PMK to fight against acquisition of agricultural lands for SEZs
பதிந்தவர் SnapJudge மேல் நவம்பர் 3, 2006
தமிழக பகுதியில் விளைநிலங்களை எடுத்தால் மக்களை திரட்டி பாமக போராட்டம் நடத்தும்
விழுப்புரம், நவ. 4: புதுச்சேரி விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக தமிழக பகுதியில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்தினால் பாமக போராட்டம் நடத்தும் என்று திண்டிவனம் எண்.பி கோ.தன்ராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அவர் கூறியது:
புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் உள்ள நிலங்களை ஆர்ஜிதம் செய்யப்போவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சாட்டர்ஜி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில எல்லையையொட்டி உள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் தென்னந்தோப்புகளும், விவசாய விளைநிலங்களும் உள்ளன. இந்த விளைநிலங்களை விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் எடுத்துக்கொண்டால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவர்.
விளைநிலங்களை வர்த்தகரீதியான விமான நிலையத்திற்காக எடுத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது. இப்பகுதி விவசாயிகள், இது குறித்து என்னிடம் முறையிட்டுள்ளதோடு, கையகப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தினர்.
ஆகவே இந்த முயற்சியை விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இந்த விளைநிலங்களை கையகப்படுத்த முயன்றால், பொதுமக்களை திரட்டி பாமக போராட்டம் நடத்தும்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகே நகர் கிராமத்தில் இரண்டாம் உலகப்போரின்போது அமைக்கப்பட்ட பிரம்மாண்ட விமான நிலையம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. 65 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தின் தரைப்பகுதி முழுவதும் காங்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி அருகே உள்ள இந்த பழைய விமான நிலையத்தை வர்த்தகரீதியான விமானப் போக்கு வரத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் புதுச்சேரி மற்றும் தமிழக மக்கள் பலனடைவார்கள்.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் சுற்றுலா மற்றும் கலாசார குழுவின் உறுப்பினர் என்ற முறையில் இது குறித்து மத்திய அரசிற்கு ஏற்கெனவே பல கடிதங்கள் எழுதியுள்ளேன்.
புதுச்சேரி விமான நிலையத்திற்காக கோட்டக் குப்பம் பகுதியில் நில ஆர்ஜிதம் செய்யும் முயற்சியை உடனடியாக கைவிடுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன் என்றார் அவர்.
