Amitabh Bachan gets into the NCERT Social Sciences Textbook
பதிந்தவர் bsubra மேல் ஜூன் 19, 2007
பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த அமிதாப்
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் புகழின் உச்சமாக தற்போது பாடப்புத்தகத்திலும் இடம் பிடித்து விட்டார். அவர் நடித்த `தீவார்’(தமிழிலில் ரஜினி நடிக்க “தீ” என்ற பெயரில் வெளியானது) படத்தில் ஒரு காட்சி.
ஷூ பாலீஷ் போட்டு பிழைப்பு நடத்தி வரும் சிறு வயது அமிதாபிடம் ஷூ பாலீஸ் போடுவதற்காக வில்லன் கோஷ்டியினர் இருவர் வருவார்கள். ஷூபாலீஸ் போட்டு முடிந்ததும் அதற்குரிய நாணயத்தை கையில் கொடுக்காமல் தூக்கி ஏறிவார்கள்.
தன்னை அவமானப்படுத்து கிறார்கள் என்று கோபமடையும் அந்த சிறுவன் “துட்ட எடுத்து கையில் கொடுத்துட்டு” போய்யா என்பான் “சின்ன வயதிலேயே உனக்கு இவ்வளவு திமிரா” என்று வில்லன்களில் ஒருவர் அடிக்கப்பாய மற்றொருவரோ அவரைத் தடுத்து கையில் காசை எடுத்து, கையில் கொடுத்துவிட்டுப் போவார்.
சற்று தொலைவில் சென்றதும் “இந்த பையன் வருங்காலத்துல பெரிய ஆளா வருவான் பாறேன்” என்பார்.
தனிமனித சுயகவுரவத்தை யாரும் எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் இந்த காட்சி அதை கருத்தை வலியுறுத்துவதற்காக சமீபத்தில் வெளியான என்.சி.ஆர்.டி. சமூக அறிவியல் பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. ஒரு பாடமாக இந்த காட்சி விளக்கப் பட்டுள்ளது. தீவார் படத்தில் அமிதாப் பச்சனின் ஸ்டில் ஒன்றும் அதில் அச்சடிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் வாழும் காலத்திலேயே பாடப் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் என்ற பெயர் அமிதாப்புக்கு கிடைத்துள்ளது.
சினிமா காட்சிகளின் மூலம் வாழ்க்கைத் தத்துவங் களை விளக்க மேலும் பல சிறந்த படங்களின் சிறந்த காட்சிகளை பாடப்புத்தகங்களில் பாடமாக வைக்கவும் என்.சி.ஆர்.டி. முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி பரிசீலிக்கப்படும் படங்களில் அமீர்கானின் “லகானும்” ஒன்று. சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தபடம் தலைமைப்பண்பின் சிறப்பை விளக்குவதற்காக பாடமாக வைக்க பரிசீலிக்கப் பட்டு வருகிறது.
ஹிருத்திக்ரோஷன், ஷாருக்கான் போன்ற தற்கால இளைஞர்களின் உள்ளங்களை அதிக அளவில் கொள்ளை கொண்ட நடிகர்களையும், பாடபுத்தகங்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வடஇந்திய மாணவர்களிடையே எழுந்துள்ளது.
