Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 20th, 2006

‘Tax free status makes us re-release old Tamil Movies and construct new Theaters’

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆர்-சிவாஜி படங்கள் மீண்டும் `ரிலீஸ்’: தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன் தகவல்

தமிழ் திரையுலகம் வளர்ச்சி நோக்கி செல்கிறது. வரிச்சலுகைகளால் புதுப்படங்கள் நிறைய தயாராகின்றன.

தமிழில் பெயர் சூட்டப் பட்டுள்ள பழைய படங்களுக்கும் அரசு வரி விலக்கு அளித்திருப்பதால் இனிமேல் பழைய படங்களை வைத்தி ருப்பவர்களும் பயன் பெறு வார்கள்.

பராசக்தி, பாசமலர், பாவ மன்னிப்பு என்பன போன்ற பல படங்கள் வரி விலக்கு பெறும். 3 ஆயிரம் படங்களுக்கு மேல் இந்த பயன் கிடைக்கும். இதன் மூலம் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் மீண்டும் ரிலீசாகும். ஏற்கனவே இப்படங்களுக்கு 15 சதவீதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டி இருந்ததால் முடங்கிக் கிடந்தன. இனிமேல் அவை வெளியிடப்படும். பழைய டூரிங் தியேட்டர்கள் பல மூடப்பட்டுள்ளன. இனி மேல் அவை திறக்கப்படும் என்று நம்புகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் இன்னும் 3 மாதத்தில் 100 புதிய தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன. சென்னையில் மட்டும் 30 தியேட்டர்கள் திறக் கப்படுகிறது. டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல இடங்களில் புதிய தியேட்டர்கள் கட்டப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப் பட விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கை யில், “பழைய படங்களுக்கு கேளிக்கை வரி ரத்து செய்ததன் மூலம் சிறிய முதலீட்டாளர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களின் வளமான வாழ் வுக்கு முதல்-அமைச்சர் அடித் தளமிட்டுள்ளார்” என்று குறிப் பிட்டுள்ளனர்.

Posted in Chennai, Construction, Entertainment, Madras, MGR, Movie Screens, New Movie Halls, Raama Narayanan, Sivaji, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu, Tax-free, Theatre | Leave a Comment »

Iraa Murugan: Ironing Pants, Kensington, London Idly kadai

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

லண்டன் டைரி: எங்குமேயில்லாத ஒரு டுபாக்கூர் மிஷின்!

இரா. முருகன்

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கிற பிரதேசம் போல் லண்டன் கென்சிங்டன் பகுதி ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் வெறிச்சோடிக் கிடக்கிறது. இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் லட்சுமி மிட்டலின் அரண்மனை போன்ற பங்களாவில் தொடங்கி, தனிக்குடித்தனமாக எலிசபெத் அரசியாரின் மகன் சார்லஸ் இளவரசரும் இப்போதைய மனைவி கமீலா பார்க்கர் அம்மையாரும் வசிக்கிற அரதப் பழசு கென்சிங்டன் அரண்மனை வரை, இங்கிலாந்தின் பெரும் பணக்காரச் சீமான்கள் மாடி மேலே மாடி கட்டி வசதியாகக் குடியிருக்கிற பகுதி இந்தக் கென்சிங்டன். கூப்பிடு தூரத்திலேயே தினசரி முப்பது பவுண்ட் வாடகைக்கு சாமானியர்களுக்கான லாட்ஜ்களும் உண்டு.

அந்த மாதிரிப்பட்ட லாட்ஜில் ஒரு கீகடமான அறையில் ஓட்டை டெலிவிஷன் பெட்டியில் பி.பி.சி. சானலைப் பிடிக்க அரைமணி நேரம் முயற்சி செய்கிறேன். எந்தச் சானலைத் திருப்பினாலும், ரோமானியப் பேரரசு காலத்தில் முள்ளங்கி சாப்பிட்டார்களா என்பதுபோல் எதோ தலைபோகிற விஷயத்தை விவாதித்தபடி டை கட்டிய வயதான கும்பல் ஒன்று கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

டிரவுசர் பிரஸ் யந்திரத்தில் செருகியிருந்த நீல ஜீன்ûஸ எடுக்கிறேன். பிரிட்டீஷ்காரர்களின் தொழில் நுட்பத் திறமையை எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து உருவாக்கப்பட்ட இந்த விநோத மிஷினை உலகில் வேறே எங்கேயுமே பார்த்ததாக ஞாபகம் இல்லை. சுவரில் நீளவாட்டில் ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு மரப் பலகை. இரண்டுக்கும் நடுவில் பேண்டைச் செருகிவிட்டு சுவிட்சைப் போட்டால். கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு பலகைக்கும் நடுவே இடைவெளி குறைந்து, ஸ்லோ மோஷனில் இறுக்கம் அதிகரிக்கும். பத்து நிமிடம் கழித்து சுவிட்சை அணைத்து விட்டு வெளியே எடுத்தால், முன்விரோதமுள்ள சலவைக்காரர் அல்லது மாமனார் அயர்ன் செய்து கொடுத்ததுபோல் கீழிருந்து மேலே முக்கால் பாகம் வரை ஏதோ பெயருக்கு உடுப்பு சீராகி இருக்கும். அதுக்கு மேலே இருக்கும் பகுதி போட்டது போட்ட மாதிரி சுருக்கத்தோடு இருந்தாலும், சட்டை, கோட், பிளேசர் என்று மாட்டி மறைத்துக் கொண்டு வெளியே திரியும்போது மடிப்புக் கலையாத பேண்ட் போல் பாவ்லா காட்டிவிடலாம்.

நீல ஜீன்ஸில் புகுந்து கொள்கிறேன். ஒரு மடிப்பு இருக்க வேண்டிய இடத்தில் நாலு மடிப்பும், காலைச் சுற்றி சதுரமாகச் சுருட்டியும் சந்திரமண்டல சஞ்சாரிகளின் உடை போல் டிரவுசர் பிரஸ் புண்ணியத்தில் நீல ஜீன்ஸ் உருமாறி இருக்கிறது. இந்த மாதிரி ஒரு டுபாக்கூர் மிஷினை உற்பத்தி செய்வது மட்டுமில்லாமல், இங்கிலாந்து முழுவதும் இருக்கப்பட்ட லாட்ஜ்களில் அறைக்கு அறை நிறுவ வைத்துக் கோடீஸ்வரரான ஆசாமியும் இந்தக் கென்சிங்டனில்தான் ஏதோ பங்களாவில் குடியிருப்பான் என்று மனதில் பட்சி சொல்கிறது. அந்த ஆள் மட்டும் கையில் மாட்டினால் டிரவுசர் பிரஸ்ஸில் நடுவிலே நிற்க வைத்து சுவிட்சைத் தட்டிவிட நான் ரெடி.

ஒரு கோப்பை காப்பி வயிற்றில் இறங்க வேண்டும். இரண்டு பக்கத்திலும் மாட மாளிகையும் கூடகோபுரமுமாக ஹாலிவுட் படத்துக்குப் போட்ட நிஜ செட் போல் கென்சிங்டன் அமைதியில் உறைந்து நிற்க, கிராம்வெல் வீதியில் மெல்ல நடக்கிறேன். பத்து அடி நடந்ததும் பிளாட்பாரத்தில் டெலிஃபோன் பூத் திறந்து கிடக்கிறது. பிறந்த குழந்தை “ங்கா’ என்று பேச ஆரம்பித்ததுமே கையில் மொபைல் தொலைபேசியைத் திணிக்கிற இந்தக் காலத்தில் தெருமுனையில் காசுபோட்டுத் தொலைபேசி உபயோகிக்கிறவர்கள் யார்? அதுவும் இங்கிலாந்தில்? என்று யோசித்தபடி கதவைத் திறந்து அந்தச் சிவப்புக் கூண்டுக்குள் நுழைகிறேன். காலி பியர் பாட்டில், மொட்டைத் தலை பாப் பாடகர்களின் நிகழ்ச்சிக்கு அழைக்கும் பிட் நோட்டீசுகள் என்று தரையில் இரைந்து கிடக்கின்றன. தொலைபேசியைச் சுற்றிலும் கண்ணாடிச் சுவரில் பெயர், விலாசம், படம் போட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டியிருக்கின்றன. ஸ்பெயின், பிரான்சு, சீனா, கொலம்பியா, பல்கேரியா, உக்ரைன் என்று எல்லா நாடுகளிலிருந்தும் வந்திருக்கும் பெண்கள் அந்தப் படங்களில் பரிதாபமாகச் சிரிக்கிறார்கள். “திருப்தி இல்லையேல் பணம் வாபஸ்’ என்று ஒரு விளம்பரம் அறிவிக்கிறது. ஒரு மூலையில்”யேசு வருகிறார்‘ என்று அறிவிக்கும் விளம்பரம்.

ரயில் நிலையத்துக்கு எதிரே தாட்டியான நான்கைந்து நடுத்தர வயது குஜராத்தி பெண்மணிகள் டிராக் சூட் அணிந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது கொஞ்சம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். “”பிங்கி பள்ளிக்கூடத்திலே கூடப் படிக்கிற வெள்ளைக்காரப் பையன் தினசரி சாயந்திரமாச்சுன்னா வீட்டுக்கு வந்து கும்மாளம் போட்டுட்டிருக்கான். சாரதாபெஹன் கண்டுக்கறதே இல்லே”. காதில் குண்டலம் அசைந்தாட புறணி பேசியபடி ஓடிவந்த அம்மாள் என்னைப் பார்த்ததும் சட்டென்று நிறுத்திக் கடந்து போகிறாள். பிங்கியின் வெள்ளைக்கார பாய் ஃப்ரண்டின் அம்மா வேறே எங்கேயோ யாரிடமோ இந்த நிமிடத்தில் “”இந்தியாக்காரப் பொண்ணு கூட இந்தப் பொறுப்பில்லாத பயபுள்ளை திரிஞ்சுக்கிட்டிருக்கான்” என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பாள். அல்லது தாமதமாக எழுந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் சாண்ட்விச் தின்றபடி பேசிக்கொண்டிருப்பார்கள்.

கிளஸ்டர் வீதி பழைய புத்தகக் கடை அடைந்து கிடக்கிறது. லண்டனுக்கு வரும்போதெல்லாம் தவறாமல் படியேறுகிற இடம். புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் கிரகாம் கிரீனின் மருமகப்புள்ளை நடத்தும் கடை. கிரகாம் கிரீனும் நம்மூர் ஆங்கில இலக்கியப் பெரிசு ஆர்.கே.நாராயணும் உற்ற நண்பர்கள் என்பது தெரிந்திருக்கலாம். போன தடவை கடைக்குப் போனபோது ஆர்.கே.நாராயணின் “சுவாமியும் சிநேகிதர்களும்’ புத்தகம் அவருடைய சகோதரர் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மணின் கோட்டுச் சித்திரங்களுடன் வந்த பழைய பதிப்பு கிடைத்தால் எடுத்து வைக்கும்படி கடைக்காரரிடம் சொல்லியிருந்தேன். அடைத்த கதவுகளுக்கு உள்ளே அது பத்திரமாக ஞாயிற்றுக்கிழமை உறக்கத்தில் இருக்கக்கூடும்.

கிளஸ்டர் வீதியில் ஒரே ஒரு கடை திறந்திருக்கிறது. காப்பிக்கடை. “”காப்பியோடு இரண்டு க்ராய்சண்ட் பன்னும் இலவசம்” என்று அவசரமாக சாக்குக் கட்டியால் கிறுக்கிய பலகை தெருவைப் பார்த்துத் திரும்பி இருக்கிறது. இந்த ஓட்டல், டீக்கடை வாசல் “சுடச்சுட இட்லி, காப்பி’ ரக போர்ட் விளம்பரம் நம்மிடமிருந்து லண்டன் போனதா அல்லது அங்கே இருந்து மாம்பலம், மந்தவெளி வந்ததா என்று தெரியவில்லை.

ஒரு காப்பிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு நாற்காலியில் உட்கார்ந்தபடி நோட்டம் இடுகிறேன். நேர் முன்னால் அழுக்கு ஓவர்கோட்டும், சர்ச்சில் காலத் தொப்பியும், முகத்தில் நாலுநாள் தாடியுமாக ஒருத்தர் கோப்பையிலிருந்து சத்தமாக உறிஞ்சிக் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார். எனக்கு காப்பியும் தட்டில் பன்னும் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போகிற சர்வர் பெண்ணை நிறுத்தி, “”பன் எனக்கு வரல்லே” என்று முறையிடுகிறார். “”உங்களுக்கு ஏற்கனவே கொடுத்தாச்சு” அந்தப் பெண் கண்டிப்பாகப் பதில் சொல்லிவிட்டு நடக்கிறாள். எனக்கு முன்னால் வைத்த தட்டை அவருக்கு நீட்டுகிறேன். “”நான் பிச்சை கேட்கலே” சொல்லியபடி எழுகிறார். காப்பி குடித்து முடித்து கிளஸ்டர் வீதியில் நடக்கும்போது தானியங்கிக் காசு வழங்கும் யந்திரப் பொந்துக்குப் பக்கத்தில் தற்செயலாகப் பார்க்கிறேன். குளிருக்கு அடக்கமாகப் போர்வையைப் போர்த்தியபடி “”சில்லறை இருந்தாப் போடுங்க” என்று கேட்டபடி அவர் தரையில் குந்தி உட்கார்ந்திருக்கிறார்.

Posted in Bookshops, Coffee shop, England, Era Murugan, Free Croissants, Gloucester Bookstore, Graham Greene, Ira Murukan, Iraa Murugan, Iron Board, London Diary, RK Narayan, Sandwich, Trouser Press | 1 Comment »

Next Generation Leaders – Thanuja Lakshmanan

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

வளர்முகம்: போட்டிதான் முன்னேற்றத்துக்குக் காரணம்!

ரவிக்குமார்

இரும்பு உருக்கும் ஆலைகள், சர்க்கரை ஆலைகள், எஃகு ஆலைகள், உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் என எல்லா இடங்களிலும் இருப்பவை எரி உலைகள். இவற்றில் இருந்து வெப்பம் வெளியேறுவதைத் தடுப்பதற்குப் பயன்படும் சுடு கற்களையும், எரி உலைகளை அமைப்பதற்கு பயன்படும் ரி-ஃபிராக்டரி சிமென்ட்களையும் விற்கும் தொழிலில் ஓர் இளம்பெண் ஈடுபட்டிருக்கிறார். அவர்- தனுஜா லஷ்மணன்.

மக்கள் தொடர்புத் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் இவர், நாக்பூரில் இருக்கும் “ஏஸ் ரி-ஃபிராக்டரி சிமென்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் சென்னை ஸ்டாக்கிஸ்ட். அதுமட்டுமல்ல, இந்திய அளவில் பிரபலமான அந்த நிறுவனத்தின் ஒரே பெண் ஸ்டாக்கிஸ்ட்டும் கூட. அம்பத்தூர் தொழிற்பேட்டையில், இவர் நடத்திவரும் “பாலாஜி அசோசியேட்ஸ்‘ விற்பனையில் சாதனை படைத்ததற்காக “ஏஸ் நிறுவனத்தால்’ கெüரவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் வட இந்தியர்களே அதிகம் ஈடுபட்டிருக்கும் இந்தத் தொழிலில் முன்னேறி வரும் தனுஜா, நம்மிடம் பேசியதிலிருந்து…

“”சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில் நான் எம்.ஏ. பப்ளிக் ரிலேஷன் படிக்கும்போது, அந்த வயதுக்கேயுரிய கனவுகளோடுதான் இருந்தேன். படித்து முடித்தவுடன் பெரிய பெரிய பப்ளிக் ரிலேஷன் கம்பெனிகளில் வேலை செய்யவேண்டும்; ஊடகங்களில் சேர்ந்து பலதுறைகளில் இருக்கும் பிரபலங்களையும், மக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும் பல பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்குப் பாடுபடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இந்தத் துறையில் நான் நன்றாக வரவேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை.

இந்த ரி-ஃபிராக்டரி தொழிலிலேயே பல வருடங்கள் அனுபவம் பெற்று, புகழ்பெற்ற ஏஸ் நிறுவனத்தின் சென்னை ஸ்டாக்கிஸ்ட்டாகி 1997-ம் ஆண்டு முதல் பாலாஜி அசோசியேட்ûஸ நடத்தி வந்தவர்என்னுடைய அப்பா லஷ்மணன். நன்றாகப் போய்க்கொண்டிருந்த பிசினஸில் பெரிய தொகை அவுட்-ஸ்டாண்டிங், கூட இருந்தே குழி பறித்த சிலரால் ஏற்பட்ட நஷ்டங்கள் என்று திடீர் சரிவு ஏற்பட்டது. இதனாலேயே அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.

ஏஸ் நிறுவனத்திடமும், எங்களின் வாடிக்கையாளர்களிடமும் அவர் சம்பாதித்து வைத்திருந்த நல்ல பெயர் மட்டுமே எங்களின் பெரிய சொத்தாக இருந்தது. அண்ணா அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்ததால், அப்பாவின் மரணத்துக்குப் பின் அனைத்துப் பொறுப்புகளும் அம்மாவிடம்(வித்யா லஷ்மணன்) வந்தன. அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் உடல் நிலை மோசமானதற்குக் காரணமாக இருந்த இந்த தொழிலின் மீது முதலில் எனக்கு வெறுப்பாகத்தான் இருந்தது. அம்மாவும், நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை கவனித்துக் கொள்ளும் எங்களின் உறவினர் கணபதி மாமாவும்தான் மெதுவாக எனக்கு இந்தத் தொழிலில் ஆர்வத்தை அதிகப்படுத்தி ஈடுபடுத்தினர்.

போட்டிகள் அதிகம் இருந்தாலும் தரத்தையும், நாணயத்தையும் விடாமல், வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் பொருட்களை சப்ளை செய்தேன். இந்தத் தொழிலில் இருக்கும் அளவுக்கதிகமான போட்டிதான், இந்தத் தொழிலில் நான் முன்னேறுவதற்குக் காரணம் என்று கூடச் சொல்லலாம். ஆண்டுக்கு 35 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை செய்யும் ஸ்டாக்கிஸ்ட்டுகளுக்கு, ஏஸ் நிறுவனம், ஸ்டாக்கிஸ்ட் மாநாடுகளை வெளிநாடுகளில் நடத்தி விருதுகளை வழங்கிக் கெüரவிக்கும். இந்த விருதை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெற்றிருக்கிறேன். முதல் ஆண்டு விற்பனை செய்த தொகை 70 லட்சம். இரண்டாம் ஆண்டு விற்பனை செய்த தொகை 80 லட்சம். முதல் ஆண்டு விழா இலங்கையில் நடந்தது. அப்போதுதான் என்னுடைய அப்பாவின் முதல் வருட நினைவு நாள் என்பதால் போகவில்லை.

இரண்டாவது வருடம், இந்த விழா மலேசியாவில், கோலாலம்பூரில் நடந்தது. மேடையில் நான் பரிசு வாங்கும்போதுதான், என்னுடைய பணியின் சிறப்பையும், அதற்குப் பின்னணியில் இருக்கும் என் அப்பாவின் ஆசியையும் உணர்ந்தேன்.” என்கிறார் கண்கள் பனிக்க, தனுஜா.

படம்: “மீனம்’ மனோ

Posted in Ace Refractory Cements, Ambattur Industrial Estate, Balaji Associates, Bricks, Dhanuja Lakshmanan, MOP Vaishnava, Public Relations, Stockist, Thanuja, Vidya Lakshmanan | Leave a Comment »

Nalli Kuppusami Chettiyar – Biosketch

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

நேர்காணல்: ஆண்டுதோறும் ஆயிரம் இசை நிகழ்ச்சிகள் !

பா. ஜெகதீசன்


நல்லி குப்புசாமி செட்டியார்

‘நான் இசை மேதை அல்ல. ஆரம்பக் காலங்களில் பாடல்களின் ராகங்களைக் கூட எனக்குத் தெரியாது’ -இப்படித் தன்னடக்கத்துடன் சொல்பவர் யார் தெரியுமா?

ஆண்டுதோறும் சராசரியாக ஆயிரம் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இசைக் காவலர் தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார்.

வான வில்லின் வண்ணங்களைப் போன்ற 7 சங்கீத சபாக்களின் தலைவராகவும், ஏராளமான சபாக்களில் முக்கிய பொறுப்புகளிலும் அவர் உள்ளார்.

மலர்களில் வாசம் மிக்கது மல்லி… பட்டுத் துணியில் சிறந்தது நல்லி… கலைகளைக் காக்கும் தொழில் அதிபர்களில் குறிப்பிடத் தக்கவர் நல்லி குப்புசாமி செட்டியார் என்றால் அது மிகையாகாது.

பட்டுச் சேலை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் நல்லி குப்புசாமி செட்டியார், இயல், இசை, நாடகக் கலைகளைக் கட்டிக் காப்பதிலும் தன்னிகரற்ற மாமனிதராகத் திகழ்கிறார்.

விசுவரூப வியாபாரம்: சென்னை தியாகராய நகரில் பனகல் பூங்கா எதிரே 1928-ல் சிறிய கடையாக 200 சதுர அடியில் தொடங்கப்பட்டது நல்லி பட்டு நிறுவனம். தற்போது அந்த இடத்தில் 30 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் ஒரு தெருவில் இருந்து பக்கத்துத் தெரு வரையில் விரிந்து, பரந்து, விசுவரூபம் எடுத்து அது காட்சி தருகிறது.

ஆல மரத்தின் விழுதுகளைப் போல, இந்நிறுவனத்துக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் 17 கடைகள் உள்ளன. ஒரு காலத்தில் ஆண்டுக்கு இரண்டரை லட்ச ரூபாய் அளவுக்கு மட்டுமே தமது நிறுவனத்தில் நடைபெற்ற விற்பனையைப் படிப்படியாக சில நூறு கோடிகளுக்கு உயர்த்திக் காட்டி, உழைப்பின் சிகரத்தைத் தொட்டவர் நல்லி குப்புசாமி செட்டியார்.

பல்வேறு பதவிகளை வகித்தவர். ஏராளமான விருதுகளைப் பெற்றவர். அறப் பணிகளுக்கும், நலிந்தோருக்கும் போட்டி போட்டுக் கொண்டு உதவுபவர்.

தியாகராய நகரில் நல்லி சில்க்ஸில்

விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலும், எத்தகைய பரபரப்பும் இன்றி, சிரித்த முகத்துடன் அவர் அளித்த பேட்டி:

இசை ஆர்வம் துளிர்த்தது: கிருஷ்ண கான சபா 1954-ல் தியாகராய நகரில் எங்கள் கடைக்கு அருகே தான் இருந்தது. அப்போதெல்லாம் இரவு 7 மணியானால், இப்பகுதியே அமைதியாகி விடும். அந்த நேரத்தில் கடையின் முன் பகுதியில் நின்றால், கிருஷ்ண கான சபாவில் இருந்து சங்கீதம் காற்றினில் தவழ்ந்து வரும்.

என்ன ராகம் என்றே தெரியாது. இருந்தாலும் அந்த இசையை நான் விரும்பி ரசிப்பேன். அப்படி நான் உள்ளம் லயித்து கேட்ட இசை நிகழ்ச்சிகள்.தான் என் மனதில் இசை ஆர்வத்தை விதைத்தன. பின்னர் கிருஷ்ண கான சபாவில் துணைத் தலைவர் பதவியில் என்னை அமர்த்தினார்கள்.

1969-ல் மயிலாப்பூர் வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியில் நான் இடம் பெற்றிருந்தேன். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கச்சேரி நடைபெற்றது. கச்சேரியை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது எனது நண்பரின் 8 வயது பேத்தி பாடல்களின் ராகங்களைச் சரியாகச் சொல்லியதைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தேன்.

குழந்தைகளைப் பார்த்து ஆச்சரியம்: 1980-ல் எனது மகளின் திருமணம் நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் நாகஸ்வரம், வளையப்பட்டி தவில், எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி போன்றவை திருமண விழாவில் இடம் பெற்றன.

இசை நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்களின் ராகங்களை குழந்தைகள் எளிதாகக் கண்டுபிடிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜனுடன் 1980-ல் பல்வேறு கச்சேரிகளுக்குப் போய் வந்தபோது, பாடல்களின் ராகங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினேன். உடனே அவர் திரைப்படப் பாடல்கள் சிலவற்றைக் குறிப்பிட்டு, அவற்றின் ராகங்களைக் கூறினார்.

ராகத்தை அறிய எளிய வழி: அக்காலத்தில் “திரைப்படங்களில் கர்நாடக இசை’ என்கிற நூலை கள்ளபிரான் என்பவர் வெளியிட்டார். திரைப்படப் பாடல்கள் பாடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு ராகங்களைக் கண்டு பிடிக்கும் நூல் அது. அதைப் படித்து, ஓரளவுக்கு ராகங்களைத் தெரிந்து கொண்டேன்.

பின்னர், இசை நிகழ்ச்சிகளில் இடம் பெறும் பாடல்களின் ராகங்களைத் தொகுத்து, கச்சேரி கையேடு என்கிற நூலை வெளியிட்டோம். பாடல் -ராகம் -பாடலாசிரியர் என்கிற முறைப்படி அகர வரிசையில் விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

231 பக்கங்களைக் கொண்ட இந்நூல் இசையைப் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு மட்டுமின்றி, இசையைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் கூட பெரிதும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை உன்னிகிருஷ்ணன் தனது கச்சேரியில் டாக்டர் ராமநாதன் சொல்லிக் கொடுத்த அபூர்வமான ராகத்தில் பாடினார். அந்த ராகம் இந்த நூலில் இடம் பெறவில்லை. இதையடுத்து, இந்நூலில் புதிய ராகங்களையும் அவ்வப்போது சேர்த்து, மேம்படுத்தி வருகிறோம்.

அதற்குப் பிறகு, பல சபாக்களின் தலைவரானேன். ஏராளமான இசை விற்பன்னர்களோடு பழகக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக, எம்.எஸ். சுப்புலட்சுமி -சதாசிவம் ஆகியோருடன் பழகியபோது இசையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

யார், எங்கே, எப்போது?: 40 ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி சபா, சங்கீத வித்வத் சபை (மியூஸிக் அகாதெமி), மயிலாப்பூர் தியாகராஜ வித்வத் சமாஜம், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொûஸட்டி (பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கோகலே ஹால்), ஜெகந்நாத பக்த ஜன சபா (எழும்பூர்), பெரம்பூர் பக்த ஜன சபா ஆகியவை தான் இருந்தன.

எனவே, இசை விழா நடைபெறும் காலங்களில் எந்த சபாவில் எந்தத் தேதியில் யார் கச்சேரி செய்கின்றனர் என்பதை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், கடந்த ஆண்டு நிலவரப்படி சென்னையில் 81 சபாக்கள் உள்ளன. ஒரே மாதத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

10 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் கண்ணன் (பேங்க் ஆஃப் பரோடாவில் பணியாற்றியவர்) எந்தெந்த சபாக்களில் எந்தெந்தத் தேதிகளில், யார் பாடுகின்றனர் என்கிற விவரங்களைத் தொகுத்து சிறிய நூலை வெளியிட்டார்.

உலகம் முழுவதும் இருந்து இசை விழாவில் பங்கேற்பதற்காகவும், இசை அமுதத்தைப் பருகவும் ஏராளமானவர்கள் சென்னைக்கு வருவது வழக்கம். அவர்கள் இத்தகைய நூலைப் பார்த்து, எங்கே செல்வது என எளிதாக முடிவு செய்ய இயலும்.

அத்தகைய இசை விழா வழிகாட்டி நூலை கண்ணனுடன் சேர்ந்து நாங்களும் தயாரித்து வெளியிட்டு வருகிறோம்.

தற்போது (1) கிருஷ்ண காண சபா -தியாகராய நகர், (2) பிரம்மா கான சபா -மயிலாப்பூர், (3) நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாதெமி, (4) திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி சபா, (5) முத்ரா -தியாகராய நகர், (6) பைரவி கான சபா -மயிலாப்பூர், (7) மெலட்டூர் பாகவத மேளா சபா -தஞ்சை ஆகியவற்றில் தலைவராக உள்ளேன். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபா துணைத் தலைவராக உள்ளேன்.

பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகளைப் பெற்ற இசைக் கலைஞர்களை ஆண்டுதோறும் அழைத்து பாராட்டு விழா நடத்துகிறோம். அவ்விழாக்களிலும் பிரபலங்களின் கச்சேரிகள் இடம் பெறும்.

சென்னையில் நடைபெறும் இசை விழாக்களில் விருது பெற்ற அனைவரையும் அழைத்து, கச்சேரி நடத்தி கெüரவித்து வருகிறோம்.

இலக்கியத்தை ஊக்குவிக்க பாரதி கலைக்கூடத்தை ஆரம்பித்து, அதன் தலைவராக உள்ளேன். நூல்கள் வெளியீடு, எழுத்தாளர்களுக்குப் பாராட்டு, நூல்கள் மொழி பெயர்ப்பு போன்ற பணிகளை அந்த அமைப்பின் மூலம் செய்து வருகிறோம்.

பைரவி கான சபையின் மூலம் நாங்கள் நடத்திய ஜுகல் பந்தி நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது புறநகர்ப் பகுதிகளிலும் இசை விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. அவற்றுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

நாடகத்துக்கும் ஊக்கம்: நாட்டியம், சங்கீதம் போன்றவற்றுக்கு வழங்குவதைப் போல நாடகத்தை ஊக்குவிக்க நாடகத்துக்கும் விருது அளிக்கிறோம்.

நாகசுரத்தை ஊக்குவிக்க 81 சபாக்களிலும் தற்போது தொடக்க விழாக்களின்போது ஒரு மணி நேரம் மங்கள இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இசை விழாவை முதற்கட்டமாக தற்போது ஆகஸ்ட் 5-ல் தொடங்கி அக்டோபர் 2 வரை நடத்துகிறோம். சங்கீத சூடாமணி விருது வழங்குகிறோம். டிசம்பரில் நடத்தப்படும் வழக்கமான இசை விழாவில் நித்ய சூடாமணி விருது வழங்கி வருகிறோம்.

பாரம்பரியச் சிறப்பு: தஞ்சை மெலட்டூரில் 450 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மெலட்டூர் பாதவத மேளாவை அதன் பாரம்பரியத் தன்மை மாறாமல் கொண்டாடி வருகிறோம். கிட்டத்தட்ட 6 நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சொற்களைக் கொண்ட தெலுங்கு சாகித்தியங்களே தற்போதும் நாடகத்தில் இடம் பெறுகின்றன.

Posted in Bharathy Arts Center, Biosketch, Carnatic, Classical, Krishna Gana sabha, Nalli Kuppusami, Nalli Silks, Ragas, T nagar, Tamil Music, Thamizh isai | Leave a Comment »

Chikunkunya – Ayurvedic Treatment Options: Alternate Medicine

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிக்குன்குனியா மூட்டுவலிக்கு மருந்து!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தற்போது நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொசு மூலம் சிக்குன்குனியா என்ற நோய் பரவி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நோயில் மூட்டுகளில் ஏற்படும் வலி தாங்க முடியாத அளவில் உள்ளது. ஆயுர்வேதத்தில் இதற்கு மருந்து உண்டா?
இரா.வி.செüந்தர்யா விசாலினி, மொரட்டுப்பாளையம். வீ.நல்லுசாமி, நாமக்கல்.

சிக்குன்குனியாவில் ஏற்பட்டுள்ள காய்ச்சல், உடல் மற்றும் மூட்டு வலி, பசியின்மை, உடல்சோர்வு, ருசியின்மை, மலச்சிக்கல் போன்ற உபாதைகள் காணப்பட்டால் அச்சமயம் சாப்பிட ஏற்ற உணவு கஞ்சியேயாகும். காய்ச்சலின் வேகம் எவ்வளவுக்கெவ்வளவு கடுமையாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கஞ்சியையும், லேசானதாகத் தயாரிக்க வேண்டும். கஞ்சிக்கேற்ற பொருள்களில் புழுங்கலரிசியும் பார்லியும் நல்லது. புழுங்கலரிசியில் சத்து அதிகம். அதனால் அது உடலுக்கு வலிமை தரக்கூடியது. பார்லி உடலிலுள்ள அடைப்புகளைப் போக்கும். அதனால் வயிற்றில் வாயு, அஜீரணம் போன்ற தொல்லைகள் ஏற்படாது. புழுங்கலரிசியைச் சிறிது சிவப்பு காணும்வரை லேசாக வறுத்து, அதனுடன் பார்லியையும் வறுத்துச் சேர்க்கக் கஞ்சி எளிதில் ஜீரணமாகிவிடும். வறுத்த முழு அரிசி, பார்லி 1 பங்கு, தண்ணீர் 20 பங்கு சேர்த்துக் கொதிக்க வைத்து, கால்பங்கு சுண்டும் வரை காய்ச்சி இறக்கிக் கொள்ளவும். வடிகட்டிய கஞ்சியை இளஞ்சூடாகச் சிறிது இந்துப்பு கலந்து காலை, மதியம், இரவு குடிக்கவும். கஞ்சியைக் குடித்த பிறகு இந்து காந்தம் எனும் கஷாயத்தை 15 மிலி எடுத்து, 60 மிலி சூடான தண்ணீர் சேர்த்துப் பருக காய்ச்சல், உடல்வலி, மூட்டுவலி, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அஜீரணம், உமட்டல் முதலியவை விரைவில் குறைந்துவிடும். உடலுக்கு நல்ல பலத்தையும் இந்தக் கஷாயம் ஏற்படுத்தித் தரும். நல்ல ருசியும் பசியும் ஏற்பட்டுவிட்டால், அடுத்த இரண்டு நாட்களுக்கு நெல்பொரி 1 பங்கு, 20 பங்கு தண்ணீர் விட்டு கால் பங்கு சுண்டக் காய்ச்சி, அந்தக் கஞ்சியில் கால் பங்கு பால் கலந்து சாப்பிட களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படும். உடம்பில் கடுப்பு வலி, கனம், உடலை முறித்துக் கொள்ளும் வேதனை முதலிய வாயு அதிகமாயுள்ள நிலையில் இரண்டு புளியங்கொட்டையளவு சுக்கை எடுத்து அதை நசுக்கி அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிடலாம். உடல்வலி, வேதனை, கனம் முதலியவை நன்கு குறையும்.

சிலருக்கு காய்ச்சல் விட்ட பிறகும் தொடர்ந்து ஏற்படும் மூட்டுவலி, வீக்கத்திற்கு பிருகத்யாதி கஷாயம் 7.5 மி.லி. + பலாகுடூச்யாதி கஷாயம் 7.5மி.லி. ,சூடான தண்ணீர் 60 மி.லி. கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட ஏற்பட்டுள்ள உபாதைகள் நன்கு குறைந்துவிடும்.

வலி வீக்கம் உள்ள மூட்டுகளில் உத்வர்த்தனம் சூரணம், குலத்தம் சூரணம், ராஸ்னாதி சூரணத்தை 4 : 2 : 1 என்ற விகிதத்தில் கலந்து புளித்த சூடான மோருடன் குழைத்து பற்று இட்டு அது காய்ந்தவுடன் நீக்கி விடும் சிகிச்சை முறையால் மூட்டுகளின் உட்பகுதியிலுள்ள நீர் வற்றி வலி குறையும். ஜடாமாதி சூரணமும் இதுபோன்ற வலி நிவாரணியே. இந்த மருந்துகள் நசரத்பேட்டை

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவமனையில் விற்கப்படுகின்றன.

வீக்கம், வலி வற்றிய பிறகு மூலிகைத் தைலமாகிய பிண்ட தைலம், லஹசராதி தைலம், கொட்டஞ்சுக்காதி தைலம் போன்றவற்றில் ஒன்றை இரும்புக் கரண்டியில் லேசாகச் சூடாக்கித் தடவி அந்த மூட்டிற்கு ஓய்வளிக்கும் வகையில் துணியைச் சற்றி வைத்திருக்க வலியும் வீக்கமும் குறைந்துவிடும். தைலத்தைத் தடவி சுமார் அரை மணி முதல் 1 மணி நேரம் வரை ஊறிய பிறகு வேப்பிலை, நொச்சி இலை, புளி இலை, முருங்கை இலை, ஆமணக்கு இலை, எருக்கு இலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டுக் காய்ச்சிய தண்ணீரில் துணியைப் பிழிந்து ஒத்தடம் கொடுக்கப் பூரண நிவாரணத்தை விரைவில் பெறலாம்.

Posted in Allopathy, Ayurveda, Ayurvedic, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chickenkunya, chickun gunya, Healthcare, Homeopathy, Medicine, Outbreak, Treatment, Yunani | 3 Comments »

Chinese Premiere’s India Visit – Hu Jintao

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

உலகம் கவனிக்கும் ஒரு பயணம்

மு. இராமனாதன்

சீன அதிபர் ஹூ ஜின்டாவ் நவம்பர் 20 முதல், 4 தினங்களுக்கு இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். இதற்கு முன்பு சீன அதிபர் இந்தியா வந்தது பத்தாண்டுகளுக்கு முன்பு – 1996இல். சீனப் பிரதமர் வென் ஜியோபோ, 2005 ஏப்ரலில் மேற்கொண்ட இந்தியப் பயணத்திற்கு 20 மாதங்களுக்குப் பிறகு வருகிறார் ஹூ. ராஜீய உறவுகளில் இரு தேசத் தலைவர்கள் பரஸ்பரம் மாறி மாறிப் பயணம் மேற்கொள்வதென்பது ஓர் எழுதப்படாத விதி. இடையில் ஓர் இந்தியத் தலைவர் சீனாவிற்குச் செல்லாமல், இரு சீனத் தலைவர்கள் அடுத்தடுத்து இந்தியா வருவது இதுவே முதல் முறை. இது நல்லுறவின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது ஹூ பல்வேறு துறைகளில் 12 ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவார். பிராந்திய வணிகம், முதலீட்டுப் பாதுகாப்பு போன்றவை அவற்றுள் முதன்மையானவையாக இருக்கும். மேலும், மாணவர் பரிமாற்றம், சுற்றுச்சூழல் அக்கறை, பரஸ்பர பண்டிகைக் கொண்டாட்டங்கள், விளையாட்டு போன்ற துறைகளிலும் கூட்டு முயற்சிகளைப் பிரதிபலிக்கிற ஒப்பந்தங்களிலும் அவர் கையொப்பமிடுவார். ஆனால், இந்த உற்சாகம் அரசியல் தளங்களிலும் எல்லைப் பிரச்சினைகளிலும் இருக்குமா? பிரச்சினைகள் ஆக்கபூர்வமாக விவாதிக்கப்படும்; தீர்வுகள் ஏற்படாவிடினும் திசை வழிகள் நிச்சயிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு சில நோக்கர்களுக்கு இருக்கிறது. ஆனால் ஹூவின் வருகைக்குச் சரியாக 5 தினங்கள் முன்பு, சீனத் தூதர் சன் யுக்ஸி “அருணாசலப் பிரதேசம் சீனாவிற்குச் சொந்தமானது’ என்று சொல்லியிருப்பது அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏது செய்வதாக இல்லை. தெற்காசியாவின் நிலைத்தன்மைக்கு இரு தேசங்களின் பங்களிப்பும், அவற்றுக்கு இடையிலான இணக்கமும் முக்கியமானவை. ஆதலால் இந்தப் பயணம் சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது.

இவ்வாண்டு இந்திய – சீன நட்புறவு ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது. நண்பர்களுக்குள் ஒற்றுமை அதிகம். உலகின் அதிக மக்கள்தொகை கொண்டவை. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்பவை, வேகமாய் வளரும் வணிகமும் தொழிலும் மிக்கவை, மிகுதியும் கிராமப்புறங்களும் விவசாயிகளும் நிறைந்தவை. இரண்டு தேசங்களும் மிகப் பழைய பாரம்பரியங்களுக்குச் சொந்தமானவை. எனில் இரண்டு வேறுபட்ட நாகரிகங்களிலிருந்து கிளைத்தவை. முற்றிலும் வெவ்வேறான பாதைகளைக் கடந்து வந்தவை. மாறுபட்ட பின்புலங்களும், அரசியல் அமைப்புகளும் கொண்டவை.

சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி பல இந்தியர்களைக் கவர்ந்திருக்கிறது. இந்தியாவிற்கு மாதிரியாகவும், அதே நேரத்தில் போட்டியாகவும் விளங்குகிறது சீனா. சமீபகாலமாக இந்திய-சீன வணிகம் தழைத்து வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு இரு தரப்பு வணிகத்தின் மதிப்பு ரூ. 500 கோடி. இதுவே 2005-இல் ரூ. 85,000 கோடியாக உயர்ந்தது. நடப்பு ஆண்டில் இது ரூ. 90,000 கோடியாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2010-இல் இதன் இலக்கு ரூ. 2.25 லட்சம் கோடியென நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வணிகம் கடல் வழியாக மட்டுமே நடக்கிறது. தரைவழிப் போக்குவரத்திற்கும் வழி செய்யப்பட்டால் வணிகம் மேலும் செழிக்கும். இவ்வாண்டு ஜூலை மாதம் திறக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்தையும் சீனாவின் திபெத் சுயாட்சிப் பகுதியையும் இணைக்கும் நாதுல்லா கணவாய், அதற்கான அடிவைப்புகளுள் ஒன்று. 44 ஆண்டுகளாக மூடிக் கிடந்த கணவாய் திறக்கப்பட்டதை, இரு தேசங்களுக்கிடையே வளர்ந்து வரும் பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாகப் பார்க்கலாம். எனினும் நாதுல்லா வழியாக இப்போது பரிமாறிக் கொள்ளப்படும் பொருள்கள் குறைவு. இப்போதைக்கு இதன் வணிக முக்கியத்துவத்தைக் காட்டிலும் அரசியல் முக்கியத்துவமே அதிகம். கணவாயையும் பெரு நகரங்களையும் இணைக்கும் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். சீனா இதைச் செய்து வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட வேண்டும். தலைவர்களின் உரையாடலில் நாதுல்லா இடம் பெறும்.

விவாதத்திற்கு வரக்கூடிய மற்றொரு பொருள்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தைச் சீனாவின் ஊடகங்கள் விமர்சித்தன. தெற்காசியாவில் சீனாவின் வளர்ச்சியை ஈடு செய்வதற்காக, இந்தியாவை அமெரிக்கா பயன்படுத்துவதாக அவை குற்றஞ்சாட்டின. எனினும் சீன அரசு இதுவரை அதிகாரபூர்வமாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை. அமெரிக்க செனட் அவை, நவம்பர் 17-ஆம் தேதி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ஒப்பந்தம் அமலுக்கு வரும் முன்பு கடக்க வேண்டிய பல கட்டங்களில் ஒன்று: 45 உறுப்பு நாடுகளைக் கொண்ட அணுசக்தி வழங்குவோர் குழுமம் இதை அங்கீகரிக்க வேண்டும். குழுமத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான சீனாவின் ஆதரவை, இந்தச் சந்திப்பின் போது இந்தியா கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் அணுசக்தி ஒப்பந்தங்களில் சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கி வருகின்றன. இந்தியாவில் 4 தினங்கள் தங்கும் ஹூ, பாகிஸ்தானில் ஒரு வாரம் தங்கவிருக்கிறார். இஸ்லாமாபாத், தமக்கு 600 மெகாவாட் சக்தியுள்ள 6 அணு உலைகளை அமைத்துத் தருமாறு பெய்ஜிங்கை வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே சாஷ்மா எனுமிடத்தில் 300 மெகாவாட் சக்தியுள்ள உலையொன்றை சீனா நிர்மாணித்துக் கொடுத்திருக்கிறது. இந்தச் சந்திப்பின் போது பாகிஸ்தானின் கோரிக்கையை ஹூ ஏற்பார் என்று தெரிகிறது. பாகிஸ்தானுடனான சீனாவின் அணுவிசை ஒத்துழைப்பு இந்தியாவிற்கு எதிரானதல்ல என்று சீனா சொல்கிறது. இந்தியா கவலையுடன் கவனித்து வருகிறது; அதேவேளையில் தனது உறவுகளை அமெரிக்காவுடனும் சீனாவுடனும் சமன் செய்தும் வருகிறது. மாறி வரும் சர்வதேச உறவுகளில் முதிர்ச்சியும் புரிதலும் தேவைப்படுகிறது.

ஆனால் கடந்த வாரம் இந்தியாவிற்கான சீனத் தூதர், தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலப் பிரதேசத்தின் மீதான சீனாவின் உரிமையைக் குறித்துப் பேசியது முதிர்ச்சியைக் காட்டுவதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தெளிவாக வரையப்பட்ட, இரு தரப்பும் ஒப்புக்கொண்ட “எல்லைக்கோடு’ இல்லை. ஆனால் இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட “கட்டுப்பாட்டுக் கோடு’ இருக்கிறது. 1914-இல் பிரிட்டிஷ் அரசால் இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையே இமயமலைகளின் ஊடாக வரையப்பட்டதுதான் “மக்மோகன் கோடு’. இதுவே அருணாசலப் பிரதேசத்தையும் திபெத் சுயாட்சிப் பகுதியையும் பிரிக்கிறது. சீனா இதை ஏற்க மறுத்து வருகிறது. இவை ஒன்றும் புதிய செய்திகளில்லை. எனில் ஒரு தூதர், தனது அதிபர் அண்டை நாட்டில் கால் வைப்பதற்கு ஐந்து தினங்கள் முன்பு இதைப் பகிரங்கமாகப் பேசுவானேன்? பிற்பாடு பெய்ஜிங், பேச்சுவார்த்தைகளின் மூலம் சமரசம் எட்டப்பட வேண்டுமெனச் சொல்லி சூட்டைத் தணிக்க முயற்சித்தது.

எல்லைப் பிரச்சினை குறித்து இரு தரப்புக்கும் இடையே, பல தளங்களில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. எனினும் ஒத்திசைவை எட்ட முடியவில்லை. எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உறவை மேம்படுத்த முடியாது என்று சிலர் கருதுகின்றனர். எல்லைப் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தொழிலிலும் வணிகத்திலும் இணைந்து செயலாற்றி புதிய உயரங்களை எட்ட வேண்டுமென வேறு சிலர் கருதுகின்றனர்.

இந்திய-சீன உறவு பல ஏற்ற இறக்கங்களைக் கண்டு வந்திருக்கிறது. 1962 எல்லைப்போரின் கசப்புணர்வு பல ஆண்டுகளுக்கு நீண்டது. 1988-இல் ராஜீவ் காந்தியின் சீனப் பயணம், உறவுகளில் புதிய கதவுகளைத் திறந்தது. சீனப் பிரதமர் லீ பெங் (1991), நரசிம்ம ராவ் (1993), சீன அதிபர் ஜியாங் ஜெமின் (1996) என்று தலைவர்களின் விஜயங்கள் தொடர்ந்தன. 1998-இல் இந்தியா மேற்கொண்ட அணு ஆயுதச் சோதனையால் உறவுகளில் பின்னடைவு ஏற்பட்டது. எனில் 1999-இல் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் பயணத்தில், இரண்டு தேசங்களும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இரா என்பது மீண்டும் உறுதி செய்து கொள்ளப்பட்டது. தொடர்ந்து நல்லுறவை வளர்க்கும் நடவடிக்கைகளும் சந்திப்புகளும் நடந்து வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சீன அதிபர் ஹூ ஜின்டாவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பல்வேறு அயல் மாநாடுகளில் ஐந்து முறை சந்தித்துப் பேசியிருக்கின்றனர். ஆசியாவின் இரண்டு வளரும் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் பயன்கள் தலைவர்கள் அறியாததல்ல. எனில் பல ஆண்டுகளாக நீடிக்கும் கருத்து வேற்றுமைகள் சில சந்திப்புகளில் நேர் செய்துவிடக் கூடியவைல்ல. அதற்கு பரஸ்பர நம்பிக்கையும், பல சுற்றுப்பேச்சுகளும் வேண்டி வரும். புதுதில்லியில் நடைபெறவிருக்கும் தலைவர்களின் சந்திப்பு அந்தப் பாதையில் மேற்கொள்ளப்படும் பயணங்களில் ஒன்றாக இருக்கும்.

(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்).

Posted in AP, Arunachal Pradesh, Beijing, China, Dalai Lama, Foreign Relations, Hongkong, Hu Jintao, India, Official, Pakistan, SAARC, Tibet, Visit | 2 Comments »

‘I never hated individual Brahmins; what I admonish is Brahminism’ – M Karunanidhi

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

தனிப்பட்ட பிராமணரை வெறுத்ததில்லை: கருணாநிதி

சென்னை, நவ. 20: திமுக ஏற்க மறுப்பது பிராமணியக் கொள்கையைத்தான், தனிப்பட்ட பிராமணரை வெறுத்ததில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

நானோ, என் தலைமையில் இயங்கும் திமுகவோ தமிழுக்கு, தமிழர்க்கு, மக்கள் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற எந்த தனிப்பட்ட பிராமணரையும் வெறுத்ததுமில்லை வெறுப்பதுமில்லை. தமிழ் செம்மொழி என நூறு ஆண்டுக்கு முன்பே முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞராம் சூரியநாராயண சாஸ்திரியாரின் பிறந்த வீட்டை நினைவுச் சின்னமாக மாற்றத் திட்டம் வகுத்திருப்பதும் அவரது உருவம் பதித்த அஞ்சல் தலை வெளியிட முயற்சி மேற்கொண்டிருப்பதும் அவரது நூல்களை நாட்டுடைமையாக்கி அறிவித்ததும் இந்த அரசுதான்.

அக்ரகாரத்து அதிசய மனிதர் என் அண்ணா புகழ்ந்த வ.ரா.வின் குடும்பத்துக்கு நிதி உதவி அளித்து சிறப்பித்ததும் இந்த அரசுதான். கல்கியின் நூல்களை அரசுடைமையாக்கி ரூ. 20 லட்சம் அரசு நிதி வழங்கியதும் திமுக ஆட்சியில்தான்.

சென்னை கிண்டியில் அமைத்துள்ள தியாகிகள் மணி மண்டபத்தில், அன்றொரு நாள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பில் கொடி மரத்தில் ஏறி தேசிய கொடியை பறக்க விட்ட “ஆர்யா’ என்ற பிராமண இளைஞனின் சிலையை அமைத்திருப்பது என் தலைமையிலான திமுக ஆட்சியில்தான்.

பத்திரிகையாளர் சாவிக்கு பெரு நிதி உதவி அளித்து பெருமைப்படுத்தியதும் திமுக அரசுதான்.

பாரதிக்கு சிலை அமைத்தது திமுக அரசுதான்.

எனவே திமுக ஏற்க மறுப்பது பிராமணியம் என்ற கொள்கையைத்தான்.

திராவிட இயக்கம் என்னும் வீரிய வித்தில் விளைந்தவர்கள் என்பது உண்மையானால் பெரியாரின் கருத்துகளிலும் அண்ணாவின் எழுத்துகளிலும் இழையோடுகிற உண்மைகளை உணர்ந்து எழுச்சி நடை, லட்சிய நடை போடுகிறவர்களாகவே இருப்பார்கள்.

கயவர்கள் சூழ்ச்சிக்கு காலம் காலமாக ஆட்பட்டு சரித்திரத்தில் களங்கச் சேற்றைப் பூசிக் கொண்டுள்ள தமிழினம். இனியாவது அவர்களது ஏமாற்றுப் பேச்சில் புதைந்து விடாமல் விழிப்புற்று எழுக. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in Bharathy, Brahmaneeyam, Brahmin, Brahminism, Cho, Hate Speech, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, MK, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, Politics, Religion, Religion/Politics, Saavi, TN | Leave a Comment »

‘Oli’ Yuga Chirpi passes away – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

காலமானார் கவிஞர் யுகசிற்பி

நாகப்பட்டினம், நவ. 20: கவிஞர் யுகசிற்பி (சுரேந்திரன்) (53) நாகப்பட்டினத்தில் மாரடைப்பால் சனிக்கிழமை இரவு காலமானார்.

  • மின்னல் விதைகள்,
  • ரதி சம்ஹாரம்,
  • எழுதாச் சிலம்பு,
  • காலச்சிறகுகள் ஆகிய கவிதை நூல்களும்
  • உயிர்வேலி சிறுகதை நூலும்,
  • இனி ஒரு விதி செய்வோம்,
  • இந்திய வாழ்க்கையும் ஆன்மிகமும்,
  • தியான பூமி ஆகிய கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் புலமைமிக்கவர். ஆன்மிகப் பொதுவுடைமை சார்ந்த கருத்தியல் கொண்ட “ஒளி‘ என்னும் இதழை நடத்தி வந்தார்.

இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Posted in Anjali, Biosketch, Lifesketch, Memoirs, Oli, Surendiran, Tamil Literature, Thamizh, Yugachirpi | Leave a Comment »

‘Healthcare schemes to protect Future Generations’ – KKSSR

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

வருங்கால தலைமுறையை காக்கும் சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

சென்னை, நவ. 20: வருங்காலத் தலைமுறையைக் காக்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகப் பார்வை தின விழாவில் அமைச்சர் பேசியதாவது:

நோய்ப் பரவல் தடுப்பு மற்றும் வருமுன் காத்தல் என்று இரு அணுகுமுறைகளை அரசு மேற்கொண்டுள்ளது. எனினும், குழந்தைகள் உள்பட இளைய தலைமுறையினரைக் காக்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு அதிக ஆர்வம் கொண்டுள்ளது.

நோய் தடுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அவசியம்.

தமிழகத்தில் கடந்த 2004-05-ம் ஆண்டில் கண் தானம் மூலம் 4001 கண்கள் மட்டுமே பெறப்பட்டன.

எனவே, கண் தான விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர்.

சுகாதாரத்துறை செயலாளர் வி.கே. சுப்புராஜ் பேசியதாவது:

இந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை அளித்து சாதனை செய்யப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களுக்கு கண் பார்வை இழப்பைத் தடுக்கும் வகையில் வைட்டமின் ஏ கரைசல் திரவம் விரைவில் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.

தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குநர் டாக்டர் டி. செல்வகுமாரி, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் வி. வேலாயுதம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Posted in Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, Eye, Healthcare, KKSSR, Minister, Outbreak, TN | Leave a Comment »

‘All Movies which have Tamil names need not pay any Taxes to the Exchequer’

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

தமிழில் பெயர் சூட்டப்பட்ட பழைய திரைப்படங்களுக்கு வரி விலக்கு: முதல்வர்

சென்னை, நவ. 20: தமிழில் பெயர் சூட்டப்பட்ட பழைய திரைப்படங்களுக்கும் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அரசு வெளியிட்ட அறிக்கை விவரம்:

2006-07-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், தமிழிலே பெயர் சூட்டப்படும் புதிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 22-ம் தேதி இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆண்டு அரசின் அறிவிப்புக்குப் பிறகு வெளியாகும் தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மட்டும் கேளிக்கை வரி விலக்கு சலுகை அளிப்பதோடு, ஏற்கெனவே தமிழில் பெயர் வைக்கப்பட்ட பழைய திரைப்படங்களுக்கும் அளிக்க வேண்டும் என திரைப்படத் துறையினர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

திரைப்படத் துறையினரின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர், இனி தமிழ் பெயர் வைக்கப்பட்ட பழைய திரைப்படங்களுக்கும் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இருப்பினும், படத்தின் தலைப்பு தமிழில்தான் வைக்கப்பட்டுள்ளது என்பதற்கான அனுமதியை அரசின் வணிக வரித்துறை ஆணையரிடமிருந்து தயாரிப்பாளர் பெற்றால் வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

Posted in Budget, CM, Economics, Entertainment Tax, Finance, Income, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kollywood, Movie Names, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu, Tax-free, Thamizh | Leave a Comment »

Congress (I) vs Opposition BJP vs Communist Allies

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புயல் வீசுமா?

புதுதில்லி, நவ. 20: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் புதன்கிழமை (நவ. 22) தொடங்க இருக்கிறது.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தனது ஆட்சிக் காலத்தில் பாதியை முடித்துள்ள நிலையில், உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்தக் கூட்டத்தொடர் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரிக் கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப உள்ளன.

இதையடுத்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் கூட்டத் தொடரில் காரசார விவாதங்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அப்சல் விவகாரம்: பாஜக எழுப்பும்

நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட முகமது அப்சலுக்கு உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுந்துள்ளது. ஆனால் பாஜக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் முதல் நாளன்று இந்த விவகாரத்தை பாஜக எழுப்பலாம் என்று தெரிகிறது.

  • உள்நாட்டு பாதுகாப்பு,
  • பயங்கரவாதம் ஆகியவற்றில் அரசின் மெத்தனம்,
  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் இருக்கும் மத்திய அரசின் போக்கு ஆகியவை குறித்து பிரச்சினை எழுப்புவோம் என்று பாஜக துணைத் தலைவர் வி.கே.மல்ஹோத்ரா தெரிவித்தார்.

அணுவிசை உடன்பாடு பிரச்சினையை முன்வைக்க இடதுசாரிகள் திட்டம்: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் அன்றே நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி நடத்த இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.

இடதுசாரிக் கட்சிகள், இந்தியா-அமெரிக்கா அணுவிசை உடன்பாடு, சர்ச்சைக்குரிய சிறப்பு பொருளாதார மண்டலம், ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் ஆகிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுவிசை உடன்பாடு தொடர்பாக சில நிபந்தனைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த உடன்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். இந்த விவகாரத்தை அவையில் எழுப்புவோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

Posted in Afsal, BJP, Communists, Congress (I), Government, India, Indira Congress, Issues, Lok Sabha, Manmohan Singh, parliament, Punjab, Sonia Gandhi, UDA, UP | Leave a Comment »

Egypt: Mubarak to ease restrictions on presidential bids

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

எகிப்தில் அரசியலமைப்பை மாற்றப் போவதாக அதிபர் முபாரக் கூறுகிறார்

அதிபர் முபாரக்
அதிபர் முபாரக்

எகிப்திய அதிபர் முபாரக் அவர்கள் அதிபர் தேர்தலில் எதிர்க் கட்சிகளும் போட்டியிட வழி விடும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

நாடளுமன்ற ஆண்டுக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்துப் பேசிய அவர், தான் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள விரிவான சட்ட மறுசீரமைப்புகள் குறித்து விவரித்தார்.

முபாரக் அவர்களின் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு சவால் விடுமளவுக்கு எதிர்த்தரப்பினருக்கு சட்ட ரீதியாகப் பெரிய அளவில் நிலைமை கிடையாது என்கிறார் எமது கய்ரோ முகவர்.

தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு போன்ற எதிர்க் கட்சியினர் பயன்பெறும் வகையில் இந்த அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் செய்யப்படவில்லை.

ஐந்தாம் தடவையாக கடந்த 2005ம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்த முபாரக் அவர்கள், தனக்கடுத்து தன்னுடைய மகன் ஜெமாலை அப்பதவியில் அமாத்துவதற்காகத் தான் இந்த சட்ட மாற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்று அவரது விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Posted in al-Jazeera, autocrat, Egypt, Hereditary, Islam, King, Military, Mubarak, National Democratic Party, parliament, President, reforms | Leave a Comment »