Reporters Woes in covering the upcoming India Elections 2009: Media Pass from EC
பதிந்தவர் Visitor Blogs மேல் மார்ச் 18, 2009
நிருபர்களுக்கு தடை போடுகிறது தேர்தல் ஆணையம்
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி பத்திரிகையாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடுமையான கெடுபிடிகளை அமல்படுத்தி வருகிறது.
வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை நியாயமாக, நேர்மையாக நடக்கிறதா என்பதற்கு பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் சாட்சி. ஆனால், மே மாதம் நடக்கும் மக்களவைத் தேர்தலில் அந்த சாட்சிகள், முன்பு போல வாக்குச் சாவடிக்குள்ளோ, வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள்ளோ எளிதில் சென்று எதையும் பார்க்க முடியாது.
ஒரு தொகுதிக்கு ஒரு நிருபர், ஒரு புகைப்படக்காரர் என்ற அளவில் முன்பு தேர்தல் ஆணையம் அங்கீகார அட்டை கொடுத்ததால் பல பகுதிகளுக்குச் சென்று செய்தி சேகரிக்க முடிந்தது. நிருபர்கள், புகைப்படக்காரர்கள் நடமாட்டம் இருக்கும் என அரசியல் கட்சிகளும் சற்று கவனமாகவே இருந்தன.
ஆனால், இப்போது ஒரு மாவட்டத்துக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிருபர் அல்லது புகைப்படக்காரர் மட்டும்தான் இந்த அங்கீகார அட்டை பெற முடியும்.
சென்னை மாவட்டத்தில் 3 தொகுதிகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை வெவ்வேறு இடங்களில் நடக்கும். ஆனால் ஒருவர் மட்டும் எல்லா இடங்களையும் பார்ப்பது சிரமம்.
இது அரசியல் கட்சிகளுக்கு மிகவும் வசதியான ஏற்பாடாக அமைந்துவிடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதிலும்கூட தொலைக்காட்சிகளுக்கு இரண்டு பேருக்கு அங்கீகார அட்டை தர முன்வந்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
நியாயமான, நேர்மையான தேர்தல் நடப்பதை உறுதி செய்கிறோம் என்று கூறி, வேட்பாளருடன் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு, செலவுக்கு வரம்பு, பிரசாரத்துக்கு வரம்பு என அறிவித்துவிட்டு, அதைக் கண்காணிப்பதில் உதவியாக இருக்கும் செய்தியாளர்களுக்கு தடை விதித்ததைப் போன்ற நிலையை உருவாக்குவது சரியில்லை என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.
தேர்தல் ஆணையம் இதுபற்றி மறு பரிசீலனை செய்து முன்புபோல தாராளமாக வாக்குச் சாவடி, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை தருவதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கலாமே தவிர, எண்ணிக்கையைக் குறைப்பது சரியாக இருக்காது என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
