Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Medha Patkar likens Left and Tata Motors Project with Bush and Iraq

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

சமூக சேவகி மேதா பட்கர் கைது

கோல்கத்தா, டிச. 3: மேற்குவங்க மாநிலம், சிங்குரில் டாடா கார் நிறுவனத்துக்காக நிலம் கையகப்படுத்தும் இடத்தைப் பார்வையிட சனிக்கிழமை சென்ற சமூக சேவகி மேதா பட்கர் கைது செய்யப்பட்டார்.

சிங்குரில் கார் நிறுவனத்துக்காக 1000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், நிலங்களை அரசு கட்டாயப்படுத்தி கையகப்படுத்துவதாகவும், அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை போலீஸôர் துன்புறுத்துவதாகவும் தகவல்கள் வந்தன.

இதனால், நிலைமையை ஆராய்வதற்காக மேதா பட்கர், மனித உரிமைக்காக போராடும் தீபங்கர் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் சிங்குருக்கு சென்றுகொண்டிருந்தனர். காசர்பேரி அருகே சென்றபோது அவர்களை போலீஸôர் தடுத்துநிறுத்தினர்.

இதையும் மீறி செல்ல முயன்ற அவர்களை கைதுசெய்தனர்.

———————————————————————————————-

டாடா கார் ஆலைக்கு எதிர்ப்பு: கிராமத்தினர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

சிங்குர் (மேற்குவங்கம்), டிச. 3: டாடா நிறுவனத்தின் சிறிய கார் தயாரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மீது போலீஸôர் ரப்பர் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் காயமடைந்தனர்.

மேற்குவங்க மாநிலம் சிங்குர் பகுதியில் ஜாய்மொல்லா கிராமத்தில் டாடா சிறிய கார் தயாரிப்பு ஆலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் ஆலையைத் தொடங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி திரிணமூல் காங்கிரஸ் தலைமையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சனிக்கிழமை முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் சிலர் போலீஸôர் மீது கற்களை வீசினர். அவர்களைக் கலைக்க போலீஸôர் தடியடி நடத்தினர். இதில் 5 பேர் காயமடைந்தனர். இதனால் பதற்றம் அதிகமாகி மேலும் பலர் அங்கு வரத்தொடங்கினர். இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸôர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர், ரப்பர் குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியால் சுட்டனர்.

போலீஸôர் தங்களின் வீடுகளுக்குள் புகுந்து அடித்ததாகவும், வைக்கோல் போருக்கு தீ வைத்ததாகவும் கிராமத்தினர் சிலர் கூறினர். டிஐஜி தலைமையில் பெரும் போலீஸ் படை அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.

———————————————————————————————-

மேற்குவங்க பேரவையில் திரிணமூல் வன்முறை: ‘ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ – சோம்நாத் சட்டர்ஜி

கோல்கத்தா, டிச. 3: மேற்கு வங்க சட்டப்பேரவைக்குள் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரங்கேற்றிய வன்முறைகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும் என மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் டாடா கார் தொழிற்சாலை அமைக்கிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் தயாரித்து விற்பனை செய்ய டாடா முடிவெடுத்துள்ளது. இந்தத் தொழிற்சாலைக்கு மேற்கு வங்க மாநில அரசு நிலம் கையகப்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு விளைநிலத்தை கையகப்படுத்தக் கூடாது என திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தவிர்க்க முடியாமல் சிறிதளவு விளைநிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது என மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளது. பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்தத் திட்டத்தை மக்கள் ஆதரிப்பதாகவும் விவசாயிகளை தூண்டிவிட்டு குளிர்காய திரிணமூல் காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் மாநில அரசு கூறியது.

இந்நிலையில் வியாழக்கிழமை பேரவைக்குள் அத்துமீறி மம்தா நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவரது கட்சி உறுப்பினர்கள் பயங்கர வன்முறையை அரங்கேற்றினர். மைக்குகளை பிடுங்கி தாக்கினர். நாற்காலிகள் பெஞ்ச்சுகளை உடைத்து நொறுக்கினர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலை நேரில் பார்வையிட வரும்படி மக்களவைத் தலைவருக்கு மேற்கு வங்கப் பேரவைத் தலைவர் ஹாசிம் அப்துல் ஹலீம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சனிக்கிழமை பேரவையை சோம்நாத் சட்டர்ஜி பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:

பேரவைக்குள் நடந்துள்ள தாக்குதல் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். காட்டுமிராண்டித்தனமாக செயல்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றுவது அனுமதிக்கக் கூடியதுதான்.

ஆனால் சம்பந்தப்பட்ட பேரவைகளின் தலைவர்கள்தான் இதுகுறித்து முடிவு செய்யவேண்டும். பேரவைத் தலைவர்களின் அமைப்பில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுப்போம்.

மேற்கு வங்க பேரவைக்கு பெருமைமிகு வரலாறும் பாரம்பரியமும் உண்டு. பேரவை என்பது மக்களுக்கு சொந்தமானது. அரசுக்கு சொந்தமானதல்ல என்பதை தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசுக்கு எதிராக குறைகள் இருக்கலாம். ஆனால் பேரவைமீது தாக்குதல் நடத்தி அதை நியாயப்படுத்த முடியுமா? பேரவையை பாதுகாக்க முடியாவிட்டால் மேற்கு வங்க ஜனநாயகத்தின்மீது கறைபடிந்து விடாதா?

பேரவை நடத்தை விதிகளை கடைப்பிடிக்காத உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் நம்பிக்கையை அவமதிக்கிறார்கள். உறுப்பினர்களின் இத்தகைய நடவடிக்கைகள்தான் சாதாரண கிரிக்கெட் பயிற்சியாளர்கூட மக்கள் பிரதிநிதிகளை நோக்கி குறைகூறும் நிலையை உருவாக்குகிறது என்றார் சோம்நாத்.

Medha Patkar Interview in Kalki (March first week issue)

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க அண்மையில் கன்னியாகுமரிக்கு வந்திருந்த சமூகப் போராளி மேதாபட்கர். நமது கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்தார்…

நாடு முழுவதும் ஏற்கெனவே எட்டு அணு உலைகள் உள்ள
நிலையில் கூடங்குளத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

‘‘இந்தியாவில் எங்கெல்லாம் அணு உலைகள் இயங்குகின்றனவோ, அங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கூடங்குளத்தை மட்டுமல்ல, அனைத்து அணு உலை நிலையங்களையும் தடைசெய்ய வேண்டும் என்பதே எங்கள் போராட்டத்தின் நோக்கம். அதன் தொடர்ச்சியாக, வரும் மார்ச் 19ஆம் தேதி புதுதில்லி ஜந்தர் மந்திரில் அணு உலை எதிர்ப்பு நடவடிக்கை ஒரு தொடர் போராட்டமாக நடக்க உள்ளது. அதற்கு முன்பான அடையாள எதிர்ப்புதான் கூடங்குளத்தில் நடைபெறுகிறது. அணு ஆயுதங்களும், அணுசக்தியும் நாட்டுக்குப் பெரும் ஆபத்து. ஜார்க்கண்ட் மாநிலம் சடுகுடாவில் யுரேனியம் எடுப்பதால் அங்குள்ள ஆதிவாசி மக்கள் புற்றுநோய், வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் அணு ஆயுத ஒப்பந்தத்தைப் புறக்கணித்து வரும் நிலையில்
அமெரிக்காவுடன் நாம் கையெழுத்துப் போட்டுள்ளது தவறு. அதைத் தவிர்த்து, ‘அணு உலை’ என நினைவுச் சின்னமாக்குவதற்கு ஆவன செய்யலாமே!’’

சிங்கூர் பிரச்னையில் உங்கள் போராட்டமும், அரசின் அணுகுமுறையும் எதிரெதிர் திசைகளில் உள்ளனவே?

‘‘மேற்கு வங்காளத்தின் தொழில் துறை அமைச்சர் நிரூபன்சென்கூட எங்கள் தரப்பு நியாயத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் என்ன செய்வது? அதை அமல்படுத்தும் அதிகாரம் அவரிடம் இல்லையே. காரணம், அரசுக்குப் பெரும் பணக்காரர்களின், ஒப்பந்தக்காரர்களின் பணம் தேர்தல் நேரத்தில் தேவைப்படுகிறதே!

சிங்கூர் பிரச்னையின்போது மேற்கு வங்கக் காவல்துறை என்னை ஒரு சமூக விரோதியைப் போல் நடத்தியது. அன்றைய ஜெயலலிதாவின் காவல்துறையையும், நரேந்திர மோடியின் காவல்துறையையும் விட புத்ததேவின் காவல்துறை நடவடிக்கை மோசமானது. ஒரே வாரத்தில் என்னை மூன்று முறை கைது செய்தார்கள். கொல்கத்தாவுக்கு உள்ளே வரக்கூடாது என்றார்கள். கொல் கத்தாவுக்கு வெளியே என் நண்பர் இல்லத்தில் இருந்தேன். அங்கேயும் வந்து கைது செய்தார்கள். நான் நீதிமன்றத்தை நாடினேன். என்னைக் கைது செய்தது தவறு என்றது நீதிமன்றம். மேற்கு வங்காளத்தில் நான் எங்கும் சுதந்திரமாகச் செல்லலாம் என்றது.

சிங்கூரில் தினம்தோறும் மோதல்கள் ஏற்படுகின்றன. நிலத்தை
விற்றவர்கள், நிலத்தை விற்காதவர்கள் எனப் பிளவுபட்டுக்
கிடக்கிறார்கள். புத்த தேவ் பட்டாச்சாரியாவை அவர் கட்சியினரே சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். அவர்களே போராட்டத்தில் ஈடுபட்டது, தொழிற்சங் கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது,
மாநிலத்தில் ஐ.டி. துறை உட்பட பல்வேறு துறைகளை ஸ்தம்பிக்கச் செய்தது எல்லாம் எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றிதான்.’’

இன்றைக்கு, பெரும் நகரம் முதல் சிற்றூர் வரை விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்படுகின்றனவே…

‘‘இது ஒரு சமூகக் கொடுமை. எதிர்கால விளைவு பற்றித் தெரியாமல் நடக்கும் அக்கிரமம். நம்முடைய விவசாய விளைநிலங்கள் அரசின், அதிகாரவர்க்கத்தின், ஒப்பந்தக்காரர்களின் வேட்டைக் காடுகளாக மாறி வருகின்றன. ஒரு விவசாயியின் விவசாயத்தில் முதலீடு அதிகம். ஆனால், விளைபொருட்களுக்கு அதற்கான விலை இல்லை. கொள்ளை வியாபாரிகள் விவசாயிகளின் வறுமைச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அவர்களுடைய நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கிவிடுகின்றனர். விவசாயியின் ஏழ்மை நிலையைப் போக்க வேண்டிய அரசு, அதிகாரத் தரகர்களுக்கு ஆதரவாகக் செயல்படுகிறது.’’

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: