Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Mahinda Rajapakse & LTTE made a deal? US, German and Italian ambassadors injured in a LTTE attack

பதிந்தவர் SnapJudge மேல் பெப்ரவரி 27, 2007

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பார்வையிடச் சென்ற அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் உட்பட 14 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும், இவர்களில் இத்தாலிய தூதுவர் உட்பட 11 பேர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் யுத்த அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள், அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் இன்று மட்டக்களப்பு சென்றிருந்தார்.

இவர்கள் சென்ற ஹெலிக்கொப்டர் மட்டக்களப்பு நகரில் உள்ள வெபர் மைதானத்தில் தரை இறங்கியதும், அங்கு படை மற்றும் சிவில் அதிகாரிகளால் இவர்கள் வரவேற்கப்பட்டனர்.

அப்போது அங்கு இரண்டு எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சம்பவத்தின் போது ஒரு எறிகணையின் சிதறல் அருகில் இருந்த வின்சன்ட் மகளிர் கல்லூரியில் விழுந்ததில் ஒரு மாணவியும் காயமடைந்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், இராஜதந்திரிகள் அந்தப் பகுதிக்கு வருவது குறித்து தமக்கு முன்னரே அறிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

இது குறித்துக் கருத்துக் கூறிய இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல தோர்பினூர் ஒமர்சன் அவர்கள், இப்படியாக இத்தகைய பயணங்கள் குறித்து கூறவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று கூறினார்.


‘ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக புலிகளுடன் மஹிந்த ரகசிய ஒப்பந்தம்’- சந்தேகம் எழுப்புகிறார் ரணில்

மஹிந்த ராஜபக்ஷவும் ரணிலும்
மஹிந்த ராஜபக்ஷவும் ரணிலும்

இலங்கையில் கடந்த 2005இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது என்பதில் ஏதோ உண்மை இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2 லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்திருந்தார்.

அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிறிபதி சூரியாராட்சி அவர்கள் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரர்களிற்கும் எதிராக பலவாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

ஜனாதிபதித் தேர்தலிற்கு முன்பதாக மஹிந்த ராஜபக்ச தரப்பினரிற்கும், புலிகளிற்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பில் இரகசிய ஒப்பந்தம் இருந்தது என்று மிகவும் பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை ஊடகங்கள் வாயிலாக ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கிறார்.

இந்த விடயம் குறித்து சந்தேகத்தை கிளப்பியுள்ள ரணில் விக்கிரமசிங்க, இப்படியாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இலங்கை ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும் என்று தற்போது கூறியுள்ளார்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>