Rainwater damage prevention scheme to get Rs. 410 Crores – M Karunanidhi
Posted by Snapjudge மேல் நவம்பர் 22, 2006
வெள்ளப்பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண ரூ.410 கோடியில் திட்டம்: கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
சென்னை, நவ. 22- பொதுப்பணித்துறையில் உள்ள நீர் வள ஆதாரத் துறை மற்றும் கட்டிட பிரிவுகளில் செயல்படும் திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி சென்னை கோட்டையில் நேற்று ஆய்வு நடத்தினார்.
சிறு பாசன குளங்களை செப்பனிடும் திட்டங்கள் பற்றியும், ஏற்கனவே எடுக்கப்பட்டு முடிக்கப்படாமல் இருந்த நீர் தேக்க திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தால் சமீபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்தினார்.
சென்ற ஆண்டு மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை சரி செய்வதற்கும், இந்த ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்டு இருக்கிற சேதங்களை சரி செய்வதற்கும், இனி வரும் மாதங்களில் ஏற்படக் கூடிய வெள்ளசேதங்களை முன் எச்சரிக்கையாக தடுப்பதற்கு தேவையான பணிகளைச் செய்யவும் ரூ. 25 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
ஏற்கனவே துவக்கப்பட்டு முடிவு பெறாமல் இருந்த 34 நீர் பாசன திட்டங்களில் இப்போது 6 மாதத்தில் முடிந்த திட்டங்களை உடனடியாக திறந்து வைத்து பாசனத்திற்கு தண்ணீர் அளிக்குமாறு உத்தரவிட்டார். மீதமுள்ள திட்டங்களை வரும் நிதி ஆண்டிலேயே விரைந்து முடிக்குமாறு ஆணையிட்டார்.
உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாட்டிலுள்ள பொதுப் பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான 8,326 ஏரிகளை நவீனப் படுத்துவதற்கும் பாசன அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் ரூ 2,500 கோடி செலவில் திட்டங்கள் தயாரித்து செயல்படுத்துவதை விரைவு படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெருநகரத்தில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள சேதங்களை தடுப்பதற்கு முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க ரூ.4 கோடியும், திருச்சி பகுதியில் குடமுருட்டி ஆற்றில் உடைப்பு காரணமாக ஏற்படும் வெள்ள சேதங்களை தடுப்பதற்கு ரூ.5 கோடியும், ஒதுக்கி தந்து இருந்தார். இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்தும் முதல்வர் அவர்கள் ஆய்வு நடத்தினார்.
தமிழகத்தினுடைய நிதிநிலை அறிக்கையில் நீர் வள ஆதார துறைக்கு 524 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிதி ஒதுக்கீடு மூலம் நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள். அதே போல் பொதுப் பணித் துறையில் உள்ள கட்டிட பிரிவிற்கு ரூ. 225 கோடி நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பணிகளினுடைய முன்னேற்றம் குறித்தும் முதல் – அமைச்சர் ஆய்வு நடத்தினார். பொதுவாக, தமிழ்நாட்டில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்ற சென்னை பெருநகருக்கு நிரந்தர பரிகாரம் காண 27 திட்டங்கள் பொதுப் பணித் துறை மூலம் ரூ. 410 கோடிமதிப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர பரிகாரம் காண ரூ 230 கோடி, கல்லணை கால்வாய் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதங்களுக்கு நிரந்தர பரிகாரம் காண 220 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் திருச்சி நகரை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்து வெள்ள நீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திருப்பும் ரூபாய் 295 கோடிக்கான திட்டத்தினையும் விரைவாக செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்த திட்டங்களை விரைவில் நபார்டு மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்