Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Early June: Sri Lanka, LTTE, Eezham Updates

பதிந்தவர் SnapJudge மேல் ஜூன் 18, 2008

வவுனியாவில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; 12 காவலர் பலி

இலங்கையின் வடக்கே, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத் தொகுதியின் எதிரில் திங்கள் காலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 3 பெண் பொலிசார் உட்பட 12 பொலிசார் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இரண்டு பாடசாலை மாணவிகள் அடங்கலாக 4 சிவிலியன்கள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

காயமடைந்தவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர்.

வவுனியா தேக்கவத்தை ஏ9 வீதியில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரது அலுவலகங்களுக்கு அருகில் உள்ள பொலிசாரின் விடுதிக்கு எதிரில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பல்வேறு இடங்களுக்கும் பாதுகாப்பு கடமைக்காகச் செல்வதற்காகத் தமது விடுதிக்கு எதிரில் வீதியோரத்தில் தயார் நிலையில் இருந்த பொலிஸ் குழுவினர், இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த விடுதலைப் புலிகளின் தற்கொலைக் கொலையாளி, இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது. ஆனால் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது தொடர்பாக கருத்து எதுவும் வெளியாகவில்லை.


தவறுதலாக எல்லை தாண்டிய மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: இந்தியாவில் இலங்கை அமைச்சர் கருத்து

ரோஹித பொகொல்லாகம

இந்திய – இலங்கை மீனவர்கள், தங்கள் நாட்டுக் கடல் எல்லைகளைத் தாண்டி வந்தாலும் கூட, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இரு நாடுகளும் விரும்புவதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகொல்லாகம தெரிவித்தார்.

அதே நேரத்தில் மீனவர்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் நுழைவதைத் தடுப்பதில் கவனமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லி வந்த பொகொல்லாகம அவர்கள், திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்தித்தார். ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள, சார்க் எனப்படும் தெற்காசியப் பிராந்திய கூட்டமைப்பு நாடுகளின் 15-வது உச்சிமாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பு குறித்தும், இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்தும் விவரித்தார்.

அவர் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக எமது புதுதில்லி செய்தியாளர் தங்கவேல் வழங்கும் செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


‘மடுமாதா ஆடித் திருவிழா இவ்வருடம் கொண்டாடப்படாது’

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ள மடுமாதா ஆலயத்தில் ஆடி மாதத் திருவிழாவைக் கொண்டாடுவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஆயர்கள் சங்கம், மடுமாதா ஆலயத்தின் திருத்த வேலைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள மாதாவின் திருவுருவச் சிலை இன்னும் ஆலயத்திற்குக் கொண்டு வரப்படாத நிலையில் இம்முறை மடுமாதாவின் ஆடித்திருவிழாவைக் கொண்டாட முடியாதிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது.

எனினும், மடுமாதாவின் திருவிழா திருப்பலிப் பூசைகளை மன்னார் மறைமாவட்டப் பங்கில் உள்ள ஆலயங்களில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அந்த மறைமாவட்டத்தின் குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்கள் தெரிவித்துள்ளார். இது பற்றிய மேலதிக தகவல்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுக்குடியிருப்பில் விமான குண்டுவீச்சு நீடிப்பதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு சந்திக்கருகில் திங்கள் காலை விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றினை விமானப்படையினர் குண்டுவீசித் தாக்கியுள்ளதாகவும், நாகர்கோவில் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதி மீது எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்தி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இந்தத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை மன்னார், வவுனியா, வெலிஓயா யாழ்ப்பாணம் ஆகிய வடபிரதேச போர் முனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஞாயிறன்றைய நடவடிக்கைகளில் 29 விடுதலைப் புலிகளும் 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது,


‘எல்லாளன் படையுடன் தொடர்பில்லை’

Ilanthiraiyan
புலிகள் அமைப்பின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன்

அண்மைய கொழும்பு தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ள எல்லாளன் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் கூறுகிறார்.

சமீப காலமாக கொழும்பில் நடக்கும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக எல்லாளன் படை என்கிற அமைப்பு, ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் ஊடகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலம் உரிமை கோரியிருந்தது.

இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் நடப்பதற்கு பதில் நடவடிக்கையாக தாங்கள் இந்த தாக்குதல்களை நடத்துவதாக இந்த அமைப்பு கூறியிருந்தது.

இந்த எல்லாளன் படைக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

இலங்கையின் வடமேற்கே, மன்னார் தீவில் எருக்கலம்பிட்டியில் அமைந்துள்ள கடற்படை நிலையை ஜூன் 11ஆம் தேதி அதிகாலை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அழித்ததாகவும் அவர் கூறினார். இதில் சுமார் 10 படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.

அதேவேளை, விடுதலைப்புலிகளின் தாக்குதலை தாங்கள் முறியடித்ததாகவும், பாரிய இழப்புகளுடன் விடுதலைப்புலிகள் பின்வாங்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை கடற்படை அறிவித்திருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஐந்து விடுதலைப்புலிகளும், மூன்று கடற்படையினரும் கொல்லப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

பா.நடேசன் செவ்வி

பா. நடேசன்
தென்னிலங்கையில் சிவிலியன்கள் கொலையில் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்கின்றனர் புலிகள்

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்படும் இலங்கை இராணுவத்தின் தாக்குதலானது இராணுவத்தின் பலவீனத்தையே காட்டுவதாக விடுதலைப் புலிகள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

ஆழ ஊடுருவும் அணியினர் உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்துவது உங்கள் அமைப்பின் பலவீனத்தைக் காட்டவில்லையா என்று கேட்டதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளுடன் நேரடியாக மோதமுடியாமல் தோல்வியைத் தழுவும் நிலையிலேயே இலங்கை அரசாங்கப் படைகள் இவ்வாறான அநாகரிகமான தாக்குதல்களை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கையின் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்களுக்கும், தமது அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றும், தமது அமைப்பு ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்றும், தாங்கள் மக்களை நேசிப்பவர்கள் என்றும், அனைத்து உயிர்களையும் நேசிப்பவர்கள் என்றும் அவர் கூறினார்.

புலர்ந்தும் புலராத விடியல்

life in east sri lanka

கிழக்கு இலங்கையில் விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை நிலை குறித்த குறுந்தொடர்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>