D Sankaran – Malaikottai Govindhasaamy Pillai : Dinamani Kathir Music Season Special
Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006
அமரர் டி. சங்கரன்: மலைக்கோட்டை கோவிந்தசாமிப்பிள்ளை
வீணை தனம்மாளின் சங்கீத குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் முத்திரை பதித்தனர். டி.என்.ராஜரத்தினம் பிள்ளையால் சங்கரண்ணன் என்று அழைக்கப்பட்ட டி.சங்கரன், தனம்மாளின் பேரன் மட்டுமல்லர்; “சங்கீத சரித்திரம்’ என்னும் தனத்தைப் பாதுகாத்தவர். 90 வயதுக்கும் மேலிருந்து நிறைவுவாழ்வு வாழ்ந்த அவர் 50 வருஷங்கள் முன் தினமணி சுடரில் எழுதிய இசை வரலாற்றுக் கட்டுரைகள் அந்தத் துறையில் ஒரு மைல் கல் என்றால் மிகையில்லை. உதாரணத்திற்கு ஒரு கட்டுரையை இங்கு அளித்துள்ளேன். இடவசதி கருதி கட்டுரையின் சில பகுதிகள் வெட்டப்பட்டுள்ளன.
கோவிந்தசாமிப் பிள்ளை நன்னிலம் தாலுகாவிலுள்ள அச்சுதமங்கலத்தில் 1879 இல் பிறந்தார். இவருடைய நெருங்கிய உறவினர் பரத நாட்டிய புகழ் நாகப்பட்டினம் நீலாம்பாள்.
இவரைத் திருச்சி கோவிந்தசாமிப்பிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தசாமிப்பிள்ளை என்றெல்லாம் அழைப்பதுண்டு. சங்கீத வித்வான்களுக்குள் இவருக்கு ராஜயோகம். நடை, உடை, பாவனைகள் கெüரவமான நோக்கம் உள்ளவர். சங்கீத கோஷ்டிகளில் அண்ணா என்றாலும் பிள்ளை என்று சொன்னாலும் இவரையே குறிக்கும். பிரபு என்றே இவரைப் பலர் மதித்து வந்தார்கள். சங்கீதம், வாழ்க்கை முதலிய சகல அம்சங்களிலும் உச்ச ஸ்தானத்தை அடைந்தபடியால் லயச் சிரேஷ்டரான கொன்னக்கோல் பக்கிரியாப் பிள்ளை இவரைப் பிரபு என்று மட்டுமே குறிப்பிடுவார்.
பிள்ளைக்கு ஆஜானுபாகுவான தோற்றம். புன்சிரிப்புத் தவழும் முகம். வார்த்தைகள் குறைவு. அவருடைய சங்கீதத்தை எதிர்ப்பார்ப்பது போல் அவருடைய வார்த்தைகளையும் ரசிகர்களும் பிரபுக்களும் வரவேற்பார்கள். பரம ரசிகர். நல்ல சாப்பாடு. வாசனை திரவியங்கள், பொருத்தமான மோதிரங்கள், கையில் அழகான தடி, பட்டு உடை இவற்றில் இஷ்டமுள்ளவர். கோட்டும், பட்டு மேல் வேஷ்டியும் காலில் விலை உயர்ந்த ஸிலிப்பரும் அணிந்து பிரயாணம் செய்வார். எப்போதும் இரண்டாவது அல்லது முதல் வகுப்பில் தான் ரயிலில் பிரயாணம் செய்வார். கோவிந்தசாமிப் பிள்ளைக்கு குரு பீடம் வகித்தவர்கள் புகழ் பெற்ற வித்வான்கள். பிடில் வித்வான் சீயாழி நாராயணஸ்வாமிப் பிள்ளையிடம், நாயகி ராக ஆலாபனையும் “”நீ பஜன கான” கீர்த்தனமும் கேட்டவர்கள் ஒரு வார்த்தையில் “”பன்னீர்’ என்று வர்ணிப்பார்கள். மற்றொரு குரு உமையாள்புரம் பஞ்சாபகேசய்யர். தியாகராஜ ஸ்வாமியின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர். கிருஷ்ண பாகவதரும் சுந்தர பாகவதரும் தியாகராஜ ஸ்வாமியின் நேர் சிஷ்யர்கள். அவர்களுடைய நெருங்கிய பந்து பஞ்சாபகேசய்யர். எட்டயபுரம் வித்வான்களான கோதண்டபாணி பாகவதரும் அவர் சகோதரர் ராமச்சந்திர பாகவதரும் கோவிந்தஸ்வாமிப் பிள்ளை மட்டுமின்றி மதுரை புஷ்பவனம் ஐயர், காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை இவர்களையும் தயார் செய்த பெருமையுள்ளவர்கள். மத்தியமகால வின்யாசத்தில் ராமச்சந்திர பாகவதர் கீர்த்தி பெற்றவர்.
தலையெடுத்த பின்னரும் தான் ஒரு மாணவன் என்ற நினைவு கொண்டவர் பிள்ளை. கஞ்சிரா வித்வான் மான்பூண்டியாப் பிள்ளை. திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர், வீணை தனம்மாள் ஆகியவர்களைப் பரம குருவாகப் பூஜிப்பவர். இந்த அம்சத்திலும் தனம்மாளிடம், “பேஷ்’ வாங்கியவர். கோவிந்தசாமிப் பிள்ளை முன் வீணை வாசிப்பதைக் தனம்மாள் தனிப்பெருமையாக நினைத்திருந்தார்கள். “”கெüளை ராகம் நானா வாசிப்பது? அம்மா அல்லவா வாசிக்க வேண்டும்.” என்று தன் சிஷ்யனுக்கு உபதேசம் செய்வார்.
இவ்வளவு பெரிய வித்வான்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்டதும் ஒரு பெரிய நன்மைக்கே. எல்லாவித சங்கீதங்களையும் கேட்டு எவ்வளவு கொஞ்சமானாலும் அதன் பலனை அடையும் தீவிரம் அதிகமாயிற்று. எஸ்.ஜீ.கிட்டப்பாவின் சாரீர சம்பத்துக்கும் தன் மனத்தைக் கொள்ளை கொடுத்தார். ரூ.500 செலவழித்துப் பெடல் ஆர்மோனியம் கிட்டப்பாவின் உபயோகத்துக்காக வாங்கித் தன் வீட்டில் வைத்திருந்தார். நந்தனார் சரித்திர நாடகத்தில் “”மீசை நரைத்துப் போச்சே கிழவா”வை கிட்டப்பாவிடம் கேட்டு மெய்மறந்துபோய் உள்ளங்கையளவில் தங்கப்பதக்கத்தை கிட்டப்பாவுக்குப் பரிசளித்தார். அந்த நாடகத்துக்கு தன் நண்பர்கள், காஞ்சீபுரம் நாயனாப் பிள்ளை, கொன்னக்கோல் பக்கிரியாப் பிள்ளை, மருங்காபுரி கோபாலகிருஷ்ணையர் சகிதம் ஆஜராயிருப்பார்.
வி.பி.ஜானகி, கோல்டன் கம்பெனி சாரதாம்பாள், ஸ்ரீனிவாசப்பிள்ளை, வேலுநாயர், சின்ன மகாதேவையர், ஆரிய கான சகோதரர்கள் நாடகங்களையும் தவறாமல் பார்ப்பார். பாலிவாலா கம்பெனி, பார்சீ நாடகங்களில் அதிக மோகம். நல்ல சாரீரமுள்ள பிச்சைக்காரி பாடிக்கொண்டு போனால் முக்கியமான ஹிந்துஸ்தானி சங்கீதம் -அந்தச் சங்கீதத்தையும் சலியாமல் கேட்பார். எள்ளளவாகிலும் தமக்கு லாபம் கிடைக்கும் என்று நிச்சயம் உள்ளவர். கோஹர் ஜான் திருச்சி வந்தபோது, கோவிந்தசாமி பிள்ளையின் விருந்தினராகவே இருந்தார். ரஹமத்கான் ஹாபீஸ்கான், பியாரா ஹாஹேப், அப்துல்கரீம்கான் ஆகியோர் சங்கீதத்தையும் கேட்டுப் பயனடைந்தார் என்பதில் சந்தேகமில்லை. பிள்ளை தஞ்சாவூரில் வெகு நாள் தங்கியிருந்தார். ஆகையால், லாவணிப் போட்டிகளுக்கான பாட்டுக்களையும் அதற்கு பக்கவாத்தியமான டேப் வாத்தியத்தின் லயக்கட்டையும் கேட்டு சந்தோஷிப்பார்.
பொழுதுபோக்காக மட்டுமே அல்லாது மற்ற வாத்தியங்களையும் வாசித்துக் கச்சேரி செய்யும் திறமையுண்டு. வெகு நாள் வரை புல்லாங்குழல் கச்சேரி செய்து கொண்டிருந்தார். அநேகமாக மருங்காபுரி கோபாலகிருஷ்ணய்யர் பக்கவாத்தியமாக பிடில் இருக்கும். மருங்காபுரியும் பின்னாட்களில் பாப்பாவும் (பாப்பா வெங்கட்ராமையர்) ஜோடி சேர்ந்து வயலின் வாசித்தனர்.
மிருதங்கத்தில் பிள்ளைக்கு நல்ல திறமை. சென்னை சங்கீத சமாஜத்தில் சுப்பையரின் ஜலதரங்கக் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது. கோவிந்தசாமிப் பிள்ளை பிடில். தாஸ் ஸ்வாமி மிருதங்கம். மேடையில் மிருதங்கத்தை வைத்துவிட்டுப் போன தாஸ் ஸ்வாமி கச்சேரிக்குத் திரும்பவேயில்லை. சங்கீத சமாஜத்தின் காரியதரிசி முனுசாமி நாயுடு, பிள்ளையின் நெருங்கிய சிநேகிதர். கோவிந்தசாமிப் பிள்ளையை மிருதங்கம் வாசிக்கக் கோரினார். கச்சேரி கேட்கவந்த கோபாலகிருஷ்ணய்யர் பிடிலுடன் கச்சேரி பிரமாதம். வயலினில் தான் வாசிக்கும் சுகபாவத்தை மிருதங்கத்தில் பொழிந்துவிட்டார் பிள்ளை.
மற்றொரு காரணத்தாலும் சங்கீத சமாஜம் புனிதமாயிற்று. கோபாலகிருஷ்ணய்யர் சகிதம் கோவிந்தசாமி பிள்ளையின் மிருதங்க கச்சேரி ஆரம்பமாகி அரைமணி நேரம் இருக்கும். திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் கச்சேரி கேட்பதற்காக வந்தார். கீரவாணியில் “கலிகியுண்டே கதா’ வாசித்துச் சுரம் வாசித்துக் கொண்டிருந்த சமயம். கொஞ்சம் மத்யம் காலம் வாசிக்குபடி கிருஷ்ணையர் சொன்னார். மத்தியம காலம் என்பது தானம் வாசிப்பதைக் குறிக்கும். தானம் வாசிப்பதில் பிள்ளைக்குத் தனிப் பெருமையுண்டு. தனக்குப் பின் வாரிசு கோவிந்தசாமிப் பிள்ளைதான் என்று கிருஷ்ணையரின் ஆசீர்வாதம் கிடைத்த நாள் கோவிந்தசாமிப் பிள்ளையின் வாழ்க்கையில் மறக்க முடியாத திருநாள்.
கோவிந்தசாமிப் பிள்ளை போடும் “தானம் வில்’ (ஸ்பிரிங் பெü) என்று த்வாரம் வெங்கடசாமி நாயுடு பாராட்டுவதுண்டு. இந்த அம்சத்தை மெச்சி காஞ்சீபுரம் நாயனாப் பிள்ளை தன் அனுபவத்தைக் கெüரவ மனப்பான்மையுடன் சொல்லிக் கொள்வார். மலைக்கோட்டையில் நாயனாப் பிள்ளை கோவிந்தசாமிப் பிள்ளை பக்கவாத்தியத்துடன் கச்சேரி செய்து கொண்டிருந்தார். ஒரு ரசிகர் தானம் பாடும்படி நாயனாப் பிள்ளையைக் கேட்டுக் கொண்டார். தன் சாரீரத்துக்குத் தானம் பொருந்தாது என்று சொல்லிவிட்டார். ஆனால் கோவிந்தசாமிப் பிளளை நாயனாப் பிள்ளையத் தூண்டி கொஞ்சமாகிலும் தானம் பாடும்படி வற்புறுத்தினார்.
“”அவ்வளவுதான்… நமக்கு நாக்குல ஈரம் இல்லாம அடிச்சுட்டாரையா அந்த மனுஷன். நாம் இருக்குமிடம் தெரியாதபடி வெளுத்து வாங்கிவிட்டார். பல்லவி பாடி அனுலோமம் பிரதிலோமம் செஞ்சு ஸ்வரம் பாடிக் கூட நம்ம பிரக்ஞை இல்லாம செஞ்சுட்டாரு. மனுஷன்தானே ஐயா நானும். ரோஷம் கொஞ்சமாவது எனக்கு இருக்காதா? என்று பெருந்தன்மையான வார்த்தைகளைச் சொல்லிப் பெருமைப்படுவார்.
“போவிங் டெக்னிக் (வில்வித்தை) கோவிந்தசாமிப் பிள்ளைக்குத் தனி அனுக்ரஹம். சாதக பலம் ஒரு பக்கம். ஞானபலம் பெரும்பலம். வில்வித்தையின் நுணுக்கங்களை மேனாட்டு முறைப்படி தெரிந்து கொள்ளும் வசதியும் இருந்தது. ராயபுரத்தில் வசித்து வந்த நகை வியாபாரி தங்கப் பிரகாச முதலியார் கோவிந்தசாமிப் பிள்ளைக்கு மட்டுமேயல்லாமல் சென்ற தலைமுறை வித்வான்களுக்கெல்லாம் ஆப்தர். (இப்போது மயிலாப்பூரில் நகை வியாபாரம் செய்யும் சுகானந்தத்தின் தகப்பனார் தங்கப் பிரகாச முதலியார்) நல்ல ரசிகர்.
அவர் உதவியால் கோவிந்தசாமிப் பிள்ளைக்கு இருவித அனுகூலங்கள் ஏற்பட்டன். நாதம் உள்ளதும் விலை உயர்ந்ததுமான வயலின் பிள்ளைக்குக் கிடைத்தது. மேனாட்டு முறையில் வயலின் வாத்திய சூட்சுமங்கள் தெரிந்த ஜான் துரை சாமியின் உறவும் பிள்ளைக்கு பிராப்தமாயிற்று. பிள்ளையின் புத்தி கூர்மைக்கு இவை நல்ல ஆதரவு கொடுத்தன. ஆகவே பிள்ளையின் வாத்தியத்தைக் கேட்டவர்களும் வயலின் வித்தையின் கஷ்ட நஷ்டங்களைத் தெரிந்த வித்வான்களும் பிள்ளையின் வில் வித்தையில் மயங்கிப் போவதில் ஆச்சரியமில்லை. வலது கை விரல்களின் நுனியில் வில்லின் நுனியைப் பிடித்துக் கொண்டு குலுக்கிக் குலுக்கி முழு வில் போட்டுத் தானம் வாசிப்பதில் மயங்கியவர் த்வாரம் வெங்கடசாமி நாயுடு. சுத்தமாகவும் ராக பாவத்துடனும் மூன்று காலம் வாசிப்பதே பிரமாதம். பிரமிக்கும் படியான நாலாங்காலமும் வில்லில் பேசும். வில் திரும்பும் சப்தம் தெரியவே செய்யாது. பல நாள்கள் கோவிந்தசாமிப் பிள்ளையுடன் ஜோடிப் பிடில் வாசித்த கோபாலகிருஷ்ணையரின் அனுபவம் இது.
பிள்ளை தமது 22வது வயதிலிலேயே முன்னுக்கு வந்துவிட்டார். முதல் முதலாக திருச்சி இரட்டை மஹால் தெருவில் வக்கீல் நீலகண்டய்யர் வீட்டில் கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர் கச்சேரியில் வாசித்தார். அது முதல் நீலகண்டய்யரின் ஆதரவும் புகழும் பிள்ளைக்கு வளர்ந்தது. பக்க வாத்தியம் வாசிப்பதிலும் அதே நாட்களில் திருக்கோடிக்காவல் கிருஷ்ணையரைப் போலவே கீர்த்தியடைந்துவிட்டார். மதராஸ் கிருஷ்ணகான சபையில் சரப சாஸ்திரிகளுடன் பக்க வாத்தியம் வாசித்தபோது ஒரே பாடாந்திரம் போல் தொடர்ந்து கோவிந்தசாமிப் பிள்ளை வாசித்ததில் சாஸ்திரிகள் மெய் மறந்தார். முதலாளியாக உள்ள வித்வான் ராகமோ ஸ்வரமோ வெகுநேரம் விஸ்தாரம் செய்தவுடன் பிள்ளை வாசித்தால் முதலில் கிளிப்பிள்ளை மாதிரி அந்த நகலை வாசித்து விடுவார்.
அதையடுத்துத் தன் சொந்தக் கற்பனையை வாசிப்பது வழக்கம். ராகம், ஸ்வரம், வின்யாசம் நடந்த பின் சில சமயம் ரசிகர்களின் கரகோஷமும் ஆரவாரமும் மட்டுமீறியிருக்கும். அதனிடையேதான் பிள்ளை வாசிக்க வேண்டி வரும். கமான் போட்டவுடனே அமைதியை நிலை நிறுத்திக்கொண்டு தன் கற்பனையைத் தொடங்கினால் விச்ராந்தி நிலைத்துவிடும்.
பிள்ளை சிறந்த தியாகராஜ பக்தர். பிள்ளையில் குரு பஞ்சாபகேச அய்யர், தியாகராஜ சுவாமிகளின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த சுந்தர பாகவதர், கிருஷ்ணபாகவதரின் பந்து. இவர்களது ஆசியால் திருவையாற்றில் தியாகராஜ ஸ்வாமியின் ஆராதனை உற்சவம் தன் சொந்த செலவில் வருடம் தோறும் தன் ஆயுள் முழுவதும் நடத்தி வந்தார். தன் வருவாயில் சரிபாதியை இத்திருப்பணிக்கு ஒதுக்கி வைத்திருந்தார். உற்சவ ஐந்து நாட்களில் பால் மட்டுமே ஆகாரம். இளம் வித்வான்களை முன்னுக்குக் கொண்டுவரும் அரங்கேற்ற பீடமாகியிருந்தது உற்சவ மண்டபம். அப்போது எல்லா வித்வான்களுடனும் சேர்ந்து பக்க வாத்தியம் வாசிப்பார். பிள்ளையின் ஆதரவைப் பாராட்டும் வித்வான்களில் முதலிடம் பெற்றவர் செம்பை வைத்தியநாத பாகவதர்.
கோவிந்தசாமிப் பிள்ளை வித்வான் என்ற மதிப்புடன் பிரபுவாக விளங்கினார். பெருந்தன்மைக்கு இருப்பிடமானவர். தன் வித்தைக்கும் தனக்கும் கெüரவத்தைக் குறைத்துக்கொள்ளமாட்டார். காக்கிநாடாவில் இருந்த கொம்மி ரெட்டி சூர்யநாராயண மூர்த்தி நாயுடு பெரிய பிரபு. பிள்ளையிடமிருந்த மதிப்பின் காரணமாகவே காக்கிநாடாவில் சரஸ்வதி கானசபையை ஸ்தாபித்து வருஷா வருஷம் நவராத்திரியின் போது காக்கிநாடாவிலும் ஆந்திர ஸமஸ்தானங்களிலும் பிள்ளையின் கச்சேரியை ஏற்பாடு செய்வதுண்டு. மற்ற பிரபுக்களும் பிஷாண்டார் கோவில் ஆவுடையப் பிள்ளை, மருங்காபுரி ஜமீன்தார், கிருஷ்ண விஜய பூச்சிய நாயக்கர் சேத்தூர் ஜமீந்தார் சேவுக பாண்டியத் தேவர் ஆகியோர் நெருங்கிய சிநேகிதர்கள். ஆவுடையப்பிள்ளை கோவிந்தசாமி பிள்ளையிடம் வயலின் சொல்லிக்கொண்டார். மிகவும் ஆப்தராதலால் பிள்ளையும் கிருஷ்ணய்யரும் ஒரு முறையாகியாலும் ஒரே மேடையில் உட்கார்ந்து பிடில் வாசிக்க வேண்டுமென்று அபிப்ராயப்பட்டார். பிள்ளையா சம்மதிப்பார்?
சேத்தூர் ஜமீன்தார் கோவிந்தசாமிப் பிள்ளையத் தேவதானத்தில் தான் வருஷம் தோறும் நடத்தும் உற்சவத்துக்கு வரவழைத்து அவருக்கு கஞ்சிரா வாசித்து கெüரவப்படுத்துவார். ஐம்பது வயதுக்குமேல் பிள்ளை அசெüக்கியம் அடைந்தார். வெகு நாள் கச்சேரி செய்யவில்லை. பல பிரபுக்கள் ஒத்தாசை செய்ய முன்வந்தார்கள். தனக்கு முடையுண்டான போது பிரபுக்களைத் தொந்தரவு செய்ய தனக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று விநயமாகச் சொல்லி பணத்தைத் திருப்பிவிட்டார். கடைசி நாள் வரை பிறர் உதவியைச் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. பிள்ளை 1931-ம் வருஷம் மார்ச் மாதம் 15ம் தேதி காலமானார். தன் ஈமக்கிரியைகளுக்கு ஓரளவு பணத்தை முன்னதாகவே ஒதுக்கி வைத்த பிரபு கோவிந்சாமிப் பிள்ளை.
தொகுப்பு: சிவன்
மறுமொழியொன்றை இடுங்கள்