Angayarkkanni - Faces: Thiruchi Uraiyur Panchavaransamy Temple - Muthiah Vellaiyan
பதிந்தவர் bsubra மேல் மார்ச் 24, 2008
முகங்கள்: நான்கு காலமும் ஓதும் குயில்!
முத்தையா வெள்ளையன்
திருச்சி- உறையூர் பஞ்சவர்ணசாமி திருக்கோயில். வைகறைப் பொழுது. கணீரென்று ஒலிக்கிறது தேவாரப் பாடல். “இதிலென்ன ஆச்சரியம்?’ என்று நினைக்கலாம். அந்தக் கோயிலில் தேவாரத்தைப் பாடிக் கொண்டிருந்தது ஒரு பெண்.
அவர் பெயர் அங்கயற்கண்ணி. திருப்பள்ளி எழுச்சி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்… எனப் பஞ்சவர்ணசாமி கோவிலின் நான்குகால பூஜையிலும் தேவாரம் ஒலிப்பது இவரின் குரலில்தான்!
இறைப்பணியைச் செய்து கொண்டிருக்கும் முதல் பெண் ஓதுவாரான அங்கயற்கண்ணி, இந்தப் பணியின் மேன்மை குறித்தும், அவர் இந்தப் பணிக்கு எப்படி வந்தார் என்பதைக் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…
“”திருச்சிக்குப் பக்கத்திலே இருக்கும் செம்பட்டு கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். என் கூடப் பிறந்தவங்க ஆறு பேர். நான் நான்காவதா பிறந்தேன். அப்பாவுக்குத் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணி. அவருடைய வருமானத்துக்கு ஏற்ப எங்களின் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டோம். நான் பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு, மேல் படிப்பு படிக்க ஆசைப்பட்டேன். குடும்ப சூழ்நிலையை நினைத்து செலவில்லாமல் படிக்க என்ன செய்யறதுன்னு தேடியபோது, சிலர் திருச்சி மாவட்ட இசைப் பள்ளியில் சேரலாம்னு சொன்னாங்க. என்னோட சின்ன வயசுலே தினமும் எங்க வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற அங்களம்மாள் கோவிலுக்குப் போவேன். அங்கு ஒரு பெரியவர் வந்து தினமும் தமிழில் கணீரென்று பாடுவார். எங்களைப் போன்ற பிள்ளைகளையும் பாடச் சொல்லிக் கேட்பார். அந்த அனுபவம்தான் இசைப் பள்ளியில் சேர்வதற்கு எனக்குக் கை கொடுத்தது.
இசைப் பள்ளியில் மூன்றாம் வருடம் படிக்கும் போதுதான், இந்தப் படிப்பை முடித்தவர்கள் தமிழிசை கச்சேரி செய்யலாம் அல்லது கோவிலில் ஓதுவாராகப் பணியாற்ற முடியும்னு தெரிந்தது. சிறிது நாட்கள் கழித்து ஓதுவார் பணியில் சேர்வதற்கான முயற்சியை செய்து கொண்டிருந்தேன்.
எனது ஆசிரியர் சரவணன் மாணிக்கம் ஐயாதான் படிக்கும் போதும் சரி, நான் பணியைத் தேடிக் கொண்டிருந்த போதும் சரி எனக்கு நல் வழிகாட்டினார். நான் சோர்ந்து போன போது எல்லாம் பல கதைகளைச் சொல்லி என்னை உற்சாகப்படுத்துவார்.
இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அரசு இசைப் பள்ளி மாணவிகளை ஓதுவாராக அனுமதிக்க வேண்டும் என்று எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார் எனது ஆசிரியர்.
என் ஆசிரியரைப் போன்றவர்களின் தொடர் முயற்சியினால், 2006-ம் ஆண்டு அரசு உத்தரவு மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாரானேன். இந்த உத்திரவு வருவதற்கு முன் தினமும் கோவிலுக்குச் சென்று திருமுறைகளைப் பாடி வந்தேன். அந்த பயிற்சியின் போது ஓரளவுக்கு இருந்த பயமும் தெளிந்தது.
திருப்பள்ளி எழுச்சி, கால சந்திக்குப் பிறகு பாராயணம், உச்சிக்காலம்… என்று பாடிய பிறகு வீட்டுக்கு சாப்பிடப் போய்விடுவேன். மாலையில் சாயரட்சை, அதற்குப் பிறகு பாராயணம், அர்த்த ஜாமம்… என்று பாடிய பிறகுதான், ஒருநாள் முழுவதும் இறைவனைப் பாடிய திருப்தியோடு வீட்டிற்குப் போவேன்!
கோவிலில் நான் பாடும்போது, அதைக் கேட்கும் பெண்கள், “”சாமி சன்னதியில் பாடுவதற்கு நீ கொடுத்து வச்சிருக்கணும்மா… எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது..” -என்று சொல்வார்கள். எல்லாம் இறைவன் செயல் என்று நினைத்துக் கொள்வேன்.
பொதுவாக கோவிலில் ஆண் பணியாளர்கள் அதிகம் இருந்தாலும் என்னை மரியாதையோடுதான் நடத்துகிறார்கள்.
தேவாரமும், திருவாசகமும் முன்பு எல்லோர் வீடுகளிலுமே பெண்கள் பாடிய காலம் உண்டு. நாளடைவில் இந்தப் பழக்கம் பெண்களிடம் குறைந்துவிட்டது. மீண்டும் பெண்கள் தேவாரம், திருவாசகத்தைப் பாடவேண்டும்!” என்கிறார் அங்கயற்கண்ணி.
