Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 4th, 2006

Stage set for two-day Naga peace talks in Amsterdam

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2006

நெதர்லாந்தில் இந்திய அரசாங்க மற்றும் நாகா பிரிவினைவாதத் தலைவர்கள் பேச்சு

அமைதி கோரும் நாகலாந்து மக்கள்
அமைதி கோரும் நாகலாந்து மக்கள்

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்காக, இந்தியாவின் வடகிழக்கில் செயல்பட்டுவரும் நாகா பிரிவினைவாதக் குழுக்களின் தலைவர்களும், இந்திய அரசின் பிரதிநிதிகளும் கூடியுள்ளனர்.

இந்தியாவின் தொழிலாளர் நல அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தலைமையிலான இந்திய அரசின் குழுவினரும், நாகாலாந்து பிரிவினைவாத இயக்கத்தின் பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

நாகா பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வினை இந்திய அரசு தாமதப்படுத்துவதாக கிளர்ச்சிக்காரர்கள், இந்திய அரசின் மீது பழி சுமத்தியதையடுத்து, இந்திய அரசிற்கும், நாகாலாந்து சோஷலிசக் கவுன்சிலுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் அண்மைய மாதங்களில் பிரச்சனைக்குள்ளாகின.

இந்தியாவின், மிக நீண்ட காலமாக நடந்து வரும் நாகா கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவர கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், இந்திய அரசுக் குழுவினரும், நாகா பிரதிநிதிகளும் ஐம்பது முறைக்கும் மேலாக சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Amsterdam, Chisi Swu, Constitution, India, Khreibo Chawang, Labour Minister, Naga, negotiations, North East, NSCN-IM, NSCN-Khaplang, Oscar Fernandes, peace process, Talks, Thuingaleng Muivah | Leave a Comment »

BBC Tamil Series Special – Tamil Street Plays

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2006

காயாத கானகத்தே- பாகம் 5

காயாத கானகத்தே

தமிழ் நாடகம் கடந்து வந்த பாதையை விளக்கும் தொடர்.

 

 

தமிழ் நாடக வரலாறு கூறும் காயத கானகத்தே சிறப்புத் தொடரின் இந்த ஐந்தாவது பாகத்தில் ஸ்பெஸல் நாடகங்கள் குறித்து விளக்குகிறார் எமது டி.என். கோபாலன்.

தனித்தனிக் குழுக்களாக நாடகங்கள் போட்டதற்குப் பதிலாக தனித்தனிப் பாத்திரங்களில் சிறப்புப் பெற்றவர்களை வைத்து நடத்தப்படும் இந்த ஸ்பெஸல் நாடகங்கள் தொடர்பில், கிராமத்துக்குக் கிராமம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாறுபடுவது குறித்தும், அதனால் சில வேளைகளில் சில நாடகங்கள் விரசத்தை அண்மித்த நிலையை அடைவதையும் அவர் இங்கு விளக்குகிறார்.

Posted in BBC Tamil, History, Literature, Nadagam, Plays, Research, Tamil Nadakam, Tamil Theater, Thamizh, Theatre | Leave a Comment »

Polls Close In Venezuela With Chavez Clear Favourite

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2006

வெனிசூலாவில் அதிபர் தேர்தல் வாக்களிப்பு

தேர்தல் சுவரொட்டிகள்
தேர்தல் சுவரொட்டிகள்

வெனிசூலாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தயங்காமல் பேசும் இடதுசாரி அதிபர் ஹூகோ சவேஸ் அவர்களுக்கு மக்கள் மேலும் ஓர் ஆறாண்டுகால ஆட்சியை வழங்குவார்களா என்பது இதன் முடிவில் தெளிவாகும்.

அவரை எதிர்த்து 6 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் ஒருவரான மாவட்ட ஆளுனரான மனுவேல் றோசாலெஸ் அதிபருக்குக் கடும் போட்டியாக உள்ளார்.

தான் பதவிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகம் தழைக்கும், பழுது பட்டுப்போயுள்ள அமெரிக்காவுடனான உறவுகள் மேம்படும் என்கிறார் அவர்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சிக்கும் அதிபர் சவேசுக்கு நலிந்த பாட்டாளி மக்களிடம் அமோக ஆதரவுள்ளது.

நாட்டின் எண்ணெய் வள நிதியைக் கொண்டு ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த அவர் மேற்கொண்ட நலத் திட்டங்கள் அந்தப் பேராதரவை ஏற்படுத்தின.

தலை நகர் கராகஸ்ஸிலிருந்து வரும் செய்திகள் வாக்களிப்பின் தொடக்கம் சுறு சுறுப்பாக இருந்தது என்று கூறுகின்றன.

Posted in America, Communism, Cuba, Elections, Fidel Castro, Hugo Chavez, Latin America, Left, Manuel Rosales, OPEC, Polls, USA, Venezuela, Zulia | Leave a Comment »

London Diary: Ira Murugan – Indian Food, Desis in UK

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2006

லண்டன் டைரி: ஈஸ்ட் ஹாம் கடைவீதியும்… மாம்பலம் ரங்கநாதன் தெருவும்!

இரா. முருகன்

சுரங்கப்பாதை கும்மிருட்டு வழியாக இரண்டு ஸ்டேஷன், அப்புறம் மேலே தரைக்கு வந்து, வெய்யில் காய்ந்து கொண்டிருக்கிற அடுத்த ஸ்டேஷன், திரும்ப சுரங்கம் என்று குஷியாகக் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு லண்டன் டிஸ்ட்ரிக்ட் லைனில் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரயில் பெட்டியில் நான். மற்றும், போன ஸ்டேஷனில் குழந்தையோடு ஏறிய ஒரு பெண்.

குழந்தையைத் தோளில் சார்த்தியபடி, அந்தப் பெண் கையில் காகிதக் காப்பிக் கோப்பையோடு என்னை நோக்கிப் புன்னகையுடன் நடந்து வருகிறாள். பக்கத்தில் வந்து கோப்பையைக் குலுக்கியபடி, “”சில்லறை இருந்தா போடு, ப்ளீஸ்” என்கிறாள். போலந்து தேசத்திலிருந்து வந்திருக்கிறாளாம். சிநேகிதன் கைவிட்டுவிட்டு ஒரு சீனப் பெண்ணோடு போய்விட்டானாம். தடுமாறும் ஆங்கிலத்தில் அவள் சொல்லும்போது குழந்தை விழித்துக்கொண்டு அழ ஆரம்பிக்கிறது. நான் சட்டைப் பையில் தேடிப் பார்த்து ஒரு பவுண்ட் நாணயத்தைக் குவளையில் போடுகிறேன். அடுத்த ஸ்டேஷன் வரும்போது குவளை கைப்பையில் மறைய, குழந்தையைச் சமாதானம் செய்தபடி அவள் இறங்குகிறாள்.

ஈஸ்ட் ஹாம் ரயில் நிலையத்துக்கு வெளியே வருகிறேன். லண்டனின் புறநகர்ப் பகுதி இது. ஐம்பது அறுபது வருடம் முன்னால் கிட்டத்தட்ட கிராமம் தான். அப்போது வெறும் ஆறாயிரம் பேர்தான் மொத்த ஜனத்தொகையே. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஜெர்மன்காரர்கள் வெறியோடு இங்கே குண்டு வீசித் தாக்கி விளைவித்த சேதம் கணிசமானது. ஆனாலும் இப்போதைய ஈஸ்ட் ஹாமில் ஜனத்தொகை பழையதைவிடக் கிட்டத்தட்டப் பத்து மடங்கு அதிகம். இதில் பெரும்பகுதி சுறுசுறுப்பான தமிழர்கள்.

ஈஸ்ட் ஹாம் கடைவீதி கொஞ்சம் விஸ்தாரமான, அதிகம் கூட்டமில்லாத மாம்பலம் ரங்கநாதன் தெரு போல் விரிந்து கிடக்கிறது. தமிழில் பெயர் எழுதிய ஜவுளிக் கடை வாசல் கண்ணாடிக் கூண்டில் சிக்கென்று புடவை கட்டிய விளம்பரப் பொம்மைப் பெண் கை கூப்பித் திரும்பத் திரும்ப வணங்குகிறாள். அசல் தங்க நகை (சேதாரம், செய்கூலி என்ன ஆச்சு?) விற்கிற கடை. சீடை முறுக்கு, சாம்பார்ப்பொடி, ரசப்பொடிக் கடை. தெருவிலிருந்து கொஞ்சம் விலகி மகாலட்சுமி அம்மன் கோயில். அங்கே இன்றைக்கு ராத்திரி “ருக்மிணி கல்யாணம்’ பக்திப் பேருரை என்று அறிவிக்கும் நோட்டீசு ஒட்டிய சுவரில் பக்கத்திலேயே பாப் மியூசிக் நிகழ்ச்சிக்கான சுவரொட்டி.

வீடியோ, ஆடியோ காசெட் விற்கிற கடையில் “அவளுக்கென்ன அம்பாசமுத்திரம் ஓட்டல் அல்வா’ என்று என்னத்துக்காகவோ ஆக்ரோஷமும் அவசரமுமாக ஒலிக்கிற சினிமாப் பாட்டின் அடுத்த வரியை எதிர்பார்த்தபடி பத்திரிகைக் கடையில் நுழைகிறேன். கொஞ்சம் ஆறிப்போன சரக்குகள். அதாவது போன வாரத்திய தமிழ் வாரப் பத்திரிகைகள், முந்தா நாளைய சென்னைப் பதிப்பு, தினசரிகள். ஆச்சரியகரமாக, இலக்கியச் சிற்றிதழ் ஒன்று. “”மூணு பவுண்ட் சார்”. கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ரூபாய். சென்னையில் இருக்கும்போது அந்தப் பத்திரிகை ஆசிரியர் “ஆண்டு சந்தாவைப் புதுப்பிக்க நூற்றிருபது ரூபாய் அனுப்பவும்’ என்று அவ்வப்போது அனுப்பிய தபால் அட்டைகளைக் கண்டுகொள்ளாமல் விட்ட குற்றத்துக்குத் தண்டனையாக மூன்று பவுண்ட் கொடுத்து, ஓரத்தில் பழுப்பேறிய ஒரு பிரதியை வாங்குகிறேன். “”பஞ்சாங்கம் வேணுமா சார்?”. எடுத்துப் புரட்டிப் பார்க்கிறேன். லண்டன் அட்சரேகை தீர்க்கரேகைக்குப் பிரத்தியேகமான திருக்கணிதப் பஞ்சாங்கம். இலங்கை மட்டுவில் பகுதியில் கணித்து வெளியிடப்பட்டது. ஈழத் தமிழர்களை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ரங்கநாதன் தெரு பிரமையை இன்னும் கொஞ்சம் அசலாக்குகிறதுபோல, பக்கத்திலேயே “சரவண பவன்’ ஓட்டல். லண்டன் கிளை. ஜவுளிக் கடையில் ஷிபான் சாரி. மேட்சிங் பிளவுஸ் பீஸ், மல்வேட்டி வாங்கிவிட்டு, நகைக்கடையில் அட்டிகை விலை விசாரித்துவிட்டு, பாத்திரச் சீட்டுக் கட்டிய பிறகு, சரவண பவனில் படியேறி மசால் தோசைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிற ஒரு கூட்டம் உள்ளே நிரம்பியிருக்கும் என்பது நிச்சயம். அங்கே மட்டுமில்லாமல், கொஞ்ச தூரத்தில் “சென்னை தோசா’, இன்னும் தெருவோடு நடந்தால் இரண்டு சாப்பாட்டுக் கடைகள் என்று ஈஸ்ட் ஹாம் முழுக்க சாம்பார் வாடை கமகமக்கிறது.

லண்டனில் இந்தியச் சாப்பாடுக்கு நிறைய வரவேற்பு. “டாமரிண்ட்’, “இம்லி’ என்று பெயரிலேயே புளி அடைத்த இந்திய ஓட்டல்கள் மதிய நேரங்களில் லண்டன் அலுவலகங்களுக்குச் சுடச்சுட டிபன் பாக்ஸில் சாப்பாடு அனுப்பி வைக்கிற பிசினஸ் சக்கைப்போடு போடுகிறதாம். இன்டர்நெட்டில் தோசை ஆர்டர் செய்தால் வீடு தேடிவந்து டெலிவரி செய்ய தோசைக்கடைக்காரர்கள் ஏற்பாடு செய்வதாகக் கேள்வி.

இனிப்பு, இரண்டு இட்லி, பொங்கல், தோசை, வடை, காப்பி எல்லாம் சேர்த்து காலைச் சாப்பாடு ஐந்து பவுண்ட் மட்டும் என்று தகவல் தரும் ஓட்டலில் நுழைகிறேன். கேபிள் டிவி தமிழ் திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளில் மாறிமாறி விவேக்கும் வடிவேலுவும். நடுவில் ஐந்து நிமிடத்துக்கு பழைய படத்தில் செந்தில் கவுண்டமணியிடம் உதை வாங்கிவிட்டு ஓடுகிறார். “கேபிள் டிவி சந்தாவைப் புதுப்பித்தால் எம்.பி த்ரீ பிளேயர் இலவசம்’ என்ற அறிவிப்பு திரையின் கீழே ஓடியபடி இருக்கிறது. ஓட்டல் கல்லாவில் விநாயகர் படம், லட்சுமி படம். தமிழ் நாட்காட்டி, ஊதுபத்திப் புகை. சாப்பிட்டவர்கள் பணத்தோடு கொடுத்துவிட்டுப் போகிற பில்லைக் குத்தி வைக்கிற கழுமரம் மாதிரியான இரும்புக் கம்பி ஒன்று இருந்தால் அபாரமாக இருக்கும் எப்படி மறந்தார்கள் என்று தெரியவில்லை.

“”டாடி, எதுக்கு இங்கே வந்து சாப்பிடணும்னு அடம் பிடிக்கறே? வீட்டிலே இருந்து ஃபோன் செஞ்சா, கொண்டு வந்து கொடுத்திட மாட்டாங்களா?” மேசை மேசையாகக் கையில் எடுத்துச் சாப்பிட்டபடி இருக்கும் கூட்டத்தைப் பார்த்தபடி லேசான முகச் சுளிப்போடு அடுத்த டேபிளில் ஒரு சிறுமி முனகுகிறாள். தோசையைக் கத்தியால் குத்தி முள் கரண்டியால் பிய்த்து சாம்பாரில் தோய்க்க முயன்று தோற்றுப் போனவள், அப்பா வற்புறுத்தியபடிக்கு அப்புறம் கையால் சாப்பிட ஆரம்பிக்கிறாள்.

“”ரேபு சிரஞ்சீவி பிலிம். வெங்கடராவ் டிவிடி இச்சாரு”. எதிர் டேபிள் ஆந்திர இளைஞர்கள் முகத்தில் தீர்க்கமான மகிழ்ச்சி. அது இட்லியைத் தொட்டுக்கொண்டு கார சட்னி சாப்பிடுகிற சந்தோஷமா, ரகசியமா டிவிடி கிடைத்து லேடஸ்ட் தெலுங்குப் படம் பார்க்கப் போகும் மகிழ்ச்சியா என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

“”எதுக்குய்யா பாங்குலே போய்ப் பணம் அனுப்பறே. நான் சொல்ற இடத்துலே கட்டு. கம்மி சார்ஜ். உத்தரவாதமா, நாளைக்கு சாயந்திரம் மண்ணடியிலேருந்து உங்க வீட்டுக்குப் போய்ச் சேந்திடும்.” அடுத்த மேஜையில் டிபன் சாப்பிட்டபடி ஒருத்தர் சிநேகிதரிடம் அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறார். “ஹவாலா வேணாம்’ என்று சர்வர் கொண்டு வந்த ஹல்வாவை ஒதுக்கிவிட்டு இட்லியோடு யுத்தம் புரிய ஆரம்பிக்கிறேன்.

Posted in Dinamani, England, Era Murugan, Era Murukan, Experiences, Ira Murugan, Ira Murukan, Kathir, London Diary, UK | Leave a Comment »

Vijayarajan – Mooligai Corner: Orithazh Thaamarai

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2006

மூலிகை மூலை: ஓரிதழ் தாமரை

விஜயராஜன்

இது குற்றுச் செடி வகையைச் சேர்ந்தது. மாற்றடுக்கில் அமைந்த இலைகளையுடையது. நல்ல வளர்ச்சியாக வளர்ந்தால் அரை அடி வரை வளரும். இதன் இலைகள் அரை அங்குலத்துக்குமேல் இருக்காது. இதற்கு தண்டுப் பகுதியில் இருந்து கிளைகள் ஏற்படாது. மேல் நோக்கியே வளரும் ஆற்றல் கொண்டது. இளஞ்சிவப்பு நிறமுள்ள ஒரே இதழ் மட்டும் உள்ள பூ இருக்கும். அதனால் இது ஓரிதழ் தாமரை என்று அழைக்கப்படுகின்றது. செடியின் எல்லாப் பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும் தானாகவே வளரக் கூடியது. தாது வெப்பு அகற்றியாகவும் சிறுநீர்ப் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும் பயன்படுகின்றது.

வேறு பெயர்கள்: சூது, சூர்யகாந்தி, ரத்னபுருசு.

ஆங்கிலத்தில்: Ionidium suffruticosum; Ging, violaceae

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

ஓரிதழ் தாமரை இலையைப் பூவுடன் பறித்து அரைத்து நெல்லிக்காயளவு, 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர இரத்தம் சுத்தமாகி உடல் பலம் பெறும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை நோய்கள் குணமாகும்.

இதன் இலையை மட்டும் தினமும் விடிவதற்கு முன்னர் சிறிதளவு மென்று தின்று பால் குடித்து வர 48 நாட்களில் தாதுபலம், அதிமூத்திரம், வெள்ளை வெட்டைச் சூடு, நீர் எரிச்சல், சிற்றின்ப பலவீனம் குணமாகும்.

ஓரிதழ் தாமரையின் சமூலம் எடுத்து அத்துடன் சங்கன் குப்பி இலை 5 சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் கருமை நிறம் மாறி வரும். மேலும் இதயம் பலமாகி இதயத் துடிப்பு, படபடப்பு குறைந்து உடலைச் சமச்சீராக்கும்.

ஓரிதழ் தாமரை இலை, கீழா நெல்லி இலை, யானை நெருஞ்சில் இலை மூன்றையும் வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்து 1 டம்ளர் எருமைத் தயிரில் 10 நாட்கள் காலையில் சாப்பிட்டு வர நீர்த்தாரை ரணம், வெள்ளை ஒழுக்கு குணமாகும். (மருந்து செரிமானம் ஆன பிறகு காரமும், சூடும் இல்லாத உணவு உண்ணலாம்)

ஓரிதழ் தாமரை இலையையும் தாமரையுடன் காலையில் வெறும் வயிற்றில் தின்று வர (வழுவழுப்பான பசை போன்று தென்படும்) மேக வெட்டை (எயிட்ஸ்) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாளடைவில் குணமடைவர்.

ஓரிதழ் தாமரையோடு எலும்பு ஓட்டி இலையையும் சேர்த்து ஒரு கைப்பிடியளவு தினமும் காலையில் தின்று வர முகத்தில் எலும்புகளில் கீறல், உடைந்து இருக்கும் எலும்புகள் கூடிவரும்.

ஓரிதழ் தாமரையை இடித்துச் சாறு பிழிந்து 40 மிலி எடுத்து சிறிது சர்க்கரையைச் சேர்த்து காலையில் மட்டும் 3 நாள்கள் குடிக்க பெரும்பாடு நீங்கும். (இச்சா பத்தியம் இருக்க வேண்டும்).

ஓரிதழ் தாமரையும், நற்சீரகமும் சம அளவாக எடுத்து அரைத்து கொட்டைப்பாக்கு அளவு 5 வேளை கொடுக்க சுக்கில பிரமியம் தணியும். (இச்சா பத்தியம் இருக்க வேண்டும்).

ஓரிதழ் தாமரை, வெந்தயம், விடத்தலை வேர், சுக்கு, வால்மிளகு வகைக்கு 20 கிராம் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வர அரிப்பு நீங்கும்.

Posted in Allopathy, Alternate, cure, Doctor, Herbs, Homeopathy, Medicine, Orithazh Thaamarai, Vijayarajan, Yunani | Leave a Comment »

Uphill task for victims’ kin to get compensation – Bihar Bhagalpur

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2006

அபூர்வ ரயில் விபத்து

பிகார் மாநிலத்தில் பாகல்பூர் என்னும் இடத்தில் அபூர்வமான ஒரு ரயில் விபத்து நடந்துள்ளது. இதில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ரயில் தண்டவாளத்துக்கு மேலே சாலைப் போக்குவரத்துக்காகக் கட்டப்பட்டிருந்த பழைய பாலம் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கீழே ரயில் சென்று கொண்டிருந்த நேரம் பார்த்து மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இது தற்செயலாக ஏற்பட்டதாகக் கூறமுடியாது. அப்பாலம் 150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகும். அது பழுதடைந்துவிட்ட காரணத்தால் அப்பாலத்தை இடித்து அகற்றுவது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து மேம்பாலத்தின் பகுதிகளை இடிப்பதில் ஈடுபட்டது.

  • ஏற்கெனவே இரண்டு வளைவுகள் இடிக்கப்பட்டுவிட்டன. இடிப்பு வேலைகளின் போது இடிபாடுகள் கீழே தண்டவாளத்தின் மீது விழுந்திருக்கின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து தடைபட்டது. தண்டவாளத்தின் மீது விழுந்த இடிபாடுகள் அகற்றப்பட்டவுடனேயே ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் மீதிப்பகுதியும் மூன்றாவது வளைவும் இடிக்கப்படாத நிலையில் ரயில் போக்குவரத்தை மீண்டும் அனுமதித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. முழுவதுமாக இடிக்கப்படாத நிலையில் மேம்பாலத்துக்கு அடியில் ரயில் சென்ற சமயம் பார்த்து பாலம் இடிந்ததற்கு காரணம் இருக்க வேண்டும். ஏற்கெனவே ஆட்டம் கண்டிருந்த பாலம் ரயில் வந்த அதிர்ச்சியால் முற்றிலும் இடிந்து விழுந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
விபத்துக்கு ரயில்வேதான் காரணம் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். வழக்கம்போல சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்துத் தவிர்ப்பு விஷயத்தில் ரயில்வே இலாகா போதுமான அக்கறை செலுத்தவில்லை என்பதையே இந்த விபத்து காட்டுகிறது.

கடந்த 30 அல்லது 40 ஆண்டுகளாகவே ரயில்வே விஷயத்தில் விரும்பத் தகாத போக்கு ஒன்று காணப்படுகிறது. அதாவது வட்டார மக்களின் நிர்பந்தம் காரணமாக அல்லது வாக்குகளைத் திரட்டும் ஆர்வம் காரணமாக புதிதுபுதிதாகத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் காட்டப்படுகின்ற அதே அளவு முனைப்பு பராமரிப்பு விஷயத்தில் அல்லது விபத்துத் தவிர்ப்பு விஷயத்தில் காட்டப்படுவதில்லை. அண்மையில் தமிழ்நாட்டில் ஆளில்லாத “லெவல் கிராஸிங்’ ஒன்றில் ஷேர் ஆட்டோ மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் பலர் உயிரிழந்தனர்.

நாட்டில் இன்னமும் சுமார் 21 ஆயிரம் ஆளில்லாத லெவல் கிராஸிங்குகள் உள்ளன. சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ரயில் பாலங்களில் 51 ஆயிரம் பாலங்கள் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. அதாவது அவை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. பாகல்பூரில் ரயில்வண்டி மீது இடிந்த விழுந்த மேம்பாலம் 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். ஆளில்லாத லெவல் கிராஸிங்குகளின் பிரச்சினையைத் தீர்க்க அவ்விடங்களில் மேம்பாலங்களைக் கட்டுவதானால் ரூ. 4 லட்சம் கோடி தேவை என ஒரு மதிப்பீடு கூறுகிறது. வயதாகிப்போன 51 ஆயிரம் ரயில் பாலங்களை புதுப்பிப்பதானால் இதே போல சில லட்சம் கோடி ரூபாய் தேவைப்படலாம். இப்போதுள்ள அளவில் ரயில்வே இலாகாவிடம் இதற்குப் போதுமான நிதி வசதி இல்லை. பழைய பாலங்களைப் புதிப்பிப்பதற்குள் கடந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட பாலங்கள் பழையதாகிவிடும் என்ற நிலைதான் உள்ளது. ரயில்வேயின் நிதி வசதியைப் பெருக்குவதிலும் அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் புதுப்புது வழிகளைப் பின்பற்றுவதில் அமைச்சர் லாலுபிரசாத் பரவலான பாராட்டுதலைப் பெற்றுள்ளார். ஆளில்லாத லெவல் கிராஸிங்குகள், பழைய பாலங்கள் ஆகிய இரு பிரச்சினைகளைத் தீர்க்க அவர் தனியார் துறை மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் ஒரு புதுமையான வழியை கண்டுபிடிக்க முற்படவேண்டும்.

Posted in Accidents, Bhagalpur, Bihar, Lalu prasad Yadav, Maintenance, Railways, Train | Leave a Comment »