Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Economic upliftment for the needy – Dinamani Editorial

பதிந்தவர் SnapJudge மேல் மார்ச் 25, 2008

ஏழைகளின் எதிரி யார்?

“”இந்தியா அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சியால் பணக்காரர்களுக்குத்தான் லாபம் என்று பேசுகிறவர்கள் ஏழைகளுக்கு எதிரிகள்” என்று மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் பேசுகையில் காட்டமாக விமர்சித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

சிதம்பரம் எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவர்; மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும்போதுகூட தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்காமல், தனது கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் சொல்லாற்றல் மிக்கவர். அப்படிப்பட்டவர் கோபமாகப் பேசியிருப்பதற்குக் காரணம், பேசியவர்கள் மீது உள்ள கோபம் அல்ல; நல்ல நடவடிக்கைகளை இப்படியே தொடர்ந்து விமர்சித்து, எதிர்த்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேற வேறு என்னதான் வழி என்ற ஆதங்கம்தான். அப்படி விமர்சிக்கும் “”இடதுசாரிகளை” பெயர் குறிப்பிடாமல்தான் அவர் விமர்சித்தார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

இந்தியாவில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 9% என்ற அளவை நெருங்கிக் கொண்டிருந்தாலும் நாட்டு மக்களில் கணிசமானவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த உண்மைகளை அறியாதவர் அல்ல சிதம்பரம். எந்தத் துறை மூலமாவது நாட்டுக்கு வருமானம் கிடைத்தால்தான் அதை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும், பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும். இயற்கை வளங்கள் அனைத்தையும் அரசே தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானித்து வழிநடத்துவது கம்யூனிச நாட்டில் சாத்தியம். கலப்புப் பொருளாதார முறைமையே சிறந்தது என்று நம் முன்னோடிகள் தேர்வு செய்துவிட்டதால் அதே பாதையில் நாமும் போயாக வேண்டும்.

ஏழைகளுக்காக, சுரண்டப்படுகிறவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் இடதுசாரிகள் முன்னே நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பிரச்னை தீரவும், வளமை பெருகவும் உருப்படியான நல்ல யோசனைகளை அவர்கள் கூறுவதும் இல்லை, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்துவதும் இல்லை என்பது மறுக்கப்படாத உண்மை. கேரளத்தில் மத்திய அரசின் உர நிறுவனத்தைத் தவிர அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்சாலை என்ன?

மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால் நிலச் சீர்திருத்தத்தில் முன்னோடியாக விளங்குகிறது என்பதோடு சரி. மின்னுற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, பாசன வசதி ஆகிய துறைகளில் அது பின்தங்கியே இருக்கிறது.

தென் மாநிலங்களைப் போல தகவல் தொழில்நுட்பத்தில் மேற்கு வங்கம் வளரவில்லை. மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத் போல தொழில் வளர்ச்சியில் செழிக்கவில்லை. மருத்துவ வசதிகளும் தரமான மருத்துவமனைகளும் இல்லாததால்தான் வங்காளிகளும் வட-கிழக்கு மாநிலத்தவர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர்.

“”ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிலைமை கூடவே கூடாது. அது தொழிலாளர்களின் நிரந்தர வேலையைப் பறித்து, அவர்களை கூலி அடிமைகளாக்கிவிடும், சுரண்டலுக்கு அளவே இருக்காது” என்று இடதுசாரிகள் எதிர்க்கின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை.

  • மேற்கு வங்கத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை 19.42%;
  • தனியார் துறையில் அந்த எண்ணிக்கை வெறும் 13.69% தான்.
  • கேரளத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் 7.71%,
  • தனியார் துறையில் 5.39%.
  • தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை 8.58%,
  • தனியார் துறையில் 11.35%.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது, இடதுசாரிகள் தாங்கள் வலியுறுத்தும் வறட்டு சித்தாந்தங்களைத் தங்களுடைய மாநிலங்களில்கூட அமல் செய்வதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே.

இந் நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு அவர்கள் மீது கோபம் வருவது நியாயம்தானே?

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>