‘Where is the sanctity for personal space & opinions?’ – Actress Kushbu
பதிந்தவர் SnapJudge மேல் ஜூன் 19, 2007
தனி மனித சுதந்திரம் எங்கிருக்கிறது? குஷ்பு ஆவேசம்
சென்னை, ஜூன் 19: இந்தியாவில் தனி மனித சுதந்திரம் என்பது துளிகூட கிடையாது. அதிலும் கருத்துச் சுதந்திரம் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் வளர்ச்சி என்பதே சாத்தியமில்லை என்று நடிகை குஷ்பு ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
சென்னையில் இந்தியத் தொழில் வர்த்தக சபை சம்மேளனத்தின் (ஃபிக்கி) மகளிர் பிரிவு “நீதி -உரிமையா அல்லது சலுகையா?’ என்ற தலைப்பில் கருத்தரங்கை திங்கள்கிழமை நடத்தியது. இதில் பங்கேற்று நடிகை குஷ்பு பேசியது:
“”நீதி என்பது உரிமையா? அல்லது சலுகையா? என்று கேட்டால் அது சாதாரண மக்களுக்கு உரிமை, அதேசமயம் பதவியில் உள்ளவர்களுக்கு சலுகை என்றே கூற வேண்டும்.
கருத்துச் சுதந்திரம் இந்தியாவில் உண்டு என்றால், எனது கருத்தைத் தெரிவித்ததற்காக என்மீது 32 வழக்குகள் போடப்பட்டுள்ளதே, அது ஏன்? இவற்றில் 8 வழக்குகள் மட்டுமே முடிவுற்றுள்ளன. எஞ்சியுள்ள 24 வழக்குகள் எப்போது முடிவடையும் என்றே தெரியாது.
கொலைக் குற்றவாளிக்கு பிறப்பிக்கப்படுவதைப் போல ஜாமீனில் வெளிவர முடியாத (என்பிடபிள்யூ) வாரண்ட் எனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டது. அதுவும் வெள்ளிக்கிழமை மாலை.
எவ்வித அறிவிப்பும் இன்றி திங்கள்கிழமை மாலை நீதிமன்றத்தில் ஆஜரானபோது, செவ்வாய்க்கிழமை காலை ஆஜராகுமாறு என்னிடம் கூறப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்றம் வந்தபோது, அங்கு கூடியிருந்த போதையிலிருந்த அரசியல்வாதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் ஆத்திரத்தோடு செருப்புகளையும் முட்டைகளையும் தக்காளியையும் என் மீது வீசினர். போலீஸôர்தான் என்னை அவர்களிடமிருந்து காத்தனர்.
ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கில் தீர்ப்பு வருவதற்கு 8 ஆண்டு காலம் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இது சாதாரண பாமரனுக்கு சாத்தியமா?.
எனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலுவாக உள்ள வட மாவட்டங்களில்தான் தொடுக்கப்பட்டுள்ளன.
முதலில் பெண்களுக்கெதிரான பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எது சரி, எது தவறு என்று அவர்களிடம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
பிகாரில் 2 வயது சிறுவனுக்கெதிரான வழக்கு. அவன் 26 வயது பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக அந்த வழக்கு. 6 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இப்போது 8 வயதாகும் அச்சிறுவன் தொடர்ந்து நீதிமன்றம் முன் ஆஜராகிறான், தன் மீது எத்தகைய வழக்கு சுமத்தப்பட்டுள்ளது என்றே அவனுக்குத் தெரியவில்லை. பிகாரில் மட்டும் அல்ல, பல இடங்களில் இதுதான் நிலை. இந்த நிலை தொடரும்போது இந்தியா எப்படி வளர்ச்சி அடையும்” என்று கேட்டார் குஷ்பு.
