Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

LTTE ideologue Anton Balasingham passes away due to bile duct cancer (cholangiocarcinoma)

பதிந்தவர் SnapJudge மேல் டிசம்பர் 14, 2006

அன்டன் பாலசிங்கம் காலமானார்

அன்டன் பாலசிங்கம்
அன்டன் பாலசிங்கம்

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் இன்று இலண்டன் நகரில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.

இருபத்தைந்து ஆண்டு காலத்துக்கும் மேலாக விடுதலைப் புலிகள் அமைப்பின் பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றியதாகக் கருதப்படும் ஆண்டன் பாலசிங்கம் அவர்கள், இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில், விடுதலைப் புலிகள் குழுவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் அவர் இருந்திருக்கிறார்.

பல ஆண்டு காலமாக இலண்டன் நகரில் வசித்து வரும் ஆண்டன் பாலசிங்கம் சில மாதங்களாகவே கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளின் இரங்கல்

தமிழீழத்தின் ராஜகுருவாக திகழ்ந்த அன்டன் பாலசிங்கத்தை பிரிந்து தமிழ் இனம், ஆற்றுப்படுத்த முடியாத துயரில் மூழ்கியுள்ளது என்று அன்டன் பாலசிங்கத்தின் இல்லத்தில் இருந்து விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்டன் பாலசிங்கம் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலசிங்கத்தின் மறைவால் தமிழ் தேசமே சோகத்தில் முழ்கியுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

விமர்சகர் கருத்து

பாலசிங்கத்தின் மறைவு விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கும் என்று கனடாவில் இருக்கும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.

 பாலசிங்கத்தின் மறைவால் தமிழ் தேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது

 

விடுதலைப் புலிகள்

முதலில் இடது சாரி சிந்தனையாளராக இருந்த பாலசிங்கம், பிறகு தமிழ் தேசிய சிந்தனையாளராக மாறியதாகக் குறிப்பிட்ட டி பி எஸ் ஜெயராஜ், போராட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு சிக்கல்கள் வரும்போதெல்லாம், அந்த சிக்கலில் இருந்து புலிகளை அரசியல் ரீதியாக மீட்க பாலசிங்கம் பாடுபட்டார் என்றார்.

ஆனால் அதே சமயம், ஆயுதப் போராட்டத்தை அரசியல்ரீதியாக வழிநடத்துவதற்கு பதிலாக, ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டதாகவும் டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.

2 பதில்கள் -க்கு “LTTE ideologue Anton Balasingham passes away due to bile duct cancer (cholangiocarcinoma)”

  1. balaji சொன்னார்

    ஆண்டன் பாலசிங்கம் மறைவு: தலைவர்கள் இரங்கல்

    சென்னை, டிச. 15: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் மறைவுக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தோழர் ஆண்டன் பாலசிங்கம் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

    தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தொடக்கம் முதல் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு தன்னலமற்ற தொண்டு புரிந்தவர் அவர். விடுதலைப் புலிகளின் அனைத்து சமரசப் பேச்சுகளிலும் பங்கேற்று ஈழத் தமிழர்களுக்காக உறுதியாக வாதாடியவர். அவரின் மறைவின் மூலம் உருவான வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

    அவருடைய மனைவி அடேல் அம்மையாருக்கும், தமிழ் ஈழ மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கி. வீரமணி இரங்கல்: ஆன்டன் பாலசிங்கம் எந்தப் பிரச்சினையையும் பல்வேறு கோணங்களில் அலசி ஆராயக்கூடிய ஆற்றல் பெற்ற ஒரு அரசியல் வல்லுநர் ஆவார். ஈழத் தமிழர்களுக்கான உரிமைக்குரலை இறுதி மூச்சு அடங்கும் வரை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்த மாபெரும் லட்சிய வீரர் அவர். அவருடைய இழப்பால் அவருடைய குடும்பமோ, அல்லது ஈழத் தமிழர்களோ அல்லது விடுதலைப் புலிகளோ மட்டும் வருந்தவில்லை. தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்துமே பெரும் சோகத்தில் வீழ்ந்திட்ட கட்டாயம் இதன் மூலம் ஏற்பட்டுவிட்டது.

  2. bsubra சொன்னார்

    பாலசிங்கத்தின் இறுதிக் கிரியைகள் இலண்டனில் நடைபெற்றன

    இலண்டன் நகரில் சென்ற வாரம் உடல்நலக் குறைவால் மரணமடைந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும், தலைமைப் பேச்சுவார்த்தையாளராக இருந்தவருமான ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் புதன்கிழமையன்று இலண்டன் நகரில் நடைபெற்றது.

    பாலசிங்கம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாகச் செய்திகள் கூறுகின்றன.

    இது மட்டுமன்றி இலங்கைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தமிழக அரசியல் பிரமுகர்கள் சிலரும் அலெக்ஸாண்டரா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பாலசிங்கம் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதாக விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹைம் கலந்து கொண்டு அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

    இதே வேளை, மறைந்த பாலசிங்கம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், யாழ் ஆகிய பகுதிகளில் கடைகள் பூட்டப்பட்டிருந்ததாகவும், இதே போல விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, மல்லாவி, ஆகிய பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றதாகவும் அங்கிருந்து கிடக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் தீபன் கலந்து கொண்டு பாலசிங்கம் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>