Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Mooligai Corner: Herbs & Naturotherapy – Nochi for Asthma

பதிந்தவர் SnapJudge மேல் ஜூலை 26, 2007

மூலிகை மூலை: ஆஸ்துமாவுக்கு நொச்சி!

விஜயராஜன்

மூன்று அல்லது ஐந்து கூட்டு இலைகளை எதிர் அடுக்கில் பெற்ற சிறுமர வகையைச் சேர்ந்தது. இலைகள் வெகுட்டல் மணம் உடையவை. இலை சிறு நீர் பெருகுவதற்கும் நோய் நீக்கி உடலைத் தேற்றுவதற்கும் மாதவிலக்கை ஒழுங்கு செய்வதற்கும் நுண் புழுக்களைக் கொல்லுவதற்கும் பயன்படுகிறது. பட்டை, காய்ச்சல் போக்கும். தமிழகம் முழுவதும் தானாகவே வளரும்.

வேறு பெயர்கள்: அக்கினி, அதிக நாரி, அணிஞ்சில், அதிகனசி, அதி கற்றாதி, அதியூங்கி, அரி, கொடிவேலி, சிற்றாமுட்டி, செங்கோடு வேலி, முள்ளி.

வகைகள் : கருநொச்சி, வெறி நொச்சி.

கருநொச்சி : இலைகள், பட்டைகள் கருப்பு நிறமாக அமைந்து இருக்கும். இதன் இலைகள் உள்ளங்கையளவு நீள அகலத்தில் இருக்கும்.

ஆங்கிலத்தில் : vitex negundo, liss; Verbenaceae.

மருத்துவ குணங்கள்:

நொச்சி, நுனா, வேம்பு, பொடுதலை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் மிளகு 4, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளை 3 நாளுக்குக் கொடுக்க மாந்தம் குணமாகும்.

நொச்சியிலை 1 கைப்பிடியளவு, மூக்கிரட்டை வேர், காக்கரட்டானி வேர் வகைக்கு 1/2 கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு அத்துடன் சுக்கு 1, மிளகும், சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து 1/2 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு தினமும் 2 வேளையாக, 1 வாரம் குடித்துவர தொடக்க நிலையில் உள்ள இளம் பிள்ளை வாதம் (போலியோ) குணமாகும்.

நொச்சி இலை 2, மிளகு 4, இலவங்கம் 1, சிறிய பூண்டுப் பல் 4 சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இரைப்பிருமல் (ஆஸ்துமா), மூச்சுத் திணறல் குணமாகும். தொடர்ந்து இப்படிச் செய்ய வேண்டும்.

நொச்சி இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, மிளகுத்தூள் 1 கிராம், சிறிது நெய்யும் சேர்த்து கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்து, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். (இச்சா பத்தியத்துடன், பாகற்காய், அகத்தி, மீன், கருவாடு நீக்கி உணவு உட்கொண்டு தீவிர ஆசையைத் தவிர்க்க வேண்டும்).

நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பை மேனி, ஆடா தொடை, நாயுருவி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து, முக்கால் அளவு நீருள்ள வாய் அகன்ற மண் கலத்தில் கொதிக்க வைத்துச் சூடு செய்த செங்கல்லைப் போட்டு வேது பிடிக்க வாதம் அனைத்தும் குணமாகும். வாரத்துக்கு 2 முறை செய்யலாம்.

நொச்சியிலையைத் தலையணையாகப் பயன்படுத்த மண்டை இடி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்புவலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) குணமாகும்.

நொச்சி இலைச் சாறு 5 மில்லியளவு எடுத்து பசுங் கோமியம் 5 மில்லியளவுடன் கலந்து 2 வேளை குடித்து வர கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் வீக்கம் குணமாகும்.

நொச்சி இலைச் சாறை கட்டிகளின் மீது இரவில் பற்றுப் போட்டுவர கட்டிகள் கரைந்துவிடும்.

நொச்சிச் சாற்றை நரம்புப் பிடிப்பு, தலைநோய், இடுப்புவலிக்குத் தேய்த்துவர குணமாகும்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>