Vidharbha Farmers plight leads them to Serial Suicides
பதிந்தவர் SnapJudge மேல் செப்டம்பர் 7, 2006
விதர்பாவில் 5 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை
நாகபுரி, செப். 7: மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
விதர்பா ஜன் அந்தோலன் சமிதி (விதர்பா மக்கள் பாதுகாப்பு இயக்கம்) என்ற அமைப்பு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வறட்சியின் காரணமாக கடந்த 15 நாள்களில் 72க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதாவது, ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்.
கடந்த 2005-ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வரை 828 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஜூன் 30, ஜூலை 1ம் தேதிகளில் பிரதமர் மன்மோகன்சிங் விதர்பாவிற்கு வந்தார். அப்போது விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டது. அந்த உதவி இதுவரையில் விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு புதிதாக பயிர் கடன்களும், திட்டங்களும் வழங்கப்பட வேண்டும் என அந்த அமைப்பு கூறுகிறது.
