Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 24th, 2006

CS Kuppuraj – Mullai Periyar imbroglio :: Solutions

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2006

முல்லை பெரியாறு: பிரச்சினைக்குத் தீர்வு

சி.எஸ். குப்புராஜ்

பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் கூட கேரள அரசு அதனை ஏற்க மறுத்துவிட்டது. கேரள அரசு மறுபடியும் உச்ச நீதிமன்றத்தினை அணுகியபோது, பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டது.

இதற்கிடையில் கேரள முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், சகல கட்சி உறுப்பினர்களும் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து ஒரு மனு அளித்துள்ளார்கள். அதில் இப்போதிருக்கும் அணையில் 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தினை உயர்த்தினால் கேரளத்திற்கு ஏற்படக்கூடிய தீமைகளை எல்லாம் மிகைப்படுத்திக் கூறிய பின் அத் தீமைகளைத் தவிர்ப்பதற்குச் சில வழிமுறைகளைக் கூறி இருக்கிறார்கள்.

அவற்றில் ஒன்று, தமிழ்நாடு இந்தப் பழைய காலத்து அணைக்குப் பதிலாக ஒரு புதிய அணை கட்டிக் கொள்ளட்டும். அதற்கு நாங்கள் 1979-80 ஆம் ஆண்டுகளில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போதே சம்மதம் தெரிவித்துள்ளோம். தமிழ்நாடு ஒன்றுமே செய்யவில்லை. இப்போதாவது அதனை உடனே செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அம் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தமிழ்நாடு ஏற்றுக்கொண்டால் இப்போதிருக்கும் அணையினை ஒட்டினாற்போல அதன் கீழ்ப்புறத்தில் தற்காலத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய அணை கட்டிக் கொள்ளலாம். நில அதிர்வுகள் ஏற்படுவதாகக் கூறி பயமுறுத்துகிறார்களே, அவற்றையும் தாங்கும்படியாக அந்தப் புது அணையினை வடிவமைத்துக் கொள்ளலாம். அவ்வாறு புதிய அணை கட்டிவிட்டால் அதில் 152 அடி வரை பயமின்றி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம். இப்போது இருக்கும் அணை நீரில் மூழ்கிப் போகும்படி விட்டு விடலாம்.

இந்தப் புதிய அணையினை வடிவமைக்கவும், கட்டி முடிக்கவும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஆகலாம். கேரள அரசு இடைஞ்சல் ஏதும் செய்யாமல் ஒத்துழைக்குமானால் இது சாத்தியமாகும். இதற்குப் பல கோடி ரூபாய்கள் செலவாகும். இந்தச் செலவினை ஈடுகட்ட, சில புதிய வசதிகளைத் தமிழ்நாடு பெற வேண்டும்.

இரண்டாவது சுரங்கம் (Tunnel): இப்போது இருக்கும் டன்னல், அதிகப்படியாக வினாடிக்கு 1800 கன அடிதான் செலுத்தக் கூடியதாக இருக்கிறது. இதற்கு ஏற்ப நீர் மின் நிலையத்தில் 35 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நான்கு ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் வினாடிக்கு 400 கன அடி வீதம் மொத்தம் 1600 கன அடி பயன்படுத்தக் கூடியனவாக அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரினைக் கணக்கெடுத்துப் பார்த்தால் சராசரியாக விநாடிக்கு 5000 முதல் 6000 கன அடி வரை தண்ணீர் வருகிறது. எனவே இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளதைப் போன்ற நெருக்கடிகளும், சங்கடங்களும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் மற்றுமொரு டன்னல் தேவைப்படுகிறது.

1955-ம் ஆண்டு பெரியாறு மின் நிலையம் அமைப்பதற்கு ஆய்வுகள் மேற்கொண்ட போது இரண்டாவது டன்னல் அமைப்பதற்கான கூறுகள் ஆராயப்பட்டன. ஆனால் இருக்கும் டன்னலையே மேம்பாடுகள் (Improvement) செய்து அதன் திறனை வினாடிக்கு 1400 கன அடியிலிருந்து 1800 கன அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, இரண்டாவது டன்னல் யோசனை கைவிடப்பட்டது. இப்போது அதற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது டன்னல் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் செலுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படலாம். இப்போதிருக்கும் டன்னலில் அடிமட்டம் + 104 அடியாக உள்ளது. இதனால் அணையில் உள்ள நீரின் பெரும்பகுதி பயனற்றதாக (Dead Storage) போய் விடுகிறது. மொத்த கொள்ளளவாகிய 15.54 டி .எம்.சி.யில் 5.04 டி .எம்.சி. வீணாகிறது. 10.5 டி .எம்.சி. தான் பயன்படுகிறது. எனவே இரண்டாவது டன்னலின் அடிப்பாகத்தினை +80 அடியாக அமைத்துக் கொள்ளலாம். வீணாகப் போகும் நீரில் ஒரு பகுதியைப் பயன்படுத்தலாம்.

இரண்டாவது மின் நிலையம்: இரண்டாவது டன்னலின் மூலம் கிடைக்கும் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரினைப் பயன்படுத்துவதற்கு இரண்டாவது மின் நிலையம் அமைக்கப்படுதல் வேண்டும். அதில் 60 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து ஜெனரேட்டர்கள் அமைக்கப்படலாம். 300 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.

இரண்டாவது நீர்த்தேக்கம்: இப்போதுள்ள வைகை நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 6.8 டி.எம்.சி.தான் உள்ளது. வடமேற்குப் பருவக்காற்று மூலம் மழை வந்து வைகை அணை நிரம்பும்போதுதான் பெரியாறு அணையின் நீரினையும் பெற வேண்டியுள்ளது. கூடுதலாகத் தண்ணீர் வரும்போது இந்தக் கொள்ளளவு போதாது. எனவே புதியதோர் நீர்த்தேக்கம் 8 டி.எம்.சி. கொள்ளளவுடன் அமைக்கப்படுதல் வேண்டும். வைகை அணையின் மேற்புறத்தில் இதற்கான இடத்தினைத் தேர்வு செய்திடல் வேண்டும்.

இவ்வாறு இரண்டாவது டன்னல், இரண்டாவது நீர் மின் நிலையம், இரண்டாவது நீர்த்தேக்கம் ஆகியவற்றினை அமைத்தால் மட்டுமே, பெரியாறு அணையினை ஒட்டினாற்போல் புதிய அணை கட்டுவதற்கான செலவினை நியாயப்படுத்த முடியும். எனவே இந்த நான்கு அமைப்புகளையும் ஒரு தொகுப்பாக நிறைவேற்ற ஒப்புக்கொண்டால், இந்தச் சிக்கலான பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியும்.

Posted in Dam, Interlink, Kerala, Mullai Periyar, Periyaar, Periyar, Periyar River, River, Tamil Nadu | 1 Comment »

Bt paddy trials raise a din in Tamil Nadu

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2006

பி.டி.படாமல் போகுமா?

கோவை அருகே ஆலாந்துறையில் தனியார் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பி.டி. நெற்பயிர்களை சில விவசாய அமைப்பினர் அழித்தனர்.

நவம்பர் 10-ல் சம்பவம் நடந்தது. பி.டி.நெற்பயிரை சாகுபடி செய்திருந்த நிறுவனம் இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்ததாகவோ, விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. இது குறித்து தமிழக அரசின் வேளாண்மைத் துறையும் வெளிப்படையான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. இந்த அமைதியில், நியாயத்தின் நிழல் தெரியவில்லை.

இதேபோன்ற சம்பவம் அக்.28-ம் தேதி ஹரியாணாவில் நடைபெற்றது. மரபீனி மாற்று பயிர்களுக்கு எதிரான அமைப்பினர் இந்த பி.டி.நெற்பயிரை அழித்தனர். இந்தியாவில் 9 இடங்களில் பி.டி. நெல் உற்பத்திக்கான சோதனைக் களங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவில் மரபீனி மாற்று பருத்தி உற்பத்திக்கு மட்டுமே இதுவரை அரசின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பருத்தி (மனிதரின்) உணவுப் பொருள் பட்டியலில் இல்லை. இருப்பினும், பருத்திக்கொட்டைப் புண்ணாக்கை மாடுகளும் பசுவின் பாலை மனிதரும் சாப்பிடுவதை அரசு கணக்கில் கொள்ளவில்லை.

தற்போது மரபீனி மாற்று நெற்பயிரை அறிமுகம் செய்ய, சோதனைக்களம் அமைத்து விதை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தச் சோதனைக்களத்தில் விளையும் நெல்மணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, பின்னர் அதன் புள்ளிவிவரங்களை அரசுக்குத் தெரிவித்து, அனுமதி பெறும் முயற்சி “முறைப்படி’ நடக்கும்.

இந்தியாவில் நெல் உற்பத்தியில் எந்தப் பாதிப்பும் இல்லை. எந்த மாநிலத்திலும் அரிசித் தட்டுப்பாடு இல்லை. வெளிச்சந்தையில் கிடைப்பதுடன், கடத்தலுக்கும் நிறைய அரிசி மூட்டைகள் கிடைக்கின்றன. அப்படியிருக்க எதற்காக இந்த பி.டி.நெற்பயிரைத் திணிக்கும் முயற்சி?

பி.டி. நெல் ரகம் என்பது நெற்பயிரைத் தாக்கக்கூடிய முக்கிய புழுக்கள், நோய்களை எதிர்க்கும் மரபீனிகளைக் கொண்டுள்ளதால் பூச்சிகொல்லி செலவுகள் மிச்சமாகும் என்பது மட்டுமே மேலோட்டமாகச் சொல்லப்படும் தகவல். ஆனால் இதனை உணவாகச் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று யாராலும் உறுதி கூற முடியாது. சுற்றுச்சூழல், உடல்நலக் கேடுகள் என்பதைவிட இதில் வேறுவகையான அரசியலும் கலந்திருப்பதை உணர்ந்தால் இந்திய அரசு இதில் மெத்தனம் காட்டாது.

உயர்ரக அரிசி உள்பட பல்வேறு வகை அரிசிகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கும் அன்னியச் செலாவணி ஆண்டுக்கு ரூ.7000 கோடி. நாம் ஏற்றுமதி செய்யும் அரிசியை வாங்கும் நாடுகள் பூச்சிகொல்லி மற்றும் மரபீனி மாற்று பயிர்களுக்கு எதிரானவை. இந்திய மண்ணில் பி.டி. நெல் ரகங்களை மலிவு விலையில் அறிமுகம் செய்து உற்பத்தி நடக்கும் நேரத்தில் “இந்தியாவில் பல லட்சம் எக்டேரில் பி.டி. நெல் சாகுபடி’ என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் செய்திகள் (உள்நோக்கத்துடன்) வெளியாகும். இந்திய அரிசி அனைத்தையும் அந்நாட்டினர் சந்தேகத்துடன் வாங்கத் தயங்குவர். இந்திய நெல்லுக்கு சந்தை வாய்ப்பு வீழ்ச்சியடையும். இது ஒருவகையில் வர்த்தகப் பயங்கரவாதம்.

பி.டி. ரகப் பயிர்களைச் சோதனை அடிப்படையில் பயிரிடும்போது, சோதனைக்களம் அமைந்துள்ள பஞ்சாயத்துக்கு இது பற்றிய தகவலைத் தெரிவிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட விதி வலியுறுத்துகிறது. ஆலாந்துறையில் நிலத்தை குத்தகைக்கு விட்ட விவசாயிக்கு பி.டி.நெல் பற்றி தெரிந்திருக்கவில்லை. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது.

================================================

மீண்டும் பிரச்சினை

மரபீனி மாற்றப்பட்ட விதைகள் மீண்டும் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளன. மரபீனி மாற்றப்பட்ட விதைகளின் நச்சுத்தன்மை குறித்த புள்ளிவிவரங்களைத் தருவதற்கு மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை மறுத்துள்ளது.

கிரீன்பீஸ் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த திவ்யா ரகுநாதன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு தகவல்களைக் கேட்டு இத்துறையிடம் சென்ற ஆண்டு மனு கொடுத்தார். முதல் கோரிக்கை – மரபீனி மாற்றப்பட்ட நெல், கத்தரிக்காய், கடுகு ஆகியன பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ள இடங்கள் யாவை? இதற்கான பட்டியலை உயிரி தொழில்நுட்பத் துறை தெரிவித்தது.

இரண்டாவது கோரிக்கை – இந்த மரபீனி மாற்றப்பட்ட நெல், கத்தரிக்காய், கடுகு ஆகியவற்றில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் ஒவ்வாமை குறித்த தகவல்கள். இதை உயிரி தொழில்நுட்பத் துறை தர மறுத்துவிட்டது. இதற்காக அவர் உயர்நிலைக் குழுவுக்கு முறையீடு செய்துள்ளார். ஒருவேளை அவருக்கு அப் புள்ளிவிவரங்கள் கிடைத்தாலும் கிடைக்கும்.

இருப்பினும், உயிரி தொழில்நுட்பத் துறை சொல்லும் காரணம் பொதுமக்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்பதுதான் கவலை அளிப்பதாக உள்ளது. “தகவல் அறியும் சட்டத்தின் பகுதி 8.1.டி-யின்படி, வர்த்தக நிறுவனங்கள், தொழில் அல்லது அறிவுக் காப்புரிமை ரகசியங்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதன் மூலம் அந்த நிறுவனத்தின் தொழில்போட்டியில் பின்னடைவு ஏற்படுமெனில் அத்தகவல்களை வெளியிட வேண்டியதில்லை’ என்பது ஏற்புடையதாக இல்லை.

மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் மூலமாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிட்டால் நிச்சயமாக எந்த நோயும் பின்விளைவும் ஏற்படாது என்று எந்த ஆய்வுக் கூடமும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இன்னும் சில ஆண்டுகளில் மரபீனி மாற்றப்பட்ட அரிசியும் காய்கறிகளும் இந்தியச் சந்தையை நிறைக்கப் போகின்றன. இந்த உணவுப் பொருள்கள் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களில் விளைந்தவை என்ற அறிவிப்புடன் விற்கப்படும் என்பதும் நிச்சயமில்லை. இதை உண்ணும் இந்தியர்கள், அதன் புள்ளிவிவரங்களை அறிந்துகொள்ளாமலேயே சாப்பிடலாம் என்பது தற்கொலைக்குச் சமமானது.

மரபீனி மாற்றப்பட்ட நெல், கத்தரிக்காய் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்படும் இடங்களின் பட்டியலைத் தெரிவித்தவுடன் இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் அந்தப் பகுதிகளுக்குச் சென்று அப்பயிர்களை நாசம் செய்த சம்பவம் உயிரி-தொழில்நுட்பத் துறைக்கு சில சங்கடங்களைத் தந்திருக்கக் கூடும் என்பது உண்மையே. அதற்காக, ஒரு நிறுவனத்தின் தொழில்போட்டி பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி கோடிக்கணக்கான இந்தியர்களின் உயிரையும் உடல்நலத்தையும் புறக்கணிப்பது சரியான முடிவாக இருக்குமா?

பாரம்பரிய வேளாண்மையில், குறிப்பிட்ட பூச்சியை, நோயை எதிர்த்து வளரும் பயிர்களின் விதைகளைத் தனியே பிரித்து, அவற்றை மீண்டும் மீண்டும் பயிரிட்டு, அதிலிருந்து விதை உற்பத்தி செய்வார்கள். ஆனால், மரபீனி விதைகளில் வேறு ஒரு மரபீனியை உட்செலுத்துவதன் மூலம் ஒரே சாகுபடியில் அதன் போக்கை மாற்றுகிறார்கள். இதனால்தான் அதன் பின்விளைவு எந்தத் திசையில் செல்லும் என்பதை உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. ஆகவே இதற்கு எதிர்ப்பு உள்ளது.

பாரம்பரிய வேளாண்மையில் நோய் தாங்கும் பயிர் விதைகளை உற்பத்தி செய்ய குறைந்தது 5 ஆண்டுகளாகும். மரபீனி விதைகளை ஒரே சாகுபடியில் உற்பத்தி செய்துவிடலாம். ஆனால், அதன் விளைபொருளைச் சாப்பிடுவோருக்கு ஏற்படும் நோய்க்கான காரணங்களை அறிந்துகொள்ள 5 ஆண்டுகள் ஆகும். சிறிய வேறுபாடுதான்! ஆனால் இதுதான் சிக்கலாக இருக்கிறது.

Posted in Agriculture, Andhra Pradesh, Bt paddy, Chhattisgarh, Climate, Consumption, Environment, Exports, Farming, Food, Genetic, Genetic Manipulation, genetically-engineered, Government, Greenpeace, K Chellamuthu, Karnataka, maharashtra, Maharashtra Hybrid Seed Company, Mahyco, Monsanto, P Nammalwar, Paddy, rice, S Martin, Science, scientist, Surjit Choudhary, Tamil Nadu, Tamil Nadu Farmers’ Association, Uttar Pradesh, V Duraimanickam, West Bengal | 1 Comment »

Mullai Periyar Dam Controversy – History & Backgrounder

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2006

காவிரி போல விசுவரூபம் எடுக்கும் பெரியாறு அணைப் பிரச்சினை

பா. ஜெகதீசன்

சென்னை, நவ. 24: தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே கடந்த 27 ஆண்டுகளாக இருந்து வரும் “முல்லைப் பெரியாறு அணைப்’ பிரச்சினை தற்போது பூதாகரமாக விசுவரூபம் எடுத்துள்ளது.

“காவிரி பிரச்சினையில் கர்நாடகம் கையாளுவதைப் போன்ற அணுகுமுறையை கேரளமும் பின்பற்றத் தொடங்கி உள்ளதோ? இதுவும் தீராத பிரச்சினையாக உருமாறி விடுமோ?’ என்கிற அச்சம் தமிழகத்தின் தென் மாவட்ட விவசாயிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் எழுந்துள்ளது.

1979-ல் இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக சில அச்சங்களை கேரள அரசு எழுப்பியது. இதையடுத்து, அணையை மத்திய நீர்வளக் குழுமம் ஆய்வு செய்து, அணையைப் பலப்படுத்த 3 வகையான பணிகளைத் தமிழகத்துக்குப் பரிந்துரைத்தது.

தாற்காலிக ஏற்பாடு: அதன்பேரில் அணையின் நீர்மட்டம் அதன் முழு அளவான 152 அடியில் இருந்து தாற்காலிகமாக 136 அடியாகக் குறைக்கப்பட்டது. தக்க பாதுகாப்பு -பலப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்து முடித்த பிறகு, நீர்மட்டத்தை 145 அடிக்கு உயர்த்தலாம் எனவும் குழுமம் பரிந்துரைத்தது.

பேபி டேம் எனப்படும் சிற்றணையைப் பலப்படுத்துதல், கைப்பிடிச் சுவற்றை 2 அடி உயர்த்துவது ஆகிய பணிகளைக் கேரள அரசு எதிர்த்ததால், முடிக்க இயலவில்லை.

வழக்குகள் வந்தன: இதர பலப்படுத்தும் பணிகள் அனைத்தும் முடிவு அடைந்தாலும், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலேயே வைத்திருக்க வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வருகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி கேரளத்தைச் சேர்ந்த சிலரும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் (கேரளம் மற்றும் சென்னை) உயர் நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். பின்னர் இம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

முதல்வர்கள் பேச்சு வார்த்தை: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்பேரில், 19.5.2000-ல் தமிழக -கேரள முதல்வர்களின் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. அக்கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயவும், தக்க பரிந்துரைகளை அளிக்கவும், வல்லுநர் குழுவை மத்திய அரசு நியமித்தது.

அக்குழு 2001 மார்ச்சில் அரசுக்கு அறிக்கை அளித்தது. “சிற்றணையைப் பலப்படுத்தும் பணி முடிந்த பிறகு, பெரியாறு அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி உயரத்துக்கு நீர் மட்டத்தை உயர்த்துவது பற்றி ஆய்வு செய்யலாம். அதற்கு முதற்கட்டமாக நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என அக்குழு பரிந்துரை செய்தது.

இப்பரிந்துரையை ஏற்பதாக மத்திய அரசிடம் அப்போதே தமிழகம் தெரிவித்தது.

இந்நிலையில், அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள அனுமதித்து 27.2.2006-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இத்தீர்ப்பு உதவும் என பாசனத் துறை வல்லுநர்களும், விவசாயிகளும் நம்பினர்.

முரண்பட்ட கருத்து: ஆனால், அந்நம்பிக்கை பொய்த்துப் போகும் வகையில் கேரளத்தின் செயல்கள் தொடர்ந்தன.

“பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்பாகவே கேரள முதல்வர் அச்சுதானந்தன் முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, பேச்சு வார்த்தை நடத்த தில்லி செல்கிறோம்’ என முதல்வர் கருணாநிதி தெரிவித்து, தமிழகத்தின் நிலையை வெளிப்படுத்தி உள்ளார்.

அச்சுதானந்தனும், அவரது அமைச்சரவை சகாக்களும் அணையைப் பார்வையிட்டு, நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பேச்சுக்கே இடம் இல்லை என அறிவித்தனர்.

அணையைப் பார்வையிட தமிழகப் பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் சென்றபோது அவருக்கு எதிராக கேரளத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்களுக்கு கேரள காவல் துறை பாதுகாப்பு அளித்தது.

காலம் தாழ்த்தும் நடவடிக்கை: புதிய அணை கட்டுவதே பிரச்சினைக்குத் தீர்வு ஆகும் என அச்சுதானந்தன் கூறி உள்ளார். இது பிரச்சினையை மேலும் காலம் தாழ்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்று தமிழக விவசாயிகளும், பாசனத் துறை வல்லுநர்களும் கருதுகின்றனர்.

ஜெ., காங். கருத்து: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தான் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

“மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கேரள அரசு செயல்படுகிறது’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரச்சினைக்குத் தீர்வு காண தில்லியில் அடுத்த சில நாள்களில் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில், இரு மாநிலங்களிலும் எழுந்துள்ள சூழ்நிலைகள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடுமோ என்கிற அச்சம் இந்த அணையின் பாசன நீரை நம்பி உள்ள விவசாயிகள், குடிநீரை எதிர்நோக்கி உள்ள மக்கள் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளது.

Posted in Dam, Interlinking, Irrigation, Kerala, Mullai Periyar, Periyaar, Periyar, Periyar River, River water, Rivers, States, Tamil Nadu, Water Issues | 8 Comments »

Producer Satyanarayana passes away – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2006

அமர்க்களம், காதல் மன்னன் படதயாரிப்பாளர் சத்தியநாராயணா மரணம்

சென்னை, நவ. 24-

  • காதல் மன்னன்,
  • அமர்க் களம்,
  • அலாவுதீன்,
  • ஸ்ரீ ஆகிய படங்களை தயாரித்தவர் சத்தியநாராயணா. அவர் இன்று காலை மாரடைப்பால் மரணம்அடைந்தார். அவருக்கு வயது 58.

தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

  • நடிகர்கள் சிவக்குமார்,
  • சூர்யா,
  • டைரக்டர் சரண் மற்றும் பலர் அஞ்சலிசெலுத்தினார்கள். நாளை காலை கண்ணம்மா பேட்டை மயானத்தில் உடல் தகனம் நடக்கிறது.

Posted in Alauddin, Amarkkalam, Anjali, Kathal Mannan, Satyanarayana, Sharan, Sivakumar, Surya, Tamil Cinema, Tamil Movies | Leave a Comment »