Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Women Representation Reservation Bill in Parliament & Female MPs

பதிந்தவர் SnapJudge மேல் டிசம்பர் 21, 2006

மகளிர்க்கு “இடம்’ கொடுப்போம்

பி. சக்திவேல்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரமும் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குவது, அவர்களை சமூக, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.

நாடு சுதந்திரம் பெற்று இதுவரை 14 பொதுத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 1952-ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலிலேயே பெண்கள் வாக்குரிமை பெற்றுத் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

ஆனால் பிரிட்டன், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமையானது அந் நாடுகள் சுதந்திரம் பெற்றுப் பல ஆண்டுகள் ஆன பிறகு, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தான் கொடுக்கப்பட்டது.

உதாரணமாக, பிரிட்டனில் 1918 மற்றும் 1928-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் மூலம் தான் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. அமெரிக்காவில் 1922-ம் ஆண்டும், சுவிட்சர்லாந்தில் 1971-ம் ஆண்டும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஒரு சில வளைகுடா நாடுகளில் 21-ம் நூற்றாண்டில்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில் ஜனவரி 26, 1950-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புச் சட்டத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு, அரசியல் சமத்துவம் நிலைநாட்டப்பட்டது. இது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயமாகும்.

நமது நாடாளுமன்றத்துக்கு இதுவரை நடைபெற்றுள்ள 14 பொதுத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்து வருகிறது. அதிகபட்சமாக 2004-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 355 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 45 பேர் (8.3 சதவீதம்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜெனீவாவிலிருந்து செயல்படும் நாடாளுமன்றங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு “”உலக அரசியல் வரைபடத்தில் பெண்கள் – 2005” என்ற தலைப்பில், 186 நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் பற்றி ஆராய்ந்து ஓர் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அதிக அளவு பிரதிநிதித்துவம் அளித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 104-வது இடத்தில்தான் உள்ளது. பாகிஸ்தான் 21.3 சதவீதம் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளித்ததன் மூலமாக 42-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ருவாண்டா 48.8 சதவீதமும், சுவீடன் 47.3 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பெல்ஜியம் போன்ற நாடுகளில் ஏற்கெனவே பெண்களுக்கு 33.3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மகளிர் பிரதிநிதித்துவம் இவ்வாறு இருக்கையில், தமிழக சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பார்த்தோமேயானால் நிலைமை திருப்தி அளிக்கக்கூடியதாக இல்லை. அதிகபட்சமாக 1991-ம் ஆண்டு 31 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 22 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களை (2,32,35,167) விட பெண் வாக்காளர்கள் (2,39,72,873) அதிகம் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அதேபோல் பல தேர்தல்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், பெண்களின் வாக்கு சதவீதம் அதிக அளவில் பதிவானது நிதர்சனமான உண்மையாகும்.

பெண்கள் அதிக அளவில் சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படாமைக்கு முக்கியக் காரணம் உள்ளது. கட்சியில் பெரும் அளவில் பெண் உறுப்பினர்கள் இருந்தபோதிலும் கட்சியின் பல்வேறு பதவிகளுக்குப் பெண்கள் நியமனம் செய்யப்படாததும், பெரும் அளவில் பெண்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அளிக்கப்படாததுமே காரணம் ஆகும். ஒரு சில கட்சிகள் ஒரு பெண் வேட்பாளரைக்கூட தேர்தலில் போட்டியிட வைக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படாமைக்கு முக்கியக் காரணம்: 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது. 10-லிருந்து 15 சதவீதம் மட்டும் அளிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு இந்த 33 சதவீதத்தில் உள் ஒதுக்கீடு வழங்கலாமா அல்லது வழங்கக் கூடாதா. நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதா அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்திய பிறகு இட ஒதுக்கீடு வழங்குவதா?

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்று கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட பிறகு மேற்கூறிய பிரச்சினைகளை விவாதித்து ஒருமனதான கருத்து எட்டப்படலாம்.

மகளிர் இட ஒதுக்கீடு விஷயமானது 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தீர்வு காணப்படாத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இன்றைய சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்களின் விருப்பம் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதை வலியுறுத்திதான் பல மகளிர் அமைப்புகள் போராடி வருகின்றன. பெண்களை சமூக, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மேம்படுத்தவும், அவர்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிக்கப்படவும் வேண்டுமென்றால் மகளிர் இட ஒதுக்கீடு மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் மக்களாட்சித் தத்துவம் முழுமை பெறுவதோடு மட்டுமல்லாமல் ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உருவாகும்.

மகளிர் பெரும் அளவில் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு ஒன்றே தீர்வாகும். சர்வதேச அளவில் மகளிருக்குப் பிரதிநிதித்துவம் அளித்த பட்டியலில் 104-வது இடத்தைத்தான் இந்தியா பெற முடிந்தது. இந்த நிலை மாற வேண்டும்.

(கட்டுரையாளர்: துணை பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>