Laloo tries unsuccessfully to upset Anbumani Ramadoss
பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 6, 2006
அமைச்சரவைக் கூட்டத்தில் அன்புமணியை சீண்டிய லாலு
புது தில்லி, அக். 6: தில்லியில் வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியை சீண்டி, கோபப்படுத்த முயன்று, அதில் தோல்வியடைந்தார் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.
அமைச்சரவைக் கூட்டம் நடந்தபோது, டெங்கு பிரச்சினையைக் கிளப்பினார் லாலு. “”நாடு முழுவதும் டெங்கு பற்றிய பேச்சாக இருக்கிறது. மக்கள் பெரும் பீதி அடைந்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. விவரத்தைச் சொல்லுங்கள்” என்று ஹிந்தியில் சற்று வேகமாகக் கேட்டார் லாலு.
ஆனால் அன்புமணி அதற்காக கோபப்படவில்லை. டெங்கு பற்றிய விவரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறினார். இது அடிப்படையில் சுகாதாரம் தொடர்பான பிரச்சினை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது, லாலுவின் கட்சியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங், “”அமைச்சரவைக் கூட்டத்தில் அன்புமணியை எங்கள் தலைவர் (லாலு) ஒரு பிடி பிடித்துவிட்டார்” என்று ரகசியமாக செய்தியாளர்களிடம் “ஊதிவிட்டுச்’ சென்றார்.
அன்புமணியை லாலு சீண்ட முயற்சி செய்ததற்கு, மக்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையைவிட, அரசியல்தான் உண்மையான காரணம் என்று கூறப்படுகிறது.
சாலையோர உணவகங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை அன்புமணி புதன்கிழமை வெளியிட்டபோது, செய்தியாளர்கள் சிலர், “சாலையோர உணவகங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் ரயில்களில் உணவு வழங்கும் பெட்டிகள் (பேன்ட்ரி கார்) மிக மோசமாகவும் தூய்மையின்றியும் பராமரிக்கப்படுவதைப் பற்றி நீங்கள் ஏன் கேட்கவில்லை? அது பற்றி ரயில்வே அமைச்சர் லாலுவிடம் பேசுவீர்களா?’ என்று கேட்டபோது, “அது பற்றி லாலுவிடம் பேசுவேன்’ என்று பதிலளித்தார்.
அதனால் கோபமடைந்த லாலு, வேண்டுமென்றே அன்புமணியைச் சீண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அது மட்டுமன்றி, ஓரிரு மாதங்களுக்கு முன்பு தில்லி வந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் லாலுவின் போக்கை வன்மையாகச் சாடியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில், “யாரும் எனக்குச் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை’ என லாலு அடுத்த நாளே சொன்னார்.
அந்தக் கோபத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, அன்புமணியை அமைச்சரவைக் கூட்டத்தில் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், அந்த முயற்சியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
