Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 6th, 2006

Ambedkar’s 50th Anniversary – Biosketch

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2006

சமூக நீதி சக்திகள் ஒருங்கிணைப்பு

இரா.சிசுபாலன்

“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.

டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.

1930-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட மக்களின் மாநாட்டுக்கு தலைமையேற்ற டாக்டர் அம்பேத்கர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிடுகையில், “அரசியல் அதிகாரம், நமது எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விடாது. நமது பிரச்சினை சமூக உயர்வில் அடங்கியுள்ளது. நமது கெட்ட பழக்க வழக்கங்களைக் கைவிட வேண்டும். நாம் கல்வி கற்க வேண்டும். எழுதப் படிக்கக் கற்றால் மட்டும் போதாது. பலர் உயர் கல்வி கற்றால்தான் சமுதாயம் முழுவதையும் மேலே இட்டுச் செல்ல முடியும். பிறரும் கௌரவிப்பார்கள்’ என்றார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.

இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே “புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.

வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951-ம் ஆண்டு “இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் காலமானார்.

தேச விடுதலைப் போராட்டத்திலும், விடுதலைக்குப் பின்னரும் சாதியக் கொடுமைகள் ஜனநாயகத்துக்கு மிகப் பெரும் சவாலாய் விளங்கி வருகின்றன. தேசிய இயக்கமும், திராவிட இயக்கமும், சமூக நீதி இயக்கங்களும், பொதுவுடமை இயக்கமும் ஒன்றுபட்டு நின்று, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது.

காலம் காலமாக சமூக ரீதியாகப் பின் தங்கியுள்ள மக்களைக் கைதூக்கி விடக் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு, அடித்தட்டு மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஓரளவுக்கு முன்னேற வாய்ப்பளித்துள்ளது. அதே சமயம் கல்லாமை இருளில் மூழ்கியுள்ள தலித் மக்கள், குறிப்பாக தலித் பெண்கள் இதனால் போதிய பலன் அடையவில்லை. இந்நிலையில் இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் நிலையில் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வரும் நீதிமன்றத் தீர்ப்புகளால் இதன் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. உலகமயமாக்கல் பின்னணியில் இட ஒதுக்கீடு மூலம் வேலை வாய்ப்பளிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், வேலை வாய்ப்பு பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகமயமாக்கல் எதிர்ப்புப் போராட்டத்தில் சமூக நீதிக்காக போராடும் சக்திகளும் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனம் தலித் மக்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனாலும், சட்ட உரிமைகள் மீறலும், மனித உரிமை மீறலும், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் தொடர் கதைகளாக உள்ளன. இதனை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்.

தலித் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், குடியிருப்புகள் என ஒருங்கிணைந்த வகையில் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை முழுமையாக அமலாக்கப்பட வேண்டும். இப்பகுதி மக்களுக்கென ஒதுக்கப்படும் நிதி முழுமையாக செலவழிக்கப் பட வேண்டும். இவர்களின் நில உரிமை காக்கப்பட வேண்டும். சமூக சமத்துவம் மலர பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுவே டாக்டர் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

(இன்று அம்பேத்கரின் 50-வது நினைவு நாள்).

Posted in Ambedkar, Babasaheb, Bioigraphy, Biosketch, British India, Buddhism, Casteism, Columbia University, Dalit, Dravidian Movement, Feminism, Freedom, Harijan, Hinduism, Human Rights, Independence, Law, Lifesketch, Mahathma, MK Gandhi, SC, SC/ST, Socialism, ST, Untouchability, Varnasramam | Leave a Comment »

India ranks first in safeguarding interests of its Production Industries – WTO

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2006

உள்நாட்டு தொழில்துறையை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இந்தியா முதலிடம்

புதுதில்லி, டிச. 7: அன்னியப் பொருள்கள் உள்நாட்டுச் சந்தையில் குவிவதைத் தடுக்க இந்தியா அதிக அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உலக வர்த்தகக் கழகம் (டபிள்யூ.டி.ஓ.) தெரிவித்துள்ளது.

அதேபோல இறக்குமதியாகும் பொருள்களால் உள்நாட்டுத் தொழில்துறை பாதிப்படையாமல் தடுக்க, அதிக எண்ணிக்கையில் காப்பு நடவடிக்கைகளை எடுப்பதிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது என உலக வர்த்தகக் கழகத்தின் புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தகக் கழகத்தின் உறுப்பு நாடுகள், அன்னியப் பொருள் இறக்குமதியால் உள்நாட்டுத் தொழில்துறை பாதிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ள “காப்பு நடவடிக்கைகள்’ எடுக்க அனுமதிக்கப்படுகின்றன. உலக வர்த்தகக் கழக ஒப்பந்தப்படி, ஒரு நாடு காப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக அது தொடர்பாக முழு விசாரணை நடத்தி அந்த அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்த வகையில், உலக வர்த்தகக் கழகம் உருவாக்கப்பட்ட 1995-ம் ஆண்டிலிருந்து இந்தியா 15 காப்பு நடவடிக்கை விசாரணைகளையும், அதன் அடிப்படையில், பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது 8 முறை காப்பு நடவடிக்கைகளையும் பயன்படுத்தியுள்ளது. இதில் 7 வேதிப் பொருள்கள் மற்றும் அது தொடர்பான தயாரிப்புகள் சார்ந்தது; மற்றொன்று பிளாஸ்டிக்குகள் மீதானது.

இதேபோல, அன்னியப் பொருள்கள் உள்நாட்டுச் சந்தையில் வந்து குவிவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக 448 ஆய்வு விசாரணைகளையும், 323 நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என உலக வர்த்தகக் கழகம் தெரிவித்துள்ளது.

Posted in Business, Chemical, Chemistry, Development, Economy, Finance, GDP, Growth, India, Industry, Plastics, Research, Statistics, Survey, WTO | Leave a Comment »

Fiji coup leader dissolves Parliament – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2006

கசக்குது சர்க்கரைத் தீவு

பூவுக்குள் பூகம்பம் என்பதைப் போல குட்டித் தீவு நாடான பிஜியில் 4 வது முறையாக ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

1987-ல் இரண்டு முறையும் 2000ம் ஆண்டிலும் நடைபெற்ற ராணுவப்புரட்சிகளால் நேர்ந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னும் முழுமையாக மீளமுடியாத சூழ்நிலையில், இன்னொரு ராணுவக் கலகம்.

பிரிட்டிஷாரின் ஆளுகையில் இருந்த பிஜி தீவுக்கு 1870-களில் இந்தியத் தொழிலாளர்கள் கரும்பு விவசாயத்துக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் கணிசமானவர்கள் தமிழர்கள். இந்தத் தீவில் இந்திய வம்சாவளியினர் 40 சதவீதம் பேர் உள்ளனர். ஆட்சிமொழிகளில் ஒன்று இந்துஸ்தானி (இந்தி). தீபாவளி, ராமநவமி, ஹோலி ஆகிய பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை உண்டு.

இந்திய வம்சாவளியினரே (இந்தோ-பிஜியன்) அதிகார மட்டங்களில் பரவலாக இருந்ததை மண்ணின் மைந்தர்களால் சகிக்க முடியவில்லை. 1987-ல் ராணுவப் புரட்சி நடந்தது. இந்திய வம்சாவளியினரில் ஒரு பகுதியினர் அச்சத்தில் வெளியேறினர்.

2000ம் ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் மகேந்திர செüத்ரியை நீக்கிய ஜார்ஜ் ஸ்பைட்-டை நீக்கிவிட்டு, லைசீனியா கராúஸ-வை பிரதமராக அமர்த்தியவர் தளபதி பிராங்க் பைனிமாரமா. இப்போது அவரே லைசீனியாவைத் தூக்கி எறிந்துவிட்டார். புரட்சிக்கான காரணங்கள் மிக அற்பமானவை.

அமெரிக்கா தனது உதவிகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. காமன்வெல்த் நாடுகள் சபையிலிருந்து பிஜி நீக்கப்பட்டுவிடும். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அந்தத் தீவில் மிகவும் பாதிக்கப்படுவோர் அங்கு வாழும் மக்கள்தான்.

பிஜியின் மக்கள் தொகை 10 லட்சம். இதில் 2.5 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்பவர்கள். இங்குள்ள உழைப்பாளர்களில் 10 சதவீதம்பேர் கரும்பு விவசாயத்திலும் (ஆண்டு உற்பத்தி 30 லட்சம் டன்) 10 சதவீதம் பேர் சுற்றுலா சார்ந்த தொழில்களிலும் பிழைப்பு நடத்துகின்றனர்.

உலகச் சந்தையில் சர்க்கரையின் விலைவீழ்ச்சி காரணமாக தற்போது பிஜியின் கரும்பு உற்பத்திக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா மூலமான வருவாயை முழுமையாக எதிர்நோக்க வேண்டிய நேரத்தில்தான் இந்த ராணுவப் புரட்சி நடந்துள்ளது. ராணுவப் புரட்சி நடந்த சில மணி நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் பலரும் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்துவிட்டனர். ஆண்டுக்கு 5.5 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளை இழுக்கிறது பிஜியின் இயற்கை அழகு. ஒரு பயணி சராசரியாக 8 நாள்கள் தங்குகிறார். நாளொன்றுக்கு 180 டாலர் செலவிடுகிறார். நாட்டின் நான்கில் ஒருபகுதி வருவாய் சுற்றுலா மூலம்தான்.

2000ம் ஆண்டு ராணுவப் புரட்சி காரணமாக, சுற்றுலா சார்ந்த தொழில் முதலீடுகள் வருவது நின்றுபோயின. கடந்த 7 ஆண்டுகளாக அமைதியான அரசியல் சூழல் நிலவியதால் மீண்டும் பல நிறுவனங்கள் சுற்றுலா சார்ந்த தொழில்களில் முதலீடுகளைக் கொண்டுவந்து கொட்டுவதற்கான திட்டங்களை கையில் எடுக்கும் வேளையில், மீண்டும் ராணுவப் புரட்சி!

“தற்போதைய புரட்சியில் யாரும் ரத்தம் சிந்தவில்லை. இனியும் அதே நிலை நீடித்தால் சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்கள் அச்சம் குறையும்’ என்று பிஜியின் சுற்றுலாத் தொழிலில் இருப்பவர்கள் நம்புகின்றனர்.

கரும்பு உற்பத்திக்கு ஐரோப்பிய நாடுகள் மானியம் தருகின்றன. புரட்சி நீடித்தால் அதை இழக்க நேரிடலாம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தால் அதன் பாதிப்பு இந்த சாதாரண மக்களைத்தான் பாதிக்கும்.

Posted in Australia, British, Coup, Democracy, Elections, Fiji, Immigration, India, Indo-Fijian, Mahendra Chowdhry, Military, parliament, Sugarcane, Tourism | Leave a Comment »

Tamil Cinema Reviews – Sivappathigaram : Vishal

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2006

சினிமா சிவப்பதிகாரம்- விமர்சனம்

மனோஜ்கிருஷ்ணா

நம்மை அதிகாரம் செய்து ஆளும் அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றிய ஆதங்கம்தான் “சிவப்பதிகாரம்‘.

அழிந்து வரும் நாட்டுப்புறப் பாடல்களை அடுத்து வரும் தலைமுறையினர் ஆராதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு புத்தகம் எழுத சொந்த கிராமத்துக்கு வருகிறார் பேராசிரியர் ரகுவரன்.

அவருடைய குறிப்பறிந்து குறிப்பெடுக்க உதவிக்கு வருகிறார் அவரிடம் படித்த மாணவர் விஷால். இதற்கிடையில் சட்டப் பேரவைக்குத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்கிறார்கள். குருவின் உபதேசத்தோடும், குறு வாளின் உதவியோடும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என பேதமுமில்லாமல் மூன்று வேட்பாளர்களை பொது இடங்களில் குத்திக் கொல்கிறார் விஷால். உயிர் பயம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெறுகிறார்கள்.

தேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது. விஷால் வேட்பாளர்களை ஏன் கொல்கிறார்; இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

விஷால் அமைதியாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கிறார். நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. அறிமுக நாயகி மம்தா வழக்கமான கதாநாயகிகளைப் போல் காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தன்னுடைய பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். கஞ்சா கருப்புவின் யதார்த்தமான காமெடியை ரசிக்கலாம். மணிவண்ணன், உபேந்திரா லிமாயே, ஸ்ரீகாந்த் ஆகியோர் யதார்த்தமான நடிப்பையும், சண்முகராஜன் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து படம் நெடுகிலும் வரும் பல புதுமுகங்களின் நடிப்பு கதையோட்டத்துக்கும், காட்சிகளுக்கும் உறுதுணை புரிந்திருக்கிறது.

நடிப்பில் அனைவரையும் முந்துபவர் ரகுவரன்தான். பேராசிரியர் பாத்திரத்தில் நிறைகுடமாய் ஜொலிக்கிறார். தன்னைப் பிடிக்க வரும் போலீசாரிடமும், நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களிடமும் இயல்பாய் பேசும் காட்சிகள் சிறப்பு.

விஷால் வைத்திருக்கும் கத்தி வேட்பாளர்களைக் கொல்கிறது என்றால், கத்தியை விடக் கூர்மையான கரு.பழனியப்பனின் வசனம் ரசிகர்களின் மனங்களை வெல்கிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துகளை சொல்ல முயன்றதற்காகப் பாராட்டலாம். படத்தில் இடம்பெறும் கல்லூரிக் காட்சிகளில், ஆசிரிய-மாணவ உரையாடல்களில் யதார்த்தம் மிளிர்கிறது. அனைவரிடமும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். படத்துக்கு இன்னொரு பலம் வித்யாசாகரின் இசை. பாடல்களிலும், பின்னணி இசையிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். கோபிநாத்தின் ஒளிப்பதிவு கிராமங்களை உயிர்ப்போடு படம்பிடித்திருக்கிறது. குறிப்பாக மதுரை சித்திரைத் திருவிழா காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட விதம் மிக அருமை.

படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாகச் செல்கிறது. திரைக்கதையின் வலுக்குறைவால் சில காட்சிகளோடு ரசிகர்கள் ஒன்றமுடியவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. மூன்று வேட்பாளர்கள் கொல்லப்பட்டவுடன் மாநிலத்திலுள்ள பல வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெறுவதும், நாயகன் பொது இடங்களில் வேட்பாளர்களைக் கொன்றுவிட்டு மெதுவாக நடந்து வருவதும் ஏற்புடையதாக இல்லை.

“சிவப்பதிகாரம்’ -சமுதாயத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளை முன் வைத்த படங்களின் பட்டியலில் இடம் பெறும்.

மனோஜ்கிருஷ்ணா

Posted in Kanja Karuppu, Mamtha, Raghuvaran, review, Shanmugarajan, Shanmukarajan, Sivappathigaram, Sivappathikaram, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Vishaal, Vishal | 1 Comment »

Kabila, sworn in as president, puts DR Congo to work

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2006

காங்கோவின் புதிய அதிபராக ஜோசப் கபிலா பதவியேற்றார்

காங்கோ நாட்டில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில், ஜனநாயக ரீதியாக முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் அதிபராக, ஜோசப் கபிலா பதவியேற்றுள்ளார்.

ஜோசப் கபிலா
ஜோசப் கபிலா

தலைநகர் கின்ஷாசாவில், நடந்துகொண்டிருக்கும் இந்த பதவியேற்பு வைபவத்தில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

காங்கோவில் நடந்த உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த, மூன்றாண்டுகளுக்கு முன்னர் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தை மத்ய்ஸ்தம் செய்து உருவாக்க உதவிய, தென் ஆப்ரிக்க அதிபர் தாபோ இம்பெக்கியும் இந்த பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவர்.

உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததில் இருந்து இடைக்கால அரசு ஒன்றிற்கு கபிலா தலைமை வகித்தாலும், 2001ம் ஆண்டு அவரது தந்தை பதவியிலிருந்தபோது படுகொலை செய்யப்பட்ட பின்னர் முதன் முதலாக ஆட்சிக்கு வந்தார்.

Posted in Angola, Democratic Republic of Congo, DR Congo, Jean-Pierre Bemba, Joseph Kabila, Kinshasa, Laurent, Laurent Nkunda, Namibia, President, Rwanda, Swahili, Tutsi, Uganda, Zimbabwe | Leave a Comment »