Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 2nd, 2006

Dogs Attack – Healthcare Reform : Dinamani Editorial

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

தேவை-பாதுகாப்பான தெருக்கள்!

நாய் மனிதனைக் கடித்தது செய்தியல்ல…மனிதன் நாயைக் கடித்தால் அதுதான் செய்தி என்று செய்தி பற்றிய இலக்கணம் சொல்வதுண்டு. நமது யதார்த்த வாழ்க்கை, இந்த இலக்கணங்களையெல்லாம் தகர்த்துவிடுகிறதல்லவா? இன்றோ நாய் மனிதனைக் கடித்ததே முக்கிய செய்தியாகிவிட்டது. சில தினங்கள் முன்பு உதகையின் கோத்தகிரிப் பகுதியில் ஒரு பள்ளிச் சிறுவன் தெருநாய்க் கூட்டத்தின் கொலைவெறித் தாக்குதலால் உடலெங்கும் கடும் காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் செய்தி வெளியானபோது நம்மில் பலர் திடுக்கிட்டிருப்பார்கள்.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து அச் சிறுவனின் உடல் நலம் குறித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கும் குன்னூர் நகராட்சி ஆணையருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவரும் நீதிபதியுமான வெங்கடாசல மூர்த்தி அடங்கிய பெஞ்ச் பிறப்பித்துள்ளது.

தெருநாய்க் கூட்டங்களால் மனித உயிர்களுக்கு ஆபத்து நேரும் நிலை ஏற்பட்டது எவ்வாறு? இதற்கு யார் பொறுப்பு? நாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்புகள் அல்லவா என்று கேட்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மீதும் குற்றம் சொல்ல முடியாது. காரணம் தெருநாய்களைப் பிடிக்கவும் கொல்லவும் நீதிமன்றத் தடைகள் உள்ளன.

இப்படித் தடைபெற்றுள்ள பிராணி நலச் சங்கங்கள் தெரு நாய்களின் தொல்லையைத் தவிர்க்க அவற்றுக்குக் கருத்தடை செய்வதையும் வெறிநோய்த் தடுப்பு ஊசி போடுவதையும் பரிந்துரை செய்கின்றன. ஆனால் இன்று சென்னை நகரின் சந்துகளில் ராஜாங்கம் நடத்தும் லட்சக் கணக்கான நாய்கள் அனைத்துக்கும் இப்படி ஊசி போட சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. இதனிடையே மழைக்கால இருளில் இரவுப் பணி முடிந்து போவோர் தொடங்கி பள்ளிக் குழந்தைகள் வரையில் நாய்க்கடிபடும் சம்பவங்கள் அதிகரித்தவாறே உள்ளது கவலைக்குரியது. இந்தப் பிரச்சினையின் ஒரு தீவிர முகம்தான் கோத்தகிரியில் பள்ளிச் சிறுவன் நாய்க்கூட்டங்களால் கடிபட்ட சம்பவம்.

நம் நாட்டைக்காட்டிலும் நாய் வளர்ப்பு மற்றும் செல்லப் பிராணி வளர்ப்பில் அதிக முனைப்புக் காட்டும் வெளிநாடுகள் அனைத்திலும் இந்தத் தெருநாய்ப் பிரச்சினை இல்லை. அந்த நாடுகள் இப்பிரச்சினையை எப்படித் தீர்த்தன என்பதை நமது உள்ளாட்சி நிர்வாகிகள் கவனித்துக் கற்று அறியலாம். லைசென்ஸ் இல்லாத தெரு நாய்களைப் பிடித்துச்சென்று அவற்றை தனியார் பிராணி நல அமைப்புகளின் கண்காணிப்பில் பராமரிப்பதன் மூலம் நம் தெருக்களைப் பாதுகாப்பானதாக ஆக்கலாம்.

தெரு நாய் பிரச்சினையில் இன்னொரு கிளைப் பிரச்சினையும் உள்ளது. அது வெறிநாய்க் கடி மருந்துக்கு அவ்வப்போது ஏற்படும் தட்டுப்பாடு. சமீபத்தில் கூட பொன்னேரி அரசு மருத்துவமனையில் வெறிநாய்க்கடிக்கு மருந்து இல்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இன்று தமிழகத்தில் காணப்படும் தெருநாய்ப் பெருக்கத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது வெறிநாய்க்கடி தடுப்பு மருந்துக்குத் தட்டுப்பாடில்லாமல் பார்த்துக் கொள்வது அவசர அவசியமாகும்.

பெரும்பாலும் நகரம், புறநகரங்கள் சார்ந்த இந்த முக்கியப் பிரச்சினை பற்றி பேசும் போது இதே போன்ற கிராமப் பிரச்சினை ஒன்றையும் இங்கு மறக்காமல் சொல்லியே ஆக வேண்டும். அது, ஆண்டுதோறும் அதிக அளவில் பாம்புக் கடிக்குப் பலியாகும் கிராம மக்கள் பற்றியது. இச்சாவுகளுக்குப் முக்கிய காரணம் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார மையங்களில் பாம்புக் கடிக்கான மருந்து தயார் நிலையில் இல்லாமையே. இம் மையங்களில் இந்த மருந்துக்குத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன், அவை இங்கு இருப்பதை உறுதி செய்யும் வகையில் கண்டிப்பான விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்.

Posted in Animals, Bite, Dinamani, Dogs, Editorial, Healthcare, Hospitals, Maneka Gandhi, Medicines, Menaka Gandi, Op-Ed, Snakes, SPCA, Stock | Leave a Comment »

‘Anbumani Ramadas should be dismissed from Healthcare ministry’- Menaka Gandhi

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

அன்புமணியின் முதிர்ச்சியற்ற செயலால் அழியும் எய்ம்ஸ்: மேனகா

புதுதில்லி, நவ. 3: சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியின் முதிர்ச்சியற்ற மற்றும் பொறுப்பற்ற செயலால் தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) அழிந்து வருகிறது என்று பாஜக எம்.பி. மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அன்புமணியை சுகாதாரத் துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் மேனகா காந்தி.

“அன்புமணியின் செயல்பாடுகள் மீது புகார் தெரிவித்து ஆயிரக்கணக்கான புகார் கடிதங்கள் உங்களுக்கு வந்தவண்ணம் உள்ளன. அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் எம்.பி.க்கள் நிலைக்குழு உறுப்பினர்கள் அன்புமணியின் நடவடிக்கை மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீட்டிக்க நீங்கள் அனுமதிப்பது ஆச்சர்யமாக உள்ளது’ என்று கடிதத்தில் மேனகா குறிப்பிட்டுள்ளார்.

“அவரை பதவியில் இருந்து நீக்கினால் உங்களுக்கு ஏற்படும் அரசியல் நெருக்கடி எனக்குப் புரிகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையையே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான ஏழைகளின் மீது கருணை காட்டுங்கள். உங்களது அரசியல் லாபம் முக்கியமா? லட்சக்கணக்கான மக்களின் சுகாதாரமா? எது முக்கியம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ எனவும் அந்தக் கடிதத்தில் மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Posted in AIIMS, Anbumani Ramadas, BJP, Cabinet, Healthcare, Menaka Gandhi, PMK, Ramadoss, Venugopal | 2 Comments »

Rajarajan awards for Thamizh Scholars

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

ராஜராஜ சோழன் சதயவிழா: தமிழறிஞர்கள் இருவருக்கு ராஜராஜன் விருது

தஞ்சாவூர், நவ. 3: தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழாவையொட்டி தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இருவருக்கு மாமன்னர் ராஜராஜன் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் கோயிலை நிர்மாணித்த மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,021 ஆண்டு சதய விழா பெரியகோயில் வளாகத்தில் நடைபெற்றது.

புதன்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில்

  • மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம்.
  • தமிழக அமைச்சர்கள் சி.நா.மீ. உபயதுல்லா,
  • கோ.சி.மணி,
  • அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே,
  • மாவட்ட ஆட்சியர் சி. விஜயராஜ் குமார் பங்கேற்றனர்.

விழாவில் தமிழறிஞர்கள் பாவலரேறு பாலசுந்தரம், லியோ ராமலிங்கம் ஆகியோருக்கு மாமன்னர் ராஜராஜன் விருதுகளை அமைச்சர்கள் வழங்கிப் பாராட்டினர்.

Posted in Leo Ramalingam, Literature, Paavalarezhu Balasundaram, Rajarajan, Recognition, Scholars, Tanjore, Thamizh, Thanjavur | 2 Comments »

Study: Cluster Bombs Overwhelmingly Kill, Maim Civilians

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

கொத்துக் குண்டுகளால் அதிகமான பாதிப்பு பொதுமக்களுக்கே

அபாயகரமான கொத்துக் குண்டு
அபாயகரமான கொத்துக் குண்டு ஒன்று

கொத்துக் குண்டுகளால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண பொதுமக்களே , அதில் மூன்றில் ஒரு பங்கினர் சிறார்கள் என்று ஹண்டிகேப் இண்டர்னேஷனல் என்ற பிரச்சாரம் செய்யும் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

24 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த அமைப்பு, பரந்த ஒரு பகுதியில் குண்டுகளை தூவும் இந்த ஆயுதம் 11,000க்கும் மேற்பட்ட மக்களை கொன்றோ அல்லது ஊனப்படுத்தியோ இருப்பதாக கண்டறிந்திருக்கிறது.

ஆனால், ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் வியட்நாம் போன்ற இடங்களிலிருந்து முழுமையான தகவல்கள் கிடைக்காததால், இந்த புள்ளிவிவரம் உண்மையில் இன்னும் பத்துமடங்காக அதிகரிக்கக்கூடும் என்று அது கூறுகிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வெடிக்காத குட்டிக் குண்டுகளை கவனக்குறைவாக நடந்துகொண்டு வெடிக்கச்செய்த சிறுவர்கள் என்று
கூறப்படுகிறது.

Posted in Afghanisthan, China, cluster bombs, Fatal Footprint, Handicap International, Hezbollah, Iraq, Israel, Lebanon, Russia, USA, War | Leave a Comment »

Delhi University to honour Amitabh, Sheila Dikshit, RK Laxman

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

நடிகர் அமிதாப்பச்சனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: டெல்லி பல்கலைக்கழகம் வழங்குகிறது

புதுடெல்லி, நவ. 2-

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கடந்த ஜுலை மாதம் இங்கிலாந்தில் உள்ள மான்ட் போர்ட் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் பிரான்ஸ் அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அமிதாப் பச்சனின் திரையுலக சாதனை களை பாராட்டி 4-ந் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்க டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இது பற்றி டெல்லி பல்கலைக்கழக பதிவாளர் ஏ.கே.துபே கூறும் போது, டெல்லி பல்கலைக்கழகம் முதன் முதலாக திரையுலகைச் சேர்ந்த ஒருவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. அமிதாப்பச்சன் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன் னாள் மாணவரும் கூட அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க கடந்த ஆண்டே முடிவு செய்தோம்.

ஆனால் ஒரு சில காரணங்களால் அது தள்ளி வைக்கப்பட்டது. நாங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு முன்பே மான்ட் போர்ட் பல்கலைக்கழகம் வழங்கி விட்டது என்றார்.

அமிதாப்பச்சன் தவிர

  • டெல்லி முதல்-மந்திரி ஷீலாதீட்சித்,
  • விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்,
  • எழுத்தாளர் மகஸ்வேதா தேவி,
  • கார்ட்டூன் ஓவியர் ஆர்.கே.லட்சுமன்,
  • டாட்டா நிறுவன அதிபர் ரத்தன் டாட்டா

ஆகியோருக்கும் 4-ந் தேதி டெல்லி பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.

Posted in Amitabh, CNR Rao, Delhi University, Doctorate, Honorary, Kirori Mal College, Mahashweta Devi, Ratan Tata, RK Laxman, Romila Thapar, Sheila Dikshit, SK Vij | Leave a Comment »

Orissa temple bars Dalits’ entry

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

ஒரிசா மாநிலத்தில் தடையை மீறி கோவிலில் நுழைய தலித்துகள் முடிவு

புவனேஸ்வரம், நவ. 2-

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே உள் ளது. கரீடகார் கிராமம் இங்குள்ள ஜெகனாதர் கோவிலில் பல ஆண்டுகளாக தலித்துகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங் குள்ள உயர் அதிகாரிகள் தலித்துகள் கோவிலில் நுழைந்தால் புனிதத்தன்மை கெட்டு விடும் என்று சொல்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக் கோவிலுக்கு தலித் இன சிறுவன் ஒருவன் சாமி கும்பிட சென்றான். அப்போது அங்கிருந்த அர்ச்சகர்கள் அந்த தலித் சிறுவனை அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த அவனை கோவிலுக்கு வெளியே தூக்கி வீசிவிட்டு சென்றனர்.

அர்ச்சகர்களால் கடுமை யாகத்தாக்கப்பட்ட அவனுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கோவிலுக்குள் சாமிகும்பிட சென்ற தலித் சிறுவன் தாக் கப்பட்ட சம்பவம் சுற்று வட்டார கிராமங்களில் காட் டுத்தீயாய் பரவியது. உயர்சாதி அர்ச்சகர்களின் காட்டு மிராண்டித் தாக்கு தலை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தினார்கள்.

இந் நிலையில் அப்பகுதியில் உள்ள அம்பேத்கார் லோகியா விகார் மஞ்ச்முடுளி இயக்கத்தை சேர்ந்தவர்கள் 19-ந்தேதி ஜெகனாதர் கோவிலில் தடையை மீறி உள்ளே நுழைய முடிவு செய்துள்ளனர். இதற் காக ஏராளமான தலித் இளைஞர்களை திரட்டி வரு கிறார்கள்.

இப் போராட்டத்திற்கு அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தடையை மீறி கோவிலில் நுழையும் தலித்துகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறும்போது, பல ஆண்டு காலமாக தலித்துகள் ஜெகனாதர் கோவிலுக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உள்ளே நுழைந்தால் கோவிலின் புனிததன்மை கெட்டுப்போவதுடன் நாங்கள் இதுநாள்வரை காத்து வந்த கோவிலின் பாரம்பரியமும் பெருமையும் அழிந்து விடும் என்றார்.

தலித்துகள் உயர்சாதி அர்ச்சகர்கள் இடையே மோதல் உருவாகி இருப்பதால் அக் கோவிலைச்சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Posted in Ambedkar Lohia Vichar Manch, Ban, Caste, Chaitanya P Majhi, Dalit, Entry, EVR, Hinduism, Jagannath temple, Kendrapara, Orissa, Periyar, Puri, Tamil, Temple | 1 Comment »

Iraa Sezhiyan – ‘Reason yet to be given for the Meeting Cancelation’

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

காவல்துறையினரின் கடமை

இரா. செழியன்

ஒரு நாட்டில் மக்களுக்குத் தேவையான வசதிகள் பல முனைகளில் வேகமாகப் பரவியும் வளர்ந்தும் வரும் நிலையில், அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களும் பொறுப்புகளும் அதிகமாகின்றன. அவற்றை ஒட்டி நாட்டின் சட்டங்களும் வேலைத் திட்டங்களும் எண்ணற்ற அளவில் விரிவடைந்து வருகின்றன.

மக்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் செய்யப்பட வேண்டிய பணிகளை அரசாங்கம் பல துறைகளில் உள்ள அதிகாரிகள் மூலம், நிறைவேற்ற வேண்டிய நிலைமை இருக்கிறது. நிர்வாகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்றவாறு, நுணுக்கமாகச் சட்டத்தில் எழுதி வைக்க முடியாது. அதற்காக பணிகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு செய்யப்படுகிறது. நடைமுறையில் உண்டாகும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு உசிதப்படி அதிகாரிகள் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

உசிதப்படி செயல்பட வேண்டும் என்பதால், மனம் போன போக்கில் ஒவ்வோர் அதிகாரியும் தமக்குத் தரப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. சட்டத்தை மீறி, சட்டத்தின் நோக்கத்தை மீறி, தேவையற்ற நியாயமற்ற முறையில் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை ஓர் அதிகாரி பயன்படுத்தினால், அது கொடுங்கோன்மை மிக்க எதேச்சாதிகாரமாக ஆகிவிடும்.

கலவரத்திலும் வன்முறையிலும் ஒரு கும்பல் ஈடுபட்டால், சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸôர் எடுக்க வேண்டும் என்பதற்குச் சட்டம் விதிமுறைகளை வகுத்திருக்கிறது. எச்சரிக்கை, கண்ணீர்ப்புகை, தடியடி, துப்பாக்கிப் பிரயோகம் என்பவற்றில் ஒன்றை உசிதப்படி அதிகாரிகள் கையாள வேண்டும். அப்படி இல்லாமல், எடுத்ததெற்கெல்லாம் துப்பாக்கிப் பிரயோகத்தை போலீஸ் பயன்படுத்தக் கூடாது.

அக்டோபர் 24, 2006ஆம் நாளன்று ராஜாஜி பொதுவிவகார மையத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம், சென்னைப் போலீஸ் கமிஷனரிடமிருந்து அனுமதி வழங்கப்படாத காரணத்தால், ரத்து செய்யப்பட்டது.

பொதுவான அமைதி – ஒழுங்கு பாதிக்கப்படக்கூடிய நிலைமைகளில், இபிகோ 144 பிரிவின் கீழ் கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதிக்கிறது. கூட்டங்கள் – ஊர்வலங்கள் நடத்துவதை அனுமதிக்கவும் தடுப்பதற்குமான அதிகாரம் சென்னைப் போலீஸ் சட்டம் 1888-ன்கீழ் சென்னைப் போலீஸ் கமிஷனருக்குத் தரப்பட்டிருக்கிறது. அதன்படி கூட்டத்தை நடத்த முற்படுபவர் தருகிற மனுவை ஆராய்ந்து, கூட்டத்தை நடத்துவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் போலீஸ் ஆணையர் அனுமதி வழங்கலாம் அல்லது அனுமதி வழங்காமற் போகலாம்.

அனுமதி வழங்காத நிலைமையில் போலீஸ் கமிஷனர் கையாள வேண்டிய முறைகளை சட்டம் தெளிவுபடுத்தி இருக்கிறது. கூட்டம் நடத்துபவருக்கு வாய்ப்பு அளித்து, நேரிடையாக அவரோ, அவருடைய வழக்குரைஞரோ கூட்டம் நடத்துவதற்கு உள்ள தமது வாதங்களை முன்வைக்கலாம்.

அதன்பிறகும் அனுமதி வழங்க முடியாது என்று போலீஸ் கமிஷனர் முடிவு எடுத்தால் அனுமதி வழங்காததற்கான காரணங்களை எழுத்து மூலம் காட்டி, அனுமதி வழங்க மறுக்கும் உத்தரவைத் தரலாம்.

அக்டோபர் 24 கூட்டத்திற்கான மனுவின் மீது, தமது வாதங்களை முன்வைக்க ராஜாஜி மையத்தைச் சேர்ந்தவருக்கோ, அவரது வழக்குரைஞருக்கோ, வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதன்பிறகு, சட்டப்படி அனுமதி வழங்கப்படாததற்கான காரணத்தை எழுத்து மூலம் உத்தரவில் தந்திட, சென்னைப் போலீஸ் கமிஷனர் தவறிவிட்டார்.

ஒருவேளை எழுத்து மூலம் காரணங்களை எழுதி போலீஸ் கமிஷனர் தமது அலுவலகக் கோப்பில் வைத்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால், முடிவில் அனுமதி கேட்டவருக்கு கூட்டம் நடத்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று ஏற்பட்டுவிட்டது. சட்டத்தை மீறி கூட்டத்தை நடத்த விரும்பாமல், கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பதற்கான அறிவிப்பை பொதுமக்களின் பார்வைக்கு கூட்ட அமைப்பாளர்கள் வைத்தார்கள்.

கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வரவில்லை என்றால், கூட்டம் நடத்துவதற்குத் தடை போடப்படவில்லை என்று எடுத்துக்கொண்டு கூட்டத்தை நடத்தியிருக்கலாமே என்று சிலர் நினைக்கலாம்; மௌனம் சம்மதம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கூறலாம்.

ஆனால் போலீஸ் சட்டத்தில் 6-வது விதிமுறையில் ஒரு கடும் எச்சரிக்கை இருக்கிறது. போலீஸ் அனுமதியைப் பெற வேண்டிய கட்டாயம் அமலில் இருக்கும்பொழுது, அனுமதி பெறாமல் யாராவது கூட்டம் நடத்தினால், ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது ஒரு மாதத்துக்கு உட்பட்ட சிறைவாசம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்கான குற்றத்துக்கு அவர் ஆளாக நேரிடும் என்பதுதான்.

நிர்வாகத்தின் உள் அமைப்பில் எத்தகைய ஏற்பாடுகளைச் செய்து கொண்டாலும், சட்டத்தின்படி பொறுப்பை வகிப்பவர் சட்டத்தில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனுமதி வழங்குவதைக் கவனித்திருக்க வேண்டும். வெளிப்படையாக நமக்குத் தெரிவது, கூட்டம் நடத்துவதற்கான அனுமதி அன்று வரவில்லை, கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பவைதாம்.

பொதுக்கூட்டம், தனிப்பட்ட ஓர் அமைப்புக்காகவோ, ஒரு சிலருக்காகவோ ஏற்பாடு செய்யப்பட்டதல்ல, பொதுமக்கள்பட்ட இன்னல்களை வைத்து, பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள பொதுமக்களுக்கு உரிமை இருக்கிறது. எத்தகைய காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு அனுமதி தரப்படவில்லை என்பது தெரிந்தால், வருங்காலத்தில் கூட்டம் நடத்துபவர்களுக்கு, அது உதவியாக இருக்கும்.

மேலும், ஓர் அதிகாரிக்கு ஒரு செயல்பாட்டுக்கான அதிகாரம் தரப்பட்டிருக்கிறது என்றால், அதனை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு அவரைச் சார்ந்ததாக ஆகும். எந்த அளவு அதிகாரி பொறுப்பை நிறைவேற்றினார் என்பதுடன் நிறைவேற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால், அதனை ஆராய்ந்து தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் மக்களாட்சி முறையில் ஏற்படுகிறது.

கூட்டம் நடைபெறுவதற்கான அனுமதியை வழங்குவதற்கும் வழங்காமற் போவதற்கும் காவல்துறை ஆணையருக்கு சில வழிமுறைகளை சட்டம் வகுத்திருக்கிறது. ஆனால் அந்த வழிமுறைகளின்படி சென்னை காவல்துறை நடந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் எவை என்பதை பொதுமக்களுக்கு அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

Posted in 144, atrocity, Ban, cancel, Cho, Cho Ramaswamy, Commissioner, Democracy, DMK, Era Sezhiyan, Iraa Sezhiyan, Karunanidhi, Meeting, MK, Police, POTA, TADA, Tamil, Tamil Nadu, Thuglaq, VR Lakshminarayanan | Leave a Comment »

Rs 16,000-crore thermal power plant at Cheyur by March next

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

செய்யூர் அருகே 2000 ஏக்கர் பரப்பில் ரூ.16000 கோடியில் அனல் மின் நிலையம்

காஞ்சிபுரம், நவ. 2: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 2000 ஏக்கர் பரப்பில், 4000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையத்துக்கு வரும் 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்படும் என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.

செய்யூரில் அவர் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:

மறைந்த மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் காலத்தில் இத்திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டது. பின்னர் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இத்திட்டம் குறித்து மத்திய அரசுக்கு எடுத்துரைத்தோம். தற்போதைய மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மீண்டும் இத்திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

செய்யூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய பகுதியில் இதற்காக ஏற்கெனவே 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அனல் மின் நிலையம் அமைக்கப்படும்.

தேசிய அனல் மின் கழகம்

தேசிய அனல் மின் கழகம் இத்திட்டத்தை ரூ.16 ஆயிரம் கோடியில் செயல்படுத்துகிறது. இத்திட்டத்துக்கு எந்த வரியும் விதிக்கப்படாது. நாட்டிலேயே முதன் முறையாக மெகா அனல் மின் நிலையம் இம்முறையில் அமைக்கப்படுகிறது.

வரும் 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் இத்திட்டத்துக்கு மத்திய மின்சார அமைச்சர் ஷிண்டே அடிக்கல் நாட்டுகிறார். இரண்டரை ஆண்டுகளில் திட்டம் முடிவடையும்.

இதன் மூலம் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் அவர்களுக்கு தேவையான குடியிருப்புகள், அலுவலகங்கள் நெய்வேலியை போன்றே ஏற்படுத்தப்படும். இத்திட்டம் முடிந்தால் செய்யூர் பகுதி மிகுந்த வளர்ச்சி பெறும் என்றார்.

Posted in Arcot N Veerasamy, Cheiyoor, Cheyur, Electricity, Generation, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Mohan Kumaramangalam, National Thermal Power Corporation, Neyveli, NTPC, Power plant, Seiyoor, Shinde, thermal power plant, TNEB | Leave a Comment »

OBCs make up 41% of India’s population

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்டோர் 41 சதவீதமே!

சாம்பிள் சர்வே தகவல்

புதுதில்லி, நவ. 2: இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 41 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பு (என்எஸ்எஸ்ஓ) நடத்திய மாதிரிக் கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அறிவித்தார்.

அது முதற்கொண்டு நாட்டில் இதர பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகை தொடர்பான பொது விவாதம் நடைபெற்று வந்தது. இதர பிற்படுத்தப்பட்டோர் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் உள்ளனர் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கு பலதரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

கிராமப்புறங்களில் 79,306 வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 45,374 வீடுகளிலும் இந்த மாதிரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டோர் 20 சதவீதமும் பழங்குடியினர் 8 சதவீதமும் உள்ளதாக மாதிரிக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27.5 சதவீதம் வழங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனுக்களை கடந்த மாதம் 16ம் தேதி விசாரித்த நீதிபதிகள் அரிஜித் பசாயத், எல்.எஸ். பாண்டா ஆகியோரடங்கிய பெஞ்ச், “1930ம் ஆண்டுக்குப் பிறகு இதர பிற்படுத்தப்பட்டோரைக் கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை; இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கை எவ்வாறு அறிவிக்கப்பட்டது’ என்று கேள்வி எழுப்பியது.

“இட ஒதுக்கீடு தொடர்பான முழு விவரங்களைக் கையில் வைத்திராமல் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அறிவிக்கலாமா? இது விதிகளை அறிவிக்காமல் விளையாட்டில் இறங்கியது போன்றது’ எனவும் நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர்.

இதர பிற்படுத்தப்பட்டோரில் 65 சதவீதம் பேரும் பழங்குடியினரில் 52 சதவீதம் பேரும் இதர வகுப்புகளைச் சேர்ந்த 78 சதவீதம் பேரும் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 34 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்களாக உள்ளதாகவும் மாதிரிக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Posted in Creamy Layer, India, Literacy, Mandal Commission, National Sample Survey Organisation, NSSO, OBC, Other Backward Classes, Population, Reservation, SC/ST, scheduled castes, scheduled tribes, Statistics, VP Singh | Leave a Comment »