Sembai Vaithyanatha Bagavathar, Mani – Dinamani Kathir Music Season Special
Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006
எஸ்.பி. மணி: வில்லிவாக்கத்தில் விதை! கல்கத்தாவில் கனி!
நேர்காணல் தொகுப்பு-புலிக்கால் தேசிகன்
இசையுலகில் மோர்சிங் வித்வானாக அறியப்பட்டவர் மணி. 77 வயதான மணி, யுனைடட் இந்தியா இன்ஷூரன்ஸில் உதவி ஜெனரல் மேனேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். இசை இவரது ஒரு முகம்தான். இசையோடு விளையாட்டு, நிர்வாகம், ஆன்மிகம் எனப் பல்துறைகளில் வாழ்வனுபவம் பெற்றவர். இதுதான் மணியை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது.
மோர்சிங் வாசிப்பில் பெற்ற தேர்ச்சியால் செம்பை முதல் சோமு வரை மிகப் பெரிய வித்வான்களுக்கு வாசித்த கலைஞர் இவர். இசையுலகை மேடை மீது அமர்ந்தும் மேடையிலிருந்து விலகியும் பார்த்து பல விஷயங்களை அறிந்து கொண்டவர். அறிந்து கொண்டவற்றை அழகுறச் சொல்லும் கலையை இவரிடம் கற்க வேண்டும். இசைக் கலைஞர் தொடங்கி திரைக்கலைஞர் வரைக்கும் விரியும் இவரது நட்பு வட்டமே இவரது பரந்த அனுபவத்துக்கு சாட்சி. இனி இந்த அனுபவக்கடலிலிருந்து அவர் தரும் சில துளிகள்.
நான் பிறந்தது தஞ்சை மாவட்டம் சேண்டாக் கோட்டை. அது பட்டுக்கோட்டை அருகே உள்ளது. வளர்ந்ததெல்லாம் சென்னையில். அப்பா சாம்பசிவய்யர் ஒரு பன்முக வித்தகர். அவர் தொழில் ரீதியாக வெள்ளைக்காரக் கம்பெனியான ராலீஸ் இந்தியாவில் பெரிய உத்யோகத்தில் இருந்தார். முந்தைய காலங்களில் துபாஷ் என்று அந்தப் பதவிக்குப் பெயர். பின்னர் சீஃப் ப்ரோக்கர் என்றனர்.
அப்பாவின் பல்வேறு திறமைகளில் மிக முக்கியமானது சங்கீதம். அந்த நாளில் சென்னை பவழக்காரத் தெருவில்தான் எங்கள் குடும்பம் வசித்துவந்தது. அப்போது அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போகவே வில்லிவாக்கத்துக்கு வந்தோம். அன்றெல்லாம் உடம்பு பாதிக்கப்பட்டு சற்று ஆரோக்கியமான வாசஸ்தலம் தேவைப்படுவோருக்கு டாக்டர்கள் வில்லிவாக்கத்தில் போய் வசிக்க பரிந்துரைத்தார்கள். வில்லிவாக்கத்தில் தாழங் கிணறு என்று ஒரு கிணறு இருந்தது. அதன் தண்ணீருக்கு மருத்துவக் குணம் உண்டு என்றும் அந்தத் தண்ணீரைத் தொடர்ந்து குடித்தால் உடல் வியாதிகள் தீரும் என்றும் அன்றைய சென்னை டாக்டர்கள் கூறுவார்கள். என் அப்பாவுக்கும் இப்படித்தான் டாக்டர்கள் பரிந்துரைத்தார்கள். எங்கள் குடும்பம் வில்லிவாக்கத்துக்கு வந்தது. நாங்கள் நம்பர் ஒண்ணு, தாழங்கிணற்றுத் தெருவில் வசித்து வந்தோம். தாழங்கிணறு பெரியதாக இருக்கும். கிணற்றுக்கு அடுத்து பெரிய ஏரி இருந்தது. ஆம். இருந்தது என்று சொல்ல வேண்டும். இப்போது அந்த ஏரி இருந்த இடத்தில் சிட்கோ நகர் இருக்கிறது.
வில்லிவாக்கத்தில் மிகக் குறைவான தெருக்களும் வீடுகளும் இருந்தன. இன்றைக்கு இப்படிச் சாக்கடையாக இருக்கும் வில்லிவாக்கம் அன்று ஆரோக்கியமான கிராமமாக இருந்தது. அன்று சென்னை நகரில் வசித்தவர்கள் வேலையில் ஓய்வு பெற்றதும் தங்கி வாழும் ஊராக வில்லிவாக்கம் இருந்தது என்றால் இப்போது நம்பமுடியுமா? வில்லிவாக்கத்தில் நான் சிங்காரம்பிள்ளை பள்ளிக்கூடத்தில் படித்து வந்தேன். என் அப்பாவைத் தேடி ஏராளமான சங்கீத வித்வான்கள் வீட்டுக்கு வருவார்கள். வீடு நிறைய ஏராளமான கிராம்போன் ரெகார்டுகள் இருக்கும். எல்லாம் கர்நாடக சங்கீதம்தான். நாகஸ்வரங்கள். பெரிய வித்வான்கள் பாடியவை. எப்பொழுதும் சங்கீதம் ஒலித்துக் கொண்டே இருக்கும் வீடு என்னுடையது. குறிப்பாக கிட்டப்பாவின் பாட்டுகள். கிட்டப்பா பாட்டை நேராகவே நாடகத்தில் கேட்டிருக்கிறேன். அப்போது எனக்கு 12 வயதுதான் இருக்கும். திருச்சியில் நடந்த நாடகம் அது. பிற்காலத்தில் கிட்டப்பாபோல ஓரளவு பாடினார் என்றால் டி.ஆர்.மகாலிங்கத்தைச் சொல்ல வேண்டும். எங்கள் வீட்டில் கிட்டப்பா உள்பட கலைஞர்களின் கிராம்போன் ரெகார்டுகளைக் கேட்பதற்கும் என் அப்பாவோடு சங்கீதம் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் பெரிய பெரிய வித்வான்கள் வருவர்.
அப்படி எங்கள் வீட்டுக்கு அன்று வந்த வித்வான்களில் மகாவித்வானாக விளங்கிய ஜலதரங்கம் ரமணையச் செட்டியாரும் ஒருவர். அவர் இவ்வளவு பெரிய கலைஞர் என்று யாராவது சொன்னால்தான் தெரியும். குள்ளமாக இருப்பார். முட்டுக்கு மேல் வரும் காவி நிற வேஷ்டி. தோளில் ஒரு துண்டு. அவர் கோலத்தைப் பார்த்தால் ஏதோ பரம ஏழை தெருவில் போவது போல இருக்கும். சங்கீதத்தில் அவர் பெரிய அதாரிடி. அவரும் அப்பாவும் சங்கீதத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அவரைப் போலவே அப்பாவைத் தேடி வரும் வித்வான் ஆரணி தாமோதராசார்லு. சாதாரண தாமோதராசார்லு அல்ல… கோடையிடி தாமோதராசார்லு. தன் பெயரின் முன் கோடையிடி என்று அவரே சேர்க்கச் சொல்வார். அவர் சாதாரணமானவர் அல்ல… காஞ்சீபுரம் நாயனாப் பிள்ளையின் சிஷ்யர்.
அப்புறம் நரசிம்மாச்சாரியார் என்று ஒரு வித்வான். அவர் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர். அவரும் மிகப் பெரிய வித்வான். ஆனால் கச்சேரி பண்ணமாட்டார். அவர் பெரிய சங்கீத ஆசார்யார். அந்த நாளின் மிகப் பெரிய வீணை வித்வான்கள் காரைக்குடி சகோதரர்கள். அவர்கள் ஞாயிறுதோறும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். இப்படிப்பட்ட முக்கியமான வித்வான்களெல்லாம் குழுமிவிட்டால் ஒரே கலகலப்புத்தான். பாட்டும் பேச்சுமாக எங்கள் வீட்டுத் திண்ணை அமர்க்களப்படும். சங்கீத சாஸ்திர நுட்பங்களெல்லாம் அப்போது அலசப்படும். பாடிக் காட்டுவார்கள். பாடுவதில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவார்கள் இப்படியாக வீட்டுத் திண்ணையிலேயே லெக்சர் டெமான்ஸ்ரேஷன்கள் நடக்கும். ஞாயிற்றுக் கிழமையாகிவிட்டால் இந்த ஸ்பெஷல் செஷன் நிச்சயம் திண்ணையில் கூடும். அப்போது அவர்கள் விருப்பப்படி கிராம்போன் தட்டுக்களைப் போடுவதும் இயக்குவதும் என் பொறுப்பு. அந்த நாளில் முதலில் கிராம்போன் பிளேட் கொடுக்க பல வித்வான்கள் பயந்தார்கள். பிளேட்டில் குரலைப் பதிவு செய்தால் ஆயுள் குறைச்சல் என்று அப்போது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையை உடைத்து தைரியமாகச் சில வித்வான்கள் பிளேட் கொடுத்தனர். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அதில் ஒருவர். அப்போதெல்லாம் கொலம்பியா டுவின் ப்ளேட் என்று ஒரு ரெகார்ட் வரும். எங்கள் வீட்டிலிருந்த பிளேட்டுகளில் எம்.எஸ்.பாடிய “எவரி மாட’, “எனக்குள் இருபதம்’ ஆகியவையும் இருந்தது இன்றும் நினைவிலிருக்கிறது.
அப்பாவின் சங்கீத ஆர்வம் வெறும் பேச்சோடு போகவில்லை. அப்பா அருமையாக ப்ளூட் வாசிப்பார். அத்தோடு நாகஸ்வரமும் கற்றுக் கொண்டார். ஆபீஸ் உத்யோகஸ்தர் ஒருவர் அதுவும் வெள்ளைக்காரக் கம்பெனியில் வேலை செய்பவர் நாகஸ்வரம் கற்பதென்பது ஆச்சரியம்தானே. அப்பாவுக்கு நாகஸ்வரம் கற்றுக் கொடுத்தவர் யார் தெரியுமா? திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை.
அவர் வந்ததும் அப்பாவும் அவருமாக நாகஸ்வரத்தை எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டில் ஓர் அறைக்குப் போய்க் கதவைச் சாத்திக் கொண்டு அதன்பிறகு வாசிக்க ஆரம்பிப்பார்கள். சின்ன வீட்டில் ரெண்டு பேர் சேர்ந்து வாசித்தால் சப்தம் தாங்கமுடியாதல்லவா? அதனால் இந்தக் கதவடைப்பு.
நாகஸ்வரத்தில் அப்பாவுக்கு அபரிமிதமான ஓர் ஆசை. அன்று ஸ்டார் வித்வானாக விளங்கிய திருவிடைமருதூர் வீருசாமிப் பிள்ளை அப்பாவுக்கு ரொம்ப நெருக்கம். அவரிடமும் கொஞ்சநாள் அப்பா நாகஸ்வரம் கற்றார். பிற்காலத்தில் என் கல்யாணம் குளித்தலை அருகே மணத்தட்டை என்ற கிராமத்தில் நடந்தபோது வீருசாமிப் பிள்ளை வந்து வாசித்தார். அன்று இரவு அவர் வாசித்த வாசிப்பு ரொம்ப ஜோர். என்னைப் பொறுத்தவரை இந்தத் தஞ்சாவூர் ஜில்லாவே சங்கீதத்துக்காக ஈஸ்வரனால் சிருஷ்டிக்கப்பட்டது என்பது என் கருத்து. இங்கிருந்து கேரளத்துக்குப் போனவர்களால் அந்தப் பகுதி சங்கீதம் அபிவிருத்தி ஆனதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். தஞ்சை ஜில்லாவில் அந்த நாளில் வருஷம் முழுக்க ஏதாவது சங்கீத விழாக்கள் நடந்த வண்ணம் இருக்கும்.
சங்கீத விழாக்கள் நடத்துகிற தஞ்சை மரபை அப்பா கைவிடவேயில்லை. 1945-46களில் என் அப்பா வில்லிவாக்கத்தில் வருஷம்தோறும் பத்து தினங்கள் ஸ்ரீராமநவமி உத்ஸவம் நடத்துவார். அதில் அன்றைய பெரிய வித்வான்களெல்லாம் வந்து பாடுவதும் வாத்தியம் வாசிப்பதும் நடக்கும். வீணை மேதை பாலசந்தர் மெய்டன் வீணைக் கச்சேரி செய்தது இந்த உத்ஸவத்தில்தான். அவர் மிகப் பெரிய மேதை. அவருக்கு வாசிக்கத் தெரியாத வாத்தியமே இல்லை எனலாம். குறிப்பாக தந்தி வாத்தியங்கள் எல்லாம் வாசிப்பார். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுதான் வீணையை அவர் வாசிப்புக்கு நிரந்தரமாகத் தேர்ந்தெடுத்தார். அப்படி அவர் வீணையைத் தேர்வு செய்ததில் அப்பாவின் பங்கும் உண்டு. அப்பா அந்தநாளில் அவரை வீணையைத் தேர்வு செய்ய சொல்லி வலியுறுத்தியிருந்தார்.
செம்பை வைத்யநாத பாகவதர்
பாலசந்தரின் குடும்பமே பெரிய கலைக் குடும்பம். அவர் அண்ணன் எஸ்.ராஜம் மிகச் சிறந்த வாய்ப்பாட்டு வித்வான். சங்கீத ஆசார்யார். அத்தோடு மிகச் சிறந்த ஓவியரும் கூட. இப்படியே அவர் வீட்டைச் சேர்ந்தவர்களெல்லாம் சங்கீதத்தில் நிபுணத்துவமும் ஞானமும் பெற்றவர்கள். பாலசந்தரின் அப்பா சுந்தரமையர் அந்த நாளில் சீதா கல்யாணம் என்று ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தில் குடும்பத்தைச் சேர்ந்தவர்களெல்லாம் ஆளுக்கொரு வேடத்தில் நடித்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி முழுக்க முழுக்க கலைக்குடும்பம் அது. பாலசந்தர், அப்பாவுக்கு மிகவும் வேண்டியவர். அவர் வில்லிவாக்கத்தில் வீணைக் கச்சேரி வாசித்த போது 24,25 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன்.
அன்று வில்லிவாக்கத்தில் சஞ்சீவராவ் என்று ஒரு கன்னடக்காரர் இருந்தார். அவர் கார்ப்பரேஷன் ஓவர்சியர். பெரிய சங்கீத ரசிகர். அவர் வீட்டிற்கு ஒரு தடவை வீணை தனம்மாள் வந்து வாசித்தார். நான் அப்போது சின்னப் பையன்தான். இருந்தாலும் அந்தக் கச்சேரிக்குப் போய்க் கேட்டேன். மிகக் குறைவான பேர்களே அமர்ந்து கேட்டார்கள். குளுமையான நாதமும் மிக லாவகமாகப் பிரளும் கைகளுமாக சுகமான வீணாகானம் என்று மட்டும் நினைவிருக்கிறது. டெக்னிகலாகக் கேட்டு ராகங்களில் லயித்து அனுபவிக்கும் அளவுக்கு ஞானமில்லாத வயது எனக்கு.
இது தவிர எங்கள் வீட்டில் அடிக்கடி பஜனை நடக்கும். இதனால் என் அப்பாவுக்கு பஜனை சாம்பசிவய்யர் என்றே பெயர். எங்கள் வீட்டில் ஒரு அவுட் ஹவுஸ் இதுபோன்ற பஜனைகளுக்காகவே பயன்பட்டது. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அந்த நாளில் எங்கள் வீட்டில் நடந்த ஒரு பஜனைக்கு மதுரை மணி வந்து பாடியிருக்கிறார். அவர் போலவே பல வித்வான்களுக்கும் எங்கள் வீட்டுப் பஜனைக்கு ஆஜராகி அற்புதமாகப் பாடுவார்கள். அந்த நாளில் புதுசாகப் பாட்டு கற்கிறவர்கள், மிருதங்கம் கற்கிறவர்களுக்கெல்லாம் பஜனைதான் பயிற்சிக் கூடம்.
இத்தனையும் நான் சொன்னது எதற்காக என்றால் என் வாழ்வின் ஆரம்பப் பருவம் முழுக்க முழுக்க சங்கீதச் சூழ்நிலையில் கழிந்தது என்பதைச் சொல்லத்தான்.
முழுக்க சங்கீதச் சூழ்நிலையில் வளர்ந்தாலும் நான் சங்கீதத்தில் ஈடுபடவில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு காலம் வரவேண்டுமல்லவா? அதுபோல என் சங்கீத ஆர்வம் வெடித்துக் கிளம்பி முளைத்து வளர சிறிது காலம் ஆயிற்று. எனக்கு அப்போது கல்கத்தாவில் வேலை கிடைத்தது. நானும் போய் வேலையில் சேர்ந்தேன். தமிழ் பேச்சும், சாப்பாடும், பழக்கமும் இல்லாத ஊரில் தனிமையில் இருந்தபோது ஊர் நினைவெல்லாம் வந்து என் சங்கீத ஆர்வம் பீரிட்டு எழ ஆரம்பித்தது. கல்கத்தாவில் நான் தங்கியிருந்தது ராஜா பசந்த்ராய் ரோடில், ஒரு ரூமில் தங்கியிருந்தேன். அப்போது கல்கத்தாவில் இருந்த தென்னிந்திய ஸ்கூல் ஒன்றில் ஞாயிறுதோறும் கச்சேரி நடக்கும்.
அத்தோடு நான் இருந்த ரூமுக்கு அருகே ஒரு கட்டடம். என் ரூம் ஜன்னலிலிருந்து பார்த்தால் அந்தக் கட்டட ஜன்னல் தெரியும். ஜன்னல் வழியாக ஒரு ரூமில் சிலர் மிருதங்கம், தபேலா, கடம் எல்லாம் வாசிப்பார்கள். அதை நான் வேடிக்கை பார்ப்பேன். அவர்கள் என்னைப் பார்த்துப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்கள். “”சார்…..நீங்களும் எங்களோடு சேர்ந்து கொள்ளுங்களேன்” என்பார்கள். அதோடு, “”சார்…..எங்க செட்டில் இந்த மோர்சிங்காரர் ஏகத்துக்கு கிராக்கிப் பண்ணுகிறார். பேசாம நீங்க எங்க செட்டில் மோர்சிங் வாசிக்க வாங்க. இவர் கொட்டத்தை அடக்கணும்” என்றார்கள். நான் சிரித்தேன். பின்னர் ஊருக்கு என் அண்ணாவுக்கு எழுதி ஒரு மோர்சிங் வாங்கி அனுப்பும்படி சொன்னேன். அண்ணா மூர்மார்க்கெட்டில் நாலணா கொடுத்து ஒரு நல்ல மோர்சிங்கை வாங்கி அனுப்பினார். நானும் தனியாக உட்கார்ந்து நானாகவே பிராக்டீஸ் பண்ண ஆரம்பித்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக வாத்தியம் எனக்குப் படிந்து வர ஆரம்பித்தது. பிறகு கொஞ்ச காலத்துக்குப் பிறகு வாத்தியம் நான் சொன்னதைக் கேட்க ஆரம்பித்தவுடன் முழு மோர்சிங் வித்வானாக மாறிவிட்டேன். கல்கத்தாவில் நான் கேட்ட முக்கியமான கச்சேரிகளில் ஒன்று எம்.டி.ராமநாதனுடைய கச்சேரி. 1960-ல் கல்கத்தாவில் அவரது கச்சேரியை முதலில் நான் கேட்டேன். கூட்டமே இல்லை. 5000 பேர் உட்காருகிற ஹாலில் 50 பேர் கூட இல்லை. அவர்களில் நானும் ஒருவன். ஆனால் கச்சேரியைக் கேட்டதும் அவர் ரசிகனாகி விட்டேன். பின்னர் சென்னைக்கு 1962-ல் வந்த பிறகு மியூசிக் அகாதெமியில் அவர் கச்சேரியைக் கேட்டேன். இப்படிக் கேட்டுக் கேட்டு அவர் ரசிகனாகவும் பிறகு அவர் நண்பனாகவும் ஆனேன். ஆரம்பத்திலிருந்து மங்களம் வரையில் விளம்பகாலத்தில் பரம செüக்கியமாக விஸ்ராந்தியாகப் பாடுவார். அவர் வீட்டில் செய்கிற காரியங்களும் அப்படித்தான். அரக்கப் பறக்கச் செய்யாமல் நிதானமாகவே எல்லாக் காரியங்களையும் செய்வார்.
1962-ஆம் வருஷம் சென்னையில் செட்டில் ஆகிவிட்ட நான் மயிலாப்பூர் சவுத் மாடத் தெருவில் பண்ட் ஆபீஸýக்கு எதிரே குடியிருந்தேன். மயிலாப்பூர் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு கல்சுரல் சென்டர் என்றே சொல்வேன். கபாலி கோயில் அதன் மையமாக விளங்கியது. அன்று அங்கு நடக்கிற பெரிய உத்ஸவம் முடிந்து விடாயாற்றி நடக்கிற பத்து நாளைக்கு அற்புதமாக கச்சேரிகள் நடக்கும். அருமையான நாகசுரக் கச்சேரிகளெல்லாம் நடந்துள்ளன. என் ஆவலுக்குத் தீனி போட்டவண்ணம் இருக்கும் நல்ல சங்கீத சூழல்.
லஸ் சாஸ்திரி ஹாலில் சோமு கச்சேரி நடந்தது. 6 மணிக்கு ஆரம்பித்த கச்சேரி 9-க்கு முடியவேண்டும். ஊஹூம். 11 மணி ஆகியும் முடியவில்லை. என்ன வேணும் கேளுங்க…பாடறேன் என்கிறார் சோமு. அவர் ஒரு சங்கீத ரிசர்வாயர். கஜானாவிலிருந்து அள்ளி அள்ளித்தருவார். நேரம் ஆக ஆக கூட்டம் கலைவதுதானே இயற்கை. ஆனால் சோமு கச்சேரியில் கூட்டம் அதிகமாகுமே தவிர கலையாது.
இப்படிப்பட்ட கச்சேரிகளையெல்லாம் கேட்கிற வாய்ப்பு இங்குதான் கிடைக்கும். அத்தோடு மார்கழி மாத பஜனைகள். அந்த இருள் பிரியாத அதிகாலையில் பாடிக் கொண்டு வரும் பஜனை கோஷ்டிகள் நடுவே பாபநாசம் சிவன் தனித்துத் தெரிவார். அவர் கூட அவர் குடும்பத்தாரும் பாடிக் கொண்டு வருவார்கள். அவர் பேரன் அசோக்ரமணி சின்னப் பையனாக பஜனை கோஷ்டியில் பாடி வருவது நினைவிருக்கிறது. சஞ்சய் சுப்பிரமணியம் போன்ற இன்றைய வித்வான்களெல்லாம் அன்று சிவன் பஜனைக்கு வந்து பாடி அவரிடம் ஆசி பெற்றவர்கள்தான். எம்.சந்திரசேகர் இந்தப் பஜனையில் கலந்து கொள்வார். அவரது நண்பனாக இருந்த நான் என் காரில் போய் அவரை அதிகாலை பஜனைக்கு அழைத்து வருவேன். பஜனையில் கலந்து கொண்டுமுடிந்ததும் நானும் அவருமாக கச்சேரி ரோடு ராயர் கபேக்குப் போய் இட்லி-காபி சாப்பிடாமல் இருந்ததில்லை. இன்றைக்கும் சந்திரசேகர் அந்தச் சுகமான நாட்களை நினைவுகூர்ந்து சொல்வார்.
இப்படி என் மயிலை வாழ்க்கை சங்கீத மணத்துடன் சுவாரஸ்யமாகத் தொடங்கியது. இந்தச் சூழ்நிலையே என்னை மோர்சிங் வித்வானாகவும் மாற்றியது.
அப்போதுதான் மிருதங்க மேதையும் என் குருநாதருமான வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணனுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. அவர் பொன்னம்பல வாத்தியார் தெருவில் ஒரு ரூமில் இருந்தார். நான், அவர், பி.எஸ்.நாராயணசாமி, துரைசாமி பாகவதர் எல்லாம் ஒரு ஜமாவாகச் சேர்ந்தோம். நாம அடிக்கடி சந்திக்கணும் என்றார் டி.வி.ஜி. நீ என்னுடன் கச்சேரியில் உட்காரவேண்டும் என்றார். லய விவகாரங்களில் எனக்கு முறையான பயிற்சி இல்லையே என்று தயங்கினேன். அவர், “”முதலில் நீ என்னுடன் பாலோ பண்ணி வாசி. பிறகு உனக்கு நான் சொல்லித் தருகிறேன்” என்றார். அவர் எனக்கு கற்பித்த முறை வழக்கமான மரபு வழிப்பட்ட முறையல்ல. உல்டாவாக புது பேட்டனில் அவர் லய விவகாரங்களைச் சொல்லி வைத்தார்.
அதன் விளைவு அவர் போன்ற ஒரு மேதாவியோடு பெரிய பெரிய கச்சேரிகளில் உடன் வாசிக்கிற பாக்கியம் பெற்றேன்.
முதலில் மிருணாளினி சாராபாய் வீட்டுக் கல்யாணக் கச்சேரிக்கு என்னைத் தன்னோடு அழைத்துப் போனார் டி.வி.ஜி. பிறகு ஊரிலிருந்து வந்ததும் இங்கு மந்தைவெளியில் உள்ள கல்யாண்நகர் அசோசியேஷனில் செம்பை வைத்தியநாத பாகவதருக்கு வாசிக்கிற பெரிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்போது என்னைக் கூட்டத்துக்கு அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். “”மோர்சிங் வாசிக்கிறானே… இவன் பெரிய ஆபீஸராக்கும்..” என்று அவருக்கே உரித்தான மலையாளத் தமிழ் மணக்க அவர் என்னை அறிமுகம் செய்தார். எப்படிப்பட்ட பாக்கியம் பாருங்கள்.
அப்புறம் பல கச்சேரிகள் வாசித்தேன். எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், டி.என்.கிருஷ்ணன் ஆகியோர் கச்சேரிக்கெல்லாம் வாசித்தேன். மகாராஜபுரம் சந்தானத்துக்கு என் குருநாதர் டி.வி.ஜி.யோடு ஆந்திரம் முழுக்க டூர் அடிக்கிற வாய்ப்புக் கிடைத்தது.
சங்கீதத்தைக் கேட்டும் கச்சேரியில் பங்கு கொண்டும் பரிபூரண நிறைவோடு இப்போது உள்ளேன். கேட்கிற சங்கீதத்தை விட கேட்காத சங்கீதம் ரொம்ப ஒசத்தி என்பார்கள். சங்கீதத்தைப் பற்றிய நினைவுகளே கேட்காத சங்கீதம் போல எனக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன.
நேர்காணல் தொகுப்பு-புலிக்கால் தேசிகன்
மறுமொழியொன்றை இடுங்கள்