Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to overcome Diabetes

பதிந்தவர் SnapJudge மேல் ஜூலை 19, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்!: உப்பைக் குறைக்கும் வழி!

பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன்

சர்க்கரை வியாதி பதினெட்டு ஆண்டுகளாக உள்ளது. கால்கள் வீங்கி இருக்கிறது. டாக்டர் உப்பு அதிகமாக உள்ளது என மாத்திரை கொடுத்தார். சரியாகவில்லை. வலியினால் வலது கையை சரியாகத் தூக்கக்கூட முடியவில்லை. உப்பைக் குறைக்க வழி என்ன?

நீரில் உப்புள்ளவர்கள் உப்பைக் குறைப்பதால் அல்லது உப்பை அறவே நீக்குவதால் சிலருக்குக் குணமாகிறது. சிலருக்கு எத்தனை உப்பில்லாப் பத்தியமிருந்தாலும் குறைவதில்லை. நோய்க்கும் பத்திய உணவிற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்வது அவசியம். உடலில் உள்ள கப தாதுவான லஸீகை (albumin)சிறுநீர் வழியே வெளியேறுவதே இந்நோய். கப தாதுவை நீர் வழியே வெளியேறாமல் தடுக்கும் சக்திபெற்ற சீறு நீரகங்கள் இதைத் தடுப்பதில்லை. அதற்குக் காரணம் அவை முழுவதிலுமோ சில பகுதிகளிலோ புண்ணாகி அந்தப் பலவீனத்தால் இது வெளியேறக்கூடும். ரத்தத்திலுள்ள இந்த லஸீகை அதன் இயற்கைத் தடிப்பு குறைந்து சிறுநீரகங்களின் சல்லடைகளில் தங்காமல் வெளியேறியிருக்கலாம். சிறுநீரகங்களில் ரத்த ஓட்ட அழுத்தம் அதிகமாகி அழுத்தத்தால் அது வெளியேற்றப்படலாம். இப்படிப் பல காரணங்களால் கபாம்சமான ஆல்புமின் எனும் லஸீகை சிறுநீரில் காணக்கூடும். எல்லா நிலைகளிலும் உப்பை நீக்குவதும் அல்லது அளவைக் குறைப்பதும் உதவலாம். ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றிவரும் இந்த லஸீகை கேடுற்றால் ஆங்காங்கு தங்கி ரத்த ஓட்டத்தைத் தடை செய்து வீக்கத்திற்குக் காரணமாகும். கேடடைந்த லஸீகையினால் சிறுநீரகங்களும் கெடக்கூடும். இத்தகைய நிலைகளில் உப்பைக் குறைப்பது உதவுகிறது.

பொதுவாகவே இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையுள்ளவை கபத்தை அதிகப்படுத்தும். கபம் கெட்டுள்ள நிலையில் இவற்றைச் சேர்க்க கெட்ட கபத்தின் அளவும் செயலும் அதிகமாகும். இவற்றைக் குறைக்க கபம் குறையும். இம்மூன்று சுவைகளிலும் குறிப்பாக உப்பு கபத்தின் பிசுபிசுப்பைக் குறைத்து நீர்க்கச் செய்து அளவில் அதிகமாக்கும். சிறுநீரின் வழியே வெளியாகும். லஸீகை நீர்த்து அதிக அளவில் வெளியாவதால் கபத்தின் அந்த வளர்ச்சியை அதிகப்படுத்தும் உப்பைக் குறைப்பதால் ரத்தத்தில் கபம் வளரத் தக்க சூழ்நிலை அகற்றப்படுவதால் உடல் வீக்கம் குறைகிறது. ரத்த ஓட்டத் தடை குறையக் குறைய ரத்தக்குழாய்களின் உட்புறப்பூச்சு தடிப்பும் குறைய குழாய்கள் பூர்ண அளவில் விரிந்து சுருங்குகின்றன. ரத்த ஓட்டம் அதிகமாக அதிகமாக உடலில் ஆரோக்கியம் ஏற்படுகிறது.

நீங்கள் உணவில் உப்பை நீக்க வேண்டும் என நினைத்து இட்லி, தோசையில் அதைச் சேர்க்காமல் சாப்பிட்டாலும் உங்கள் உபாதை குறைய வாய்ப்பில்லை. காரணம் இட்லி, தோசையிலுள்ள உளுந்து நுண்ணிய ரத்தக் குழாய்களின் உட்பூச்சை அதிகப்படுத்தி குழாய்களைத் தடிக்கச் செய்யும். உப்பு சேர்க்காததால் வரும் வினையிது. உப்பு சேர்த்தால் இட்லி, தோசை போன்றவை எளிதில் செரித்துவிடும். உப்பில்லாத பண்டம் எளிதில் செரிக்காததால் அதன் சத்து பிரிக்கப்படாமலேயே உடலில் குப்பை கழிவுப் பொருள் தேங்கும் பெருங்குடலில் போய்ச் சேரும். அப்படியே வெளியாகும். செரிக்காத உணவே மறுபடியும் கபதோஷ வளர்ச்சிக்குக் காரணமாகி வளர்ந்து நோய் மாறுவதில்லை.

பாகற்காய், சுண்டைக்காய், வாழைக்கச்சல், கொள்ளு, பாசிப்பருப்பு, வாழைப்பூ, மணத்தக்காளி, கறிவேப்பிலை, நெல்லிமுள்ளி, நன்கு கடைந்து ஆடை எடுத்த மோர், ஆடை புடைக்க இளந்தீயில் காய்ச்சி ஆடை நீக்கிய பசுவின் பால், வல்லாரைக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை முதலியவை உணவில் சேரச்சேர கபம்தானே குறைந்து சிறுநீர் தெளிவாக வெளியேறுவதை உணரலாம். தயிர், பச்சரிசி, அதிக இனிப்பு, வெல்லம், பகல் தூக்கம், உளுந்து முதலியவற்றைத் தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற கபம் சம்பந்தப்பட்ட நீர் நோய்களில் கசப்பும் துவர்ப்பும் மிக்க மருந்து சரக்குகளைக் கொண்ட கஷாயங்கள் நல்ல பலனைத் தருகின்றன.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>