Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 13th, 2006

Dhanush’s Thiruvilaiyadal Aarambam gets lawsuit by Sivaji Fans

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

கோர்ட்டில் வழக்கு: தனுஷின் `திருவிளையாடல்’ படம் வெளியாகுமா?

சிவாஜி நடித்த படம் “திருவிளையாடல்”. இப்படம் நீண்ட நாட்கள் ஓடியது. பக்தி படம் என்பதால் கோவில் திருவிழாக்களில் ஒரு காலத்தில் இப்படத்தில் வசனம் ஒலி பரப்பப்பட்டன.

நடிகர் தனுஷ் “திருவிளை யாடல் ஆரம்பம்” படத்தில் தற்போது நடிக்கிறார். அவருக்கு ஜோடி ஸ்ரேயா. பூபதி பாண்டியன் இயக்குகிறார்.

திருவிளையாடல் பெயரில் தனுஷ் நடிக்க சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிவாஜி சமூக நல பேரவை தலைவர் ஏ.சந்திரசேகரன் சிட்டி சிவில் கோர்ட்டில் திருவிளையாடல் படத்துக்கு தடை விதிக்குமாறு வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தனுசும் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் விமலகீதாவும் கோர்ட்டில் பதில் மனு தாக் கல் செய்தனர். வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இரு வரும் வற்புறுத்தினர். விமல கீதா தாக்கல் செய்துள்ள மனுவில் “திருவிளையாடல்” என்ற பெயரில் படம் எடுக் கவில்லை என்றும் “தனுசின் திருவிளையாடல் ஆரம்பம்” என்று தான் படத்துக்கு பெயர் வைத்துள் ளோம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையில் திருவிளையாடல் படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடக்கிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு சிவாஜி சமூக நல பேரவை மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப் பேரவையின் சார்பில் வக்கீல் குமரகுரு கூறியதாவது:-

“திருவிளையாடல்” பெயரில் படம் எடுக்கவில்லை என்று எதிர் தரப்பில் கோர்ட் டில் பதில் மனுதாக்கல் செய் யப் பட்டது. ஆனால் விளம்பரங்களில் அதே பெயர் தான் உள்ளது. எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்குமாறு கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய் வோம். விரைவில் இந்த மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

Posted in AP Nagarajan, Ban, Court, Dhanush, God, Petition, Shivaji, Shreya, Sivaji Fans, Sreya, Stay, Tamil Cinema, Tamil Movie, Thiruvilaiyaadal Aarambam, Thiruvilaiyadal | Leave a Comment »

Centre considering Mulayam Govt.’s dismissal: Jaiswal

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

உள்ளாட்சி தேர்தலில் வன்முறை; முலாயம்சிங் அரசை டிஸ்மிஸ் செய்வோம்: மத்திய மந்திரி மிரட்டல்

புதுடெல்லி, நவ. 13-

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

அங்கு சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 12 மாநக ராட்சியில் பாரதீய ஜனதா 8 மாநகராட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 3 மாநகராட்சி யையும், சமாஜ்வாடி ஒரு மாநகராட்சியையும் கைப் பற்றியது.

உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை தொடர்பாக முலாயம்சிங் அரசை டிஸ்மிஸ் செய்வோம் என்று மத்திய உள் துறை இணை மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தரப்பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வகையில் வன்முறை சம்பவம் நடந்தது. இதனால் முலாயம்சிங் அரசை டிஸ்மிஸ் செய்வது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

மத்திய அரசு இந்த விஷயத்தில் பார்வையாளர்போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அரசியல் சாசனப்படி நடந்து கொள்ளும்.

உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை தொடர்பாக உத்தரப்பிரதேச அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அனைத்து எதிர்க் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன. இது தொடர் பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தேர்தல் கமிஷன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அப்படி இருக்கும்போது வாக்குச் சாவடிகளை கைப்பற்றும் சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கூறும்போது, `தேர்தல் வன்முறை தொடர்பாக முலாயம்சிங் அரசை கண்டித்து வருகிற 20-ந்தேதி ஜெயில் நிரப்பும் போராட்டம் நடத்துகிறோம்’ என்றார்.

முலாயம்சிங் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பாரதீய ஜனதா தெரிவித்தது. அதற்குள் தற்போது மத்திய மந்திரி மிரட்டி உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என்றால் பாராளுமன்றத்தின் இரு சபையிலும் ஆதரவு தேவை. இதற்காக பாரதீய ஜனதாவின் உதவி தேவை. ஆனால் இது விஷயத்தில் பா.ஜனதா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரிக்குமா என்பது சந்தேகம்தான்.

உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தற்போது ஆட்சியை கவிழ்க்க ஆதரித்ததால் தங்களது செல்வாக்கு பாதிக்கப்படுமோ என்று பாரதீய ஜனதா பயப்படுகிறது.

Posted in booth capturing, Congress(I), Elections, Local Body Polls, Mulayam Singh Yadav, rigging, Salman Khurshid, Sriprakash Jaiswal, UP, Uttar Pradesh | Leave a Comment »

Trisha Fan clubs record 20,000 Members; Namitha – 3,000

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

திரிஷா ரசிகர் மன்றத்தில் 20,000 உறுப்பினர்கள்; நமீதா மன்றத்தில் 3000 பேர்

ரஜினி, கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார்.

நடிகர்களைப் போல் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் முளைத்துள்ளன.

முதல் முறையாக குஷ்பு வுக்கு 1991-ல் திருச்சி ரசிகர் கள் கோவில் கட்டினர். தற்போது திரிஷா, நமீதா ஆகி யோருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

திரிஷா ரசிகர் மன்ற தலைவியாக ஜெஸி பொறுப் பேற்றுள்ளார். இம் மன்றத் துக்கு புதிய உறுப் பினர் சேர்ப்பு பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. கல்லூரி மாண விகள், குடும்பத் தலை விகள் என 20 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள்ளனர். ஒரு லட்சம் பேரை உறுப்பினராக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர.

திரிஷா படங்கள் ரிலீசாகும் போது அவர் ரசிகர்கள் தியேட் டர்களில் கட்அவுட், கொடி தோரணங்கள் அமைத்து அமர்க்களப்படுத்தி வரு கிறார்கள். திரிஷா பிறந்த நாளில் அடையாறு புற்று நோய் ஆஸ்பத்திரியில் குழந்தை களுக்கு உணவு, உடைகள் வழங்குவதையும் வழக்க மாக வைத்துள்ளனர்.

திரிஷா தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவருக்கு ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்துள்ளது. தமிழில் சாமி, கில்லி படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின. ஜெயம் ரவியுடன நடித்த உனக்கும் எனக்கும் படம் ரிலீசாகி 100 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

நமீதா `ஏய்’ `கோவை பிரதர்ஸ்’ `பச்சக்குதிர’ உள் ளிட்ட படங்களில் நடித்துள் ளார். சமூக சேவைகளில ஈடுபாடுள்ள அவர் அவ்வப் போது குடிசைப் பகுதிகளுக்கு சென்று ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார்.

நமீதாவுக்கு முதன்முதலாக செல்வம் என்பவர் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். தற்போது இவர் நமீதா ரசிகர் மன்றங்களின் அகில இந்திய தலைவராகி உள்ளார்.

சென்னையில் நமீதாவுக்கு 50 ரசிகர் மன்றங்கள் உள் ளன. இவற்றில் 3000 பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள் ளனர். இவர்களில் பெரும் பாலானோர் கல்லூரி மாண விகள். நமீதா ரசிகர் மன்றமும் சமூக சேவை பணிகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளது.

முதல்கட்டமாக 20 ஆயி ரம் பேரை மன்றத்தில் உறுப் பினராக்க முடிவு செய் துள்ளனர்.

Posted in Fan Clubs, Kushboo, Movies, Namitha, Tamil Cinema, Telugu, Thrisha, Tollywood, Trisha | 3 Comments »

River turns into Milk – Devotees visit Mandakini River

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

ஆற்றில் பால் கலந்ததாக பரபரப்பு: பக்தர்கள் பாட்டிலில் எடுத்து சென்றனர்

லக்கோ, நவ. 12-

உத்தரப்பிரதேசம் மாநிலம் சித்ரகூட் என்ற இடத்தில் மந்தாகினி நதி உள்ளது. இந்த ஆற்றில் ஓடும் தண்ணீரில் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் என மாற்றம் ஏற்பட்டது.

தண்ணீரில் பால் கலந்து ஓடுவது போல் காணப்பட்டது. இதைப் பார்த்த சிலர் ஊருக் குள் சென்று ஆற்றில் பால் ஓடுகிறது என்று தெரிவித்தனர். காட்டுத் தீ போல் ஊர் முழுக்க தகவல் பரவியது.

இதனால் வேடிக்கை பார்க்க மக்கள் திரண்டனர். மந்தாகினி நதிக் கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆற்றுத் தண்ணீர் பால் போன்று வெள்ளை நிறத்தில் ஓடுவதைப் பார்த்து வியந்தனர். சிலர் இது கடவுளின் செயல் என்று பக்திப் பரவசம் அடைந்தனர்.

பக்தர் தகவல்

இந்த ஆற்றில் பால் கலந்தது போல் தண்ணீர் வருவதை முதன் முதலில் பார்த்தவர் ரகுநாத் திவாரி. பக்தரான இவர் காலையில் ஆற்றில் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கினார். அப்போது திடீ ரென்று தண்ணீரின் நடுப் பகுதியில் பால் ஓடுவது போல் வித்தியாசமாக இருந்ததைப் பார்த்தார்.

நேரம் செல்லச் செல்ல தண்ணீர் முழுவதும் `ரிப்பன்’ போல் வெண்மையாக மாறியது. தண்ணீரை குடித்துப் பார்த்த போது வழக்கத்தை விட ருசி மாறி இனிப்பாக இருந்தது. பாலின் சுவை அதில் இருந்ததாக ரகுநாத் திவாரி கூறினார்.

நோய் தீர்க்கும் மருந்து

இந்த தண்ணீரில் நோய் தீர்க்கும் ஆயுர்வேத தன்மை இருப்பதாகவும் தெரிவித்தார். ஆற்றில் வரும் பால் கலந்த தண்ணீரை பிடித்துச் சென்று நோய் வாய்ப்பட்ட தனது மனைவி பிரதிமா புனித நீரா டிய போது அவரது நோய் குண மானதாகவும், கால் வலிதீர்ந்த தாகவும் தெரி வித்தார்.

மத்திய பிரதேச எல்லையில் நயகான் பாலம் அருகே இருந்து தான் ஆற்றுத் தண்ணீரில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி உள்ளூர் பிர முகர்கள் கூறுகையில் 100 வருடத்துக்கு ஒரு முறை இந்த அதிசயம் நிகழும். இதற்கு முன் மந்தாகினி ஆற்றில் இது போல் பால் கலந்து தண்ணீர் ஓடியதாக தனது தாத்தா சொன்னதாகவும் ஊர் பிர முகர் ஒருவர் கூறினார்.

“தற்போது ஆற்றில் பால் கலப்பதாக தகவல் வெளி யானதை அடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து பால் கலந்த ஆற்று தண்ணீரை பாட்டிலில் பிடித்துச் செல்கி றார்கள்.

நிற மாற்றம்

இது பற்றி அறிவியல் வல்லு னர்களிடம் கேட்ட போது, ஆற்றுப் படுகையில் ஏற்படும் புவியியல் மாற்றமே இதற்கு காரணம், பால் போன்ற நிறத் தில் இருப்பதால் அது பால் அல்ல என்றார்.

ஆற்றில் ஏற்பட்டுள்ள நிறம் மாற்றம் குறித்து ஆய்வு நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மந்தாகினி ஆற்றில் கட்டுக் கடங்காத கூட்டம் கூடுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது.

Posted in Chitrakoot, Devotional, Mandakini River, milk, Shrine, UP, Uttar Pradesh, Water | Leave a Comment »

New Tamil Movie releases – 2006 end of year Tamil Cinema Updates

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

தீபாவளி போட்டியில் இருந்து விலகிய 8 புதுப்படங்கள் இம்மாதம் ரிலீஸ்

தீபாவளிக்கு விஜயகாந்த் சரத்குமார், அஜீத், ஆர்யா படங்கள் ரிலீசாயின. இந்த படங்களுடன் மோதாமல் சில படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டன. அதன்படி இம்மாதம் 8 படங்கள் ரிலீசாகின்றன. வாத்தியார், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்கள் இன்று ரிலீசாயின.

`வாத்தியார்‘ தீபாவளிக்கு வர இருந்தது. சில பிரச்சினைகளால் கடைசி நேரத்தில் வெளிவராமல் நின்றது. பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம் ஏற்பட்டு ரிலீசாகியுள்ளது.

இந்த படத்தில் அர்ஜ×ன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மல்லிகா கபூர் நடித்துள்ளார். அநியாயங்களை எதிர்க்கும் பள்ளிக்கூட ஆசிரியர் கதைதான் வாத்தியார். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலை படத்தில் ஸ்ரீகாந்த், பாவனா ஜோடியாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகாந்த் பெட்ரோல் பங்க் ஊழியராக நடிக்கிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு பாடலை வெளிநாட்டில் எடுக்க விரும்பினர். பாவனா கால்ஷீட் இல்லாததால் எடுக்க முடியவில்லை. ஸ்டான்லி இயக்கியுள்ளார்.

விஷால் நடித்த சிவப்பதிகாரம் படமும் இம்மாதம் ரிலீசாகிறது. ஏற்கனவே விஷால் நடித்த செல்லமே, சண்டைக்கோழி, திமிரு படங்கள் தொடர்ச்சியாக வென்றதால் இப்படமும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜோடியாக மம்தா நடித்துள்ளார்.

குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள ரெண்டு படம் 17-ந் தேதி ரிலீசாகிறது. மாதவன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ரீமாசென், அனுஷ்கா என இரு நாயகிகள். சென்னையில் தீவுத்திடலில் `செட்’ போட்டு படப்பிடிப்பை நடத்தினர். இதில் ரீமாசென் கடல் கன்னியாக நடிக்கிறார்.

பரத் கதாநாயகனாக நடித்த வெயில் படமும் அதே 17-ந் தேதி ரிலீசாகிறது. ஜோடியாக பாவனா நடித்துள்ளார்.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்துக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இப்படத்தை தயாரித்துள்ளார். வசந்தபாலன் இயக்கியுள்ளார். விருதுநகர் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. ஸ்ரேயா ரெட்டி, பசுபதி போன்றோரும் நடித்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரமான கல்யாணி கதாநாயகியாக நடித்த பிரதி ஞாயிறு 9 முதல் 10.30 வரை படமும், புதுமுகங்கள் நடித்துள்ள ஆவணி திங்கள் படமும் இம்மாதம் ரிலீசாகிறது.

பாலச்சந்தர் இயக்கியுள்ள `பொய்‘ படமும் இம்மாத ரிலீஸ் படங்கள் பட்டியலில் உள்ளது. இதில் உதய்கிரண், விமலாராமன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Posted in Aavani Thingal, Arjun, Balachander, Bhawana, Deepavali, Diwali, East Coast Road, ECR, Imsai Arasan, izhakku Kadarkarai Salai, K Balachandar, KB, Movie Previews, New Films, Pasupathy, Poi, Prakashraj, Reema Sen, Rendu, Shreya Reddy, Sivappathigaram, Sivappathikaram, Srikanth, Sundar C, Sunday 9 to 10:30, Tamil, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Thamizh padam, Vaathiyaar, Vasanthabalan, Veyyil, Vishal | Leave a Comment »

Laloo Prasad Yadav – For Prime Minister of India (Dinamani Editorial)

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

லாலுவின் ஆசை

நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்பது தமது ஆசை என மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார். அரசியலில் ஈடுபட்டு பதவி பெற்ற பின்னர் பதவிப்படிகளில் மேலும் மேலும் உயர வேண்டும் என்பதே எந்த ஓர் அரசியல்வாதியின் விருப்பமாக இருக்கும். குறுக்குவழியைப் பின்பற்றாதவரை இதில் எந்தத் தவறும் இல்லை.

ஆகவே லாலுவின் ஆசை பற்றி குற்றம் சொல்ல முடியாது. மத்திய அரசில் ஒரு பிரதமரின் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது லாலு எப்படி இவ்விதம் சொல்லத் துணிந்தார் என்று வேண்டுமானால் வியக்கலாம். அப்படிப்பார்த்தால் மத்திய அரசில் பதவி வகிப்பவர்களில் யாருக்குமே இப்போது அல்லது கடந்தகாலத்தில் பிரதமராவதற்கு ஆசை இருந்தது கிடையாது எனச் சொல்ல முடியாது. 1984-ல் இந்திரா காந்தி காலமானபோது, பிரணப் முகர்ஜி தாம் அடுத்து பிரதமராக்கப்படலாம் என்று எதிர்பார்த்தவரே. பவார், அர்ஜுன் சிங் ஆகியோரும் ஒருகாலகட்டத்தில் பிரதமர் பதவியை விரும்பியவர்களே. மற்றவர்களுடன் ஒப்பிட்டால் லாலு பகிரங்கமாகத் தமது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இப்போது மத்தியில் ஆள்வது கூட்டணி அரசே. ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துமேயானால் அந்த அரசில் அங்கம் வகிக்கிற எவரும் தமக்குப் பிரதமர் பதவி மீது ஆசையுள்ளதாகப் பகிரங்கமாகக் கூற மாட்டார். அப்படிக் கூற முற்பட்டால் தாம் ஓரங்கட்டப்படலாம் அல்லது பதவியிலிருந்தே விலக்கப்படலாம் என்பதை அவர் அறிவார். பிரிட்டன் போன்ற நாடுகளில் கடந்தகாலத்தில் இப்படி நடந்தது உண்டு. இந்திரா காந்தி அரசில் பிரணப் முகர்ஜி முக்கியப் பதவி வகித்தவர். இந்திராவைத் தொடர்ந்து ராஜீவ் பிரதமரானபோது பிரணப் முகர்ஜிக்குப் பதவி எதுவும் அளிக்காமல் ஒதுக்கி வைத்ததையும் குறிப்பிடலாம். ஆட்சித் தலைமையில் உள்ளவர் ஒருபோதும் தமக்குப் போட்டியாக மற்றவர் கிளம்புவதை அனுமதிப்பதில்லை.

ஆனால் தமக்குப் பிரதமராவதற்கு ஆசை உள்ளதாக லாலு கூறியதைத் தொடர்ந்து அவர் பதவி இழக்கின்ற ஆபத்து எதுவும் கிடையாது எனலாம். ஏனெனில் இப்போது நடப்பது கூட்டணி அரசு. லாலு கட்சியின் ஆதரவின்றி மத்திய அரசு நீடிக்க இயலாது. தவிரவும் பிரதமராவதற்கு ஆசைப்படுவதாகத்தான் லாலு பிரசாத் கூறியுள்ளாரே தவிர அப் பதவிக்குக் குறி வைத்துள்ளதாகச் சொல்லவில்லை.

பிரதமர் பதவிக்கென தனித் தகுதி எதுவும் கிடையாது. பிரதமர் பதவிக்கு உரியவர் ஏற்கெனவே மாநில முதல்வராக, மத்திய அமைச்சராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. அவ்விதத் தகுதிகள் லாலுவுக்கு உண்டு.

ரயில்வே அமைச்சர் என்ற முறையில் சிறப்பாகவே பணியாற்றி வருகிறார். நாட்டில் நிர்வாகவியல் படிப்பைச் சொல்லிக் கொடுக்கும் உயர் கல்வி அமைப்புகள் அவரது நிர்வாகத் திறனை வியந்து பாராட்டியுள்ளதைக் குறிப்பிடலாம். எனினும் பிரதமர் ஆவதற்கு முன்அனுபவம் அவசியம் என்றும் சொல்ல முடியாது. ராஜீவ் பிரதமரானபோது அவர் முன்அனுபவம் எதையும் பெற்றிருக்கவில்லை. தாங்கள் எதிர்பார்க்காமலேயே பிரதமர் ஆனவர்களும் உண்டு. தேவெ கௌட முதல்வர் பதவியிலிருந்து இவ்விதம் தில்லிக்கு இழுத்து வரப்பட்டவரே. ஐ.கே. குஜ்ராலுக்கும் இது பொருந்தும். அதேசமயத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக மிகச் சிறப்பாகப் பணியாற்றிய பிரதமர்களும் உண்டு. லால் பகதூர் சாஸ்திரி, பி.வி. நரசிம்ம ராவ் இப்படிப்பட்ட தலைவர்கள். நினைத்தால் பிரதமராகியிருக்கலாம் என்ற தலைவரும் உண்டு. அவர்தான் காமராஜர்.

இவை ஒருபுறமிருக்க, லாலு பிரசாத் யாதவ் நாட்டின் மற்ற பல தலைவர்களைவிட அலாதியானவர். அவரிடம் அலாதியான திறமைகளும் உண்டு. பிரதமர் பதவிக்கு வருகிற ஒருவருக்கு மற்ற எல்லாவற்றுக்கும் மேலாகத் தமது தலைமையை, தமது பதவியைக் காத்துக் கொள்கின்ற திறமை மிகவும் தேவை. அது லாலு பிரசாத்திடம் நிறையவே இருப்பதாகக் கூறலாம்.

Posted in Ajun Singh, Cabinet, India, Laloo Prasad Yadav, Lalu, Minister, PM, Pranab Mukherjee, Prime Minister, Railways, Sharad Pawar | Leave a Comment »

‘Her highness’ creates India row – “Shrimant” Yashodhara Raje Scindia

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

“ஸ்ரீமந்த்’ பட்டம் கிளப்பியுள்ள புதிய சர்ச்சை!

நீரஜா சௌத்ரி
தமிழில்: சாரி.

மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் யசோதரா ராஜே சிந்தியாவுக்கு, “”ஸ்ரீமந்த்” என்ற பட்டத்தை வழங்குவது என்று மத்தியப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்ரீமந்த் என்றால் செல்வப் பெருந்தகை என்று பொருள். அக்காலத்தில் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களை விளிக்கும் மரியாதைச் சொல்லாகவே இது இருந்தது. யசோதரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் மகள். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் சகோதரி. அதைவிட முக்கியம், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் சகோதரி.

35 ஆண்டுகளுக்கு முன்னால் ராஜ வம்சத்தவர்களுடைய பெயர்களுடன் இணைத்து ஒலித்த இந்த பட்டங்களையும் பதவிகளையும் இந்திரா காந்தி தனது ஆட்சிக் காலத்தில் ஒழித்தார். மன்னர் மானியங்களையெல்லாம் ஒழிக்க மசோதா கொண்டு வந்தார். மாநிலங்களவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அது தோற்றது. பிறகு அவசரச் சட்டமாக அதைக் கொண்டு வந்தார். உச்ச நீதிமன்றம் அது செல்லாது என்று அறிவித்தது. பிறகு மக்களவையைக் கலைத்து நாடாளுமன்றத்துக்குப் பொதுத் தேர்தலை நடத்தி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைத்தார். அப்போது மன்னர் மானியம் ஒழிப்பு, சிறப்பு பட்டங்கள் ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இப்போதோ மத்தியப் பிரதேச ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வர் சிவராஜ் செüஹான், தனது அரசில் பணிபுரியும் இளைய அமைச்சரான யசோதரா ராஜே சிந்தியாவுக்கு ஸ்ரீமந்த் என்ற பட்டத்தை வழங்கத் தீர்மானித்திருக்கிறார்.

3 காரணங்கள்: இதற்கு 3 காரணங்கள் உள்ளன என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குவாலியர் பிரதேசத்தில் ராஜ குடும்பத்தினரும் அவர்களுடைய விசுவாசிகளும் அதிகம். அவர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக செüஹான் இப்படி விருது வழங்கியதாக ஒரு வட்டாரம் தெரிவிக்கிறது. காங்கிரஸ் பறித்த பட்டங்களை வழங்கி ராஜ வம்சத்தை கெüரவிக்க பாரதீய ஜனதா தயாராக இருக்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்தவே இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு என்று அவ் வட்டாரம் சுட்டிக்காட்டுகிறது.

சிந்தியா குடும்பத்துக்குள்ளேயே சொத்துச் சண்டை தீராமல் இருக்கிறது. இந் நிலையில் யசோதராவுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டம், மாநில அரசு அவருக்கு ஆதரவாக இருப்பதை உணர்த்துவதாக மற்றொரு வட்டாரம் சுட்டிக்காட்டுகிறது.

விதிஷா, படே மலேரா தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரஸýக்கு அடுத்த இடத்தை உமா பாரதியின் கட்சி பெற்றிருக்கிறது. அவர் ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர். எனவே ராஜ வம்சத்தவரும் அவருடைய ஆதரவாளர்களும் உமா பாரதி பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக இப் பட்டம் தரப்பட்டதாக மற்றொரு வட்டாரம் தெரிவிக்கிறது.

எது எப்படியோ, மத்தியப் பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆர்எஸ்எஸ்ஸின் ஆசி நிச்சயம் உண்டு. ராஜ குடும்பத்தவர்களை மீண்டும் தன் பக்கம் ஈர்க்க ஆர்எஸ்எஸ் முயற்சிகளைச் செய்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மெüனம்தான் இப்போது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஏனெனில் மன்னர் மானிய ஒழிப்பையும், பட்டங்கள் ஒழிப்பையும் தனது முக்கிய கொள்கையாக இந்திரா காந்தி கொண்டிருந்தார்.

சுதந்திரமான குடியரசு நாட்டில் மக்கள் அனைவரும் சமம். அதில் யாருக்கும் சிறப்பு பட்டங்களோ, பெயர்களோ கூடாது என்று அறிவித்தவர் இந்திரா காந்தி. ஆனால் இப்போது சிறப்பு பட்டங்களையும் பெயர்களையும் கூறி அழைப்பது வழக்கமாகி வருகிறது. ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்களும் பெரும் தொழிலதிபர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி ஆட்சி அதிகாரத்தில் ஓர் அங்கமாகிவரும் பருவம் இது. மக்களிடையேயும் இது பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிடவில்லை. ராஜ குடும்பத்து பாரம்பரியங்களை ஏற்கும் மன நிலையில் மக்கள் இருப்பதையே இப்போதைய நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.

  • வி.பி. சிங்கை “”ராஜா சாஹேப்” என்று அழைப்பது,
  • மாதவராவ் சிந்தியாவை “”மகாராஜா” என்று அழைத்தது,
  • திக்விஜய் சிங்கை “”ராஜா” என்று அழைப்பது அனைத்துமே மக்களின் இம் மனோபாவத்தையே உணர்த்துகின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்துவது என்பதே “”நவீன ஜமீன்தார்களை” உருவாக்கும் நடவடிக்கையே அல்லவா! சமத்துவம் என்ற கொள்கை இப்போது கேலிக்குரியதாகிவிட்டது. சில குடும்பங்களும் வம்சங்களும் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள், சலுகைகளைப் பெறத் தகுதி உள்ளவர்கள் என்ற கருத்து அரசியலில் வேர்விட ஆரம்பித்துவிட்டது. சமதர்மக் கொள்கைக்கு இது வேட்டுவைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழில்: சாரி.

Posted in Feudal, Honor, Madhya Pradesh, Neeraja Chowdhry, Op-Ed, Rajasthan, Shrimant, Srimanth, Title, yashodhara raje scindia, yasodhara raje scindia | Leave a Comment »

US Elections – India Foreign Relations : Democrats vs Republicans

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

அமெரிக்கத் தேர்தலின் பின்விளைவுகள்

பொ. லாசரஸ் சாம்ராஜ்

ஆண்டு முழுவதும் தேர்தலுக்கான ஆயத்தங்களும், தேர்தலும் நடத்திக் கொண்டிருக்கும் ஒரே நாடு அமெரிக்காதான். தற்போது நடந்த தேர்தலைத் தொடர்ந்து 2008 தேர்தலுக்கான ஆயத்தங்களும் அங்கு தொடங்கிவிட்டன. அமெரிக்காவின் பிரதான கட்சிகளான குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சிகளிடையே அடிப்படையில் பெரிய சித்தாந்த வேறுபாடுகள் இல்லையென்றாலும், பல்வேறு பிரச்சினைகளை அணுகுவதில் அவைகளுக்குள் வேறுபாடுகள் உள்ளன என்பது உண்மை. அமெரிக்க ஆட்சியாளர்களின் கொள்கை முடிவுகளைப் பற்றி பல்வேறு விமர்சனங்களைப் பலர் செய்தாலும், அமெரிக்க மக்களின் ஜனநாயகப் பண்பு, சுயவிமர்சனத் தன்மை, ஆட்சியாளர்களையும் அவர்களின் அணுகுமுறைகளையும், அமைதியான தேர்தல் மூலம் மாற்றும் சிறப்பு ஆகியவற்றையும் எவரும் மறுக்க முடியாது.

அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் இரு அவைகளுக்கும் நடந்த தற்போதைய தேர்தலில் 16 பெண்களை மேலவையான செனட்டுக்கும், 70 பேரை கீழவையான பிரதிநிதிகளின் சபைக்கும் தேர்ந்தெடுத்து புதிய வரலாறு படைத்துள்ளனர் அமெரிக்க மக்கள். அத்துடன் முதன்முதலாக ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த 66 வயதான நான்ஸி பெலோஸி, அமெரிக்காவின் மூன்றாவது சக்தி வாய்ந்த பதவியான பிரதிநிதிகள் சபையின் தலைவராகவிருப்பது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றிற்கும் மேலாக 2008-ன் அதிபர் தேர்தலுக்கு ஜனநாயகக் கட்சியின் டிக்கட்டுக்கு ஹில்லாரி கிளிண்டன் பிரசாரத்தை மறைமுகமாகத் தொடக்கியிருப்பதும், பெண்களின் பங்களிப்பு அமெரிக்க அரசியலில் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. அத்துடன் முதன்முதலாக கெய்த் எலீய்சன் என்ற இஸ்லாமியர், பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொதுவாக, நெருக்கடியான காலகட்டங்களில் அமெரிக்க வாக்காளர்கள் அதிபரின் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதுதான் வழக்கம். ஆனால், தற்போதைய தேர்தல் ஜார்ஜ் புஷ்ஷின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளின் அணுகுமுறையில் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதைத் தெளிவாக்கி விட்டது. இராக் போர், நிர்வாகத்தின் ஊழல், குடியரசுக் கட்சியினரின் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை ஜனநாயகக் கட்சியினர் இத் தேர்தலில் பிரதானப்படுத்தினர். ஆனால், தேர்தல் தோல்விக்குப் பாதுகாப்பு அமைச்சரான ரொனால்டு ரம்ஸ் பெல்ட் – இராக் பிரச்சினையில் ஏற்படுத்திய குளறுபடிதான் முக்கியக் காரணம் என்று கூறி, பலிகடா ஆக்கப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உண்மையில் இராக் போருக்கு புஷ், செனீ, காண்டலீசா ரைஸ் மற்றும் உதவிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பால் உல்ஃபோ விட்ஸ் போன்றோர் பிரதாரன காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

தேர்தல் முடிவுகள் ஆளும் குடியரசுக் கட்சிக்குப் பாதகமாக இருந்தாலும் இம் முடிவு அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதே பலரின் கருத்து. முக்கியமாக உலகத்தை மேலாண்மை செய்யும் கொள்கையின் அடிப்படையில் இரு பிரதானக் கட்சிகளும் ஒருமனதுடன், தேச நலனையும் உலக சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் பயங்கரவாதத்தையும் காரணம் காட்டி செயல்படும். வட கொரியா, ஈரான் பிரச்சினைகளில் அமெரிக்காவின் நிலை கடுமையாகத்தான் வாய்ப்பிருக்கிறது. பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது தென்கொரிய எல்லைக்குச் சென்று, தென்கொரியா மீது வடகொரியா படையெடுத்தால் “அந்த நாடே இருக்காது’ என்று எச்சரித்ததும், நான்ஸி பெலோஸி ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீனாவின் அடக்குமுறைகளைக் கடுமையாக எதிர்த்ததும் நினைவுகூரத்தக்கது. அதுபோல ஈரானை நிராயுதபாணி ஆக்கும் முயற்சிக்கு ஜனநாகக் கட்சியினர் தீவிர ஆதரவு கொடுக்கத்தான் வாய்ப்பிருக்கிறது.

ராணுவ பலத்தில் பலவீனமான நாட்டைத் தோற்கடித்து ஆட்சியை மாற்றுவது வல்லரசு நாடுகளுக்கு எளிதாக இருக்கலாம். ஆனால் அந்த நாட்டின் மக்களை ஆட்சி செய்ய இயலாது என்பதை ஆப்கன், இராக் ஆக்கிரமிப்புகள் தெளிவாக்கிவிட்டன. புகழ்பெற்ற ரான்ட் (தஅசஈ) ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, இராக்கையும், ஆப்கானிஸ்தானையும் தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க 11 லட்சம் வீரர்கள் தேவையாம். எனவேதான் கூட்டுப் படைகள், உள்நாட்டுப் படைகள், பன்னாட்டுப் படைகள், நேட்டோ படைகள், ஐ.நா. படைகள், நேச நாட்டுப் படைகள் என்ற போர்வையில் பிற நாட்டுப் படை வீரர்களின் உயிரில் தன் தேச நலனைக் காக்க அமெரிக்கா முயலுகிறது. அணு சக்தி ஒப்பந்தத்தை காட்டி, இந்தியாவை இதில் மாட்டிவிட எதிர்காலத்தில் அமெரிக்கா முயலலாம். இந்திய அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

2003-மார்ச்சுக்குப் பின் இராக்கில் கூட்டுப் படையினர் 3078 பேர் மரணமடைந்ததாகவும், இதில் 2839 பேர் அமெரிக்க வீரர்கள் என்றும், இதுபோக 21,419 பேர் காயமடைந்ததாகவும் பென்டகனும், இசச -ம் தெரிவிக்கின்றன. ஆனால், இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லான்செட் (கஅசஇஉப) மருத்துவ ஆய்விதழ் அக்டோபர் 10-ல் வெளியிட்ட இணையதள ஆய்வுக் கட்டுரையில் இராக் யுத்தத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளதாகவும், எட்டு லட்சம் பேர் பல்வேறு காயங்கள் அடைந்துள்ளதாகவும், இதில் பத்தில் ஒரு பகுதியினருக்குக்கூட மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்றும் கூறுகிறது. இது மிகைப்படுத்தப்பட்ட தகவலாக இருந்தாலும், இராக் உள்நாட்டுப் போரை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருப்பது உண்மை. அமெரிக்காவின் பொம்மை அரசும் செயலிழந்து விட்டது.

இந்த நிலையில், புஷ் நிர்வாகம் ஜனநாயகக் கட்சியின் ஒத்துழைப்புடன்தான் பல கொள்கை முடிவுகளை எடுத்தாக வேண்டும். முதலாவது, இம்மாத இறுதியில், புஷ் வியட்நாம் செல்லவிருப்பதை ஒட்டி நிறைவேற்ற இருக்கும் அமெரிக்க-வியட்நாம் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கு காங்கிரஸின் ஒப்புதலைப் பெறுவது; இரண்டாவது, ஐ.நா.வின் அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்ட பிரச்சினைக்குரிய ஜான். த. போல்டனின் பதவிக்கான அங்கீகாரத்தைப் பெறுவது; மூன்றாவது, இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதலைப் பெறுவது போன்றவை முக்கியமானவை.

இந்தியாவை அணு ஆயுத நாடாக இன்னும் அமெரிக்க செனட் அங்கீகரிக்கவில்லை. மன்மோகன் சிங்கின் கியூபா பயணம், இராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்ப மறுப்பு, ஈரான் – இந்திய இயற்கை எரிவாயு ஒப்பந்தம் ஆகியன காங்கிரஸில் எதிர்ப்பை ஏற்படுத்தும். மூன்றாவது, இந்தியாவிற்கு மட்டும் சிறப்புச் சலுகை அளித்தால், அணு ஆயுதப் பரவல் திட்டத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனும் வாதம் மேலோங்கும். நான்காவது, நேசநாடான பாகிஸ்தானும், இந்தியாவைப் போன்று சலுகை கேட்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெறும். எல்லாவற்றிற்கும் மேலாக, 1977-ல் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தை காங்கிரஸில் நிறைவேற்றி, இந்திய – அமெரிக்க தாராப்பூர் அணு உலை எரிபொருள் ஒப்பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததும், ஜிம்மி கார்ட்டர் தலைமையிலான ஜனநாயகக் கட்சியினர் தாம் என்பதும் நினைவுகூரத்தக்கது.

இவை அனைத்தையும் மீறி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்தாலும் நிச்சயம் இந்தியா ஏற்றுக்கொள்ள இயலாத நிபந்தனைகளை புகுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதில் 110 கோடி இந்தியர்களின் கௌரவமும் அடங்கியிருக்கிறது. மன்மோகன் சிங் அரசு எச்சரிக்கையுடனும், தொலைநோக்குடனும் பிரச்சினைகளை அணுக வேண்டும்.

Posted in Analysis, Bush, Congress, Democrat, Elections, House of Representatives, India, Nancy Pelosi, Op-Ed, Polls, Republican, Senate, USA | Leave a Comment »

Andhra Pradesh bans dubbed films – Sivaji (The Boss) may be Tamil Exclusive

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

தமிழ் டப்பிங் படங்களுக்குத் தடை: தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவு

ஹைதராபாத், நவ. 13: தமிழ் மற்றும் பிற மொழி டப்பிங் திரைப்படங்களின் வெற்றியால், பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது தெலுங்கு திரை உலகம்.

இதையடுத்து, ஆந்திரத்திலும் பிறமொழி டப்பிங் திரைப்படங்களை வெளியிட தடைவிதிக்க முடிவு செய்துள்ளது அந்தமாநிலத் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

சிறிய பட்ஜட்டில் படம் தயாரிக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்களின் நலனைப் பாதுகாக்கவே இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. டப்பிங் திரைப்படங்களின் வரவும், வெற்றியும் தெலுங்கு திரைப்படத் துறைக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

பிற மொழிப் படங்களின் டப்பிங் உரிமையை வாங்கக் கூடாது என்று தனது உறுப்பினர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த முடிவு அந்த மாநிலத்தில் திரைப்படத் துறையினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரத்தில் கடந்த 2 வருடங்களாக டப்பிங் திரைப்படங்கள், குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. மாநிலத்தில் இந்த ஆண்டு 200 திரைப்படங்கள் வெளியாயின. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு திரைப்படங்கள் டப்பிங் செய்யப்பட்டவை.

  • சந்திரமுகி,
  • அந்நியன்,
  • கஜினி,
  • மன்மதன்,
  • காதல்

ஆகிய திரைப்படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு, ஹிட் திரைப்படங்களாக ஓடின.  தமிழ் திடைப்படங்களைத் தவிர, ஆங்கில டப்பிங் படங்களையும் மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.

டப்பிங் திரைப்படங்கள் வசூலைக் குவித்து வரும் அதே நேரத்தில், ஆந்திரத்தில் தயாரான தெலுங்கு திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றன. “மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி உள்பட பல முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளிவந்த வேகத்தில், பெட்டிக்குள் சுருங்கிவிட்டன.

கடந்த ஆண்டு 131 தெலுங்கு படங்கள் வெளியாகின. அவற்றில் மூன்றே மூன்று திரைப்படங்கள்தான் ஹிட் படங்களாக வெற்றி பெற்றன. ஏழெட்டு படங்களால் மட்டும்தான், செலவிட்ட பணத்தை மீட்க முடந்தது. மற்ற தெலுங்கு திரைப்படங்கள் அனைத்தும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின.

இது குறித்து தெலுங்கு முன்னணி தயாரிப்பாளர் டி.சுரேஷ் பாபு, “பெரும் பணச்செலவில் தயாரிக்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்கள் கூட சரிவை சந்திக்க டப்பிங் படங்களின் வெற்றியே காரணம்’ என்றார்.

ஆனால் பிறமொழி டப்பிங் படங்களை தடை செய்யும் முடிவுக்கு டப்பிங் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், வசன எழுத்தாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினரும்கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது தெலுங்கு திரைப்படங்கள் மிக அதிக செலவில் தயாரிக்கப்படுகின்றன. சிறு தயாரிப்பாளர்களால் இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டு திரைப்படம் தயாரிக்க இயலவில்லை. எனவேதான் நாங்கள் குறைந்த செலவில், படங்களை டப் செய்து வெளியிடுகிறோம் என்று கூறியுள்ளார் சிறு தயாரிப்பாளர் ஒருவர்.

Posted in Andhra Pradesh, Ban, Dubbing, Rajni, Remake, Sivaji, Superstar, Tamil Films, Tamil Movie, Tamil Pictures, Telugu, Tollywood | Leave a Comment »

The Khairlanji Atrocity – Police Ban : Dalit groups hold protests in Nagpur

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

4 தலித்துகள் படுகொலை விவகாரம்: நடவடிக்கைக் கோரி தலித் அமைப்பு ஏற்பாடு செய்த ஊர்வலத்துக்கு போலீஸ் தடை

நாகபுரி, நவ. 13: மகாராஷ்டிர மாநிலத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தலித் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊர்வலத்துக்கு போலீஸôர் தடை விதித்தனர்.

கடந்த செப்டம்பரில் மகாராஷ்டிர மாநிலம் பந்தாரா மாவட்டம் கையர்லாஞ்ச் கிராமத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர். மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற 2 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இச் சம்பவத்துக்கு உயர் சாதிப் பிரிவினரின் ஆதிக்க வெறியே காரணம் என பல்வேறு அமைப்புகள் புகார் தெரிவித்தன.

சம்பவம் நடந்து நீண்ட நாளாகியும் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை. இதனால், வெகுண்ட தலித் மக்கள் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

நாகபுரியைச் சேர்ந்த தலித் அமைப்பு, இந்த விவகாரத்தில் நீதி கோரி ஊர்வலம் நடத்த முடிவு செய்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை, அம்பேத்கர் சிலை அருகே ஆயிரக்கணக்கான தலித் மக்கள் கூடினர்.

இதை முன்கூட்டியே அறிந்த போலீஸôர், முக்கிய நிர்வாகிகளை கைது செய்தனர். மேலும், ஊர்வலத்தால் அசம்பாவித சம்பவங்கள் நேரிடலாம் என்று கருதி போலீஸôர் ஊர்வலத்துக்கு தடை விதித்ததாகவும் நகர போலீஸ் அதிகாரி செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்தார்.

Posted in atrocity, Ban, Bhaiyyalal Bhotmange, Bhandara, Dalit, Khairlanji, Kherlanji, maharashtra, Nagpur, Protests | Leave a Comment »

Gandhi, Nehru, Sachin are Time’s heroes

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் காந்தி, நேரு, சச்சின்

புதுதில்லி, நவ. 13: கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியதாக,

  • மகாத்மா காந்தி,
  • ஜவாஹர்லால் நேரு,
  • அன்னை தெரசா,
  • சச்சின் டெண்டுல்கர்,
  • விப்ரோ தலைவர் நாராயணமூர்த்தி

ஆகியோரை ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் “டைம்‘ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
“டைம்’ பத்திரிகையின் ஆண்டு சிறப்பிதழ் தற்போது விற்பனையில் உள்ளது. அதில் இந்த விவரம் தரப்பட்டுள்ளது. வியக்கத்தக்க இம்மனிதர்களின் சாதனைக்கு மரியாதை செலுத்துவோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற அஹிம்சை வழியை கடைபிடித்து அதில் வெற்றி பெற்ற உலகின் மாபெரும் மனிதர் காந்திஜி என அந்த இதழ் காந்தியடிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியரும் இரும்பு ஆலை அதிபருமான லட்சுமி மிட்டல், சர்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ஆகியோரும் பெருமைக்குரிய இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானின் முகம்மது அலி ஜின்னா, ஆப்கானிஸ்தானின் அகமது ஷா மசூத், சீனாவின் டேங் சியோபிங், திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா, மியான்மர் ஜனநாயக இயக்கத் தலைவர் ஆங் சான் சூகி ஆகியோரும் ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Posted in Achievers, Asia, Gandhi, Heroes, India, Jinnah, Lists, Nehru, Nusrat, Sachin, Time | Leave a Comment »