Chikunkunya – Ayurvedic Treatment Options: Alternate Medicine
பதிந்தவர் SnapJudge மேல் நவம்பர் 20, 2006
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிக்குன்குனியா மூட்டுவலிக்கு மருந்து!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
தற்போது நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொசு மூலம் சிக்குன்குனியா என்ற நோய் பரவி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நோயில் மூட்டுகளில் ஏற்படும் வலி தாங்க முடியாத அளவில் உள்ளது. ஆயுர்வேதத்தில் இதற்கு மருந்து உண்டா?
இரா.வி.செüந்தர்யா விசாலினி, மொரட்டுப்பாளையம். வீ.நல்லுசாமி, நாமக்கல்.
சிக்குன்குனியாவில் ஏற்பட்டுள்ள காய்ச்சல், உடல் மற்றும் மூட்டு வலி, பசியின்மை, உடல்சோர்வு, ருசியின்மை, மலச்சிக்கல் போன்ற உபாதைகள் காணப்பட்டால் அச்சமயம் சாப்பிட ஏற்ற உணவு கஞ்சியேயாகும். காய்ச்சலின் வேகம் எவ்வளவுக்கெவ்வளவு கடுமையாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கஞ்சியையும், லேசானதாகத் தயாரிக்க வேண்டும். கஞ்சிக்கேற்ற பொருள்களில் புழுங்கலரிசியும் பார்லியும் நல்லது. புழுங்கலரிசியில் சத்து அதிகம். அதனால் அது உடலுக்கு வலிமை தரக்கூடியது. பார்லி உடலிலுள்ள அடைப்புகளைப் போக்கும். அதனால் வயிற்றில் வாயு, அஜீரணம் போன்ற தொல்லைகள் ஏற்படாது. புழுங்கலரிசியைச் சிறிது சிவப்பு காணும்வரை லேசாக வறுத்து, அதனுடன் பார்லியையும் வறுத்துச் சேர்க்கக் கஞ்சி எளிதில் ஜீரணமாகிவிடும். வறுத்த முழு அரிசி, பார்லி 1 பங்கு, தண்ணீர் 20 பங்கு சேர்த்துக் கொதிக்க வைத்து, கால்பங்கு சுண்டும் வரை காய்ச்சி இறக்கிக் கொள்ளவும். வடிகட்டிய கஞ்சியை இளஞ்சூடாகச் சிறிது இந்துப்பு கலந்து காலை, மதியம், இரவு குடிக்கவும். கஞ்சியைக் குடித்த பிறகு இந்து காந்தம் எனும் கஷாயத்தை 15 மிலி எடுத்து, 60 மிலி சூடான தண்ணீர் சேர்த்துப் பருக காய்ச்சல், உடல்வலி, மூட்டுவலி, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அஜீரணம், உமட்டல் முதலியவை விரைவில் குறைந்துவிடும். உடலுக்கு நல்ல பலத்தையும் இந்தக் கஷாயம் ஏற்படுத்தித் தரும். நல்ல ருசியும் பசியும் ஏற்பட்டுவிட்டால், அடுத்த இரண்டு நாட்களுக்கு நெல்பொரி 1 பங்கு, 20 பங்கு தண்ணீர் விட்டு கால் பங்கு சுண்டக் காய்ச்சி, அந்தக் கஞ்சியில் கால் பங்கு பால் கலந்து சாப்பிட களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படும். உடம்பில் கடுப்பு வலி, கனம், உடலை முறித்துக் கொள்ளும் வேதனை முதலிய வாயு அதிகமாயுள்ள நிலையில் இரண்டு புளியங்கொட்டையளவு சுக்கை எடுத்து அதை நசுக்கி அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிடலாம். உடல்வலி, வேதனை, கனம் முதலியவை நன்கு குறையும்.
சிலருக்கு காய்ச்சல் விட்ட பிறகும் தொடர்ந்து ஏற்படும் மூட்டுவலி, வீக்கத்திற்கு பிருகத்யாதி கஷாயம் 7.5 மி.லி. + பலாகுடூச்யாதி கஷாயம் 7.5மி.லி. ,சூடான தண்ணீர் 60 மி.லி. கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட ஏற்பட்டுள்ள உபாதைகள் நன்கு குறைந்துவிடும்.
வலி வீக்கம் உள்ள மூட்டுகளில் உத்வர்த்தனம் சூரணம், குலத்தம் சூரணம், ராஸ்னாதி சூரணத்தை 4 : 2 : 1 என்ற விகிதத்தில் கலந்து புளித்த சூடான மோருடன் குழைத்து பற்று இட்டு அது காய்ந்தவுடன் நீக்கி விடும் சிகிச்சை முறையால் மூட்டுகளின் உட்பகுதியிலுள்ள நீர் வற்றி வலி குறையும். ஜடாமாதி சூரணமும் இதுபோன்ற வலி நிவாரணியே. இந்த மருந்துகள் நசரத்பேட்டை
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவமனையில் விற்கப்படுகின்றன.
வீக்கம், வலி வற்றிய பிறகு மூலிகைத் தைலமாகிய பிண்ட தைலம், லஹசராதி தைலம், கொட்டஞ்சுக்காதி தைலம் போன்றவற்றில் ஒன்றை இரும்புக் கரண்டியில் லேசாகச் சூடாக்கித் தடவி அந்த மூட்டிற்கு ஓய்வளிக்கும் வகையில் துணியைச் சற்றி வைத்திருக்க வலியும் வீக்கமும் குறைந்துவிடும். தைலத்தைத் தடவி சுமார் அரை மணி முதல் 1 மணி நேரம் வரை ஊறிய பிறகு வேப்பிலை, நொச்சி இலை, புளி இலை, முருங்கை இலை, ஆமணக்கு இலை, எருக்கு இலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டுக் காய்ச்சிய தண்ணீரில் துணியைப் பிழிந்து ஒத்தடம் கொடுக்கப் பூரண நிவாரணத்தை விரைவில் பெறலாம்.

panneer சொன்னார்
will you please suggest any medicine and excersise for my father who h\as been affected with chicken guneya and having knee pain and swelling
bsubra சொன்னார்
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771