Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Tamil Nadu Public Works Department (PWD) – Villages’ infrastructure facilities & Support systems for TN river basin resources

பதிந்தவர் Visitor Blogs மேல் மார்ச் 5, 2008

பொதுப்பணித்துறைக்கு மூடுவிழாவா?

நீதி. செங்கோட்டையன்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் டல்ஹெüசி பிரபுவால் 1849-ம் ஆண்டு இந்தியாவில் பொதுப்பணித்துறை துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரயில், பேருந்து, சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கோடு துவக்கப்பட்ட இத்துறை, நாளடைவில் வேளாண் தொழிலின் உயிரோட்டமான நீர்நிலைகளைச் சீரமைக்கும் தலையாய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.

அந்தவகையில் மத்திய பொதுப்பணித்துறையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியாக மாநிலப் பொதுப்பணித்துறையும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை ரெகுலர் பிரிவு, தாற்காலிகப் பிரிவு (திருச்சி, வேலூர் ஆகிய இரு வட்ட அலுவலகங்களின் கீழ் பல கோட்ட அலுவலகங்கள்) என இரு பிரிவுகளாகப் பொதுப்பணித்துறை செயல்படுகிறது.

இதில் ரெகுலர் பிரிவு ஆற்றுப்பாசனம் உள்ள பகுதிகளின் நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண் தொழிலுக்கு வேண்டிய நீர்வளத்தைப் பெருக்கிக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.

தாற்காலிகப் பிரிவானது, ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதிகளில் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது.

முக்கியமாக ஏரிப்பாசனத்தில் தமிழகம் முன்னிலையில் திகழ இந்த தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவின் பங்கு அளப்பரியது.

இதுபோன்ற முக்கியப் பணியை ஆற்றிவரும் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு தமிழக அரசு மூடுவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், தங்கள் தலையில் இடி விழுந்தது போல் உணர்கின்றனர்.

தென் மாவட்டங்களின் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியாகத் திகழ்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், பிழைப்புத் தேடி நகர்ப்புறத்துக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவு மூடப்பட்டால், ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரும் பணியில் மேலும் பின்னடைவு ஏற்படும் என்ற கவலை விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது. அத்துடன், ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி தடைபட்டுப் போனாலும் போகலாம் என்ற அச்ச உணர்வும் பெரும்பாலான விவசாயிகளின் மனத்தைக் கவ்விக் கொண்டுள்ளது.

பொதுப்பணித்துறை ரெகுலர் பிரிவு வேளாண் கட்டமைப்பு தொடர்பான பணிகளை எப்போதுமே குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிப்பதில்லை.

இதனால் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா என்ற செய்தி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதைத் தவிர்த்து, ரெகுலர் பொதுப்பணித்துறை பிரிவில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள் சுய ஆதாயத்தில்தான் அதிக அக்கறை கொண்டவர்களாக உள்ளனர். அதாவது, தங்களுக்கு கணிசமான கமிஷனை அள்ளிக் கொடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மட்டுமே அதிகாரிகள் தனிப்பட்ட சுறுசுறுப்பும் உற்சாகமும் கொண்டுள்ளனர் என்பதையே விவசாயிகள் துணிவாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தவரிசையில், தற்போது தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா நடத்தும் நிலைக்கு தள்ளியது கூட, இந்த ரெகுலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கமிஷன் ஆசைதான் என்றும், அவசியம் ஏற்பட்டால் இதை எந்த இடத்திலும் தாங்கள் சொல்லத் தயார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதாவது ஒருகாலத்தில் ஆற்றுப்பாசனப் பகுதியில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியை மட்டுமே செய்து வந்த பொதுப்பணித்துறையின் ரெகுலர் பிரிவு, அண்மைக்காலமாக ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதியிலும் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது. ரெகுலர் பிரிவின் இந்த முனைப்புக்கு கமிஷன் தான் காரணம் என்பது தவிர எவ்வித நல்ல நோக்கமும் இல்லை.

மாநிலத்தில் மொத்தம் 39,000 ஏரிகள் உள்ளன. ஏரிப்பாசனத்தின் கீழ் 22 சதவீத நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கான ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் விவசாயத்தின் உயிரோட்டமான நீராதாரத்தைப் பெருக்குவதில் அரசு அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.

குறிப்பாக விவசாயத்தின் ஜீவாதாரங்களான ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவற்றைச் சீர்படுத்தி அவற்றை எப்போதும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வது பொதுப்பணித்துறையின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகப் பொதுப்பணித்துறையின் செயல்பாடோ திருப்திகரமாக இல்லை.

இதேபோன்று மெத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் தென்மாவட்டங்களில் விவசாயம் நலிவடைந்து, இன்னொரு “விதர்பாவாக’ உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

இதற்கிடையில், “நதிகளை இணைப்போம்’ என்று அடிக்கடி கூறி வரும் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர், நிதி இல்லாததால்தான் பொதுப்பணித்துறையின் தாற்காலிகப் பிரிவுக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளதாக உலா வரும் செய்திகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>