Petty Party Politics – Tamil Nadu Civic Polls : Dalits’ roles suppressed
பதிந்தவர் SnapJudge மேல் நவம்பர் 14, 2006
கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியால் அரசியல் உரிமை பறிக்கப்பட்ட தலித்துகள்?
வீர. ஜீவா பிரபாகரன்
மதுரை,நவ.15: தேனி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியால் தலித்துகளின் அரசியல் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கும்,
- ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கும் தலித்துகள் வரமுடியாத நிலை அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் கிராமத்தினர் சமத்துவத் திருவிழா காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில், தேனி மாவட்டத்தில் உள்ள அரசியல் நிலை வேதனை அளிக்கிறது என்கிறனர் சமூக ஆர்வலர்கள்.
ஊராட்சித் தலைவர் பதவி தலித்துக்கு ஒதுக்கப்பட்டதால் கீரிப்பட்டி, பாப்பாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் நடைமுறையை கேலிக்கூத்தாக்கும் நிலை 10 ஆண்டுகள் தொடர்ந்தது.
அரசியல் கட்சிகள், அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைதிக் குழுவினர், நீதிமன்ற வழிகாட்டுதல் போன்ற முயற்சிகள் எல்லாம் அசைந்து கொடுக்காமல் இருந்த இந்த 4 கிராம மக்கள், தற்போது ஜனநாயக நடைமுறைக்குத் திரும்பி தலித்துகளின் அரசியல் உரிமையை நிலைநாட்டியுள்ளனர்.
தற்போது, இந்தக் கிராமங்களில் மக்களிடையே நல்லிணக்க சூழ்நிலை காணப்படுகிறது. இதற்கு அரசு நிர்வாகம், அரசியல் கட்சிகள் ஒத்துழைப்புடன் மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரனின் தனிப்பட்ட முயற்சியும் பிரதான காரணமாகும்.
தேனி மாவட்ட ஊராட்சித் தலைவர்: இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் நேரத்தில், தேனி மாவட்டத்தில் தலித்துகள் அரசியல் உரிமையைப் பெறமுடியாத நிலை உள்ளதாக, தலித் பிரதிநிதிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.
இம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சிக்கு மொத்தம் 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதில்
- திமுக- 6,
- அதிமுக-3,
- மதிமுக-1. ஆனால்,
- ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு வார்டுகளிலிருந்தும் அதிமுகவைச் சேர்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றும், மாவட்ட ஊராட்சித் தலைவருக்கு தலித் வேட்பாளர் கிடைக்காத நிலை. எனவே, மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் திமுக இரு முறையும் பங்கேற்கவில்லை. கோரம் இல்லை என்று காரணம் காட்டி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் மாவட்ட ஊராட்சித் தலைவராக தலித் வகுப்பினர் வரமுடியாத நிலை உள்ளது.
ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவர்: இதே போன்று ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவர் பதவியும் தலித் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஒன்றியத்தில் மொத்தம் 19 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில்
- திமுக-7,
- அதிமுக-6,
- மதிமுக-2,
- சுயேச்சைகள் 4. இந்த ஒன்றியத்தில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.
ஒன்றியத் தலைவர் பதவிக்கு கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் திமுக பங்கேற்கவில்லை. திங்கள்கிழமை (நவ.13) தேர்தல் நடத்த அதிகாரிகளே வரவில்லை. இந்த நிகழ்வுகள் தலித்துகளின் அரசியல் உரிமையை பறிப்பதாகவே உள்ளன.
சமூக அநீதி: அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியினர் பதவியைப் பெறவேண்டும், கூடுதல் இடங்களில் வெற்றி எண்ணிக்கை காட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றன. தலித்துகளின் உரிமையில் அக்கறை காட்டவில்லை என தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தலித் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையைப் போக்க, வரும் காலங்களில் ஒன்றியத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவரை மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
