Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

TASMAC vs Private Liquor Shops in Tamil Nadu – Monthly License woes

பதிந்தவர் SnapJudge மேல் மே 17, 2007

மாதாந்திர உரிமத் தொகை மாற்றத்தால் தனியார் பார் உரிமையாளர்கள் அவதி

சென்னை, மே 16: மாதாந்திர உரிமத் தொகை மாற்றத்தால் தனியார் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதனால் பாரை மூடிவிட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு (2005-2006) டெண்டர் காலத்தில், மதுக்கடையின் மொத்த விற்பனைத் தொகையிலிருந்து, கடையைப் பொருத்து 2.5 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதில் அதிகபட்ச சதவீதம் எடுப்பவர்களுக்கு மட்டும் டெண்டர் உரிமம் கொடுக்கப்படும்.

அவர்கள் மதுக்கடையின் விற்பனையைப் பொருத்து கூடுதலாகவோ, குறைவாகவோ ஒவ்வொரு மாதமும் மாதாந்திர உரிமத் தொகையை செலுத்திவந்தனர்.

ஆனால் 2006 டிசம்பர் மாதம் முதல், கடந்த ஆண்டில் எந்த மாதம் அதிகமான விற்பனை ஆகியிருந்ததோ, அதனையே குறைந்தபட்ச மாதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் டாஸ்மாக் கடையில் விற்பனை கூடுதலாகும் பட்சத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாதக் கட்டணத்தைவிட கூடுதலாகவும், விற்பனை குறையும்போது நிர்ணயிக்கப்பட்ட தொகையும் மாத உரிமத் தொகையாக வசூலிக்கப்படுகிறது.

எந்தவொரு வியாபாரமும் எப்பொழுதும் ஒரே சீராக இருப்பதில்லை. வியாபாரம் குறைந்தால் கட்டணத் தொகையைக் குறைக்காமலும், வியாபாரம் அதிகரித்தால் மட்டும் கட்டணத் தொகையை கூடுதலாகக் கட்டச் சொல்வதும் பார் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது.

இதோடு அரசு விடுமுறை நாள்களுக்கும் சேர்த்துப் பணம் கட்ட வேண்டியுள்ளது. கிடங்கிலிருந்து கடைகளுக்கு மதுபாட்டில்களை எடுத்துவருவதற்கு மெத்தனப் போக்கு காட்டுவதால், பார் தின்பண்ட விற்பனை நேரடியாகப் பாதிக்கப்படுகிறது.

மேலும் 30 சதவீதத்தினர் பாரில் அருந்தாமல், மது பாட்டில்களை பார்சல் வாங்கிச் சென்றுவிடுகின்றனர். ஆனால் இந்த 30 சதவீதத்தினருக்கும் சேர்த்தே மாதக் கட்டணத்தை அரசுக்கு பார் உரிமையாளர் செலுத்தவேண்டி உள்ளது.

மாதக் கட்டணத்தை குறைக்கக் கோரி உயர் அதிகாரிகள் பலரிடம் மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. தனியார் பாரை மூடவைத்து, டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் பார் நடத்தி லாபம் அடைவதிலேயே அதிகாரிகள் குறிக்கோளாக உள்ளனர் என்றார் சென்னை எழும்பூர் தனியார் பார் உரிமையாளர் குமார்.

தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு மதுக்கடையின் விற்பனையைப் பொருத்து, பாருக்கான மாத உரிமத் தொகையைக் கணக்கிட்டு வசூலிக்கவேண்டும் எனவும் பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 பதில்கள் -க்கு “TASMAC vs Private Liquor Shops in Tamil Nadu – Monthly License woes”

  1. bsubra சொன்னார்

    திருநெல்வேலி மாவட்டத்தில் பீர் தட்டுப்பாடு

    திருநெல்வேலி, மே 21: திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் மொத்தம் 216 டாஸ்மாக் கடைகளில், திருநெல்வேலி மாநகர் பகுதியில் 42 கடைகள் உள்ளன. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாட்டை காரணம் காட்டி பெரும்பாலான பார்களில் பீர் அதிக பட்சவிலையைவிட கூடுதலாக ரூ. 5 முதல் ரூ. 10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பீர் பாட்டில்களை வைக்க குளிர்சாதன வசதி இல்லை. இதனை வாய்ப்பாக சில பார் உரிமையாளர்கள் பயன்படுத்தி பார்களில் பெரிய அளவில் குளிர் சாதன இயந்திரத்தை வைத்துள்ளனர்.

    இதனால் டாஸ்மாக் கடையிலிருந்து மொத்தமாக அதிகபட்ச சில்லரை விலைக்கு பீர் பாட்டில்களை வாங்கி அதனை குளிரூட்டி வைக்கின்றனர் பார் உரிமையாளர்கள்.

    குளிரூட்டப்பட்டதால் பீருக்கு கூடுதலாக ரூ. 5 முதல் ரூ. 10 வரை வசூலிக்கின்றனர்.

    இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

    கோடை வெயிலுக்கு பீர் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது. விற்பனைக்கு ஏற்ப போதுமான பீர் வரத்து இல்லை.

    5 நிறுவனங்கள் தயாரிக்கும் பீர் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் தற்போது 2 நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பீர் தட்டுப்பாடு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமபுறங்களை விட நகரப்பகுதியில் பீர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் ஒரு பெட்டிக்கு 12 பீர் பாட்டில் வீதம் 1400 பெட்டிகளில் பீர் வருகிறது. வந்த சிறிது நேரத்தில் பீர் அனைத்தும் விற்றுவிடுகிறது.

    இந்த தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்றார் அவர்.

  2. bsubra சொன்னார்

    Politics News / அரசியல் அலசல்

    தமிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக் கடைகள் 6700. தினசரி விற்பனை ஆகும் அயல் நாட்டு மதுபானம் 90 ஆயிரம் பெட்டி. அயல்நாட்டு பீர் 45 ஆயிரம் பெட்டி. விற்பனை 25 கோடி ரூபாய். ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனை 1 கோடியே 10 லட்சம் பெட்டிகள். விடுமுறை நாட்களில் குடிப்பவர்கள் 60 லட்சம் பேர். இந்தக் கடைகளில் நாள் ஒன்றுக்கு விற்பனை 25 கோடி ரூபாய். தீபாவளி அன்று விற்பனையான மதுபானத்தின் மதிப்பு 60 கோடி ரூபாய். 2006-2007ல் மதுபான விற்பனை 8900 கோடி. இதன் மூலம் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள வருவாய் 7450 கோடி ரூபாய். அதற்கு முந்தின ஆண்டு 7338 கோடி ரூபாய்தான். 2008-2009க்கான இலக்கு 10000 கோடி ரூபாய். ‘

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>