Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Kumudam’s Ilakkiya Cholai – Paavannan

பதிந்தவர் SnapJudge மேல் ஜூன் 15, 2007

திப்புவின் கண்கள் – பாவண்ணன்
இலக்கியச்சோலை

ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குப் போயிருந்தேன். சிதைந்து குட்டிச்சுவர்களாகக் காணப்படும் அதன் பழங்காலக் கோட்டை மதில்களைப் பார்த்தபோது ஒருகணம் மனம் அமைதியிழந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களோடு அந்த ஊரை முற்றுகையிட்ட ஆங்கிலப்படை அந்தக் கோட்டையைத் தகர்க்கும் காட்சி கற்பனையில் விரிந்தது. உண்மையில் அந்த முற்றுகைக்கான காரணம் அந்தக் கோட்டையைச் சிதைப்பதோ அல்லது அந்த ஊரைக் கைப்பற்றுவதோ அல்ல எதிர்ப்பின் அடையாளமாக உருவாகி மெல்லமெல்ல வலிமைபெற்று வந்த திப்புசுல்தானைக் கொல்வதுதான் உண்மையான காரணம்.

வீரத்துக்கும் துணிச்சலுக்கும் ஓர் அடையாளமாக நின்றவன் திப்பு. அவன் வீரத்தைப் பறைசாற்றும் கதைகள் ஏராளம் வேட்டையாடச் சென்ற காட்டில் எதிர்பாராத கணத்தில் தன் முன்னால் பாய்ந்துவந்த புலியை நேருக்குநேர் பார்த்துப் போராடி சுட்டு வீழ்த்திய சம்பவம்தான் அவனுக்கு மைசூர்ப்புலி என்ற பெயர் உருவாகக் காரணம்.

ஒரு புலியை, அது வாழக்கூடிய காட்டிலேயே தன்னந்தனியாக ஓர் இளைஞன் எதிர்கொண்டு நிற்கும் காட்சியைக் கொண்ட சித்திரத்தைப் பார்க்காதவர்களே இருக்கமுடியாது. இளம்வயதில் புலியை எதிர்கொண்டவன் நடுவயதில் ஆங்கிலேயர்கள் என்னும் புலியை எதிர்கொண்டான். திப்புவைப் பொறுத்தவரை எதிர்த்து நிற்றல் என்பது உரிமைக்கும் உயிர்வாழ்தலுக்குமான ஒரு போர்.

கோட்டை வாசலைத் தாண்டி வந்து சிறிது தொலைவு நடந்தபிறகு போரில் கொல்லப்பட்ட திப்புவின் உடல் கிடந்த இடம் என்ற அடையாளக்குறிப்புடன் ஒரு சதுக்கம் காணப்பட்டது. ஒரு சின்ன நடுகல் அங்கிருந்தது ஒருகணம் தரையில் அவன் உடலைக் கண்டது என் மனம்.

காலத்தாலும் மண்ணாலும் அழிக்கமுடியாத அந்த மாபெரும் உடல் ஏராளமான வெட்டுக் காயங்களுடன் வெட்டி வீழ்த்தப்பட்ட ஒரு பச்சைமரத்தைப்போல மல்லாந்து கிடந்தது. காயங்களிலிருந்து சொட்டுச்சொட்டாக உதிர்ந்துகொண்டிருந்தன. ரத்தத்துளிகள். மூச்சின் இறுதிக் கணங்களில் அந்தத் தோள்கள் அசைந்தன. கன்னம் அசைந்தது விரிந்த மார்பு ஏறித் தாழ்ந்தது. கூர்மை குன்றாத கண்கள் உற்றுப் பார்த்தன. எண்ணங்கள் முற்றாகக் கலைந்து விலகியதும் உடல் உதற தன்னுணர்வு திரும்பியது. அந்தக் கண்கள் அப்போது ஒரு செடியின் இலைகளாக மாறிவிட்டிருந்தன. எழுச்சிமிகுந்த உணர்வு நிலையில் என்னால் திப்புவின் உடலை ஓர் ஓவியமாகத் தீட்டிவிடமுடியும் என்று தோன்றியது.

ஆதிக்க வேர்கள் பரவி விரிவு-பெறும் முன்னரே வெட்டி-யெறிய வேண்டும் என எழுச்சியுள்ள திப்புவின் வேகம்தான் ஆங்கிலேயர்-களை அச்சுறுத்தியிருக்கவேண்டும். கொள்ளிடத்துப் படுகையில் நடந்த போரிலும் காஞ்சியில் நடந்த போரிலும் திப்புவிடன் அடைந்த தோல்வி அவர்களுடைய பீதியை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி-யிருக்கவேண்டும். அதுவே வெறுப்-பாகவும் வெறியாகவும் மாறி ஏராளமான சேனைகளுடன் முற்றுகையிடத் தூண்டி திப்புவைப் பலிவாங்கியது.

மாளிகைக்குள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்தேன். எல்லாமே போர் ஓவியங்கள் முதல் மைசூர்ப்போரிலும் இரண்டாம் மைசூர்ப்போரிலும் திப்பு அடைந்த வெற்றியின் அடையாளங்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருந்தன. பார்த்த இடங்களிலெல்லாம் வரிசைவரிசையாக செல்லும் காலாட்படைகள். குதிரைப்படைகள் யானைப்படைகள் பீரங்கி வண்டிகள், வெற்றியின் ஆக்கிரமிப்பு மரணத்தின் ஓலம் வெற்றிக்கொண்டாட்டக் காட்சிகளும் தோல்வியுற்றவர்களைக் கைது செய்து அழைத்து வரும் காட்சிகளும் மாறிமாறித் தென்பட்டனய. துப்பாக்கிகளும் பீரங்கிகளும் இடம்பெறாத ஓவியமே இல்லை.

இந்தக் கொந்தளிப்புகிகு நேர்மாறாக அமைதி ததும்பிய ஓர் ஓவியம் அக்கால ஸ்ரீரங்கப்பட்டண வீதிகளையும் கோட்டையையும் காட்சிப்படுத்தும் இன்னொரு கூடத்தில் இருந்த ஓவியங்கள் வேறுவகையானவை.

எல்லாமே திப்புவின் குடும்பப்படங்கள். ஒரே வரிசையில் திப்புவின் ஆறு பிள்ளைகளுடைய படங்கள் கோட்டோவியங்களாகத் தீட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. மூத்தவனுக்கு நல்ல வாலிபத் தோற்றம். முறுக்கேறிய உடல் உறுதியான தோள்கள். அவனைவிட சற்றே வயது குறைந்த தோற்றம் இரண்டாம் மகனுடையது. கன்னத்தின் மினுமினுப்பு இளமையின் அடையாளமாகக் குடிகொண்டிருந்தது. அடுத்த மகனுக்கு இன்னும் இளையவயதுத் தோற்றம் அதன் அடையாளமாக சின்ன அரும்புமீசை அதற்கடுத்தவனுடைய தோற்றம் சிறுவனுடையதுமாகவுமில்லாமல் இளைஞனுக்குரியதமாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் இருந்தது. உதடுகள் சற்றே தடித்து முகத்தில் களைபடிந்த தோற்றம். அதற்கடுத்த பிள்ளைக்கு வளர்ந்த சிறுவனின் தோற்றம். பெண்மைபடர்ந்த முகவெட்டு சற்றே உப்பிய கன்னங்கள் அதற்கடுத்த சிறுவனுக்கு முழுக்கமுழுக்கக் குழந்தைத்தோற்றம். ஓவியனின் திறமையைக் கண்டிப்பாகப் பாராட்டவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தபோதே படிப்பதற்காக கீழே எழுதிவைக்கப்பட்டிருந்த குறிப்பு ஒருகணம் துணுக்குறவைத்தது. கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வேலூ

ர்க் கோட்டையில் சிறைவைக்கப்பட்ட பிள்ளைகளின் படங்கள் அவை சிறை ஆவணங்களாக இந்தப் படங்கள் தீட்டப்பட்டிருக்குமோ என்று தோன்றியது. சின்னஞ்சிறு பாலகனைக்கூட பகையாக நினைத்து நடுங்கிய ஆங்கிலேயரின் மனநிலை விசித்திரமாக இருந்தது.

அடுத்தபடி அகலமாக இருந்த அறையில் ஏராளமான பொருட்கள் அடுக்கப்பட்டிருந்தன. விதம்விதமான திப்புவின் உடைவாள்கள், கத்திகள், துப்பாக்கிகள் ஆயுதங்கள் போர் அங்கி மார்புக்கவசம் உணவுமேசை. ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே நகர்ந்தபோது இன்னொரு கூடத்தில் ஆளுயரத்துக்கு வைக்கப்பட்டிருந்த திப்புவின் ஓவியத்தையும் பார்த்தேன். கிட்டத்தட்ட திப்புவே எதிரில் வந்து நிற்பதைப்போன்ற தோற்றம். மிடுக்கான தோற்றம் எடுப்பான தோள்கள். உறுதிமிகுந்த கைகள் கலங்காத முகம் கூர்மையான கண்கள் ஒருகணம் அக்கண்கள் என்னையே உற்றுக் கவனிப்பதைப்போலத் தோன்றியது.

காலையில் என் கற்பனையில் கண்ட அதே கண்கள் அதே வெளிச்சம் அதே கூர்மை நுன்றுநுன்று கேள்விகள் படித்த அதே பார்வை என் உடலில் லேசான பதற்றமும் நடுக்கமும் படர்வதை உணர்ந்தேன்.

மெல்ல நகர்ந்து ஓவியத்தை நெருங்கி நின்றேன். திப்புவின் பார்வை என்மீதே படிந்து என்னையே தொடர்ந்தது. ஆச்சரியத்தோடு இடதுபுறம் இரண்டடி நகர்ந்தேன். அந்தப் பார்வை அங்கும் என்னைத் தொடர்ந்து வந்தது. இன்னும் நான்கடி பின்னால் வேறு கோணத்தில் நகர்ந்து ஏறிட்டபோது அப்பார்வை என்மீது நிலைகுத்திச் சிரித்தது முற்றிலும் நேர்எதிராக இடது புறமாக நடந்து நின்றேன். அப்போதும் தொடர்ந்து அப்பார்வை எல்லாமே பிரமைபோலத் தோன்றியது. எந்தக் கோணத்தில் நின்றாலும் அந்தக் கண்கள் விடாமல் என்னைத் தொடர்வதை உணர்ந்தேன். ஆச்சரியம் என்று வாய்விட்டுச் சொன்ன கணத்தில் அருகிலிருந்த காவலர் அது முப்பரிமாணத் தன்மையுடன் தீட்டப்பட்ட ஓவியம் என்றும் இருநூறு ஆண்டுகளுக்கும் முன்பே நிகழ்த்தப்பட்ட இச்சாதனை மிகப்பெரிய அதிசயம் என்றும் சொன்னார்.

ஏராளமானவர்களுடைய கண்கள் மனத்தில் புள்ளிகளாக மாறிமாறி அசைந்தன. காலம்காலமாக அவை பகிர்ந்துகொண்ட சிரிப்புகள், கோபங்கள் கருணை காதல் மயக்கம் சீற்றம் வெறி ஆத்திரம் எல்லாம் படம்படமாக நகர்ந்தன. அவை எதனுடன் இணைத்துச் சொல்லமுடியாத ஓர் உணர்வு ஈரம் மிகுந்த திப்புவின் கண்களில் உறைந்திருந்தது. இந்த மண்ணையும் காற்றையும் செடி கொடிகளையும் கோட்டை கொத்தளங்களையும் குழந்தைகளையும் மக்களையும் பார்த்துக்கொண்டே இருக்கும். பேராவலே அந்த உணர்வு திப்புவின் மன ஆழத்தில் உறைந்திருந்த அந்த வேட்கையை அந்த ஓவியனும் உணர்ந்திருந்ததை நான் உணர்ந்த அக்கணம் அற்புதமான ஒரு பேரனுபவம். மனத்தை அறியும் விடாமுயற்சிகளில் இடையறாது ஈடுபடுவது கலை என்பதை எனக்கு உணர்த்தியது அக்கணம்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>