Thiyagaraja Bhagavathar, Maangudi Chidhambara Bhagawathar, Brindha, TK Jayaraman, Sundha – Dinamani Kathir Music Season Special
Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006
ஏ.ஆர். சுந்தரம்: மேடையிலே வீசாத மெல்லிய பூங்காற்று!
நேர்காணல்} தொகுப்பு: வழிப்போக்கன்
“”ரேடியோ ஸ்டேஷனில் பாடும்போது ரெகார்டிங்கை அறிவிக்க ரெட் லைட் போடுவார்கள். அதைப் பார்த்த உடனே நமக்கு பாட்டெல்லாம் மறந்து போனதுபோல் பயம் வந்து விடும்” என்பார் வீணை தனம்மாள் குடும்பத்தின் ஜெயம்மா. இத்தனைக்கும் என் ராசி லிப்ரா. லிப்ரா ராசிக்காரர்கள் நன்றாகப் பேசுவார்கள் என்று பெயர்.
ஆனால் உங்கள் டேப் ரிகார்டரைப் பார்த்தால் பேச்சுவரவில்லை என்றார் சுந்தா. காதோலை பளிச்சென்று மின்னலாய் வெட்ட, கேலியும் கிண்டலுமாக அவர் தலையை அசைத்தபோது லிப்ரா ராசிக்காரர்கள் நன்றாகப் பேசுவார்கள் என்பது உண்மைதான் என்று எனக்கும் தோன்றியது. ஆனால் சுந்தா வெறும் பேச்சாளி மட்டுமல்ல…மிகச் சிறந்த சங்கீத வித்வாம்சினி. இன்றும் அழுத்தமான கமகங்களுடன் அவர் பதங்களையும் ஜாவளிகளையும் பாடிக்காட்டும்போது அந்தக் குரலில், கடந்து சென்ற காலத்தை மீறிப் பொங்குகிறது இளமை.
83 வயது சுந்தா என்ற ஏ.ஆர். சுந்தரம்மாளை உங்களுக்கு இன்னும் அறிமுகப்படுத்தவில்லையே…? அந்த நாள் சென்னையின் முக்கிய பிரமுகரும் புகழ் பெற்ற ரசிக ரஞ்சனி சபாவின் நிறுவனரும் சங்கீதப் புரவலருமான ஏ.கே.ராமச்சந்திரனின் மகள். பெண்ணாகப் பிறந்தவர்கள் கூடத்தைத் தாண்டி வராத காலம். ஆகவே பாட்டு கற்றுக் கொண்டாரே தவிர மேடைக்கு வரவில்லை. ஆனால் நல்ல சங்கீத மணியாக அவர் உருவானார். பிருந்தா – முக்தா சகோதரிகளின் பாரம்பரியத்தில் அதாவது தனம்மாள் குடும்ப சங்கீதத்தின் பிரதிநிதியாக இன்று நம்மிடையே வாழும் மிகச் சிலரில் ஒருவர் சுந்தா. அன்றைய வாழ்க்கை, தான் கண்ட சங்கீத உலகம், அனுபவங்களை இங்கு அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
அன்றைய மயிலாப்பூர் ரொம்ப அழகாக இருக்கும். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இங்குதான். இன்றைக்குத்தானே மயிலாப்பூரில் கூட்டம் நெரிகிறது. டிராம் ஓடிய காலம் அது. மாடவீதிகள் அமைதியாக இருக்கும். கபாலி கோவில் குளம் நீர் ததும்ப அழகு நிரம்பியிருக்கும். ஒரு சின்ன வயசு நினைவு. ஒரு மழை நாளில் குளத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறேன். பக்கத்தில் அம்மா. நான் அவரிடம் “”அம்மா….மழை பெய்கிறதே… இடி விழுமா அம்மா?” என்றேன். என் வாய் மூடவில்லை. சட்டென வெட்டிய மின்னல் குளத்தில் அக்னிச் சரம் போல இறங்குவதைப் பார்த்து பிரமித்தேன். “”என்னடி வாய் உனக்கு… நீ கேட்டு முடித்த அடுத்த கணத்தில் இடி விழுகிறதே…” என்று அம்மா கலவரமும் வேடிக்கையுமாக ஆச்சரியப்பட்டார். என் படிப்பெல்லாம் சர்ச்பார்க் கான்வென்டில். கிளாசில் எட்டு பேர்தான் இருப்போம். இன்று மாதிரி அன்று பெண்கள் படிக்க வரமாட்டார்கள். காலம் அவர்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தது. அந்த வகையில் எனக்குப் படிக்கத் தடையில்லை என்றாலும் கான்வென்ட் படிப்புக்கு மேலே என்னைத் தொடரவிடவில்லை.
என் அப்பா ஏ.கே. ராமச்சந்திரய்யர் அந்த நாள் சென்னையின் முக்கிய பிரமுகர். சங்கீதத்தில் பரம ரசிகர். குறிப்பாக நாகஸ்வர சங்கீதத்தில் அவருக்கு அப்படியொரு ஆசை. அந்த நாளில் கபாலி கோவில் பிரம்மோத்ஸவத்திற்குப் பல பிரபல நாகஸ்வர மேதைகள் வந்து வாசிக்க அவரே காரணம். விடாயாற்றி உத்ஸவக் கச்சேரிகளுக்கு பணச்செலவு அவருடையது. ஒரு தடவை விடாயாற்றியில் ஒரு நாள் கச்சேரிக்கு அன்றைய திரை நட்சத்திரம் தியாகராஜ பாகவதரையே பாட வைத்தார். அப்பா… கூட்டமான கூட்டம். ஏழூர் கூட்டம். சுவரெல்லாம் மாடியெல்லாம் தலைகள் மயம்.
டி.கே.ஜெயராமன்
அப்பாவுக்கு நாகஸ்வரத்தில் அசாத்திய ஈடுபாடு. நாகஸ்வர சங்கீதத்தை வளர்க்க வேண்டும் என்ற கனவில்தான் ரசிக ரஞ்சனி சபாவையே அவர் ஆரம்பித்தார். அவரது சங்கீத ஆர்வம்தான் என்னைப் பாட அனுமதித்தது. நான் ஓகோ என்று பாடவேண்டும் என்று கனவு கண்டார். அதே சமயம் நான் பொதுமேடையில் பாடுவதில் அவருக்குச் சம்மதமில்லை. பார்க்க லட்சணமாக இருக்கிற பெண்கள் நூறு பேர் பார்க்கும்படி மேடையில் உட்கார்ந்து தொடையில் தாளம்போட்டுக் கொண்டு பாடக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். ஆகவே நான் கற்ற சங்கீதம் எங்கள் வீட்டுக் கூடத்தைத் தாண்டி வெளியே போகவில்லை. ஒரு விதிவிலக்கு ரேடியோவில் பாடினேன். ரேடியோவில்தான் முகம் பார்க்க முடியாதே. ஆரம்பத்தில் நானும் என் அக்காவுமாகப் பாடி வந்தோம். நான் நன்றாகப் பாடுவதில் அப்பாவுக்குப் பரம சந்தோஷம். முதல் முதலில் 1938 ஆம் வருஷம் அக்டோபர் 2-ஆம் தேதி ரேடியோவில் பாடினேன். அதுவும் பக்க வாத்தியம் இல்லாமல். பின்னாளில் தனம்மா குடும்பத்தின் ஜெயம்மாவுடன் சேர்ந்து குறவஞ்சி புரோகிராம் ஒன்று கொடுத்தோம்.
அந்த இளம் வயதில் அன்றைய முக்கிய வித்வான்களையெல்லாம் குறும்பாக இமிடேட் பண்ணிப் பாடுவேன். ஆனால் கடைசி வரை மேடை மட்டும் ஏறவில்லை. மேடையில் பொது ஜனங்கள் முன்பு பாடவில்லையே என்றாலும் அன்றைய மிகப் பெரிய சங்கீத வித்வான்களின் முன்பெல்லாம் பாடிக் காட்டும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. அவர்களும் என் பாட்டைக் கேட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். இப்படி வாய்ப்புக் கிடைக்கக் காரணம் அந்த நாளில் எங்கள் வீட்டுக்கு வராத சங்கீத வித்வான்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்பாதான் முக்கிய சங்கீதப் புரவலர் ஆயிற்றே. அப்படி முக்கியமான வித்வான்கள் வரும்போதெல்லாம் அப்பா என்னை அவர்கள் முன் பாடவைப்பார்.
பிருந்தா
கதாகாலட்சேபக் கலையின் பிதாமகரான மாங்குடி சிதம்பர பாகவதரிடம் பாடிக் காண்பித்திருக்கிறேன். அவர் கதை சொல்லுகிற அழகை நீங்கள் நேரில் பார்க்க வேண்டும். பிரம்மாண்டமான உருவம். நல்ல கருப்பு. மேடையில் முன்னும் பின்னுமாக நகர்ந்தும் நடந்தும் அவர் கதை சொல்கிற பாணி இருக்கிறதே…. அது நெஞ்சை விட்டு நீங்காதது. எங்கள் வீட்டில் அவர் “மோகனராமா’ கிருதியைப் பாடச் சொல்லிக் கேட்க நான் பாடிக் காட்டியிருக்கிறேன். கீர்த்தனாசார்யாரான மைசூர் வாசுதேவாசாரியார் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவரது அருமையான “ரா ரா ராஜீவ லோசன’ கிருதியை அவர் முன்பாகவே பாடுகிற பாக்யம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதைக் கேட்டு அவர் ரொம்ப சந்தோஷப்பட்டுப் பாராட்டியது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. இதற்கெல்லாம் முன்பு ரொம்ப சின்ன வயசில் நானும் அக்காவும் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் முன்பு பாடியிருக்கிறோம் தெரியுமா? ஆனால் அது எங்கள் வீட்டில் அல்ல. தாகூர் அப்போது சென்னை வந்து மயிலாப்பூர் கச்சேரி ரோடில் உள்ள “ரங்க விலாஸ்’ என்ற பெரிய பங்களாவில் தங்கியிருந்தார். அப்பா என்னையும் அக்காவையும் அழைத்துச் சென்றார். தாகூர் முன்னால் அப்பா எங்களை “வந்தேமாதரம் பாட்டுப் பாடச்சொன்னார். தாடி மார்பில் தவழ அமர்ந்திருந்த தாகூர் அதைக் கேட்டார். அவர் ரியாக்ஷன் எப்படியிருந்தது என்றெல்லாம் இப்போது நினைவில்லை. காரணம் நாங்கள் அப்போது ரொம்ப சிறிய பெண்கள்.
மாங்குடி சிதம்பர பாகவதர்
நான் பாடிக் காண்பித்த பெரிய சங்கீத மேதைகளில் கே.பி.சுந்தராம்பாளும் ஒருவர். தன் குரலால் எல்லாரையும் கிறங்க அடித்த அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது அப்பா சொன்னபடி நான் பாடிக் காட்டினேன். என் குரலைக் கேட்டு சந்தோஷமடைந்த அவர் என் அம்மாவிடம் வெளிப்படையாக சொன்ன பாராட்டு வார்த்தைகள் இன்னும் நினைவிருக்கிறது. “”அம்மா….இந்தக் குழந்தே ரொம்ப நல்லாப் பாடுறாளே….கல்யாணம் பண்ணினா இவ்வளவு நல்ல பாட்டும் போயிடுமே. அப்புறம் பாடவே முடியாதே….அவளுக்கு பாட்டை நன்றாகச் சொல்லி வையுங்கள். கல்யாணமே வேண்டாம்” என்றார் கே.பி.எஸ். உடனே என் அம்மா, “”இது நடக்கிற காரியமா அம்மா….” என்று கேட்டார். நான் பாடிக்காட்டிய லிஸ்டில் டி.எல்.வெங்கட்ராமையர், நாகஸ்வர மேதைகளான திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, திருவீழிமிழலை சகோதரர்கள் ஆகியோர் உள்ளிட்ட பலர் அடங்குவர்.
நான் சங்கீதத்தைப் பல குருமார்களின் முகமாய்க் கற்றுக் கொண்டவள் என்றாலும் என் முக்கிய பிரதான குரு பிருந்தாம்மாதான்.
நான் அந்த நாளில் சிறப்பாகப் பாடக் காரணமாக இருந்தவர் எனது குருவான பிருந்தாம்மா. புகழ் பெற்ற இசை மேதை தனம்மாள் குடும்பத்திலிருந்து வந்த பெரிய கலைஞர் அவர். அவர் வீட்டுக்கு வந்து பாட்டுக் கற்றுக் கொடுத்தாரென்றால் அது எங்கள் வீட்டுக்கு மட்டும்தான். ரொம்ப கெüரவமானவர். அப்படிப்பட்டவர் என் தந்தை மீதிருந்த மரியாதை காரணமாக எனக்கு வீட்டுக்கே வந்து 3,4 வருஷம் சொல்லிக் கொடுத்தார். சங்கீத மேதை என்றால் பிருந்தாம்மாவைத்தான் சொல்லவேண்டும். ராகங்களை அவர் அப்படியே ஜூஸ் பிழிந்ததுபோல ரசமயமாக நெüக சரித்திரத்தை அவர் பாடியதைக் கேட்டு என் தாயார் பிரமித்துப் போய் பாராட்டியிருக்கிறார். சங்கீத மேதையான நாயனாப் பிள்ளையிடம் சிட்சை பெற்றவர் இல்லையா?
புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் என் வீட்டுக்கு வருவார். ஒரு மணி நேரம் சிட்சை நடக்கும். அவர் சொல்லித் தருவதை ஒரு வரிகூட எழுதக் கூடாது. அப்படியே காதில் வாங்கிக் கொள்ளவேண்டும். கமக மயமான அதை நோட்டில் எழுதுவதும் சாத்தியமில்லை என்பதுடன் சங்கீதம் செவி வழியாக மனத்தில் கல் எழுத்துப் போல பதியவேண்டும் என்று விரும்பினார் அவர். அது நிஜம் தான். இன்றும் அந்தப் பாடங்கள் எனக்கு மறக்கவில்லையே. (பாடிக்காட்டுகிறார்.)
அது மட்டுமல்ல. அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த டி.சங்கரன் ரேடியோ ஸ்டேஷனில் இருந்தார். அவரிடம் நான் எத்தனையோ தேவாரம், திருப்புகழெல்லாம் கற்றேன். பின்னாளில் ஒருதடவை மகாபெரியவர் சமஸ்கிருத கல்லூரிக்கு வந்தபோது அவர் முன்னிலையில் சுந்தரரின் “அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன்’ பதிகத்தைப் பாடுகிற பாக்கியம் கிடைத்தது.
தியாகராஜ பாகவதர்
தனம்மாள் வாசிப்பதை நான் நேரில் கேட்டிருக்கிறேன். வெள்ளிக்கிழமைகளில் அவர் வாசிப்பார். அவர் வாசிப்பைக் கேட்டதோடு சரி…மற்றபடி அவரோடு பேசுகிற பாக்கியம் கிடைக்கவில்லை. பேச்சு பழக்கம் எல்லாம் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஜெயம்மா, பாலசரஸ்வதி, சங்கரன், பிருந்தா, முக்தா இவர்களோடுதான். பிருந்தா, முக்தாவுக்கு அபிராமசுந்தரி என்று ஒரு சகோதரி இருந்தார். ரொம்ப அழகாக இருப்பார். நன்றாக வயலின் வாசிப்பார். இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். தனம்மாள் குடும்பத்தின் சங்கீத பாணியை அறிந்தவர்கள் என்று பார்த்தால் பிருந்தாவின் மகள் வேகவாகினி, நான் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களது அற்புதமான சங்கீத பாணியைக் கரைத்து எனக்குப் புகட்டினார் பிருந்தாம்மா. இன்று அந்தப் பாணி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. அதைக் காப்பாற்ற வேண்டியது மிக அவசியம். பதங்களையும் ஜாவளிகளையும் அவர்களைப் போலப் பாட ஒருத்தராலும் இயலாது. இன்று நம்மிடையே வாழ்கிற மிகப் பெரிய சங்கீத வித்வாம்சினி டி.கே.பட்டம்மாள் “”பதப்பட்டவர்கள்தான் பதம்பாட முடியும்” என்பார். அது உண்மைதான். சங்கீதப் பயிற்சியால் பக்குவப்பட்டவரே பிருந்தாம்மாவின் பாணியில் பாடமுடியும். அவர்கள் பாணி கமக மயமானது. ஓட்டமாய் ஓடாமல் நிதானமாக விளம்பகாலத்தில் அந்தப் பாணியில் பாடுவது சற்று சிரமம்தான்.
இப்படி விளம்பகாலத்தில் பாடும்பாணி பிடிக்காத யாரோ ஒருவர் அப்பாவிடம் வந்து உன் பெண்ணுக்குக் குரலில் பிர்க்காவே பேசுவதில்லை என்று புகார் சொன்னார்கள். அப்பா உடனே இதை ஒரு சவால் மாதிரி எடுத்துக் கொண்டு பிர்க்காக்கள் வாண வேடிக்கை மாதிரி நடக்கும் ஒரு பாணியில் எனக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டார். அன்று கொடிகட்டிப் பறந்த இசை மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியத்திடம் இது பற்றிப் பேசினார். அவர் தன்னுடைய சீடரான டி.ஆர்.பாலுவை எனக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க அனுப்பி வைத்தார்.
ஒன்றை இங்கு சொல்ல வேண்டும் அந்தக் காலத்தில் ஜி.என்.பி.யின் ஜிலுஜிலுவென்ற அற்புதமான சாரீரத்தில் எங்களுக்கெல்லாம் மோகம். டி.ஆர்.பாலுவிடம் ஜி.என்.பி. பாணியில் இசை பயின்றேன். நான் நன்றாகப் பாடுவதைக் கேள்விப்பட்டு என் வீட்டிற்கே வந்து என்னைப் பாடச் சொல்லிக்கேட்டு பாராட்டிவிட்டுச் சென்றார் அந்த மேதை. அது எனக்குப் பெரிய கெüரவம்.
ஜி.என்.பி. அந்த நாளில் எங்கள் வீட்டிலேயே பாடியிருக்கிறார். என் அக்காவின் கல்யாணத்தில் அவர் பாடியது இன்னும் நினைவிருக்கிறது. என் அக்கா கணவரின் நெருங்கிய நண்பர் அவர்.
அந்தக் காலத்தில் பத்து பன்னிரெண்டு வயசாகிவிட்டாலே….எப்ப கல்யாணம் என்று பறப்பார்கள். என்னை விட்டுவிடுவார்களா? எனக்குக் கல்யாணம் ஆயிற்று. கல்யாணத்தில் திருவீழிமிழலை சகோதரர்கள் அவர்களது புதல்வர்கள் ஆக நான்கு பேருமாக ஊர்வலத்தில் அற்புதமாக வாசித்தார்கள். அன்று தவில் யார் தெரியுமா? மகாவித்வான் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. எங்கள் வீட்டுக்கல்யாணங்கள் அனைத்திலும் மகாவித்வான்கள் பாடியிருக்கிறார்கள். அக்கா கல்யாணத்துக்கு மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாட்டு, பால சரஸ்வதி நாட்டியம் என்று அமர்க்களப்பட்டது. எனக்கு வந்த கணவர் தங்கம். என் பாட்டு விஷயத்தில் அவர் குறுக்கிட்டதே இல்லை. என்னை என் ரசனைகளை மதிப்பவராக அவர் இருந்தார். அந்த விஷயத்தில் நான் மிக பாக்கியசாலிதான். என் கணவர் கண் டாக்டராக இருந்தார். கச்சேரி ரோட்டில்தான் கிளினிக் வைத்து பிராக்டீஸ் செய்துவந்தார். புகழ் பெற்ற மருத்துவர் சி.வி.கிருஷ்ணசாமிக்கு அவர் ஆசிரியர். அந்த நாளில் எம்.ஜி.ஆருக்கு அவர் காட்டராக்ட் ஆபரேஷன் செய்தார். தன்னிடம் யார் வந்து மருத்துவம் செய்து கொள்கிறார்கள் என்ற விவரத்தையெல்லாம் என்னிடம் கூடச் சொல்லமாட்டார். இரவு பன்னிரெண்டு மணிக்குப் பிறகு எம்.ஜி.ஆர். என் கணவரின் கிளினிக்கிற்கு வந்து டெஸ்ட் பண்ணிக்கொள்வார். ராமாவரம் வீட்டில் வைத்துத்தான் அவருக்கு என் கணவரும் அவர் நண்பரும் சேர்ந்து காட்டராக்ட் ஆபரேஷன் செய்தனர்.
எனக்குச் சங்கீதத்தில் பல குருக்கள் என்று சொன்னேனில்லையா? அன்று தமிழிசை இயக்கம் சிறப்பாக வளர்ந்த நிலையில் அன்று தமிழ்ப் பாட்டுக்களில் ஈடுபாடு கொண்டு என் அப்பா எனக்கு மருத்துவக்குடி ராஜகோபாலய்யர் மூலம் சிவனது கீர்த்தனைகளைக் கற்க வைத்தார். சங்கீதத்தில் உள்ள ஆர்வத்தால் பல குருமார்களிடம் பல்வேறு பாணிகளை நான் பயின்றேன். ஆயினும் என்னிடம் ஒரு குணம் என்னவென்றால் நான் யார் பாணியில் கற்றாலும் மற்ற பாணிகளின் கலப்பின்றி அவரவர் பாணியில் பாடுவதில் தேர்ச்சி பெற்றிருந்தேன். நான் கடைசியாகப் பயின்றது மறைந்த இசை மேதை டி.கே.ஜெயராமனிடத்தில்.
இத்தனை வயதில் என் ஆசை ஒன்றுதான். தனம்மாள் குடும்பப் பாணி, பிருந்தாம்மாவின் சங்கீத பந்ததிகள் அழியாமல் இருக்கும் படி பதம், ஜாவளிகளைக் கற்பதில் இந்த இளந்தலைமுறை ஆர்வம் காட்டவேண்டும் என்பதுதான்.
நேர்காணல்} தொகுப்பு: வழிப்போக்கன்
மறுமொழியொன்றை இடுங்கள்