Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to increase Sperm Count

பதிந்தவர் SnapJudge மேல் மே 23, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடற்சூட்டால் வரும் கேடு!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, சரத்பேட்டை- 602 103.

எனக்கு வயது 35. மனைவிக்கு வயது 22. மூன்று வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. எங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் புண்ணியம் இல்லை. எனக்கு விந்தணுக்கள் குறைவாக உள்ளது. சிறு குழந்தைகளைக் கண்டால் கண்களில் நீர் நிறைந்து விடுகிறது. ஏக்கமும் அழுகையும் கட்டுப்படுத்த முடியவில்லை. என் மனைவிக்கும் மாதவிலக்கு நாட்கள் அதிகமாக இருப்பதால், அவளுடைய உடல் நலம் தேறவும், என் உடல் நிலை கோளாறையும் சரி செய்ய என்ன வழி?

எஸ்.ராஜேஷ், மதுரை.

ஆண்கள் பலருக்கும் விந்தணு குறைபாடு இன்று அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு எனும் பூமியின் வெப்பம் அதிகரித்திருப்பதை ஒரு காரணமாகக் கூறுகின்றனர். மனிதனின் தனிப்பட்ட செயல்களாலும் உடற் சூடு அதிகரிக்கக் கூடும். புகைப் பழக்கம், மதுபானம் அருந்துதல், நிதானமற்ற பதட்டமான சூழ்நிலையில் அலுவல் வேலை, சிறு விஷயங்களுக்குக் கூட வீட்டில் கடும் கோபம் கொள்ளுதல், உணவில் அதிகம் காரம், புளி, உப்பு, காரம்மசாலா சேர்த்தல், ஆவக்காய், மாங்காய் ஊறுகாய் அதிகமாகச் சாப்பிடுதல், இரவில் அதிக நேரம் கண் விழித்தல், குழந்தை வேண்டுமே என்ற ஏக்கத்தில் அதிகமான தாம்பத்ய உறவு, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருத்தல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பேதி மருந்து சாப்பிடாதிருத்தல் என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாம் உண்ணும் உணவு அனைத்தும் ஏழு தாதுக்களால் ஜீரணம் செய்யப்படுகின்றன. உணவின் சாரத்தை முதலில் பெறும் ரஸதாது தனக்கு வேண்டிய சாரத்தைப் பெற்று, கபத்தைக் கழிவாக வெளியேற்றுகிறது. அடுத்த சாரத்தை ரத்தம் ஜீரணம் செய்து தன் பகுதியைப் பெற்றுக்கொண்டு, பித்தத்தைக் கழிவாக வெளியேற்றுகிறது. மாமிசம் உணவின் சாரத்தை உறிஞ்சி, உடலின் உட்புற துவாரங்களில் கழிவைச் சேர்க்கிறது. மேதஸ் எனும் தாது தன் பங்காகிய உணவின் சாரத்தை உறிஞ்சி, வியர்வையைக் கழிவாக வெளியேற்றுகிறது. எலும்பு, உணவின் போஷகாம்சத்தைப் பெற்று நகம், தலைமுடி ஆகியவற்றைக் கழிவாகவும், மஜ்ஜை உணவுச் சத்தை உறிஞ்சி, தோல், கண் பகுதியில் எண்ணெய்ப் பசையைக் கழிவாகவும், இறுதியாக விந்து, உணவின் சாரத்தைப் பெற்று “ஓஜஸ்’ எனும் உடலின் சாராம்சத்தையும் ஏற்படுத்துகிறது. உண்ணும் உணவின் மிகவும் சூட்சமமான சாரத்தைப் பெறும் விந்து, அணுக்களை உற்பத்தி செய்வதில் முழுவதுமாக உணவை நம்பித்தான் இருக்கிறது. நிலம் மற்றும் நீரின் அம்சம் அதிகம் கொண்ட இனிப்புச் சுவை விந்தணுக்களின் உற்பத்திக்கு அதிக அளவில் உதவி செய்கிறது. அதிரஸம், பாயசம், சர்க்கரை கலந்த பாலுடன் உளுந்துக் கஞ்சி, உளுந்து வடை (பசு நெய்யில் பொரித்தது), சர்க்கரைப் பொங்கல் போன்றவை விந்தணுக்களை அதிகப்படுத்துபவை. கீழ்காணும் மூலிகை மருந்துகளை நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கி நன்றாக அரைக்கவும்.

அமுக்கராக் கிழங்கு, பூனைக் காலி விதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, பால் முதுக்கன் கிழங்கு, நெரிஞ்சில் விதை, அதிமதுரம், பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரப் பருப்பு.

மேற்கண்ட பருப்புகளையெல்லாம் வகைக்கு 100 கிராம். அரைத்ததை துணியால் சலித்து, கண்ணாடி பாட்டிலில் காற்று புகாதபடி மூடிவைக்கவும். 5 கிராம் சூரணத்தில் 10 மிலி பசு நெய்யும் (உருக்கி), 5 மிலி தேனும் குழைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடவும். விந்தணுக் குறைபாட்டை இம்மருந்து தீர்க்கக் கூடும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடவும்.

உங்கள் மனைவியின் மாதவிலக்கு நாட்கள் அதிகம் ஏற்படுவதற்கான காரணத்தை அறிவது நலம். இருப்பினும் பொதுவாக புஷ்யானுகம் சூரணம் சாப்பிட நல்லது. 5 கிராம் சூரணம் 1 1/2 ஸ்பூன் (7.5 மிலி) சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர், 1/2 ஸ்பூன் தேன் குழைத்து காலையில், மாலையில் உணவிற்கு 1 மணிநேரம் முன்பாகச் சாப்பிடலாம். சதாவரீகுலம், அசோகாரிஷ்டம், பலசர்ப்பிஸ், குமார்யாஸவம் போன்ற மருந்துகள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு கருப்பையின் வலுவை அதிகப்படுத்தலாம்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>