Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 11th, 2006

Mosquitoes, Local Body, Healthcare – C Mahendiran

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

உள்ளாட்சித் தேர்தல்-கொசு ஒழிப்பு

சி. மகேந்திரன்

சிக்குன் குனியா, டெங்கு ஆகிய இரண்டு கொடிய காய்ச்சல்களுக்கு அடிப்படைக் காரணம் கொசுதான் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நாட்டின் முன்னேற்றம் அனைத்திற்கும் தடையாக இருப்பதில் முக்கியக் காரணம் வகிப்பது லஞ்சம்தான் என்பதை நாம் உணர்ந்தும் அதனை ஒழிப்பதற்கு முயற்சி எதுவும் எடுக்காமல் இருப்பதைப் போலத்தான் கொசு ஒழிப்பதிலும் நம் செயல்பாடுகள் அமைந்துள்ளன. எந்த ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சியும் இவ்வாறாகத்தான் தொடங்குகிறது.

எய்ட்ஸ் கொடிய நோய்தான். இதன் பரவல் கட்டுப்பாடற்ற பாலுணர்வு வாழ்க்கையிலிருந்துதான் பெருகியிருக்கிறது. மானுட நெடும்பரப்பின் அனுபவம் எது நன்மை பயக்கும்? எது தீமை பயக்கும் என்ற பாதையைத் தெளிவாக உருவாக்கித்தான் வைத்திருக்கிறது. காடு, மேடு, மலையின் உச்சி, பள்ளத்தாக்குகளின் பாதாளம் என்று ஓடித் திரிந்த வாழ்க்கையில் மனிதன் அனுபவத்தின் அடிப்படையில் கண்டறிந்ததுதான் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் வாழ்க்கை முறை. இந்த வாழ்க்கை முறை சிதைந்ததால்தான் எய்ட்ஸ் வந்ததா? அல்லது ஆணுறை இன்மையால் நோய் வந்ததா என்ற கேள்வி நம்மைப் பெரிதும் வெட்கமுற வைக்கிறது. இன்று வியாபாரத் தந்திரங்களிலிருந்து, எந்தவொரு நாடும் தப்பிக்க இயலவில்லை. ஒருபுறம் வியாபாரமாகிப் போன உலகில், ஆண், பெண் உறவிலுள்ள தார்மிகத்தை வெகுவாக இழந்து விட்டோம். மறுபுறம் ஆணுறை நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தைக் குவித்துக் கொண்டிருக்கின்றன. கொசு ஒழிப்பு நடவடிக்கையும் இதே பாதையில்தான் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

கொசுக்களை ஒழிக்கப் புறப்பட்ட ஆயுதங்களில் எத்தனை வகைகள் இருக்கின்றன. நெருப்பைப் பொருத்தி எழுப்பும் புகையாகவும், மின்சாரத்தில் பொருத்தி உருவாக்கும் ஆவியாகவும், உடல்களில் பூசிக் கொள்ளும் பசைகளாகவும் எத்தனை வகைகளில் இவை! இந்த நடவடிக்கைகளின் தகுதி, திறன் பற்றி ஊடகங்கள் செய்த விளம்பரங்கள் இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் கொசுவை ஒழிக்க முடியவில்லை? இச் செயல்முறைகள் மறைமுகமாகக் கொசுவை வளர்த்தனவா என்ற சந்தேகம் கூட இப்பொழுது எழத் தொடங்கிவிட்டது. வியாபாரத் தந்திரங்களை யார் அறிவார்?

கொசுவும், கொசு மூலம் பரவும் நோய்களும் ஆதிகாலம் முதல் இருந்திருக்கத்தான் வேண்டும். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் மக்கள் கண்டறிந்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்பதும் மறக்க முடியாத உண்மையாகும். நமது தொன்மையான முறைகள் எதுவும் வியாபாரம் சார்ந்ததல்ல. “வியாபாரம் சாராத’ மக்கள் நலம் சார்ந்த நடவடிக்கைதான் இன்று அவசியமாகிறது.

உள்ளாட்சிகளின் செயல்பாடுகள் மக்கள் சார்ந்தவை. மக்கள் அனைவரையும் பங்கேற்க வைக்கும் பங்கேற்பு ஜனநாயகமாக உள்ளாட்சித் தேர்தல் அமைந்துள்ளது. ஆனால் இது அதிகாரத்தின் மூலம் மக்களின் பணத்தை மறைமுகமாகக் கொள்ளையிடுவதற்கான வழிமுறையாக இன்று மாறி வருகிறது. இதை வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் சேவை மையமாக மாற்ற வேண்டும்.

மக்கள் நடவடிக்கை குறித்த அனுபவங்களுக்கு வியட்நாம், கியூபா செயல்திட்டங்களைக் கூர்ந்து கவனிப்பது அவசியமானது என்று தோன்றுகிறது. வியட்நாமின் சில தகவல்கள் நம்மை வியப்புற வைக்கின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் எங்காவது நீர் தேங்கி அதில் கொசு அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டால், உடன் வாழ்விடத்தின் சுகாதார நடவடிக்கைக் குழுக்கள் அல்லது பெற்றோர் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்கள். குழந்தைகளின் இந்தப் பொறுப்புணர்வு அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? சமூகம் அந்தக் குழந்தைகளுக்குக் கற்றுத் தந்த ஆரம்பக்கல்வி. ஒரு முழு சமூகத்தின் ஆரோக்கியத்தைக் குழந்தைகளிடம்தான் பார்க்க முடிகிறது. இதைப் போன்றுதான் புயல்போல் வேகமெடுத்துப் பரவிய டெங்கு காய்ச்சலை கியூபாவில் மக்கள் நடவடிக்கையால் கட்டுப்படுத்த முடிந்தது. 1981-ஆம் ஆண்டு 3 லட்சத்து 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நான்கு மாதங்களில் அங்கு இந்த நோய் முற்றாக ஒழிக்கப்பட்டது.

மக்கள் நடவடிக்கையின் மூலம் கொசுக்களை ஒழிப்பதில் முதலில் கவனம் கொள்ள வேண்டியது, சுற்றுச்சூழல் பாதிப்பற்ற திட்டங்களில்தான்! கொசுவை ஒழிக்கும் முயற்சியில் நீர், நிலம், காற்று ஆகியவற்றிலும் விஷத்தைக் கலந்து விடுகிறோம். இதனால் இயற்கைக்கும், இயற்கையைச் சார்ந்து வாழும் மனிதனுக்கும் ஏற்படும் துயரங்களை வார்த்தைகளால் விவரித்துவிட இயலாது. இன்று பெருகி வரும் நெஞ்சக நோய்கள் உள்ளிட்ட பலவற்றிற்கு கொசுக்களை அழிக்கப் பயன்படுத்திய டி.டி.டி. போன்ற மருந்துகள்தான் காரணம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

சூழலுக்குப் பாதிப்பற்ற கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் உலகில் பல நாடுகளில் வகுக்கப்பட்டுள்ளன. இதில் நியூஜிலாந்தின் நடவடிக்கை மிகவும் யோசித்துப் பார்க்கத் தகுந்தது. இங்கு ஆண் கொசுக்களை மலடாக்குவதன் மூலம் கொசுக்களின் இனப்பெருக்கத்தை முற்றாக நிறுத்தி விட்டார்கள். இதில் கதிர் வீச்சுகளைப் பயன்படுத்தும் முறைகளும், மரபு அடிப்படையிலான முறைகளும் இருக்கின்றன.

கம்பூச்சியா நாட்டில் ஒருவகை மீன், கொசுவை மிக வேகமாக ஒழித்து விடுகிறது. இதைப்போலவே மிசோ – சைக்கோளப் என்னும் மற்றோர் உயிரினம் டெங்கு, சிக்குன் குனியா முதலிய நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஒழித்து விடுகிறது. கொசுக்கள் பெரும்பாலும் நீரில் தங்கித்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. தேங்கியுள்ள நீர் நிலைகளில் இந்த மீன்களையும் சில உயிரினங்களையும் வளர்ப்பதன் மூலம் கொசுக்களை அழிக்கும் நுட்பத்தை அங்கு வளர்த்தெடுக்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு இதனால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

இத்தகைய சூழல் பாதிப்பற்ற நடவடிக்கைகள் உலகில் பல நாடுகளில் செயல்வடிவம் பெற்றுள்ளன. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் ஏமாற்று வேலைகள் என்ற பொய்த் தோற்றத்தை உருவாக்க மூலதன நிறுவனங்கள் பல்வேறு சதித்திட்டங்களை உருவாக்கி வருகின்றன. இதனால்தான் கியூபா போன்ற நாடுகளின் புகழ்மிக்க விவசாயத் தீர்வுகளை, உலகத்திற்கே தெரியவிடாமல் சூழ்ச்சி செய்து மறைத்து விட்டார்கள்.

உள்ளாட்சிகளில் சூழல் பாதுகாப்புடன் கூடிய கொசு ஒழிப்பிற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஊராட்சி மன்றங்கள் முதல் எல்லா நிலைகளிலும் இதற்காகத் தனித்தனியான திட்டங்கள் வகுத்து மக்களை ஈடுபடுத்த வேண்டும்.

கொசு ஒழிப்புத் திட்டம் வலிமையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமெனின், சுகாதாரத்திற்கான அரசாங்கத்தின் நிதியைக் கூடுதலாக்குவது அவசியம். பல நாடுகள் தங்கள் தேசிய வருமானத்தில் குறிப்பிடத்தக்க சதவீதத்தை சுகாதாரத்திற்கு ஒதுக்குகின்றன. இந்தியா தனது தேசிய வருமானத்தில் 0.9 சதவீதத்தை மட்டும் ஒதுக்கியுள்ளது. இலங்கை அரசாங்கம் கூட 2 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக வரவு – செலவுத் திட்டத்தில் 30 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கருத்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பரிசீலனை செய்து பொருத்தமுடைய ஒதுக்கீட்டிற்குத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இந்தத் தொகையில் குறிப்பிடத்தக்க அளவை, கொசு ஒழிப்புக்கென்று செலவிடுவது அவசியம்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் வாக்களிக்கும் மக்களும் கொசு ஒழிப்பதற்கான திட்டங்கள் குறித்து இந்த நேரத்தில் யோசிப்பது முக்கியமாகும். இதைத் தவிர்த்து, சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல்கள் பரவுவதற்கு, ஆளும் கட்சி காரணமா? எதிர்க்கட்சி காரணமா என்ற சொற்போர் நிகழ்த்திக் கொண்டிருப்பதால் யாருக்கும் பலன் கிடைக்கப் போவதில்லை.

Posted in Chicken Kunya, Chiken Gunya, Chikun Kunya, Dengue, Healthcare, Local Body, Mosquito, Op-Ed, Outbreak, Suggestions | Leave a Comment »

Kanshiram & BSP : Goals & Achievements – ‘Viduthalai Siruthaigal’ Ravikkumar

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

ஒரு ஜனநாயகப் போராளி

ரவிக்குமார்

இந்திய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய கான்சிராம் அமரர் ஆகிவிட்டார். அம்பேத்கருக்குப் பிறகு இந்திய அளவில் தலித் மக்களின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தவர் அவர். 1934 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் பஞ்சாபில் “ரவிதாஸி சீக்கிய’ சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கான்சிராம். நான்கு பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் கொண்ட அவரது குடும்பத்தில் அவர் மட்டுமே பட்டப்படிப்பு வரை படித்தார். நில அளவைத் துறையில் வேலைக்குச் சேர்ந்து பின்னர் புனேவில் உள்ள வெடிமருந்துத் தொழிற்சாலைக்கு மாற்றலாகிப் போனார்.

அரசியலில் ஆர்வமில்லாமல் இருந்த கான்சிராம், 1965ஆம் ஆண்டில் அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு விடுமுறை தரும் வழக்கத்தை அரசு கைவிட்டபோது அதனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஈர்க்கப்பட்டார். சாதியவாதிகளின் வெறுப்பு அவரை அதிர வைத்தது. அம்பேத்கர் எழுதிய “”சாதி ஒழிப்பு” என்ற நூலை ஒரே இரவில் மூன்று முறை படித்தபோது சாதியவாதிகளின் வெறுப்புணர்வுக்கான காரணம் விளங்கியது. தாம் மேற்கொள்ள வேண்டிய பயணம் குறித்த தெளிவும் ஏற்பட்டது. அப்போது தொடங்கிய பயணம் நாற்பது ஆண்டுகள் நிற்காமல் தொடர்ந்தது.

கான்சிராமுடன் பணிபுரிந்த டி .கே. கபார்டே என்பவர்தான் அவருக்கு அம்பேத்கரின் சிந்தனைகளை அறிமுகம் செய்தவர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக உழைப்பதெனத் தீர்மானித்த கான்சிராம் தனது நண்பர் கபார்டேவுடன் சேர்ந்து அதற்கான ஆதரவாளர்களைத் திரட்ட ஆரம்பித்தார்.

சமூகப் பணியில் தோய்ந்த மனம் அரசாங்க வேலையில் லயிக்க மறுத்தது. திருமண வாழ்வில் அவருக்கு விருப்பமே இல்லாமல் போயிற்று. 1971-ல் அவர் அரசுப் பணியைத் துறந்தார். அதே ஆண்டு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கென நலச்சங்கம் ஒன்றை உருவாக்கினார். 1973ல் மேலும் சில நண்பர்களோடு சேர்ந்து “அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பை (BAMCEF) உருவாக்கினார்.

மகாராஷ்டிரத்தின் சிறு நகரங்களையும் கான்சிராம் விட்டு வைக்கவில்லை. அவரது செல்வாக்கு மகாராஷ்டிரத்தைக் கடந்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் என விரிந்தது. 1980ல் அவர் நடத்திய “அம்பேத்கர் மேளா’ என்ற ஊர்திப் பயணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திப் பலரையும் அவரை நோக்கி ஈர்த்தது. அதன் விளைவாக “தலித் சோஷித் சமாஜ் சங்கர்ஷ் சமிதி’ என்ற அமைப்பை அவர் துவக்கினார். DS4 என சுருக்கமாக அறியப்பட்ட அந்த இயக்கமே 1984ல் அவர் பகுஜன் சமாஜ் கட்சியைத் துவக்குவதற்கு இட்டுச் சென்றது.

கான்சிராம் ஒரு கவர்ச்சியான பேச்சாளரல்ல, ஆழ்ந்த சிந்தனையாளரெனவும் அவர் அறியப்பட்டதில்லை. மாறாக, அவர் நல்ல அரசியல் ராஜதந்திரி. எளிய மக்களை அமைப்பாகத் திரட்டத் தெரிந்தவர். இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் மூலம் தலித் மக்களை விடுதலை பெறச் செய்ய முடியாது. அரசியல் அதிகாரமே அவர்கள் முன்னேறுவதற்கு ஒரே வழி என அவர் கருதினார்.

காங்கிரஸின் வாக்குவங்கியாக இருந்த தலித் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கான்சிராமை நோக்கி நகர்ந்தனர். அவர் கனவு கண்டதுபோல 1995ல் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அவரது கட்சி ஆட்சி அமைத்தது, மாயாவதி முதலமைச்சர் ஆனார்.

அம்பேத்கருக்குப் பிறகான இந்திய நாடாளுமன்ற அரசியலில் தலித் மக்களை “பேரசக்தி’ உள்ளவர்களாக மாற்றிய பெருமை கான்சிராமையே சாரும். அரசியல் அதிகாரம் சாதியை ஒழித்து விடாது என்பது உண்மைதான். ஆனால் அது வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் என்பதை எவரும் மறுக்க முடியாது. தலித்துகளை மற்ற அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வந்த வரலாற்றை மாற்றி தலித்துகள் மற்ற கட்சிகளை உபயோகித்துக் கொள்ள முடியும் என்பதை சமாஜ்வாதி, பாரதீய ஜனதா கட்சிகளோடான அவரது கூட்டணி எடுத்துக்காட்டியது.

கான்சிராம் எவருக்கும் பணிந்து போனதில்லை. தன்னைச் சிறுமைப்படுத்த முயன்ற எவரையும் தண்டிக்காமல் விட்டதில்லை. “ஸ்திரத்தன்மைதான் வளர்ச்சிக்கு ஆதாரம்’ என்ற கருத்துக்கு மாறாக, “ஸ்திரமற்ற அரசியல் சூழல்தான் தலித்துகளின் வளர்ச்சிக்கு நல்லது’ என்பதை அவர் மெய்ப்பித்துக் காட்டினார். வலிமையான அரசு பலவீனமான சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பானதல்ல என்பதை அவர்தான் முதலில் கூறினார்.

கான்சிராம் இந்த நாட்டை ஜனநாயகப்படுத்த முயற்சித்த சமூகப் போராளி ஆவார். பெரும்பான்மையின் ஆட்சி என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டை அப்படியே இந்தியாவுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது. ஏனென்றால் மேலை நாடுகளில் இருப்பது மாறும் தன்மை கொண்ட அரசியல் பெரும்பான்மை (political Majority). இந்தியாவில் இருப்பதோ பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் வகுப்புவாதப் பெரும்பான்மை (Communal Majority்) என அம்பேத்கர் கூறினார். இந்தியாவில் அரசியல் பெரும்பான்மையின் ஆட்சியை உருவாக்கவே கான்சிராம் பாடுபட்டார்.

வகுப்புவாதத்தின் கை ஓங்கியிருந்த காலத்தில் சாதி ஒழிப்பின் அடிப்படையில் புதிய கேள்விகளை, புதிய அரசியலை முன்வைத்து அதைப் பலவீனப்படுத்தியவர் கான்சிராம். மதவாத எதிர்ப்பு என்பது சாதிப் பிரச்சினையைப் புறக்கணித்துவிட்டு சாத்தியமல்ல என்பதை அவர் எடுத்துக் காட்டினார். தலித் மக்களின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதைவிடவும் அவர்கள் “”பணிய மறுக்க வேண்டும்” என்பதே கான்சிராம் தந்துவிட்டுப் போயிருக்கும் முதன்மையான செய்தியாகும். அந்தச் செய்திதான் அவரை தலித் மக்களின் அரசியல் குறியீடாகவும் ஆக்கியிருக்கிறது.

(கட்டுரையாளர்: விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர்).

Posted in Achievement, Alliance, Ambedkar, Bahujan Samaj Party, Biography, BSP, Dalit, Elections, Kanshiram, Mayawathy, Memoirs, Politics, Quotes, Ravikumar, Thoughts, UP, Uttar Pradesh, Viduthalai Siruthaigal, Vote | Leave a Comment »

State of Scheduled Castes & Tribes – Unable to get the Community Certificates

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

சாதியப் “பாம்பு’கள்-“கீரி’ப்பட்டிகள்!

முகில்வண்ணன்

“தலித்துகள் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நுழைவதைச் சாத்தியமாக்கிவிட்டது வாக்குரிமை; ஆனால், அந்த வாக்கு வங்கியால், அவர்களைத் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களுக்குள் நுழைய வைக்க முடியவில்லையே; ஏன்? என்று கேட்டார் சத்யஜித் பட்கர்.

இன்னும் ஒரு கேள்வியும் சேர்த்துக் கேட்க வேண்டியுள்ளது;  “ந.ப. எனும் பட்டியல் பழங்குடியினருக்கு, உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவி உள்பட பல பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தப் பதவிகளால் அந்தந்த ஊரிலுள்ள பழங்குடியினருக்கு  “சாதிச் சான்றிதழ்கள்”கூட பெற்றுத் தர முடியவில்லையே! ஏன்?”

வெளிச்சத்துக்கு வராத கீரிப்பட்டிகளும், பாப்பாப்பட்டிகளும், நாட்டார்மங்கலங்களும், புற்றுக்குள் பாம்பாகத் தமிழகத்தில் இன்னமும் பல ஊர்களில் உள்ளன. இதோ ஓர் எடுத்துக்காட்டு:

விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கெல்லையில் மலை சூழ்ந்த ஒரு கிராமம்: (தண்டரை எனும் பெயர்கொண்ட பல ஊர்களில் அதுவும் ஒன்று) சுமார் 1000 பேர் உள்ள கிராமத்தில் 23 குடும்பங்களில் 60 வாக்காளர்கள் மட்டும் “இருளர்’ எனும் பட்டியல் பழங்குடியினர். இம்முறை இட ஒதுக்கீட்டுச் சுழற்சியில் தலைவர், ஓர் உறுப்பினர் என அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியோடு அவர்களைப் பார்க்கச் சென்ற எனக்குப் பல அதிர்ச்சிகள்! 59 ஆண்டுக்கால சுதந்திரத்தில், புறத்தோற்றத்தில் மட்டும் சற்றே மாறி, மனத்தளவில் சற்றும் மாறாத “பழங்கால மக்களை’ அங்கே அடையாளம் காண நேர்ந்தது.

கொஞ்சம் ஆழ்ந்து பார்த்ததில், இங்கும் “கீரி’கள் கட்டப்பட்டு பட்டியில் அடைக்கப்பட்டு, (சாதிப்) பாம்புகள் சுதந்திரமாய்ப் படமெடுத்தாடி மிரட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

ஊரிலுள்ள பிற்பட்ட வகுப்பினரில் உள்ள சில இளைஞர்களின் முயற்சியால், நப எனும் “இருளர்’ குடும்பங்கள் 23க்கும் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அந்தக் குடியிருப்புகளும் “”ஒருவர் படுக்கலாம்; இருவர் அமரலாம்; மூவர் நிற்கலாம்” ரகம்தான்.

75% மானியத்தில் பசுக்கள், செம்மறியாடுகள் பெற்றுத் தரப்பட்டதாக அரசு ஆவணங்கள் கூறுகின்றன.

இதுபோன்ற “”மான்யம்” பெறும் விஷயங்களுக்கு, அதிகாரிகள் அவசர அவசரமாக “”இவர்கள் இருளர்கள்” எனும் நப பிரிவினர் எனத் தாற்காலிகச் சாதிச் சான்றிதழ்கள் தயார் செய்து (“”பங்கு போடும்”) திட்டத்தை வெற்றிகரமாக முடித்து வந்திருக்கின்றனர்.

ஆனால், கடந்த 10, 15 ஆண்டுகளாய், அந்த இனத்தில் சில மாணவர்கள் 10ஆம் வகுப்பும், ஓரிருவர் 12ஆம் வகுப்பும் படித்திருந்தும் “”சாதிச் சான்றிதழ்கள்” வழங்கப்படாததால், மேற்படிப்புக்கோ, வேலைவாய்ப்புப் பயிற்சிகளுக்கோ செல்ல முடியாத நிலை.

விவசாயக் கூலித் தொழிலாளிகளாக, முத்திரை குத்தப்படாத கொத்தடிமைகளாகவும் இன்றுவரை இருக்கும் அவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் (VAO), முதல் கோட்ட வருவாய் அலுவலர் (RDO) வரைப் படியேற நேரமும் இல்லை; படியளக்கப் பணமும் இல்லை; எனவே, சாதிச் சான்றிதழ் பெற முடியவில்லை.

இருளர்களில் ஒரு பெற்றோர் மட்டும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விவரமான ஒருவர் மூலம் புகார் மனு அனுப்பினார்.

மனு மீதான நேரடி விசாரணைக்கு ஓர் அதிகாரி வந்தார். மனுதாரரை எலி பிடித்துக் காட்டச் சொன்னார். அவரும் ஓர் எலி வளைக்கு அவரை அழைத்துச் சென்று, ஒரு பானையால் அதை மூடி, புகைபோட்டு, எலிகள் வெளியேறும்போது பிடித்துக் காட்டினார்.

“”எலி பிடிப்பது சுலபம்; பாம்பைப் பிடித்துக் காட்டு” என்றார். “”பாம்பு நிலையாக ஓரிடத்தில் தங்காது; அதைத் தேடிப்பிடிப்பது கடினம்” என்று கூறிவிட்டார் அந்தப் பழங்குடி.

“”கன்னிமார் சாமி கும்பிடுவீர்களாமே! சாமி ஆடிக்காட்டு” என்றார். அதற்கும் தலை குளித்துவிட்டு, கையில் கற்பூர தீபம் ஏற்றி அவர் “”ஆ.. ஊ..” என ஆடிக்காட்ட, அருகிலிருந்த பெண்கள் பேயாட்டம் ஆட, சாமி ஆடுபவர் அப் பெண்களைச் சாட்டையால் அடிக்க (அதிலும் ஒரு லாவகம் உண்டு) பதறிய அதிகாரி அவர்களை “இருளர்கள்’ (நப) என ஒப்புக்கொண்டு சென்றார்.

போனவர் கோப்பில் இப்படி எழுதி வைத்துள்ளாராம்:

“”இவர்கள் பழக்கவழக்கத்தால் இருளர்கள்தாம். ஆனால் போதிய ஆவணச் சான்றுகள் இல்லை (நில உரிமைப் பத்திரங்களில் சாதி குறிப்பிடப்பட்டிருக்கும்); ஆதாரங்கள் தந்தால், சாதிச் சான்றிதழ் வழங்கலாம்.”

அதன்பின் அவரது “”ஆண்டை” ஆயிரக்கணக்கில் “அன்பளிப்பு’ கொடுத்து ஓரிருவருக்கு மட்டும் “சாதிச் சான்றிதழ்’ பெற்றுத் தந்ததாகவோ, தர இருப்பதாகவோ கேள்வி.

சென்ற ஆண்டு 12ஆம் வகுப்புத் தேறிய ஒரு பழங்குடி மாணவன் உரிய காலத்தில் “சாதிச் சான்றிதழ்’ கிடைக்காததால் இடைநிலை ஆசிரியப் பயிற்சியில் இலவசமாக இடம் கிடைத்தும் சேர முடியவில்லையாம். இந்த ஆண்டாவது கிடைத்தால் ஒருவராவது அரசுப் பணிக்குத் தயாராகலாம்.

வீட்டுக்கும், மாட்டுக்கும் செம்மறி ஆட்டுக்கும் கடன் என்றால், “சாதிச் சான்றிதழ்’ தயாரித்து வரும் அதிகாரிகள் மனிதர்களுக்கு மட்டும் தர மறுக்கின்றனர் அல்லது தாமதப் படுத்துகின்றனர். ஏன்? இதில் “”எவருக்கும் லாபமில்லை – பயனாளிகளைத் தவிர!

விடுதலை என்பது ஒரு வேட்கை; அது அறிவுதாகத்தால்தான் வரும். “”விலங்கை உடைப்பதால் மட்டுமே விடுதலை கிட்டாது; விலங்கு, மனிதனானால் மட்டுமே அது கிட்டும்” என்பார் கேம்ஸ் ஓப்பன் ஹிம்.

மேற்படிப்புக்கான “சாதிச் சான்றிதழ்கள்’ தர மறுத்து, அவர்களது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டு, தலைவர் பதவி போன்ற அலங்காரங்களை மட்டும் அளிப்பது, இன்றைய முதல்வர் பாணியில் சொல்வதென்றால் “புண்ணுக்குப் புனுகு பூசும்’ வேலையல்லவா!

தேர்தலைப் புறக்கணித்தால், அவர்களைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள் என முத்திரை குத்துகிறோம்.

தேர்தலில் போட்டியிட விடாமல் தடுப்பது, ஆள் கடத்துவது, ஊரைவிட்டுத் துரத்துவது, நின்று வென்ற பின்னும் “கைப்பாவையாய்’ ஆட்டுவிப்பது, ஆட மறுத்தால், “”வைத்தால்தான் பிள்ளையார்; வழித்தெறிந்தால் சாணி” என அவனை உடனே ராஜிநாமா செய்யச் செய்வது; மறுத்தால், மரணப் பரிசளிப்பது என வெறிக் கூத்தாடும் சாதிய நச்சரவங்களை என்ன சொல்லி அழைப்பது?

இக் கொடுமைகளைக் கண்டும், காணாமல் போகும் அதிகாரிகள், வாயிருந்தும் ஊமையாக இருக்கும் அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் – இவர்களுக்கு என்ன பெயர் வைப்பது?

இப்போது நடந்து கொண்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தப் புற்றுநோய் புரையோடிக் கொண்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

“”சமாதான வாழ்வுக்கு எப்போதும் ஓர் ஆபத்து இருந்து கொண்டே இருக்கும்; அந்த ஆபத்தின் பெயர்தான் சாதி!”என்று எச்சரித்தார் பெரியார்.

அந்தச் சாதி அடுக்குகள் இருக்கும்வரை அடித்தட்டில் உள்ளவர்கள் அழுத்தப்பட்டு, நசுக்கப்படுவது தொடரும்.

சாதிய நோயால் ஏற்பட்ட வீக்க மேடுபள்ளத்தை, மேனியைத் தடவி மந்திரிப்பதால் சமப்படுத்தவோ, சரிசெய்யவோ முடியாது. அதற்குத் தேவை அறுவைச்சிகிச்சை.

கேரளத்து தலித் போராளி “அய்யங்காளி’ ஒருமுறை சொன்னார்: “”எல்லோர் ரத்தமும் சிவப்பு என்பதை, ரத்தம் சிந்தாமல் எப்படி நிரூபிக்க முடியும்?”

சிந்தும் ரத்தம் நோய் வராமல் தடுக்க அல்லது நோயைக் குணப்படுத்துவதற்கான மருத்துவப் பரிசோதனைக்கான ரத்தமாக இருக்கட்டும்!

Posted in Castes, Community Certificates, Corruption, Dalits, Irular, Keeripatti, Official, Pappapatti, Research, Scheduled Caste, Scheduled Tribe, Tamil Nadu | Leave a Comment »

Harkat-ul-Mujahideen prisoner escapes from Police Custody in Assam

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட தீவிரவாதி தப்பியோட்டம்

குவாஹாட்டி, அக். 11: அசாமில் போலீஸாரால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி திங்கள்கிழமை இரவு தப்பியோடினார்.

நூருல் அமீன் என்கிற ஸாஜித், கடந்த 1999-ல் குவாஹாட்டி காமக்யா கோயில் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அமீனை, போலீஸார் அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை அழைத்து வந்தனர்.

மருத்துவமனையில் டாக்டருக்காக காத்திருந்தபோது, சிறுநீர் கழிக்க அனுமதி கேட்ட அமீனுக்கு போலீஸார் அனுமதி அளித்தனர். இந்நிலையில், கழிப்பறைச் சென்ற அவர் அங்கு ஜன்னலை உடைத்து தப்பிச் சென்றார்.

இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த 2 போலீஸôர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Posted in Assam, Bombs, Gauhati, Harkat-ul-Mujahideen, Kamagya Temple, Movie, Noorul Ameen, Police, Police Custody, Saajid, Suspect | Leave a Comment »

‘Kerala still did not get the promised help on Chikun Kunya from Anbumani’ – Achuthananthan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

கேரளத்தில் சிக்குன்குனியாவை கட்டுப்படுத்த அன்புமணி அறிவித்த உதவிகள் இதுவரை வரவில்லை: முதல்வர்

திருவனந்தபுரம், அக். 11: கேரள மாநிலத்தில் பரவி வரும் சிக்குன் குனியா நோயை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் அன்புமணி அறிவித்த நிவாரண உதவிகள் இதுவரை வரவில்லை என அந்த மாநில முதல்வர் அச்சுதானந்தன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கேரள சட்டப் பேரவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அச்சுதானந்தன் இத்தகவலை தெரிவித்தார்.

ஆலப்புழை மாவட்டத்தில் சிக்குன்குனியா பாதிப்பு குறித்து அறிய கடந்த 6-ம் தேதி வந்த மத்திய அமைச்சர் அன்புமணி அறிவித்த உதவிகள் குறித்து பத்திரிகைகளில் பார்த்தேன். ஆனால், அத்தகைய உதவிகள் ஏதும் இதுவரை வரவில்லை.

இதுகுறித்து, தில்லியில் புதன்கிழமை நடைபெறும் மாநில சுகாதார அமைச்சர்களின் கூட்டத்துக்கு செல்லும் கேரள சுகாதார அமைச்சர், மத்திய அரசின் கவனத்துக்கு இவ்விவகாரத்தை கொண்டு செல்வார் என்றார். முன்னதாக ஆலப்புழை வந்த அன்புமணி, சிக்குன்குனியாவை பரப்பும் கொசுக்களைக் கட்டுப்படுத்த புகை அடிக்கும் இயந்திரம், கொசு வலைகள் ஆகியவற்றை சிறப்பு நிவாரணமாக கேரளத்துக்கு மத்திய அரசு அளிக்கும் என தெரிவித்திருந்தார்.

Posted in Achuthananthan, Anbumani, Chicken Kunya, Chiken Gunya, Chikun Kunya, Healthcare, Kerala, Outbreak, promises | Leave a Comment »

FIR against Fernandes, Jaya, ex-Navy chief

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு எதிராக சிபிஐ விசாரணை

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்
இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மத்திய பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் போடப்பட்ட பல ஒப்பந்தங்கள் தொடர்பாக, அவருக்கு எதிராக, இந்திய மத்திய புலனாய்வுத்துறை, சிபிஐ, முறையான விசாரணை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது.

இந்த ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, பெர்னாண்டஸ் , அவர் சார்ந்திருந்த சமதா கட்சியின் தலைவி, ஜெயா ஜெய்ட்லி மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி ஆகியோர் லஞ்சம் வாங்கினார்கள் என்று சிபிஐ கூறுகிறது.

குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்கள்.

சிபிஐ, இந்த விசாரணை தொடர்பாக, சண்டிகார், டில்லி, மும்பை, பெங்களூர் ஆகிய நகரங்களில் சோதனைகளை நடத்தியது.

இந்தச்சோதனைகள், 1993ல் இந்திய ராணுவத்தால் வாங்கப்பட்ட, சுமார் 260 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள, இஸ்ரேலிய பராக் ரக, கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கியது உட்பட நான்கு வெவ்வேறு ஒப்பந்தங்கள் தொடர்பானவை என்று சிபிஐ கூறியது.

Posted in Barak Missile System, CBI, Corruption, Defence Research and Development Organisation, Fernandes, George Fernandez, Israel, Jaya Jaitley, Navy Chief Admiral, R.K. Jain, Samata Party, Sushil Kumar | Leave a Comment »