Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 16th, 2006

London Diary in Dinamani Kathir by Iraa Murugan

Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2006

லண்டன் டைரி: லண்டன் டவர் ஒற்றைக் கட்டடமில்லை!

இரா. முருகன்

கி.மு முன்னூற்றுச் சொச்சம், கி.பி. எண்ணூற்று முப்பத்தேழு என்று யாராவது மூக்குக் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு வரலாற்றுப் பாடம் ஆரம்பித்தால் உடனடியாக ஜகா வாங்கி தலை தெறிக்க ஓடுகிறவரா நீங்கள்? உங்களோடு கூட, அல்லது பத்து அடி இன்னும் முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறவன் என்ற தகுதியோடு சொல்கிறேன் -லண்டன் கோபுரத்துக்குள் நுழைவதாக இருந்தால் கொஞ்சம் யோசித்துவிட்டுக் காலை எடுத்து வையுங்கள், மீறிப் போனால், “”வேண்டாம், வேண்டாம்” என்று நீங்கள் கையைக் காலை உதைத்து அடம் பிடித்தாலும் கிடத்திப் போட்டுச் சரித்திரத்தைக் கரைத்துப் புகட்டிவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள்.

பிரிட்டீஷ் அரசாங்கமே இதற்காக மெனக்கெட்டு செலவு செய்து யோமன் காவல்காரர்கள் என்று மாஜி ராணுவ வீரர்களின் ஒரு படையையே வேலைக்கு அமர்த்தி இருக்கிறது. பீஃப் ஈட்டர்ஸ், அதாவது, “மாட்டு மாமிசம் சாப்பிடுகிறவர்கள்’ என்று இவர்களுக்குச் செல்லப் பெயர்.

டவர் ஹில் பாதாள ரயில் ஸ்டேஷனில் இறங்கி, கையில் பிடித்த காமிரா, பாப் கார்ன் பொட்டலம், புஷ்டியான கேர்ள் ப்ரண்ட் என்று சுறுசுறுப்பாக முன்னேறிக் கொண்டிருக்கிற கூட்டத்தில் கலக்கிறேன். முன்னால் ஏழெட்டு பிரம்மாண்டமான அலுமினிய டிபன் காரியரை அடுத்தடுத்து நிறுத்திய மாதிரி கோட்டை, கொத்தளம். தூர்ந்து போன அகழி என்று தேம்ஸ் நதிக்கரையில் லண்டன் கோபுர வளாகம் கம்பீரமாக நிற்கிறது. “தனிக்கட்டை ஆசாமிகளுக்கு பதினைந்து பவுன் டிக்கெட். குடும்பமாக வந்தால் நாற்பத்தைந்து பவுன் மட்டும்தான்’ என்று அறிவிப்புப் பலகை கண்டிப்பாகச் சொல்கிறது… ரொம்ப வயதான ஒரு கொரிய தம்பதி, ரொம்ப ரொம்ப வயதான ஜெர்மானிய ஜோடி. வால்தனமான நாலு குழந்தைகளைக் கட்டி இழுத்துக்கொண்டு ஓர் அமெரிக்க அம்மா -அப்பா, நிமிடத்துக்கு நாற்பத்தேழு தடவை கிச்சுக்கிச்சு மூட்டியது மாதிரி சிரிக்கிற சீன நர்சுகளின் கூட்டம் ஒன்று. கூட நிற்கிற இவர்களில் யாரையும் சத்தியப் பிரமாணம் செய்து “என்னோட குடும்பம்’ என்று கூடவே அழைத்துப் போய் குடும்ப டிக்கெட் எடுத்துக் காசை மிச்சப்படுத்த முடியாது என்று நிச்சயமாகத் தெரிய, மனசே இல்லாமல் பதினைந்து பவுனை அழுது ஒரு டிக்கெட் வாங்குகிறேன்.

அழுத்தமான கறுப்பில் சிவப்புக் கோடு இழுத்த நர்சரி பள்ளிக்கூட பின்-அப்-பார்ம் சீருடை அணிந்து கொண்டு தாடி வைத்த வயதான ஒரு பீஃப் ஈட்டர் எனக்காகக் காத்திருக்கிறார். எதிரில் முன்னால் சொல்லப்பட்ட சுற்றமும் நட்பும்.

“”வெள்ளைக் கோபுரத்தோடு பயணத்தைத் தொடங்கலாமா… எனக்கு நீங்கள் காசு பணம்னு எதுவும் தரத் தேவையில்லை. ராணுவ பென்ஷன். இந்தக் காவல் உத்தியோகத்துக்குக் காசு, தங்கியிருக்க கோட்டைக்குள்ளேயே வீடு இப்படி அரசாங்கமே எல்லாம் கொடுக்குது.”

“சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி எல்லாம் ரொம்பத் திருப்திகரமா இருக்கு’ என்று கூட்டம் கூட்டிச் சொல்கிற சர்க்கார் ஊழியரை வாழ்க்கையில் முதல் தடவையாகப் பார்த்த ஆச்சரியத்தைப் பகிர்ந்துகொள்ளத் திரும்பிப் பார்த்தால், சீன நர்சுகள் கெக்கெக் என்று சிரிக்கிறார்கள். அவர்கள் நாட்டில் எல்லோருமே எப்போதுமே சந்தோஷமாக இருப்பார்கள். இல்லாத பட்சத்தில் நாலு மாசம் ஜெயிலில் தள்ளிச் சந்தோஷப்படுத்தி அனுப்பிவிடுவார்கள் என்று தோன்றுகிறது.

“”லண்டன் டவர்னு சொல்றது ஒத்தைக் கட்டடம் இல்லை. சின்னதும் பெரிசுமா இருபது கோட்டைகள், கோபுரம், அகழி எல்லாம் சேர்ந்த இந்த இடம் முழுக்கவே லண்டன் டவர்தான். வெள்ளைக் கோபுரம், செங்கல் கோபுரம், மணிக் கோபுரம், ரத்தக் கோபுரம். தொட்டில் கோபுரம், நடுக் கோபுரம், உப்புக் கோபுரம், கிணற்றுக் கோபுரம் இப்படி இருபது கோட்டைகள். முதன்முதலாக் கட்டினது வெள்ளைக் கோபுரம். அது கி.பி 1078ல்.” அவர் பின்னால் விரிந்து கிடக்கிற கட்டடங்களை இரண்டு கையையும் விரித்துச் சுழற்றிக் காட்டியபடி தொடர்கிறார். பழைய ஜேம்ஸ்பாண்ட் சினிமா ஹீரோ ஷான் கானரி போல கம்பீரமான குரல்.

“”ஆயிரத்து எழுபத்தெட்டிலா?” நம்ப முடியாத விஷயத்தைக் கேட்டதுபோல் ஜெர்மானியப் பெருந்தாத்தா தலையாட்டி, பாட்டி காதில் ஏதோ சொல்கிறார். “”நமக்குக் கல்யாணம் ஆனதுக்கு அடுத்த வருஷம்” என்று நான் மொழிபெயர்த்துக் கொள்கிறேன்.

இங்கிலாந்தை ஆயிரம் வருடம் முன்னால் ஆக்கிரமித்த வில்லியம் மன்னன் வெள்ளைக் கோபுரத்தைக் கட்டியதற்கு முக்கியக் காரணம் பயம்தான் என்று தெரிகிறது. பகை அரசர்களின் படையெடுப்பிலிருந்து தற்காப்பு நடவடிக்கை என்று வெளியே சொன்னாலும், லண்டன் பட்டணத்து ஜனங்களிடமிருந்து ஜாக்கிரதையாகத் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் பாதுகாத்துக்கொள்ளத்தான் மேற்படி வில்லியம் இதைக் கட்டியிருக்கிறான். கருங்கல், சுண்ணாம்பு, ஜல்லி வகையறாக்களுக்குக் கூட லண்டன்காரர்களை நம்பாமல், ஒரு கல் விடாமல் பிரான்சிலிருந்து வரவழைத்திருக்கிறான் இந்தப் பேர்வழி.

வெள்ளைக் கோபுரத்துக்குள் நுழைகிறேன். சரித்திரத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார் காவலாளி. “”வில்லியம் ராஜாவிலே தொடங்கி அப்புறம் வந்த ராஜாக்களும் ராணிகளும் இங்கே அடுத்தடுத்து கட்டடம் கட்டியிருக்காங்க. இல்லேன்னா அவங்க கழுத்தை அறுத்துக் கொன்று போட்டு மத்தவங்க அழகான சமாதி கட்டியிருக்காங்க. அதுக்கு முன்னாடி அவங்களை அடைச்சு வைக்க ஏற்கனவே இருந்த கோபுரங்களைச் சித்திரவதைச் சாலை, சிறைக்கூடம்னு மாற்றி அமைச்சிருக்காங்க. ஆக, கட்டட கான்ட்ராக்டர்களுக்கு எப்போவும் எக்கச்சக்க டிமான்ட்.”

அமெரிக்க அம்மையார் சரித்திரத்தில் பொறுமையில்லாமல் நாலு குட்டிக் குழந்தைகளையும் பீஃப் ஈட்டருக்கு முன்னால் தள்ளிவிட்டு அவரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக் காமிராவில் கோணம் சரிபார்க்கிறார். மேலிட அனுமதி வாங்கிவிட்டு, வீட்டுக்காரரும் ஃபோட்டோவில் இடம்பெற ஓடுகிறார். “”கோபுரத்தை மறைக்கறீங்களே தரையிலே உட்காருங்க”. வீட்டம்மா கட்டளைப்படி காவல்காரரின் காலடியில் சமர்த்தாக மண்டிபோட்டு உட்கார்ந்து அட்டகாசமாக போஸ் கொடுக்கிறார். சீன நர்சுகளின் சிரிப்பை எதிர்பார்க்கிறேன். அவர்கள் பாப்கார்ன் மென்றுகொண்டு மொபைல் தொலைபேசிகளை தோள்பட்டையில் உரசித் துடைத்தபடி அதில் இருக்கும் காமிராவால் சுட்டுத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த விநாடி, பெய்ஜிங்கில் அவர்கள் வீடுகளில் மொபைல் தொலைபேசி ஒலிக்க, வெள்ளைக் கோபுரமும், தாடி வைத்த காவல்காரரும், இந்த நர்சுகளும், ஒரு நறுக்கு இங்கிலாந்து சரித்திரம் உடனடி ஏற்றுமதியாக அங்கே ஒளிபரப்பாகும். “”லண்டன்லே இருந்து எங்க யுங் யான் அனுப்பியிருக்கா. அங்கே அரண்மனை வாசல். அந்தத் தாடிக்காரக் கிழவன் யார்னு தெரியலை. சே, சே பாய் பிரண்ட் எல்லாம் இல்லை” பந்துமித்திரர்களோடு இன்னும் ஒருவாரம் தகவல் பகிர்ந்துகொள்ளப்படும்.

“”கி.பி 1536லே ஆன்போலின் அரசியை, அவங்க புருஷன் எட்டாம் எட்வர்ட் சிரச்சேதம் செய்த இடம் இது”. எனக்கு முன்னால் பச்சை விரிந்து கிடக்கும் இடத்தைப் பார்க்கிறேன். “”பட்டப்பகலில் படுகொலை. ராணி ஸ்தலத்திலேயே மரணம்” மனதுக்குள் யாரோ தலைப்புச் செய்தி படிக்கிறார்கள்.

Posted in Diary, Dinamani, Era Murugan, Era Murukan, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London, Tamil, UK | Leave a Comment »

Mooligai Corner – Aamanakku

Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2006

மூலிகை மூலை: ஆமணக்கு!

விஜயராஜன்

ஆமணக்கு இலையைச் சுத்தம் செய்து நிழலில் உலர்த்திக் காய வைத்துக் கொளுத்தி, சாம்பலை எடுத்து சுத்தமான தண்ணீரில் கலக்க வேண்டும். கலக்கிய நீரை மட்டும் வடிகட்ட வேண்டும். வடிகட்டிய தண்ணீரைக் காய்ச்சினால் இதில் உப்பு கிடைக்கும். இந்த உப்பை கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த உப்பை ஒரு தேக்கரண்டியளவு எடுத்து நொய்க் கஞ்சியில் கலந்து சிறிது பெருங்காயத்தையும் சேர்த்துக் குடித்து வர உடம்பு இளைத்து மெலிய ஆரம்பிக்கும். அல்லது இதே உப்பு, பார்லி, நெல்லி முள் சூரணம் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல் பருமன் குறைந்து வரும்.

தாய்மார்கள் ஆமணக்கு இலையில் நெய் தடவி அனலில் வாட்டி மார்புக் காம்பில் வைத்துக் கட்டி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்.

ஆமணக்கு இலையைச் சின்னதாக அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்து கட்டி வர மூலக் கடுப்பு, கீல் வாதம், வாத வீக்கம் குணமாகும்.

ஆமணக்குத் துளிரை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கித் தொப்புளில் வைத்து கட்ட, தீராத வயிற்று வலி குணமாகும்.

ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையைச் சேர்த்து அரைத்து 30 கிராம் காலையில் மட்டும் 3 நாள் சாப்பிட்டு நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிட காமாலை குணமாகும்.

ஆமணக்கின் வேரை லேசாக நசுக்கி சிறிது தேனுடன் பிசைந்து கொஞ்சம் நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து மறுநாள் காலையில் இதைப் பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு நீரை மட்டும் 100 மில்லியளவு தினமும் காலையில் குடித்துவர வயிற்றின் பளுவும், உடல் பருமனும் வீக்கமும் குறையும்.

விளக்கெண்ணெய் 30 மில்லியளவு எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலிலோ அல்லது இஞ்சிச்சாறு கலந்தோ குடிக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்று வலி குணமாகும்.

விளக்கெண்ணெய் 1/2 தேக்கரண்டியளவு குழந்தைகளுக்கு உள்ளுக்குக் கொடுத்தால் மலம் கட்டியுள்ளது இளக்கமாகி குடலை விட்டு வெளியேறும்.

குழந்தைகளுக்கு ஆமணக்கு எண்ணெய்யுடன் பேயன் வாழைப்பழத்தைத் துண்டு துண்டாக அரிந்து ஊறப் போட்டு கற்கண்டைப் பொடி செய்து கலந்து தினமும் காலையில் 2 துண்டு வாழைப்பழமும் சிறிது எண்ணெய்யும் கொடுத்து வர சகல சூடும் தணிந்து ஆரோக்கியமாக வளரும்.

Posted in Aamanakku, Allopathy, Alternate, Corner, cure, Cures, Dhinamani Kathir, Dinamani, Eastern, Herbs, Homeopathy, Kadir, Medicine, Mooligai, Paatti Vaithiyam, Practices, Research, Tablets, Tamil, Traditional, unaani, Vijayarajan | Leave a Comment »

Bharathi scholar Seeni Viswanathan on his encounters with Subramaniya Bharathiyaar

Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2006

இலக்கியப் பயணம்: பாரதி தேடல்கள் – அனுபவம் புதுமை!

சீனி. விசுவநாதன்

சீனி. விசுவநாதன்

பாரதியின் படைப்புகளை காலவரிசைப்படி ஆய்வுக் குறிப்புகளோடு தொகுத்துள்ளார் ஆய்வாளர் சீனி.விஸ்வநாதன். அவரைத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. இப்படி ஓர் அரிய பணியை மேற்கொள்ள அவர் எத்தனை கடுமையாக உழைத்திருக்க வேண்டும் என்பதை அந்தப் பதிப்புகளே சொல்லும். பாரதியின் படைப்பு தொடர்பாக தனக்குத் தேவையான ஆவணங்களைத் தேடி அவர் மேற்கொண்ட பயணங்களே ஒரு தனி படைப்பாகும். அதில் ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது.

நான் 1960 ம் ஆண்டு முதற்கொண்டே பாரதிநூல்கள் பதிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தபோதிலும்

1979 ம் ஆண்டிலிருந்துதான் தேடல் முயற்சிகளில் முழுமையாக ஈடுபட நேர்ந்தது.

தேடல் முனைவுகளில் நான் ஈடுபட்ட தருணத்தில் எனக்கு நேர்ந்த அனுபவங்கள் மிக சுவாரஸ்யமானவை. புதுமையானவையுங் கூட.

வருடங்கள் பல கடந்துவிட்ட நிலையிலும் தேடல் அனுபவ நிகழ்ச்சிகள் நெஞ்சத்திலே பசுமையாக நிலைத்துவிட்டிருக்கின்றனவே.

பாரதி “நூற்பெயர்க்கோவை’ தொகுதிக்கான பாரதி நூல்களை நான் தேடிக் கொண்டிருந்த நேரம்.

மதுரையில் ஒரு பழைய புத்தக வியாபாரி. அவர் கடைக்கு நான் சென்றேன். அவர் எனக்கு ஓரளவு பரிச்சயமானவர். அவர் என்னைக் கண்டதும் தம்மிடம் பாரதியின் அரிய நூல் தொகுதி இருப்பதாகவும், தேவைப்பட்டால் கொண்டு வந்து தருவதாகவும் தெரிவித்து, முன் பணமாக நூறு ரூபாயைக் கேட்டார்.

எனக்கோ தாங்க முடியாத சந்தோஷம். அதனால் உடனே அவரிடம் நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டேன். மறுநாள் அவரே நான் தங்கி இருந்த ஓட்டலுக்குப்

புத்தகக் கட்டுடன் என்னைத் தேடி வந்து விட்டார்.

உள்ளபடியே பெரிய தொகுதிகள் கொண்ட கட்டுதான்.

அவசரம் அவசரமாக அவரிடமிருந்து கட்டைப் பெற்றுப் பிரித்துப் பார்த்தேன். உடனே அதிர்ச்சி அடைந்தேன். நான் ஆவலோடு எதிர்பார்த்த பாரதி நூல்களாக அவை இல்லை. ஒரு கணம் பேச நாவெழவில்லை.

என் முகவாட்டத்தைக் கண்ட அந்தப் புத்தக வியாபாரி, “”என்ன சார், பாரதியின் அரிய நூல்களைக் கொண்டு வந்து தந்திருக்கிறேன். பேசாமல் இருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

“”இவை அரிய நூல்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பாரதி நூல்கள் இல்லை. வேறொருவர் எழுதியவை” என்று நான் கூறினேன்.

ஆனால் அவரோ “”நான் கொண்டு வந்தவை பாரதி நூல்களே. விலை அதிகம் கேட்பேன் என்று நினைத்து நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களா? நான் நியாயமான விலையைத்தான் கேட்பேன். முதலில் புத்தகங்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிறகு விலையை முடிவு செய்து கொள்ளலாம்” என்றார்.

நான் அவரிடம் சற்று விளக்கமாக, “”புத்தகங்களின் பெயரையும், ஆசிரியரின் பெயரையும் பாருங்கள். நூலின் ஆசிரியர் பெயர் வரகவி அ.சுப்பிரமணிய பாரதியார் என்று உள்ளது. நூல் தொகுதிகளின் பெயரோ ஜடாவல்லபர் என்பதாகும். நான் தேடும் நூல்களின் ஆசிரியர் சி.சுப்பிரமணிய பாரதியார்” என்று தெரிவித்தேன்.

அப்போது அந்த வியாபாரி, “”என்ன சார், நீங்கள் சொல்லும் பாரதியை வரகவி என்று தானே குறிப்பிடுகிறார்கள். சொல்லின் ஆரம்ப எழுத்தின் பேதத்தைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? அ.சுப்பிரமணிய பாரதியா? சி.சுப்பிரமணியபாரதியா? என்று. நீங்கள் பாரதி நூல்கள் தேவை என்று சொன்னதால், என் வசம் இருந்த இந்த நூல்களைக் கொண்டுவந்தேன். எனக்கும் இப்போதுதான் விஷயம் புரிகிறது.” என்பதாகச் சொல்லி, என்னிடம் பெற்ற முன் பணத்தொகையைத் திருப்பித் தர முன்வந்தார்.

அவர் எனக்காக எடுத்துக் கொண்ட பிரயாசைக்காக ஐம்பது ரூபாய் கொடுக்க விரும்பினேன். முதலில் மறுத்த அவர், என்னுடைய வற்புறுத்தலினால் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

மூர்மார்க்கெட்டில்தான் அதிகமான பாரதி நூல்களைத் தேடிப் பெற்றேன். ஒரு சமயம் நான் வாடிக்கையாக வாங்கும் புத்தகக் கடைக்காரரிடமிருந்து என்னை வரச் சொல்லிக் கடிதம் வந்தது. நான் உடனே வியாபாரியைச் சந்தித்தேன். அவரிடம் பரலி சு.நெல்லையப்பர் பதிப்பித்த 1917 ம் வருடத்தின் “கண்ணன் பாட்டு’ முதல் பதிப்பு நூல் இருக்கக் கண்டேன். நூலைப் பார்த்ததும் எனக்கு ஆனந்தமான ஆனந்தம்.

வியாபாரி என்னிடம், “”உங்களுக்காகவே நான் வாங்கி வைத்துள்ள புத்தகம் இது.”என்றார்.

“”நான் இதற்கு என்ன தொகை தரவேண்டும்?” என்று கேட்க, அந்த வியாபாரி சற்றும் அலட்டிக் கொள்ளாமல் “”ஐநூறு ரூபாய்” என்றார். அவர் சொன்ன தொகையைக் கேட்டதும் நான் அசந்து விட்டேன். புத்தகத்தின் விலை 4 அணா என்பதாக நினைவு. அதை மனதில் கொண்டு, “”இந்தப் புத்தகத்தின் விலை 4 அணா தானே! இதற்குப் போய் நீங்கள் ஐநூறு கேட்கலாமா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “”வேறு யாராகவாவது இருந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கேட்டு இருப்பேன். வெளிநாட்டுக்காரர் என்றால் இதன் மதிப்பு டாலர் கணக்கில்தான். நீங்கள் என் வாடிக்கையாளர். அதனால், நியாயமாகக் கேட்டேன். உங்களுக்கு விருப்பமுண்டானால் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரே விலை; கறார் விலை; பேரத்திற்கே இடமில்லை” என்று தெரிவித்துவிட்டார். நூலின் தன்மை பற்றியறிந்த நானும் அவர் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டுப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன்.

செட்டிநாட்டுப் பகுதிகளில் மிக மிக அரிதான பழைய பழந்தமிழ்நூல்கள் பழைய புத்தக வியாபாரிகளிடம் கிடைக்கும் என்பதையறிந்த நான், ஒரு சமயம் காரைக்குடிக்குச் சென்றேன். அங்கு மணிக்கூண்டு அருகில் இருந்த பழைய புத்தகக் கடைக்குச் சென்றேன். உள்ளபடியே மிக அருமையான தமிழ்நூல்கள் இருப்பதைக் கண்டேன். எனக்குத் தேவைப்பட்ட நூல்களை எடுத்துக் கொண்டு, அவற்றிற்கான தொகையை நான் பேரம் பேசியே கொடுத்தேன்.

கடையிலிருந்து நான் வெளிவரும் சமயத்தில் ஒரு மூலையில் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேப்பர் கட்டுகளைப் பார்க்க நேர்ந்தது.

“”அவை என்ன கட்டுகள்?” என்று கேட்க, அவர் “”இந்தப் பகுதியில் அந்தக் காலத்தில் நடைபெற்ற சினிமா, டிராமா விளம்பர நோட்டீஸ் கட்டுகள். நேற்றுத்தான் எடுத்து வந்தேன்.” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும், அப்படி என்னதான் அந்த நோட்டீஸ்களில் இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். வந்ததற்கு அவற்றையும் ஒரு பார்வை சும்மா பார்த்துவிடலாமே என்ற தாகம் ஏற்பட்டது. அவரும் கட்டுகளைப் பார்வையிட எடுத்துத் தந்தார்.

எல்லாம் விளம்பர நோட்டீஸ்கள். பல வண்ணங்களில், பலவித அளவுகளில். “யாரோ மிகவும் சிரமப்பட்டுச் சேகரம் செய்ததை எடைக்குப் போட்டுவிட்டார்களே’ என்று நினைத்த சமயத்தில் அந்த நோட்டீஸ்களின் இடையில் பாரதி புதையலைக் கண்டேன். சிரமப்படாமல்தானே கிடைத்த அற்புதப் புதையல் அது. காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தார் மீது பாரதி பாடிக் கொடுத்த வாழ்த்துப் பாட்டுக்களின் அச்சுப் பிரதி அதுவாகும்.

அச்சுப் பிரதியை நான் எடுத்துக் கொள்வதாகச் சொன்னவுடன் அந்த வியாபாரி, “”எடுத்துக் கொள்ளுங்களேன். இருபத்தைந்து ரூபாய் தாருங்கள்” என்றார். எனக்கோ ஒரே வியப்பு! காரணம் அருமையான பொக்கிஷம். இதன் அருமை தெரியாமல் குறைவாகக் கேட்கிறாரோ என்று நான் நினைத்தேன். என் மனது கேட்கவில்லை. நூறு ரூபாயை அவரிடம் கொடுத்தேன். பேரம் பேசி, மீதித் தொகையை நான் கேட்கக்கூடும் என்று அவர் நினைத்தார் போலும். நான் மீதித் தொகை வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துவிட்டேன். கேட்ட தொகையைவிட அதிகமாகத் தருவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. நான் அவரிடமிருந்து பெற்ற அச்சுப் பிரதியின் மகிமையை எடுத்துச் சொன்னவுடன் அவர் விஷயத்தைப் புரிந்து கொண்டு எனக்கு நன்றி தெரிவித்தார்.

இப்படி நான் பாரதி தேடல் பணியில் ஈடுபட்டிருந்ததை அறிந்த கோவை நண்பர் ஒருவர் தனக்கு வேண்டப்பட்டவரிடம் இந்தியா பத்திரிகைப் பிரதிகள் இருப்பதாகத் தெரிவித்து, உடனடியாக என்னைக் கோவைக்கு வரும்படி கடிதம் எழுதினார். நானும் உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டே கோவையைச் சென்றடைந்தேன்.

நண்பரும் நானும் அவர் தெரிவித்திருந்த நண்பர் வீட்டிற்கும் சென்றோம். சிறிது நேர உரையாடலுக்கும், உபசாரத்திற்கும் பின் ஓர் அறைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகளில் ஒன்றை என்னிடம் கொடுத்து, “”இதைப் பாருங்கள்” என்றார். கட்டை மிகுந்த ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

என்னை நான் ஒருவாறாகச் சுதாரித்துக் கொண்டு, “”நான் தேடிக் கொண்டு இருப்பது பாரதியார் ஆசிரியராக இருந்த இந்தியா பத்திரிகைப் பிரதிகளை. நீங்கள் என்னிடம் தந்திருப்பதோ நவஇந்தியா பத்திரிகைக் கட்டுகள்” என்றேன்.

அப்போதுதான் நண்பர்களுக்கு விஷயம் புரிந்தது.

நவ இந்தியா பத்திரிகை அந்தக் காலத்தில் கோவையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த செல்வாக்கான பத்திரிகையாகும். சென்னையிலிருந்தும் சில காலம் பத்திரிகை பிரசுரம் ஆனது.

இப்படி எத்தனையோ அனுபவங்களை நான் என் பாரதி தேடல்களில் பெற்றேன்.

வெளிஉலக வட்டாரத்தில் நான் பெற்ற அனுபவங்கள் ஒருபுறமிருக்க, என் வீட்டிலேயே ரஸமான அனுபவத்தைப் பெறவும் நேர்ந்தது.

வீட்டிற்கு வேண்டிய பொருள்களை என் மனைவி வாங்கி வரும்படி லிஸ்ட் கொடுத்து அனுப்புவாள். ஆனால் வெளியில் செல்லும் நானோ எனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு மனைவி கொடுத்த சாமான் லிஸ்டை மறந்து விடுவதுண்டு. இல்லையென்றால் தேவையான அளவு சாமான்கள் வந்து சேராத நிலை ஏற்பட்டது.

என் போக்கைக் கண்ட என் மனைவி நாசுக்காக ஒருநாள், “”இனிமேல் உங்கள் தேவையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்திற்கு வேண்டிய தேவையை நானே பார்த்துக் கொள்கிறேன்.” என்று சொல்லி, வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டாள்.

ஆக என்னுடைய பாரதி தேடலில் நான் பெற்ற இன்ப அதிர்ச்சியான அனுபவங்களைச் சொல்லி முடியாது.

அன்று நடந்த நிகழ்ச்சிகளை இன்றும் அசை போட்டுப் பார்ப்பதிலும் தனி இன்பம் இருக்கத்தானே செய்கிறது.

Posted in Barathi, Bharathi, Bharathiyaar, Books, Cheeni Vishwanathan, Dhinamani, Documents, Kathir, Literature, Poems, Poet, Research, Scholar, Seeni Viswanathan, Tamil | Leave a Comment »

Journeys with Vallikkannan – Asokamithiran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2006

நினைவலைகள்: வல்லிக்கண்ணனுடன் இரு நீண்ட பயணங்கள்

அசோகமித்திரன்

(இடமிருந்து) வல்லிக்கண்ணன், நடராஜன், ஞானக்கூத்தன், சேவற்கொடியோன், அசோகமித்திரன், “தீபம்’ நா. பார்த்தசாரதி (மடியில் அவர் மகன்), மு. மேத்தா.

வல்லிக்கண்ணனைப் பற்றி நினைக்கும்போது தி.க.சி.யைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. தி.க.சி. என்றவுடன் எனக்கு அவருடன் வரும் இன்னும் சிலர் பற்றியும் நினைக்க வேண்டிவரும். ஆ. பழனியப்பன் என்ற மிகச் சிறந்த இலக்கியவாதியும் இலக்கிய ஆராய்ச்சியாளர். இரண்டாவது கந்தர்வன். கடைசியாக என்.ஆர். தாசன்.

தி.க.சி.தான் என்னை வல்லிக்கண்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அன்று வல்லிக்கண்ணன் ராயப்பேட்டை அமீர் மகால் அருகில் ஒரு வீட்டில் குடியிருந்தார். (அதாவது அவருடைய சகோதரர் கோமதிநாயகம் வீட்டில்.) வல்லிக்கண்ணன் நான் எழுதியிருந்த “மஞ்சள் கயிறு’ கதையைப் படித்திருந்தார். அதன் பிறகு அவரை நா. பார்த்தசாரதியின் தீபம்‘ இதழின் அலுவலகத்தில் பலமுறை சந்தித்துப் பேச வாய்ப்பிருந்தது. தி.க.சி. சில விஷயங்களை அடித்துக் கூறுவார். வல்லிக்கண்ணன் புன்னகை புரிவார்.

ஒருமுறை “இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பு சென்னை மத்திய நூலகத்தில் நா. பார்த்தசாரதியின் புதிய நாவல் “ஆத்மாவின் ராகங்கள்’ பற்றி ஒரு விவாதக் கூட்டத்தை நடத்தியது. அந்த நாவலை எழுதி வரும்போது அதன் கதையை பார்த்தசாரதி என்னிடம் கூறினார். அவர் சொன்ன கதை மிகவும் உருக்கமாக இருந்தது. ஆனால் சொல்லுக்கும் எழுத்துக்கும் இடைவெளி உண்டல்லவா? விவாதத்தில் வல்லிக்கண்ணன் சிறிது அழுத்தம் தந்தே பேசினார். ஆனால் எல்லோருமே பக்குவப்பட்ட மனதுடையவர்கள். ஆதலால் உறவுகள் தொடர்ந்தன. நா. பார்த்தசாரதியின் அயராத தூண்டுதலில்லாமல் புதுக்கவிதையின் வரலாறு, சரஸ்வதி காலம் போன்ற தொடர்களை வல்லிக்கண்ணன் எழுதியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.

நா. பார்த்தசாரதிக்கு நிறைய அபிமானிகள் உண்டு. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு அவர் வாய்ப்பு ஏற்படுத்தி விடுவார். கல்கத்தா தமிழ் மன்றம் அதன் வெள்ளி விழாவுக்குச் சென்னையிலிருந்து ஒரு குழுவை அழைத்து வரப் பார்த்தசாரதிக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. வருடம் 1977. “எமர்ஜென்சி’ வந்து சில மாதங்கள் ஆகின்றன. பார்த்தசாரதியுடன் வல்லிக்கண்ணன், ஞானக்கூத்தன், சேவற்கொடியோன் (கோவை), மு. மேத்தா மற்றும் நான் நவம்பர் 27-ம் தேதி காலை கொரமாண்டல் எக்ஸ்பிரஸில் ஏறினோம். வழியெல்லாம் மழை. அடுத்த நாள் பகல் கல்கத்தா அடைந்தோம். அதற்கடுத்த நாள்தான் எங்களுக்குத் தெரிந்தது நவம்பர் 27-ம் தேதி ஒரு மிகப் பெரிய புயல் ஆந்திரக் கடற்கரையை மீது வீசியிருக்கிறது என்று. ரயில் நிலையங்கள் தூக்கி எறியப்பட்டிருந்தன. காவலி என்னும் இடத்தில் கடல் உள்புகுந்து பல கிராமங்களைத் தரை மட்டமாக்கி விட்டிருந்தது. அதன் பிறகு பல நாட்கள் சடலங்களை அகற்றுவது பெரும் பிரச்சினையாயிற்று. ஆந்திர அரசு சில ஆயுள் கைதிகளைப் பயன்படுத்தியது குறித்து நிறையக் கண்டனம் கூறப்பட்டது.

நாங்கள் ஒரு வாரம் கல்கத்தாவில் இலக்கியப் பாராட்டும் இலக்கியக் கண்டனமும் வாரி வழங்கினோம். எங்கள் குழுவின் நட்சத்திரப் பேச்சாளர் சேவற்கொடியோன். வரிக்கு வரி கைதட்டல்.

நாங்கள் ஊர் திரும்பும் நாள் வந்தபோது ரயில் பாதை ஒரு மாதிரி சீரமைக்கப்பட்டிருந்தது. புயலின் சீற்றத்தை விஜயவாடா தொடங்கி ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பார்க்கக் கிடைத்தது.

வல்லிக்கண்ணனும் நானும் இன்னொரு முறை ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எப்படியெல்லாமோ வற்புறுத்திப் புதுமைப்பித்தனுக்கு புதுதில்லியில் ஒரு தேசியக் கருத்தரங்குக்குக் க.நா.சு. ஏற்பாடு செய்திருந்தார். என் கட்டுரை ஆங்கிலத்தில். வல்லிக்கண்ணன் மற்றும் சா. கந்தசாமி தமிழில் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். அந்தக் கருத்தரங்கில் மேலும் ஆங்கிலத்தில் கட்டுரை அளித்தவர்கள் வலம்புரி ஜான் மற்றும் க.நா.சு. கருத்தரங்கில் நா. பார்த்தசாரதியும் கலந்துகொள்வதாக இருந்தது. இல்லை. அதன்பிறகு அவர் எந்தக் கருத்தரங்கிலும் கலந்துகொள்ள முடியாது போயிற்று. அதற்கடுத்த ஆண்டு க.நா.சுவின் மரணமும் நேரிட்டது.

வல்லிக்கண்ணனின் நீண்ட வாழ்க்கையில் ஏராளமான பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவருக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றிற்று. அது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே நடந்துவிட்டது.

அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்த சமயத்தில் அவருடைய நாவல்களையும் ஒரு பதிப்பாளர் மறுபதிப்பு செய்திருந்தார். ஒரு பழைய மாளிகை பற்றி ஒரு நாவல். அதில் சில இடங்கள் மிகவும் நன்றாக இருந்ததாக எனக்குத் தோன்றிற்று. புனைகதை தொடர்ந்து எழுதத் தேவைப்படும் அனுபவங்களை ஓர் எழுத்தாளர் போற்றி ஏற்க வேண்டும்.

நான் கடைசியாக செப்டம்பர் மாதம் அவரைப் பார்த்தேன். அவர் முடிவு இவ்வளவு அருகில் இருந்தது என்று தெரியவில்லை.

Posted in Anjali, Asogamithiran, Asokamithiran, Asokamithran, Asokamitran, Dheepam, Emergency, Gandharvan, Gomathinaayagam, Gomathynaayagam, Gomathynaayakam, History, Ka Naa Su, Literary, Magazines, Meet, Memoirs, Mu Mehtha, Na Pa, Na Parthasarathy, Naa Pa, Naa Paa, Njaanakkoothan, Njaanakoothan, NR Dasan, Sa Kandhasami, Saa Kandasami, Saa Kandhasamy, Sahithya Academy, Sahitya Academy, Sevarkodiyon, Tamil, Thi Ka Si, Thi Ka Sivasankaran, TK Sivasangaran, Valli kannan, Vallikannan, Vallikkannan, Writings | Leave a Comment »