Chief Ministers of Congress (I) Congregate in UP
பதிந்தவர் SnapJudge மேல் செப்டம்பர் 25, 2006
காங்கிரஸ் முதல்வர்கள் மாநாடு
காங்கிரஸ் கட்சியால் ஆளப்படுகிற மாநில முதல்வர்களின் மாநாடு அடிக்கடி நடப்பதாகிவிட்டது. இப்போது உத்தராஞ்சல் மாநிலத்தில் நைனிதால் நகரில் காங்கிரஸ் முதல்வர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. நாட்டில் மொத்தம் உள்ள மாநிலங்களுள் கிட்டத்தட்ட பாதி மாநிலங்களில், அதாவது 14 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் முதல்வர்களின் ஆட்சி நடைபெறுகிறது. இவற்றில் ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்தும் சிறிய மாநிலங்களே. அதிலும் மகாராஷ்டிரம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆதரவுடன்தான் காங்கிரஸ் ஆட்சிபீடத்தில் உள்ளது. காங்கிரஸ் தனது பலத்தைக் காட்டிக்கொள்ள இப்படியான மாநாடுகளை நடத்துவதைத் தவறு எனச் சொல்ல முடியாது. ஒருங்கிணைந்த கொள்கைகளைப் பின்பற்றும்படிச் செய்வதற்கு இது ஓரளவில் உதவலாம்.
நைனிதால் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் பயங்கரவாதம் பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலை நாடுகளில் பயங்கரவாதம் குறிப்பிட்ட மதத்துடன் பிணைத்துப் பேசப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலை நாடுகள் விஷயம் வேறு, இந்திய நிலைமை வேறு என்பதை அவர் மறந்துவிட்டார். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, அத்துடன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் காஷ்மீர் மாநிலத்தில் பல ஆண்டுகளாக அப்பாவி மக்களைக் கொன்று வந்துள்ளனர். இந்த அமைப்புகள் அண்மைக் காலமாகத்தான் பிற மாநிலங்களிலும் கைவரிசையைக் காட்ட முற்பட்டுள்ளன. ஆனால் நாட்டில் எந்தப் பொறுப்புள்ள கட்சியும் பயங்கரவாதத்தைக் குறிப்பிட்ட மதத்துடன் பிணைத்துப் பேசியது கிடையாது. அதுமட்டுமல்ல, கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாட்டில் பல மாநிலங்களில் ஆங்காங்கு வகுப்புக் கலவரங்கள் நடந்தது உண்டு. இவையெல்லாமே அந்த வட்டாரத்துடன் முடிந்துவிடுகிற சம்பவங்களாகவே இருந்துள்ளன. அந்த மாநிலத்திற்குள்ளாக அல்லது பிற மாநிலத்திற்கு அவை பரவியது கிடையாது. இந்திய மக்கள் பாரம்பரியமாக மத நல்லிணக்கத்தைக் காத்து வருபவர்கள். எங்காவது எப்போதாவது மொழி அடிப்படையில் நடந்துள்ள மோதல்களும் மக்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்தது கிடையாது. இது பற்றி நாம் பெருமைப்படலாம்.
மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஒருபடி மேலே போய் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரானவை என்ற எண்ணத்தை உண்டாக்கி விடக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் அவர் அப்படிக் கூறாமல், பயங்கரவாதத்துக்கு எதிரான எந்த நடவடிக்கையும் அத்துமீறிப் போய்விடாமல் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஏனெனில் காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பல சமயங்களில் அப்பாவி மக்களைத் துன்புறுத்துகிற செயல்களாக அமைந்துள்ளன. மணிப்பூரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அத்துமீறிப் போய் அது “மனித உரிமை மீறல்’ விவகாரமாக மாறியது. அசாமிலும் உல்பா இயக்கத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து புகார்கள் உண்டு.
மணிப்பூர், அசாம் மட்டுமன்றி ஜார்க்கண்ட், பிகார், ஆந்திரம் ஆகியவற்றிலும் நக்சலைட் பிரச்சினைகளை நாம் எதிர்ப்பட்டுள்ளோம். இவ்விஷயத்தில் நாட்டில் உள்ள அடிப்படைப் பிரச்சினை, பயங்கரவாதிகள் அல்லது பல்வேறு வகையான தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எப்படிக் கையாளப்பட வேண்டும் என்பதில் போலீஸ் படையினருக்குத் தகுந்த பயிற்சி கிடையாது என்பதுதான். மத்திய அரசின் அல்லது மாநில அரசுகளின் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எதிர்த்து நடத்தப்படும் ஊர்வலங்களைச் சமாளிப்பதிலும் கூட பல நேரங்களில் முரட்டுத்தனம் காட்டப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க நைனிதால் மாநாட்டு உரைகள் அடுத்த ஆண்டில் உ.பி. மாநிலத்தில் நடக்க இருக்கும் தேர்தலை மனத்தில்கொண்டு அமைந்துள்ளன என்று குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
