்று ஆமோதித்தபடி இன்னொரு கூட்டம் வெளியே வந்துகொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டும் மூன்று லட்சம் பேர் இப்படிக் காசு கொடுத்து கப்பலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, உள்ளே ஓட்டலில் சூடாக ஒரு காப்பி குடித்துவிட்டு இறங்கியதாகத் தகவல்.

“”இது கக்கோல்ட் முனை”. ஏதோ உலக ரெக்கார்டை ஏற்படுத்தப் போவதுபோல் தொடர்ந்து பியர் குடித்தபடி கீழ்த்தளத்திலிருந்து மேலே வந்த கூட்டத்திலிருந்து ஒரு குரல். “”சொல்பேச்சு கேட்காத பெண்டாட்டியை வில்லியம் கக்கோல்ட் இங்கேயிருந்துதான் பிடிச்சுத் தள்ளிவிட்டானாம். திரும்பிப் பார்த்தால், பெரிய கும்பல். என் வீட்டுக்காரியையும் தள்ளி விட்டுடுய்யான்னு அவனவன் க்யூவிலே நின்னு கெஞ்சறான். நோ ப்ராப்ளம்னு ஒருத்தருக்கு ஒரு பென்ஸ் காசு கூலி வாங்கிப் போட்டுக்கிட்டு அப்புறம் அவன் முழுநேரம் இதே உத்தியோகம்தான் பார்த்தானாம்”.

“”தனியாளாக ரொம்பக் கஷ்டப்பட்டு உழைச்சிருப்பான் பாவம்”. கையில் பிடித்த பியர் தரையில் சிந்த, சிரிப்புச் சத்தம் உயர்கிறது. இவர்களைப் பிடித்துத் தேம்ஸ் நதியில் தள்ளிவிட்டால் என்ன என்று யோசித்தபடி டவர் பிரிட்ஜ் படித்துறையில் இறங்குகிறேன்.

Posted in Cruise, England, Era Murugan, Era Murukan, Experiences, German Language, Ira Murugan, Ira Murukan, London Diary, Raayar kaapi klub, Raayarkaapiklub, Rayar kapi klub, Rayarkaapiklub, RKK, St Paul Church, Thames, Tour, Tourists, UK | Leave a Comment »

Water resource planning – Long term strategies for effective use of Dams, River, Rains

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

கரை ஏறுமா கால்வாய் பாசனம்?

கி.சிவசுப்பிரமணியன்

தமிழகத்தின் முப்பெறும் நீராதாரங்களாக விளங்குபவை

  • கால்வாய்ப் பாசனம்,
  • ஏரிப்பாசனம்,
  • கிணற்றுப் பாசனம்.

இவை அனைத்துக்கும் மழை வளமே அடிப்படை. ஆனால் மழை வளம் குறைந்துவிட்டதால் நிலத்தடி நீர் அபரிமிதமாக உறிஞ்சப்படுகிறது. இதனால் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து திறந்தவெளிக் கிணறுகள் பலவும் வறண்டுபோய் விட்டன. எனவே ஆழ்துளைக் கிணறுகளின் உதவியை விவசாயிகள் நாடி அதில் பேரளவு பணம் விரயம் செய்தும் போதிய நீர் கிடைக்காமல் வாடும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

“கரிகாலன் கட்டி வைத்த கல்லணை’யும் ஆங்கிலப் பொறியாளரான பென்னி குயிக்கின் முயற்சியால் உருவான பெரியாறு அணையும் நவீன தமிழகப் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட “பரம்பிக்குளம் – ஆழியாறு’ பாசனத் திட்டமும் தமிழக மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதோடு விவசாயிகளின் வாழ்க்கைக்கும் அடிப்படையாக விளங்குகிறது.

ஆறுகள் மற்றும் அணைகளிலிருந்து செல்லும் கால்வாய்ப் பாசனத்தை நம்பியுள்ள கிணறுகள் சாதாரணமாக வறண்டு போவதில்லை. ஆனால் இதே கால்வாய்களில் சில ஆண்டுகள் தொடர்ந்து நீர்வராமலும், மழை பொழிவும் குறைந்து போனால் இக்கால்வாய்ப் பாசனக் கிணறுகளில் பெரும்பாலானவை வறண்டு போகும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையை (2002 மற்றும் 2003-ல்) பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன விவசாயிகள் அனுபவித்தது கசப்பான உண்மை. இந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வறட்சியால் கால்வாய்களில் விடப்பட்ட நீர் வரத்து பயனற்றதாகியது. பல ஆண்டுகளாக பலனளித்து வந்த ஆயிரக்கணக்கான தென்னைகள், வறட்சியால் மடிந்தன.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடனாளிகளாக்கப்பட்டனர். இது போன்ற நிலைமைகளிலிருந்து மீள்வதற்கான வழிகளைக் காண்பது மிக அவசியமாகும்.

பெரியாறு மற்றும் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டங்களின் முக்கிய அம்சம் தமிழக மற்றும் கேரள எல்லைகளில் உற்பத்தியாகும் ஆறுகள் மூலம் கேரள மாநிலத்தால் பயன்படுத்த இயலாத, வீணாக அரபிக் கடலில் கலக்கும் நீரை தமிழகத்தின் வறட்சியால் பாதிக்கப்படும் விவசாய நிலங்களுக்கு அளிப்பதே ஆகும்.

1960-களில் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்தது. இத் திட்டம் தற்போது கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் அளித்து வருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத்தின் மொத்த பாசன அளவு ஏறத்தாழ 2.5 லட்சம் ஏக்கராக இருந்தது.

நீர்ப்பாசன ஆதாரத்தைப் பெருக்க முயற்சிக்காமல் நீர்ப்பாசன பரப்பை 1994-ல் அரசு முனைந்து அதிகப்படுத்தியதால் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனம் தற்போது 18 மாதத்திலிருந்து 24 மாதத்துக்கு ஒருமுறை நீர் பெரும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இப்பாசன விவசாயிகளிடையே இருந்த பெருமிதம் மாறி, எங்கே தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மழையின்மையால் பயிர் காய்ந்து விடுமோ என்ற அச்ச உணர்வையே காண முடிகிறது.

இத்தகைய நிச்சயமற்ற தண்ணீர் பற்றாக்குறை நிலைமையைப் போக்க “நல்லாறு திட்டத்தின்’ உபரிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும்.

அந்த நீரை திருமூர்த்தி அணைக்குத் திருப்பி விட வேண்டும். அதே சமயம் திருமூர்த்தி அணையின் தற்போதைய கொள்ளளவை அதிகரிக்க வேண்டும்.

இதன் மூலம் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும்; கால்வாய்ப் பாசனமும் கரை ஏறும்; அதை நம்பியுள்ள கிணற்றுப் பாசனமும் செழிப்புறும்.

(கட்டுரையாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன திட்ட இயக்குநர்).

Posted in Aaliyaar, Aazhiyaar, Aazhiyaaru, Agriculture, Dams, Farmers, Ground water, Irrigation, Lake Farming, Nallaaru Plan, Nallaru Plan, Parambikkulam, Parambikulam, Parampikkulam, Periyar, Rain, Shortage, Thirumoorthi dam, Thirumurthi dam, Water, Water sources, Waterways, Wells | 1 Comment »

Waster water management – Pollution Control treatment plants: Tirupur Exporters Strike

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

திருப்பூர் சாய ஆலைகள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொண்டு செயல்படத் தொடங்கிவிட்டன.

சுத்திகரிப்பு செய்யப்படாத ஆலைக் கழிவுநீருக்கான அபராதத் தொகையில் (லிட்டருக்கு 6 காசு) ஒரு பகுதியைப் பகிர்ந்துகொள்வது என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்வந்துள்ளதால் (சாய ஆலைகள் செலுத்த வேண்டிய இழப்பீட்டிலும் ஒரு பங்கை ஏற்க முன்வரக்கூடும்) இந்தப் பிரச்சினை இப்போதைக்கு அமைதி கண்டுள்ளது.

தடையற்ற உற்பத்திக்கான தொழிற்சூழல் உருவாதல் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பின் நோக்கம் – சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு ஆற்றில் கலப்பதை தடுக்க நிரந்தர வழிமுறை காண வேண்டும் என்பதுதான். லிட்டருக்கு 6 காசு அபராதம் செலுத்தி, சாயக்கழிவுகளை தொடர்ந்து ஆற்றில் கொட்டிக்கொண்டே இருப்பது அல்ல.

அபராதத் தொகையை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வது பற்றி பேசியவர்கள் நச்சு இல்லா இயற்கைச் சாய முறைகளுக்கு மாறுவது குறித்தும் பேசியிருந்தால் மகிழ்ச்சி தருவதாக இருந்திருக்கும்.

இன்று உலகின் முக்கிய நாடுகளில் இயற்கைச் சாயத் துணிகளுக்குத்தான் மதிப்பு தரப்படுகிறது. ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டுள்ள பின்னலாடை நிறுவனங்கள் இயற்கைச் சாய நூல்களை மட்டுமே வாங்குவது என்ற முடிவை மேற்கொண்டால், சாய ஆலைகளும் இயற்கைச் சாய முறைகளுக்கு மாறும்.

பத்து ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்த இந்த சாயக் கழிவு விவகாரத்தில், மாசுகட்டுப்பாட்டு வாரியம் முனைப்புடன் செயல்பட்டிருந்தால் நிலைமை கட்டுக்குள் இருந்திருக்கும். சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்பட்டிருக்கும்.

நொய்யல் ஆறு என்பது திருப்பூருடன் முடிவது அல்ல. அதன் சாயக் கழிவுகள் நிலத்தடி நீரையும் பாதித்துள்ளன. ஒரத்துப்பாளையம் அணை திறக்கப்பட்டால், விஷநீர் துணைநதிகள் மூலம் காவிரி வரை வந்து சேர்கிறது.

இந்தத் தீர்ப்பு ஏதோ திருப்பூர் நகருக்கு மட்டுமே உரியதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் அனைத்து நதிகள் குறித்தும் கவலை தெரிவிக்கும் தீர்ப்பு என்பதை எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதேபோன்ற மோசமான நிலைமை பாலாற்றிலும், காவிரி, பவானி, அமராவதி என அனைத்து நதிகளிலும் நிலவுகிறது. ஆனால் இவைதான் தமிழக மக்களின் குடிநீர் ஆதாரம்.

குடிநீருக்காக ஆற்றிலிருந்து பெண்கள் தண்ணீர் எடுத்து வந்த காலம் கனவாய், பழங்கதையாய் மெல்லக் கழிந்து வருகிறது. காவிரியில் குளித்துக் கரையேறும் சுற்றுலாப் பயணிகள் பாட்டில் தண்ணீர் குடித்துத் தாகம் தணிக்கும் நிலைதான் உள்ளது.

அனைத்து நகரக் கழிவுகளும் ஆற்றில்தான் கலக்கின்றன. கழிவுநீரைச் சுத்திகரித்து அவற்றிலிருந்து விவசாயத்துக்கான எரு தயாரிக்கும் திட்டங்கள் எந்த நகரிலும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை.

வீட்டுக் கழிவுகள் போதாதென்று தொழிற்கூடங்களும் தங்களது சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவுகளை ஆற்றில் தள்ளிவிடுகின்றன. சுத்திகரிப்பு நிலையங்கள் வைத்துள்ளதாகச் சொல்லும் சில தொழிற்கூடங்களும்கூட, மழை நாளில், ஆற்று வெள்ளத்தில் கழிவுகளைத் தள்ளி காலி செய்கின்றன. ஆற்றில் மணல் இருந்த காலத்தில் இந்த கழிவுகள் மணலால் வடிகட்டப்பட்டன. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இப்போது ஆறுகள் அனைத்தும் மணல் இழந்து, கறம்பாகி, படுகையில் செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கின்றன. இவை கழிவுகளை தடுத்து நிறுத்திக் கொள்கின்றன. இத்தகைய ஆறுகள் தான் நமது குடிநீர் ஆதாரம்.

Posted in Clean, Cloth, Clothings, Drinking Water, Environment, Exports, Mills, Noyyal River, Orathupaalayam Dam, Orathupalayam, PCB, Pollution, Pollution Control Board, Rivers, Strike, Thirupoor, Thirupur, Tiruppur, Tirupur, Treatment Plants, Waste, Waste Water, Water | Leave a Comment »

Global Warming – Environmental Pollution: Reports, History, Current Developments

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

“உலக வெம்மை’ ஏமாற்று வேலையா?

ந.ராமசுப்ரமணியன்

மனித குலத்திற்கே மிகப் பெரிய எதிரியாகவும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிய தடைக் கல்லாகவும் “குளோபல் வார்மிங்’ எனும் உலக வெம்மைதான் விளங்கப் போகிறது என பல விஞ்ஞான ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

“கார்பன்’ வெளியீட்டினால் ஏற்படும் உலக வெம்மை அதிகரிப்பைத் தடுக்க வேண்டும் என்று உலக நாடுகள் முடிவெடுத்து, கியூட்டோ ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

கியூட்டோ நகரம் ஜப்பானில் உள்ளது. இந்நகரில்தான் கியூட்டோ ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் 150-க்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட்டன.

ஆனால் உலக வெம்மைக்குப் பெரிய காரணகர்த்தாவான அமெரிக்கா “கியூட்டோ’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது. வளர்ச்சி பெற்ற ஆஸ்திரேலியாவும் கையெழுத்திடவில்லை.

தற்போது மிக முக்கியமான இயற்கையின் தீவிரவாதம் உலக வெம்மைதான். இதற்கு மனித இனத்தின் பொறுப்பற்ற செயல்களே காரணம் என விஞ்ஞான உலகம் அறிவித்துவிட்டது.

உலக வெம்மையால் ஏற்பட உள்ள அபாயங்கள்: அதிக கார்பன் வெளியீட்டால் உண்டாகும் ராட்சத சக்தி கொண்ட “எல்நினோ’வினால் பயங்கரமான சூறாவளிகள் ஏற்படும் என அமெரிக்க நாசா விஞ்ஞானிகளும், அமெரிக்க விஞ்ஞான தேசிய அகாதெமியும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

30 ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு 0.2 செல்சியஸ் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு துயரங்களை உலகம் சந்திக்க இருக்கிறது என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

“நிலத்தின் நண்பர்கள்’ எனும் சமூக ஆர்வலர் நிறுவனம், நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞான, பொருளாதார ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆராய்ந்து 2100-ம் ஆண்டு நிறைவடைந்ததும் உலகப் பொருளாதாரம் ஆண்டுக்கு ரூ.900 லட்சம் கோடி அளவு பொருளாதார இழப்பை எதிர்கொள்ளும் எனக் கணித்துள்ளது.

நாசாவின் காட்டர்ட் விண்வெளி ஆய்வு நிலையம், தனது 2005-ம் ஆண்டு அறிக்கையில், தொழிற் புரட்சி தொடங்கியபோது பத்து லட்சத்துக்கு 280 கார்பன் துகள்கள் விண்வெளியை மாசுபடுத்தின; தற்போது இதன் அளவு 10 லட்சத்துக்கு 380 கார்பன் துகள்களாக அதிகரித்து, மேலும் தொடர்ந்து அதிகரிக்க உள்ளது.

மேலும் மனிதனால் ஏற்படும் கார்பன் தீங்கினால் உலக வெம்மை இன்னும் 1 டிகிரி செல்சியஸ் என்று அதிகரித்தால், 10 லட்சம் ஆண்டுகளில் உலகம் காணாத அளவுக்கு, உலக வெம்மை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

பொருளாதார ரீதியாக 2050-ம் ஆண்டு வாக்கில் உலகம் ரூ.315 லட்சம் கோடிகளை (அதாவது உலக பொருளாதார வளர்ச்சியில் 20%) இழக்கும்.

விவசாய உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டு, நோய்கள் ஏராளமாகப் பரவும், மின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும் என ஸ்டர்ன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹாக்கி மட்டை வரைபடம்: மைக்கேல் மேன் என்பவர், கி.பி. 900 ஆண்டு முதல் உலக வெம்மை எவ்வாறு அதிகரித்துள்ளது என்பது பற்றிப் பல்வேறு சோதனைகளை நடத்தியுள்ளார். பல்வேறு சாதனங்களைக் கொண்டும், மரவளையம் போன்றவற்றை வைத்தும், வெம்மை அதிகரிப்பைக் கணக்கிட்டுள்ளார். இதன்படி உலக வெம்மை மிகவும் அதிகரித்துள்ளது.

உலக வெம்மை எனும் மோசடி: இந்நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற அமெரிக்க நாட்டு “வால் ஸ்’டிரீட் ஜெர்னல்’ எனும் பத்திரிகை 2006 ஜூலை மாதம் 14-ம் தேதி இதழில் “ஹாக்கி மட்டை வரைபடம் வெறும் பிதற்றல்’ என்று தலையங்கம் எழுதியுள்ளது.

பல கற்பனைகளுடன், இரண்டுங்கெட்டான் வழிமுறைகளைப் பின்பற்றி, விஞ்ஞான உண்மைகளுக்குப் புறம்பான வகையில் “ஹாக்கி மட்டை வரைபடம்’ ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. உலக வெம்மை என்பது விஞ்ஞான பூர்வமான விளக்கமில்லை என்று கொல்ம்பியா பல்கலைக் கழக புவியியல் ஆய்வு நிறுவன இயக்குநர் ஜெப்ரிசாச் கடுமையாகச் சாடியுள்ளார்.

1960-களில் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிறது. இது அதிகரித்து குளிர்மிகுந்து, உலகம் குளிர்ச்சி அதிகரிப்பால் உறைந்து அழியும் என்ற ஒரு விஞ்ஞான ஆய்வுக் கட்டுரை வெளியானது.

1945-லிருந்து 30 ஆண்டுகள் அதாவது 1975 வரை உலகம் மிகவும் குளிர்ச்சியடைந்தது. இதையொட்டி 1975-ல் “நியூஸ் வீக்’ எனும் உலகப் புகழ் பெற்ற பத்திரிகை அட்டைப் படக் கட்டுரையாக “அடுத்த ஊழிப் பனிக்காலம் உலகத்தை நெருங்குகிறது’ என்ற விஞ்ஞான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது.

தற்போது உலக வெம்மை என்று பேசப்படுகிறது. அப்படியானால், உலகம் குளிர்ந்து போகும் என்ற விஞ்ஞான ஆய்வுக்கு அர்த்தமென்ன?

ஆக இத்தகைய கணிப்புகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. 1970களில் “உலகக் குளிர்ச்சி’ என்ற கணிப்பு எவ்வாறு சரியில்லையோ, அதேபோல தற்போதைய கணிப்பான “உலக வெம்மை’ என்பதும் விஞ்ஞான அடிப்படையில் அமைந்ததல்ல. இவைகளெல்லாம் சோதிடம் போன்றதே.

“கியூட்டோ’ ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடாதது சரியே. இந்தியாவும் உலக வெம்மை என்ற விஞ்ஞானத்திற்கு ஒவ்வாத வாதத்தை ஒதுக்கி விட்டு, உற்பத்தி அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி என்ற வகையில் முனைப்பைக் காட்ட வேண்டும்.

உலக வெம்மையால் 2100-ல் உலகம் பல்வேறு பயங்கர இழப்புகளை சந்திக்கும் என்பது மோசடியே என்ற வகையிலும் பல ஆய்வுக் கட்டுரைகள் தற்போது வெளியாகின்றன.

(கட்டுரையாளர், சென்னை மண்ணிவாக்கம், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனர்).

Posted in Actions, Al Gore, Auto, Carbon Cost, Cars, emissions, Environment, Global Warming, History, Kyoto, Plan, Pollution, Report | Leave a Comment »

Laloo daughter’s boyfriend Dead – BITS Mesra students’ picnic to be investigated

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

லாலு மகளுடன் “பிக்னிக்’ சென்ற இளைஞர் மரணம்: விசாரணை ஒத்திவைப்பு

ராஞ்சி, ஜன. 19: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் மகள் ரஜினியுடன் உல்லாசப்பயணம் சென்ற அபிஷேக் மிஸ்ரா மர்மமான முறையில் இறந்து கிடந்தது பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனு மீதான விசாரணையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் பிப். 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

பிட்-மெஸ்ரா கல்லூரி மாணவர் அபிஷேக்கும், லாலு பிரசாத் மகள் ரஜினி உள்ளிட்ட அவரது 3 நண்பர்களும் கடந்த டிச. 8-ம் தேதி டாஸம் அருவிக்கு சிற்றுலா (பிக்னிக்) சென்றனர்.

அங்கு அபிஷேக் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி அபிஷேக்கின் தந்தை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர் தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அட்வகேட் ஜெனரல் பி.கடோடியா, வழக்கு தொடர்பான குறிப்புகளை தயாரிக்க அவகாசம் கோரியதை அடுத்து, முதன்மை நீதிபதி எம்.கே.விநாயகம் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணையை பிப்.1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Posted in Abhishek Mishra, Abhishek Misra, Bihar, BITS, BITS Mesra, CBI, Chotanagpur Plateau, Daassum, Daasum, Dassum, daughter, dead, GHAGRI, HUNDRU FALLS, Jharkand, Jharkhand, Lalloo Prasad Yadav, Lallu, Laloo, LODH FALLS, LOWER GHAGRI WATERFALLS, Murder, NETRAHAT, Rajini, Ram Manohar Lohia, Ranchi, SADNI FALLS, Waterfalls | Leave a Comment »

ES Lakshmi Narasimhan nominated as Chattisgarh Governor

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

திருவள்ளூரை சேர்ந்தவர் சத்தீஸ்கர் புதிய ஆளுநர்

புது தில்லி, ஜன. 19: தமிழகத்தின் திருவள்ளூரைச் சேர்ந்தவரும், மத்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குநருமான இ.எஸ். லட்சுமி நரசிம்மன் (62), சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

உளவுத்துறை இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற மூன்று வாரங்களுக்குள் அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரைச் சேர்ந்த அதிகாரி லட்சுமி நரசிம்மனுக்கு கவர்னர் பதவி- சத்தீஸ்கார் மாநிலத்துக்கு நியமனம்

புதுடெல்லி, ஜன. 19-

மத்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனர் இ.எஸ். லட்சுமி நரசிம்மன் (62). இவர் அந்த பதவியில் இருந்து 3 வாரங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற 3 வாரங்களுக்குள் அவ ருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட் டுள்ளது.

சத்திஸ்கார் மாநில கவர்னராக நியமிக்கப்படுகிறார். மாநில முதல்-மந்திரி ரமண்சிங் குடன் ஆலோசனை நடத்திய பிறகு நரசிம்மனை கவர்னராக நியமிக்கும் `பைல்’ ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது. எனவே எந்த நேரத்திலும் இதற்கான அறி விப்பு வெளியாகலாம்.

லட்சுமி நரசிம்மனுக்கு சொந்த ஊர் திருவள்ளூர் ஆகும். 1968-ம் ஆண்டு ஆந்திர மாநில ஐ.பி.எஸ். பிரிவைச் சேர்ந்தவர். மத்திய உளவுத் துறையில் 32 ஆண்டுகள் பணி யாற்றி உள்ளார். பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் சொந்த ஊர் வந்து ஆன்மீகப் பணியில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார். அதற்குள் அவருக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

வருகிற 24-ந் தேதி லட்சுமி நரசிம்மன் சத்தீஸ்கார் தலை நகர் ராய்ப்பூர் செல்கிறார். மறுநாள் (25-ந் தேதி) கவர்ன ராக பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார். இவர் சத்தீஸ்கார் மாநிலத்தின் 3-வது கவர்னர் ஆவார்.

பதவி ஏற்ற மறுநாள் ராய்ப்பூரில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

Posted in CBI, Chattisgarh, Director, ES Lakshmi Narasimhan, ES Lakshmi Narasimman, Governor, Thiruvalloor, Thiruvallur, Thiruvaloor | Leave a Comment »