‘Healthcare schemes to protect Future Generations’ – KKSSR
பதிந்தவர் SnapJudge மேல் நவம்பர் 20, 2006
வருங்கால தலைமுறையை காக்கும் சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
சென்னை, நவ. 20: வருங்காலத் தலைமுறையைக் காக்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகப் பார்வை தின விழாவில் அமைச்சர் பேசியதாவது:
நோய்ப் பரவல் தடுப்பு மற்றும் வருமுன் காத்தல் என்று இரு அணுகுமுறைகளை அரசு மேற்கொண்டுள்ளது. எனினும், குழந்தைகள் உள்பட இளைய தலைமுறையினரைக் காக்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு அதிக ஆர்வம் கொண்டுள்ளது.
நோய் தடுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அவசியம்.
தமிழகத்தில் கடந்த 2004-05-ம் ஆண்டில் கண் தானம் மூலம் 4001 கண்கள் மட்டுமே பெறப்பட்டன.
எனவே, கண் தான விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர்.
சுகாதாரத்துறை செயலாளர் வி.கே. சுப்புராஜ் பேசியதாவது:
இந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை அளித்து சாதனை செய்யப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களுக்கு கண் பார்வை இழப்பைத் தடுக்கும் வகையில் வைட்டமின் ஏ கரைசல் திரவம் விரைவில் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.
தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குநர் டாக்டர் டி. செல்வகுமாரி, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் வி. வேலாயுதம் உள்பட பலர் பங்கேற்றனர்.
