Nine Tamil Tigers killed, army destroys three LTTE bunkers – Updates on Batticaloa, Triconmalee
பதிந்தவர் SnapJudge மேல் நவம்பர் 19, 2007
மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரது மட்டக்களப்பு இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்களான பீ.அரியநேத்திரன் மற்றும் தங்கேஸ்வரி கதிர்காமன் ஆகியோரின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்கள் காரணமாக நீண்ட காலமாக கொழும்பிலேயே தங்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் வரவு-செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பின்போது, ஆதரவு வழங்க வேண்டும், இல்லையேல் வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டும் என கடந்த ஓரிரு நாட்களாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரக்ளுக்கு தொலைபேசி ஊடாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்ததாகவும், இந்தச் சூழலிலேயே இவர்களின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு இன்று மாலையுடன் நீக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை அரசதரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
வட இலங்கை வன்முறை – புலிகள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தகவல்
![]() |
|
| இலங்கை இராணுவம் |
இலங்கையின் வடக்கே வன்னிப் போர்முனைகளிலும், யாழ்ப்பாணம் கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும் இராணுவத்தனருக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
வன்னிப்பிரதேசத்தில் உள்ள கள்ளக்குளம், பரப்புக்கடந்தான் உட்பட்ட இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும், யாழ்ப்பாணம் கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதியிலும் நேற்று இடம்பெற்ற மோதல்களிலேயே இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.
இதனிடையில் வவுனியாவுக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்.கர்ணல் சரத்பென்சேகா, வன்னி ஆயுதப்படைகளின் தளபதயைச் சந்தித்து, வன்னிப் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்துள்ளார்.
மோதல்கள் இடம்பெறுகின்ற வன்னிப் போர்முனைகளின் நிலைமைகள் மற்றும் இப்பிரதேசத்தின் பொதுவான பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளுடன் அவர் கலநதுரையாடியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள விடுதலைப் புலிகளின் மாவீரர் தனித்தையொட்டி, வன்னிப்பிரதேசம் எங்கும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருவதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
திருகோணமலையில் பொலிசார் தேடுதல் வேட்டை: 23 பேர் கைது
![]() |
|
| காவல்துறையினர் சோதனை(கோப்புப் படம்) |
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தெற்கு பிரதேசத்தின் ஈச்சிலம்பற்றுப் பகுதியில் அரசாங்கப்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டாக நடத்திய தேடுதல்
நடவடிக்கையின்போது சந்தேகத்தின் பெயரில் 23 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈச்சிலம்பற்று பிரதேசத்தை பொருத்தவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த மக்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 20 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்டவர்கள் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் அதேவேளை நாளை திங்கட்கிழமை இவர்கள் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


