Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 1st, 2006

PW Botha – Apartheid-era South African president dies

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

மறைந்த ஜனாதிபதிக்கு மண்டேலா அஞ்சலி

செவ்வாய்க்கிழமையன்று, இறந்த, 90 வயதான முன்னாள் தென்னாப்ரிக்க அதிபர் பி.டபிள்யூ,போத்தாவிற்கு அஞ்சலி தெரிவித்து நெல்சன் மண்டேலா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் போத்தா
முன்னாள் அதிபர் போத்தா

முன்னாள் அதிபர் போத்தா நிறவெறிக்கொள்கையின் ஒரு குறியீடாகவே விளங்கினார் என்றும், ஆனால், அவர் நாட்டில் ஒரு அமைதியான பேச்சுவார்த்தைமூலமான, தீர்வை நோக்கிய நடவடிக்கைகளை பின்னார் எடுத்தார் என்பதையும் நெல்சன் மண்டேலா நினைவு கூர்ந்தார்.

தேசத்தின் ஒரு முன்னாள் தலைவர் என்ற வகையில், போத்தாவுக்கு அரசரீதியான இறுதிச்சடங்குகள் பெறுவதற்கு உரிமை இருந்தது என்றாலும், அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட இறுதிச்சடங்கை நடத்த முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

போத்தா, நெல்சன் மண்டேலாவை சிறையிலிருந்து விடுதலை செய்ய மறுத்தற்காகவும், நிறவெறிக்கொள்கை அமைப்புக்கு எதிராக எழுந்த எதிர்ப்பை அடக்க செய்த முயற்சியில் தோல்விகண்டதற்காகவும், அவசர நிலைப் பிரகடனத்தைச் செய்து ஆட்சி செய்தற்காகவுமே நினைவு கூறப்படுவார் என்று பிபிசியின் தென்னாப்ரிக்கச் செய்தியாளர் கூறுகிறார்.

Posted in African National Congress, Apartheid, Fear, Great Crocodile, Johannesburg, PW Botha, South Africa, Tamil | Leave a Comment »

Mu Mariyappan – Language based State Formation’s Golden Anniversary

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

மாநிலங்களின் பொன்னாள்!

மு. மாரியப்பன்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாளை வழக்கம்போல் இந்த ஆண்டும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள் வெகு சிறப்புடன் கொண்டாடுகின்றன. மாநிலங்கள் உருவான பொன் விழா ஆண்டாகவும் இவ்வாண்டு அமைந்திருக்கின்ற காரணத்தால், மேற்கண்ட மாநிலங்களில் இன உணர்வுடன் கூடிய நிகழ்ச்சிகள் களைகட்டும் என்பது உறுதி.

இந் நாளை “ராஜ்யோத்சவ தினமாக‘க் கொண்டாடும் கர்நாடக அரசு, இந்த ஆண்டு கூடுதலாக, மாநில உருவாக்கத்திற்குத் துணை நின்ற எஸ்.ஆர். பொம்மை, ரங்கநாத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் 36 பேருக்கு கட்சி வேறுபாடுகளுக்கு இடமின்றி மரியாதை செலுத்துகிறது.

மலையாள மொழிக்கும், கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மரியாதை செலுத்துவதோடு, நவம்பர் மாதம் முழுவதும் பல்வேறு விழாக்களுக்கு கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதுவரை இந்த நாளை, சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த பிற மாநிலங்கள் மட்டுமே விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தன. பொன் விழா ஆண்டான இந்த ஆண்டுதான் தமிழகத்தில் இந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியாக தற்போது இருந்து வரும் பெல்காம் மாவட்டத்தை மராட்டிய மாநிலத்தோடு சேர்க்க வேண்டும் என்ற கிளர்ச்சி, மொழிவாரி மாகாணங்கள் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் அது கர்நாடகத்தின் ஒரு பகுதி எனக் கூறி, அதனை ஒருபோதும் மராட்டியத்தோடு இணைக்க விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் கர்நாடக அரசு, மிகச் சமீபத்தில் மாநிலம் முழுவதும் கடையடைப்பினை நடத்தியதோடு, பெல்காமை கர்நாடகத்தின் மற்றுமொரு தலைநகராக மாற்றுவதற்குத் திட்டமிட்டும் வருகிறது.

மராட்டியத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பெல்காம் வாழ் மக்களோடு இணைந்து, மராட்டிய மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உள்ளிட்ட அங்குள்ள அரசியல் தலைவர்கள் பெரும் ஆதரவு காட்டி வருகின்றனர். பெல்காம் மாவட்டத்தின் மராட்டிய அமைப்பான “ஏக் கிரண் சமிதி‘க்குத் தற்போது கர்நாடக சட்டசபையில் இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும், பெல்காம் மாநகராட்சியின் மேயராக இவ்வமைப்பைச் சேர்ந்த மராட்டியரே இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொழிவாரி மாகாணங்கள் தோற்றுவிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, கர்நாடக மாநிலத்தின் வடக்கெல்லையாய்த் திகழும் பெல்காமிலுள்ள மராட்டியர்கள் மொழி வழி இன உணர்ச்சியின் அடிப்படையில், கன்னடர்களுக்குச் சற்றும் குறையாமல் போராடி வருகிறார்கள். ஒவ்வொரு மாநில மக்களின் அடி மனத்தில் கனன்று கொண்டிருக்கும் மொழி வழி இன உணர்வினையே இது காட்டுகிறது.

பிரிவினைக்கு முன்னதாக, சென்னை ராஜதானி என்றழைக்கப்பட்ட இன்றைய தமிழகம் உருவான வரலாற்றைச் சற்றே பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்ப் பகுதிகளைத் தவிர சென்னைக்கு வடக்கே விசாகப்பட்டினம் வரையில் ஆந்திரப் பகுதியும், மேற்குக் கடற்கரையில் கோகர்நாத்திலிருந்து காசர்கோடு வரையிலுள்ள கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்ட தென் கன்னடமும், அதோடு காசர்கோட்டிலிருந்து பாலக்காடு வரை மலையாளம் பேசும் பகுதியும் அன்றைய சென்னை ராஜதானியில் தான் இருந்தன.

இவையனைத்திற்கும் மேலாக விசாகப்பட்டினத்திற்கு வடக்கே ஒரிய மொழி பேசும் கஞ்சம் மாவட்டமும்கூட சென்னையோடு இணைந்திருந்தது.

பிரிவினைக் கிளர்ச்சி எழுந்த நேரத்தில் நீதிபதி பசல்அலி தலைமையில் உருவான “ராஜ்ய புனர் அமைப்பு கமிஷன்‘, மாநிலங்களுக்கான எல்லைகளை வரையறை செய்தது. அவ்வமைப்பு, ஹைதராபாத் சமஸ்தானத்திலுள்ள கன்னட மொழி பேசும் மாவட்டத்தையும், சென்னை மாநிலத்திலுள்ள தென் கன்னட மாவட்டத்தையும், மன்னர் ஆட்சியிலிருந்த மைசூரையும் சேர்த்து கர்நாடக மாநிலம் அமையப் பரிந்துரை செய்தது.

அதோடு தமிழகத்தோடு இணைந்திருந்த மலபார் மாவட்டத்தையும், மன்னர் ஆட்சியின் கீழிருந்த திருவாங்கூர் – கொச்சி ராஜ்யத்தையும் சேர்த்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. ஹைதராபாத் சமஸ்தானத்தில் தெலுங்கு மொழி பேசும் ஜில்லாக்களைப் பிரித்து ஹைதராபாத் ராஜ்யம் அமைக்கவும், பின்னர் தமிழகத்திலிருந்த தெலுங்கு மொழி பேசும் பகுதியை இணைத்து பரந்து விரிந்த ஆந்திரப்பிரதேசம் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.

இதற்குப் பிறகு எஞ்சியிருந்த நிலப்பகுதி சென்னை ராஜ்யம் என்று அழைக்கப்பட்டது.

தமிழகத்தின் வடக்கெல்லையும், தெற்கெல்லையும் சரியான முறையில் வரையறுக்கப்படாத காரணத்தால், தமிழ் மொழி பேசும் மக்கள் மிகுதியாக வாழ்ந்த திருப்பதி, ஆந்திரத்தோடு இணைந்துவிட்டது.

அதேபோல் தெற்கே தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய பகுதிகளையும் செங்கோட்டை தாலுகாவையும் தமிழகத்தோடு இணைக்க ராஜ்ய புனரமைப்புக் கமிஷன் பரிந்துரை செய்தது. ஆனால் தமிழ்நாட்டோடு இப்பகுதிகளை இணைப்பதற்கு அன்றைய திருவாங்கூர், கொச்சி அரசுகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தன.

அன்றைக்கு தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் தெற்கு மற்றும் வடக்கு எல்லைகளைக் காப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திராவிடர் கழகத் தலைவராக இருந்த பெரியாரும்கூட,

“ஆந்திரத்தில் இருந்தாலென்ன, தமிழ்நாட்டில் இருந்தாலென்ன மொத்தத்தில் திராவிடத்தில் தானே இருக்கின்றன’ என்று குடியரசில் எழுதினார்.

தமிழரசுக் கழகத்தின் தலைவர் ம.பொ.சி., தமிழகத்து எல்லைகளை மீட்க மாபெரும் இயக்கத்தை நடத்தினார். தமிழகத்திலுள்ள எந்தக் கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் மக்களை நம்பிக் களத்தில் இறங்கியது தமிழரசுக் கழகம். தமிழக மக்களும் பெரும் ஆதரவை நல்கினர். தலைநகரான சென்னையைக் காத்து, தமிழகத்தின் எல்லைகளையும் மீட்டு தமிழரசுக் கழகம் பெரும் வெற்றி கண்டது.

வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளை மீட்பதற்காக தமிழகம் கொடுத்த விலை மிகவும் நெகிழ்ச்சிக்குரியது. இது குறித்து ம.பொ.சி. தனது “புதிய தமிழகம் படைத்த வரலாறு’ எனும் நூலில், 1946 தொடங்கி பத்து ஆண்டுகள் நடைபெற்ற எல்லைப் போராட்டங்களைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார். தொடர்ச்சியான, அதேசமயத்தில் இடைவிடாத போராட்டத்தின் விளைவாக திருவாங்கூர் ராஜ்யத்தின் தென்பகுதியிலுள்ள ஐந்து தாலுகாக்களும், வடபகுதியில் திருத்தணி தாலுகா முழுவதும் தமிழகத்தோடு இணைக்கப்பெற்றன. மேலும், ஆந்திரத்திலிருந்து 394 கிராமங்கள் தமிழகத்தோடு இணைந்தன. 1960ஆம் ஆண்டு திருத்தணியின் இணைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது.

தமிழக எல்லைப்புறங்களில் இணைப்புக் குறித்த வெற்றி விழாக் கூட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. அந்தச் சமயத்தில் தமிழரசுக் கழகத்தின் போராட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அண்ணா,

“தமிழர்கள் முயன்றால் குன்றத்தை மட்டுமல்ல, திராவிட நாடு என்ற பெரும் நிலப்பரப்பையே மீட்க முடியும்’ என்று கூறியதோடு, “அவர்கள் (தமிழரசுக் கழகத்தார்) ஏன் நம் பக்கம் வரவில்லை என்ற எண்ணம் எனக்குப் பிறக்கிறது. சிறிய குன்றோடு நின்றுவிடாமல் மலை போன்ற அந்தக் கட்சி, நம்மோடு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று மனதாரப் பாராட்டி மகிழ்ந்தார்.

அந்த நேரத்தில் தி.மு.க., திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையைக் கைவிடவில்லை என்பதையும் நினைவிலிருத்த வேண்டும்.

தமிழக எல்லைகளைக் காப்பாற்ற நடைபெற்ற போராட்டங்களில் பல உயிர்களை இழந்துதான் இன்றைய தமிழகம் உருவாகியிருக்கிறது. பிற மாநிலங்களைக் காட்டிலும் எல்லைப் போர்த் தியாகிகள் தமிழகத்திலே அதிகம். ஆனால் அவர்களுக்காகத் தமிழகம் என்ன செய்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால், வேதனைதான் மிஞ்சும்.

(இன்று மொழிவாரி மாநிலங்கள் அமைந்த நாள்)

Posted in 50, Anna, Anniversary, EV Ramasamy, EVR, India, Karnataka, Kerala, Language, Malayalam, Periyar, States, Tamil Nadu | Leave a Comment »

Inclusion of the Tamil Nadu Reservation Act in the IX Schedule is unconstitutional: KM VIjayan

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

தமிழக இடஒதுக்கீடு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்த்தது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜயன் வாதம்

புதுதில்லி, நவ. 1: தமிழக இட ஒதுக்கீடு சட்டத்தை, நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தாத வகையில், அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்த்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு வாதிட்டார் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன்.

சட்டங்களை இயற்றி அவற்றை 9-வது அட்டவணையில் சேர்க்க நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான 9 நீதிபதிகள் பெஞ்ச், திங்கள்கிழமை முதல் விசாரித்து வருகிறது. தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் உள்பட பல்வேறு மாநில சட்டங்களை இதில் சேர்த்தது குறித்தும் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

ஒரு சட்டம் இயற்றப்பட்டு, அதை 9-வது அட்டவணையில் சேர்த்து விட்டால், அது நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்ற பாதுகாப்பைப் பெற்று விடுகிறது.

மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமனை அடுத்து, “வாய்ஸ்’ என்ற நுகர்வோர் அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை வாதிட்ட விஜயன், கேசவானந்த் பாரதி வழக்கில் 1973-ம் ஆண்டு நீதிமன்றத்துக்குப் பிறகு தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் 1994-ம் ஆண்டு 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டதால், அது நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது என்றார்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 31 (ஏ)-ன் கீழ் நிறைவேற்றப்பட்ட சட்டங்களைத் தவிர, மற்ற சட்டங்களை 9-வது அட்டவணையில் சேர்க்க முடியாது. ஆனால், தமிழக இட ஒதுக்கீடு சட்டம் 31 (ஏ)-வின் கீழ் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

எழுத்து மூலம் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், 9-வது அட்டவணை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். 94 சதம் மக்கள் இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிவித்துவிட்ட பிறகு, இட ஒதுக்கீடு அர்த்தமற்றதாகிவிட்டது. தமிழக இட ஒதுக்கீடு சட்டம், அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும், அதை அமல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Constitution, Fali Nariman, fraud, Harish Salve, judicial review, Keshavanand Bharti, KM Vijayan, Ninth Schedule, Reservation Act, Supreme Court, Tamil Nadu, Voice | 1 Comment »

Islands sinking in Sunderbans near Kolkata

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

கொல்கத்தா அருகே இரண்டு தீவுகள் கடலில் மூழ்கின

கொல்கத்தா, நவ. 1: பூமியின் தட்பவெப்பநிலை மாறிவருவதால் கடல்நீர் மட்டம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டிய சுந்தரவன டெல்டா பகுதியில் இரண்டு தீவுகள் கடலில் மூழ்கிவிட்டன.

இதுகுறித்து ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தின் கடல் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் சுகதா ஹஸ்ரா கூறியது:

பூமியின் தட்பவெப்ப நிலை மாறிவருகிறது. இதன்காரணமாக கடல்நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. அத்துடன் கடல் அரிப்பும் தொடர்கிறது. இதன்காரணமாக மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டியுள்ள சுந்தரவன டெல்டா பகுதியில் உள்ள நூறு தீவுகளில் இரண்டு தீவுகள் கடலில் மூழ்கிவிட்டன. இவற்றை செயற்கை கோள்கள் மூலமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

1940 களில் இருந்து இந்தத் தீவுகள் மூழ்கி வருகின்றன. லோகசாரா எனற தீவில் உள்ள மக்கள் ஏற்கெனவே பத்திரமான பகுதிக்கு மாற்றப்பட்டனர். சாகர் என்ற தீவின் 30 கிலோமீட்டர் தூரம் கடல் அரிப்பு காரணமாக காணாமல் போய்விட்டது என்றார்.

சுந்தரவனப் பகுதியில் உள்ள நூறு தீவுகளில் 10 ஆயிரம்பேர் வசிக்கின்றனர்.

Posted in Bedford, Biosphere Reserve, Calcutta, climate change, Environment, Global Warming, Global wraming, Jadavpur University, Lohachara, School of Oceanographic Studies, Sugata Hazra, Sunderbans, Suparibhanga | Leave a Comment »

Golden Jubilee of Tamil Nadu state formation – History & Memoirs

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

பொன் விழா கொண்டாடும் தமிழ் மாநிலம்: எல்லை காக்க 50 ஆண்டுகளுக்கு முன் நடத்திய போராட்டம்

பா. ஜெகதீசன்

சென்னை, நவ. 1: “தமிழ் மாநிலம்’ அமைந்த பொன் விழாவை தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தற்போது கொண்டாடுகின்றன.

சென்னையையும், தனது எல்லைகளையும் காக்க சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் நடத்திய போராட்டங்களும், அவற்றில் ஈடுபட்டவர்கள் செய்த தியாகங்களும் மறக்க முடியாதவை.

சுதந்திரம் அடைந்தபோது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் தமிழகப் பகுதிகளும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்டவற்றின் சில பகுதிகளும் இடம் பெற்றிருந்தன.

தமிழகத்தின் வடக்கு எல்லை திருப்பதி வரை பரவி இருந்ததாகப் பண்டைய இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரு காலகட்டம் வரை வடார்க்காடு மாவட்டத்தில் தான் திருப்பதி இருந்தது.

நாடு சுதந்திரம் அடைந்த மறுநாள் (16.8.1947) ம.பொ. சிவஞானம் தனது ஆதரவாளர்களுடன் திருப்பதிக்குச் சென்றார். “திருப்பதி தமிழர்களுக்கே சொந்தம்’ என முழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் ம.பொ.சி.க்கு எதிராகப் பதில் போராட்டம் நடத்தினர்.

“தமிழகத்திடம் இருந்து சென்னையையும் மீட்போம்’ என ஆந்திரத் தலைவர்களில் ஒருவரான என்.ஜி.ரங்கா அப்போது பிரகடனம் செய்தார்.

ஒருமித்த எதிர்ப்பு: சென்னை ராஜதானியில் இருந்து ஆந்திரப் பகுதிகளைப் பிரித்து தனி மாநிலத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

சென்னை நகரத்தைத் தங்களுக்குத் தரும்படி ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். இதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமே குரல் கொடுத்தது.

தங்களது இடைக்காலத் தலைநகராக சிறிதுகாலத்துக்கு சென்னையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி ஆந்திரம் கேட்டது. அதை தமிழகம் ஏற்கவில்லை.

ம.பொ.சி. நடத்திய வடக்கு எல்லைப் போராட்டம்: தனி ஆந்திர மாநிலம் உருவானபோது அதுவரை தமிழகத்தில் இடம் பெற்றிருந்த சித்தூர் மாவட்டம் ஆந்திரத்தின் வசம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

அதை எதிர்த்து 1953 மே மாதத்தில் திருத்தணியில் ம.பொ.சி. மறியல் செய்தார். காவல் துறையின் தடியடியையும் பொருட்படுத்தாது, எல்லையை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் அவர். பின்னர் ராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தைத் தாற்காலிகமாக ஒத்தி வைத்தார்.

இதற்கிடையே, திருத்தணியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆந்திரத்தைக் கண்டித்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் புகுந்து, பொருள்களை உடைத்தனர். ரயில் நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். வன்முறையை ஒடுக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

பின்னர் ம.பொ.சி. விடுத்த வேண்டுகோளையடுத்து, அங்கு வன்முறை நின்றது.

தமிழகத்தின் வடக்கு எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணாததைக் கண்டித்து, அதே ஆண்டு ஜூலை 3-ம் தேதி திருத்தணியில் ம.பொ.சி. தடையை மீறி மறியல் செய்தார். கைது செய்யப்பட்ட அவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கமிஷன்கள் அமைப்பு: அப்போது பிரதமராக இருந்த நேருவிடம் முதல்வராக இருந்த ராஜாஜி பேசினார். “இரு மாநிலங்களின் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எல்லைக் கமிஷன் அமைக்கப்படும். எனவே, போராட்டங்களை நடத்த வேண்டாம்’ என நேரு வேண்டுகோள் விடுத்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, சில நாள்கள் சிறை வாசத்துக்குப் பிறகு ம.பொ.சி. விடுதலை ஆனார்.

எல்லைப் பிரச்சினையை தமிழகமும், ஆந்திரமும் சுமுகமாகப் பேசித் தீர்க்க முன் வந்தன. எனவே, எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க முதலில் அமைக்கப்பட்ட பசல் அலி கமிஷன் எத்தீர்வையும் தரவில்லை.

மேலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையில் உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே, புதிதாக படாஸ்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. 1.4.1960-ல் அக்கமிஷன் தனது தீர்ப்பை அளித்தது. அதன்படி திருத்தணி தாலுகா அப்படியே தமிழகத்துக்கு கிடைத்தது. அதேபோல, ஆந்திரத்தின் புத்தூர், சித்தூர் ஆகிய தாலுகாக்களில் இருந்தும் சில பகுதிகள் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன.

தெற்கு எல்லைப் போராட்டம்: அக்காலத்தில் திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தானத்தில் இடம் பெற்றிருந்த தமிழர் வாழும் பகுதிகளை மீட்க பெரும் போராட்டம் நடைபெற்றது.

1954 ஜூனில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நேசமணி தலைமை ஏற்று, போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். அவரது அழைப்பை ஏற்று, ம.பொ.சி. மூணாறுக்குச் சென்றார். அவரது முன்னிலையில் எல்லை மீட்கும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தது.

11 பேர் உயிர்த் தியாகம்: நேசமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 11.8.1954-ல் தென் திருவிதாங்கூரில் கல்குளம் தாலுகாவில் பேரணி நடைபெற்றது. மலபார் ரிசர்வ் போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பேரணியைக் கலைத்தனர். இதில் 11 தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.

இதையடுத்து திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தானத்தில் பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.

மாநிலங்களின் எல்லைகளைத் திருத்தி அமைக்க மத்திய அரசு அமைத்திருந்த பசல் அலி கமிஷன் 1955-ல் தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்தது. கல்குளம், செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு ஆகிய தாலுகாக்களை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என அந்த கமிஷன் கூறியது.

தமிழர்கள் அதிகம் வாழும் பீர்மேடு, தேவிகுளம் ஆகிய தாலுகாக்களைத் தமிழகத்துக்கு அளிக்க அந்த கமிஷன் மறுத்து விட்டது.

நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக நாட்டின் தெற்கு எல்லையான குமரி முனை தமிழகத்துக்குக் கிடைத்தது.

Posted in 50, Andhra Pradesh, Chithoor, History, Kanniyakumari, Kerala, Kumari, Ma Po Si, Ma Po Sivanjaanam, Nesamani, Puthoor, Rajaji, State, Tamil Nadu, Thirupathy, Thiruthani, TN | Leave a Comment »

Catholic MP loses seat for ‘misusing’ Pope’s name

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

முன்னாள் மத்திய அமைச்சர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

கொச்சி, நவ. 1: முன்னாள் மத்திய அமைச்சரும் கேரளத்திலுள்ள மூவாட்டுப்புழா தொகுதி எம்.பி.யுமான பி.சி.தாமஸ் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு மே 10-ம் தேதி மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் மூவாட்டுப்புழா தொகுதியில் இந்திய பெடரல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் இவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எம்.இஸ்மாயில் போட்டியிட்டார்.

529 வாக்குகள் வித்தியாசத்தில் தாமஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு எம்.பி.யானார். இந்தத் தேர்தலில் முறைகேடு மூலம் தாமஸ் வெற்றி பெற்றதாகக் கூறி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் இஸ்மாயில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் 81 பக்க தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

தேர்தலில் தாமஸ் முறைகேடு செய்தது உறுதியாகத் தெரியவந்துள்ளது. கத்தோலிக்க வாக்காளர்கள் அனைவரும் தனக்கு வாக்களிக்க வேண்டுமெனக் கோரி மூவாட்டுப்புழா தொகுதியில் ஏராளமான துண்டுப் பிரசுரங்களை தாமஸ் விநியோகித்துள்ளார். மதத்தின் பெயரால் இவ்வாறு வாக்கு கோருவது மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி தவறான செயலாகும்.

துண்டுப் பிரசுரங்களை அச்சடிக்க ஏற்பாடு செய்தது, அவற்றை அவர் விநியோகித்தது ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே அவர் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இஸ்மாயில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பதவி வகித்தவர் தாமஸ். அண்மையில் கேரள காங்கிரஸ் (ஜோசப்) கட்சியில் இவர் இணைந்தார்.

Posted in Campaign, catholicism, Christianity, CPI(M), Elections, Islam, John Paul II, Judge, Judgement, Kerala, Moovaattupuzha, MP, Muvattupuzha, PC Thomas, PM Ismail, Politics, Pope, Religion, voter | Leave a Comment »

Arjun on warpath, out to detoxify RSS schools

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

ஆர்எஸ்எஸ் நடத்தும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை: அர்ஜுன் சிங்

புதுதில்லி, நவ. 1: ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய மனிதஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் கூறினார்.

மாணவர் காங்கிரஸ் (என்எஸ்யூஐ) அமைப்பின் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தப் பள்ளிகள் குறித்து மத்திய கல்வி ஆலோசனை வாரிய (சிஏபிஇ) குழு ஓர் அறிக்கை அளித்துள்ளது. அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

பிஞ்சு மனத்தில் மதவெறி நஞ்சு கலக்கும் இந்த கல்வி நிறுவனங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

Posted in Arjun Singh, BJP, CABE, Cabinet, Central Advisory Board of Education, Children, Communalism, Education, HRD, Kids, RSS, Saraswathi Sisu Mandir, saraswati shishu mandir | Leave a Comment »

Dr Ramadas speech in PMK’s 50th anniversary of Tamil Nadu state creation

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை வர வேண்டும்: டாக்டர் ராமதாஸ் பேச்சு 

தமிழ்நாடு உருவான 50-வது ஆண்டு விழா பா.ம.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை தி.நகரில் நடந்த இந்த விழாவுக்கு ஜி.கே.மணி தலைமை தாங்கினார். ஏ.கே.மூர்த்தி எம்.பி. வரவேற்றார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதில் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழ்நாடு உருவான 25-வது ஆண்டு கொண்டாடிய பிறகு 50-வது ஆண்டில்தான் மீண்டும் கொண்டாடுகிறோம். ஆனால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் ஆண்டு தோறும் விழா நடத்துகிறது.

அடுத்த ஆண்டு முதல் பா.ம.க. ஒவ்வொரு ஆண்டும் இதை விழாவாக கொண்டாடும். தமிழ்நாடு உருவான பொன் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத் தேன். அதை அவர் ஏற்று கொண்டு அரசு விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்து இருக்கிறார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக எல்லையை காக்க நேசமணி, மா.பொ.சிவஞானம் போன்ற எத்தனையோ தலைவர்கள் போராடினார்கள். ராஜாஜியால்தான் சென்னை நமக்கு கிடைத்தது. தமிழ்நாட் டில் மட்டுமல்ல மத்தியிலும் தமிழ் ஆட்சி மொழியாக வர வேண்டும் என்று குரல் கொடுத்தோம்.

50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வரும் தீர்மானத்தை சி.சுப்பிரமணி யம் சட்டசபையில் அறிவித்து பிறவி பயனை அடைந்ததாக கூறினார்.

ஆனால் இன்று வரை நாம் பிறவி பயனை அடைய வில்லை. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கூச்சல் இடையில் தோன்றி மறைந்து விட்டது.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற உண்மையான நிலை உருவாக வேண்டும். தமிழ் ஆட்சி மொழியாகவும், நீதிமன்றங்களிலும் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ் இடம் பெற வேண்டும். இதற் காக போராடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் போராட வேண்டும்.

தமிழை காப்பதற்காக ஆஞ்கிலம் வேலியாக அமையும் என்று கூறினார்கள். ஆனால் ஆங்கிலம் தமிழ் பயிரை மேய்கிறது. இதை சொன்னால் என் மீது பாய்கிறார்கள்.

மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வர வற்புறுத்தி வருகிறோம். விமான அறிவிப்புகள் தமிழில் வர வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.

மத்திய அரசு தமிழ் அறிஞர்களுக்கு வழங்கும் விருதை தொல்காப்பியர் விருது, திருவள்ளுவர் விருது என்ற பெயரில் வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். இது நிச்சயம் நிறைவேறும். அனைவரும் சேர்ந்து தமிழை வளர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தமிழ் அறிஞர் கள் அரு.கோபாலன், தெய்வ நாயகம் உள்பட பலர் பேசி னார்கள். திருகச்சூர் ஆறுமுகம் எம்.எல்.ஏ., தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெய ராமன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Posted in 50, Anniversary, Creation, Dr Ramadass, Language, PMK, Ramadas, Ramadoss, Speech, State, Tamil Nadu, Thamizh | Leave a Comment »

Sathyabama – Biosketch : Chennai’s New Deputy Mayor

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

துணை மேயர் சத்யபாமாவின் எதிர் நீச்சல் வாழ்க்கை: குடிசைப் பகுதியில் இருந்து ரிப்பன் மாளிகை வந்தார்

சென்னை, நவ. 1-

சென்னையின் `வெள்ளை மாளிகை’ என்றழைக்கப்படும் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடம் வரலாற்று சின்னம் மட்டும் அல்ல. பெரிய பெரிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மேயராக, துணை மேயராக அமர்ந்து அலங்கரித்த இடம்.

அந்த ரிப்பன் மாளிகையில் சாதாரண சாமானிய ஏழைப் பெண் அதுவும் தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் துணை மேயராக அமர்ந்து சென்னை நகர மக்களுக்கு சேவை செய்ய வந்திருக் கிறார்.

44 வயதாகும் சத்யபாமா எழுதப்படிக்கத் தெரியாதவர். நெருக்கடி மிகுந்த பிராட்வே அருகே உள்ள ஆசீர்வாதபுரம் இவர் வசிக்கும் இடம். இது பங்களாக்கள் நிறைந்த இடம் அல்ல. குடிசைகள் நிறைந்த இந்தப் பகுதியில்தான் 10 அடி நீளம் 10 அடி அகலம் உள்ள சிறிய வீட்டில் சத்யபாமா வசிக்கிறார்.

தலித் இனத்தைச் சேர்ந்த இவர் வறுமையால் சிறு வயதில் பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லை. ஊது வத்தி தயார் செய்து கணவர் ரூபனுடன் வீடுகள், கடைகளில் படியேறி விற்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

இவர்களுக்கு ராஜா (21) என்ற மகனும், ரம்யா (18) மகளும் உள்ளனர். ஊதுவத்தி விற்பனை மூலம் மாதம் ரூ. 2 ஆயிரம் வருமானம் வரும். இதை வைத்து சென்னை நகரின் குடும்பம் நடத்துவது கஷ்டம் என்பதால் மகன் ராஜா ஒரு நகை கடையில் வேலை பார்த்து ரூ. 2 ஆயிரம் சம்பாதிக்கிறான். ரம்யாவும் கடையில் வேலை செய்து தன் பங்குக்கு குடும்பத்துக்கு பண உதவி செய்கிறார்.

சத்யபாமாவும், கணவர் ரூபனும் ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க.வின் அனுதாபிகள். இந்த நிலையில் மாநகராட்சி தேர்தலில் தான் வசிக்கும் 25-வது வார்டுக்கு சீட் கிடைத்து வெற்றியும் பெற்றார்.

155 கவுன்சிலர்களுடன் இவரும் ஒருவராகத்தான் இருந்தார். வெற்றி பெற்ற பின்பு ஒருநாள் வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து போர்ட்டபிள் டி.வி.யில் பார்த்துக் கொண்டு இருந்த போதுதான் சத்யபாமா துணை மேயராக அறிவிக்கப் பட்ட தகவலை தெரிந்து கொண்டார்.

குடிசைப் பகுதியில் இருந்து ரிப்பன் மாளிகைக்கு வந்தி ருக்கும் சத்யபாமா, தனது 44 ஆண்டு கால வாழ்க்கையில் பசி, பட்டினி, வறுமையை கண்டு கலங்காமல் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்தவர்.

இனி சென்னை நகர மக் களுக்காக உழைத்து முதல்- அமைச்சர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறினார் சத்யபாமா.

Posted in Biosketch, Chennai, Civic Polls, Dalit, Deputy Mayor, DMK, local body elections, Madras, Sathyabama, Tamil, Tamil Nadu | Leave a Comment »

Train rams into auto, 18 killed – Railway Ministry will not construct Underpass or Flyover

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

தரம் உயர்த்த தகுதி இல்லாததால் 17 பேர் பலியான புதுப்பாக்கத்தில் ரெயில் கேட் அமைக்க இயலாது: ரெயில்வே அதிகாரி விளக்கம் 

காஞ்சீபுரம் அருகே உள்ள புதுப்பாக்கம் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை ஷேர் ஆட்டோ கடந்தபோது ரெயில் மோதி 17 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை உலுக் கியது. சாவு வீட்டுக்கு போனவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் விபத்தில் உயிர் இழந்தனர்.

17 பேரை பலி கொண்ட புதுப்பாக்கம் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை அதிகாரி கள் பார்வை யிட்டனர். இனி வரும் காலத்தில் இதுபோன்ற துயர சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அங்கு ரெயில்வே கேட் அமைக்க வாய்ப்பு உள்ளதா என்று ஆலோசனை செய்தனர்.

ஆள் இல்லாத ரெயில் கேட் வழியாக தினசரி 6 ஆயிரம் வாகனங்களுக்கு மேலாக கடந்து சென்றால்தான் அதன் தரத்தை உயர்த்த முடியும். அந்த வழியாக வாகனங்கள் செல்லும் அளவை பொறுத்துத்தான் அங்கு ஆள் போட்டு கேட் அமைக்கவோ, தானியங்கி கேட் அமைக்க ரெயில்வே விதிமுறையில் உள்ளது.

அதன் அடிப்படையில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டில் தினம் சுமார் 3 ஆயிரத்திற்கும் குறைவான அளவில் வாகனங்கள் கடந்து செல்கின்றன. அதனால் அங்கு ரெயில்வே கேட் அமைக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதுப்பாக்கம் லெவல் கிராசை தரம் உயர்த்த தகுதி இல்லை. அங்கு ஆள் போட்டு கண்காணிக்கவோ, கேட் அமைக்கவோ வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Posted in dead, flyover, Jaffer Sharief, Kanchipuram, level crossing, mishap, Puthupakkam, Rail accident, Share Auto, Tamil Nadu, Train Accident, underpass | Leave a Comment »

China to require all executions to be approved by its highest court

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

சீனாவில் மரண தண்டனை சீர்திருத்தம்

சீனாவில் தான் உலக அளவில் அதிக மரண தண்டனைகள்
சீனாவில் தான் உலக அளவில் அதிக மரண தண்டனைகள்

சீனாவில் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி மரண தண்டனைகளை விதிக்க, இனி நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்தப் புதிய விதிகள், சீனா மரண தண்டனை தொடர்பாக கடந்த இருபது ஆண்டுகளில் செய்த மிகப் பெரிய சீர்திருத்தம் என்று அந் நாட்டின் அரச ஊடகம் தெரிவிக்கிறது.

இதனால் மரண தண்டனை வழங்கும் அதிகாரம் இனி மாகாண நீதிமன்றங்களுககு இருக்காது.

உலகிலேயே அதிக அளவு மரண தண்டனைகள் சீனாவில்தான் விதிக்கப்படுகின்றன. பல சமயங்களில் அநீதி இழைக்கப்படுகிறது என்ற குரல்கள் எழுவதால், அதைச் சமாளிக்க இது போன்ற சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக பீஜீங்கில் இருக்கும் பி பி சி நிருபர் தெரிவிக்கிறார். ஆனால் அதே சமயம் மரண தண்டனையை சீனா ஒழிக்கும் என்பதற்கான தடையங்கள் ஏதும் தென்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

Posted in Amnesty International, Capital punishment, China, Death Sentence, Judge, Life sentence, Supreme Court, Xinhua | Leave a Comment »