DMK vs DMDK – Karunanidhi vs Vijayganth
பதிந்தவர் SnapJudge மேல் மார்ச் 27, 2007
திமுக தொடக்க விழாவில் நான் இல்லையா?: விஜயகாந்துக்கு கருணாநிதி காட்டமான பதில்
சென்னை, மார்ச் 27: திமுக தொடக்க விழாவில் இருந்தவர்கள் குறித்த விவரங்கள் தெரியாமல் சிலர் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
இது தொடர்பாக திமுகவினருக்கு அவர் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:
திமுக தொடக்க விழா குறித்து மறைந்த டி.எம். பார்த்தசாரதி எழுதிய “தி.மு.க. வரலாறு’ ஏட்டில் கழகம் தொடங்கிய வரலாறு குறித்து எழுதி இருப்பது:
17.9.1949 அன்று காலை 7 மணிக்கு சென்னை பவழக்காரத் தெரு, 7-ம் எண் இல்லத்தில் கூடிய அமைப்புக் குழுவின் கூட்டத்தில், கழகத்தின் பெயர், கொடி பற்றிய அறிவிப்புகளும் செய்யப்பட்டு கழகப் பொதுக்குழுவும் அமைக்கப்பட்டது.
அந்த புத்தகத்தில் பக்கம் 109-ல் பொதுக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் எல்லாம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் பொதுக்குழுவில்: சி.என். அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், மு. கருணாநிதி, என்.வி. நடராசன், ஈ.வெ.கி. சம்பத், டி.எம். பார்த்தசாரதி… என்று பட்டியல் தொடருகிறது.
இது மாத்திரமல்ல, “வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்’ என்ற நாவலர் இரா. நெடுஞ்செழியன் எழுதிய புத்தகத்தில் 177-வது பக்கத்தில் கூறி இருப்பது:
“அறிஞர் அண்ணாவின் அழைப்பை ஏற்று 150-க்கும் மேற்பட்ட முக்கிய முன்னணியினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மிக முக்கியமானவர்களின் பெயர்கள் வருமாறு: அறிஞர் அண்ணா, நான், கே.ஏ. மதியழகன், கலைஞர் கருணாநிதி, சம்பத், என்.வி. நடராசன்’ என நாவலர் பட்டியலிடுகிறார்.
இந்த வரலாறெல்லாம் தெரியாதவர்கள் கூறிய தகவல்களை தெரிவித்து வம்பிலே சிக்கிக் கொள்வது நல்லதல்ல. கழகத்தை பற்றிய உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தையே அழித்துவிட படை திரட்டுகிறார்கள்.
பதுங்கிப் பாய்கிறார்கள், பச்சைப் பொய்களைத் தங்கள் போர்க்கணைகளாக ஆக்குகிறார்கள் என்பதையெல்லாம் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங்களில் கட்சியினர் மக்களிடம் விளக்க வேண்டும்.
