Upcoming Tamil Movie Releases – Cheran’s Nagara Kannaadi
Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006
திரைக்கதிர்: ‘நகரக் கண்ணாடி’!
மனோஜ் கிருஷ்ணா
சேரன் இயக்கி நடிக்கும் “மாயக் கண்ணாடி’ படத்தின் ஸ்டில்கள் வழக்கமான அவருடைய படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றன. “”உங்கள் படங்களிலுள்ள யதார்த்தம் இந்தப் படத்திலும் இருக்குமா?” என்று கேட்டதற்கு…
“”இதுவும் யதார்த்தமான வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம்தான். இவ்வளவு நாள் கிராமத்துப் பின்னணியில் படங்கள் எடுத்திருக்கிறேன். முதன்முறையாக இந்தப் படத்தில் நகர்ப்புற வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறேன். நகரத்திலும் ஒரு யதார்த்தம் இருக்கிறது. நகரத்துப் படங்கள் என்றாலே காதல் கதையையும், அடிதடி கதையையும்தான் எல்லாரும் சொல்கிறார்கள்.
இவை இரண்டும் இல்லாமல் இடைப்பட்ட, மெஜாரிட்டியாக வாழக்கூடிய நடுத்தர வர்க்கத்தினரும் இருக்கிறார்கள். அவர்கள் எந்த அடிதடிக்கும் போவதில்லை; எந்த கமர்ஷியல் விஷயங்களுக்கும் போவதில்லை; வாழ்க்கையை ஓட்டுவதில்தான் அவர்கள் கவனமெல்லாம் இருக்கும். அவர்களைப் பற்றிய கதைதான் “மாயக் கண்ணாடி’. இந்தப் படத்தில் என்னைப் பார்க்க மாட்டீர்கள்; உங்களைத்தான் பார்ப்பீர்கள்” என்கிறார் சேரன்.
அவார்டு பெறுமா “அடைக்கலம்’?
பிரஷாந்த், தியாகராஜன், உமா நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் “அடைக்கலம்’ படம் மீண்டும் புத்துணர்வு பெற்று திரைக்கு வருகிறது. படத்தைப் பற்றி கதாநாயகனிடம் கேட்ட போது… “”இன்றைய கமர்ஷியல் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம். எந்த ஒரு ஜீவராசிக்கும் ஓர் அடைக்கலம் தேவை. அப்படி அன்பு தேடி அலையும் ஒருவனுக்கு அடைக்கலமாக கிடைக்கும் மனது பற்றியதுதான் கதை. தந்தை -மகன் போராட்டத்தையும், அண்ணன் தங்கை பாசத்தையும் சினிமாத்தனமில்லாமல் காட்டியிருக்கிறார் டைரக்டர் ஆர்.புவனராஜா. தந்தை கேரக்டரில் என்னுடைய அப்பாவும், தங்கை கேரக்டரில் உமாவும் நடித்துள்ளார்கள். நான் ஆத்ம திருப்தியோடு நடித்த படம் இதுதான். தேசிய விருது பெற்ற “வீடு’ படத்தைத் தயாரித்த ஸ்ரீநாராயணதாஸ்தான் “அடைக்கலம்’ படத்தின் தயாரிப்பாளர். நல்ல படங்கள் எடுக்கும்போது வழக்கமாக ஏற்படும் பணப் பிரச்சினைதான் இந்தப் படத்துக்கும் ஏற்பட்டது. இப்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்துவிட்டன. தேசிய விருதுக்கு அனைத்து விதத்திலும் தகுதியான படம் என்பது என் கருத்து” என்றார் பிரஷாந்த்.
விறுவிறு பந்தயம்!
சிபிராஜ், நிலா நடித்து வரும் “லீ’ படத்தை எப்படியும் பெரிய வெற்றிப் படமாக்கிவிட வேண்டும் என்று இயக்குநர் பிரபுசாலமன் யூனிட் மிகுந்த கவனத்தோடு உழைத்து வருகிறார்கள். பிரபுசாலமனின் முந்தைய படமான “கொக்கி‘ ஒண்ணேமுக்கால் மணி நேரத்தில் விறுவிறுப்பாக சென்றதைப் போலவே “லீ’ படமும் இருக்கும் என்கிறார்கள்.
இதைப் பற்றி இயக்குநரிடம் கேட்டால்… “”படத்தின் கதைக்கு ஏற்பத்தான் நேரம்; கோடிக்கணக்கான முதலீட்டில் ஒன்றரை மணி நேரத்தில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்கள் எத்தனையோ உள்ளன; அதே சமயம் ” டைட்டானிக்’, “லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ போன்ற மூன்றரை மணி நேரப் படங்களும் உள்ளன. எல்லாமே வெற்றிப் படங்கள்தான். ஐந்து நிமிட, அரை மணி நேர குறும்படங்களில் எவ்வளவோ விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
கால்பந்து தொடர்பான எங்கள் “லீ’, மிகப் பெரிய இரண்டு கால்பந்து அணிகள் மோதும்போது எப்படி விறுவிறுப்பாய் இருக்குமோ அதேபோல இருக்கும். அதற்கு நான் கியாரண்டி” என்கிறார்.
கமல் புராணம் பாடும் ஆர்யா!
சமீபத்தில் கமல்ஹாசனுக்காக “வட்டாரம்’ படத்தின் சிறப்புக் காட்சியைத் திரையிட்டார்கள். படத்தைப் பார்த்த கமல், இயக்குநர் சரணிடம் சில விஷயங்களைப் பற்றி விமர்சித்தார். அருகிலிருந்த ஆர்யாவை அழைத்து “”நன்றாக நடித்திருக்கிறீர்கள்; சண்டைக் காட்சிகளில் எதற்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கிறீர்கள்?
அதெல்லாம் வேண்டாம். உடல்தான் சொத்து; அதைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்” என்றும், “”நல்ல கதையைத் தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் உங்களுக்கு நல்ல இடம் காத்திருக்கிறது” என்றும் அறிவுரை வழங்கியிருக்கிறார். இதை அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்து “கமல் புராணம்’ பாடி வருகிறார் ஆர்யா.
மறுமொழியொன்றை இடுங்கள்